Sidebar

05
Wed, Aug

நபியாவதற்கு முன்னர் மிஃராஜ் நடந்து இருக்குமா?

இன்னொரு ஹதீஸைப் பாருங்கள்.

ஷரீக் பின் அப்துல்லாஹ் பின் அபீ நமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எங்களிடம் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஅபாவின் பள்ளி வாசலிலிருந்து (விண்ணுலகப் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவைக் குறித்துப் பேசினார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்னால் அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் தூங்கிக் கொண்டிருந்த போது (வானவர்களில்) மூன்று பேர் அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் முதலாமவர், இவர்களில் அவர் யார்? என்று கேட்டார். அவர்களில் நடுவிலிருந்தவர், இவர்களில் சிறந்தவர் என்று பதிலளித்தார். அவர்களில் இறுதியானவர், இவர்களில் சிறந்தவரை (விண்ணுலகப் பயணத்திற்காக) எடுத்து வாருங்கள் என்று சொன்னார். அன்றிரவு இது மட்டும் தான் நடந்தது. அடுத்த இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது உள்ளம் பார்க்கின்ற நிலையில்-(உறக்க நிலையில்)- அம்மூவரும் வந்த போது தான் அவர்களைக் கண்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்கள் இரண்டும் தான் உறங்கும்; அவர்களுடைய உள்ளம் உறங்காது. இறைத்தூதர்கள் இப்படித் தான். அவர்களின் கண்கள் உறங்கும்; அவர்களுடைய உள்ளங்கள் உறங்க மாட்டா. ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பொறுப்பேற்று அவர்களைத் தம்முடன் அழைத்துக் கொண்டு வானத்தில் ஏறிச் சென்றார்கள்.

நூல் : புகாரி 3570

புகாரியில் பதிவு செய்யப்பட்ட இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வஹீ வருவதற்கு முன்னர் அதாவது நபியாக ஆவதற்கு முன்னர் மிஃராஜ் பயணம் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக ஆக்கப்பட்ட பின்னர் தான் அவர்கள் மிஃராஜ் அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்று ஏராளமான ஹதீஸ்கள் கூறுகின்றன. மேலும் ஜிப்ரீல் அவர்கள் முதன் முதலில் இறைச் செய்தியைக் கொண்டு வந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயந்தார்கள். நடுங்கினார்கள். கதீஜா (ரலி) அவர்கள் ஆறுதல் கூறி நபிகள் நாயகத்தின் அச்சத்தைப் போக்கினார்கள் என்ற விபரங்கள் ஆதாரப்பூர்வமான செய்திகள்.

நபியாக ஆவதற்கு முன்பே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் சென்று இருந்தால் ஜிப்ரீல் அவர்களின் முதல் வருகையின் போது தமக்கு என்னவோ நேர்ந்து விட்டதாகக் கருதி அவர்கள் அஞ்சி இருக்க மாட்டார்கள். இது போல் ஏராளமான ஆதாரங்களுக்கு மாற்றமாக இது அமைந்துள்ளது.

இதை நாம் நம்பினால் மிஃராஜ் குறித்த எல்லா ஹதீஸ்களையும் மறுக்க வேண்டிய நிலை ஏற்படும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முதல் வஹீ வந்தது குறித்து பேசும் எல்லா ஹதீஸ்களையும் மறுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே இந்தச் செய்தி புகாரியில் பதிவாகி இருந்தாலும் இது தவறான செய்தி தான் என்று முடிவு செய்வது தான் ஹதீஸைப் புரிந்து கொள்ளும் சரியான வழியாகும்.

இப்ராஹீம் நபிக்கு எதிராக பல்லி தீ மூட்டுமா?

இதற்கு உதாரணமாக புகாரியில் இடம் பெற்ற பின்வரும் ஹதீஸை எடுத்துக் கொள்ளலாம்.

3359 حدثنا عبيد الله بن موسى، أو ابن سلام عنه، أخبرنا ابن جريج، عن عبد الحميد بن جبير، عن سعيد بن المسيب، عن أم شريك رضي الله عنها، أن رسول الله صلى الله عليه وسلم، أمر بقتل الوزغ، وقال: كان ينفخ على إبراهيم عليه السلام 

உம்மு ஷுரைக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டார்கள். மேலும் அவர்கள், அது இப்ராஹீம் (அலை அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்ட போது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதி விட்டுக் கொண்டிருந்தது என்றும் சொன்னார்கள்.

நூல் : புகாரி 3359

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லுமாறு கட்டளையிட்டார்கள் என்று மட்டும் ஹதீஸ் இருந்தால் நபிகள் நாயகத்தின் அந்தக் கட்டளையை நாம் நிறைவேற்ற வேண்டும். இது எந்த வசனத்துக்கும் எதிரானது அல்ல.

இப்ராஹீம் (அலை) நெருப்புக் குண்டத்தில் போடப்பட்ட போது பல்லி மட்டும் வாயால் ஊதி நெருப்பை மேலும் மூட்டிவிடுகின்றது என்று இதற்குக் காரணம் சொல்லப்படுகிறது. இந்தக் காரணம் சரியா என்று நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இதைச் சிந்திக்கும் போது இது திருக்குர்ஆனின் பல வசனங்களுக்கும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கும் முரணாக இது அமைந்துள்ளதை நாம் அறியலாம்.

பல்லி ஒரு சிறு உயிரினம். அது நெருப்பை ஊதிப் பெரிதாக்கியது என்ற சொல் அறிவுச் சுரங்கமாகத் திகழ்ந்த நபியின் கூற்றைப் போல் உள்ளதா? அல்லது விபரமறியாத ஒருவரின் சொல்லைப் போல் அமைந்துள்ளதா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

பல்லி சிறிய ஓர் உயிரினம். மிகப்பெரும் நெருப்புக்கு அருகில் சென்றால் கூட அது கருகி விடும் என்ற விஷயம் கூடவா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது?

இது முதல் விஷயம்.

சில உயிரினங்கள் இறைத்தூதர்களுக்கு உதவியுள்ளன என்று திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதால் அது போன்ற ஹதீஸ்களை நாம் ஏற்கலாம். சுலைமான் நபியவர்களுக்கு ஹுத் ஹுத் பறவை உதவியதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

(பார்க்க 27:20)

ஆனால் எந்த உயிரினமும் இறைத்தூதர்களுக்கு எதிராகக் களமிறங்காது. அவை அனைத்தும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டே நடக்குமாறு படைக்கப்பட்டுள்ளன.

அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடிபணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.

