Sidebar

18
Sat, Jul

கம்யூனிஸ்டுகளுக்கு தக்க பதில் அளிக்கலாமே?

கேள்வி : கள்ளக் கிறிஸ்துவர்களும், கம்யூனிஸ்டுகளும் தங்கள் இணையத்தில் இஸ்லாத்தைப் பற்றி பித்னாகளை கிளப்பி வருகிறார்கள். அவர்கள் நேரடி விவாதத்திற்கு வராத பட்சத்தில் நாம் எழுத்து வடிவில் அவர்களுக்கு பதில் அளிக்கலாமே.

ஸியாத் ரஹ்மான்

பதில் : சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக இஸ்லாம் குறித்து யார் கேள்வி கேட்டாலும் அதற்கு நாம் தக்க விளக்கம் அளித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால் சந்தேகத்தைத் தெளிவுபடுத்தும் நோக்கம் இல்லாமல் இஸ்லாம் தாழ்ந்தது என்றும், தங்களின் கிறித்தவம் மேலானது என்றும் திமிர்வாதம் பேசுவோரையும்,

இஸ்லாம் மட்டமானது என்றும் தங்களின் கழிபட்ட கம்யூனிசம் தான் சிறந்தது என்றும் களமிறங்குவோரையும் தான் நாம் விவாதத்துக்கு அழைக்கிறோம்.

எழுத்து வடிவில் நாம் எவ்வளவு தெளிவாகப் பதிலளித்தாலும் அதற்கு மறுப்பு என்ற பெயரில் ஏதாவது உளறிக் கொட்டுவார்கள். அதற்கு நாம் தக்க மறுப்பு எழுதினாலும் மறுப்புக்கு மறுப்பு என்று ஏதாவது உளறிக் கொட்டுவார்கள். அதை எழுத்து வடிவிலான விவாதத்தில் உடனே சுட்டிக்காட்ட முடியாது.

இவ்வாறு சென்றால் வருடக் கணக்கில் இழுத்தடித்துக் கொண்டே செல்லும். அதிக இடைவெளி இருப்பதால் மக்களால் உண்மையை எளிதில் புரிய முடியாது.

ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு குரங்கு போல் தாவி தப்பித்துக் கொண்டு இருப்பார்கள். நாம் பத்து விஷயங்களுக்குப் பதில் சொன்னால் அதில் சமாளிக்கத் தகுந்த ஓரிரு விஷயங்கள் குறித்து மட்டும் பதில் போடுவார்கள். எத்தனை முறை சுட்டிக்காட்டினாலும் ஒவ்வொன்றாகச் சொல்வோம் என்று கூறி பல வருடங்களை ஓட்டி விடுவார்கள்.

மேலும் ஒன்றை உயர்த்தி மற்றொன்றைத் தாழ்த்தி வாதிக்கும் குருட்டுக் கும்பலுக்கு நம் தரப்பு விளக்கம் மட்டும் போதுமான பதிலடியாகாது. நீ தூக்கிப் பிடிக்கும் கம்யூனிசம் உலகிலேயே மூட நம்பிக்கையும், கிறுக்குத் தனமும் அதிகமாக உள்ளதாகும் என்று கிடுக்கிப்பிடியும் போட வேண்டிய அவசியமும் உள்ளது.

வெறும் கேள்விகள் மட்டும் கேட்டுவிட்டு ஓட இடமளிக்காமல் நமது கேள்விகளையும் அவர்களைச் சந்திக்க வைத்து அவர்கள் தூக்கிப் பிடிக்கும் கம்யூனிசம் தான் உலகில் உள்ள சித்தாந்தங்களில் கழிபட்டது என்பதையும் நாம் நிறுவ வேண்டும்.

சில விஷயங்களுக்குப் பதில் கூற முடியாத போது அதை ஒப்புக் கொள்ளாமல் சம்மந்தமில்லாதவைகளை எழுதுவதும், கடைசியில் அதற்குப் பதில் கூறுவதாகக் கூறிக் கொண்டு நாட்களைக் கடத்துவதும் எழுத்து விவாதத்தில் உண்டு என்பதை அனுபவப்பூர்வமாக நாம் அறிகிறோம்.

