Sidebar

05
Wed, Aug

அபூபக்ர் (ரலி) யுடன் பாத்திமா (ரலி) க்கு சண்டை என்பது உண்மையா?

அபூபக்ர் (ரலி) அவர்களுடன் பாத்திமா (ரலி) சண்டை போட்டதாகவும், தன்னுடைய ஜனாஸாவில் அபூபக்ர் (ரலி) கலந்து கொள்ளக் கூடாது என்று பாத்திமா (ரலி) கூறியதாகவும் சொல்லப்படுவது உண்மையா?

ஜாகிர் ஹுஸைன் ஜித்தா

பதில்

ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கும், அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையில் ஃபாத்திமா (ரலி) அவர்கள் தான் மரணிக்கும் வரை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் பேசவேயில்லை என்பது ஆதாரப்பூர்வமான செய்தி தான்.

ஆனால் அபூபக்ர் (ரலி) தன்னுடைய ஜனாஸாவில் கலந்து கொள்ளக் கூடாது என ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறியதாக எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது தனி நிதியாக) விட்டுச் சென்ற கைபர், ஃபதக் ஆகிய பகுதிகளின் சொத்துக்களிலிருந்தும், மதீனாவில் இருந்த, அவர்கள் தருமமாக விட்டுச் சென்ற சொத்திலிருந்தும் தமக்குப் பங்கு தரும்படி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா கேட்டுக் கொண்டிருந்தார். ஃபாத்திமாவுக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தருமம் செய்யப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்று பதிலளித்தார்கள். இதனால் ஃபாத்திமா கோபமுற்று அபூபக்ர் (ரலி) அவர்களுடன் பேசுவதை விட்டு விட்டார்கள். அவர்கள் மரணிக்கும் வரை அபூபக்ர் (ரலி) அவர்களுடன் பேசாமலேயே இருந்து விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஆறு மாதங்களே ஃபாத்திமா வாழ்ந்தார்கள்.

நூல் புகாரி 3093

ஆயினும் ஃபாதிமா ரலி மரணித்த செய்தியை அலி ரலி அன்றைய கலீபாவான அபூபக்ர் ரலி அவர்களுக்கு தெரிவிக்காமல் தானே தொழுகை நடத்தி அடக்கம் செய்து விட்டார். நபிகளின் சொத்தில் வார்சிகளுக்கு உரிமை உண்டு என்று ஃபாதிமா ரலி,ஆலி (ரலி) ஆகியோர் கேட்டபோது அபூபக்ர் (ரலி) மறுத்து விட்டார்கள். நபியின் சொத்துக்கு யாரும் வாரிசாக முடியாது என்பதே இதற்குக் காரணம்.

பின்வரும் ஹதீஸ்களில் இதை நீங்கள் அறியலாம்

صحيح البخاري 
4240 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ عَلَيْهَا السَّلاَمُ، بِنْتَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْسَلَتْ إِلَى أَبِي بَكْرٍ تَسْأَلُهُ مِيرَاثَهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِمَّا أَفَاءَ اللَّهُ عَلَيْهِ بِالْمَدِينَةِ، وَفَدَكٍ وَمَا بَقِيَ مِنْ خُمُسِ خَيْبَرَ فَقَالَ أَبُو بَكْرٍ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ نُورَثُ، مَا تَرَكْنَا صَدَقَةٌ، إِنَّمَا يَأْكُلُ آلُ مُحَمَّدٍ - صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي هَذَا المَالِ»، وَإِنِّي وَاللَّهِ لاَ أُغَيِّرُ شَيْئًا مِنْ صَدَقَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ حَالِهَا الَّتِي كَانَ عَلَيْهَا فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَأَعْمَلَنَّ فِيهَا بِمَا عَمِلَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَأَبَى أَبُو بَكْرٍ أَنْ يَدْفَعَ إِلَى فَاطِمَةَ مِنْهَا شَيْئًا، فَوَجَدَتْ فَاطِمَةُ عَلَى أَبِي بَكْرٍ فِي ذَلِكَ، فَهَجَرَتْهُ فَلَمْ تُكَلِّمْهُ حَتَّى تُوُفِّيَتْ، وَعَاشَتْ بَعْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سِتَّةَ أَشْهُرٍ، فَلَمَّا تُوُفِّيَتْ دَفَنَهَا زَوْجُهَا عَلِيٌّ لَيْلًا، وَلَمْ يُؤْذِنْ بِهَا أَبَا بَكْرٍ وَصَلَّى عَلَيْهَا، وَكَانَ لِعَلِيٍّ مِنَ النَّاسِ وَجْهٌ حَيَاةَ فَاطِمَةَ، فَلَمَّا تُوُفِّيَتِ اسْتَنْكَرَ عَلِيٌّ وُجُوهَ النَّاسِ، فَالْتَمَسَ مُصَالَحَةَ أَبِي بَكْرٍ وَمُبَايَعَتَهُ، وَلَمْ يَكُنْ يُبَايِعُ تِلْكَ الأَشْهُرَ، فَأَرْسَلَ إِلَى أَبِي بَكْرٍ: أَنِ ائْتِنَا وَلاَ يَأْتِنَا أَحَدٌ مَعَكَ، كَرَاهِيَةً لِمَحْضَرِ عُمَرَ، فَقَالَ عُمَرُ: لاَ وَاللَّهِ لاَ تَدْخُلُ عَلَيْهِمْ وَحْدَكَ، فَقَالَ أَبُو بَكْرٍ: وَمَا عَسَيْتَهُمْ أَنْ يَفْعَلُوا بِي، وَاللَّهِ لآتِيَنَّهُمْ، فَدَخَلَ عَلَيْهِمْ أَبُو بَكْرٍ، فَتَشَهَّدَ عَلِيٌّ، فَقَالَ: إِنَّا قَدْ عَرَفْنَا فَضْلَكَ وَمَا أَعْطَاكَ اللَّهُ [ص:140]، وَلَمْ نَنْفَسْ عَلَيْكَ خَيْرًا سَاقَهُ اللَّهُ إِلَيْكَ، وَلَكِنَّكَ اسْتَبْدَدْتَ عَلَيْنَا بِالأَمْرِ، وَكُنَّا نَرَى لِقَرَابَتِنَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَصِيبًا، حَتَّى فَاضَتْ عَيْنَا أَبِي بَكْرٍ، فَلَمَّا تَكَلَّمَ أَبُو بَكْرٍ قَالَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَرَابَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَبُّ إِلَيَّ أَنْ أَصِلَ مِنْ قَرَابَتِي، وَأَمَّا الَّذِي شَجَرَ بَيْنِي وَبَيْنَكُمْ مِنْ هَذِهِ الأَمْوَالِ، فَلَمْ آلُ فِيهَا عَنِ الخَيْرِ، وَلَمْ أَتْرُكْ أَمْرًا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُهُ فِيهَا إِلَّا صَنَعْتُهُ، فَقَالَ عَلِيٌّ لِأَبِي بَكْرٍ: مَوْعِدُكَ العَشِيَّةَ لِلْبَيْعَةِ، فَلَمَّا صَلَّى أَبُو بَكْرٍ الظُّهْرَ رَقِيَ عَلَى المِنْبَرِ، فَتَشَهَّدَ، وَذَكَرَ شَأْنَ عَلِيٍّ وَتَخَلُّفَهُ عَنِ البَيْعَةِ، وَعُذْرَهُ بِالَّذِي اعْتَذَرَ إِلَيْهِ، ثُمَّ اسْتَغْفَرَ وَتَشَهَّدَ عَلِيٌّ، فَعَظَّمَ حَقَّ أَبِي بَكْرٍ، وَحَدَّثَ: أَنَّهُ لَمْ يَحْمِلْهُ عَلَى الَّذِي صَنَعَ نَفَاسَةً عَلَى أَبِي بَكْرٍ، وَلاَ إِنْكَارًا لِلَّذِي فَضَّلَهُ اللَّهُ بِهِ، وَلَكِنَّا نَرَى لَنَا فِي هَذَا الأَمْرِ نَصِيبًا، فَاسْتَبَدَّ عَلَيْنَا، فَوَجَدْنَا فِي أَنْفُسِنَا، فَسُرَّ بِذَلِكَ المُسْلِمُونَ، وَقَالُوا: أَصَبْتَ، وَكَانَ المُسْلِمُونَ إِلَى عَلِيٍّ قَرِيبًا، حِينَ رَاجَعَ الأَمْرَ المَعْرُوفَ

