Sidebar

13
Sun, Sep

50. நபிவழியின் அவசியத்தை உணர்த்தும் நோன்பின் சட்டம்

நோன்பு நோற்றிருப்பவர் பகலில் தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது; இரவு நேரங்களில் தாம்பத்தியத்தில் ஈடுபடலாம் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.

பகலில் மட்டுமின்றி இரவிலும் தம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்ற சட்டம் இஸ்லாத்தின் துவக்க காலத்தில் இருந்தது. அது மாற்றப்பட்டு நோன்பாளிகள் இரவில் தாம்பத்தியத்தில் ஈடுபட இவ்வசனத்தின் (2:187) மூலம் அனுமதிக்கப்படுகிறது.

இந்த விஷயத்தைத் தான் இவ்வசனம் நேரடியாகக் கூறுகிறது. அத்துடன் திருக்குர்ஆன் எப்படி இஸ்லாத்தின் மூலச் சான்றாக உள்ளதோ அதுபோல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கமும் மூலச் சான்றாகும் என்ற கொள்கை விளக்கமும் இதனுள் அடங்கியுள்ளது. அதைப் பற்றி விளக்கமாகப் பார்ப்போம்

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இரவிலும் தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்று அல்லாஹ் தடை செய்திருந்தான். அத்தடையை நபித் தோழர்களால் கடைப்பிடிக்க முடியவில்லை. அந்தத் தடையை அவர்கள் மீறினார்கள். மக்களின் பலவீனத்தைக் கருத்தில் கொண்டு அந்தத் தடையை அல்லாஹ் நீக்கி இப்போது முதல் இரவில் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலாம் என்று அனுமதி வழங்கினான் என்பது இவ்வசனத்திலிருந்து தெரிகிறது.

இரவிலும் தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்று முன்னர் தடை செய்யப்பட்டு இருந்தது என்றாலும் அவ்வாறு தடை செய்த வசனம் எதுவும் குர்ஆனில் இல்லை.

நீங்கள் உங்களுக்கே துரோகம் செய்தீர்கள் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுவதால் இரவில் இல்லறத்தில் ஈடுபடுவது முன்னர் தடை செய்யப்பட்டிருந்தது என்பதை அறிய முடியும். தடை செய்யப்பட்டிருந்த ஒரு செயலை அம்மக்கள் செய்திருந்தால் தான் அது துரோகம் எனச் சொல்லப்படும்.

எனவே உங்கள் மன்னிப்பை ஏற்று உங்களைப் பிழை பொறுத்தான் என்ற சொற்றொடரிலிருந்தும் இதை அறியலாம். தடை செய்யப்பட்டதைச் செய்தால் தான் மன்னிப்பு தேவைப்படும். அனுமதிக்கப்பட்ட ஒன்றைச் செய்யும்போது மன்னிக்கும் பேச்சுக்கு இடமில்லை. இரவில் இல்லறத்தில் ஈடுபடுவது முன்னர் தடை செய்யப்பட்டிருந்தது என்பதை இதிலிருந்தும் அறியலாம்.

இரவில் இல்லறத்தில் ஈடுபடுவது முன்னர் தடை செய்யப்பட்டிருந்ததால் தான் "இப்போது முதல் குடும்ப வாழ்வில் ஈடுபடலாம்'' எனக் கூறி தடையை அல்லாஹ் நீக்குகிறான்.

நோன்புக் காலத்தில் இரவில் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது என்ற தடை இருந்ததையும், அந்தத் தடை இப்போது முதல் நீக்கப்படுகிறது என்பதையும் இம்மூன்று சொற்றொடர்களைப் பயன்படுத்தி அல்லாஹ் கூறுகிறான்.

திருக்குர்ஆன் மட்டும் தான் இறைச் செய்தி என்ற வாதம் உண்மையாக இருந்தால் இரவில் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது என்ற தடை திருக்குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இரவில் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது என்று முன்னர் தடுக்கப்பட்டு இருந்தது என்ற தகவல் தான் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது. இரவில் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது என்ற கட்டளை எந்த வசனத்திலும் காணப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் அவ்வாறு தடை செய்திருக்க வேண்டும். அவர்கள் சுயமாகத் தடை செய்திருக்க முடியாது. அவர்கள் சுயமாகத் தடை செய்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் கண்டித்திருக்க வேண்டும். "நீங்கள் இரவில் அவ்வாறு நடந்து கொண்டது குற்றமில்லை, முஹம்மது தவறாகக் கூறி விட்டார்'' என்று இறைவன் கூறியிருக்க வேண்டும்.