திருக்குர்ஆன் 3 : 83

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.

திருக்குர்ஆன் 13 : 15

வானங்களில் உள்ளோரும், பூமியில் உள்ளோரும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும், மற்றும் மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்குப் பணிகின்றனர் என்பதை நீர் அறியவில்லையா?

திருக்குர்ஆன் 22 : 18

இவ்வசனங்களுக்கு எதிராக பல்லி அல்லாஹ்வுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்ததாக இந்த ஹதீஸ் கூறுகிறது.

இப்ராஹீம் நபி ஏகத்துவக் கொள்கையைச் சொன்னார்கள். இதற்காகவே அவர்கள் தீக்குண்டத்தில் போடப்பட்டார்கள். பல்லி இதில் சந்தோஷம் அடைந்து இப்ராஹீம் நபிக்கு எதிராக தன் பங்குக்கு நெருப்பை ஊதி விட்டது என்று இந்த ஹதீஸ் சொல்கிறது.

இதை நம்பினால் உயிரினங்களிலும் காஃபிரான உயிரினம் உள்ளது என்று நாம் நம்பியாக வேண்டும். அவ்வாறு நம்புவது மேற்கண்ட வசனங்களை மறுப்பதாக அமையும்.

இன்னொரு இஸ்லாமிய அடிப்படைக்கும் முரணாக இந்தச் செய்தி அமைந்துள்ளது.

ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்பது இஸ்லாத்தின் அடிப்படையாகும். இதைப் பின்வரும் வசனங்களில் இருந்து அறியலாம்.

(பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதித்துக் கொள்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான்.

திருக்குர்ஆன் 6 : 164

நேர்வழி பெற்றவர் தனக்காகவே நேர்வழி பெறுகிறார். வழி தவறுபவர் தனக்கெதிராகவே வழி தவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை.

திருக்குர்ஆன் 17 : 15

ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். கனத்தவன் அதைச் சுமக்குமாறு யாரையேனும் அழைத்தால் (அழைக்கப்படுபவன்) உறவினராக இருந்தாலும் அதிலிருந்து எதுவும் அவன் மீது சுமத்தப்பட மாட்டாது.

திருக்குர்ஆன் 35 : 18

நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களிடம் அதைப் பொருந்திக் கொள்வான். ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். பின்னர் உங்கள் மீளுதல் உங்கள் இறைவனிடமே உள்ளது.

திருக்குர்ஆன் 39 : 7

மூஸா, முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம் ஆகியோரின் ஏடுகளில் ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?

திருக்குர்ஆன் 53 : 36

ஒருவரின் சுமையை இன்னொருவர் சுமக்க மாட்டார் என்பது தான் இஸ்லாத்தையும், கிறித்தவ மதத்தையும் வேறுபடுத்திக் காட்டும் முக்கியக் கொள்கையாகும்.

ஆதம் (அலை) அவர்கள் பாவம் செய்ததால் அனைவரும் பாவியாகப் பிறக்கிறார்கள் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை. ஆதம் (அலை) அவர்கள் பாவம் செய்தால் அவரின் சந்ததிகள் எப்படி அந்தப் பாவத்தைச் சுமப்பார்கள் என்று மேற்கண்ட வசனங்களை அடிப்படையாகக் கொண்டு நாம் கேள்வி எழுப்புகிறோம்.

எல்லோரும் பாவிகளாகப் பிறக்கின்றனர். இந்தப் பிறவிப் பாவத்தைச் சுமப்பதற்காக இயேசு தன்னைப் பலி கொடுத்து நிவாரணம் தந்தார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கைக்கு எதிராகவும் மேற்கண்ட வசனங்களை ஆதாரமாகக் கொண்டு நாம் கேள்விகளை எழுப்புகிறோம்.

பல்லி இப்ராஹீம் நபிக்கு எதிராக நெருப்பை ஊதியது என்றே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம்.

இது உண்மையாக இருந்தால் எந்தப் பல்லி அவ்வாறு ஊதியதோ அந்தப் பல்லியைத் தானே கொல்ல வேண்டும். அந்தப் பல்லி செத்துப் போய் பல்லாயிரம் ஆண்டுகள் ஆன பின்னும் அதன் வழித்தோன்றல்களான பல்லியைக் கொல்ல இந்தக் காரணம் பொருந்துமா?

மேலும் இப்ராஹீம் நபியை நெருப்புக் குண்டத்தில் போடும்போது உலகத்தில் உள்ள பல்லிகள் எல்லாம் அந்த இடத்துக்கு வந்து இருக்க முடியாது. அந்தப் பல்லிகளையும் அதன் வழித்தோன்றல்களையும் ஏன் கொல்ல வேண்டும்?

குர்ஆனுக்கு முரணாக நபியவர்கள் இவ்வாறு பேசியிருப்பார்களா? சாதாரண மனிதன் கூட ஒருவர் செய்த தவறுக்காக மற்றவரைத் தண்டிக்க மாட்டான் எனும் போது அறிவின் சிகரமாகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படிச் சொல்லி இருப்பார்களா?

எனவே பல்லியைக் கொல்லச் சொல்லும் காரணம் திருக்குர்ஆனுக்கு மாற்றமாக இருப்பதாலும், உண்மைக்கு எதிராக இருப்பதாலும் இந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லாதது என்ற முடிவுக்கு நாம் வந்தாக வேண்டும்.

இது எந்த நூலில் இடம்பெற்று இருந்தாலும் எத்தனை நூல்களில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் இந்த முடிவுக்குத் தான் நாம் வர வேண்டும். அப்படி வர மறுத்தால் மேலே நாம் எடுத்துக்காட்டிய எல்லா வசனங்களையும், இஸ்லாத்தின் அடிப்படையையும் மறுத்தவர்களாக நேரும். எந்த மனிதனும் முரண்பட்ட இரண்டை நம்ப முடியாது.

இதுதான் ஹதீஸ்களைப் புரிந்து கொள்ளும் சரியான வழியாகும்.

தேநீரில் ஈ விழுந்தால் அதே டீயில் மூழ்க வைத்து குடிக்க சொல்லும் ஹதீஸின் நிலை என்ன? 30/05/2021 


ஈ விழுந்த உணவை சாப்பிடலாமா.? 

ஈ விழுந்த உணவை சாப்பிடுவது நமது உடலுக்கு கேடு விளைவிக்கும் , இது குறித்து ஆய்வாளர்கள் மருத்துவர்கள் தரும் தகவல்களை பாருங்கள்.