4240 & 4241 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் (நபியவர்களின் மறைவுக்குப் பிறகு, கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்திருந்த மதீனா மற்றும் ஃபதக் சொத்திலிருந்தும், கைபரின் ஐந்தில் ஒரு பகுதி நிதியில் மீதியிருந்ததிலிருந்தும் தமக்குச் சேர வேண்டிய வாரிசுமையைத் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (நபிமார்களான) எங்கள் சொத்துக்களுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டியவை ஆகும். இந்தச் செல்வத்திலிருந்து முஹம்மதின் குடும்பத்தினர் சாப்பிடலாம் (உரிமை கொண்டாட முடியாது) என்று கூறியுள்ளனர். (எனவே,) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தர்மச் சொத்தில் நான் எந்தச் சிறு மாற்றத்தையும் செய்யமாட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் எந்த நிலையில் அந்தச் சொத்துகள் இருந்து வந்தனவோ, அதே நிலையில் அவை நீடிக்கும். அதில் (அந்தச் சொத்துக்களைப் பங்கிடும் விஷயத்தில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செயல்பட்டபடியே நானும் செயல்படுவேன் என்று (ஃபாத்திமா அவர்களுக்கு) பதில் கூறி(யனுப்பி)னார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் அவற்றில் எதையும் ஒப்படைக்க அபூபக்ர் (ரலி) அவர்கள் மறுத்து விட்டார்கள். இதனால் அபூபக்ர் (ரலி) மீது மனவருத்தம் கொண்டு இறக்கும் வரையில் அவர்களுடன் ஃபாத்திமா (ரலி) அவர்கள் பேசவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்த பின், ஆறுமாத காலம் ஃபாத்திமா (ரலி) அவர்கள் உயிர் வாழ்ந்தார்கள். ஃபாத்திமா (ரலி) இறந்த போது, அவர்களின் கணவர் அலீ (ரலி) அவர்கள்,  இரவிலேயே அவர்களை அடக்கம் செய்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு இது குறித்துத் தெரிவிக்கவில்லை. அலீ (ரலி) அவர்களே ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு  தொழுவித்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் வாழ்ந்த வரையில் அலீ (ரலி) அவர்கள் மீது மக்களிடையே (மரியாதையுடன் .கூடிய) தனிக்கவனம் இருந்து வந்தது. ஃபாத்திமா (ரலி) அவர்கள் இறந்து விட்ட பின் மக்களின் முகங்களில் (மரியாதையில்) மாற்றத்தை அலீ (ரலி) அவர்கள் கண்டார்கள். எனவே, (ஆட்சித் தலைவர்) அபூபக்ரிடம் சமரசம் பேசவும் பைஅத்- விசுவாசப் பிரமாணம் செய்து கொள்ளவும் விரும்பினார்கள். அந்த (ஆறு) மாதங்களில் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அலீ (ரலி) அவர்கள் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்திருக்கவில்லை. ஆகவே, தாங்கள் (மட்டும்) என்னிடம் வாருங்கள். தங்களுடன் வேறெவரும் வரவேண்டாம் என்று கூறி அலீ (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பினார்கள். (அபூபக்ர்-ரலி- அவர்களுடன்) உமர் (ரலி) அவர்கள் வருவதை அலீ (ரலி) அவர்கள் விரும்பாததே இதற்குக் காரணமாகும். அப்போது உமர் (ரலி) அவர்கள் (அபூபக்ர் -ரலி- அவர்களிடம்), அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் மட்டும் அவர்களிடம் தனியாகச் செல்லாதீர்கள் (உங்களுக்குரிய கண்ணியத்தை அவர்கள் கொடுக்காமல் இருந்து விடலாம்) என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், என் விஷயத்தில் அவர்கள் அப்படி நடந்து கொள்வார்கள் என்றா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்களிடம் நான் செல்லத்தான் செய்வேன் என்று கூறிவிட்டு, அவர்களிடம் சென்றார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், ஏகத்துவ உறுதிமொழியைக் கூறி இறைவனைத் துதித்தார்கள்- பிறகு, (அபூபக்ர் -ரலி- அவர்களை நோக்கி) தங்கள் சிறப்பையும் தங்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் (ஆட்சித் தலைமைப்) பொறுப்பையும் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கும் இந்த (ஆட்சித் தலைமை எனும்) நன்மையைக் குறித்து நாங்கள் பொறாமைப்படவில்லை ஆயினும், இந்த (ஆட்சிப் பொறுப்பு) விஷயத்தில் தன்னிச்சையாகச் செயல்பட்டு விட்டீர்கள். ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் எங்களுக்குள்ள உறவு முறையின் காரணத்தால் எங்களுக்குப் பங்கு உண்டு என நாங்கள் கருதிவந்தோம் என்று கூறினார்கள். (இது கேட்டு) அபூபக்ர் (ரலி) அவர்களின் கண்கள் (கண்ணீரைச்) சொரிந்தன. அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசத் துவங்கிய போது, என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! என்னுடைய உறவினர்களுடன் உறவைப் பேணி நான் வாழ்வதை விட, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உறவினர்களே எனக்கு மிகவும் உவப்பானவர்கள். இந்தச் செல்வங்கள் தொடர்பாக எனக்கும் உங்களுக்குமிடையில் ஏற்பட்ட (கருத்து வேறுபாட்டின்) விவகாரத்தில் நான் நன்மை எதையும் குறைத்து விடவில்லை. இது விஷயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யக் கண்ட எதையும் நான் செய்யாமல் விட்டு விடவுமில்லை என்று கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அலீ (ரலி) அவர்கள், தங்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுப்பதற்கான நேரம் (இன்று) மாலையாகும் என்று கூறினார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் லுஹ்ருத் தொழுகையை முடித்ததும் மிம்பர் (மேடை) மீதேறி ஏகத்துவ உறுதிமொழி கூறி, இறைவனைப் புகழ்ந்த பிறகு அலீ (ரலி) அவர்கள் குறித்தும், அவர்கள் தமக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுக்கத் தாமதமானது குறித்தும், அதற்கு அலீ (ரலி) அவர்கள் தம்மிடம் கூறிய காரணம் குறித்தும் எடுத்துரைத்தார்கள். பிறகு அலீ (ரலி) அவர்கள் (இறைவனிடம்) பாவமன்னிப்புக் கோரிவிட்டு, ஏகத்துவ உறுதிமொழி கூறிய பின் அபூபக்ர் (ரலி) அவர்களின் தகுதியைக் கண்ணியப்படுத்திப் பேசினார்கள். தொடர்ந்து அவர்கள், தாம் செய்த இக்காரியத்திற்குக் காரணம், அபூபக்ர் (ரலி) அவர்கள் மீது கொண்ட பொறாமையோ அல்லது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய சிறப்பை நிராகரித்ததோ அல்ல; மாறாக, இந்த விஷயத்தில் எங்களுக்கும் பங்கு உண்டு என நாங்கள் கருதியதேயாகும். ஆனால், அபூபக்ர் (ரலி) அவர்கள் தன்னிச்சையாகச் செயல்பட்டு விட்டார்கள். அதனால் எங்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டது என்று கூறினார்கள். இதைக் கேட்டு முஸ்லிம்கள் மகிழ்ச்சியடைந்து (அலீ அவர்களைப் பார்த்து) நீங்கள் சரியாகவே சொன்னீர்கள் என்று கூறினர். தமது போக்கை அலீ (ரலி) அவர்கள் திரும்பவும் இயல்பான நிலைக்குக் கொண்டு வந்து விட்ட போது முஸ்லிம்கள் அலீ(ரலி) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக ஆகிவிட்டனர்.

நூல் புகாரி

19.03.2011. 23:21 PM

அலி (ரலிக்கு) மண்ணின் தந்தை என்ற பெயர் வரக் காரணம் என்ன?

அலீ (ரலி) அவர்களுக்கும் பாத்திமா (ரலி) அவர்களுக்கும் அடிக்கடி பிணக்கு ஏற்பட்டதாகவும் அதனால் அவர்கள் தலையில் மண்ணைப் போட்டுக் கொள்வார்கள் என்றும் அதன் காரணமாகவே மண்ணின் தந்தை அபூதுராப் - என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுவது உண்மையா?