அவ்வாறு அல்லாஹ் கூறாததால் குர்ஆனில் இல்லாமல் இருந்தாலும் நபி செய்த தடையை தனது தடையாக அல்லாஹ் எடுத்துக் கொள்கிறான் என்று தெரிகிறது.

இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீ திருக்குர்ஆன் மட்டுமல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் இறைவன் போடுகின்ற கருத்துக்களும் வஹீ தான். அவற்றையும் பின்பற்ற வேண்டும் என்பதற்கு இவ்வசனம் சான்றாக அமைந்துள்ளது.

புனித மாதங்கள் எவை?

போர் செய்வது தடை செய்யப்பட்ட மாதங்கள் குறித்து இவ்வசனங்கள் (2:194, 2:217, 5:2, 5:97, 9:5, 9:36) பேசுகின்றன.

9:36 வசனத்தில் அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு என்று கூறப்படுகிறது. இந்தப் பன்னிரண்டு மாதங்களில் நான்கு மாதங்கள் புனிதமானவை என்றும் கூறப்படுகிறது.

ஆனால் புனிதமான அந்த நான்கு மாதங்கள் எவை என்று திருக்குர்ஆனில் கூறப்படவில்லை. ஆனாலும் இந்த நான்கு மாதங்கள் யாவை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வானங்களும், பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருபவை. அவை துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜமாதுல் ஆகிர், ஷஅபான் ஆகிய மாதங்களுக்கு இடையிலுள்ள ரஜப் மாதமாகும்.

நூல்: புகாரீ: 3197, 4406, 4662, 5550, 7447

இந்த நபிமொழி புனிதமான மாதங்கள் யாவை என்பதை விளக்குகிறது.

பொதுவாக திருக்குர்ஆனில் அடிப்படையான சட்டங்கள் மட்டுமே கூறப்படும். அதற்கான விளக்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் 16:44, 16:64 ஆகிய வசனங்கள் கூறுவதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தை அல்லாஹ் மூலம் கிடைக்கப் பெற்ற விளக்கம் போலவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதுபோல் அமைந்த வசனங்களின் விளக்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியாகத் தான் அறிந்து கொள்ள முடியும் என்பதால் திருக்குர்ஆனுடன் நபியவர்களின் விளக்கமும் அவசியம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆன் மட்டும் போதும் என யாராவது வாதிட்டால் அந்த நான்கு மாதங்களைத் திருக்குர்ஆனிலிருந்து அவர்கள் எடுத்துக்காட்ட வேண்டும். அவ்வாறு காட்ட முடியாது எனும் போது திருக்குர்ஆனுடன் நபிவழியும் அவசியம் என்பது நிரூபணமாகி விடும்

60. இரண்டு நாட்களில் புறப்படுதல் என்பதன் பொருள்

"குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள்'' என்று இவ்வசனத்தில் (2:203) அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ்வை எப்போதும் நினைக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் அவனை நினைத்து விட்டு மற்ற நாட்களில் நினைக்காமல் இருக்கலாம் என்ற கருத்து இதில் அடங்கியுள்ளது.

