Sidebar

19
Fri, Jun
சமீபத்திய செய்திகள்

தரகுத் தொழில் கூடுமா?

நூர்தீன்

பதில்:

நமக்கு ஒரு வீடு வாடகைக்கோ, விலைக்கோ தேவை என்றால் அதற்கேற்ற வீடுகள் எங்கெங்கே உள்ளன என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்க முடியாது. நாம் நமது வீட்டை அல்லது ஏதாவது சொத்தை விற்க நினைத்தால் யார் வாங்கும் எண்ணத்தில் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிய முடியாது.

ஒட்ரு நிறுவனத்துக்கு வேலைக்கு ஆட்கள் தேவை என்றாலோ, ஆட்களுக்கு வேலை தேவை என்றாலோ இதற்கும் தரகர்கள் தேவைப்படுகிறார்கள். வரன் தேடுவதற்கும் தரகர்கள் தேவைப்படுகிறார்கள்.

சிலர் முயற்சித்து தகவல்களைத் திரட்டித் தருவதை தமது முழு நேரத் தொழிலாக செய்து வருகின்றனர். தரகர்கள் இல்லாவிட்டால் இது போன்ற பல தேவைகளும், சேவைகளும் மக்களுக்குக் கிடைக்காமல் போய்விடும்.

மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அவசியமானதாக ஆகிவிட்ட தரகுத் தொழிலை முழுமையாக ஆகும் எண்றும் சொல்ல முடியாது. முற்றிலும் கூடாது என்றும் சொல்ல முடியாது.

இதில் ஹராமானதும் உண்டு. ஹலாலானதும் உண்டு. ஒரு தரப்புக்கு மட்டும் விசுவாசமாக உழைத்து அவருக்கு வேண்டிய தகவலைக் கொடுத்து அதற்காக கமிஷன் பெற்றால் அது ஹலாலான தொழிலாகும்.

ஒரு வீட்டை நீங்கள் வாங்க விரும்புகிறீர்கள். தரகரைத் தொடர்பு கொண்டு இது குறித்த தகவலும், ஒத்துழைப்பும் வேண்டும் எனக் கோருகிறீர்கள். அவர் உங்களுக்கு மட்டும் விசுவாசமாக உழைத்து உங்களுக்கு நன்மை செய்யும் வகையில் ஒத்துழைக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் உங்களுக்குச் சொத்தை விற்க விரும்பும் நபரிடம் போய் அதிக விலைக்கு தலையில் கட்டி விடுகிறேன்;  எனக்கு ஒரு சதவிகிதம் தரவேண்டும் என்று அங்கேயும் பேரம் பேசி உங்களிடம் வந்து குறைந்த விலையில் அமுக்கி விடுகிறேன் எனக்கு ஒரு சதவிகிதம் தர வேண்டும் எனக் கூறினால் இது வடிகட்டிய அயோக்கியத்தனமும், மோசடியுமாகும்.

மேலும் ஒரு தரப்புக்கு மட்டும் சேவை செய்யும் போது உள்ளதை உள்ளபடி சொல்லாமல் மிகைப்படுத்தி கூறி எதிர்தரப்பை ஏமாற்றுகிறோம்.

பிளாட் விற்கும் தரகர்கள் பிளாட் வாங்குவோரிடம் எந்த ஆதாயமும் அடைவதில்லை. ஆனால் விற்பவர் சார்பில் அதிகமான பொய்களை அள்ளிவிட்டு தலையில் கட்டுகின்றனர். இப்படி இருந்தால் இதுவும் மார்க்கம் அனுமதிக்காத தரகுத் தொழிலாகும்.

அதிகமான தரகர்கள் இப்படித்தான் நடந்து கொள்கின்றனர்.

இரு தரப்புக்கும் சாதகமாக உழைப்பதாகச் சொல்லி ஏமாற்றாமல் ஏதாவது ஒரு தரப்புக்கு மட்டும் விசுவாசமாக நடந்தால் அதில் மோசடி ஏதும் இல்லாததால் அதற்கு தடை இல்லை.

ஆனால் நடைமுறையில் இரு பக்கமும் கமிஷன் வாங்கி இருவரையும் ஏமாற்றுவதும், ஒரு தரப்புக்கு மட்டும் தரகு வேலை செய்யும் போது எதிர்த் தரப்பினரை ஏமாற்றும் வகையில் பொய்களை அவிழ்த்து விடுவதும் தான் தற்போது தரகுத் தொழிலின் இலக்கணமாக உள்ளது. இது ஹராமாகும்.

