Sidebar

21
Sun, Jun
சமீபத்திய செய்திகள்

நேர்மையில்லாத தங்க வியாபாரம்!

பழைய தங்கத்துக்கு புதிய தங்கம் மாற்றுதல் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம் என்ன?

நியாஸ் யூகே

பதில்:

தங்கத்தைக் கொடுத்து அதற்குப் பதிலாக வேறு தங்கத்தை மாற்றிக் கொள்வது தவறல்ல. தங்கத்தைக் கொடுத்து விட்டு சிறிது காலம் கழித்து அதற்குப் பதிலாக வேறு தங்கத்தைப் பெறுவதை மார்க்கம் தடைசெய்கின்றது.

2174 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ مَالِكِ بْنِ أَوْسٍ أَخْبَرَهُ أَنَّهُ الْتَمَسَ صَرْفًا بِمِائَةِ دِينَارٍ فَدَعَانِي طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ فَتَرَاوَضْنَا حَتَّى اصْطَرَفَ مِنِّي فَأَخَذَ الذَّهَبَ يُقَلِّبُهَا فِي يَدِهِ ثُمَّ قَالَ حَتَّى يَأْتِيَ خَازِنِي مِنْ الْغَابَةِ وَعُمَرُ يَسْمَعُ ذَلِكَ فَقَالَ وَاللَّهِ لَا تُفَارِقُهُ حَتَّى تَأْخُذَ مِنْهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الذَّهَبُ بِالذَّهَبِ رِبًا إِلَّا هَاءَ وَهَاءَ وَالْبُرُّ بِالْبُرِّ رِبًا إِلَّا هَاءَ وَهَاءَ وَالشَّعِيرُ بِالشَّعِيرِ رِبًا إِلَّا هَاءَ وَهَاءَ وَالتَّمْرُ بِالتَّمْرِ رِبًا إِلَّا هَاءَ وَهَاءَ رواه البخاري

நான் நூறு தீனார்களை சில்லறையாக மாற்றித் தருமாறு கேட்டேன். தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் என்னை அழைத்தார்கள். அவர்களிடம் வியாபாரம் பேசியதும் என்னிடமிருந்து தங்க நாணயங்களைப் பெற்றுக் கொண்டு கையில் வைத்துக் குலுக்கினார்கள். பிறகு  ஃகாபாவிலிருந்து நமது கருவூலக் காப்பாளர் வரும் வரை சில்லறை தர முடியாது! என்றார்கள்.  இதை உமர் (ரலி) கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது  அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவரிடமிருந்து சில்லறையைப் பெறாமல் நீர் பிரியக் கூடாது; ஏனெனில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  தங்கத்திற்குத் தங்கத்தை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர! கோதுமைக்கு கோதுமையை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர! வாற்கோதுமைக்கு வாற்கோதுமையை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர! பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக் கொள்வது வட்டியாகும். உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர!  என்று கூறியுள்ளார்கள்  என்று உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : மாலிக் பின் அவ்ஸ் (ரலி)

நூல் : புகாரி 2174

பழைய தங்கத்துக்குப் புதிய தங்கம் மாற்றுதல் குறித்தும் தங்க வியாபாரம் குறித்தும் மேலும் சில செய்திகளை நாம் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

உலகில் நடக்கும் வியாபாரங்களில் அதிக அளவிலான மோசடி நடக்கும் வியாபாரம் தங்க நகை வியாபாரமேயாகும்.

தங்கத்துக்கு இன்றைய காலத்தில் இரண்டு விலை உள்ளது. ஒன்று மூலப் பொருளுக்கான விலை. மற்றொன்று நாம் விரும்பும் வகையில் நகைகளாகத் தயார் செய்வதற்கான கூலியாகும்.

ஐந்து பவுன் தங்கத்தில் ஒரு நகை வாங்கினால் ஐந்து பவுன் தங்கத்திற்கான விலையையும் நாம் கொடுக்க வேண்டும். அதைக் குறிப்பிட்ட நகையாக செய்ததற்கான கூலியையும் கொடுத்தாக வேண்டும். இது மட்டும் இருந்தால் இதில் மோசடி ஏதும் இல்லை.

ஆனால் ஐந்து பவுன் தங்கத்துக்கும் நம்மிடம் பணம் வாங்கிக் கொண்டு அதற்கான கூலியையும் நம்மிடம் வாங்கிக் கொண்டு சேதாரம் என்ற பெயரில் ஒரு தொகையையும் வாங்கிக் கொள்கின்றனர்.

அதாவது மேற்கண்ட நகையைச் செய்யும் போது பத்து சதவிகிதம் சேதாரம் ஆகி விட்டது எனக் கூறி அதற்கான பணத்தையும் நம்மிடம் வாங்கிக் கொள்கின்றனர். அதாவது ஐந்து பவுனுக்கு மட்டும் பணம் வாங்காமல் இன்னொரு அரை பவுனுக்கும் சேர்த்து நம்மிடம் பணம் கறந்து விடுகிறார்கள்.