பொதுவாக அல்லாஹ்வை நினைப்பது பற்றி இங்கே கூறப்படவில்லை. குறிப்பிட்ட ஒரு வணக்கத்தை குறிப்பிட்ட நாட்களில் செய்ய வேண்டும் என்பது பற்றித் தான் கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நாட்களில் செய்ய வேண்டிய அந்தக் குறிப்பிட்ட வணக்கம் என்ன என்பது திருக்குர்ஆனில் கூறப்படாவிட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது குறித்து விளக்கியுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரஃபாவில் இருந்த போது நான் அவர்களை அடைந்தேன். நஜ்து பகுதியில் இருந்து வந்திருந்த ஒரு கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஹஜ் பற்றி ஒருவரைக் கேட்கச் செய்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "ஹஜ் என்பது அரஃபா தான். யார் முஸ்தலிபாவுக்கு பஜ்ரு தொழுகைக்கு முன் வந்து விட்டாரோ அவர் ஹஜ்ஜை அடைந்து விட்டார். மினாவின் நாட்கள் மூன்றாகும். யார் இரண்டு நாட்களில் அவசரமாகச் செல்கிறாரோ அவர் மீது குற்றம் இல்லை. யார் தாமதமாகச் செல்கிறாரோ அவர் மீதும் குற்றம் இல்லை'' என்று கூறி விட்டு இதை மக்களுக்கு அறிவிப்பதற்காக ஒருவரை அனுப்பினார்கள்.

நூல் : நஸாயீ 2994

"மினாவில் கல் எறிதல்'' என்ற வணக்கத்தைத்தான் இந்த வசனம் குறிக்கிறது என்று இந்த ஹதீஸ் அடிப்படையில் நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

கல் எறிதல் என்ற வணக்கத்தை மூன்று நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய இயலாமல் அவசர வேலை உள்ளவர்கள் இரண்டு நாட்கள் மட்டும் கல் எறிந்து விட்டு புறப்பட்டால் அது குற்றம் இல்லை என்று இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

இரண்டு நாட்களில் புறப்படுதல் என்பது எதைக் குறிக்கிறது என்பதைக் திருக்குர்ஆனிலிருந்து விளங்க முடியாவிட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை விளக்கி விட்டதால் அதுவே போதுமானதாகும். திருக்குர்ஆனைப் போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த விளக்கமும் மார்க்கச் சான்றாகும்.

வேதத்துடன் ஞானமும் வழங்கப்பட்ட நபிகள் நாயகம்

இவ்வசனங்கள் (2:129, 2:151, 2:231, 3:164, 4:113, 33:34, 62:2) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வேதம் வழங்கப்பட்டதைப் பற்றி கூறும்போது வேதத்தை வழங்கினோம் என்று மட்டும் கூறாமல் வேதத்தையும், ஞானத்தையும் வழங்கியதாகக் கூறுகின்றன.

தக்க காரணங்களுடன் தான் இவ்வாறு கூறுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், மற்ற இறைத்தூதர்களுக்கும் வேதத்துடன் ஞானமும் வழங்கப்பட்டதாக 3:48, 3:81, 4:54, 5:110 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

வேதத்தை மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் அருளவில்லை; வேதத்துடன் ஹிக்மத் எனும் ஞானத்தையும் சேர்த்து அருளி இருக்கிறான் என்பதை இவ்வசனங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

வேதத்துக்கு எவ்வாறு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற ஞானத்துடன் தான் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் அளித்த விளக்கங்கள் அவர்கள் தாமாகக் கண்டுபிடித்துக் கூறியதல்ல. இறைவன் புறத்திலிருந்து அவர்களுக்கு வழங்கப்பட்டதாகும் என்பதை இவ்வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

இறைத்தூதர்கள் அளித்த விளக்கமும் இறைவன் புறத்திலிருந்து கிடைத்தவை என்பதற்கு இந்த வசனங்கள் சான்றுகளாக உள்ளன. எனவே திருக்குர்ஆன் கூறும் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது எவ்வாறு அவசியமோ அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான சொற்களையும், வழிகாட்டுதலையும் பின்பற்றுவதும் அவசியம் என்பதற்கு இவ்வசனங்கள் சான்றாக அமைந்துள்ளன.

"வேதத்தையும் ஞானத்தையும்'' என்ற சொற்றொடர் "ஞானமுடைய வேதம்'' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ஹதீஸை மறுக்கும் கூட்டத்தினர் உளறுகின்றனர்.

ஞானமுடைய வேதம் என்பதை வேதத்தையும் ஞானத்தையும் போன்ற வார்த்தைகளால் அறிவுடைய எவரும் கூற மாட்டார். ஞானமிக்க வேதம், ஞானம் நிரம்பிய வேதம் என்பது போன்ற வார்த்தைகளால் தான் இக்கருத்தைத் தெரிவிப்பார். வேதமும், ஞானமும் என்பது இரண்டு பொருட்களைத் தான் குறிக்கும் என்பது இவர்களுக்கு விளங்கவில்லை.