1. ஈக்களால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் குறித்து, அரசு பொது நல மருத்துவர் எம்.ஆனந்த் பிரதாப் கூறியதாவது: ஈக்கள், அவற்றின் கால்கள், இறக்கைகள், ரோமங்கள் மூலம், ஆபத்தான பாக்டீரியாக்களை, ஓரிடத்தில் இருந்து, மற்றோர் இடத்திற்கு பரப்புகின்றன.அவற்றின் கால்களில் ஒட்டியிருக்கும் ஆபத்தான பாக்டீரியாக்கள், உணவுகள் மூலம் நம் உடலுக்குள் செல்லும். இந்த கிருமிகளால், சீதபேதி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, 'டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்படும்.இந்த பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்க, உணவுகள், தண்ணீர் ஆகியவற்றில் ஈக்கள் உட்காராமல் பார்த்து கொள்ள வேண்டும்.... இவ்வாறு அவர் கூறினார்.

தகவல் : தினமலர் நாளிதழ் ஜுன்.10/2019

2.. ஈக்களின் ஒவ்வொரு கால்களிலும் வட்டமான பிசின் போன்ற பசைப் பொருட்கள் காணப்படுகின்றன . கழிவுகளில் அமரும் போது அந்த பிசின்களில் பாக்டீரியாக்கள் ஒட்டிக் கொள்ளும். அவை மீண்டும் மனிதன் மீதோ உணவின் மீதோ உட்காரும் போது , அந்த பாக்டீரியாக்கள் எளிதில் உணவில் இறங்கி மிக எளிதாக மனித உடலுக்குள் சென்று , வயிற்றுப் போக்கு  குடற்புழு உடல் நமைச்சல் தோல் நமைச்சல் வயிற்றுப் புண் டைபாய்டு தொற்றுக் கிருமி காய்ச்சல் எனப் பல்வேறு வகை நோய்களுக்கு வாயில் படியாக உள்ளது.

தகவல் : திணமனி நாளிதழ் . மே -19/2015

3. ஈக்களின் கால்கள் மற்றும் இறக்கைகளில் உள்ள பாக்டீரியா கிருமிகள் உணவை பாக்டீரியாவின் கூடாரமாகவே மாற்றும், ஈக்களின் வெளிப்புற உடற்பகுதியில் நுண்ணுயிர் கிருமிகள் அதிகம் படிந்திருக்கும். ஒரு ஈ அது பறந்து செல்கின்ற பாதையில் நூற்றுக்கணக்கான நுண்ணுயிர் கிருமிகளை பரப்பிக் கொண்டே இருக்கும் என நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தகவல் : புதிய தலைமுறை  ஆகஸ்ட்.17/2020.

4. ஈக்களால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து பொதுநல மருத்துவர் சிவராமக்கண்ணனிடம் கேட்டோம். ``ஈக்கள், அவற்றின் கால்கள், இறக்கைகள், ரோமங்கள் மூலம் ஆபத்தான பாக்டீரியாக்களை ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பரப்புகின்றன. கழிவுகள், குப்பைகள், சாக்கடை, அழுகியப் பொருள்கள் என ஈக்கள் எங்கு வேண்டுமானாலும் உட்காரும். அப்படி நாம் உண்ணும் உணவுகள் மீதும் உட்காரும். அப்போது அவற்றின் கால்களில் ஒட்டியிருக்கும் ஆபத்தான பாக்டீரியாக்கள் உணவுகள் மூலம் நம் உடலுக்குள் செல்லும். இந்தக் கிருமிகளால் வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, காயங்கள் மூலம் ரத்தத்தில் விஷம் பரவுதல், நிமோனியா, டைஃபாய்டு, காலரா போன்ற நோய்கள் ஏற்படுகின்றன

தகவல் : ஆனந்த விகடன் . மே.18/2018

5.       ஈக்களால், தனது கால்கள், இறக்கைகள் மற்றும் பாதங்கள் மூலமாக, நோய்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரப்ப முடியும். சொல்லப்போனால், அவை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், அவற்றால் உயிருடன் உள்ள பாக்டீரியாக்களைப் பரப்ப முடியும் - பென் ஸ்டேட் பல்கலைக்கழக பேராசிரியர் டொனால்ட் பிரையண்ட். ஜர்னல் சைண்டிபிக் இதழில் . 

தகவல் : பிபிசி நவம்பர்.17/2017

கழிவுகளில் உட்காரும் போது ,  ஈக்களின் கால்களில் இருபது லட்சம் நோய் பரப்பும் பாக்டீரியாக்கள் ஒட்டிக் கொள்ளும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆய்வாளர்களின் ஆய்வுகளில் ஈக்களின் இறகுகளிலும் நோய் பரப்பும் பாக்டீரியாக்கள் உள்ளது என்பதை அறிய முடிகிறது . இப்போது கூறுங்கள் நபி ஸல் அவர்கள் ஈக்களின் ஒரு இறகில் நோய் கிருமியும் மற்றொரு இறகில் நிவாரணமும் உள்ளது என்று கூறியிருப்பார்களா. ? ஈயை மூன்று முறை உணவில் மூழ்க வைத்து சாப்பிடுங்கள் என்று கூறி இருப்பார்களா.? * ஒரு உணவில் ஈ அமர்ந்தால் எவ்வளவு பாக்டீரியாக்கள் ஒட்டிக் கொள்ளும் என்பதை வீடியோ காணுங்கள் .

வீடியோ லிங்க் - https://youtu.be/GHHFJDkk18Q 

https://vimeo.com/557712457

 يَأْمُرُهُمْ بِالْمَعْرُوفِ وَيَنْهَاهُمْ عَنِ الْمُنْكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ  

(முஹம்மது நபி ஸல்) இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மை இல்லாத அசுத்தமானவற்றை அவர்களுக்கு தடை செய்கிறார். அல்குர்ஆன் : 7:157.

وَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي أَنْتُمْ بِهِ مُؤْمِنُونَ ﴿88﴾

அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய, அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! நீங்கள் நம்புகின்ற அல்லாஹ்வையே அஞ்சுங்கள்.! அல்குர்ஆன் : 5:88.

[يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ﴿172﴾

நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்.! அல்குர்ஆன் : 2 :172. 

 وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ 

உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்.! அல்குர்ஆன் :2 :195.

நபிகள் நாயகத்தை மனிதர்களால் கொல்ல முடியாது எனும் போது ரசூலுல்லாஹ் மரண தருவாயில் ஒரு பெண் விஷம் கொடுத்த ஹதீஸ் பற்றி சொல்வதின் விளக்கம் என்ன?