ஜும்ஆ நேரத்தில் கடையை மூட வேண்டுமா?

ஜும்ஆ நேரத்தில் வியாபாரத்தை விட்டுவிட வேண்டுமா? அல்லது தொழுகைக்கு வந்தால் போதுமா?

ஜஹுபர் கான்.

பதில்:

சிலர் ஜும்ஆ நேரத்தில் வியாபாரத்தை நிறுத்தாமல் முஸ்லிமல்லாத நபர்கள் மூலமோ, ஜும்ஆ கடமையாகாத பெண்கள் மற்றும் சிறுவர்கள் மூலமோ வியாபாரத்தைத் தொடர்ந்து கொண்டு தாங்கள் மட்டும் தொழுகைக்கு வந்து விடுகின்றனர். இதுவே அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்ப்பது என்றும் இவர்கள் கருதுகின்றனர்.

ஆனால் இந்தக் கருத்து முற்றிலும் தவறாகும். இது குறித்து அல்லாஹ் கூறுவது இது தான்:

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டுவிடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

திருக்குர்ஆன் 62:9,10

பாங்கு சொல்லப்பட்ட உடன் தொழுகைக்கு விரைந்து வாருங்கள் என்று மட்டும் அல்லாஹ் கூறினால் மற்றவர் மூலம் நம் வியாபாரத்தை நடத்தச் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்ய முகாந்திரம் உண்டு.

ஆனால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டுவிடுங்கள் என்று இரண்டு கட்டளைகளை அல்லாஹ் விதிக்கிறான். அல்லாஹ்வை நினைப்பதற்கு விரைவது ஒரு கட்டளை. வியாபாரத்தை விட்டுவிடுவது மற்றொரு கட்டளை. இரண்டையும் கடைப்பிடிப்பது கடமையாகும். மற்றவர் மூலம் கூட அந்த நேரத்தில் வியாபாரம் செய்யக் கூடாது.

மேலும் தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான். தொழுகை முடிக்கப்பட்ட பிறகு தான் பொருளீட்ட வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகின்றது. தொழுகை முடிக்கப்படும் முன்னர் நமது வியாபார நிறுவனம் இயங்கினால் அப்போது நாம் பொருளீட்டுவதாகத் தான் பொருள்.

ஜும்ஆவுக்குப் பாங்கு சொன்னது முதல் தொழுகை முடியும் வரை தொழுகைக்கு விரையவும் வேண்டும். எல்லாவிதமான வியாபாரத்தையும் நிறுத்திக் கொள்ளவும் வேண்டும்.

நான் வியாபாரம் செய்யவில்லையே; எனது நிறுவனத்தில் மற்றவர்கள் தானே வியாபாரம் செய்தார்கள் என்று கூறும் காரணம் ஷைத்தானின் ஊசலாட்டமாகும். இதில் இறையச்சம் சிறிதும் இல்லை. மனசாட்சிக்கும், உலக நடைமுறைக்கும் இது எதிரானதாகும்.

நம்முடைய நிறுவனத்தில் மற்றவர்கள் வியாபாரம் செய்து அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபத்துக்கும், வருமானத்துக்கும் நான் வரி செலுத்த மாட்டேன் என்று அரசாங்கத்திடம் இதுபோல் கூறுவார்களா? கூறினால் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமா? அல்லது அந்த வருமானம் எங்களுடையது அல்ல எனக் கூறுவார்களா?

நாம் இல்லாத போது நம்முடைய ஊழியர் நம் அனுமதியுடன் கலப்படமோ, ,மோசடியோ செய்தால் அதை நான் செய்யவில்லை என்று கூறுவதை யாருடைய மனசாட்சியாவது ஒப்புக் கொள்ளுமா?

நாமே செய்வதும், நம்முடைய அனுமதியின் பேரிலும் உத்தரவின் பேரிலும் மற்றவர் செய்யும் காரியங்களும் நாம் செய்த்தாகத் தான் பொருள். நமக்குச் சொந்தமான நிறுவனத்தில் மற்றவர்களை வைத்து நடத்தும் வியாபரமும் நாம் செய்ததாகத் தான் அர்த்தம்.