நகை செய்யும் போது அரை பவுன் சேதரமாக ஆகி வீணாகி விட்டால் அதை நம்மிடம் இருந்து வாங்குவது முறையானது தான். ஆனால் தங்கத்தில் எதுவுமே சேதாரம் ஆவது கிடையாது. நகை செய்யும் போதும், பட்டை தீட்டும் போதும் தூள்களாக கீழே சிந்துபவை சேதாரமாகி குப்பைக்குப் போகாது. துகள்களாக உள்ளதை மெழுகு மூலம் ஒட்டி எடுத்து மீண்டும் வேறு நகைக்கு அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். இதற்கெல்லாம் சேர்த்துத் தான் செய்கூலி வாங்கிக் கொள்கின்றனர். மக்களுக்குப் புரியாத டெக்னிகல் வார்த்தைகளைப் பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். இதைச் செய்யாத நகை வியாபாரிகளைக் காண முடியவில்லை.

இரண்டாவது மோசடி என்னவென்றால் கல்லுக்கும் தங்கத்தின் விலையை வாங்குவதாகும்.

நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்? நாற்பது கிராம் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும், பத்து கிராம் கண்ணாடிக் கல்லுக்கு கண்ணாடிக் கல்லின் விலையையும் தான் நிர்ணயிக்க வேண்டும்.

ஆனால் ஐம்பது கிராம் தங்கத்துக்கான விலையை நம்மிடம் வாங்கி விடுகின்றனர். தங்கத்தின் விலையும், கல்லின் விலையும் சமமானவை அல்ல. இரண்டுக்கும் இடையே ஏணி வைத்தாலும் எட்ட முடியாத வித்தியாசம் உள்ளது.

நாற்பது கிராம் தங்கத்துக்கு ஐம்பது கிராம் பணத்தை வாங்குவது மோசடியாகும். ஹராமாகும்.

ஐம்பது கிராம் தங்கத்துக்குப் பணத்தை வாங்கிக் கொண்டு கல், முத்து, பவளம் இலவசம் என்று கூறி மக்களை மேலும் மதிமயக்குகிறார்கள். சில பேர் நாற்பது கிராமுக்கு ஐம்பது கிராமுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு கல்லுக்கு தனியாகவும் பணத்தை வாங்கி இரட்டை மோசடி செய்கிறார்கள்.

அதே சமயம் நாம் பழைய நகையை விற்கச் சென்றால் கல்லை அப்புறப்படுத்தி விட்டு தங்கத்தை மட்டும் எடை போட்டு பணம் தருகிறார்கள்.

இதற்கு நிகரான ஒரு மோசடி வேறு எந்த வியாபாரத்திலும் இருக்குமா என்று தெரியவில்லை.

எந்தக் கடையில் கல்லுக்கும் தங்கத்தின் விலையைக் கொடுத்து வாங்கினோமோ அந்தக் கடையில் அந்த நகையை நாம் ஓரிரு மாதங்களில் விற்றாலும் கல்லைக் கழித்து விட்டு தங்கத்துக்கு மட்டும் தான் பணம் தருவார்கள்.

அடுத்ததாக பழைய நகை வாங்கும் போது இரட்டை லாபம் கொள்ளை அடிக்கின்றனர்.

உதாரணமாக ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை விலை என்றால் நம்மிடம் 900 ரூபாய் விலைக்கு வாங்குவார்கள். இதில் அவர்களுக்கு போதுமான லாபம் கிடைத்து விடுகிறது. ஆனால் பழைய நகை என்பதற்காக இன்னும் குறைத்து வாங்குவார்கள். தங்கத்தில் பழையது என்று எதுவும் இல்லை. உருக்கி நகை செய்தால் பழையதும் புதியதாகி விடும்.

அடுத்ததாக இன்னொரு மோசடியும் நடக்கிறது.

சொக்கத் தங்கம் எனப்படும் தனித் தங்கத்தில் நகை செய்ய முடியாது. அதில் செம்பு அல்லது வெள்ளி கலந்தால் தான் நகை செய்ய முடியும்.

தங்கத்துடன் சேர்க்கப்படும் மற்ற உலோகங்களின் அளவைப் பொறுத்து ஆபரணத் தங்கம் வகைப்படுத்தப்படுகிறது.

சுத்தமான தங்கம் 24 காரட் என்று குறிப்பிடப்படும். இதில் 22 மடங்கு தங்கமும் இரு மடங்கு செம்பும் சேர்த்தால் அது 22 காரட் எனப்படும். 20 மடங்கு தங்கமும், நான்கு மடங்கு செம்பும் சேர்த்தால் அது 20 காரட் எனப்படும்.

