Sidebar

21
Sun, Jun
சமீபத்திய செய்திகள்

போப் ஆண்டவர் ராஜினாமா: - மறைக்கப்பட்ட உண்மைகள்!

கிறித்தவ மதத்தின் மிகப்பெரிய பிரிவாக உள்ள கத்தோலிக்கப் பிரிவின் மதத் தலைமைப்பீடம் இத்தாலியில் உள்ள வாடிகனில் உள்ளது. இங்கு இருந்துதான் கத்தோலிக்க கிறித்தவர்களுக்கும், கிறித்தவ தேவாலயங்களுக்கும் உண்டான அனைத்து வழிகாட்டுதல்களும் உலகம் முழுவதும் சென்றடையும். அவர்களது மதத் தலைவரான போப் ஆண்டவர்தான் ஆன்மீக அந்தஸ்த்தில் முதலிடம் பெற்றவர் என்று கத்தோலிக்க கிறித்தவர்கள் நம்புகின்றனர்.

போப் ஆண்டவராக கடந்த 2005 ஆம் ஆண்டு பதவியேற்ற 16 ஆம் போப் பெண்டிக்ட், தான் போப் ஆண்டவர் பதவியிலிருந்து ஓய்வு பெறப் போவதாக கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி அறிவித்தார். பிப்ரவரி 28ஆம் தேதியுடன் அவர் ஓய்வு பெற்றார்.

முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பதவியில் இருந்து 28ஆம் தேதி போப் 16ஆம் பெண்டிக்ட், பதவி விலகியதாக வாடிகன் செய்தித் தொடர்பாளர் பெடரிக்கோ லொம்பார்டி அறிவித்துள்ளார். 600 ஆண்டுகால வரலாற்றில் போப் ஆண்டவர் பதவியை இதுவரை யாரும் ராஜினாமா செய்ததில்லை. இவர்தான் முதன் முறையாக அப்பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பதால் இது கத்தோலிக்க கிறித்தவர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போப் ஆண்டவர் பதவி என்பது சாதாரணமான பதவி அல்ல; பல கோடி கத்தோலிக்க கிறித்தவர்களுடைய ஆன்மீகத்தலைவர் பொறுப்பு என்பது மிக உயர்ந்த பொறுப்பாகும். அதிலிருந்து ஒருவர் தானாக ராஜினாமா செய்வது என்பது குதிரைக் கொம்புதான்.

இதற்கு முன்னால் உள்ள போப்கள் எல்லாம் கோமா நிலையில் பல நாட்கள் படுத்த படுக்கையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே போப் ஆண்டவர் பதவியில் நீடித்து அதே நிலையிலேயே மரணித்துள்ள நிலையில், அதிரடி முடிவுகளை அவ்வப்போது அறிவித்து வந்தவரும், துணிச்சலான முடிவுகளை யாருக்கும் பயப்படாமல் எடுத்து, வலிமையானவராக தற்போதும் திகழ்ந்து கொண்டுள்ள 16ஆம் பெண்டிக்ட் அவர்கள் ஏன் திடீரென ராஜினாமா செய்ய வேண்டும் என்பதன் பின்னணியை நாம் ஆய்வு செய்வோமேயானால், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவருகின்றன.

கிறித்தவ மக்களாலேயே எதிர்க்கப்பட்ட ஒரே போப் :

இந்த போப் 16ஆம் பெண்டிக்ட் அவர்களுக்கென்று ஒரு தனிச் சிறப்பு உள்ளது. அதாவது கிறித்தவ மக்களாலேயே எதிர்க்கப்பட்ட ஒரே போப் இவர்தான். ஓரினச் சேர்க்கை புரிவது, அவ்வாறு ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு சட்டப்பூர்வமாக சாஸ்திர சம்பிராதயங்களுடன் தேவாலயங்களில் கிறித்தவ முறைப்படி திருமணம் முடித்து வைக்கும் கேவலங்களும் ஆன்மீகத்தின் பெயரால் அரங்கேறி வருகின்றன.

இந்தக் கேவலத்தை எதிர்த்த ஒரே போப் இவர் மட்டும்தான். ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், இந்தச் செயலானது சமூகத்தின் ஒழுங்கு நிலையை பாதிக்கும் எனவும், திருமணத்தின் சட்டரீதியான வரையறையை இத்தகைய அரசியல் மற்றும் கலாச்சார அமைப்புகள் மாற்றி அமைக்கின்றன என்றும் அதிரடியாக அறிவிப்புச் செய்தார்.

ஓரினச் சேர்க்கையாளர் திருமணம், திருமணத்துக்கு முன்னரே ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது ஆகியவை கடுமையான பாவம் என்று தங்களுக்கு கீழ் வரும் ஆலயங்களில் வலியுறுத்துமாறு எல்லா ஆயர்களுக்கும் அவர் கடிதம் மூலம் அறிவுறுத்தினார்.