ஒருவர் தவறான வாதத்தை எடுத்து வைத்தால் அவர் வாயாலேயே அதை ஒப்புக் கொள்ள வைத்து உண்மை எது பொய் எது என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கும் வாய்ப்பு நேரடி விவாதத்தில் தான் உண்டு.

எந்த மனிதரும் பொதுமக்கள் மத்தியில் பேசுவது போல் எதிரியின் முன்னிலையில் பேச மாட்டார். மிகச் சரியான தகவலையே பேசுவார். எழுத்து விவாதம் என்பது எதிரியின் முன்னிலையில் தெரிவிக்கும் கருத்து அல்ல. பொதுமக்களை வசீகரப்படுத்தும் தந்திரம் தான் அதில் மிகைத்திருக்கும்.

நேரடி விவாதம் என்பது எதிரியின் முன்னிலையில் கருத்தைத் தெரிவிப்பது என்பதால் அது தான் ஆழமானதாகவும், அறிவுப்பூர்வமானதாகவும் இருக்கும்,

இஸ்லாத்தின் அடிப்படைகள் திருமறைக் குர்ஆனும், குர்ஆனிற்கு முரண்படாத ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் ஆகிய இரண்டும்தான்.

ஆனால் இஸ்லாத்தை விமர்சிக்கும் கள்ளக் கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள், நாத்திகர்கள் மற்றும் பலர் இஸ்லாத்தினை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் மனிதர்களின் கருத்துக்களைத் தான் இஸ்லாம் போன்று காட்டி விமர்சிக்கின்றனர். அல்லது குர்ஆன் கூறாத கருத்தை இவர்கள் திணித்துக் கொண்டு விமர்சிக்கின்றனர்.

இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையும், தப்ஸீரில் உள்ள மனிதக் கருத்துக்களையும் இஸ்லாம் போல் காட்டி விமர்சிக்கின்றனர். இவற்றையெல்லாம் தெளிவாக விளக்க வேண்டும் என்றால் நேரடி விவாதம் தான் சாத்தியமானதாகும்.

மேலும் இஸ்லாம் குறித்து எடுத்து வைக்கும் எந்த வாதத்துக்கும் தக்க ஆதாரத்தை அந்த இடத்திலேயே எடுத்து வைக்க வற்புறுத்தி அவர்களின் அறியாமையை அடையாளம் காட்ட முடியும்.

இதன் காரணமாகத் தான் இஸ்லாத்தை விமர்சிக்கும் யாராக இருந்தாலும் நம்முடன் நேரடியாக விவாதிக்க அறைகூவல் விடுக்கின்றோம்.

அதன் அடிப்படையில் கிறித்தவர்களுடன் நடந்த விவாதத்திலும், நாத்திகர்களுடன் நடந்த விவாதத்திலும் நம் தரப்பை நிலைநாட்டியதுடன் அவர்களின் தரப்பு தவறு என்பதையும் இரண்டே நாட்களில் நிரூபித்து முடித்து விட்டு வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டோம்.

எழுத்து விவாதம் என்று ஜவ்வு மாதிரி எதையாவது பத்து வருடங்களுக்கு உளறிக் கொண்டு காலத்தை ஓட்டலாம் என்று கணக்குப் போடுகின்றனர்.

எழுத்து விவாதம் என்ற பெயரில் எவனோ எழுதியதை வாந்தி எடுக்கும் கூட்டம் ஓட்டம் பிடிப்பது இதற்குத் தான்..

ஒரு காலம் இருந்தது. நாத்திகர்களும், கம்யூனிஸ்டுகளும் மதவாதிகளை விவாதத்துக்கு அழைத்த போது மதத்தைப் பின்பற்றுவோர் ஓட்டம் எடுத்தனர்,.

இன்று கம்யூனிஸ்டுகளும் நவீன கம்யூனிஸ்டுகளும், பகுத்தறிவுவாதிகளும் ஓட்டம் பிடித்துக் கொண்டே உளறிக்கொண்டு திரிகின்றனர். நாம் விரட்டிக் கொண்டு செல்கிறோம். நான் ஓடவில்லை என்று சொல்லிக் கொண்டே ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்.