26/07/2020 வாட்ஸ் அப் கேள்வி பதில்


விபச்சாரம் செய்த குரங்குக்கு கல்லெறி தண்டனையா?

ஹதீஸ்களை ஆய்வு செய்யும் அறிஞர்கள் இரு வகையில் உள்ளனர்.

ஒரு செய்தியைப் பதிவு செய்யும் போது அறிவிப்பவர்களை மட்டும் ஆய்வு செய்பவர்கள் ஒரு வகையினராவார்கள். நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறதா என்பதில் மட்டுமே இவர்கள் கவனம் செலுத்துவார்கள்.

அந்தச் செய்தியின் கருத்து சரியானதா? குர்ஆனுக்கும், கண் முன்னே தெரியும் உண்மைக்கும் முரணில்லாமல் உள்ளதா? என்பதை ஆய்வு செய்பவர்கள் இன்னொரு வகையினராவர்.

சில அறிஞர்கள் இரண்டையும் கவனத்தில் கொண்டு ஆய்வு செய்வார்கள்.

ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று முதல் வகை அறிஞர்கள் பதிவு செய்தால் அவர்கள் அறிவிப்பாளர்களை மட்டும் கவனித்துத் தான் இப்படிக் கூறுகிறார்களே தவிர கருத்தைக் கவனித்து அல்ல.

புகாரியில் இடம்பெறும் ஒரு செய்தியை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

3849 حَدَّثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ ، حَدَّثَنَا هُشَيْمٌ ، عَنْ حُصَيْنٍ ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ ، قَالَ : رَأَيْتُ فِي الْجَاهِلِيَّةِ قِرْدَةً اجْتَمَعَ عَلَيْهَاقِرَدَةٌ قَدْ زَنَتْ فَرَجَمُوهَا، فَرَجَمْتُهَا مَعَهُمْ.

அறியாமைக் காலத்தில் விபச்சாரம் செய்த ஒரு பெண் குரங்கை, குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை நான் கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன்.

அறிவிப்பவர் : அம்ர் பின் மைமூன்

நூல் : புகாரி 3849

இது நபிமொழி அல்ல. அறியாமைக் கால சம்பவம் என்று ஒருவர் சொன்னதை புகாரி பதிவு செய்துள்ளார்.

இதன் கருத்தை நம்பி புகாரி ஏற்றுக் கொண்டார் என்று சொல்ல முடியாது. மிகச் சாதாரண மனிதன் கூட இதன் கருத்தைச் சரிகாண மாட்டான் எனும் போது புகாரி இமாம் இந்தக் கருத்தை நிச்சயம் சரிகண்டு இருக்க மாட்டார்.

இதில் பல அபத்தங்கள் உள்ளன. ஒவ்வொன்றாக அவற்றைக் காண்போம்.

மனிதர்களுக்கு மட்டும் தான் திருமணம், விபச்சாரம் என்ற இரண்டு வகையான பாலியல் தொடர்புகள் உள்ளன. மனிதர்களல்லாத மற்ற உயிரினங்களுக்கு விபச்சாரம் என்ற நிலை இல்லை. ஒரு ஆண் குரங்கு ஒரு பெண் குரங்குடன் உடலுறவு கொண்டால் மனைவியுடன் உறவு கொள்கிறதா? மனைவியல்லாத குரங்குடன் உடலுறவு கொள்கிறதா? என்று கற்பனை செய்ய முடியாது.

இந்தச் உண்மைக்கு மாற்றமான இச்செய்தி புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை உண்மை என நம்பி புகாரி அவர்கள் பதிவு செய்துள்ளதாகக் கருத முடியுமா?

விபச்சாரம் என்பது ஆணும், பெண்ணும் சேர்ந்து தான் செய்ய முடியும். இங்கே பெண் குரங்கைத் தண்டித்துள்ளார்கள்; ஆண் குரங்கைத் தண்டித்ததாக இந்தச் செய்தியில் இல்லை. இது அடுத்த அபத்தமாக உள்ளது.

குரங்குகள் திருமணம் செய்து குடும்பம் நடத்துவதில்லை. எனவே எல்லாக் குரங்குகளும் செய்ததைத் தான் அந்தக் குரங்கும் செய்துள்ளது. அப்படி இருக்கும் போது மற்ற குரங்குகள் எப்படி குறிப்பிட்ட அந்தக் குரங்கை குற்றம் சாட்டி தண்டித்து இருக்க முடியும்? இது அடுத்த அபத்தமாக உள்ளது.

ஒரு குரங்கின் செயல் மற்ற குரங்குகளுக்குப் பிடிக்காவிட்டால் மனிதர்கள் தண்டிப்பது போல் அவை தண்டிப்பதில்லை. மாறாக பாய்ந்து பிராண்டி தாக்கும். கூட்டமாகச் சேர்ந்து கொண்டு மனிதர்கள் செய்வது போல் கல்லெறி தண்டனை வழங்கி இருக்க முடியாது. இது மற்றொரு அபத்தமாகும்.

மேலும் சில குரங்குகள் சூழ்ந்து கொண்டு கல்லெறிந்ததைத் தான் மேற்படி அறிவிப்பாளர் பார்த்திருக்க முடியும். குரங்குகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி எதற்காகக் கல் எறிகிறீர்கள் என்று அவர் விசாரித்து இருக்க முடியாது. விபச்சாரத்துக்குத் தண்டனை வழங்குகிறோம் என்று அவை சொல்லி இருக்கவும் முடியாது. இது இன்னொரு அபத்தமாக உள்ளது.

எனவே குரங்குகளுக்குள் நடந்த தாக்குதலின் காரணத்தை மனிதன் அறிந்து கொள்ள முடியாது. எனவே இது முற்றிலும் பொய்யான கட்டுக் கதை என்பது பளிச்சென்று தெரிகிறது.

அப்படி இருந்தும் புகாரி இதை ஏன் தனது புகாரியில் பதிவு செய்தார்? இது தவறான செய்தி என்பது அவருக்குத் தெரியவில்லையா? என்று நாம் குழம்பத் தேவை இல்லை.

இச்செய்தியைத் தனக்குச் சொன்னவர் நம்பகமானவராக உள்ளார். அவருக்குச் சொன்னவரும் நம்பகமானவராக உள்ளார். அவருக்குச் சொன்னவரும் நம்பகமானவராக உள்ளார். எனவே இது ஆதாரப்பூர்வமானது என்பது மட்டுமே அவரது பார்வை. அதன் கருத்து பற்றி புகாரி இமாம் இந்நூலில் கவனம் செலுத்தவில்லை என்பதற்கு இது ஆதாரமாக உள்ளது.