எனவே ஜும்ஆ பாங்கு முதல் ஜும்ஆ தொழுகை முடியும் வரை முற்றிலுமாக வியாபாரத்தை மூடியாக வேண்டும்.

கந்தூரியில் கடை போடலாமா

கேள்வி : திருவிழாக்களில் கூடி இருக்கும் கடைகளுக்கு நம் முஸ்லிம் மக்களும் பொருட்கள் வாங்குவதற்காக சென்று வரலாம், இதற்கு மார்க்கத்தில் தடையில்லை என்று ஒருவர் கூறுகிறார். இது சரியா?

கிள்ளை யூசுப்

பதில்:

எந்தத் தீய காரியத்திற்கும் ஒரு முஸ்லிம் துணை போகக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது.

நீங்கள் நல்ல காரியங்களுக்கும், இறையச்சத்திலும், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! தீய காரியத்திலும் வரம்பு மீறலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளக் கூடாது.

(அல்குர்ஆன் 5:2)

தீமையான காரியங்களுக்கு உதவக் கூடாது என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் தீமையான காரியங்களுக்கு உதவுவது என்பதைப் புரிந்து கொள்வதில் தான் கருத்து வேறுபாடு உள்ளது.

தீமைக்குத் துணை போகக் கூடாது என்று கூறும் மேற்கண்ட வசனத்தில் நன்மைக்கு உதவுமாறும் கூறப்படுகிறது. நன்மைக்கு உதவுதல் என்பதை எவ்வாறு புரிந்து கொள்கிறோமோ அவ்வாறு தான் தீமைக்குத் துணை செய்தல் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் ஒரு தவ்ஹீத் மாநாடு நடத்துகிறோம். இந்த தவ்ஹீத் மாநாட்டில் ஒருவர் சாப்பாடு கடை போடுவதற்காக நம்மை அணுகுகிறார். நாம் அவருக்கு அனுமதி வழங்குகிறோம். இப்போது அவர் தவ்ஹீது மாநாட்டிற்கு உதவி செய்தார் என்று யாரும் கருத மாட்டோம். அவர் தன்னுடைய வருமானத்திற்காக, இலாபத்திற்காக கடை போட்டார் என்றே கருதுவோம்.

அதே நேரத்தில் தவ்ஹீத் மாநாட்டிற்கு வருபவர்களுக்காக ஒருவர் இலவசமாக உணவுப் பொருட்களை வழங்கினால் அதை நாம் உதவியாகக் கருதுவோம்.

தவ்ஹீது மாநாட்டில் தன்னுடைய இலாபத்திற்காக கடை போடும் ஒருவர் எப்படி தவ்ஹீது கொள்கைக்கு உதவியவராக மாட்டாரோ அது போன்று தான் தீமையான காரியங்கள் நடக்கும் இடத்தில் ஒருவர் ஹலாலான முறையில் வியாபாரம் செய்தால் அல்லது அங்கு போடப்படும் கடைகளில் ஒரு பொருளை வாங்கினால் அவர் அந்தத் தீமையை ஆதரித்தவர் ஆகமாட்டார்.

நன்மைக்கு உதவுதல் என்பதை நாம் எப்படி விளங்கிக் கொள்கிறோமோ அது போன்றுதான் தீமைக்கு உதவுதல் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடை காலத்தில் மக்காவில் உகாள், துல்மஜாஸ் போன்ற சந்தைகள் குறிப்பிட்ட நாட்களில் திறக்கப்படும். இவை சந்தைகளாக மட்டும் இருக்கவில்லை. இங்கு சிலை வணக்கம் உட்பட கூத்து கும்மாளங்கள் அனைத்தும் நடைபெறும் இடமாகவும் இருந்தது.

இந்தச் சந்தைகளில் முஸ்லிம்களான ஸஹாபாக்கள் வியாபாரம் செய்வதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தத் தடையும் விதிக்கவில்லை.