ஜாகிர் ஹுஸைன், ஜித்தா

பதில்

அலீ (ரலி) அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபுத் துராப் - மண்ணின் தந்தை - எனப் பெயர் வைத்தார்கள். இவ்வாறு அவர்கள் பெயர் வைத்ததற்கான காரணத்தைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

441 حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْتَ فَاطِمَةَ فَلَمْ يَجِدْ عَلِيًّا فِي الْبَيْتِ فَقَالَ أَيْنَ ابْنُ عَمِّكِ قَالَتْ كَانَ بَيْنِي وَبَيْنَهُ شَيْءٌ فَغَاضَبَنِي فَخَرَجَ فَلَمْ يَقِلْ عِنْدِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِإِنْسَانٍ انْظُرْ أَيْنَ هُوَ فَجَاءَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هُوَ فِي الْمَسْجِدِ رَاقِدٌ فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُضْطَجِعٌ قَدْ سَقَطَ رِدَاؤُهُ عَنْ شِقِّهِ وَأَصَابَهُ تُرَابٌ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُهُ عَنْهُ وَيَقُولُ قُمْ أَبَا تُرَابٍ قُمْ أَبَا تُرَابٍ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்வி ஃபாத்திமா (ரலி அவர்களின் இல்லத்திற்கு வந்த போது (மருமகனான) அலீ (ரலி) அவர்களை வீட்டில் காணவில்லை. ஆகவே, உன் (தந்தையின்) பெரிய தந்தையின் புதல்வர் எங்கே? என்று கேட்க, அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், எனக்கும், அவருக்கும் இடையே சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டது. ஆகவே அவர் என்னைக் கோபித்துக் கொண்டு என்னிடம் ஏதும் சொல்லாமல் (வீட்டிலிருந்து) சென்று விட்டார் என்று கூறினார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், அவர் எங்கே என்று பாருங்கள் என்றார்கள். உடனே அந்த மனிதர் (சென்றுவிட்டு) வந்து, அவர் பள்ளிவாசலில் உறங்கிக் கொண்டிருக்கிறார், அல்லாஹ்வின் தூதரே! என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிக்குள்) வந்த போது அவருடைய மேலங்கி அவரது முதுகிலிருந்து (தரையில்) விழுந்து விட்டிருக்க அவரது மேனியில் மண் படிந்திருக்கும் நிலையில் அவர் ஒருக்களித்துப் படுத்திருக்கக் கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் மேனியிலிருந்த மண்ணைத் துடைத்தவாறே எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே! எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே!! என்று கூறலானார்கள்.

அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் (ரலி)

நூல் : புகாரி (441)

அலீ (ரலி) அவர்களுக்கும் ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்படும். அப்போது அலீ (ரலி) தன் தலையில் மண்ணை இட்டுக் கொள்வார்கள் என்ற கருத்து தவறானது. மேற்கண்ட சம்பவம் இவ்வாறு கூறவில்லை.

19.03.2011. 23:07 PM

ஹதீஸ்களைத் தொகுத்த இமாம்களின் வரலாறு

இமாம் புகாரீ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை ஆதாரப்பூர்வமான செய்திகளுடன் தொகுத்தவர்களில் முதலிடம் பெற்றவர்.

இயற்பெயர் : முஹம்மத்

தந்தை பெயர் : இஸ்மாயீல்

பிறந்த ஊர் : ரஷ்யாவில் உள்ள புகாரா, இந்த ஊரில் பிறந்ததால் புகாரீ (புகாரா என்ற ஊரைச் சார்ந்தவர்) என்று அழைக்கப்படுகிறார்.

பிறந்த நாள் : ஹிஜ்ரி 194, ஷவ்வால் 13, வெள்ளிக்கிழமை

கல்விக்காக பயணம் செய்த ஊர்கள் : குராஸான், பஸரா, கூஃபா, பக்தாத், மக்கா, மதீனா, சிரியா, மிஸ்ர்

இமாம் புகாரியின் மாணவர்கள் : இமாம் முஸ்லிம், இமாம் திர்மிதீ, இமாம் இப்னு ஹுஸைமா, இமாம் அபுதாவூத் மற்றும் பலர்

தற்போது நடைமுறையில் புகாரீ என்று குறிப்பிடப்படும் ஹதீஸ் நூலுக்கு இமாம் புகாரீ அவர்கள் வைத்த பெயர் : ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் ஹதீஸி ரஸுலில்லாஹி வ ஸுனனிஹி வஅய்யாமிஹி (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை மற்றும் வழிமுறைகள் தொடர்பாக அவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளருடன் வந்துள்ள செய்திகளின் தொகுப்பு)

ஆனால் அந்தப் பெயர் மக்களிடம் சென்றடையவில்லை. புகாரி என்பதே அந்த நூலின் பெயராக ஆகி விட்டது.

இவர் தொகுத்த மற்ற நூல்கள் : அல்அதபுல் முஃப்ரத், அத்தாரிகுல் கபீர், அல்லுஃபவுஸ் ஸகீர் இன்னும் பல நூல்கள் தொகுத்துள்ளார்.

இறப்பு : ஹிஜ்ரீ 256, நோன்புப் பெருநாள் அன்று சனிக்கிழமை

இமாம் முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை ஆதாரப்பூர்வமாக தொகுத்தவர்களில் இரண்டாம் இடத்தை இமாம் முஸ்லிம் பெற்றுள்ளார்.

இயற்பெயர் : முஸ்லிம்

தந்தை பெயர் : ஹஜ்ஜாஜ்

பிறந்த ஊர் : குராஸான் பகுதியில் உள்ள பெரிய பட்டணமான நைஸாபூர்

பிறந்தநாள் : ஹிஜ்ரீ 204 அல்லது ஹிஜ்ரீ 206

கற்றமுறை : இமாம் முஸ்லிம் அவர்கள் பிறந்த ஊர் அதிகமான அறிஞர்களைப் பெற்றிருந்தது. முஸ்லிம் அவர்கள் ஹதீஸ் கலையில் வல்லுனராக ஆவதற்கு ஏற்ற சிறந்த சூழ்நிலை அங்கு காணப்பட்டது. தனது 14 ஆம் வயதிலே இந்த அறிஞர்களிடமிருந்து கற்க ஆரம்பித்தார்கள்.

கல்விக்காக பயணம் செய்த ஊர்கள் : நைசாபூரைச் சுற்றியுள்ள சில ஊர்கள், ரய், இராக்கில் உள்ள கூஃபா, பஸரா, மற்றும் பக்தாத், ஹிஜாஸ், ஷாம், மிஸ்ர்

இவருடைய ஆசிரியர்களில் சிலர் : இமாம் புகாரி, அஹ்மத் பின் ஹம்பல், இஸ்ஹாக் பின் ராஹவைஹி, யஹ்யப்னு மயீன், அபூபக்கர் பின் அபீ ஷய்பா

இவரது மாணவர்களில் சிலர் : முஹம்மத் பின் அப்தில் வஹ்ஹாப், அபூஹாதிம், இமாம் திர்மிதி, இப்னு ஹு ஸைமா, மற்றும் இப்னு அபீ ஹாதம்

இறப்பு : இமாம் முஸ்லிம் அவர்கள் ஹிஜ்ரி 261 ஆம் ஆண்டு ரஜம் மாதம் ஞாயிற்றுக்கிழமையன்று நைசாபூர் என்ற தமது ஊரிலே மரணம் அடைந்தார்கள்.

இமாம் திர்மிதி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களைத் தொகுத்த இமாம்களில் இமாம் திர்மிதியும் ஓருவராவார்.

இயற்பெயர் : முஹம்மத்

குறிப்புப் பெயர் : அபூ ஈஸா

தந்தைபெயர் : ஈஸா

கோத்திரம் : சுலமி கூட்டத்தாரைச் சார்ந்தவர்

பிறந்த ஊர் : ஈரான் நாட்டின் கிழக்கில் அமைந்துள்ள திர்மித் என்னும் ஊரிலே பிறந்தார். இமாம் புகாரி புகாரா என்ற ஊரில் பிறந்த காரணத்தால் அவர்களை புகாரி என அழைப்பதைப் போன்று இமாம் திர்மிதி, திர்மித் என்ற ஊரிலே பிறந்தமையால் திர்மிதி என்று அழைக்கப்படுகிறார்.

பிறப்பு : திர்மிதி இமாம் பிறந்த வருடத்தை வரலாற்று ஆசிரியர்கள் யாரும் அறுதியிட்டுச் சொல்லவில்லை. சிலர் ஹிஜ்ரீ 209 வது ஆண்டு என்று கூறுகின்றனர். இமாம் தஹபீ அவர்கள் ஹிஜ்ரீ 210 வது ஆண்டு என்று கூறியுள்ளார்கள்.

கல்வி : இருபது வயது பூர்த்தியான பின் இமாம் திர்மிதி அவர்கள் கல்வி கற்க ஆரம்பித்தார்கள். தாமதமாகக் கற்க ஆரம்பித்தமையால் பெரும் பெரும் அறிஞர்களிடத்தில் ஹதீஸை நேரடியாகக் கற்கும் வாயப்பு இவருக்குக் கிடைக்கவில்லை. இவர் தொகுத்த ஜாமிஉத்திர்மிதி இவர் மாபெரும் ஹதீஸ்கலை மேதை என்று சான்று பகர்கின்றது.