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை புகாரி இமாம் அவர்கள் எப்படி நம்பகமான ஹதீஸ்கள் என்று பதிவு செய்தார் என்று கேட்பவர்களுக்கு இதில் போதுமான விடை உள்ளது.

உலகம் படைக்கப்பட்டது ஏழு நாட்களிலா?

இப்பேரண்டம் ஆறு நாட்களில் படைக்கப்பட்டதாக திருக்குர்ஆன் தெள்ளத்தெளிவாக கூறுகிறது.

ஆனால் முஸ்லிம் உள்ளிட்ட சில நூல்களில் இடம் பெற்ற ஒரு ஹதீஸ் இதற்கு முரணாக அமைந்துள்ளது.

صحيح مسلم

7231 – حَدَّثَنِى سُرَيْجُ بْنُ يُونُسَ وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ قَالاَ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِى إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ عَنْ أَيُّوبَ بْنِ خَالِدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَافِعٍ مَوْلَى أُمِّ سَلَمَةَ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ أَخَذَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- بِيَدِى فَقَالَ خَلَقَ اللَّهُ عَزَّ وَجَلَّ التُّرْبَةَ يَوْمَ السَّبْتِ وَخَلَقَ فِيهَا الْجِبَالَ يَوْمَ الأَحَدِ وَخَلَقَ الشَّجَرَ يَوْمَ الاِثْنَيْنِ وَخَلَقَ الْمَكْرُوهَ يَوْمَ الثُّلاَثَاءِ وَخَلَقَ النُّورَ يَوْمَ الأَرْبِعَاءِ وَبَثَّ فِيهَا الدَّوَابَّ يَوْمَ الْخَمِيسِ وَخَلَقَ آدَمَ عَلَيْهِ السَّلاَمُ بَعْدَ الْعَصْرِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فِى آخِرِ الْخَلْقِ وَفِى آخِرِ سَاعَةٍ مِنْ سَاعَاتِ الْجُمُعَةِ فِيمَا بَيْنَ الْعَصْرِ إِلَى اللَّيْلِ

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துக்கொண்டு, வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமையன்று மண்ணை (பூமியை) படைத்தான். அதில் மலைகளை ஞாயிற்றுக்கிழமையும், மரங்களை திங்கட்கிழமையும், துன்பத்தை செவ்வாய்க் கிழமையும், ஒளியை புதன்கிழமையிலும்,  படைத்தான். வியாழக்கிழமை உயிரினங்களைப் படைத்து பூமியில் பரவச் செய்தான். (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களை வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப் பின் அந்த நாளின் இறுதி நேரத்தில் அஸ்ருக்கும் இரவுக்குமிடையேயுள்ள நேரத்தில் இறுதியாகப் படைத்தான் என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம்

இந்தச் செய்தி இப்னுஹுஸைமா (1736), முஸ்னத் அபீயஃலா (6132), அஹ்மத் (7991), பைஹகீ (17705), முஸ்னத் பஸ்ஸார் (8228), நஸாயீ (10943), தப்ரானீ-அவ்ஸத் (3232) ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.

சனிக்கிழை – பூமி

ஞாயிறு – மலைகள்

திங்கள் – மரங்கள்

செவ்வாய் – துன்பம்

புதன் – ஒளி

வியாழன் – உயிரினம்

வெள்ளிக்கிழமை – ஆதம்

உலகத்திலுள்ள அனைத்துப் பொருட்களும் உருவாக ஏழு நாட்கள் ஆனதாக இந்தச் செய்தி கூறுகிறது.

மொத்த உலகத்தை அல்லாஹ் ஆறு நாட்களில் படைத்ததாக திருக்குர்ஆன் சொல்கிறது. ஆனால் இந்தச் செய்தி ஏழு கிழைமைகளையும் குறிப்பிட்டு ஏழு நாட்கள் என்ற கருத்தைத் தருகிறது.

மேலும் பூமி மற்றும் பூமியில் உள்ள பொருட்களை உருவாக்க நான்கு நாட்கள் ஆனது என்று திருக்குர்ஆன் (41:10) கூறுகிறது. ஆனால் இந்தச் செய்தியில் சனிக்கிழமை பூமியையும், ஞாயிறு அன்று மலைகளையும், திங்கள் அன்று மரங்களையும் படைத்ததாக (மொத்தம் மூன்று நாட்கள் என்று) சொல்லப்பட்டுள்ளது.

துன்பத்தை செவ்வாய்க்கிழமையில் படைத்தான் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இன்பத்தை எந்தக் கிழமையில் படைத்தான் என்று சொல்லப்படவில்லை. அதை ஒருநாள் என்று சேர்த்தால் எட்டு நாட்கள் ஆகிவிடும்.

இந்தச் செய்தி திருக்குர்ஆனின் கருத்து முரணாக இருப்பதால் இது பொய்யான செய்தி என்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.

இந்தச் செய்தியைப் பதிவு செய்தவர்களில் ஒருவரான இமாம் பைஹகீ அவர்கள் பின்வருமாறு விமர்சனம் செய்துள்ளார்கள்.

هَذَا حَدِيثٌ قَدْأَخْرَجَهُ مُسْلِمٌ فِي كِتَابِهِ ، عَنْ سُرَيْجِ بْنِ يُونُسَ ، وَغَيْرِهِ ، عَنْ حَجَّاجِ بْنِ مُحَمَّدٍ. وَزَعَمَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ بِالْحَدِيثِ أَنَّهُ غَيْرُ مَحْفُوظٍ لِمُخَالَفَتِهِ مَا عَلَيْهِ أَهْلُ التَّفْسِيرِ وَأَهْلُ التَّوَارِيخِ.

இந்தச் செய்தியை முஸ்லிம் அவர்கள் தனது பதிவு செய்துள்ளார்கள். சில கல்வியாளர்கள் இந்தச் செய்தி சரியானதல்ல என்று குறிப்பிடுகிறார்கள். ஏனெனில் இது திருக்குர்ஆன் விளக்கவுரையாளர்கள், வரலாற்று ஆசிரியர்களுடைய கருத்துக்கு முரணாக அமைந்திருக்கிறது.