தற்போது காரட் கணக்கில் குறிப்பிடாமல் கிராம் கணக்கில் அளவிடுகின்றனர். அதாவது 916 கிராம் தங்கமும், 84 கிராம் செம்பும் சேர்த்து நகை செய்தால் அது தான் 916 KDM எனப்படுகிறது. இது காரட் கணக்கில் 22 ஆகும்.

இதில் இரு வகையான மோசடி நடக்கிறது.

மேற்கண்ட கணக்குப்படி நகை விற்கும் நிறுவனங்கள் மிகவும் அரிதாக உள்ளது. 84 கிராமை விட செம்பை அதிகமாகவும், தங்கத்தை 916 கிராமை விட குறைவாகவும் சேர்த்து 916 என்று பொய்யாகக் குறிப்பிடுகின்றனர். இதை யாரும் சோதித்து வாங்குவதில்லை என்பதால் இந்த மோசடி பெருமளவில் நடக்கிறது.

ஒரு கடையில் வாங்கிய நகையை அதே கடையில் விற்கச் சென்றால் 916 கணக்குப்படி வாங்கிக் கொள்வார்கள். வேறு கடையில் விற்கச் சென்றால் இது 916 அல்ல; அதைவிடக் குறைவானது என்று சோதித்து விட்டுச் சொல்வார்கள். எல்லா கடைக்காரர்களூம் இப்படித்தான் செய்கின்றனர். இதில் இருந்து 916 என்று சொல்லி மக்களை ஏமாற்றுகின்றனர் என்பது உறுதியாகின்றது.

நாமறிந்த வரை சிங்கப்பூர், துபை ஆகிய நாடுகளில் இருந்து வாங்கி வரும் நகைகள் 916 என்று குறிப்பிட்டால் 916 ஆக இருக்கும். நமது நாட்டில் அப்படி இல்லை. இது ஒரு மோசடி.

மற்றொரு மோசடி இதுதான்:

916 கிராம் தங்கத்துடன் 84 கிராம் செம்பு சேர்த்து விட்டு 1000 கிராமுக்கும் தங்கத்தின் விலை போடப்படுகிறது. செம்புக்கு தங்கத்தின் விலை போடுவது மற்றொரு மோசடியாக உள்ளது.

அது போல் பழைய நகை வாங்கும் போது செய்கூலி, சேதாரம் எல்லாம் தர மாட்டார்கள். அது நியாயமானது தான். ஆனால் நாம் கொடுக்கும் நகையில் கல்லையும் நீக்கி விட்டு எடை போட்டு அந்த எடைக்கு உள்ள பணத்தைத் தர வேண்டும். அவர்கள் விற்பனை செய்யும் விலையைத் தர வேண்டும் என்று நாம் கூறவில்லை. அவர்கள் வாங்கும் விலையைக் கொடுக்க வேண்டுமல்லவா? அப்படி கொடுக்க மாட்டார்கள். மாறாக நாம் நாற்பது கிராம் நகையை விற்கச்சென்றால் அதில் கால்வாசிக்கு மேல் குறைத்துத் தான் தருவார்கள்.

இது தவிர இன்னும் பல மோசடிகளும் உள்ளன.

இப்படி தங்க நகை வியாபாரத்தில் எந்த நேர்மையும் இல்லை. இறையச்சமும் இல்லை. ஹராம் ஹலால் பற்றி கடுகளவும் கவலை இல்லை. தங்கநகை வியாபாரிகளாக உள்ள முஸ்லிம்கள் அல்லாஹ்விடம் குற்றவளிகளாக நிற்கக் கூடாது என்பதற்காகவும், அவர்களின் வருமானம் ஹராமாக ஆகி அதனால் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் தகுதியை அவர்கள் இழந்து விடக்கூடாது என்ற எண்ணத்திலும் இதை நாம் சொல்லியாக வேண்டியுள்ளது.

03.08.2011. 16:48 PM

முன்பேர வணிகத்துக்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

அபூசுஹைல்

எந்தப் பொருளையும் அன்றைய மார்க்கெட் நிலவரப்படி விற்பதும், வாங்குவதும் தான் யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வியாபாரமாகும். நாளைக்கு நமக்கு வரக்கூடிய பொருளுக்கு இன்று விலை நிர்ணயித்துக் கொண்டால் அதில் விற்பவர் அல்லது வாங்குபவர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இத்தகைய வியாபாரம் தான் முன்பேர வணிகம் என்று கூறப்படுகிறது.