கல்விக்காகப் பயணித்த ஊர்கள் : ஹுராஸான், பஸரா, கூஃபா, வாசித், ஈராக், பக்தாத், மக்கா, மதீனா.

இவரது ஆசிரியர்கள் : புகாரி, முஸ்லிம், அபூதாவூத், குதைபா, அலீ பின் ஹஜர், அஹ்மத் பின் மனீஃ, தாரமீ, அபூ சுர்ஆ, மற்றும் பலர்.

இவரது படைப்புகள் : ஜாமிஉத்திர்மிதி, இலல், ஷமாயில், அஸ்மாஉ ஸ்ஸஹாபா.

இதைத் தவிர அத்தாரீஹ், அஸ்ஸுஹ்த், அல்அஸ்மாஉ வல்குனா ஆகிய நூற்களைத் தொகுத்துள்ளார். ஆனால் இவை நம் கைக்குக் கிடைக்கவில்லை.

மரணம் : அவர் பிறந்த ஊரான திர்மிதில் ஹிஜ்ரீ 279 ஆம் ஆண்டு ரஜப் மாதம் பதிமூன்றாம் நாளான திங்கட்கிழமை மரணித்தார்.

இமாம் அபூதாவூத்

ஹதீஸ்களைத் தொகுத்து மார்க்கத்திற்குப் பெரும் தொண்டாற்றிய அறிஞர்களில் இமாம் அபூதாவூதும் ஒருவர்.

இயற்பெயர் : சுலைமான்

குறிப்புப் பெயர் : அபூதாவூத்

தந்தை பெயர் : அஷ்அஸ்

பிறப்பு : சஜஸ்தான் என்ற ஊரிலே ஹிஜ்ரீ 202வது வருடத்தில் பிறந்தார். ஆகயால் தான் மக்கள் மத்தியில் அபூதாவூத் சஜஸ்தானீ என்று பிரபலமாகியுள்ளார்.

கல்வி : இமாம் அபூதாவூத் வாழ்ந்த காலம் அறிஞர்கள் நிறைந்த காலம். இத்துடன் அவர்கள் சிறுவயதிலேயே பத்திசாலியாகவும் திகழ்ந்தார்கள். இக்காலச் சூழ்நிலை அபூதாவூத் கல்வி கற்க மிக ஏதுவாக இருந்தமையால் சிறு வயதிலேயே ஹதீஸ் துறையில் ஈடுபட ஆரம்பித்தார்கள். ஹதீஸ் துறையில் துரிதமாகச் செயல்பட்டதால் அரும்பெரும் அறிஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு இமாம் அபூதாவூதிற்குக் கிடைத்தது. ஹதீஸ் துறையிலும் மார்க்கச் சட்டத் துறையிலும் பெரும் பங்கு வகித்தார்கள்.

கல்விக்காகப் பயணித்த ஊர்கள் : தன்னுடைய 18 வது வயதிலே கல்விக்காக பல ஊர்களுக்குப் பயணிக்க ஆரம்பித்தார்கள். ஈராக், கூஃபா, பஸரா, ஷாம், ஜஸீரா, ஹிஜாஸ், எகிப்து, ஹுராஸான், சஜஸ்தான், ரய் ஆகிய ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளார்கள்.

இவரது மாணவர்கள் :இமாம் திர்மிதி, நஸயீ, இப்னு அபித்துன்யா, அபூ உவானா, இப்ராஹிம் பின் ஹம்தான் மற்றும் பலர்.

இவரது ஆசிரியர்கள் : இமாம் அஹ்மத், அலீ பின் மதீனி, யஹ்யா பின் மயீன், முஹம்மத் பின் பஷ்ஷார் மற்றும் பலர்.

மரணம் : பஸராவில் எழுபத்து மூன்று வயது நிறைவுற்றவராக ஹிஜ்ரீ 275 ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் பதினாறாம் நாள் வெள்ளிக்கிழமையன்று மரணித்தார்.

இமாம் நஸாயீ

இயற்பெயர் : அஹ்மத்

குறிப்புப் பெயர் : அபூ அப்திர் ரஹ்மான்

தந்தை பெயர் : ஷுஐப்

பிறப்பு : ஹிஜ்ரீ 215 ஆம் ஆண்டில் நஸா என்ற ஊரில் பிறந்தார்கள். இவர் பிறந்த ஊரான நஸா என்பதுடன் இணைத்து நஸாயீ என்று இவர் மக்களால் அழைக்கப்படுகிறார்.

கல்வி : ஹிஜ்ரி 230ஆம் ஆண்டு பதினைந்தாவது வயதை அடைந்த போதே குதைபா பின் சயீத் அவர்களிடம் பயிலுவதற்காக பயணம் செய்ய ஆரம்பித்தார்கள். அவரிடம் 14 மாதங்கள் தங்கினார்கள். இவர் எழுதிய அல்அஹாதீசுல் லிஆஃப் (பலகீனமான ஹதீஸ்கள்) என்ற புத்தகம் ஹதீஸ் துறையில் இவர் பெற்றிருந்த பாண்டித்துவத்தைக் காட்டுகிறது.

இது மட்டுமின்றி மார்க்கச் சட்ட வல்லுனராகவும் திகழ்ந்துள்ளார்கள். இவர் காலத்தில் வாழ்ந்த அறிஞர்களை விட இமாம் நஸாயீ அவர்களே மார்க்கச் சட்டத்தை அதிகம் அறிந்தவராக இருந்தார் என இமாம் தாரகுத்னீ அவர்கள் கூறியுள்ளார். எகிப்து நாட்டிலும் ஹிமஸ் நாட்டிலும் மார்க்கத் தீர்ப்பு வழங்கும் பொறுப்பை ஏற்றார்கள்.

கல்விக்காகப் பயணித்த ஊர்கள் : ஹுராஸான், ஈராக், ஜஸீரா, ஷாம், ஸஹுர், ஹிஜாஸ், எகிப்து

மாணவர்கள்: இப்னு ஹிப்பான், உகைலீ, இப்னு அதீ, அத்தவ்லாபீ, அத்தஹாவீ, அபூஉவானா, அத்தப்ரானி, இப்னு சின்னீ போன்ற பெரும் பெரும் அறிஞர்கள் இமாம் நஸயீ அவர்களிடம் மாணவர்களாகப் பயின்றுள்ளார்கள். இவர்களன்றி இன்னும் பலரும் உள்ளனர்.

ஆசிரியர்கள் : குதைபா, இஸ்ஹாக பின் ராஹவைஹி, அஹ்மத் பின் மனீஃ, அலீ பின் ஹஜர், அபூதாவூத், திர்மிதி, அபூஹாதம், அபூசுர்ஆ, முஹம்மத் பின் யஹ்யா, முஹம்மத் பின் பஷ்ஷார் ஆகியோர். இவர்களில் பெரும்பாலோர் இமாம் புகாரி மற்றும் முஸ்லிமின் ஆசிரியர்கள்.

படைப்புகள்: அஸ்ஸுனனுஸ் சுஹ்ரா, அஸ்ஸுனனுல் குப்ரா, அல்குனா, அமலுல் யவ்மி வல்லய்லா, அத்தஃப்சீர், அல்லுஅஃபாஉ வல் மத்ரூகீன், தஸ்மியது ஃபுகஹாயில் அம்ஸார், இஷ்ரதுன்னிஸா ஆகியவை.

மரணம் : இமாம் நஸயீ பாலஸ்தீனத்தில் இறந்தார் என சில அறிஞர்கள் கூறுகின்றனர். தாரகுத்னீ போன்ற சில அறிஞர்கள் மக்காவில் இறந்ததாகக் கூறுகின்றனர். ஹிஜ்ரீ 303வது வருடம் ஸஃபர் மாதம் 13 ஆம் நாள் திங்கட்கிழமை மரணித்தார்.

இமாம் இப்னுமாஜா

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளைத் தொகுத்து இம்மார்க்கத்திற்கு தொண்டாற்றிய இமாம்களில் இமாம் இப்னுமாஜா ஒருவராவார்.

இயற்பெயர் : முஹம்மத் பின் யஸீத்

குறிப்புப் பெயர் : அபூ அப்தில்லாஹ்

தந்தை பெயர் : யஸீத்.

இவரது பிரபலமான பெயர் : இப்னு மாஜா

கோத்திரம் : ரபயீ கோத்திரத்தைச் சார்ந்தவர்.

பிறப்பு : ஹிஜ்ரீ 209 ஆம் ஆண்டு.