இது கிறித்தவ மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேவாலயங்கள் அதிகாரப்பூர்வமாக ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை நடத்தி ஒழுக்கத்தை நிலைநாட்டி(?) வரும்போது, இவர் அதைத் தடுப்பது சரியில்லை என்றும், இவருக்கு எதிராக ஸ்பெயினில் போராட்டம் நடைபெற்றது;

ஓரினச் சேர்க்கையாளர்களாக உள்ள கிறித்தவர்கள் போப் வரவிருந்த சாலையில் ஒன்று திரண்டு ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக் கொண்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து ஒழுக்கத்தை நிலைநாட்டிய(?) செய்திகள் அனைவரும் அறிந்ததே! அப்போதே அவரை பதவி விலகச் சொல்லி கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

அது மட்டுமல்லாமல், கருத்தடை செய்வதற்கு எதிராகவும் தனது கண்டனத்தைத் துணிவோடு இவர் பதிவு செய்தார்.

பாதிரியார்கள் செய்யும் பாலியல் அட்டகாசங்களை கண்டித்ததோடு மட்டுமல்லாமல், பாதிரியார்களால் சீரழிக்கப்பட்ட சிறுவர், சிறுமியர்களிடம் பகிரங்க மன்னிப்புக்கோரிய ஒரே போப்பும் இவர்தான்.

இப்படி இவர் செய்த சாதனைகள் நிறைய உள்ளன. இவர் செய்த சாதனைகள் எல்லாம் கிறித்தவ மக்களுக்கு சோதனையாகவும், வேதனையாகவும் அமைந்ததால் இவரை மிரட்டி, வலுக்கட்டாயமாக ராஜினாமா வாங்கியுள்ளனர் என்று தற்போது செய்திகள் வரத்தொடங்கியுள்ளன.

போப் ஆண்டவரது ராஜினாமா இயற்கையானது அல்ல என்றும், அதற்கு பின்னணியில் பல விஷயங்கள் உள்ளன என்றும், இத்தாலியில் உள்ள பத்திரிக்கைகள் உண்மையைப் புட்டுப் புட்டு வைத்தன. எங்கே குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்று அஞ்சிய இத்தாலியிலுள்ள வாடிகன் நிர்வாகம் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சொல்லி கீழ்க்கண்ட அறிக்கையை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது :

இதுகுறித்து, வாடிகன் அதிகாரி பெடரிக்கோ லொபர்டியோ கூறியதாவது:

போப் பதவி விலகுவது, 600 ஆண்டுகளாக நடக்காத ஒன்று. அவரது முடிவு குறித்து, பத்திரிகைகள் அவதூறாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இந்த வதந்திகள், திருச்சபைக்கு அதிக வருத்தத்தை அளித்துள்ளது. வாடிகனில், சில பாதிரியார்களது நடவடிக்கைகளில் அதிருப்தி யடைந்ததால்தான், போப் பதவி விலக தீர்மானித்ததாக, இத்தாலி நாட்டின், லா ரிப்பப்ளிக் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சபையில், ஊழல்கள் பெருகிவிட்டதாக, சில பத்திரிகைகள் கூறியுள்ளன.

வாடிகனில் உள்ள சில கார்டினல்கள் குறித்தும், தவறாக செய்திகள் எழுதப்பட்டு உள்ளன. புதிய போப்பை தேர்வு செய்வதற்கு கூட, சில கட்டுப்பாடுகள் கொண்டு வரவேண்டும் என்றும், பத்திரிகைகள் எழுதி வருகின்றன. இவ்வாறு, பெடரிக்கோ லொபர்டியோ கூறியுள்ளார்.

மேற்கண்ட அறிக்கையின் மூலம் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று வாடிகன் நிர்வாகம் நிரூபித்துள்ளது. எந்தப் பிரச்சனையும் இல்லை என்றால், அதை போப் தனது வாயால் அறிவித்திருக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டுகள் உலகளாவிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையிலும் அதை மறுப்பதும்கூட வாடிகன் நிர்வாகம்தான் எனும்போது, இதுகுறித்த சந்தேகம் இன்னும் வலுக்கின்றது.

மேலும், போப் பதவி விலகிய கடைசி நாள் தனது ராஜினாமா குறித்து சொல்லப்படக் கூடிய குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பளித்து உரை நிகழ்த்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த குற்றச்சாட்டுகள் எதையும் அவர் தனது இறுதி உரையில் மறுக்கவில்லை. மாறாக அதை வலுப்படுத்தக்கூடிய விதத்தில்தான் வார்த்தைகளை கூறினார். அதாவது தன்னை ஓய்வு பெறச் சொல்லி கடவுள் தனக்கு கட்டளையிட்டதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.

போப்பையே மிரட்டக்கூடிய அளவிற்கு எனக்குமேல் உள்ள கடவுள் என்னிடம் ராஜினாமா செய்யச் சொன்னதன் விளைவாக நான் ராஜினாமா செய்கின்றேன் என்பதுதான் இதன் பொருள். அந்த அளவிற்கு இவர் மிரட்டப்பட்டுள்ளார் என்பது இதன் மூலம் தெரியவருகின்றது.

ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு

கருத்தடைக்குஎதிர்ப்பு

பாலியல்பாதிரியார்களுக்குஎதிர்ப்பு

பாதிரியார்களால்பாலியல்சேட்டைகளுக்குஆளாக்கப்பட்டவர்களிடம்மன்னிப்பு

என்று துணிச்சலான முடிவுகளை அறிவித்து அதிரடியாக ஆக்ஸனில் இறங்கிய இவர்தான் தற்போது பலவீனமாக உள்ளதாக கதை அளக்கின்றது வாடிகன் நிர்வாகம். இதுவரை வந்த போப்களிலேயே 16ஆம் பெண்டிக்ட் அவர்களைப்போல துணிச்சல் மிக்க, பலமான போப் யாரும் இருந்ததில்லை என்று அனைவரும் சொல்லும் வேளையில், இவர் ரொம்ப பலவீனம் அடைந்துவிட்டதால் ராஜினாமா செய்கின்றார் என்று வாடிகன் நிர்வாகம் அனைவரது காதிலும் பூச்சுற்றும் வேலையைப் பார்த்துள்ளது.

கிறித்தவ ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் கிறித்தவ பாதிரியார்கள் ஆகியோருக்கு எதிரான மேற்கண்ட அதிரடி அறிவிப்புகள் மட்டும் போப் எதிர்ப்பாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக இஸ்லாம் குறித்து போப் 16ஆம் பெண்டிக்ட் கூறிய பல செய்திகள் கிறித்தவ மக்களை சிந்திக்க வைத்துள்ளது.

இஸ்லாம் குறித்து போப் கூறிய கருத்துக்கள்:

 இஸ்லாம் தான் இந்த உலகில் அதிகமாக வளர்ந்து வரக் கூடிய மார்க்கமாக உள்ளது.

இஸ்லாமியர்கள் தான் பெரும்பான்மையானவர்களாக இந்த உலகில் தற்போது மாறியுள்ளார்கள்.

இஸ்லாம் அபரிதமான வளர்ச்சியை தற்போது அடைந்து வருகின்றது;

இந்த நூற்றாண்டின் இறுதியில் இதை விட இன்னும் பல மடங்கு அது வளர்ச்சியடையும்.

என்று இஸ்லாம் குறித்து இவர் சொன்ன கருத்துக்கள் உண்மையிலேயே துணிச்சலான கருத்துக்கள்தான்.

அதோடு மட்டுமல்லாமல், இஸ்லாத்தின் வளர்ச்சியை சிலாகித்துச் சொன்ன போப் அவர்கள் கிறித்தவ மக்கள் மத்தியில் நிலவக்கூடிய தவறான நம்பிக்கைகளையும் போட்டு உடைத்தார்.

போப் 16ஆம் பெண்டிக்ட் எழுதி வெளியிட்ட நூல், jesus of nazareth the infancy narratives (ஜீஸஸ் ஆஃப் நாசரேத்) ஆகும். இந்த நூலில் இயேசு குறித்த பல உண்மைகளை துணிச்சலோடு இந்த உலகிற்கு அறிவித்தார்.

அந்தப் புத்தகத்தில் அவர் அளித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் பின்வருமாறு:

டிசம்பர் 25 ஆம்தேதியை இயேசுவுடைய பிறந்தநாள் என்று கிறித்தவர்கள் கொண்டாடுகின்றார்கள். அது தவறு.

இயேசு டிசம்பர்  25 ஆம் தேதி தான் பிறந்தார் என்பதற்கு எவ்விதமான ஆதாரமும் இல்லை.

இயேசு பிறந்தது மாட்டுத் தொழுவத்தில் தான் என்பது தவறு. அதற்கும் பைபிளில் ஆதாரம் இல்லை.

இயேசு பிறக்கும் போது தேவதைகள் வந்தார்கள் என்று சொல்லப்படுவதற்கும் ஆதாரம் இல்லை.

இயேசு பிறந்த வருடம் என்று சொல்லப்படக்கூடிய வருடத்தையும் தவறாகத்தான் சொல்லியுள்ளார்கள்,

என பல விஷயங்களை துணிச்சலோடு சொல்லக்கூடிய அளவிற்கு துணிவும், தைரியமும் கொண்ட ஒரே போப்பாக இவர் திகழ்ந்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், பர்னபாஸ் என்ற இயேசுவின் சீடர் எழுதிய செய்திகள் அடங்கிய ஒரு புராதன பைபிள் ஒன்று சென்ற 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துருக்கியில் கண்டெடுக்கப்பட்டது. அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த முன்னறிவிப்புகள் உள்ளன என்றும், இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்ற செய்திகளும் உள்ளது என்றும் பல உண்மைகள் வெளிவந்தன. அப்போது அந்த பைபிளை, தான் பார்க்க விரும்புவதாக வெளிப்படையாக அறிவித்தார் போப் 16ஆம் பெண்டிக்ட்.

இப்படி இஸ்லாத்திற்கு ஆதரவாகவும், கிறித்தவத்திற்கு எதிராகவும் உண்மையைச் சொன்னதும் கூட இவரை ராஜினாமா செய்யச் சொல்லி மிரட்டக்கூடிய அளவிற்கு கொண்டு சென்றுள்ளது என்பது தான் தற்போது நடுநிலையாளர்களின் ஒரே கவலை.

எது எப்படியோ பாமர மக்களைக் காட்டிலும் படித்த பாதிரியார்களுக்குத் தான் எது சத்தியம் என்பது தெளிவாகத் தெரிந்திருக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த வகையில் கிறித்தவர்களின் மத நம்பிக்கையில் உள்ள குறைபாடுகளும், இஸ்லாம் தான் சரியான மார்க்கம் என்ற சத்தியமும் இந்த போப் 16ஆம் பெண்டிக்ட் அவர்களது மனசாட்சிக்கு தெரிந்திருக்கும்.