சாதாரணக் கம்யூனிஸ்டுகளும், நாங்கள் தான் உண்மை கம்யூனிஸ்டுகள் என்று பீற்றிக் கொள்பவர்களும் மூடர்களே என்பதையும் சிந்தனைக் கோளாறு உள்ளவர்களே என்பதையும் மதவாதிகளை விட பிற்போக்கானவர்களே என்பதையும் அவர்களின் சொற்களையும், எழுத்துக்களையும் வைத்து நாம் நிரூபித்துக் காட்ட தயாராக இருக்கிறோம்.

அத்துடன் அவர்கள் இஸ்லாத்துக்கு எதிராக எந்தக் கேள்வி கேட்டாலும் அவர்களின் முதுகெலும்பை முறிக்கும் வகையில் பதில் அளிக்க காத்துக் கொண்டு இருக்கிறோம்.

இப்படி நெஞ்சுயர்த்திச் சொல்லும் நிலையில் இஸ்லாம் இருப்பதும், அதை எதிர்கொள்ள முடியாமல் இவர்கள் ஓட்டம் எடுப்பதுமே எது உண்மை என்பதைப் புரிந்து கொள்ளப் போதுமானது.

நாம் விடாமல் விரட்டும் நிர்பந்தம் காரணமாக அவர்கள் விவாதக் களத்துக்கு வந்தாக வேண்டும் என்ற நிர்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டே தீரும். ரோசம் வரும் அளவுக்கு நாக்கைப் பிடுங்கும் அளவுக்கு கேள்வி கேட்டு விரட்டிக் கொண்டே இருந்தால் தங்கள் அடிமைக் கூட்டத்தைத் தக்க வைப்பதற்காக விவாதத்துக்குத் தயார் என்று ஒப்புக் கொள்ளும் நிலையை அவர்கள் சந்தித்துத் தான் ஆக வேண்டும். அப்போது சில நாட்கள் விவாதத்துடன் அவர்களின் முதுகெலும்பு முறிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்

13.03.2012. 15:07 PM

சுன்னத் செய்வதன் நன்மைகள்!

உறுதிப்படுத்தும் மருத்துவ ஆய்வுகள்

டாக்டர். த. முஹம்மது கிஸார்

குழந்தை மருத்துவத்தின் மிக உயர்ந்த அமைப்பான American Academy Of Pediatrics என்னும் குழந்தை மருத்துவத்திற்கான அமெரிக்கன் அகாடமி, கத்னா செய்வதால் அதிக மருத்துவப் பயன்கள் உள்ளன என்று 2012 இல் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளது.

சுன்னத செய்வதால் நுண்கிருமிகள் ஆண்குறியின் முன்பக்கம் சேர்வதைத் தடுக்க முடியும். ஆண்குறியின் முன்பு சேரும் அழுக்கை, சாதாரணமாக நீக்கி கத்னா  செய்த ஆணுறுப்பைப்  பராமரிக்க முடியும்.

சிறுநீர்ப் பாதையில் தொற்றுநோய் வரும் வாய்ப்பு, சுன்னத் செய்த ஆண்களுக்கு மிகமிகக் குறைவு.

சிறுவர்களுக்கு phimosis  என்னும் ஆணுறுப்பின் முன் தோல் மிக இறுக்கமாக இருந்து அதனால் சிறுநீர் சிறிது தங்கிவிடும். இந்த நிலை கத்னா  செய்த ஆண்களுக்கு குறிப்பாக சிறுவர்களுக்கு வருவதே இல்லை. இந்த phimosis காரணமாக சிறுநீர் பாதையில் தொற்று வரும் ஆபத்து அதிகம். சில சமயம் சாதாரண சிறுநீர்ப் பாதை நோய் தோற்று, கிட்னி பாதிப்பை ஏற்படுத்தலாம் .இந்த நிலை கத்னா செய்த ஆண்களுக்கு வருவது கிடையாது.