வளர்ந்த இடம் : கஸ்வீன் என்ற ஊர்

கல்வி : இப்னு மாஜா அவர்கள் கஸ்வீன் என்ற தன்னுடைய ஊரில் ஏறத்தாழ 20ஆவது வயதில் கல்வி கற்க ஆரம்பித்தார்கள். இவர்கள் தொகுத்த இப்னு மாஜா என்ற ஹதீஸ் புத்தகம் ஹதீஸ் கலையில் இவர்கள் பெற்றிருந்த பாண்டித்துவத்தை எடுத்துரைக்கிறது. அறிவிப்பாளர்களின் வரலாறுகள் தொடர்பாக இவர் எழுதிய அத்தாரீஹ் என்ற நூலும் இவரது அந்தஸ்தை உயர்த்துகிறது. மேலும் இவர் குர்ஆனிற்கு விளக்கம் அளிப்பதிலும் மார்க்கச் சட்டங்களிலும் தலை சிறந்த அறிஞராகத் திகழ்ந்தார் என இமாம்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

கல்விக்காகப் பயணித்த ஊர்கள் : குராசான், ஈராக், ஹிஜாஸ், மிஸ்ர், ஷாம் மற்றும் பல ஊர்கள்.

இவரது ஆசிரியர்கள் : அப்துல்லாஹ் பின் அபீஷைபா, அலீ பின் முஹம்மத், முஸ்அப் பின் அப்தில்லாஹ் உஸ்மான் பின் அபீஷைபா, மற்றும் பலர்.

இவரது மாணவர்கள் : அலீ பின் இப்ராஹீம் அல்கத்தான், சுலைமான் பின் யஸீத், முஹம்மது பின் ஈஸா மற்றும் அபூபக்கர் ஹாமித்.

இறப்பு : ஹிஜ்ரீ 273 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் திங்கட்கிழமை அன்று மரணித்து புதன் கிழமை அடக்கம் செய்யப்பட்டார்.

இமாம் அஹ்மத்

இயற்பெயர் : அஹ்மத்

குறிப்புப்பெயர் : அபூ அப்தில்லாஹ்

குலம் : இவரது தாயும் தந்தையும் அரபு குலத்தைச் சார்ந்தவர்கள்.

பிறப்பு : இமாம் அஹ்மத் அவர்கள் பக்தாதில் ஹிஜ்ரீ 164 வது வருடம் ரபீவுல் அவ்வல் மாதத்தில் பிறந்தார்கள்.

கல்வி : இவர் ஹிஜ்ரீ 179 ஆம் வருடம் கல்வி கற்க ஆரம்பித்தார். அப்போது இவருக்கு பதினான்கு வயதாக இருந்தது. குர்ஆனை மனனம் செய்து எழுதப்படிக்க கற்றுக் கொண்ட பின் இமாம் அஹ்மத் அவர்கள் பக்தாதில் உள்ள ஆசிரியர்களிடமிருந்து ஹதீஸ்கலை தொடர்பான விஷயங்களைக் கற்றார்.

இவர் முதன் முதலாக அபூஹனீஃபா இமாமின் மாணவரான அபூயூசுஃப் அவர்களிடமிருந்து ஹதீஸ்களைக் கற்றார். இவர் காலத்தில் இருந்த பல கல்வித் துறைகளில் சிறந்து விளங்கினார். குறிப்பாக இவர் எழுதிய முஸ்னத் அஹ்மதும் அறிவிப்பாளர்களைப் பற்றி நல்லவரா கெட்டவரா என்று பிரித்தறிவதற்கு இவர் எழதிய நூலும் இவர் ஹதீஸ் கலையில் மாபெரும் மேதையாகத் திகழ்ந்துள்ளார் என்பதைக் காட்டுகிறது. ஹதீஸ்களில் எளிதில் கண்டுபிடிக்க இயலாத குறைகளுக்கு இல்லத் என்று சொல்வார்கள். இக்குறைகளை ஆராய்ந்து இது தொடர்பாக விளக்கியுள்ளார்.

கல்விக்காகப் பயனித்த ஊர்கள் : இவர் பஸரா, கூஃபா, மக்கா, யமன், தர்சூஸ், ரிகா, அபாதான், எகிப்து, ரய் ஆகிய ஊர்களுக்குச் சென்றுள்ளார்.

இவரது ஆசிரியர்கள் : இமாம் ஷாஃபி, அபூயூசுஃப் சுஃப்யான் பின் உயைய்னா, அப்துர்ரஸ்ஸாக், வகீஃ, இப்ராஹிம் பின் சஃத், ஹுஷைம் பின் பஷீர், யஹ்யா பின் சயீத், இப்னு நுமைர், யசீத் பின் ஹாரூன், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ மற்றும் பலர் இவருக்கு ஆசிரியராக இருந்தார்கள்.

இவரது மாணவர்கள் : இமாம் ஷாஃபி, யஹ்யா, அப்துர்ரஸ்ஸாக், அப்துர்ரஹ்மான், மஹ்தீ, வகீஃ, போன்ற இவருடைய ஆசிரியர்கள் கூட இவரிடமிருந்து பல ஹதீஸ்களைத் தெரிந்து கொண்டு இவருக்கு மாணவராக இருந்துள்ளார்கள். இன்னும் பிரபலமான புத்தகங்களின் ஆசிரியரான இமாம் புகாரி, இமாம் முஸ்லிம், இமாம் திர்மிதி, இமாம் இப்னுமாஜா, இமாம் அபூதாவூத், இமாம் நஸாயீ, ஆகியோர் இவரிடம் பயின்ற மாணவர்கள். இன்னும் அலீ பின் அல்மதீனீ, யஹ்யா பின் மயீன், அஹ்மத் பின் சாலிஹ் போன்றோரும் இவரிடம் பயின்ற மாணவர்கள்.

படைப்புகள் : இவர் எழுதிய முஸ்னத் அஹ்மத் என்ற புத்தகம் முப்பதாயிரத்திற்கும் அதிகமான ஹதீஸ்களை உள்ளடக்கியுள்ளது. இன்னும் அல்இலல், அன்னாஸிக் வல்மன்சூக், அஸ்ஸுஹ்த், அல்அஷ்ரிபத், அல்ஃபளாயில், அல்ஃபராயில், அல்மனாசிக், தாஅதுர்ரசூல், அல்முகத்தமு வல்முஅஹ்ஹர், ஜவாபாத்துல் குர்ஆன், ஹதீஸு சுஃபா, நஃப்யுத்தஷ்பீஹ், அல்இமாமா, கிதாபுல் ஃபிதன், கிதாபு ஃபளாயிலி அஹ்லில் பைத், முஸ்னது அஹ்லில் பைத், அல்அஸ்மாஉ வல் குனா, கிதாபுத்தாரீஹ் ஆகிய புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.

மரணம் : இவர் ஹிஜ்ரீ 241 ஆம் வருடம் ரபீவுல் அவ்வல் மாதத்தில் நோய்வாய்ப்பட்டார். பக்தாதில் இதே வருடம் வெள்ளிக்கிழமையன்று மரணித்தார்.

இமாம் மாலிக்

இயற்பெயர் : மாலிக்

குறிப்புப் பெயர் : அபூஅப்தில்லாஹ்

தந்தை பெயர் : அனஸ் பின் மாலிக்

குலம் : இவர் அல்அஸ்பஹீ என்ற குலத்தைச் சார்ந்தவர். இவர் மதீனாவில் வாழ்ந்ததால் அல்மதனீ என்றும் இவருக்கு சொல்லப்படுகிறது.

பிறப்பு : ஹிஜ்ரீ 93 ஆம் ஆண்டு மதீனாவில் பிறந்தார்.

வளர்ப்பு: சவ்ன், ரிஃபாஹியா ஆகிய ஊர்களில் வளர்ந்தார்.

கல்வி : பத்து வயதை அடைந்திருக்கும் போதே கல்வி கற்க ஆரம்பித்தார். ஹிஜாஸ்வாசிகளில் உள்ள அறிஞர்களில் மாபெரும் அறிஞராகத் திகழ்ந்தார். ஹதீஸ் துறையில் முத்திரை பதித்தவர்களில் இவரும் ஒருவர். சட்டத் துறையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

கல்விக்காகப் பயனித்த ஊர்கள் : இமாம் மாலிக் அவர்கள் அதிகமான விஷயங்களை அறிந்திருந்தமையால் பல ஊர்களுக்குப் பயனம் செய்ய வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படவில்லை. தன்னிடத்தில் உள்ள ஞானமே போதும் என்று கருதினார். பல ஊர்களுக்குச் சென்று இவர் பயிலாவிட்டாலும் மார்க்கச் சட்டங்களைக் கூறுவதில் தலைமைத்துவத்தைப் பெற்றார். இவர் 21 வது வயதை அடைந்த போதே பிறருக்கு தான் படித்ததைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.