அவர் கூடிய விரைவில் இஸ்லாத்தைத் தழுவி முஸ்லிமாக மரணிக்க அவருக்காக நாம் பிரார்த்தனை செய்வோம்.

கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டிய தருணம் :

கத்தோலிக்க கிறித்தவர்கள் தங்களது ஆன்மீகத் தலைவராக போப் ஆண்டவரை நம்புகின்றனர். அவரது பிரார்த்தனை இருக்குமேயானால், நமக்கு அவரது ஆசி மூலம் அனைத்தும் கிடைத்துவிடும் என்றும் நம்புகின்றனர்.

மனிதனுக்கு மிஞ்சிய மாபெரும் ஆற்றலும், கடவுள் தன்மையும் அவருக்கு உள்ளதாக கிறித்தவர்கள் நம்புகின்றார்கள். பரிசுத்த ஆவி அவர் மீது மேலாடுவதாகவும் நம்புகின்றனர். அதனால் தான் தங்களது நோய் தீருவதற்கும், தங்கள் வாழ்வில் நல்லவைகள் நடப்பதற்கும் அவரிடத்தில் இவர்கள் கையேந்தும் நிலை உள்ளது.

இப்படி இவர்கள் நம்பிக் கொண்டிருக்கும் நிலையில், இவர்கள் நம்புவதற்கு ஏற்றாற்போல ஆற்றல்களுடன் போப் ஆண்டவர் உள்ளாரா என்பதை அவர்கள் சிந்திக்க மறந்துவிட்டனர்.

போப் ராஜினாமா செய்வதற்கு வெளியே சொல்லாத பல காரணங்கள் இருந்தபோதும், வாடிகன் நிர்வாகம் வெளிப்படையாக கூறியுள்ள காரணத்தை முதலில் எடுத்துக் கொள்வோம்.

முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகத் தான் அவர் பதவி விலகுகின்றார் என்பதே அவர்கள் கூறிய காரணம். அப்படியானால் அனைத்து ஆற்றலும் பெற்ற ஓர் ஆன்மீகத் தலைவர், பல அற்புதங்கள் செய்ய சக்தி பெற்றவராக அவர்களால் கருதப்பட்ட போப் ஆண்டவர், தனது சிறப்பு(?) பிரார்த்தனையின் மூலம் ஆயிரக்கணக்கானவர்களது நோயை நீக்கி வைத்ததாக அவர்கள் கருதக்கூடிய போப் ஆண்டவர், தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக போப் பதவியை ராஜினாமா செய்திருக்கின்றார் என்றால், இவர்களது இவ்வளவுகால நம்பிக்கை தரைமட்டமாக்கப்பட்டு தவிடுபொடியாக ஆக்கப்பட்டுள்ளதா, இல்லையா?

தனக்குத்தானே தனது முதுமையை போக்கிக் கொள்ள இயலாத, தனது உடல் நலக்குறைவை சரி செய்து கொள்ள இயலாத போப்களா இத்தனை நாட்கள் அனைவரது நோயையும் தீர்த்து வைத்தார்கள் என்று கிறித்தவ சகோதரர்கள் ஏன் சிந்திக்க மறுக்கின்றார்கள்?

இரண்டு வருடங்களுக்கு முன்பு சுற்றுலா சென்ற இடத்தில் வழுக்கி விழுந்து போப் ஆண்டவரது கை உடைந்ததே! அவர் தன்னுடைய உடைந்த கையை சரி செய்வதற்கு எந்த ஜெபக்கூட்டத்திற்குமோ, எந்த அற்புத பெருவிழாவுக்கோ செல்லவில்லை. மாறாக அங்கிருந்த மருத்துவமனைக்குச் சென்றுதான் கட்டுப்போட்டுவிட்டு வந்தார்.

அனைவருக்கும் ஆசி வழங்கக்கூடிய தனது கை உடைந்தபோது, பிறருக்கு ஆசி வழங்கக்கூடிய அவரது கையால் அவரது கைக்கே ஆசி வழங்க இயலவில்லை எனும்போது, இவரது கையை வைத்து பிறருக்கு எப்படி இவர் ஆசி வழங்குவார் என்று கிறித்தவ சகோதரர்கள் நம்ப மறுப்பது ஏன்?

போப் அவர்கள் ஆண்டவர் என்று அழைக்கப்பட்டாலும் அவர் அனைத்து நிலைகளிலும் மனிதனாகத்தான் இருந்துள்ளார். அவர் மனிதன் என்பதை நிரூபித்தும் வருகின்றார் என்று தெள்ளத்தெளிவாக யாருக்குத் தெரிகின்றதோ இல்லையோ, போப் பதவியிலிருந்த 16ஆம் பெண்டிக்ட் அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்தே இருக்கும். அதனால்தான் அவர் பல உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளார். போப்புக்கு தெரிந்த உண்மையை கிறித்தவ சகோதரர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் நமது ஆவல்.

குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் அடுத்த ஆதாரம்:

கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போப் ஆண்டவரின் கடிதங்களை திருடி ஒரு பத்திரிகையாளரிடம் கொடுத்த வாடிகன் சமையல்காரருக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கியான்லுகி நுஸி என்ற பத்திரிகையாளர் அண்மையில் ரோமன் கத்தோலிக்க தேவாலய தலைமையகத்தில் நிலவும் உட்பூசல் மற்றும் ஊழல் பற்றி புத்தகம் எழுதியிருந்தார். இந்தப் புத்தகத்துக்காக போப் ஆண்டவரின் கடிதங்களை போப் மாளிகை சமையல்காரரான பாலோ கேப்ரியல் திருடிக் கொடுத்துள்ளார். இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பாலோ கேப்ரியல் மீதான வழக்கு விசாரணை வாடிகன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, போப்பின் கடிதங்களைத் திருட வேண்டும் என்பது என் நோக்கமல்ல. வாடிகனில் நிலவும் கெடுதல்கள் மற்றும் திருச்சபைகளில் நடக்கும் ஊழல் குறித்து போப் ஆண்டவருக்குத் தெரிவிக்கப்படுவதில்லை என்று நான் கருதினேன். இந்தப் புத்தகம் மூலம் அங்குள்ள பிரச்னைகளைப் பகிரங்கப்படுத்தி, தேவாலயம் சரியான பாதையில் செல்லவே அவரது கடிதங்களை எடுத்துக் கசிய விட்டேன்' என்று பாலோ கேப்ரியல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.

இவ்வழக்கில் பாலோ கேப்ரியலுக்கு 18 மாதச் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி கியசப்பே டெல்லா தீர்ப்பளித்தார்.

மேற்கண்ட சம்பவத்தில் பாதிரியார்கள் செய்யும் திருகுதாளங்கள் மற்றும் ஊழல்கள் சம்பந்தமாக போப் வைத்திருந்த ஆவணங்களை வாடிகனில் உள்ள சமையல்காரர் திருடியுள்ளார். அதில் பாதிரியார்களின் பலான செய்திகள் மற்றும் ஊழல்கள் குறித்த செய்திகள் உண்மைப்படுத்தப்பட்டுள்ளன. அதை வைத்துத்தான் சிறப்பு புத்தகத்தை கியான்லுகி நுஸி என்ற பத்திரிகையாளர் எழுதியுள்ளார். இது போப் பதவி விலக சொல்லப்பட்ட காரணங்களில் முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. இதை நாம் சொல்லவில்லை. இத்தாலி பத்திரிக்கைகளே பல மாதங்களுக்கு முன்னர் சொல்லிவிட்டன. அவ்வாறு இத்தாலி பத்திரிக்கைகள் சொன்ன செய்திகளை ஏற்கனவே வாடிகன் நிர்வாகம் மறுத்தது. இப்போது அது உண்மையாகியுள்ளது.

இதோ அது குறித்து முன்னர் வந்த செய்தி :

போப்பாண்டவர் ராஜினாமா செய்வதாக வந்த செய்திக்கு வாடிகன் கண்டனம்!

கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவர் போப்பாண்டவர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக இத்தாலி பத்திரிக்கைகள் வெளியிட்ட செய்தியை, வாடிகன் அதிகாரிகள் மறுத்துள்ளனர். இத்தாலி பத்திரிக்கையான லிபெரோ நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியான செய்தி உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பத்திரிக்கையின் நிருபர் ஆண்டோனியா சோச்சி என்பவர் அந்த பரபரப்பான செய்தியை எழுதி இருந்தார்.

அதில், உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் வயோதிகம் காரணமாக உடலளவில் பலவீனமாக உள்ளார். மேலும் உலகளவில் கத்தோலிக்க பாதிரியார்கள் மீது எழுந்து வரும் பாலியல் குற்றச் சாட்டுகளால், போப் மனமுடைந்து காணப்படுகிறார். அதனால் வரும் 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவருக்கு 85 வயது நிறைவடைந்த உடன், போப் பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மற்ற இத்தாலி பத்திரிக்கைகள் சிலவற்றிலும் இந்தச் செய்தி வெளியாகி இருந்தது. டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான செய்தியில் பல நாடுகளில் 170க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் துன்பறுத்தல் வழக்குகளில் கத்தோலிக்க பாதிரிமார்கள் சம்பந்தப்பட்டு உள்ளனர். இதை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட போப்பின் முயற்சிகள் தோல்வியுற்றதால், அவர் ராஜினாமா முடிவுக்கு வந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தச் செய்திகளை வாடிகன் அதிகாரிகள் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

இது குறித்து வாடிகன் நகர செய்தித் தொடர்பாளர் பாதிரியார் பிடரிக்கோ லோம்பார்டி கூறியதாவது:

போப்பின் உடல்நிலை மிக சிறப்பாக உள்ளது. அவருக்கு தனது பதவியை ராஜினாமா செய்யும் எந்த எண்ணமும், தேவையும் இதுவரை ஏற்படவில்லை. ஜெர்மனிக்கு சென்றபோதும் அவருக்கு எந்த உடல்நலக் குறைவும் ஏற்படவில்லை. அவருக்கு எதிராக எழும் எல்லா சிக்கல்களை மேற்கொள்ளும் திறமை அவரிடம் உள்ளது. ராஜினாமா குறித்த தகவல்களை எழுதியவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ போப்பிற்கு எந்த பாதிப்பும் இதுவரை இல்லை. அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார், என்றார்.