ஒரு விவசாயி தனது வயலில் விளையும் நெல்லை ஒரு மூட்டை 500 ரூபாய்க்குத் தருவதாக வியாபாரியிடம் ஒப்பந்தம் செய்கிறார். அறுவடை நாளில் நெல் விலை 600 ஆகி விட்டால் விவசாயிக்கு அநியாயமாக 100 நூறு ரூபாய் நட்டம். அவரது வயிறு எரிய இது காரணமாக ஆகி விடும். நாம் இப்படி ஒப்பந்தம் செய்யாமல் இருந்தால் நமக்கு நூறு நூறு ரூபாய் அதிகம் கிடைத்திருக்குமே என்று என்று ஏக்கம் கொள்வார்.

அது போல் ஒரு மூட்டை நெல் 400 ஆகக் குறைந்து விட்டால் விவசாயிக்கு நூறு ரூபாய் அதிகம் கிடைத்தாலும் வியாபாரிக்கு நூறு ரூபாய் வீணாகிறது.

இந்த முன் வணிகம் தங்கம், டாலர் இன்னும் அனைத்துப் பொருட்களிலும் நடைமுறைபடுத்தப்படுகிறது.

இது போன்ற வியாபாரம் சிறந்ததல்ல என்றாலும் அன்றைக்கு நபித்தோழர்களுக்கு இருந்த வறுமை காரணமாக செல்வந்தர்களிடம் முன் கூட்டியே பணம் பெற்றுக் கொண்டு இது போல் வியாபாரம் செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள்.

صحيح البخاري

2239 - حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، أَخْبَرَنَا ابْنُ أَبِي نَجِيحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَثِيرٍ، عَنْ أَبِي المِنْهَالِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ، وَالنَّاسُ يُسْلِفُونَ فِي الثَّمَرِ العَامَ وَالعَامَيْنِ، أَوْ قَالَ: عَامَيْنِ أَوْ ثَلاَثَةً، شَكَّ إِسْمَاعِيلُ، فَقَالَ: «مَنْ سَلَّفَ فِي تَمْرٍ، فَلْيُسْلِفْ فِي كَيْلٍ مَعْلُومٍ، وَوَزْنٍ مَعْلُومٍ»، حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ، عَنْ ابْنِ أَبِي نَجِيحٍ، بِهَذَا: «فِي كَيْلٍ مَعْلُومٍ، وَوَزْنٍ مَعْلُومٍ»

2239 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது, மக்கள் ஒரு வருடம், இரண்டு வருடங்களில் (பொருளைப்) பெற்றுக் கொள்வதாக, பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்து வந்தனர். ஒருவர் பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்தால் எடையைக் குறிப்பிட்டு, அளவைக் குறிப்பிட்டு கொடுக்கட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 2239

صحيح البخاري

2240 - حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، أَخْبَرَنَا ابْنُ أَبِي نَجِيحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَثِيرٍ، عَنْ أَبِي المِنْهَالِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ وَهُمْ يُسْلِفُونَ بِالتَّمْرِ السَّنَتَيْنِ وَالثَّلاَثَ، فَقَالَ: «مَنْ أَسْلَفَ فِي شَيْءٍ، فَفِي كَيْلٍ مَعْلُومٍ، وَوَزْنٍ مَعْلُومٍ، إِلَى أَجَلٍ مَعْلُوم

2240 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மக்கள் இரண்டு, மூன்று வருடங்களில் பேரீச்சம் பழத்தைப் பெற்றுக்கொள்வதாக (ஒப்புக் கொண்டு, அதற்காக) முன்பணம் கொடுத்து வந்தார்கள். ஒருவர் ஒரு பொருளுக்கு முன்பணம் கொடுத்தால், அளவும் எடையும் தவணையும் குறிப்பிடப்பட்ட பொருளுக்காக (மட்டுமே) கொடுக்கட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 2240

இது போல் முன் பணம் கொடுத்தாலோ, வாங்கினாலோ அப்பொபோருள் எப்போது கொடுக்கப்படும் என்று நாளையும் எடையையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

இந்த தரத்தில் உள்ள மிளகாயை இந்த விலைக்கு இந்த நாளுக்குள் தருவேன் என்று தெளிவுபடத் தெரிவித்து முன் பணம் வாங்கலாம்; கொடுக்கலாம்.

14.06.2011. 11:41 AM

நாம் ஏற்றுக் கொண்ட வேலையை மற்றவர் துணையுடன் செய்யலாமா?

கேள்வி:

நான் வெளிநாட்டில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனிக்கு இங்கிருந்து வேலை செய்து அனுப்புகிறேன். அவர்கள் என்னிடம் இதற்காக தனி நபர் ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். ஆரம்ப காலத்தில் அவர்கள் அனுப்பிய வேலை எளிதாக இருந்தது. நானாகவே அதை முடித்து விடுவேன். ஆனால் தற்பொழுது வரும் வேலைகள் சற்று கடினமாக உள்ளது. எனவே இதில் தாமதமோ, தவறுகளோ நிகழக்கூடாது என்பதற்காக நான் எனது நண்பர் ஒருவரை துணைக்கு வைத்து அந்த வேலையை முடிக்கின்றேன். எனக்கு வரும் வருமானத்தில் அவருக்கும் ஒரு பங்கு கொடுக்கின்றேன். இப்படிச் செய்வதால் நான் அந்தக் கம்பனியிடம் செய்த ஒப்பந்தத்தை மீறுவது போல் கருதப்படுமா? விளக்கம் தரவும்.