மேலும் மேற்கண்ட வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சில சொற்களும் இவர்களின் அறியாமையை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளன.

திருக்குர்ஆனைப் பற்றிக் கூறும் போது குர்ஆனை இறக்கினோம் என்று கூறுவது போல் 4:113 வசனத்தில் குர்ஆனையும் இறக்கினோம்; ஞானத்தையும் இறக்கினோம் என்று அல்லாஹ் கூறுகிறான். அப்படியானால் குர்ஆன் போலவே ஞானமும் இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்டது என்பது தெளிவாகிறது.

திருக்குர்ஆனுடன் நபிவழியும் அவசியம் என்பதை மேலும் அறிய 18, 363950, 5556, 576072, 105125127128132164184244255256258286318350352358430 ஆகிய குறிப்புகளைக் காண்க!

வேதத்துடன் ஏடுகளும் வழங்கப்பட்ட இறைத் தூதர்கள்

இறைத்தூதர்கள் மூன்று விஷயங்களைக் கொண்டு வந்ததாக இவ்வசனங்கள் (3:184, 16:44, 35:25) கூறுகின்றன.

* தம்மை இறைத்தூதர் என நிரூபிக்கத் தேவையான தெளிவான சான்றுகள்! (அதாவது அற்புதங்கள்)

* ஏடுகள்!

* ஒளி வீசும் வேதம்!

ஆகிய மூன்றையும் இறைத் தூதர்கள் கொண்டு வந்துள்ளனர்.

இறைத்தூதர்கள் வேதத்தை மட்டுமின்றி ஏடுகளையும் கொண்டு வந்தனர் என்று கூறப்படுவது ஏன் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.

வேதத்தை மட்டுமின்றி வேதத்துக்கு விளக்கமான ஏடுகளையும் அவர்கள் கொண்டு வந்தனர் என்பதைத் தவிர இதற்கு வேறு கருத்து இருக்க முடியாது. திருக்குர்ஆன் மட்டுமின்றி அதற்கான விளக்கமும் இறைவனால் வழங்கப்பட்டதே என்பதற்கான சான்றுகளில் இவ்வசனமும் ஒன்றாகும்.

இறைத் தூதர்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரம் என்ன?

இவ்வசனங்களில் (3:79, 6:89, 19:12, 21:74, 28:14, 45:16) நபிமார்களைப் பற்றிக் கூறும் போது அவர்களுக்கு வேதத்தையும் ஹுக்மையும் வழங்கியதாக அல்லாஹ் கூறுகிறான்.

ஹுக்ம் என்றால் அதிகாரம் என்று பொருள். திருக்குர்ஆனில் கூறப்பட்டிருக்கின்ற நபிமார்களை நாம் எடுத்துக் கொண்டால் அந்த நபிமார்களில் பெரும்பாலானவர்களுக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்படவில்லை.

அப்படியானால் அதிகாரத்தை வழங்கியதாக அல்லாஹ் கூறுவது எந்த வகை அதிகாரம் என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைப் பருவத்திலேயே யஹ்யாவுக்கு ஹுக்மை (அதிகாரத்தை) வழங்கியதாக 19:12 வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

நபிமார்களுக்கு வேதம் வழங்கப்பட்டதாக அல்லாஹ் கூறுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவர்களுக்கு ஆட்சியதிகாரம் கொடுக்காமல் இருந்தும் அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்ததாக அல்லாஹ் கூறுவது ஏன் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது?

இது ஆட்சி அதிகாரத்தைக் குறிக்க முடியாது. மாறாக வேதத்திற்கு விளக்கமாகச் சட்டமியற்றி மார்க்கத் தலைவர் என்ற முறையில் மக்களுக்கு ஆணையிடுகின்ற அதிகாரத்தைத் தான் அல்லாஹ் இங்கே குறிப்பிடுகிறான்.

இவ்வாறு பொருள் கொள்ளாவிட்டால் அல்லாஹ் அதிகாரம் வழங்கியதாகக் குறிப்பிடுவதற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும்.

