▶️ஒவ்வொரு நாளும் அவன் அலுவலில் உள்ளான் என்பதன் அர்த்தம் என்ன?
ஒவ்வொரு நாளும் அவன் அலுவலில் உள்ளான் என்பதன் அர்த்தம் என்ன?
உரை:மார்க்க அறிஞர் P.ஜைனுல் ஆபிதீன்
17/07/22
ஒவ்வொரு நாளும் அவன் அலுவலில் உள்ளான் என்பதன் அர்த்தம் என்ன?
உரை:மார்க்க அறிஞர் P.ஜைனுல் ஆபிதீன்
17/07/22
அனைத்து உயிரினங்களுக்கும் இறைவன் உணவளிப்பான் என்றால் உயிரினங்கள் உணவில்லாமல் மரணிப்பது ஏன்?
உரை:மார்க்க அறிஞர் P.ஜைனுல் ஆபிதீன்
03/07/22
அல்லாஹ்வின் அழகிய பண்புகள் - பாகம் 24 ( 11/10/2019 )
நபிகளும் அல்லாஹ்வும் ஒருவரா?
(ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம்)
எனவே அவர்களை நீங்கள் சொல்லவில்லை. எனினும், அல்லாஹ் தான் அவர்களைக் கொன்றான். (முஹம்மதே) நீர் எறிந்த போது நீர் எறியவில்லை. எனினும் அல்லாஹ் தான் எறிந்தான்; நம்பிக்கையாளர்களை அழகிய முறையில் சோதிப்பதற்காக இவ்வாறு செய்தான். நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவன், அறிந்தவன்.
திருக்குர்ஆன்: 8:17
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த முதல் போர்க் களம் பத்ருப் போர் என்பதை நாம் அறிவோம்.
இஸ்லாமிய எழுச்சிக்கு வித்திட்ட இப்போரில் இறைவன் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தி முஸ்லிம்களுக்கு வெற்றியை வழங்கினான்.
எதிரிகளை விட எண்ணிக்கையில் மூன்றில் இரு மடங்கு குறைவாக முஸ்லிம்கள் இருந்தனர். ஆயுதங்கள், வாகனங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற சாதனங்களும் முஸ்லிம்களிடம் இருந்ததை விட எதிரிகளிடம் பல மடங்கு அதிகமாக இருந்தன.
இரு படையினரையும் யார் எடை போட்டுப் பார்த்தாலும் முஸ்லிம்கள் நிச்சயமாகத் தோல்வியைத் தழுவுவார்கள் என்று தான் கணிக்க முடியும். அந்த அளவுக்கு பலவீனமான நிலையில் முஸ்லிம்கள் இருந்தனர். ஆனாலும் இறைவன் - முஸ்லிம்களுக்கு மகத்தான வெற்றியை வழங்கினான்.
* ஆயிரம் வானவர்களை இறைவன் களத்தில் இறக்கினான். (8:9)
* சுறுசுறுப்புடன் போரிடுவதற்காக அதற்கு முன் சிறிய தூக்கத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களின் இதயங்களை அமைதிப்படுதினான். (8:11)
* அன்றிரவு மழையை இறக்கி அவர்களைத் தூய்மைப்படுத்தியதுடன் அவர்களின் பாதங்களையும் உறுதிப்படுத்தினான். (8:11)
* வானவர்களும் களத்தில் இறங்கிப் போரிட்டனர்.