கத்னா செய்த ஆண்களுக்கு எய்ட்ஸ் உட்பட பால்வினை நோய்கள் வரும் வாய்ப்பு மிகக் குறைவு. ஆப்ரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வும், CDC math model என்னும் அமெரிக்க ஆய்வும் உறுதிபடுத்துகிறது.

ஆணுறுப்பில் வரும் பிரச்சினைகள் குறைவு:

கத்னா செய்யப்படாத ஆண்குறியின் முன்தோலை பின்னால் இழுக்க முடியாமல் போகும் நிலையால் ஆண்குறியில் அழற்சி வரலாம். தோலின் கீழ் மாவு போன்ற அழுக்கு சேர்ந்து, கட்டி போன்று உருவாகலாம்.

ஆண்குறி கேன்சர் அறவே வாராது,

கத்னா  செய்த ஆண்களுக்கு ஆண்குறியில் கேன்சர் வரவே வராது.

கத்னா செய்த ஆண்களின் மனைவியருக்கு cervical cancer என்னும் கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய் வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.

காரணம் கத்னா செய்த ஆண்களுக்கு HPV என்னும் Human Pappiloma Virus தொற்று வரும் வாய்ப்பே இல்லை .இந்த HPV என்னும் வைரஸ் கிருமி தான் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப்புற்று நோய் ஏற்படுத்துகிறது. மேலும் கத்னா செய்த ஆண்குறியில், smegma என்னும் மாவு போன்ற அழுக்கு சேராததால், ஆண்குறியில் வரும் நோய்த் தாக்கம் குறைவு.

இதை இன்னொரு ஆப்ரிக்கன் ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

prostate cancer என்னும் ஆண் இனப்பெருக்க உள் உறுப்பில் வரும் புற்று நோய், கத்னா செய்த ஆண்களுக்கு வரும் வாய்ப்பு மிகக் குறைவு என்று இன்றைய ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

ஒரு புதிய ஆய்வு இவ்வாறு உறுதிப்படுத்துகிறது : கத்னா  செய்வதால், ஆணுறுப்பில் உள்ள பாக்டீரியா ecocsystem எனப்படும் உயிர் பொருட்கள் சூழ்நிலைக்குத் தக்கவாறு செயல்படும் முறை, அதிகளவில் மாறுகிறது. நோயை உருவாக்கும் பாக்டீரியா எண்ணிக்கை வெகுவாகக் குறைகிறது அதிலும் குறிப்பாக ஆக்ஸிஜென் இல்லாமல் வாழும் பாக்டீரியாவான anaerobic பாக்டீரியா வெகுவாகக் குறைகிறது. அதனால் ஆணுறுப்பில் வரும் நோய்த் தொற்று குறைகிறது

(தகவல் Journal mBio ஏப்ரல் 16, 2012)

இதே தகவலை இன்னொரு ஆய்வும் உறுதி செய்கிறது. அமெரிக்க ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக மரபணு ஆய்வாளர் Lance Price, ஒரு பாறையைப் புரட்டி போட்டு ecosystem மாற்றுவதைப் போல் கத்னாவினால் ஆண்குறி பக்டீரியா ecosystem மாற்றம் அடைகிறது என்கிறார் (From an ecological perspective, it s like rolling back a rock and seeing the ecosystem change. ).

இது  போல் உகாண்டா நாட்டில் கத்னா செய்த ஆண்களிடம் செய்யப்பட்ட ஆராய்ச்சியில், price மற்றும் கூட்டாளிகள் இவ்வாறு கண்டுபிடித்து உள்ளனர். கத்னாவினால் நீக்கப்பட்ட தோலின் கீழ் பகுதியில் உள்ள நுண்ணுயிரிகளின் biodiversity மிக குறைவாக உள்ளது, மிக நல்ல விஷயம். காரணம் கத்னாவினால் நீக்கப்படும் நுண்ணியிரிகள் தான் ஆண்குறியில் அழற்சியை ஏற்படுத்துகிறது.