இதே கருத்தை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டு ஹதீஸ்கலை அறிஞர்கள் பலர் இதே கருத்தில் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

النكت على مقدمة ابن الصلاح

وكذا ضعفه البيهقي وغيره من الحفاظ وقالوا هو خلاف ظاهر القرآن من أن الله خلق السموات والأرض في ستة أيام والحديث أخرجه مسلم في صحيحه من جهة ابن جريج عن إسماعيل به

ஹதீஸ்கலை நிபுணர்களும் இதை பலவீனமான செய்தி என்று குறிப்பிடுகிறார்கள். வானங்கள், பூமியை ஆறு நாட்களின் படைத்தான் என்ற திருக்குர்ஆனின் வெளிப்படையான கருத்துக்கு முரணாக இருப்பதைக் காரணமாகக் குறிப்பிடுகிறார்கள்.

நூல் : அந்நுகத், பாகம்: 2, பக்கம்: 269

المنار المنيف –

وهو كما قالوا لأن الله أخبر أنه خلق السماوات والأرض وما بينهما في ستة أيام وهذا الحديث يقتضي أن مدة التخليق سبعة أيام والله تعالى أعلم

வானங்கள், பூமியையும் அதற்கு இடைப்பட்டவைகளையும் ஆறு நாட்களில் அல்லாஹ் படைத்துள்ளான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இந்தச் செய்தியில் படைப்பின் மொத்த காலம் ஏழுநாட்கள் என்று சொல்லப்படுகிறது. (எனவே இந்த செய்தி தவறானது என்று) அறிஞர்கள் சொல்கின்றனர்.

நூல் அல்மனாருல் முனீஃப்,பாகம் 1, பக்கம் 85

இந்தச் செய்தி நபிகளார் கூறியது கிடையாது. இது கஅபுல் அஹ்பார் அவர்களின் சொந்தக் கருத்து என்று புகாரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

التاريخ الكبير – 1 / 413

1317 – ايوب بن خالد بن ابى ايوب الانصاري عن ابيه عن جده ابى ايوب ان النبي صلى الله عليه وسلم قال له إذا اكننت الخطيئة قم توضأ فأحسن وضوءك ثم صل ما كتب الله لك، قاله لى يحيى بن سليمان عن ابن وهب اخبرني حيوة عن الوليد بن ابى الوليد ان ايوب حدثه، وروى اسمعيل بن امية عن ايوب بن خالد الانصاري عن عبد الله بن رافع عن ابى هريرة عن النبي صلى الله عليه وسلمقال خلق الله التربة يوم السبت، وقال بعضهم عن ابى هريرة عن كعب وهو أصح.

(இந்த செய்தி) அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக நபிகளார் கூறியதாக இடம்பெற்றுள்ளது. சிலர் இது கஅபுல் அஹ்பாரின் கூற்றாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாக இடம்பெற்றுள்ளது. (நபிகளார் கூறியதாக இல்லை) கஅபுல் அஹ்பார் கூற்று என்பதே சரியானது என்று குறிப்பிடுகிறார்கள்.

நூல்: அத்தாரிகுல் கபீர்,பாகம்: 1, பக்கம்: 413

இக்கருத்தை இப்னு கஸீர் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

تفسير ابن كثير / دار طيبة – (6 / 359)

وقد علَّله البخاري في كتاب التاريخ الكبير فقال: وقال بعضهم: أبو هريرة عن كعب الأحبار وهو أصح  (6) وكذا علَّله غير واحد من الحفاظ، والله أعلم.

இந்தச் செய்தியை புகாரி அவர்கள் அத்தாரிக்குல் கபீர் என்ற நூலில் குறையுடையது என்று குறிப்பிட்டுள்ளார்கள். சிலர் இது அபூஹுரைரா (ரலி) அவர்கள் கஅபுல் அஹ்பார் கூறியதாக இடம்பெற்றுள்ளது. (நபிகளார் கூறியதாக இல்லை) இதுவே சரியானது என்று (புகாரி) குறிப்பிடுகிறார்கள். அறிஞர்களில் ஒன்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் இந்தச் செய்தியை குறையுடையது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர்

உலகம் ஏழு கிழமைகளில் படைக்கப்பட்டது என்று வரும் செய்தி திருக்குர்ஆனின் செய்திகளுக்கு மாற்றமாக அமைந்துள்ளதால் இந்தச் செய்தி முற்றிலும் பலவீனமான ஏற்றுக் கொள்ள முடியாத செய்தியாகும்.

கீழ்க்காணும் வசனங்களுக்கு நேர்முரணாக இந்த ஹதீஸ் அமைந்துள்ளதால் இது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஹதீஸ் என்பதில் ஐயமில்லை.

அவனே வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்.

திருக்குர்ஆன் 25:59

பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்?

திருக்குர்ஆன் 41:9

நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.

திருக்குர்ஆன் 41:10

இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய கட்டளையை அறிவித்தான். கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். (அவற்றை) பாதுகாக்கப்பட்டதாக (ஆக்கினோம்). இது அறிந்தவனாகிய மிகைத்தவனின் ஏற்பாடாகும்.

திருக்குர்ஆன் 41:12

குஸைமா (ரலி)யின் பொய் சாட்சியத்தை நபிகள் அங்கீகரித்தார்களா?

ஷாகுல் ஹமீது

பதில்

குஸைமா என்ற நபித்தோழரின் சாட்சியத்தை இருவரின் சாட்சியத்துக்குச் சமம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் நூல்களில் காணப்படுவதை ஆதாரமாகக் கொண்டு இவ்வாறு கேள்விகள் கேட்கப்படுகின்றன.

ஆனால் இது விரிவாக அலச வேண்டிய விஷயமாகும்.