* எதிரிகளின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்தினான். (8:12)
இந்த அற்புதங்களுடன் சேர்த்து நிகழ்த்திய மற்றொரு அற்புதத்தைத் தான் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
பொடிக் கற்களில் ஒரு கைப்பிடியை எனக்கு எடுத்துவா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கூறினார்கள். அவர் எடுத்துக் கொடுத்தார். அதை எதிரிகளின் முகங்களை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) எறிந்தனர். எதிரிக் கூட்டத்தின் ஒவ்வொருவர் கண்களிலும் அது படாமல் இருக்கவில்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் தான் "நீர் எறிந்த போது நீர் எறியவில்லை. எனினும், அல்லாஹ் தான் எறிந்தான்'' என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான். (நூல்: தப்ரானி)
ஒரு கூட்டத்தை நோக்கி யாரேனும் ஒருவர் பொடிக் கற்களை வீசி எறிந்தால் அவற்றுள் சில கற்கள் சிலர் மீது படலாம். அனைவர் மீதும் அதுவும் குறி வைத்து வீசியது போல் அனைவரின் கண்கள் மீதும் அது படும் எனக் கூற முடியாது.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீசிய பொடிக் கற்கள் குறி வைத்து வீசப்பட்டது போல் எதிரிகளின் கண்களைப் பதம் பார்த்தது. இதைத் தான் மேற்கண்ட வசனத்தில அல்லாஹ் கூறுகிறான்.
மனிதர்கள் கற்களை வீசினால் என்ன விளைவு ஏற்படுமோ அது போன்ற விளைவு ஏற்படாமல் இறைவனே விசினால் எத்தகைய விளைவுகள் ஏற்படுமோ அத்தகைய விளைவுகள் ஏற்பட்டது மற்றொரு அற்புதமாகும்.
இத்தகைய அற்புதங்களால் தான் வெற்றி பெற முடிந்ததே தவிர போரில் பங்கெடுத்தவர்களின் ஆற்றலினால் அல்ல என்பதை உணர்த்தவே இறைவன் இவ்வாறு சுட்டிக் காட்டுகிறான்.
இவ்வளவு தெளிவான வசனத்தையும் சில வழிகேடர்கள் தங்களின் தவறான கொள்கைக்கு ஆதாரமாக ஆக்கிக் கொள்கின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து ஐநூறு ஆண்டுகளுக்குப் பின் தோன்றியவர்கள் தாம் இந்த வழிகேடர்கள். இவர்கள் நபிகள் நாயகத்தை நேசிக்கிறோம் எனக் கூறிக் கொண்டு வரம்பு மீறி அவர்களைப் புகழலானார்கள். இதன் உச்சகட்டமாக "அல்லாஹ் தான் ரசூல், ரசூல் தான் அல்லாஹ்'' என்றும் கூறத் துணிந்தார்கள்.
அல்லாஹ் வேறு, நபிகள் நாயகம் வேறு அல்ல. இருவரும் ஒருவரே என்றெல்லாம் உளற ஆரம்பித்தார்கள். ஏராளமான கட்டுக் கதைகளையும் இதற்கேற்ப இவர்கள் உருவாக்கினார்கள்.
ஈஸா நபி விஷயத்தில் கிறிஸ்தவர்கள் வரம்பு மீறியதையும் இவர்கள் மிஞ்சினார்கள்.
குர்ஆன் வசனங்களையோ, ஹதீஸ்களையோ வளைத்து தங்களின் உளறலை நியாயப்படுத்த முடியுமா? என்று தேடியவர்களுக்கு மேற்கண்ட வசனம் மிகப் பெரிய சான்றாகத் தென்பட்டது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனிதராக இருந்தால் இப்படி எறிய முடியுமா? அல்லாஹ்வாக இருந்தால் தானே எறிய முடியும்? அவர்கள் எறிந்ததை அல்லாஹ், தான் எறிந்ததாக அல்லவா கூறுகிறான். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அல்லாஹ்வும் ஒருவரே என்று இந்த மூடர்கள் உளறலானார்கள்.
இவ்வசம் கூறுவது என்ன என்பதை விளங்காத சில மூடர்களும் இவர்களது வாதத்தில் மயங்கினார்கள். எந்த மார்க்கம் இணை வைத்தலின் வாசலைக் கூட இறுக்கமாக அடைத்ததோ அந்த மார்க்கத்திலேயே இவர்கள் விளையாடலானார்கள். எந்த மார்க்கம் மனிதன் ஒருக்காலும் கடவுளாக முடியாது என அறைகிறதோ அந்த மார்க்கத்திலேயே மனிதரைக் கடவுளாக்கினார்கள்.