உலகிலேயே குழந்தை மருத்துவத்திற்கான மிகப் பெரிய அமைப்பான AAP, கடந்த 13 ஆண்டுகாலமாக ஏற்றுக் கொள்ள மறுத்து வந்த, கத்னாவினால் ஏற்படும் அதிக நன்மைகளை, கடந்த 2012 ஆண்டு பல ஆய்வுகளுக்குப் பின் உறுதிப்படுத்தி ஒத்துக் கொண்டுள்ளது.

உலகிலேயே கத்னாவால் ஏற்படும் நன்மைகள் பற்றி ஆய்வு அதிகம் ஆப்ரிக்காவில் தான் செய்யப்பட்டது.

2005 இல் தென் ஆப்ரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கத்னா செய்யப்பட்ட ஆண், HIV positive என்னும் எய்ட்ஸ் நோய் உள்ள பெண்களோடு உடலுறவு கொண்டபோது, அவர்களுக்கு அந்தப் பெண்களில் இருந்து வரும் HIV வினால் ஏற்படும் AIDS 63 சதவிகிதம் குறைவு, இதனால் கத்னா செய்த ஆண்கள் பாதுகாப்பாக எந்தப் பெண்ணுடனும் தகாத உடலுறவு கொள்ளலாம் என்று கருதக் கூடாது. இது ஒரு ஆய்வின் அறிக்கை தான். இஸ்லாம் விபச்சாரத்தை அறவே தடுக்கிறது.

கத்னாவிற்கு எதிராக, இதன் எதிர்ப்பாளர்களால் வைக்கப்பட்ட ஒரு வாதம், கத்னா  செய்த ஆண்களுக்கு உடலுறவின் போது அதிக உடலுறவு சுகம் கிடைக்காது என்பது தான். ஆனால் இந்த வாதத்தையும் பல ஆய்வுகள் பொய் என்று உறுதி செய்து விட்டன.

இன்னொரு விஷயம் கத்னா செய்யப்பட்ட ஆண்களின் ஆணுறுப்பின் நுனிப்பகுதி, சிறு வயதில் இருந்தே, வேஷ்டி, ஜட்டி அல்லது பேன்ட் போன்றவற்றில் உரசி உரசி பழக்கப்பட்டதால், உடலுறவின் போது பெண்ணுறுப்பில், ஆணுறுப்பை வைத்த உடன் அதிக உணர்ச்சி கூச்சத்தால் ஏற்படும் premature ejaculation எனப்படும் முன்கூட்டியே விந்து வெளியாதல் என்னும் நிகழ்வு, கத்னா செய்த ஆண்ககளுக்கு ஏற்படாது. இதனால் அவர்களின் மனைவியருக்கு உடலுறவில் ஏற்படும் உச்சகட்டத்தை அடைய முடியாமல் போகும் ஏமாற்றம் ஏற்படாது.

16.05.2013. 9:23 AM

அக்கா மகளை மணந்திருந்தால்?

எனக்குத் தெரிந்த ஒருவர் அறியாமைக் காலத்தில் அக்கா மகளைத் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இப்போது இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டது என்று உணர்கிறார். இந்த நிலையில் அவர் என்ன செய்வது?

நிசா, அயன்புரம்

பதில் :

உடன் பிறந்த சகோதரியின் மகளை மணமுடிப்பதை அல்லாஹ் தடை செய்துள்ளான்.

حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ (23)4

உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்கு (வேறு கணவர் மூலம்) பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர்.

திருக்குர்ஆன் 4:23

சகோதாரியின் மகளைத் திருமணம் செய்யக் கூடாது என்பதை ஒருவர் அறியாமல் இருக்க முடியாது. முஸ்லிம்களில் எந்தக் கொள்கை உடையவராக இருந்தாலும் அவர்கள் இது போன்ற திருமணத்தை செய்து வைக்க மாட்டார்கள். அவர் அறிந்து கொண்டே தான் இதைச் செய்திருக்க வேண்டும். இப்போது இறையச்சம் ஏற்பட்டு அவர் திருந்த எண்ணியிருக்கலாம். எனவே அவர் அல்லாஹ்வால் தடுக்கப்பட்ட இந்தக் காரியத்தைச் செய்ததற்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும்.