அப்துல் அஸீஸ்

பதில்:

ஒரு நிறுவனத்தில் மாத ஊதியத்துக்கு நீங்கள் சேர்ந்தால் அதை நீங்கள் தான் செய்ய வேண்டும். உங்களுக்காக மற்றவரை அனுப்பினால் அவர்கள் ஏற்க மாட்டார்கள். எந்த வேலையும் இல்லாவிட்டால் கூட உங்களுக்கு சம்பளம் வந்து விடும்.

இது போன்ற வேலைகளில் வேலை செய்யும் ஆள் தான் முக்கியம். வேலை இரண்டாம் பட்சம் தான்.

ஆனால் நிறுவனத்தில் ஊழியராகச் சேராமல் குறிப்பிட்ட வேலையைச் செய்து தருவதாக ஒப்பந்தம் செய்தால் இதில் வேலை தான் முக்கியம். நீங்கள் தனிப்பட்ட முறையில் செய்தாலும் உங்கள் குடும்பத்தினர் உதவியுடன் செய்தாலும் அல்லது ஊழியரை நியமித்து செய்தாலும் அதில் தவறில்லை. அந்த வேலை தான் முக்கியம்.  அதைச் சரியாக செய்து கொடுத்தால் போதும்.

உங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள கம்பெனி குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடித்துத் தர வேண்டும் என்று உங்களிடம் ஒப்பந்தம் செய்துள்ளது. பணியில் எந்தக் குறைபாடும் வைக்காமல் பணியை முடிக்க வேண்டும் என்றே கம்பெனி எதிர்பார்க்கின்றது.

இப்போது வேறொருவரை வைத்து அந்த வேலையை நீங்கள் முடிப்பது தவறல்ல. இதனால் நீங்கள் ஒப்பந்தத்தை மீறியவராக மாட்டீர்கள்.

14.06.2011. 9:53 AM

உண்டியல் மூலம் பணம் அனுப்புவது கூடுமா?

உண்டியல் மூலம் பணம் அனுப்புவது கூடுமா?

 அபூ முஸாப்

பதில் :

ஒருவர் வெளிநாட்டிலிருந்து நமது நாட்டிற்குப் பணம் அனுப்பினால் அந்தப் பணத்துக்கு அரசாங்கம் வரி வாங்குகிறது. இந்த வரியைச் செலுத்தாமல் இருப்பதற்காக அரசுக்குத் தெரியாத வகையில் மறைமுகமாக பணத்தை அனுப்புவதற்கு உண்டியல் முறை என்று சொல்லப்படுகின்றது. இவ்வாறு செய்வதும் இதையே தொழிலாக செய்வதும் மார்க்கத்தில் கூடுமா? என்று கேள்வி கேட்டுள்ளீர்கள்.

நாம் சம்பாதிக்கும் பணத்தை நாம் விரும்பும் வகையில் பயன்படுத்த இஸ்லாம் அனுமதிக்கிறது. இஸ்லாமியச் சட்டப்படி அமைந்த அரசாங்கத்தில் உண்டியல் போன்ற செயல்கள் சட்ட விரோதமாகக் கருதப்படாது.

உண்டியல் மூலம் ஒருவர் தனது சொந்தப் பணத்தை அனுப்பினால் அதற்காக மறுமையில் இறைவன் கேள்வி கேட்க மாட்டான். இறைவனிடம் குற்றவாளியாக ஆக மாட்டோம்.

இஸ்லாமியப் பொருளாதாரத்தில் பொருட்களின் விலையை ஆட்சியாளர்கள் நிர்ணயிக்கவோ, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்லக் கட்டுப்பாடுகள் விதிக்கவோ அனுமதி இல்லை.