ஆனால் இந்த வசனம் அவர்களது வாதத்துக்கு நேர் எதிரானதாகும்.
"நான் கல்லை வீசினால் போதும்! எதிரிகள் ஓட்டமெடுப்பார்கள் என்று முஹம்மதே நீர் நினைத்து விடக் கூடாது. மாறாக குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சியில் நீர் கல்லை வீசிய போது எனது வல்லமையால் அதைப் பரவச் செய்தேன்'' என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.
இது தான் இவ்வசனத்தின் கருத்து என்பதை விளங்கிட வேறு எங்கேயும் நாம் போக வேண்டியதில்லை. இவ்வசனத்திலேயே இதற்கான காரணம் அடங்கியுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொடிக் கற்களை வீசியதைக் கூறுவதற்கு முன் நபித்தோழர்கள் போரில் எதிரிகளை வெட்டி வீழ்த்தியதை அல்லாஹ் குறிப்பிடுகிறான். "நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை. மாறாக அல்லாஹ் தான் அவர்களைக் கொன்றான்'' என்று குறிப்பிடுகிறான்.
நபித்தோழர்கள் தமது வாள்களாலும், வேல்களாலும் தான் எதிரிகளை வெட்டி வீழ்த்தினார்கள். நபித்தோழர்களின் கரத்தால் செய்யப்பட்ட இந்த தீரச் செயலுக்கு அல்லாஹ் சொந்தம் கொண்டாடுகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எறிந்தது பற்றிப் பேசும் போது பயன்படுத்தியது போன்ற வாசக அமைப்பையே இங்கேயும் பயன்படுத்துகிறான். நபிகள் நாயகம் மட்டுமல்ல, பத்ருப் போரில் கலந்து கொண்ட அனைத்துத் தோழர்களுமே அல்லாஹ்வாக இருந்தார்கள் என்று இவர்கள் வாதிட வேண்டுமல்லவா?
அல்லாஹ் தான் நபி, நபி தான் அல்லாஹ் என்று இவர்கள் கூறியது போல் அல்லாஹ் தான் நபித்தோழர்கள். நபித்தோழர்கள் தான் அல்லாஹ் எனவும் கூற வேண்டிய நிலை ஏற்படும்.
பத்ருப் போரில் பல நபித்தோழர்கள் கொல்லப்பட்டனர். இவர்களின் கிறுக்குத் தனமான வாதப்படி அல்லாஹ் தான் கொல்லப்பட்டான் என்று கூறும் நிலை ஏற்படும்.
இந்த வெற்றிக்கு நபிகள் நாயகமோ நபித் தோழர்களோ சொந்தம் கொண்டாடி விடக் கூடாது என்பதற்காகத் தான், தான் நடத்திய அற்புதங்களை இதற்கு முந்தைய வசனங்களில் அல்லாஹ் நினைவுபடுத்துகிறான்.
நானும் உங்களைப் போன்ற மனிதனே என்று தெளிவாக அவர்களை அல்லாஹ் கூறச் சொல்கிறான். (திருக்குர்ஆன் 18:110)
தெளிவான இந்தப் பிரகடனத்தை அலட்சியம் செய்துவிட்டு சம்பந்தமில்லாத உளறலை நியாயப்படுத்த எண்ணுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்டது, பருகியது, அவர்கள் மலஜலம் கழித்தது, குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டது, மற்றவர்களைப் போல் தாய், தந்தையருக்குப் பிறந்தது, மனைவி-மக்களை இழந்து கவலைப்பட்டது, சித்ரவதைக்கு ஆளானது, நாடு கடத்தப்பட்டது, தமது மனைவியின் மீது எதிரிகள் பழி கூறிய போது உண்மை நிலையை அறியாமல் இருந்தது, ஒரு கூட்டத்தாரின் அழைப்பை ஏற்று அனுப்பிய எழுபது நபித் தோழர்கள் அவர்களால் கொல்லப்படுவார்கள் என்பதை முன்பே அறியாமல் இருந்தது, வறுமையில் உழன்றது,
என ஆயிரமாயிரம் நிகழ்ச்சிகள் மூலம் அவர்கள் தாம் ஒரு மனிதர் என்பதை நிரூபித்துச் சென்ற பிறகும் இப்படி உளறுபவன் அறிவுடையவனாக இருக்க முடியாது.