இவரது ஆசிரியர்கள் : தாஃபியீன்களில் ஒரு பெரும் கூட்டம் இவருக்கு ஆசிரியராக இருந்தது. நாஃபிஃ, ஹிஷாம் பின் உர்வா, யஹ்யா பின் சயீத், அப்துல்லாஹ் பின் தீனார், சைத் பின் அஸ்லம், முஹம்மத் பின் முஸ்லிம், அப்துல்லாஹ் பின் அபீபக்கர், சயீத் பின் அபீ சயீத் ஆகியோர் இவருடைய ஆசிரியர்கள்.

மாணவர்கள் : முஹம்மத் பின் முஸ்லிம், யஹ்யா பின் சயீத், நாஃபிஃ பின் மாலிக் ஆகிய இவருடைய ஆசிரியர்கள் கூட இவரிடமிருந்து கற்றுள்ளார்கள். இன்னும் இமாம் அபூஹனீஃபா, சுஃப்யான் சவ்ரீ, அல்லைஸ் பின் சஃத், ஷுஃபா, அப்துல் மலிக், மஃமர் பின் ராஷித், யஹ்யா பின் சயீத், இப்னுல் முபாரக், வகீஃ மற்றும் இமாம் ஷாஃபீ ஆகியோர் இவருடைய மாணவர்கள்.

படைப்புகள் : புகாரி மற்றும் முஸ்லிம் தொகுக்கப்படுவதற்கு முன்பு இவர் எழுதிய அல்முவத்தா என்ற ஹதீஸ்களின் தொகுப்பு நூல் மக்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது. பல அறிஞர்கள் இந்த நூலையே சார்ந்திருந்தார்கள். ரிஸாலத்துன் ஃபில் கத்ர், ரிசாலத்துன் ஃபின்னஜ்ம், ரிசாலத்துன் ஃபில் அக்ளியா, ரிசாலத்துன் இலா அபீ ஹஸ்ஸான், ரிசாலத்துன் இலல்லைஸ், ஜுஸ்உன் ஃபித் தஃப்சீர், கிதாபுஸ் ஸிர், ரிஸாலத்துன் இலர் ரஷீத் ஆகியவற்றைத் தொகுத்துள்ளார்.

மரணம்: இவர் ஹிஜ்ரீ 179 ஆம் வருடம் ரபீவுல் அவ்வல் மாதம் ஞாயிற்றுக் கிழமையன்று மரணித்தார். மரணிக்கும் போது இவருடைய வயது என்பத்து ஆறாகும்.

இமாம் தாரமீ

இயற்பெயர் : அப்துல்லாஹ்

குறிப்புப்பெயர் : அபூமுஹம்மத்

குலம் : இவர் தமீமீ அல்லது தாரமீ என்ற கூட்டத்தைச் சார்ந்தவர். இவர் சமர்கன்த் என்ற ஊரில் தங்கிய காரணத்தினால் சமர்கன்தீ என்றும் இவர் கூறப்படுகிறார்.

தந்தைப் பெயர் : அப்துர் ரஹ்மான்

பிறப்பு : இவர் ஹிஜ்ரீ 181 ஆம் ஆண்டு சமர்கன்த் என்ற ஊரில் பிறந்தார்.

கல்வி : இமாம் தாரமீ அவர்கள் நன்கு புத்திக் கூர்மையுள்ளவராக இருந்தார். பல ஆசிரியர்களைச் சந்தித்து கற்றார். இவர் எப்பொழுது கல்வி கற்க ஆரம்பித்தார் என்பது நமக்கு சரியாக தகவல்கள் மூலம் கிடைக்கவில்லை. இவர் பெரியவர் சிறியவர் என்ற வித்தியாசம் பார்க்காமல் தன்னை விட வயதில் கீழ் உள்ளவர்களிடமிருந்தும் கற்றுள்ளார். இவர் தொகுத்துள்ள சுனனுத் தாரமீ என்ற ஹதீஸ் தொகுப்பு நூல் இவரை ஹதீஸ் வல்லுனராக காட்டுக்கிறது. அறிவிப்பாளர்களைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தார். பல அறிஞர்கள் இவரை சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.

கல்விக்காகப் பயனித்த ஊர்கள் : ஹுராசான், ஈராக், கூஃபா, பஸரா, ஷாம், பக்தாத், வாசித், திமஷ்க், ஹிமஸ், ஜசீரா, சஃர், ஹிஜாஸ் ஆகிய ஊர்களுக்குச் சென்றுள்ளார்.

ஆசிரியர்கள் : யசீத் பின் ஹாரூன், யஃலா பின் உபைத், ஜஃபர் பின் அவ்ன், பிஷ்ர் பின் உமர், முஹம்மத் பின் பிக்ர், வஹப் பின் ஜரீர், அன்னள்ர் பின் ஷுமைர், உஸ்மான் பின் உமர், சயீத் பின் ஆமிர் மற்றும் பலர் இவருக்கு ஆசிரியராக இருந்துள்ளார்கள்.

மாணவர்கள் : இமாம் முஸ்லிம், இமாம் அபூதாவூத், இமாம் திர்மிதி, அப்து பின் ஹ மைத், அல்ஹசன் பின் சப்பாஹ், முஹம்மத் பின் பஷ்ஷார், முஹம்மத் பின் யஹ்யா இன்னும் பலர் இவருடைய மாணவராக உள்ளார்கள்.

தொகுப்புகள் : சுனனுத் தாரமீ என்ற சிறந்த ஹதீஸ் தொகுப்பு நூலை இமாம் தாரமீ அவர்கள் தொகுத்துள்ளார்கள். இன்னும் அல்ஜாமிஃ, அத்தஃப்சீர் என்ற நூலையும் தொகுத்துள்ளார். எனினும் இவை காணாமல் போய்விட்டன.

மரணம் : இமாம் தாரமீ அவர்கள் ஹிஜ்ரீ 255 ஆம் ஆண்டு இறந்தார்கள். அப்போது இவருடைய வயது 75 ஆக இருந்தது. வெள்ளிக்கிழமையன்று அடக்கம் செய்யப்பட்டார்.

இப்னு ஹுசைமா

இயற்பெயர் முஹம்மத் பின் இஸ்ஹாக்

குறிப்புப் பெயர் அபூபக்கர்

தந்தை பெயர் இஸ்ஹாக் பின் ஹுசைமா

குலம் சுலமி கோத்திரத்தைச் சார்ந்தவர்.

பிறப்பு ஹிஜ்ரீ இருநூற்று இருபத்து மூன்றாம் ஆண்டு நைசாபூர் என்ற ஊரில் பிறந்தார்.

ஆசிரியர்கள் இமாம் புகாரி, இமாம் முஸ்லிம், முஹம்மத் பின் முஸன்னா, முஹம்மத் பின் பஷ்ஷார் மற்றும் பலர்.

படைப்புகள் :கிதாபுத் தவ்ஹீத் (ஏகத்துவத்தைப் பற்றிய புத்தகம்) ஷஃனுத் துஆ வ தப்சீரு மற்றும் சஹீஹு இப்னி ஹஸைமா ஆகிய மூன்று புத்தகங்கள்.

மரணம் : ஹிஜ்ரீ 311 வது வருடம் துல்கஃதா மாதத்தில் சனிக்கிழமை இரவு அன்று இவர் மரணித்தார்.

இப்னு ஹிப்பான்

இயற்பெயர் : முஹம்மத் பின் ஹிப்பான்

குறிப்புப்பெயர் : அபூஹாதிம்

தந்தையின் பெயர் : ஹிப்பான்

குலம் : பனூ தமீம் குலத்தைச் சார்ந்தவர்

பிறப்பு : ஆப்கானிஸ்தானில் உள்ள புஸ்த் என்ற ஊரில் ஏறத்தாழ ஹிஜ்ரீ 280 ல் பிறந்தார்.

கல்வி : ஹிஜ்ரீ 300 ல் கல்வி கற்க ஆரம்பித்தார். சஜஸ்தான் நைசாபூர், ஷாம், மிஸ்ர், ஹிஜாஸ், போன்ற ஊர்களுக்குக் கல்வியைத் தேடி பயணம் செய்தார். இந்தப் பிரயாணத்தின் மூலம் 2000 க்கும் மேலான ஆசிரியர்களைப் பெற்றார். ஹதீஸ் கலையிலும் சட்டத் துறையிலும் சிறந்து விளங்கியதால் நஸா, சமர்கன்த், புல்தான் போன்ற இடங்களில் தீர்ப்பு வழங்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. அத்துடன் இல்லாமல் மருத்துவம் வாணியல் ஆகிய கலையிலும் சிறந்து விளங்கினார். இவர் காலத்தில் இவருக்கும் ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்களுக்கும் அடிக்கடி விவாதங்கள் நடைபெறும். இமாம் அபூஹனீஃபாவை விமர்சித்து பல புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.