இது குறித்து செய்தி வெளியிட்ட நிருபர் ஆண்டோனியோ கூறியதாவது:

இந்த வதந்தியைக் கிளப்பி விட்டதே, வாடிகன் நகரத்தைச் சேர்ந்தவர்கள் தான். ராஜினாமா செய்வது குறித்த தகவலை, போப் இதுவரை மறுக்கவே இல்லை, என்றார்.

அதாவது பாலியல் சேட்டைகள் செய்யும் பாதிரிகளையும், ஊழல் பெருச்சாளிகளையும் ஒழிக்க இயலவில்லை. இவர்களுக்கு தலைமை தாங்கி இனி வேலையில்லை என்று பாதிரியார்கள் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக 85 வயது முடிந்தவுடன் போப் ராஜினாமா செய்யப்போவதாக இதற்கு முன்பே இத்தாலி பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுவிட்டன.

இப்போது எப்படி வாடிகன் நிர்வாகம் நாம் சொல்லக்கூடிய காரணங்களை மறுத்து அறிக்கை வெளியிட்டார்களோ அதுபோல அப்போதும் வாடிகன் நிர்வாகம் அதை மறுத்து போப் நல்ல உடல்நிலையில் உள்ளார்; அவர் ராஜினாமா செய்யவுள்ளதாக வரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள் என்று செய்தி வெளியிட்டது.

ஆனால் இப்போது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. ஏற்கனவே போப் ராஜினாமா தொடர்பாக பத்திரிக்கைகள் வெளியிட்ட செய்திகளை வாடிகன் மறுத்தது. ஆனால் வாடிகன் நிர்வாகம் மறுத்த விஷயம் இப்போது நடந்துவிட்டது. போப் ராஜினாமா செய்துள்ளார். இப்போது வாடிகன் நிர்வாகம் ஏற்கனவே மறுத்த செய்தி உண்மையாகி விட்டது. இதன் மூலம் வாடிகன் நிர்வாகத்தின் அறிவிப்பு பொய் என்பதும் நிரூபணமாகியுள்ளது.

அதுபோல தற்போது வாடிகன் நிர்வாகம் மறுத்துள்ள போப் குறித்த செய்திகளும் உண்மை என்பது கூடிய விரைவில் தெரிந்துவிடும். இன்ஷா அல்லாஹ்...

07.03.2013. 0:31 AM

பரிசுத்த ஆவி மூலம் பேச முடியுமா?

வி.பாஸ்கர்

பதில் :

இயேசு சீடர்களுக்குக் காட்சி தந்த போது அவர் கூறியதாக மாற்கு எழுதியதை ஆதாரமாகக் கொண்டு கிறித்தவ போதகர்கள் பிசாசுகளை விரட்டுவதாகவும், நோய்களைப் போக்குவதாகவும் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதற்கு அவர்கள் காட்டும் ஆதாரம் இது தான்.

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துர்த்துவார்கள்;. நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;

மாற்கு 16:17

இதை ஆதாரமாக்க் கொண்டு மனித இயல்புக்கு அப்பாற்பட்ட தொனியிலும், தோரணையிலும் உபதேசம் செய்கிறார்கள். அப்போது தான் அதை இவர்கள் பேசாமல் பரிசுத்த ஆவி பேசுகிறது என்று அப்பாவி கிறித்தவர்கள் நம்புவார்களாம். இதற்காக இறங்ங்ங்ங்குவீராக என்று நவமான பாஷை பேசுகிறார்கள். ஆனால் இவர்கள் ஆதரமாகக் காட்டும் மேற்கண்ட வசனத்துக்கு அடுத்த வசனத்தில் உள்ளதை பரிசுத்த ஆவி மூலம் செய்து காட்டச் சொன்னால் ஓட்டம் பிடிப்பார்கள். இது தான் அடுத்த வசனம்.

சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதிஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.

மாற்கு 16:18

பாம்புகளைக் கையால் பிடிக்கலாம்; விஷத்தைக் கொடுத்தாலும் ஒன்றும் ஆகாது என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.

கொஞ்சம் சயனைட் விஷத்தை வாங்கிக் கொண்டு போய் கொடுத்து இதைக் குடித்து விட்டு உயிரோடு இருந்து காட்டுங்கள் என்று கிறித்தவ போதகர்களிடம் கேளுங்கள். மேலும் கட்டு விரியன் பாம்பை கையால் பிடிக்கச் சொல்லுங்கள். அப்போது பரிசுத்த ஆவி அசுத்த ஆவியாகி விடும்.

இவர்களைப் பற்றி நாம் ஒன்றும் சொல்லத் தேவை இல்லை. இயேசுவே சொன்னதாக பைபிள் கூறுவது தான் நம்முடைய கருத்து.

தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காண வேண்டுமென்று செய்கிறார்கள். தங்கள் காப்பு நாடாக்களை அகலமாக்கி தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தை வெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ ரபீ என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள். நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள். கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார். நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்! பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்! கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.