سنن الترمذي 
1314 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا الحَجَّاجُ بْنُ مِنْهَالٍ  قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ قَتَادَةَ، وَثَابِتٌ، وَحُمَيْدٌ، عَنْ أَنَسٍ قَالَ: غَلَا السِّعْرُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، سَعِّرْ لَنَا، فَقَالَ «إِنَّ اللَّهَ هُوَ المُسَعِّرُ، القَابِضُ، البَاسِطُ، الرَّزَّاقُ، وَإِنِّي لَأَرْجُو أَنْ أَلْقَى رَبِّي وَلَيْسَ أَحَدٌ مِنْكُمْ يَطْلُبُنِي بِمَظْلِمَةٍ فِي دَمٍ وَلَا مَالٍ»: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் விலையேற்றம் ஏற்பட்ட போது அல்லாஹ்வின் தூதரே! விலைக் கட்டுப்பாடு செய்யக் கூடாதா? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அல்லாஹ் தான் உணவளிப்பவன்; கூடுதலாக அளிப்பவன்; குறைவாக அளிப்பவன்; விலையைக் கட்டுப்படுத்துபவன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் தொடர்ந்து எவருடைய உயிருக்கும், உடமைக்கும் எந்த விதமான அநீதியும் செய்யாதவனாக இறைவனைச் சந்திக்க நான் விரும்புகின்றேன் என்றும் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல்கள்: திர்மிதீ 1235, அபூதாவூத் 2994, இப்னுமாஜா 2191, அஹ்மத் 12131

தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிப்பது வணிகர்களுக்குச் செய்யப்படும் அநீதி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஹதீஸிலிருந்து ஆட்சியாளர்களுக்குரிய அதிகாரம் உணரப்படுகிறது. இஸ்லாமிய ஆட்சியில் உண்டியல் வழியாக பணம் அனுப்பத் தடை விதிக்கக் கூடாது.

ஒருவர் அயல் நாட்டில் திரட்டிய செல்வத்தை தான் விரும்புகின்ற வழிகளில் தனது தாயகம் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். இது தான் நியாயமானது. இஸ்லாமிய ஆட்சியில் இப்படித் தான் நடக்க வேண்டும். ஏனைய ஆட்சி முறைகளில் அதற்குத் தடை இருந்தால் அதை நீக்குவதற்காகப் போராடலாம்.

ஆனால் நாம் வாழும் நாட்டில் அது குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அதனால் ஏற்படும் விளைவுகளை நீங்கள் சுமக்க வேண்டியது வரும். இது போன்ற தொழில்களைச் செய்யும் போது ஏதோ கொலைகாரனைப் போல் அரசாங்கம் நம்மை அடையாளப்படுத்தும். நமது கொளரவத்துக்குப் பங்கம் ஏற்படும். சுயமரியாதை இழந்து குற்றவாளிகள் போல் நிற்கும் நிலை ஏற்படும். மேலும் இது போன்ற தொழில் செய்பவர்களின் குடும்பத்துப் பெண்களும் சொல்லொணாத துன்பங்களுக்கு உள்ளாக்கப்படுவார்கள். சமூகத்தில் ஏதோ கேடிகளைப் போல் நம்மை ஆக்கி விடுவார்கள் என்பதைக் கவனிப்பது நல்லது.

சட்டப்படி பணம் அணுப்பாமல் உண்டியல் மூலம் மக்கள் அனுப்புவதற்கு அரசாங்கத்தின் வரிவிதிப்பு முறையும் காரணமாக உள்ளது. கொள்ளைக்காரர்களூக்கு நிகராக அநியாய வரி விதிக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாற்பது சதவிகிதம் அறுபது சதவிகிதம் வரி விதித்தால் எல்லோரும் அதில் இருந்து தப்பிக்கவே நினைப்பார்கள்.

அதுவும் பல வகையான வரிகள் விதிக்கப்படும் நாடுகளில் இந்தியா தான் முன்னணியில் உள்ளது.

இரண்டு முதல் ஐந்து சதம் அளவுக்கு ஒரே ஒரு வரி மட்டும் விதிக்கப்பட்டால் நாட்டு மக்கள் அனைவரும் அந்தச் சட்டத்தைப் பேணுவார்கள். சட்டத்தைப் பேணும் மக்கள் உருவாவதை விட வேறு சிறப்பு என்ன வேண்டும்?

நமது நாட்டில் எல்லா சட்டமும் மீறப்படுவதற்குக் காரணமே இது போன்ற அரசாங்கத்தின் அநியாயக் கொள்ளை தான். உண்டியல் மூலம் மகக்ள் பணம் அனுப்புவதற்கும், கள்ளக் கணக்கு எழுதுவதற்கும் அரசாங்கமே முழுப் பொறுப்பு என்பதையும் மறுக்க முடியாது.

25.12.2010. 10:31 AM

பன்றித்தோல் தொடர்பான வியாபாரம் கூடுமா?

முத்து முஹம்மத்

பதில் :

எந்தப் பிராணியின் தோலானாலும் அது பதனிடப்பட்டால் தூய்மையடைந்து பயன்படுத்துவதற்கு ஏற்றதாகி விடுகின்றது. இதற்குப் பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.

