Sidebar

19
Fri, Jun
சமீபத்திய செய்திகள்

தொழுது கொண்டிருக்கும் போது இகாமத் சொல்லப்பட்டால்?

தொழுது கொண்டிருக்கும் போது, இகாமத் சொல்லப்பட்டால், தொழுகையை விட்டு விட்டு, ஜமாஅத்தில் சேருவதா? அல்லது தொழுகையை முடித்து விட்டு ஜமாஅத்தில் சேருவதா?

அர்ஷாத்-கத்தார்

முன்னர் எழுதிய பதில் இன்று திருத்தி வெளியிடப்படுகிறது

பதில் :

கடமையான தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் எந்தத் தொழுகையும் இல்லை என்று பின்வரும் செய்தி கூறுகின்றது.

صحيح مسلم

1679 – وَحَدَّثَنِى يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِىُّ حَدَّثَنَا رَوْحٌ حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ قَالَ سَمِعْتُ عَطَاءَ بْنَ يَسَارٍ يَقُولُ عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهُ قَالَ « إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ صَلاَةَ إِلاَّ الْمَكْتُوبَةُ ».

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் கடமையான அந்தத் தொழுகையைத் தவிர வேறு எந்தத் தொழுகையில்லை.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம்

இந்த ஹதீஸில் இகாமத் சொல்லப்பட்ட பின் வேறு எந்தத் தொழுகையும் இல்லை என்ற வாசகத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இது புதிதாக தொழுகையை துவக்கக் கூடாது என்ற கருத்தைத் தருவதுடன் துவக்கி இருந்தாலும் அதை விட்டுவிட வேண்டும் என்பதையும் உள்ளடக்கியதாகும். எந்தத் தொழுகையும் துவக்கக் கூடாது என்று சொல்லாமல் எந்தத் தொழுகையும் இல்லை என்று நபிகள் கூறியதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இகாமத் சொல்லப்படும் முன்னரே நாம் ஏதேனும் ஒரு தொழுகையில் ஈடுபட்டிருந்தால் அந்தத் தொழுகையை இடையில் முறிப்பதைப் பற்றி இந்த ஹதீஸ் பேசவில்லை. நாம் ஈடுபட்டிருந்த தொழுகையை முடித்து விட்டு ஜமாஅத் தொழுகையில் சேர்ந்து கொள்ள வேண்டும். என்று முன்னர் நாம் கூறி இருந்தோம்.அதற்கு பின் வரும் ஹதீஸை ஆதாரமாக காட்டி இருந்தோம்.

ஏனெனில் தொழுகையை தக்பீர் கொண்டு ஆரம்பித்து ஸலாம் கொண்டு முடிக்க வேண்டும் என்பது நபி மொழியாகும்.

سنن الترمذي

3 – حَدَّثَنَا قُتَيْبَةُ، وَهَنَّادٌ، وَمَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالُوا: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، ح وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ مُحَمَّدِ ابْنِ الْحَنَفِيَّةِ، عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ، وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ، وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ»

தொழுகையின் திறவுகோல் உளூவாகும். அதன் உள் நுழைதல் தக்பீர் ஆகும். வெளியேறுதல் ஸலாம் கொடுப்பதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : திர்மிதி 3

முறைப்படி தொழுகையை முடிக்க எண்ணினால் அந்தத் தொழுகையின் நன்மை கிடைக்க வேண்டுமானால் ஸலாம் கூறி முழுமைப் படுத்திய பின் தான் முடிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அதற்கான கூலி கிடைக்காது என்ற கருத்து தான் இதில் கிடைக்கும். தக்க காரணத்துடன் மார்க்க ஆதார அடிப்படையில் இடையில் முறிக்கக் கூடாது என்ற கருத்தை இது தராது. 

இகாமத் சொல்லப்பட்ட பின்னர் இடையில் முறித்து விட்டு ஜமாஅத்தில் ஒருவர் சேர்ந்து கொண்டால் முறித்த தொழுகையின் நன்மை அவருக்குக் கிடைக்காது. முழுமைப்படுத்தாமல் முறித்து விட்டார் என்று தான் நாம் கருத வேண்டும். இப்படி முறிப்பதற்கு இகாமத்துக்குப் பின் எந்த தொழுகையும் இல்லை என்ற நபியின் கட்டளை காரணமாக உள்ளதால் முறித்த குற்றம் இவரை சேராது

எந்தத் தொழுகையும் என்பதில் உள்ள அழுத்ததை நாம் கவனிக்காமல் முன்னர் தவறாக கூறிவிட்டோம் என்பதை அறிவிக்கிறோம்.