ஆட்சியதிகாரம் என்று நாம் அர்த்தம் கொடுத்தால் அனுப்பப்பட்ட அனைத்து நபிமார்களும் ஆட்சியதிகாரம் பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும்.

ஏராளமான நபிமார்களை அவர்களின் எதிரிகள் கொலை செய்து விட்டார்கள் என்று திருக்குர்ஆனே சொல்கிறது. எல்லா நபிமார்களும் வெற்றி பெற்று பின்னாளில் ஆட்சி அமைக்கவில்லை.

நபிமார்களில் ஒரு சாராரை மறுத்தீர்கள்; பெரும்பாலானவர்களைக் கொன்று விட்டீர்கள் என்று 2:87 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

அதனால் இந்த வசனங்களில் சொல்லப்படும் அதிகாரம் என்பது சட்டம் இயற்றும் அதிகாரத்தையே குறிக்கிறது. வேறு விதமான வஹீயின் மூலம் இந்தச் சட்டம் அவர்களுக்கு வந்து சேரும்.

அதனால் தான் வேதத்தைக் கொடுத்தோம் என்று மட்டும் சொல்லாமல் வேதத்தையும், அதிகாரத்தையும் கொடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

அவர்களுக்கு வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் அளித்தோம். அவர்கள் இதனை மறுத்தால் இதனை மறுக்காத ஒரு சமுதாயத்தை இதற்குப் பொறுப்பாளிகளாக்குவோம் என்று 6:89 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

வேதம் தவிர வேறு எதுவும் நபிமார்களுக்கு வழங்கப்படவில்லை என்றிருந்தால் வேதத்தையும், நுபுவ்வத்தையும், ஹுக்மையும் வழங்கியதாக அல்லாஹ் கூறியிருக்க மாட்டான்.

இறுதியாக இவ்வசனத்தில் அல்லாஹ் கூறும் செய்தி முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். "இந்த நபிமார்கள் இம்மூன்றையும் மறுப்பார்களானால் மறுக்காத ஒரு கூட்டத்தாரிடம் இவற்றை ஒப்படைப்போம்'' என்பது தான் அந்தப் பகுதி.

வேதம் மட்டும் தான் நமக்கு அருளப்பட்டது. ஹுக்மு என்ற அதிகாரமோ, நபி எனும் தகுதியோ நமக்குத் தேவையில்லை என்று அந்த நபிமார்கள் கருதுவார்களானால் இம்மூன்றையும் ஏற்கும் மற்றவர்களுக்கு அதைக் கொடுத்து அனுப்புவேன் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.

இம்மூன்றையும் மறுப்பவர்கள் இறைமறுப்பாளர்கள் என்றும் இவ்வசனத்தில் தெளிவுபடுத்தப்படுகிறது.

இந்த வசனங்கள், "வேதத்தோடு நபிமார்களின் விளக்கமும் அவசியம்" என்று உறுதி செய்கின்ற வசனங்கள் ஆகும்.

பயணத்தில் தொழுகையைச் சுருக்குதல்

இவ்வசனத்தில் (4:101) பயணத்தின் போது தொழுகையைச் சுருக்கித் தொழலாம் எனக் கூறப்படுகிறது.

இதற்கு ஒரு நிபந்தனையும் விதிக்கப்படுகிறது. எதிரிகளால் ஆபத்து ஏற்படும் என அஞ்சினால் நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்ளலாம் என்பது தான் அந்த நிபந்தனை.

இன்றைக்கு அச்சமில்லாத சூழ்நிலையிலும் பயணங்களில் நாம் தொழுகையைச் சுருக்குகிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அச்சமில்லாத சூழ்நிலையில் பயணங்களில் தொழுகையைச் சுருக்கியுள்ளனர்.

இது இவ்வசனத்திற்கு முரணானது என்று சிலருக்குத் தோன்றலாம். ஏனெனில் அச்சமான சூழ்நிலையில் தொழுகையைச் சுருக்கலாம் என்று தான் இவ்வசனம் கூறுகிறது. அச்சமில்லாத நிலையிலும் தொழுகையைச் சுருக்கலாம் எனக் கூறுவது திருக்குர்ஆனுக்கு எதிரானதாகத் தோன்றலாம்.