இந்த வாழ்க்கையை மறுபடியும் அவர் தொடரக்கூடாது. இதற்கு முன்பு அவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்தாலும் சட்டம் தெளிவான பிறகு அந்த வாழ்வைத் தொடராமல் இருவரும் பிரிந்துவிட வேண்டும்.

இது போன்ற பிரச்சனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு நபித்தோழருக்கு ஏற்பட்டது. கணவன் மனைவியாக வாழ்ந்த அவ்விருவரும் பிரிந்துவிட வேண்டும் என்றே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

88حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الْحَسَنِ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ أَبِي حُسَيْنٍ قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي مُلَيْكَةَ عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ أَنَّهُ تَزَوَّجَ ابْنَةً لِأَبِي إِهَابِ بْنِ عَزِيزٍ فَأَتَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ إِنِّي قَدْ أَرْضَعْتُ عُقْبَةَ وَالَّتِي تَزَوَّجَ فَقَالَ لَهَا عُقْبَةُ مَا أَعْلَمُ أَنَّكِ أَرْضَعْتِنِي وَلَا أَخْبَرْتِنِي فَرَكِبَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ فَسَأَلَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ وَقَدْ قِيلَ فَفَارَقَهَا عُقْبَةُ وَنَكَحَتْ زَوْجًا غَيْرَهُ رواه البخاري

உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) கூறுகிறார்கள் :

நான் அபூஇஹாப் பின் அஸீஸ் என்பவரின் மகளை மணந்து கொண்டேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து நான், உக்பாவாகிய உனக்கும் நீ மணந்துகொண்டுள்ள பெண்ணுக்கும் (உங்கள் மழலைப் பருவத்தில்) பாலூட்டியிருக்கிறேன் (இந்த வகையில் நீங்கள் இருவரும் பால்குடிச் சகோதரரர்கள் ஆவீர்கள்) என்று கூறினார். நீங்கள் எனக்குப் பாலூட்டியதை நான் அறியமாட்டேன்; (நான் மணமுடித்துக் கொண்டபோது) நீங்கள் எனக்கு (இதைத்) தெரிவிக்கவில்லையே! என்று கேட்டேன். ஆகவே, (இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மக்காவிலிருந்து) நான் மதீனாவிலிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கிப் பயணம் செய்து, அவர்களிடம் (இது குறித்து) வினவினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நீயும் உம் மனைவியும் ஒரே செவிலித்தாயிடம் பால்குடித்ததாகச்) சொல்லப்பட்ட பிறகு எப்படி? என்று கேட்டார்கள். ஆகவே நான் அவளை விட்டுப் பிரிந்துவிட்டேன். அந்தப் பெண்ணும் வேறொரு கணவனை மணந்துகொண்டாள்.

அறிவிப்பவர் : உக்பா (ரலி)

நூல் : புகாரி 88

இவர்கள் பிரிந்துவிட்டாலும் குழந்தைக்கு இவர்களே தாயும் தந்தையுமாவார்கள். இவ்விருவரில் குழந்தை யாரிடத்தில் இருக்க விரும்புகின்றதோ அவரிடத்தில் சேர்க்கப்படும்.

திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் 114 வது குறிப்பையும் காண்க!

 

சகோதரி மகளைத் திருமணம் செய்தவர் இஸ்லாத்தில் சேர முடியுமா?

இந்து மதத்தைச் சார்ந்த சகோதரர் ஒருவர் குடும்பத்துடன் இஸ்லாத்தில் இணைய ஆர்வப்படுகிறார். அவர் தனது சகோதரியின் மகளைத் திருமணம் செய்துள்ளார். இஸ்லாத்தில் சகோதரியின் மகளைத் திருமணம் செய்வது கூடாது. எனவே இஸ்லாத்திற்கு வர விரும்பும் இவர் என்ன செய்ய வேண்டும்?