நபிகள் நாயகத்துக்கும் நபித்தோழர்களுக்கும் மட்டுமல்ல காஃபிர்கள் உள்ளிட்ட எல்லா மனிதர்கள் விஷயத்திலும் கூட இறைவன் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளான்.
நீங்கள் விவசாயம் செய்கிறீர்களே! அதைப் பற்றிக் கூறுங்கள்! நீங்கள் தான் அதை விவசாயம் செய்கிறீர்களா? அல்லது நாம் விவசாயம் செய்கிறோமா? (திருக்குர்ஆன் 56:63,64) என்று அல்லாஹ் கூறுகிறான்.
நாம் விவசாயம் செய்வதைக் கூறி விட்டு உண்மையில் நீங்கள் விவசாயம் செய்யவில்லை. நாமே விவசாயம் செய்கிறோம் என்கிறானே! விவசாயிகள் அனைவரும் அல்லாஹ்வா? இந்த மூடர்கள் சிந்திக்க வேண்டாமா?
நீங்கள் விந்துத் துளியாகச் செலுத்துகிறீர்களே! அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கிறோமோ? எனவும் அல்லாஹ் கேட்கிறான். (திருக்குர்ஆன் 56:58,59)
நாம் தான் விந்துத் துளியைத் செலுத்துகிறோம். ஆனாலும், அதைக் குழந்தையாக ஆக்குவதும், ஆக்காது விடுவதும் அவனது கட்டளைப்படி நடப்பது என்று இதைப் புரிந்து கொள்கிறோம்.
நாம் தான் விதைகளை விதைக்கிறோம். ஆனாலும் விதைத்ததை முளைப்பிக்கச் செய்து ஒன்றுக்கு நூறாக இன்னும் அதிகமாக ஆக்குவது அவனது வல்லமையின் பாற்பட்டது என்று இதையும் விளங்கிக் கொள்கிறோம்.
அது போல் தான் மேற்கண்ட வசனத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்னொரு கோணத்தில் சிந்தித்தால் இவர்களது வாதம் எந்த அளவுக்கு அபத்தமானது என்பது எளிதில் விளங்கும்.
நீர் எறிந்த போது
நீர் எறியவில்லை
என இரண்டு சொற்றொடர்கள் இங்கே இடம் பெற்றுள்ளன. நீர் எறிந்த போது எனக் கூறும் போது எறிந்தவர் நபிகள் நாயகம் என்று அல்லாஹ் ஒப்புக் கொள்கிறான். எதை ஒப்புக் கொண்டானோ அதையே நீர் எறியவில்லை எனக் கூறி உடனே மறுக்கவும் செய்கிறான்.
அல்லாஹ்வின் வார்த்தையில் நிச்சயமாக முரண்பாடு இருக்கவே முடியாது. "நான் சாப்பிட்ட போது நான் சாப்பிடவில்லை'' என்று ஒருவன் கூறினால் அதை நாம் அபத்தம் என்போம்.
ஆனால் இறைவன் எப்படி முரண்பட்டுப் பேசுவான் என்பதைச் சிந்திப்பார்களானால் இதன் சரியான பொருளை விளங்கிக் கொள்வார்கள். இப்படி உளறிக் கொட்ட மாட்டார்கள்.
இது போன்ற வார்த்தைப் பிரயோகத்தை நேரடியான பொருளில் நாம் எடுத்துக் கொள்வது கிடையாது. முரண்பட்ட இரண்டுக்கும் இரு வேறு அர்த்தங்களையே நாம் கருத்தில் கொள்வோம்.