சுன்னத்வல் ஜமாஅத் பள்ளியில் சொல்லப்படும் பாங்கிற்கு பதில் கூறலாமா?

 24/09/2020 இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்- மதிமுகம்

ஜம்வு தொழுகையில் இகாமத் இரண்டா? ஒன்றா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு முறை மட்டுமே ஹஜ் செய்துள்ளார்கள். அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃக்ரிப் மற்றும் இஷாத் தொழுகைகளை ஒரு பாங்கும் இரண்டு இகாமத்தும் கூறித் தொழுதார்கள் என்ற கருத்தில் ஹதீஸ் உள்ளது. இதற்கு மாற்றமாக ஒரு பாங்கும் ஒரு இகாமத்தும் கூறி தொழுதார்கள் எனவும் ஹதீஸ் உள்ளது. இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படுவதைப் போல் தெரிகின்றது. விளக்கம் தேவை.

அக்பர், தேங்காய்ப்பட்டிணம்.

பதில்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃக்ரிப் மற்றும் இஷாத் தொழுகைகளை ஒரு பாங்கும் இரண்டு இகாமத்தும் கூறி தொழுதார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. இதற்கு மாற்றமாக ஒரு பாங்கும் ஒரு இகாமத்தும் கூறி தொழுதார்கள் எனவும் ஹதீஸ் உள்ளன என்பது உண்மை தான்.

இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படவே செய்கின்றன என்பதும் உண்மை தான்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு முறை மட்டுமே ஹஜ் செய்திருக்கும் போது இந்த இரண்டு முறைகளையும் அவர்கள் செயல்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டுமே அவர்கள் செய்திருப்பார்கள்.

இது தொடர்பாக வரும் அனைத்துச் செய்திகளையும் ஆராயும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாங்கும் இரண்டு இகாமத்தும் கூறித் தொழுதார்கள் என்பதே சரியான செய்தியாக உள்ளது.

ஒரு இகாமத் கூறினார்கள் என்ற கருத்து இப்னு உமர் (ரலி) அவர்களின் வழியாக மட்டுமே அறிவிக்கப்படுகின்றது.

2269و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ أَبِي خَالِدٍ عَنْ أَبِي إِسْحَقَ قَالَ قَالَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ أَفَضْنَا مَعَ ابْنِ عُمَرَ حَتَّى أَتَيْنَا جَمْعًا فَصَلَّى بِنَا الْمَغْرِبَ وَالْعِشَاءَ بِإِقَامَةٍ وَاحِدَةٍ ثُمَّ انْصَرَفَ فَقَالَ هَكَذَا صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْمَكَانِ رواه مسلم

ஸலமா பின் குஹைல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் (தமது ஹஜ்ஜின் போது) முஸ்தலிஃபாவில் ஒரே இகாமத்தில் மஃக்ரிபையும், இஷாவையும் (சேர்த்துத்) தொழுதார்கள். பிறகு, "இவ்வாறே இப்னு உமர் (ரலி) அவர்களும் தொழுதார்கள்'' என்றும், "அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தொழுவார்கள் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்'' என்றும் அறிவித்தார்கள்.

நூல் : முஸ்லிம் 2475

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் இந்தத் தகவல் சரியானதல்ல. ஏனென்றால் இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாக இதற்கு மாற்றமாக இரண்டு இகாமத் என்ற கருத்தும் பல வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1673حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ جَمَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ بِجَمْعٍ كُلُّ وَاحِدَةٍ مِنْهُمَا بِإِقَامَةٍ وَلَمْ يُسَبِّحْ بَيْنَهُمَا وَلَا عَلَى إِثْرِ كُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا رواه البخاري

இப்னு உமர் (ரலி) கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில், மஃக்ரிபையும் இஷாவையும் ஒவ்வொன்றுக்கும் (தனித்தனி) இகாமத்துடன் சேர்த்துத் தொழுதார்கள். இரண்டிற்குமிடையிலோ ஒவ்வொன்றுக்கும் பின்போ கடமையல்லாத தொழுகை எதையும் தொழவில்லை.