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ عَمْرُو بْنُ دِينَارٍ قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا كَانَ ذُو الْمَجَازِ وَعُكَاظٌ مَتْجَرَ النَّاسِ فِي الْجَاهِلِيَّةِ فَلَمَّا جَاءَ الْإِسْلَامُ كَأَنَّهُمْ كَرِهُوا ذَلِكَ حَتَّى نَزَلَتْ لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوا فَضْلًا مِنْ رَبِّكُمْ فِي مَوَاسِمِ الْحَجِّ

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : துல்மஜாஸ், உக்காழ் ஆகியவை அறியாமைக்கால வியாபாரத் தலங்களாகும். இஸ்லாம் தோன்றியதும் மக்கள் அவ்வியாபாரத் தலங்களை வெறுக்கலானார்கள். அப்போது (ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல் (அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது என்ற 2:198 ஆவது வசனம் அருளப்பெற்றது. இது ஹஜ்ஜுக் காலங்களில் வியாபாரம் செய்வதைக் குறிக்கின்றது.

நூல் : புகாரி 1770

பலவிதமான பாவ காரியங்கள் நடைபெற்ற உகாள், துல்மஜாஸ் போன்ற வியாபாரத் தலங்களில் வியாபாரம் செய்ய இஸ்லாம் அனுமதித்தது என்பதை மேற்கண்ட செய்தியிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

தீமைகள் நடக்கும் இடங்களில் நாம் ஹலாலான முறையில் வியாபாரம் செய்தாலோ, அல்லது அது போன்ற இடங்களுக்குச் சென்று ஒரு பொருளை வாங்கினாலோ அது தீமைக்குத் துணை செய்ததாக ஆகாது என்பதை நாம் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

அதே நேரத்தில் ஒருவர் தீமையான காரியங்கள் நடக்கும் இடத்தில் வியாபாரம் செய்வது தவறில்லை என்றாலும் அது போன்ற தீமைகளில் தான் வீழ்ந்து விடாமல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அனுமதிக்கப்பட்டது என்றால் கட்டாயம் செய்து தான் ஆக வேண்டும் என்பது கிடையாது.

நம்முடைய ஈமானுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றால் அது போன்ற நிலைகளில் நாம் அவற்றை விட்டும் விலகிக் கொள்வதே சிறந்ததாகும்.

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا زَكَرِيَّاءُ عَنْ عَامِرٍ قَالَ سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الْحَلَالُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ لَا يَعْلَمُهَا كَثِيرٌ مِنْ النَّاسِ فَمَنْ اتَّقَى الْمُشَبَّهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ كَرَاعٍ يَرْعَى حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ أَلَا وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى أَلَا إِنَّ حِمَى اللَّهِ فِي أَرْضِهِ مَحَارِمُهُ أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلَا وَهِيَ الْقَلْبُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் அதிகம் பேர் அறிய மாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக்கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார்; மானத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார். எவர் சந்தேகத்திற்கிடமானவைகளில் தலையிடுகிறாரோ அவர், (அனுமதிக்கப்படாதவைகளில் தலையிடுகிறார்.) வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கின்றது அல்லாஹ்வின் நாட்டில் அவனது எல்லை (வேலி) அவனால் தடைவிதிக்கப்பட்டவையே. அறிக: உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்துவிடும். அறிந்து கொள்ளுங்கள்: அது தான்  உள்ளம்.

அறிவிப்பவர் : நுஅமான் பின் பஷீர் (ரலி)

நூல் : புகாரி 52

நம்முடைய கால்நடை பிறருடைய வேலிக்குள் சென்று மேய்வது ஹராமானாதாகும். அதே நேரத்தில் வேலிக்கு அருகில் மேய்ந்தால் அது ஹராமானது கிடையாது.

வேலிக்குள் செல்லாமல் அருகில் தான் மேயும் என்று நாம் பாராமுகமாக இருந்தால் கால் நடை வேலியைத் தாண்டியும் சென்று விடும்.

அது போன்று தான் தர்ஹா வழிபாடு போன்ற பாவமான காரியங்கள் நடக்கும் இடங்களில் நாம் எந்தத் தவறிலும் பங்கேற்காமல் வியாபாரம் செய்தால் அல்லது அங்குள்ள கடைகளில் ஒரு பொருள் வாங்கினால் அது தவறு கிடையாது. ஆனால் இது வேலிக்கு அருகில் மேய்கின்ற கால்நடையின் நிலையைப் போன்றது தான்.