நாம் பயிரிடும் போது நாம் பயிரிடுவதில்லை. அல்லாஹ் தான் பயிரிடுகிறான் என்று கூறினால் பயிரிடுதல் என்பதற்கு இரு வேறு இடங்களில் இரு வேறு அர்த்தங்களை நாம் கவனத்தில் கொள்கிறோம்.
நாம் பயிரிடும் போது என்ற சொற்றொடருக்கு தானியத்தை மண்ணில் புதைக்கும் போது நீர் பாய்ச்சும் போது என்று பொருள் கொள்கிறோம்.
நாம் பயிரிடுவதில்லை என்று அடுத்துக் கூறுகிறோம். இந்த இடத்திலும் அதே பொருளைக் கொண்டால் அது உளறலாகி விடும். நாம் முளைக்கச் செய்வில்லை என்று வேறு பொருள் கொள்கிறோம். இப்போது முரண்பட்டதாகவோ உளறலாகவோ ஆகாது.
அதாவது நாம் (பயிரிடும் போது) விதையைப் புதைக்கும் போது நாம் அதைப் (பயிரிடுவது இல்லை) முளைக்கச் செய்வதில்லை என்ற கருத்து வரும்.
இது போல் தான் மேற்கண்ட வசத்திலும் பொருள் கொள்ள வேண்டும்.
நீர் எறிந்த போது
நீர் எறியவில்லை
என்று முரண்பட்ட இரண்டு சொற்றொடர்களில் ஒவ்வொன்றும் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நீ எறிந்த போது அதாவது பொடிக் கற்களை வீசிய போது,
நீர் எறியவில்லை அதாவது ஒவ்வொருவர் முகத்திலும் நீர் கொண்டு போய்ச் சேர்க்கவில்லை
என்று பொருள் கொண்டால் தான் முரண்பாடில்லாத வாசகமாக அது அமையும்.
இது போன்ற வார்த்தைப் பிரயோகம் அனைத்து மொழி இலக்கியங்களிலும் மக்களின் உரையாடல்களிலும் காணக் கூடியது தான். குர்ஆனுக்கு மட்டும் உரிய இலக்கணம் இல்லை.
பன்னீர் செல்வம் பேசிய போது, பன்னீர் செல்வம் பேசவில்லை. ஜெயலலிதா தான் பேசினார் என்று இப்போதும் நாம் கூறலாம்.
ஆனால் இரண்டு இடத்திலும் வெவ்வேறு பொருளைக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் அது உளறல் தவிர வேறு இல்லை.
பன்னீர் செல்வம் பேசவில்லை. அதாவது கருத்து அவருடையதல்ல என்று பொருள் கொண்டால் தான் இந்த வாசக அமைப்பு சரியானதாகும்.
இந்த விதியின் அடிப்படையில் மேற்கண்ட வசனத்திற்குப் பொருள் கொண்டால் எறிந்தது நபிகள் நாயகம். அதைச் சேர்த்து வைத்தது அல்லாஹ் என்ற கருத்து வரும். அல்லாஹ் செய்தது வேறு! அவன் தூதர் செய்தது வேறு. அல்லாஹ் வேறு! அவன் தூதர் வேறு என்பது இதன் மூலம் உறுதியாகும்.
அல்லாஹ் இறங்குகிறான் என்பதன் பொருள்
இதை டவுன்லோடு செய்ய
அல்லாஹ் இறங்குகிறான் என்பதன் பொருள் என்ன
அல்லாஹ் தினமும் அடிவானத்திற்கு இறங்குகின்றானா ?
வாட்ஸ் அப் கேள்வி பதில் 07/10/18
இதை டவுன்லோடு செய்ய
அல்லாஹ் தினமும் கீழ் வானத்திற்கு இறங்குகின்றானா ? சர்ச்சைக்கு பதில்
28/10/2018 வாட்ஸ் அப் கேள்வி பதில்
இதனை டவுன்லோட் செய்ய
அல்லாஹ் அடிவானத்திற்கு வருவானா?