547 حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ وَعْلَةَ أَخْبَرَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا دُبِغَ الْإِهَابُ فَقَدْ طَهُرَرواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

தோல் பதனிடப்பட்டுவிட்டால் தூய்மை அடைந்துவிடும்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)

நூல் : முஸ்லிம்

தோல் பதனிடப்பட்டால் அது தூய்மையாகி விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது ஹராமாக்கப்பட்ட பிராணிகளின் தோலைப் பற்றியதாகத் தான் இருக்க முடியும். முறையாக அறுக்கப்பட்ட ஹலாலான பிராணிகளைப் பொருத்த வரை மலஜலம் தவிர அதன் அனைத்து பாகங்களுமே தூய்மையானவை தான். அதனால் தான் அதை நாம் உண்ணுகிறோம்.

உண்ண அனுமதிக்கப்படாத பிராணிகள் தூய்மையற்றவையாக உள்ளதால் அதன் தோலும் தூய்மையற்றதாக இருக்கும் என்ற சந்தேகம் ஏற்படும். எனவே தான் தோல் பதனிடப்பட்டால் அது தூய்மையாகி விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதி விலக்கு அளிக்கின்றனர்.

1797 حَدَّثَنَا سُفْيَانُ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنِ ابْنِ وَعْلَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ أَيُّمَا إِهَابٍ دُبِغَ فَقَدْ طَهُرَ رواه أحمد

எந்தத் தோல் பதனிடப்படுகின்றதோ அது தூய்மையடைந்து விடுகின்றது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறனார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : அஹ்மது

السنن الكبرى للبيهقي  - كتاب الطهارة

 أخبرنا أبو القاسم عبد الرحمن بن عبيد الله بن عبد الله بن الحربي من أهل الحربية ببغداد ، نا أبو بكر محمد بن عبد الله الشافعي ، أنا إبراهيم بن الهيثم ، ثنا علي بن عياش ، ثنا محمد بن مطرف ، عن زيد بن أسلم ، عن عطاء بن يسار ، عن عائشة ، عن النبي صلى الله عليه وسلم قال :   طهور كل إهاب دباغه   . رواته كلهم ثقات *

பதனிடப்பட்ட எல்லா தோல்களும் தூய்மையானவை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : பைஹகீ

மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் கூடுதலாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

முதல் ஹதீஸில் அய்யுமா இஹாபின் அதாவது எந்தத் தோலாயினும் பாடம் செய்யப்பட்டால் அது தூய்மையாகி விடும் எனக் கூறுகிறார்கள்.

இரண்டாவது ஹதீஸில் குல்லு இஹாபின் ஒவ்வொரு தோலும் பாடம் செய்யப்பட்டால் அது தூய்மையாகி விடும் என்று கூறுகிறார்கள்.

பாடம் செய்யப்பட்ட எந்தத் தோலையும் தூய்மையற்றவை எனக் கருதக் கூடாது என்ற கருத்தை இந்தச் சொற்கள் தெளிவாகச் சொல்கின்றன.

தாமாகச் செத்த பிராணிகளும் பன்றியைப் போல் ஹராம் என்பதை நாம் அறிவோம். இதைத் தடை செய்யும் வசனத்தில் பன்றியை மூன்றாவதாகக் கூறும் இறைவன் தாமாகச் செத்த பிராணிகளை முதலாவதாகக் கூறுகிறான். தாமாகச் செத்த பிராணியின் மாமிசத்தைத் தடை செய்த இஸ்லாம் அதன் தோலுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்துள்ளது.

حدثنا زهير بن حرب حدثنا يعقوب بن إبراهيم حدثنا أبي عن صالح قال حدثني ابن شهاب أن عبيد الله بن عبد الله أخبره أن عبد الله بن عباس رضي الله عنهما أخبره  : أن رسول الله صلى الله عليه و سلم مر بشاة ميتة فقال ( هلا استمتعتم بإهابها ) . قالوا إنها ميتة . قال ( إنما حرم أكلها )

2221 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு செத்த ஆட்டைக் கடந்து சென்றபோது, இதன் தோலை நீங்கள் பயன்படுத்தக் கூடாதா? என்று கேட்டார்கள். நபித்தோழர்கள், இது செத்த ஆடாயிற்றே! என்றனர். அதற்கு அதை உண்பது தான் தடை செய்யப்பட்டுள்ளது! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 2221, 1492, 5531, 5532

செத்த ஆடு ஹராமாக இருந்தும் அதன் தோலைப் பயன்படுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளனர்.