ஆசிரியர்கள் : அபூ யஃலா இப்னு ஹுஸைமா, ஹசன் பின் சுஃப்யான், அபூ அரூபா இன்னும் பலர்.

இவரது மாணவர்கள்: இவர் கல்விக் கடலாக அந்தக் காலத்தில் விளங்கியதால் பெரும் பெரும் அறிஞர்களான இமாம் தாரகுத்னீ, இமாம் ஹாகிம், இப்னு முன்தஹ், இன்னும் பல மேதைகள் இவரிடம் கற்று இவருக்கு மாணவராகத் திகழ்ந்தார்கள்.

படைப்புகள் : இவர் அனைத்து அறிவிப்பாளர்களைப் பற்றிய விபரங்களை மக்களுக்குத் தருவதற்கு அத்தாரீஹ் (வரலாறு) என்ற பெரும் புத்தகத்தைத் தொகுத்தார். பின்பு கிதாபுஸ்ஸிகாத் (நம்பகமானவர்கள்) என்ற பெயரில் சரியான அறிவிப்பாளர்களைப் பட்டியலிட்டார். பிறகு கிதாபுல் மஜ்ரூஹீன் மினல் லுஅஃபாயி வல்மத்ரூகீன மினர்ருவாத் (பலஹீனமானவர்கள் மற்றும் குறை காணப்பட்டவர்கள்) என்ற பெயரில் பலஹீனமான அறிவிப்பாளர்களைப் பட்டியலிட்டார். இந்த இரண்டு புத்தகமும் அவருடைய அத்தாரீஹ் என்ற பெரும் நூலின் சுருக்கம் தான். இமாம் புகாரி, முஸ்லிம், இப்னு ஹுஸைமா ஆகியோரைப் போல் ஆதாரப்பூர்வமான செய்திகளை மட்டும் தொகுக்கும் பாணியில் சஹீஹு இப்னி ஹிப்பானை தொகுத்தார். இது ஹதீஸ்களை உள்ளடக்கிய நூல். அவர் காலத்தில் வாழ்ந்த மக்கள் அறியாமையால் பலஹீனமான ஹதீஸ்களைக் கடைபிடித்ததைக் கண்டு உத்வேகத்துடன் இப்புத்தகத்தைத் தொகுத்தார். இன்னும் மஷாஹீரு உலமாயில் அம்சார், மற்றும் ரவ்ளதுல் உகலாயி வ நுஸ்ஹதுல் ஃபுளலாயி ஆகிய புத்தகங்களையும் நமக்குக் கிடைக்காத பல புத்தகங்களையும் படைத்துள்ளார்.

குறைகள் : நல்லவரா கெட்டவரா என்று அறியப்படாத அறிவிப்பாளர்களையெல்லாம் இவர் நல்லவர் என்று சான்று தந்துள்ளார். ஒருவரைப் பற்றி நிறை வராவிட்டாலும் குறையில்லாமல் இருந்தால் அவரை நல்லவர் என்று முடிவுகட்டி விடுவார். நல்ல அறிவிப்பாளர்கள் விஷயத்தில் தேவையில்லாத குறைகளையும் கூறியுள்ளார்.

மரணம்: ஹிஜ்ரீ 354 வது வருடத்தில் புஸ்த் என்ற ஊரில் இறந்தார்.

இமாம்  ஹாகிம்

இயற்பெயர் : முஹம்மத் பின் அப்தில்லாஹ்

குறிப்புப்பெயர் : அபூ அப்தில்லாஹ்

பட்டப்பெயர் : இவர் குறிப்பிட்ட காலம் நீதிபதியாக இருந்ததால் ஹாகிம் (நீதிபதி) என்றழைக்கப்பட்டார்.

தந்தைபெயர் : அப்துல்லாஹ்

குலம் : அள்ளப்பீ குலத்தைச் சார்ந்தவர்

பிறப்பு : நைசாபூர் என்ற ஊரில் ஹிஜ்ரீ 321 வது வருடம் பிறந்தார்.

கல்வி 9 வது வயதிலே கற்க ஆரம்பித்தார். 20 வது வயதை அடைந்திருக்கும் போது ஈராக் குராஸான் இன்னும் நாடுகள் பல கடந்து கற்றுள்ளார். நைசாபூர் போன்ற ஊர்களில் 2000 ஆசிரியர்களிடமிருந்து ஹதீஸைக் கற்றுள்ளார்.

ஆசிரியர்கள் : இப்னு ஹிப்பான், முஹம்மத் பின் யஃகூப், அஹ்மத் பின் சுலைமான், தஃலஜ் பின் அஹ்மத் இன்னும் பல ஆசிரியர்கள் இவருக்கு உள்ளனர். ஹதீஸ் கலை அறிஞர்களின் ஆசிரியர் என்று இமாம் தஹபி அவர்கள் கூறியுள்ளார். இவர் மார்க்கப் பற்று மற்றும் பேணுதல் உள்ளவராக இருந்தார் என இப்னு கசீர் கூறியுள்ளார்.

மாணவர்கள் : இமாம் பைஹகி, அபூ யஃலா, அபூதர் அல்ஹர்வீ போன்ற கல்விச் செம்மல்கள் இன்னும் பலர் இவருடைய மாணவர்கள் ஆவார்கள்.

அறிஞர்களின் கூற்று : இவர் சிறப்புக்குரியவர். கல்வி ஞானம் வழங்கப்பட்டவர். ஹதீஸ் கலையில் பல தொகுப்புகள் இவருக்கு உள்ளது என்று இமாம் ஹதீப் பஹ்தாதீ கூறியுள்ளார். இவர் தன்னுடைய காலத்தில் ஹதீஸ் கலை இமாமாகவும் அதை உண்மையான அடிப்படையில் விளங்கியவராகவும் இருந்தார் என அப்துல் ஹஃப்பார் என்பார் கூறியுள்ளார்.

குறைகள் : இமாம் ஹாகிம் அவர்கள் அறிவிப்பாளர்களை எடைபோடும் போது பல பலஹீனமான அறிவிப்பாளர்களை நம்பகமானவர்கள் என்று கவனக் குறைவாக கூறியுள்ளார்கள். பல பலஹீனமான ஹதீஸ்களை ஆதாரப்பூர்வமான செய்தி என்று குறிப்பிடுவதால் இவர் அலட்சியப் போக்குடையவர் என்ற அறிஞர்களால் வர்ணிக்கப்படுகிறார்.

படைப்புகள் : கிதாபுல் அர்பயீன், அல்அஸ்மாஉ வல்குனா, அல்இக்லீலு ஃபீ தலாயிலுன் நுபுவ்வா, அமாலில் அஷிய்யாத், அல்அமாலி தாரீஹு நய்சாபூர், கிதாபுத் துஆ, அல்லுஅஃபா, இலலுல் ஹதீஸ், ஃபளாயிலு ஃபாத்திமா, ஃபவாயிது ஷுயூஹ், அல்மத்ஹல், அல்முஸ்தத்ரக், மஃரிஃபது உலூமில் ஹதீஸ், மனாகிபுஷ் ஷாஃபி இன்னும் பல புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.

மரணம் : இவர் ஹிஜ்ரீ 405 வது வருடத்தில் மரணித்தார்.

19.01.2011. 1:49 AM

நான்கு இமாம்கள் பற்றி முன்னறிவிப்பு உண்டா?

ஈஸா நபி, மஹ்தீ ஆகியோர் பற்றி நபியவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். அது போல் நான்கு இமாம்கள் வருகை குறித்து முன்னறிவிப்பு உண்டா?

அப்துல் கபூர்

பதில்:

ஈசா (அலை) அவர்களும், மஹ்தீ அவர்களும் வருவார்கள். உலகத்தில் நல்லாட்சி புரிவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

ஆனால் அபூஹனீஃபா, ஷாஃபி, மாலிக், அஹ்மது ஆகிய நான்கு இமாம்கள் குறித்து எந்த முன்னறிவிப்பையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.

அபூஹனீஃபாவை மேன்மைப்படுத்தி ஷாஃபி அவர்களை இழிவுபடுத்தி மத்ஹப் வெறியர்கள் நபியின் பெயரால் இட்டுக்கட்டியுள்ளார்கள். இமாம்கள் தொடர்பாக இந்தப் பொய்யான செய்தியைத் தவிர ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை.