நாம் வேலிக்குள் நுழையவே முடியாத இடத்தில் நம்முடைய கால்நடையை மேயவிட்டால் அது நுழைந்துவிடும் என்பதைப் பற்றி எந்தக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

அது போன்று பாவமான காரியங்கள் நடக்கும் இடங்களை விட்டும் நாம் தவிர்ந்து கொண்டால் நம்முடைய ஈமானுக்குப் பாதிப்பு ஏற்படுவதை விட்டும் நம்மை நாம் தற்காத்துக் கொள்ளலாம்.

03.07.2012. 23:38 PM

சர்ச் வரைந்த டி ஷர்ட் வியாபாரம் செய்யலாமா?

? எனது சகோதரர் பிரான்ஸில் ஒரு பொது வணிக வளாகத்தில் பணி புரிகின்றார். அந்த வணிக வளாகத்தில், ஈபிள் டவர் போன்ற நினைவுச் சின்னங்கள், சர்ச் வடிவில் படங்கள், சர்ச் வரைந்த டி-ஷர்ட்டுகள் போன்றவற்றை விற்பனை செய்ய வேண்டியுள்ளது. அவர் அந்த வேலையில் இருக்கலாமா? தான் செய்யும் தொழில் ஹலாலா? ஹராமா? என்று அவர் கேட்கிறார். விளக்கவும்.

எஸ். சாதிக், கருக்கங்குடி

صحيح البخاري

2225 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، أَخْبَرَنَا عَوْفٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي الحَسَنِ، قَالَ: كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، إِذْ أَتَاهُ رَجُلٌ فَقَالَ: يَا أَبَا عَبَّاسٍ، إِنِّي إِنْسَانٌ إِنَّمَا مَعِيشَتِي مِنْ صَنْعَةِ يَدِي، وَإِنِّي أَصْنَعُ هَذِهِ التَّصَاوِيرَ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: لاَ أُحَدِّثُكَ إِلَّا مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: سَمِعْتُهُ يَقُولُ: «مَنْ صَوَّرَ صُورَةً، فَإِنَّ اللَّهَ مُعَذِّبُهُ حَتَّى يَنْفُخَ فِيهَا الرُّوحَ، وَلَيْسَ بِنَافِخٍ فِيهَا أَبَدًا» فَرَبَا الرَّجُلُ رَبْوَةً شَدِيدَةً، وَاصْفَرَّ وَجْهُهُ، فَقَالَ: وَيْحَكَ، إِنْ أَبَيْتَ إِلَّا أَنْ تَصْنَعَ، فَعَلَيْكَ بِهَذَا الشَّجَرِ، كُلِّ شَيْءٍ لَيْسَ فِيهِ رُوحٌ

நான் இப்னு அப்பாஸ் (ரலி) உடன் இருந்த போது ஒரு மனிதர் வந்து,  அப்பாஸின் தந்தையே! நான் கைத் தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதன். நான் உருவங்களை வரைகிறேன்   என்று கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி),  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கின்றேன்.  யாரேனும் ஒரு உருவத்தை வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும் வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான். அவர் அதற்கு ஒருக்காலும் உயிர் கொடுக்க முடியாது  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன்   என்றார். கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சு விட்டார். அவரது முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி),  உமக்குக் கேடு உண்டாகட்டும். நீர் உருவம் வரைந்து தான் ஆக வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவைகளை வரைவீராக!  என்று கூறினார்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் அபில் ஹஸன்

நூல்: புகாரி 2225

இந்த ஹதீஸிலிருந்து உயிருள்ள உருவங்களைத் தவிர வேறு உயிரற்ற பொருட்களை வரைவதில் தவறில்லை என்பதை அறியலாம். எனவே ஈபிள் டவர் போன்ற கட்டங்கள் வரையப்பட்ட பொருட்களை விற்பதற்குத் தடையில்லை. நினைவுச் சின்னங்கள் உள்ளிட்ட எந்தக் கட்டடமாக இருந்தாலும் அவற்றை வரைவதற்குத் தடையில்லை.

எனினும் ஒரு பொருளுக்குப் புனிதம் உள்ளது என்று நினைத்து மக்கள் அவற்றை வழிபடுகின்றார்கள் என்றால் அத்தகைய பொருட்களை வரைவதோ, அல்லது விற்பதோ கூடாது.