548 حَدَّثَنِي إِسْحَقُ بْنُ مَنْصُورٍ وَأَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا وَقَالَ ابْنُ مَنْصُورٍ أَخْبَرَنَا عَمْرُو بْنُ الرَّبِيعِ أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ أَنَّ أَبَا الْخَيْرِ حَدَّثَهُ قَالَ رَأَيْتُ عَلَى ابْنِ وَعْلَةَ السَّبَإِيِّ فَرْوًا فَمَسِسْتُهُ فَقَالَ مَا لَكَ تَمَسُّهُ قَدْ سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ قُلْتُ إِنَّا نَكُونُ بِالْمَغْرِبِ وَمَعَنَا الْبَرْبَرُ وَالْمَجُوسُ نُؤْتَى بِالْكَبْشِ قَدْ ذَبَحُوهُ وَنَحْنُ لَا نَأْكُلُ ذَبَائِحَهُمْ وَيَأْتُونَا بِالسِّقَاءِ يَجْعَلُونَ فِيهِ الْوَدَكَ فَقَالَ ابْنُ عَبَّاسٍ قَدْ سَأَلْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ فَقَالَ دِبَاغُهُ طَهُورُهُ رواه مسلم

அபுல்கைர் மர்ஸத் பின் அப்தில்லாஹ் அல்யஸனீ கூறுகிறார் :

நான் அப்துர் ரஹ்மான் பின் வஅலா அஸ்ஸபஇய்யீ அவர்கள் தோலாடை ஒன்றை அணிந்திருப்பதைக் கண்டேன். நான் அதைத் தடவிப் பார்த்தேன். அப்போது அவர்கள்,  ஏன் இதைத் தடவிப் பார்க்கிறீர்கள்? நான் இதை (அணிவது) பற்றி அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம்,  நாங்கள் மேற்கே வசித்து வருகிறோம். எங்களுடன் (ஆப்பிரிக்கர்களான) பர்பர் இன மக்களும் அக்னி ஆராதகர்(களான மஜூசி)களும் வசித்து வருகின்றனர். அவர்கள் அறுத்த ஆடுகள் எங்களிடம் கொண்டு வரப்படுவதுண்டு. ஆனால், அவர்கள் அறுத்ததை நாங்கள் சாப்பிடுவதில்லை. மேலும், அவர்கள் தோல் பைகளில் கொழுப்புகளை வைத்து எங்களிடம் கொண்டு வருகின்றனரே (அந்தத் தோலை நாங்கள் பயன்படுத்தலாமா?)  என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலிலி) அவர்கள்,  நாங்கள் இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினோம். அதற்கு அவர்கள்,  அதைப் பதனிடுவதே அதைத் தூய்மையாக்கி விடும்  என்று பதிலளித்தார்கள்   என்றார்கள்.

நூல் : முஸ்லிம்

ஆடு மாடு போன்ற உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளின் தோலைப் பொறுத்த வரை அது பதனிடப்பட்டாலும் பதினடப்படாவிட்டாலும் அவற்றை பயன்படுத்துவது ஆகுமானதாகும். எனவே மேற்கண்ட ஹதீஸ்கள் உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளின் தோலைப் பற்றிப் பேசவில்லை. மாறாக உண்பதற்குத் தடை செய்யப்பட்ட பிராணிகளின் தோலைப் பற்றியே பேசுகின்றன.

பதனிடுவதற்கு முன்பு தடை செய்யப்பட்டதாக இருந்த பிராணிகளின் தோல் குறித்தே அது பதனிடப்பட்டு விட்டால் பயன்படுத்தலாம் எனக் கூற முடியும். எனவே மேற்கண்ட ஹதீஸ் உண்பதற்குத் தடை செய்யப்பட்ட பிராணிகளின் தோல் பதனிடப்பட்டு விட்டால் அவற்றைப் பயன்படுத்தலாம் என்று அனுமதிக்கின்றன.

பன்றி உண்பதற்குத் தடை செய்யப்பட்ட பிராணியாக இருந்தாலும் அதன் தோல் பதனிடப்பட்டு விட்டால் அதை பயன்படுத்திக் கொள்ள இந்த ஹதீஸ்கள் அனுமதிக்கின்றன.

சிலர் பன்றிக்கு மட்டும் இதிலிருந்து விதிவிதிலக்கு அளித்து அதன் தோல் பதனிடப்பட்டாலும் துய்மையாகாது; பயன்படுத்தக் கூடாது என்று கூறுகின்றனர்.

ஆனால் இச்சட்டத்திலிருந்து பன்றிக்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதற்கு இவர்கள் வைக்கும் வாதங்களும் ஏற்புடையதாக இல்லை.

பன்றியின் மீதுள்ள முஸ்லிம்களுக்கு கடுமையான வெறுப்பு உள்ளது. இதனால் பன்றி விஷயத்தில் இச்சட்டத்தைக் கூற பலருடைய மனம் இடம் கொடுப்பதில்லை. ஆனால் ஹலால், ஹராம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இது போன்று நமது மனோ இச்சைக்கு இடம் கொடுக்காமல் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவு செய்வதே சரியானது.

எனவே பன்றித் தோலால் செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தலாம். மார்க்கம் அனுமதித்துள்ளது.

20.02.2011. 22:46 PM

More Articles …