மத்தேயு 23:5

அன்றியும் நீ ஜெபம் பண்ணும் போது மாயக்காரரைப் போலிருக்க வேண்டாம். மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெபஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும்  நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ ஜெபம் பண்ணும் போது உன் அறை வீட்டிற்குள் பிரவேசித்து உன் கதவைப் பூட்டி அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு! அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும் போது அஞ்ஞானிகளைப் போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்! அவர்கள் அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப் போல நீங்கள் செய்யாதிருங்கள்! உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.

மத்தேயு 6:5-8

மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ! மனுஷர் பிரவேசியாதபடி பரலோக ராஜ்யத்தைப் பூட்டிப் போடுகிறீர்கள்;. நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை. பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ! பார்வைக்காக நீண்ட ஜெபம் பண்ணி விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப் போடுகிறீர்கள். இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள். மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ! ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும், பூமியையும் சுற்றித் திரிகிறீர்கள். அவன் உங்கள் மார்க்கத்தானான போது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.

மத்தேயு 23:13-15

உங்கள் கச்சைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது, வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்க வேண்டாம்! வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்.

மத்தேயு 10:9,10

கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்!; அவர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்துக் கொண்டு உங்களிடத்தில் வருவார்கள். உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

மத்தேயு 7:15

மேலும் கிறித்தவக் கொள்கையின் நிறுவனர் பவுலடிகள் நாங்கள் மதத்தைப் பரப்ப பொய் சொல்வோம் என்று வாக்கு மூலம் கொடுத்த பின் வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

அன்றியும் என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால் இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்?

முதலாம் கொரிந்தியர்-9:7

டான்பாஸ்கோ கை அழியாமல் உள்ளதாமே

பல ஆண்டுகள் கழித்தும் புனித டான் போஸ்கோவின் கை அழியாமல் இருப்பதாகவும், அதனோடு இணைத்து மெழுகுச்சிலை ஊர்வலம் வருவது குறித்தும் செய்திகள் வெளியாகிறதே, அது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது சாத்தியமா?

- யி. முஹம்மது இம்ரான், குரோம்பேட்டை

இயேசு எந்தக் கொள்கையைப் போதித்தாரோ அந்தக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைத்து பவுல் என்பவர் புது மதத்தை உருவாக்கினார். அந்த மதத்துக்கும் இயேசுவுக்கும் எள்ளளவும் சம்மந்தமில்லை என்றாலும் அதற்கு கிறித்தவமதம் என்று பெயரிட்டுக் கொண்டனர்.

இந்தப் புது மதத்தை மக்களிடம் எப்படி கொண்டு போவது? உருப்படியான ஒரு கொள்கையும் இல்லாமல் ஒரு மதத்தை மக்களிடம் கொண்டு செல்ல பவுல் என்பவர் அற்புதமான வழிமுறையை வகுத்தார். மதத்தைப் பரப்ப எவ்வளவு வேண்டுமானாலும் பொய் சொல்லலாம் என்பதுதான் அந்தக் கொள்கை.

இதோ பவுல் உருவாக்கிய பைபிள் கூறும் வாக்கு மூலம்:

நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப் பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா? அப்படிச் சொல்லக் கூடாது; சொல்லக் கூடுமானால் தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி? அன்றியும் என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால் இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்? நன்மை வரும்படிக்குத் தீமை செய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள் மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.

ரோமர் 3:5-8

கிறித்தவ பிரச்சாரகர்களின் ஒரே கொள்கை பொய் சொல்லி மதத்துக்கு ஆள் பிடிக்க வேண்டும் என்பது மட்டுமே.

இன்றும் கூட கிறித்தவ மத குருமார்கள் குருடர்கள் பார்க்கிறார்கள்; செவிடர்கள் கேட்கிறார்கள் என்று பொது இடங்களில் நாடகம் நடத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

குருடர் பார்க்கிறார்கள் என்பது உண்மையானால் இவர்கள் மருத்துவமனைகள் பல நிறுவுவது ஏன்? நற்செய்தி(?)யாளர்கள் பலர் நோயுற்று மருத்துவமனையில் சேர்க்கப்படுவது ஏன்? பொய் சொல்லி மதத்தைப் பரப்பலாம் என்பதே அடிப்படைக் கொள்கையாக உள்ளதால் இதில் அவர்களுக்கு குற்ற உணர்வோ உறுத்தலோ ஏற்படுவதில்லை.

நான் அழைத்து வரும் குருடனுக்குப் பார்வை கொடுப்பாயா என்று நாக்கைப் பிடுங்கும் அளவுக்கு நாம் கேள்வி கேட்டாலும் வெட்கமின்றி அப்பாவிகளை ஏமாற்றும் அடுத்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வதற்கும் இது தான் காரணம்.

இது போன்ற புளுகு மூட்டைகளில் ஒன்று தான் டான் போஸ்கொவின் சேதமடையாத கை.

இது முற்றிலும் கட்டுக் கதை. அந்த உடல் எப்படி செயற்கையானதோ அது போல் கையும் செயற்கையானது தான். அவர்கள் சோதனைக்கு உடன்பட்டால் அது செய்யப்பட்ட கை என்பதையும் அது எந்தப் பொருளால் செய்யப்பட்டது என்பதையும் நாம் நிரூபித்துக் காட்டுகிறோம் என்று சவால் விடுகிறோம்.