முதலில் இது தொடர்பான ஹதீஸைப் பார்ப்போம்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ أَنَّ الْحَكَمَ بْنَ نَافِعٍ حَدَّثَهُمْ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُمَارَةَ بْنِ خُزَيْمَةَ أَنَّ عَمَّهُ حَدَّثَهُ وَهُوَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَ فَرَسًا مِنْ أَعْرَابِيٍّ فَاسْتَتْبَعَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَقْضِيَهُ ثَمَنَ فَرَسِهِ فَأَسْرَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَشْيَ وَأَبْطَأَ الْأَعْرَابِيُّ فَطَفِقَ رِجَالٌ يَعْتَرِضُونَ الْأَعْرَابِيَّ فَيُسَاوِمُونَهُ بِالْفَرَسِ وَلَا يَشْعُرُونَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَهُ فَنَادَى الْأَعْرَابِيُّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنْ كُنْتَ مُبْتَاعًا هَذَا الْفَرَسِ وَإِلَّا بِعْتُهُ فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ سَمِعَ نِدَاءَ الْأَعْرَابِيِّ فَقَالَ أَوْ لَيْسَ قَدْ ابْتَعْتُهُ مِنْكَ فَقَالَ الْأَعْرَابِيُّ لَا وَاللَّهِ مَا بِعْتُكَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَلَى قَدْ ابْتَعْتُهُ مِنْكَ فَطَفِقَ الْأَعْرَابِيُّ يَقُولُ هَلُمَّ شَهِيدًا فَقَالَ خُزَيْمَةُ بْنُ ثَابِتٍ أَنَا أَشْهَدُ أَنَّكَ قَدْ بَايَعْتَهُ فَأَقْبَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى خُزَيْمَةَ فَقَالَ بِمَ تَشْهَدُ فَقَالَ بِتَصْدِيقِكَ يَا رَسُولَ اللَّهِ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهَادَةَ خُزَيْمَةَ بِشَهَادَةِ رَجُلَيْنِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு கிராமவாசியிடம் குதிரையை விலைபேசி முடித்தார்கள். அந்தக் கிராமவாசி (அதற்கான கிரயத்தைப் பெறுவதற்காக) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின் தொடர்ந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரைந்து நடக்க, அந்தக் கிராமவாசி மெதுவாக நடந்து வந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விலைபேசி வாங்கியதை அறியாத மக்கள் அந்தக் கிராமவாசியிடம் கூடுதல் விலைக்கு கேட்கலானார்கள். அப்போது கிராமவாசி நபிகள் நாயகத்தை உரத்த சப்தத்தில் அழைத்து நீங்கள் இதை வாங்குவதாக இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நான் மற்றவருக்கு விற்று விடுவேன் என்று கூறினார். உடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்றார்கள். நான் தான் உன்னிடம் விலை பேசி வாங்கி விட்டேனே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தக் கிராமவாசி அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இதை உங்களுக்கு விற்கவில்லை என்றார். இல்லை நான் உன்னிடம் இதை விலைக்கு வாங்கி விட்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது கிராமவாசி இதற்கு சாட்சியைக் கொண்டு வாருங்கள் என்று கூறினார். அப்போது குஸைமா என்ற நபித்தோழர் கிராமவாசியைப் பார்த்து நீ நபிகள் நாயகத்திடம் விற்றாய் என்று சாட்சி கூறுகிறேன் என்றார். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குஸைமாவிடம் நீ எப்படி சாட்சி கூறினாய் என்று கேட்டார்கள். உங்கள் மீது உள்ள நம்பிக்கையால் சாட்சி கூறினேன் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது சாட்சியத்தை இருவரின் சாட்சியத்துக்குச் சமமாக ஆக்கினார்கள்.

நூல்கள் : அபூதாவூத் 3130, அஹ்மத் 20878

இது தான் குஸைமாவின் சாட்சியம் இருவரின் சாட்சியத்துக்குச் சமமானது என்று சொல்லப்படுவதற்கான ஆதாரமாகும்.

இஸ்லாம் போதிக்கும் நாணயத்துக்கும், நபிகள் நாயகத்தின் அப்பழுக்கற்ற நேர்மைக்கும் உகந்ததாக இந்தச் செய்தி அமையவில்லை.

முதலில் இந்தப் பிரச்சனை தலைபோகிற காரியமல்ல. ஒரு ஒட்டகத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விலைக்கு கேட்டு விட்டு போனார்களா? அல்லது விலை பேசி முடித்தார்களா என்பது தான் அடிப்படைப் பிரச்சனை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விலைக்குக் கேட்ட போது அந்தக் கிராமவாசி மவுனமாக இருந்ததால் விலைக்கு அவர் ஒப்புக் கொண்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைத்திருக்கிறார்கள். ஆனால் உங்களுக்கு விலைக்கு விற்று விட்டேன் என்று சொல்லாததால் அதை விற்கவில்லை என்று கிராமவாசி நினைத்திருக்கிறார்.

கிராமவாசி இப்படி நினைத்ததால் தான் நீங்கள் நான் சொன்ன விலைக்கு வாங்கிக் கொள்கிறீர்களா? மற்றவருக்கு விற்று விடட்டுமா என்று கேட்கிறார்.

இருவரும் புரிந்து கொள்வதில் பிழை நேர்ந்துள்ளது தான் இதிலிருந்து தெரிகிறது.

எனக்கு விற்கவில்லை என்று நீ சொல்வதால் உன் விருப்பப்படி யாருக்காவது விற்றுக் கொள் என்று சொல்வது தான் நபிகள் நாயகம் கொண்டு வந்த மார்க்கப் படி கூற வேண்டியதாகும்.

ஏனெனில் இந்தப் பேச்சு வார்த்தையின் போது சாட்சிகள் யாரும் இருக்கவில்லை என்ற நிலையில் பொருளைக் கைவசம் வைத்திருப்பவன் சொல்வதைத் தான் ஏற்க வேண்டும்.

கிராமவாசி சாட்சியைக் கொண்டு வா என்று கேட்டவுடன் பேச்சு வார்த்தை நடந்த போது அந்த இடத்தில் இருந்திராத குசைமா பொய்யாக சாட்சி கூறுகிறார். நீங்கள் பொய் சொல்ல மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் இப்படிக் கூறினேன் என்று அவர் காரணம் கூறுகிறார்.

இவர் கூறும் காரணம் ஏற்கத்தக்கதல்ல. கிராமவாசியின் சொல்லை ஏற்பதால் நபிகள் நாயகம் பொய் சொல்லி விட்டார்கள் என்று ஆகாது. யாரோ ஒருவர் தவறாகப் புரிந்து கொண்டார்கள் என்பது தான் இதன் விளைவாகும்.

இதற்காக குஸைமா பொய் சொல்லத் தேவை இல்லை. இது தலை போகிற காரியமும் அல்ல. ஒரு ஏழைக்கும் நாட்டின் அதிபருக்கும் உள்ள கொடுக்கல் வாங்கல் பிரச்சனை. அப்படி குஸைமா பொய் சாட்சி சொல்லி இருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டித்து இருப்பார்கள்.

அதுதான் அவர்களின் இயற்கை குணமாகும்.

என் மகள் திருடினாலும் கையை வெட்டுவேன் என்றும், வலியவனுக்கு ஒரு நீதி எளியவனுக்கு ஒரு நீதி என்ற கெட்ட கொள்கையால் தான் முந்தைய சமுதாயம் அழிந்தது என்று சொன்னவர்கள் அவர்கள்.