ரஷீத்

பதில்:

சகோதரியின் மகளைத் திருமணம் செய்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது. சட்டம் தெரியாமல் யாரேனும் இவ்வாறு திருமணம் செய்திருந்தால் சட்டத்தை அறிந்த பிறகு அவ்விருவரும் திருமண பந்தத்தை முறித்துக்கொண்டு பிரிந்துவிட வேண்டும் என்பதே மார்க்கச் சட்டம்.

வேறு கொள்கையில் இருப்பவர் இவ்வாறு திருமணம் செய்திருந்தால் இந்தச் சட்டத்தை செயல்படுத்தி விட்டுத்தான் இஸ்லாத்தில் இணைய வேண்டும் என்று மார்க்கம் கூறவில்லை.

வேறு கொள்கையில் இருக்கும் ஒருவர் இஸ்லாத்தில் இணைய நினைத்தால் அவர் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றார்கள் என்று மனப்பூர்வமாக ஒத்துக்கொண்டு இதை வெளிப்படையாக மொழிய வேண்டும்.

இதை அவர் செய்துவிட்டால் அவர் முஸ்லிமாகி விடுவார். அவர் இஸ்லாத்தில் இணைவதற்கு நாம் கூறிய இந்த விஷயத்தைத் தவிர்த்து வேறு எந்த நிபந்தனையும் இல்லை.

புதிதாக இஸ்லாத்திற்கு வருபவர்கள் இஸ்லாத்தைப் பற்றி முழுமையாகப் புரிந்திருக்க மாட்டார்கள். உறுதியான நம்பிக்கையை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. இந்நிலையில் இருப்பவரிடம் இஸ்லாத்தில் கூடாத எல்லா விஷயங்களையும் விட்டுவிட்டுத் தான் இஸ்லாத்தில் இணைய வேண்டும் என்று கூறினால் இது பெரும் சுமையாக அவருக்குத் தோன்றலாம். இதன் காரணத்தால் அவர் இஸ்லாத்தில் இணைவதைக் கைவிட நினைக்கலாம்.

இந்நிலை ஏற்படாமல் இருக்க அவருக்கு கலிமாவை சொல்லிக் கொடுத்து அவர் இஸ்லாத்தை ஏற்ற பிறகு சிறிது காலம் மார்க்க உபதேசங்களைக் கேட்பார். மார்க்கத்தைப் பற்றி தெளிவாக அறிந்து கொண்ட பின் தானாகவே அவர் இஸ்லாமியச் சட்டத்தைச் செயல்படுத்தத் துவங்கி விடுவார். இஸ்லாத்தில் அவருக்குப் பிடிப்பு ஏற்பட்ட பின் அவர் தன்னுடைய சகோதிரியின் மகளை விவாகரத்துச் செய்ய வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தலாம்.

எனவே தான் ஒருவர் இஸ்லாத்தில் இணைவதற்கு கலிமாவை மனப்பூர்வமாக மொழிவதைத் தவிர்த்து வேறு எதையும் இஸ்லாம் நிபந்தனையாக்கவில்லை.

முஸ்லிமாகப் பிறந்த பலர் இஸ்லாம் தடுத்துள்ள பல காரியங்களைச் செய்து கொண்டு முஸ்லிம்களாக நீடிக்கிறார்கள். அதுபோல் இஸ்லாத்தில் இணைபவரிடம் சில தீமைகள் இருக்கலாம். குடிப்பழக்கம், வட்டி, விபச்சாரம் போன்ற தீமைகள் அவர்களிடம் காணப்பட்டாலும் அவற்றை எல்லாம் விட்ட பிறகு தான் இஸ்லாத்தில் சேர வேண்டும் என்று மார்க்கமும் சொல்லவில்லை. நாமும் சொல்லக் கூடாது.

இஸ்லாத்தில் இணைவதன் மூலம் அவர் நிரந்தர நரகத்திற்குச் செல்லாமல் தன்னைக் காத்துக் கொள்வார். நாளடைவில் இஸ்லாமிய அறிவுரைகள் அவரிடம் உள்ள தீய செயல்களை ஒவ்வொன்றாக விட வைத்து விடும், இன்ஷா அல்லாஹ்.

More Articles …