13/10/19 வாட்ஸ் அப் கேள்வி பதில்
இதனை டவுன்லோட் செய்ய
90. ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள்
இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) ஈஸா நபியவர்கள், அல்லாஹ்வின் வார்த்தை என்று கூறப்படுகிறது.
4:171, 15:29, 21:91, 66:12 ஆகிய வசனங்களில் ஈஸா நபி இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது.
இது போன்ற வார்த்தைப் பிரயோகங்களைத் தவறாக விளங்கிக் கொண்டு ஈஸா நபி இறைவனின் குமாரர் என்று சில கிறித்தவர்கள் கூறுகின்றனர். திருக்குர்ஆனும் இதை ஒப்புக் கொள்வதாக அவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.
ஈஸா நபியோ, மற்ற யாருமோ இறைவனுக்குப் புதல்வர்களாக இருக்க முடியாது என்று 2:116, 4:171, 10:68, 17:111, 18:4, 19:35, 19:88-93, 21:26, 23:91, 25:2, 37:149-153, 39:4, 43:81 ஆகிய வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன.
பிறகு ஏன் அல்லாஹ்வின் உயிர் என்று ஈஸா நபியைக் குறிப்பிட வேண்டும்?
பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் ஈஸா நபி, ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
வானம், பூமி மற்றும் எண்ணற்ற படைப்புக்கள் ஆகு எனும் கட்டளை மூலம் தான் படைக்கப்பட்டன. இதனால் அவை இறைவனின் புதல்வர்களாகி விட முடியாது.
இறைவனின் உயிர் என்று ஈஸா நபி கூறப்படுவதால் அவரை இறைவனின் மகன் எனக் கூற முடியாது.
என்னுடைய கை என்று சொல்கிறோம். என்னுடைய பேனா என்றும் சொல்கிறோம். இரண்டிலும் என்னுடைய என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு இடங்களிலும் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
என்னுடைய கை என்பது என்னில் ஒரு பகுதியாக இருக்கும் கை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
என்னுடைய பேனா என்று சொல்லும் போது என்னில் ஒரு பகுதியான பேனா என்று பொருள் கொள்ள மாட்டோம். கை எப்படி எனது உறுப்பாக உள்ளதோ அது போல் பேனா எனது உறுப்பாக இல்லாததே இதற்குக் காரணம்.
என்னுடைய பேனா என்றால் எனக்கு உடைமையான பேனா என்று பொருள் கொள்கிறோம்.
அது போல் தான் என்னுடைய உயிர் என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஈஸா நபி என்னுடைய உயிர் என்றால் எனக்குச் சொந்தமான உயிர். நான் எனது கட்டளையால் உருவாக்கிய உயிர் என்ற பொருளில் தான் அறிவுடைய மக்கள் புரிந்து கொள்வார்கள்.
எனவே இறைவனின் உயிர் என்றால் அவனுக்கு உடைமையான உயிர் என்பது தான் பொருள். அவனது ஒரு பகுதியான உயிர் என்று பொருள் இல்லை.
15:29, 38:72 ஆகிய வசனங்களில் ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ்வின் உயிர் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதனால் ஆதம், அல்லாஹ்வின் மகன் என்று கிறித்தவர்கள் கூறுவதில்லை.
ஆதம் (அலை) பற்றி அல்லாஹ்வின் உயிர் என்று கூறப்படும் போது எவ்வாறு புரிந்து கொள்கிறோமோ அப்படித் தான் ஈஸா நபி பற்றி அல்லாஹ்வின் உயிர் என்று கூறுவதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
3:59 வசனத்தில் ஆதமைப் படைத்ததும், ஈஸாவைப் படைத்ததும் ஒரே மாதிரியானது எனத் திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இரு பொருள் தரும் சொற்களை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை விரிவாக அறிய 86வது குறிப்பையும் காண்க!
61. அல்லாஹ் வருவான் என்பதன் பொருள் என்ன?