09.12.2011. 9:11 AM

வஹ்ஹாபிகள் என்றால் யார்?

கேடுகெட்ட துருக்கியர்கள் ஆளுகையின் கீழ் முஸ்லிம் நாடுகள் இருந்த போது மக்கா, மதீனா நகரங்களும் துருக்கி ஷைத்தான்களின் ஆதிக்கத்தில் இருந்தன.

(துருக்கியர்கள் உலக முஸ்லிம் நாடுகளுக்கு தலைமை வகித்ததால் நம்மையும் துருக்கர் எனச் சொல்லி பின்னர் துலுக்கர் என்று ஆனது.)

இவர்கள் ஆட்சியில் இருந்த போது இப்போது நாகூரிலும், அஜ்மீரிலும் நடப்பதை மிஞ்சும் அளவுக்கு அல்லாஹ்வுக்கு இணைவைத்தலும், கணக்கிலடங்காத பித்அத்களும் அறங்கேறின.

பத்ருப்போர் நடந்த இடத்திலும், உஹதுப் போர் நடந்த இடத்திலும் நூற்றுக்கணக்கான தர்காக்கள் கட்டப்பட்டன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை ஒட்டி அமைந்துள்ள மஸ்ஜிதுன்னபவியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வாகவே ஆக்கப்பட்டார்கள். அவர்களின் அடக்கத்தலம் அலங்காரம் செய்யப்பட்டது. அதன் சுவரிலும், டூம்களிலும் அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் கவிதைகள் பதியப்பட்டன.

எந்த அளவுக்கு மார்க்கத்தை நாசப்படுத்தி இருந்தார்கள் என்றால் கஅபாவைச் சுற்றி நான்கு முஸல்லாக்கள் உருவாக்கப்பட்டன. ஒரே நேரத்தில் ஷாஃபி,  ஹனபி,  மாலிகி,  ஹன்பலி என நான்கு பிரிவினரும் தனித்தனியாக தொழுகை நடத்துவார்கள்.

இது பற்றிய ஆக்கத்தைக் காண

காபாவில் நான்கு தொழுகை தலங்கள் இருந்தனவா?

1902 ஆம் ஆண்டு முதல் துருக்கிக்கு எதிராக களத்தில் போராடிய அப்துல் அஸீஸ் பின் சவூது என்பார் ரியாத்தைக் கைப்பற்றி அரசமைத்தார். இவரது தந்தையின் பெயரால் இது சவூதி அரசு என்று அழைக்கப்படுகிறது.

ரியாத பகுதி மட்டுமே இவரது சவூதி அரசாக இருந்தது. தற்போதையை சவூதி அரசின் பல பகுதிகள் தனித்தனி ராஜ்ஜியங்களாக இயங்கி வந்தன. இவரது மரணத்திற்குப் பின் இவரது மகன் முஹம்மத் பின் அப்துல் அஸீஸ் ஆட்சிக்கு வந்தார்.

இந்தக் காலகட்டத்தில் தான் (1703-1792) முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் செயல்களையும், அனாச்சாரங்களையும் கண்டித்து பிரச்சாரம் செய்து வந்தார். மத்ஹபை விட்டு விலகி குர்ஆன் ஹதீஸ் வழியில் மட்டுமே செயல்பட வேண்டும் எனவும் பிரச்சாரம் செய்து வந்தார். இவரது பிரச்சாரத்தால் மன்னர் முஹம்மது ஈர்க்கப்பட்டார். இருவரும் சந்தித்து ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

அதாவது மார்க்க விஷயத்தில் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபுக்கு மன்னர் ஒத்துழைப்பாக இருப்பது, சிதறிக் கிடக்கும் ராஜ்ஜியங்களை ஒருங்கிணைக்க மன்னருக்கு முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் உறுதுணையாக இருப்பது என்பது தான் அந்த ஒப்பந்தம்.

வீரியமிக்க இளைஞர்களைத் திரட்டி வைத்திருந்த முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபும் மன்னரின் படையினரும் சேர்ந்து இன்றைய சவூதியாக இருக்கும் எல்லாப் பகுதிகளையும் ஒரு ராஜ்ஜியத்ய்தின் கீழ் கொண்டு வந்தனர்.

எல்லா தர்காக்களும் உடைத்து எறியப்பட்டன. தாயத்து தட்டு மோசடிக்காரர்கள் சிறையில் தள்ளப்பட்டனர்.

லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதைக் கொடியில் பதித்து இனி எல்லாம் தவ்ஹீத் தான் என்று பிரகடனம் செய்யப்பட்டது.

கஅபாவைச் சுற்றி இருந்த நான்கு முஸல்லாக்களும் உடைத்து நொறுக்கப்பட்டு ஒரே முஸல்லாவாக ஆக்கப்பட்டது.

ஹஜ் உம்ராவுக்கு விதிக்கப்பட்ட வரிகள் ரத்து செய்யப்பட்டன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தில் நடந்து வந்த பல அநாச்சாரங்கள் தடைசெய்யப்பட்டன. இன்னும் சில அனாச்சாரங்கள் மிச்சம் உள்ளன.

தர்காக்களை உடைத்து எறிந்ததாலும், புரோகிதர்களை ஒழித்துக் கட்டியதாலும், அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்று முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் போதனை செய்ததாலும் இந்தக் கொள்கையைச் சொல்பவர்கள் வஹ்ஹாபிகள் என்று குறிப்பிடப்படுகின்றனர்.

ஆனால் இவரது பெயர் வஹ்ஹாப் அல்ல. அப்துல் வஹ்ஹாபும் அல்ல. இவரது தந்தையின் பெயர் தான் அப்துல் வஹ்ஹாப்.

இவரது பெயர் முஹம்மத் ஆகும். இவரது கொள்கையைப் பின்பற்றுவோருக்குப் பெயர் சூட்டுவதாக இருந்தால் முஹம்மதீ என்று தான் சொல்ல வேண்டும். (முஹம்மத் என்பவரைப் பின்பற்றுவோர்) இப்படிச் சொன்னால் அது நபிகள் நாயகத்தைக் குறித்து விடும் என்று அஞ்சிய கப்ரு வணங்கிக் கூட்டம் அவரது தந்தையின் பெயரால் வஹ்ஹாபிகள் எனக் கூறி வருகின்றனர்.

ஆனால் அவரது தந்தையின் பெயர் அப்துல் வஹ்ஹாப் தானே தவிர வஹ்ஹாப் அல்ல.

வஹ்ஹாப் என்பது அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர்களில் ஒன்றாகும்.

முஹம்மதிகள் என்று சொன்னால் நபிவழி நடப்பவர்கள் என்று பெயர் வாங்கி விடுவார்கள் என்று அஞ்சி வஹ்ஹாபிகள் என்று அதை விட அழகான பெயரை அவர்கள் வாயாலேயே அல்லாஹ் சொல்லவைத்து விட்டான்.

வஹ்ஹாப் என்றால் அல்லாஹ்.

வஹ்ஹாபி என்றால் அல்லாஹ்வின் கட்சியைச் சேர்ந்தவர் என்று பொருள்.

நாங்கள் கப்ரு வணங்கிகள் அல்ல என்ற கருத்து இதனுள் அடங்கியுள்ளது.

இணைவைப்பை எதிர்த்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து மிகப் பெரும் தியாகம் செய்த மாவீரர் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப். அவர் சந்தித்தது போன்ற அடக்குமுறைகளையும், எதிர்ப்புகளையும் நாம் சந்தித்து இருந்தால் நம்மில் எத்தனை பேர் கடைசி வரை தாக்கு பிடித்திருப்போம் என்று சொல்ல முடியாது.

இன்றைய சவூதி ஆட்சியாளர்கள் மீது நமக்கு வெறுப்பு வந்தாலும் முஹம்மத் பின் அப்துல் அஸீஸையும், முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபையும் ஏகத்துவவாதிகள் வெறுக்க முடியாது.

அவர் அன்று துணிச்சலுடன் கப்ரு வணக்கத்தின் தீமைகளை எதிர்த்தது தான் நமக்கெல்லாம் உத்வேகத்தை அளித்தது என்பதையும் மறந்து விட முடியாது. நாம் பெரிதும் மதிக்கும் நல்லறிஞர்களில் ஒருவர் தான் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப்.

ஆனால் அவர் சொன்ன அனைத்தையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்பது இதற்கு அர்த்தமில்லை. அவரது சில போதனைகள் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக உள்ளன. அதை நாம் சுட்டிக்காட்டி நிராகரித்துள்ளோம்.

03.05.2013. 3:10 AM

More Articles …