உதாரணமாக சர்ச்சுகள், தர்காக்கள், கோயில்கள் போன்றவற்றின் படங்களில் புனிதம் இருப்பதாக நினைத்து மக்கள் வழிபடுவதை நாம் பார்க்கிறோம். நாகூர் தர்கா, பொட்டல் புதூர் தர்கா போன்றவற்றின் போட்டோக்களை புனிதமாகக் கருதி அவற்றை வீடுகளிலும், கடைகளிலும் மாட்டி வைத்திருப்பார்கள். அவற்றுக்கு ஊதுபத்தி கொளுத்தி வழிபடவும் செய்வார்கள். இது போன்ற கட்டடங்கள் உயிரற்றவையாக இருந்தாலும் அவற்றை அச்சிட்டு விற்கக் கூடாது. இதற்கு கீழ்க்கண்ட ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.

سنن أبي داود

3313 - حَدَّثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ قَالَ: حَدَّثَنِي أَبُو قِلَابَةَ، قَالَ: حَدَّثَنِي ثَابِتُ بْنُ الضَّحَّاكِ، قَالَ: نَذَرَ رَجُلٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي نَذَرْتُ أَنْ أَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ كَانَ فِيهَا وَثَنٌ مِنْ أَوْثَانِ الْجَاهِلِيَّةِ يُعْبَدُ؟» قَالُوا: لَا، قَالَ: «هَلْ كَانَ فِيهَا عِيدٌ مِنْ أَعْيَادِهِمْ؟»، قَالُوا: لَا، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْفِ بِنَذْرِكَ، فَإِنَّهُ لَا وَفَاءَ لِنَذْرٍ فِي مَعْصِيَةِ اللَّهِ، وَلَا فِيمَا لَا يَمْلِكُ ابْنُ آدَمَ»

புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நேர்ச்சை செய்திருந்தார். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து,  நான் புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று நேர்ச்சை செய்திருக்கின்றேன்   என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  அதில் வணங்கப்படக் கூடிய அறியாமைக் கால சிலைகளில் ஏதேனும் ஒரு சிலை இருக்கின்றதா?   என்று கேட்டார்கள். அதற்கு (மக்கள்) இல்லை என்று பதிலளித்தார்கள்.  அவர்களது திருவிழாக்களில் ஏதேனும் ஒரு திருவிழா அங்கு நடப்பதுண்டா?   என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர்கள் இல்லை என்று பதிலளித்தார்கள். அப்படியானால் நீ உன்னுடைய நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள். ஏனெனில் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதிலோ அல்லது ஆதமுடைய மகனுக்கு இயலாத காரியத்திலோ நேர்ச்சையை நிறைவேற்றுதல் இல்லை   என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் இப்னு ளஹ்ஹாக் (ரலி)

நூல்: அபூதாவூத்

அல்லாஹ்வுக்கு நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றுவது கட்டாயக் கடமை! அது போன்ற ஒரு செயலைச் செய்யும் போது கூட அங்கு சிலைகள் உள்ளதா? இஸ்லாத்திற்கு மாற்றமான திருவிழாக்கள் நடக்கின்றதா? என்பன போன்ற விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதை நாம் இந்த ஹதீஸில் பார்க்கிறோம்.

தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதும் தடுக்கப்பட்டது என்பதைக் கீழ்க்கண்ட ஹதீஸ் கூறுகின்றது.

صحيح البخاري

2223 - حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ: أَخْبَرَنِي طَاوُسٌ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ: بَلَغَ عُمَرَ بْنَ الخَطَّابِ أَنَّ فُلاَنًا بَاعَ خَمْرًا، فَقَالَ: قَاتَلَ اللَّهُ فُلاَنًا، أَلَمْ يَعْلَمْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «قَاتَلَ اللَّهُ اليَهُودَ حُرِّمَتْ عَلَيْهِمُ الشُّحُومُ، فَجَمَلُوهَا فَبَاعُوهَا»

ஒரு மனிதர் மதுவை விற்பதாக அறிந்த உமர் (ரலி)  அவரை அல்லாஹ் சபிப்பானாக!  யூதர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்ட போது, அதை உருக்கி அவர்கள் விற்றதால் அல்லாஹ் அவர்களை அழிப்பானாக   என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை அவர் அறியவில்லையா?  என்று கேட்டார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 2223

10.01.2015. 20:39 PM

More Articles …