இறைவனது பண்புகளையும், செயல்களையும் பேசும் வசனங்களை அதன் நேரடிப் பொருளில் தான் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் கை என்றால், அல்லாஹ்வின் ஆற்றல் என்று விளக்கம் கொடுக்கக் கூடாது. அல்லாஹ்வின் முகம் என்றால் முகம் என்பது தான் பொருள்.
"வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும் போது…'' என்ற (89:22) வசனத்திற்குப் பொருள் கொள்ளும் போது, நியாயத் தீர்ப்பு நாளில் மனிதர்களை விசாரிப்பதற்கு இறைவன் வருவான் என்ற நேரடிப் பொருள் தான் கொள்ள வேண்டும்.
ஆயினும் நேரடிப் பொருள் கொள்வது கருத்துக் குழப்பத்தை ஏற்படுத்தினாலோ, இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிராக இருந்தாலோ அப்போது நேரடிப் பொருளில் புரிந்து கொள்ளக் கூடாது.
நல்லடியார்களின் கையாக நான் ஆவேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதை நேரடிப் பொருளில் புரிந்து கொள்ளக் கூடாது. நல்லடியானுக்கு உதவுவேன் என்று அல்லாஹ் கூறுவதாகத் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
2:210, 6:158, 13:41, 16:26, 24:39, 59:2 ஆகிய வசனங்கள் நேரடிப் பொருள் கொள்ள முடியாத வகையில் அமைந்துள்ளன.
உதாரணமாக 2:210, 13:41, 16:26 ஆகிய வசனங்களில் தீயவர்களை அழிக்க இறைவன் வருவான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வசனங்களுக்கு அல்லாஹ் நேரடியாக வருவான் என்று பொருள் கொள்ளாமல் அவனது கட்டளை வரும் என்று பொருள் கொள்ள வேண்டும்.
ஏனெனில் ஒரு கூட்டத்தையோ, ஒட்டு மொத்த சமுதாயத்தையோ அழிக்க அல்லாஹ் நாடினால் அதற்காக அவன் இறங்கி வருவதில்லை. அவ்வாறு வரவேண்டிய அவசியமும் இல்லை. ஒரேயொரு உத்தரவின் மூலம் காரியத்தை முடித்து விடுவான் என 36:28, 29 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
"மேகக் கூட்டங்களில் அல்லாஹ் வருவான்'' என்பது, அல்லாஹ்வின் தண்டனை மேகக் கூட்டங்களின் வாயிலாக வரும் என்று பொருள்படும். அதாவது பேரழிவை ஏற்படுத்தும் பெருமழையுடன் மேகக் கூட்டங்களை அனுப்பி அழிப்பான் என்று பொருள்.
இது போல் 13:41 வசனத்தில் பூமியை அதன் ஓரங்களில் குறைப்பதற்காக நாம் பூமிக்கு வருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது. நமது கட்டளைப்படி பூமியைக் குறைக்கிறோம் என்று இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்களின் கட்டடங்களின் அடித்தளத்தின் வழியாக நாம் வந்தோம். கட்டடங்கள் வீழ்ந்தன என்று பூகம்பம் குறித்து 16:26 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். இது போல் 59:2 வசனத்தில் அவர்கள் நினைத்துப் பார்க்காத வகையில் அணுகினான் என்பதும் இது போன்றது தான்.
கட்டடத்துக்குக் கீழே வந்து அசைக்கிறான் என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. கட்டடங்கள் விழுமாறு கட்டளையிட்டான் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.
அது போல் 24:39 வசனத்தில் கானல் நீரைத் தேடிச் செல்பவன் அங்கே அல்லாஹ்வைக் காண்பான் என்று கூறப்பட்டுள்ளதையும் அதன் நேரடிப் பொருளில் புரிந்து கொள்ளக் கூடாது.
இவையல்லாத மற்ற வசனங்களில் அல்லாஹ்வைப் பற்றி சொல்லப்பட்ட அனைத்து வர்ணனைகளையும் அதன் நேரடிப் பொருளில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
இறைவனின் பண்புகள் பற்றி அறிய 488வது குறிப்பைப் பார்க்கவும்.