நூல் : புகாரி 1673

654أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ وَكِيعٍ قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَمَعَ بَيْنَهُمَا بِالْمُزْدَلِفَةِ صَلَّى كُلَّ وَاحِدَةٍ مِنْهُمَا بِإِقَامَةٍ وَلَمْ يَتَطَوَّعْ قَبْلَ وَاحِدَةٍ مِنْهُمَا وَلَا بَعْدُ رواه النسائي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும், இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள். இவ்விரண்டில் ஒவ்வொன்றுக்கும் (தனியே) ஒரு இகாமத் கூறி தொழுதார்கள். இந்தத் தொழுகைகளுக்கு முன்பாகவோ, பின்பாகவோ அவர்கள் எதையும் உபரியாகத் தொழவில்லை.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : நஸாயீ 654

477أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ حَدَّثَنَا خَالِدٌ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ قَالَ رَأَيْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ بِجَمْعٍ أَقَامَ فَصَلَّى الْمَغْرِبَ ثَلَاثَ رَكَعَاتٍ ثُمَّ أَقَامَ فَصَلَّى يَعْنِي الْعِشَاءَ رَكْعَتَيْنِ ثُمَّ ذَكَرَ أَنَّ ابْنَ عُمَرَ صَنَعَ بِهِمْ مِثْلَ ذَلِكَ فِي ذَلِكَ الْمَكَانِ وَذَكَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَنَعَ مِثْلَ ذَلِكَ فِي ذَلِكَ الْمَكَانِ رواه النسائي

ஸலமா பின் குஹைல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் (தமது ஹஜ்ஜின் போது) முஸ்தலிஃபாவில் இகாமத் சொல்லி மூன்று ரக்அத் மஃக்ரிப் தொழுதார்கள். பிறகு இகாமத் சொல்லி இரண்டு ரக்அத் இஷாத் தொழுதார்கள். பிறகு, அவர்கள் "இந்த இடத்தில் இப்னு உமர் (ரலி) அவர்கள் எங்களுக்கு இவ்வாறே தொழ வைத்தார்கள்'' என்றும், "அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இவ்விடத்தில் தொழுதார்கள் எனவும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்'' என்றும் அறிவித்தார்கள்.

நூல் : நஸாயீ 477

மஃக்ரிபுக்கும், இஷாவுக்கும் தனித்தனியே இகாமத் சொல்ல வேண்டும் என்று இந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவும் இப்னு உமர் (ரலி) அவர்களின் வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே அறிவிப்பாளர் ஒரு தகவலை முரண்பட்டு அறிவித்தால் இரண்டும் சரியானதாக இருக்க முடியாது. இரண்டில் ஒன்று தான் உண்மையாக இருக்க வேண்டும். வேறு ஹதீஸ்களின் துணையுடன் ஆராயும் போது ஒரு பாங்கு, இரண்டு இகாமத் என்பது தான் சரியான அறிவிப்பு என்ற முடிவுக்கு நாம் வர முடியும். ஏனென்றால் இப்னு உமர் (ரலி) அவர்கள் அல்லாமல் வேறு நபித்தோழர்களும் இவ்வாறு அறிவித்துள்ளனர்.

139حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ كُرَيْبٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ دَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عَرَفَةَ حَتَّى إِذَا كَانَ بِالشِّعْبِ نَزَلَ فَبَالَ ثُمَّ تَوَضَّأَ وَلَمْ يُسْبِغْ الْوُضُوءَ فَقُلْتُ الصَّلَاةَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ الصَّلَاةُ أَمَامَكَ فَرَكِبَ فَلَمَّا جَاءَ الْمُزْدَلِفَةَ نَزَلَ فَتَوَضَّأَ فَأَسْبَغَ الْوُضُوءَ ثُمَّ أُقِيمَتْ الصَّلَاةُ فَصَلَّى الْمَغْرِبَ ثُمَّ أَنَاخَ كُلُّ إِنْسَانٍ بَعِيرَهُ فِي مَنْزِلِهِ ثُمَّ أُقِيمَتْ الْعِشَاءُ فَصَلَّى وَلَمْ يُصَلِّ بَيْنَهُمَا رواه البخاري