(பார்க்க புகாரி 3475)

நபிகள் நாயகத்துக்குப் பதிலாக இனொருவர் சம்மந்தப்பட்ட வழக்காக இது இருந்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்ன தீர்ப்பு அளிப்பார்களோ அதையே தான் தனக்கும் தீர்ப்பாக அளித்திருப்பார்கள். எனவே நபிகள் நாயகத்தை நேர்மையற்றவராகக் காட்டும் இது கட்டுக்கதை என்பது தெளிவாகிறது.

சாட்சியம் குறித்து அல்லாஹ் கூறும் எச்சரிக்கைகளைப் பாருங்கள்.

நீங்கள் பயணத்தில் இருக்கும் போது எழுத்தர் கிடைக்காவிட்டால் அடைமானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பினால் நம்பப்பட்டவர் தனது நாணயத்தை நிறைவேற்றட்டும். தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்! சாட்சியத்தை மறைத்து விடாதீர்கள்! அதை மறைப்பவரின் உள்ளம் குற்றம் புரிந்தது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 2:283

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள்! (வாதியோ, பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோஇச்சையைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:135

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 5:8

இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்தார்களே தவிர கள்ளத் தனத்தைக் கற்றுக் கொடுக்க அவர்கள் அனுப்பப்படவில்லை.

கிராமவாசி சொன்னதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவறாகப் புரிந்திருந்தால் அந்தக் கிராமவாசியின் ஒட்டகத்தைக் குறைந்த விலைக்கு வாங்கி அநீதியிழைத்த குற்றம் சேராதா? அதற்கு துணை போன குற்றம் வராதா?

صحيح البخاري
5976 - حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا خَالِدٌ الوَاسِطِيُّ، عَنِ الجُرَيْرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلاَ أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الكَبَائِرِ» قُلْنَا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: " الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الوَالِدَيْنِ، وَكَانَ مُتَّكِئًا فَجَلَسَ فَقَالَ: أَلاَ وَقَوْلُ الزُّورِ، وَشَهَادَةُ الزُّورِ، أَلاَ وَقَوْلُ الزُّورِ، وَشَهَادَةُ الزُّورِ " فَمَا زَالَ يَقُولُهَا، حَتَّى قُلْتُ: لاَ يَسْكُتُ

(ஒரு முறை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், ஆம், அல்லாஹ்வின் தூதரே! (அறிவியுங்கள்) என்று கூறினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும் என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம் தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம் தான்) என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா? என்று நினைத்தேன்.

அறிவிப்பவர் : அபூபக்ரா (ரலி)

நூல் : புகாரி 5976

صحيح البخاري
5977 - حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الوَلِيدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: ذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الكَبَائِرَ، أَوْ سُئِلَ عَنِ الكَبَائِرِ فَقَالَ: " الشِّرْكُ بِاللَّهِ، وَقَتْلُ النَّفْسِ، وَعُقُوقُ الوَالِدَيْنِ، فَقَالَ: أَلاَ أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الكَبَائِرِ؟ قَالَ: قَوْلُ الزُّورِ، أَوْ قَالَ: شَهَادَةُ الزُّورِ " قَالَ شُعْبَةُ: وَأَكْثَرُ ظَنِّي أَنَّهُ قَالَ: «شَهَادَةُ الزُّورِ»

நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் பெரும்பாவங்கள் தொடர்பாகக் குறிப்பிட்டார்கள்’ அல்லது அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது’. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, கொலை செய்வது, பெற்றோரைப் புண்படுத்துவது ஆகியன (பெரும்பாவங்களாகும்) என்று கூறிவிட்டு, பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள். பொய் பேசுவது’ அல்லது பொய் சாட்சியம்’ (மிகப் பெரும் பாவமாகும்) என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் :அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : புகாரி 5977

பொய் சாட்சியை மிகப் பெரும் பாவம் என அறிவித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனக்காக பொய் சாட்சி சொல்வதை எப்படி அங்கீகரித்து இருப்பார்கள்?

இதில் இன்னொரு அநியாயமும் அடங்கியுள்ளது.

பொதுவாக கொடுக்கல் வாங்கலுக்கு இரு சாட்சிகள் அவசியம். 2:282 வசனத்தில் இதைக் காணலாம்.

நபிகள் நாயகத்துக்காக ஒருவர் சாட்சி சொல்கிறார். அதுவும் அவர் காணாததைக் கண்டதாகச் சொன்ன பொய்யான சாட்சி. இப்போது இன்னொரு சாட்சி தேவை.

இதற்கு நபிகள் நாயகம் சொன்ன தீர்வாக என்ன சொல்லப்பட்டுள்ளது?

இந்த ஒருவரின் சாட்சி இருவரின் சாட்சியாக எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறி கிராமவாசிக்கு அநீதி இழைக்கப்படுகிறது.

எல்லோருக்கும் இரு சாட்சிகள், நபிகளுக்கு மட்டும் ஒரு சாட்சியே இரு சாட்சிகளுக்குச் சமம் என்பதைச் சொல்லத் தான் நபியவர்கள் வந்தார்களா?

அதுவும் குஸைமா பொய் சாட்சி சொன்ன இந்தச் சம்பவம் உண்மை என்றால் இவரது சாட்சி இனி ஏற்கப்படக் கூடாது என்று தான் நபியவர்கள் கூறுவார்கள். பொய் சொன்னவர் என்று தெரிந்தும் தனது சொந்த ஆதாயத்துக்காக இரு சாட்சிக்குச் சமம் என்று கிரீடம் சூட்டுவார்களா? என்ன?

இது இஸ்லாத்தின் நீதிநெறியைக் கேவலப்படுத்தும் சதிகாரர்கள் இட்டுக்கட்டிய பச்சைப் பொய் என்பதில் கடுகளவும் சந்தேகம் இல்லை.

இனி சூனியத்தை விட்டு விட்டு இதைப் பிடித்துக் கொண்டு சலபுக் கூட்டம் சில நாட்கள் வண்டியை ஓட்டும். அல்லாஹ்வின் தூதரின் கன்னியத்தை விட அறிவிப்பாளர் கன்னியம் இவர்களுக்கு முக்கியமாகப் படும்.

நானே பல ஆண்டுகளுக்கு முன் இதை ஆதாரமாகக் காட்டி பேசியுள்ளேன். அதை எடுத்துப் போட்டு இது எனது பிரச்சனை போல் காட்டப்படும்.

26.09.2014. 4:04 AM

More Articles …