ஆனால் உண்மையில் முரண் ஏதும் இல்லை. தொழுகையைச் சுருக்குதல் என்பது இரு வகைப்படும்.

ஏ ஒன்று அச்சமான நிலையிலும், போர்க்களத்திலும் சுருக்குதல்

ஏ மற்றொன்று அச்சமில்லாத போது சாதாரணப் பயணங்களில் சுருக்குதல்

இவ்விரு சுருக்குதலும் வெவ்வேறு வகையானவை.

அச்சமான நேரத்திலும், போர்க் களத்திலும் தொழுகையைச் சுருக்குவது என்றால் எல்லாத் தொழுகையையும் ஒரே ஒரு ரக்அத்துடன் முடித்தல் என்பது பொருள்.

நான்கு ரக்அத் தொழுகையானாலும், மூன்று ரக்அத் தொழுகையானாலும், இரண்டு ரக்அத் தொழுகையானாலும் அவற்றுக்குப் பதிலாக ஒரு ரக்அத் தொழுதால் போதும்.

இதை அடுத்த வசனத்திலிருந்து (4:102) அறிந்து கொள்ளலாம்.

எனவே ஒரு ரக்அத்தாகச் சுருக்குதல் என்பது அச்சமான சூழ்நிலையில் மட்டுமே. அச்சமில்லாத நேரத்தில் ஒரு ரக்அத் ஆகச் சுருக்கினால் அது இவ்வசனத்திற்கு எதிரானதாகும்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாதாரணப் பயணத்தில் ஒரு ரக்அத்துடன் சுருக்கவில்லை. மாறாக நான்கு ரக்அத் தொழுகைகளை மட்டும் இரண்டாகச் சுருக்கினார்கள். மற்ற தொழுகைகளைச் சுருக்கவில்லை.

இந்தச் சுருக்குதல் இவ்வசனத்துக்கு எதிரானதல்ல. இவ்வசனம் கூறாத இன்னொரு வகையான சுருக்குதலாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் வந்துள்ளது. அந்த அடிப்படையில் அவர்கள் சாதாரணப் பயணங்களின் போது தொழுகையைச் சுருக்கினார்கள்.

சாதாரணப் பயணங்களில் சுருக்குதல் வேறு! அச்சமான நிலையில் சுருக்குதல் வேறு என்பதை விளங்கிக் கொண்டால் குழப்பம் வராது.

போர்க்களத் தொழுகை இரண்டு ரக்அத் என்று சில ஹதீஸ்களிலும், ஒரு ரக்அத் என்று சில ஹதீஸ்களிலும் காணப்படுகிறது. ஒரு ரக்அத் என்ற அறிவிப்பு தான் திருக்குர்ஆனுக்கு இணக்கமாக உள்ளது. இரண்டு ரக்அத்கள் என்ற அறிவிப்புகள் மேற்கண்ட வசனங்களுக்கு முரணாக உள்ளதால் அவற்றை ஆதாரமாக கொள்ளக் கூடாது.

போர்க்களத் தொழுகை குறித்து விரிவாக அறிய 126வது குறிப்பைப் பார்க்கவும்.

127. அச்சமற்ற நிலையில் தொழும் முறை

போர்க்களத் தொழுகையைப் பற்றிக் கூறிவிட்டு அச்சமற்ற நிலையை அடைந்தால் தொழுகையை நிலை நாட்டுங்கள் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் (4:103) கூறுகிறான்.

ஆனால் அச்சமான நேரத்தில் எவ்வாறு தொழ வேண்டும் என்பது தான் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அச்சமற்ற நிலையில் எவ்வாறு தொழுவது என்று கூறப்படவில்லை.

அச்சமற்ற நிலையில் எவ்வாறு தொழுவது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாள் முழுவதும் செயல்படுத்திக் காட்டியுள்ளனர். அதைத் தான் அல்லாஹ் இங்கே சுட்டிக் காட்டுகிறான்.

திருக்குர்ஆன் கூறும் சில சட்டங்களை விளங்கிட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் அவசியம் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

More Articles …

Page 2 of 4