அல்லது அவர்களின் ஆட்சி நடக்கும் அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளின் மருத்துவக் குழுவில் அந்தக் கையை ஒப்படைத்து இது நிஜக் கை தான் என்றும் அது இத்தனை ஆண்டுக்கு முந்திய கை தான் என்றும் தக்க ஆதாரங்கள் கொண்ட சான்றிதழ் வாங்கிக் காட்ட இவர்கள் தயாரா?

இவர்கள் எதற்கும் தயார் இல்லை. அப்பாவி கிறித்தவ மக்கள் இதை நம்புகிறார்கள் என்பதால் இவர்கள் அதை வைத்தே இது போல் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள். *

உணர்வு 16:11

16.12.2011. 9:26 AM

ஞாயிறு விடுமுறை கிறித்தவ கலாச்சாரமா?

ஞாயிறு விடுமுறை அளிப்பது பிற மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதாக ஆகாதா?

எம்.ஜமால்

திருத்துறைபூண்டி, திருவாரூர்

பதில் :

ஆறு நாட்கள் வேலை பார்த்துவிட்டு ஒரு நாள் ஓய்வு எடுப்பது தான் வார விடுமுறையின் நோக்கம்.

ஆனால் உலகை ஆளும் கனவுடன் புறப்பட்ட பிரிட்டிஷாரும், பிரஞ்சுக்காரர்களும், போர்த்துகீசியர்களும் உலகின் பல நாடுகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அவர்கள் அனைவருமே கிறித்தவர்களாகவும், கிறித்தவ ஆதிக்கத்தை நிலை நாட்டுவதைக் கொள்கையாகக் கொண்டவர்களாகவும் இருந்ததால் சர்ச்சில் வழிபாடு நடத்துவதற்காக ஞாயிற்றுக் கிழமையை விடுமுறை நாளாக தங்கள் நாடுகளில் மட்டுமின்றி தாங்கள் கைப்பற்றிக் கொண்ட நாடுகளிலும் திணித்து விட்டனர்.

எப்படி ஆங்கில மொழியைத் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் திணித்தார்களோ அது போல் இதையும் செய்தனர்.

இருநூறு முன்னூறு ஆண்டுகளாக மக்கள் அனைவரும் இதற்குப் பழகி விட்டதால் அதுவே நீடித்து வருகிறது.

வழிபாட்டுக்குரிய நாள் என்பதற்காக அவர்கள் ஞாயிறு விடுமுறையை ஏற்படுத்தினாலும், கிறித்தவர்கள் அல்லாத மக்கள் அதை வெறும் விடுமுறை நாளாக மட்டுமே கருதுகின்றனர். மத அடிப்படையில் அது கடவுள் ஓய்வு எடுத்த நாள் என்று கிறித்தவர்கள் நம்புவது போல் மற்றவர்கள் நம்புவதில்லை.

ஆனால் விடுமுறை நாளை மாற்றுவதில் அரசின் நிலைப்பாடும் ஒத்து வந்தால் தான் அதில் பயன் இருக்கும். நாம் மட்டும் நம் இஷ்டப்படி விடுமுறை அளிப்பதால் நமக்கு நஷ்டங்கள் தான் ஏற்படும். ஞாயிறு விடுமுறை என்பது அரசின் முடிவாகவும் உள்ளதால் அன்று நாம் மட்டும் போய் பூட்டிக்கிடக்கும் அரசு அலுவகத்தை நமது தேவைக்காக அணுக முடியாது.

அனைத்து மக்களும் ஞாயிறு விடுமுறை என்பதற்குப் பழகி விட்டதால் ஞாயிறன்று நாம் கடை திறந்தால் மக்கள் வர மாட்டார்கள். மக்கள் கூடும் நாட்களில் நாம் மட்டும் விடுமுறை அளித்தால் நமது வியாபாரத்துக்குப் பாதிப்பு ஏற்படும். அரசாங்கம் தான் இது போன்ற மாற்றங்களைச் செய்ய முடியும். தனி மனிதர்களால் ஒன்றும் செய்ய முடியாது.

சவூதி உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் ஞாயிறு விடுமுறையைக் கடைப்பிடிப்பதில்லை. வெள்ளிக்கிழமை தான் அங்கே விடுமுறை விடப்படுகிறது.

அது போல் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் பல ஊர்களில் ஜும்மா தொழுகையைக் கவனத்தில் கொண்டு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படுகின்றது. முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் சிலவும் இவ்வாறு செய்து வருகின்றனர்.

இது போல் சாத்தியமான போது வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கலாம். நாம் மட்டும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால் அதில் ஒரு பயனும் இல்லை என்றால் அப்போது ஞாயிறு விடுமுறை அளிப்பது தவறில்லை. ஆறு நாட்கள் வேலை பார்த்து விட்டு ஒரு நாள் நமக்கு அளிக்கப்படும் ஓய்வு என்று மட்டுமே நாம் கருதுவதால் மார்க்க அடிப்படையில் நம்மீது குற்றம் வராது.

உணர்வு 16:24

21.02.2012. 13:03 PM

Page 4 of 4