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

(ஹஜ்ஜின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  முஸ்தலிஃபா என்ற இடம் வந்ததும், உளூச் செய்தார்கள். அப்போது உளூவை முழுமையாக்கினார்கள். பின்னர் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டதும்,  மஃக்ரிப் தொழுகை நடத்தினார்கள். பிறகு ஒவ்வொரு மனிதரும் தத்தமது ஒட்டகத்தை தம் தங்குமிடங்களில் படுக்க வைத்தனர். தொடர்ந்து இஷாத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்ட போது அதையும் தொழுவித்தார்கள். (மஃக்ரிப், இஷா ஆகிய) இரு தொழுகைகளுக்கிடையிலும் வேறெந்தத் தொழுகையையும் அவர்கள் தொழவில்லை.

நூல் : புகாரி 139

ஜாபிர் (ரலி) அவர்களும் இது போன்று அறிவித்துள்ளார்கள்.

650أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ هَارُونَ قَالَ حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَعِيلَ قَالَ حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ قَالَ دَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى انْتَهَى إِلَى الْمُزْدَلِفَةِ فَصَلَّى بِهَا الْمَغْرِبَ وَالْعِشَاءَ بِأَذَانٍ وَإِقَامَتَيْنِ وَلَمْ يُصَلِّ بَيْنَهُمَا شَيْئًا رواه النسائي

2137 وَدَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ شَنَقَ لِلْقَصْوَاءِ الزِّمَامَ حَتَّى إِنَّ رَأْسَهَا لَيُصِيبُ مَوْرِكَ رَحْلِهِ وَيَقُولُ بِيَدِهِ الْيُمْنَى أَيُّهَا النَّاسُ السَّكِينَةَ السَّكِينَةَ كُلَّمَا أَتَى حَبْلًا مِنْ الْحِبَالِ أَرْخَى لَهَا قَلِيلًا حَتَّى تَصْعَدَ حَتَّى أَتَى الْمُزْدَلِفَةَ فَصَلَّى بِهَا الْمَغْرِبَ وَالْعِشَاءَ بِأَذَانٍ وَاحِدٍ وَإِقَامَتَيْنِ وَلَمْ يُسَبِّحْ بَيْنَهُمَا شَيْئًا رواه مسلم

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு முஸ்தலிஃபாவை அடைந்தார்கள். அங்கே ஒரு பாங்கு இரண்டு இகாமத்துடன் மஃக்ரிப் இஷாத் தொழுகைகளை தொழுதார்கள். இவ்விரண்டுக்கும் இடையில் வேறு எதையும் தொழவில்லை.

நூல் : நஸாயீ 650

இரண்டு இகாமத் சொன்னார்கள் என்ற தகவல் ஜாபிர் (ரலி) அவர்கள் வழியாக முஸ்லிமிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் ஒரு பாங்கும், ஒவ்வொரு தொழுகைக்கும் தனித்தனியே இகாமத்தும் சொல்லி இரண்டு இகாமத்துடன் மஃக்ரிப், இஷாத் தொழுகைகளைத் தொழுதார்கள் என்ற கருத்தில் வரும் செய்திகளே சரியானவை.

வீட்டில் தொழுதால் பாங்கு அவசியமா

தனியாகவோ, ஜமாஅத்தாகவோ வீட்டில் கடமையான தொழுகையைத் தொழுதால் அதற்கு பாங்கும், இகாமத்தும் சொல்ல வேண்டுமா?

அப்துல்லாஹ்

பதில் :

பாங்கும், இகாமத்தும் கடமையான தொழுகைக்கு அவசியம் என்று நபிமொழிகள் வலியுறுத்துகின்றன.

இதைச் சரியான முறையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு பள்ளியில் ஜமாஅத் தொழுகை முடிந்த பின்னர் நாம் தாமதமாகச் சென்றால் அங்கே நாம் பாங்கு சொல்லத் தேவை இல்லை. அப்பள்ளியில் முன்னரே சொல்லப்பட்ட பாங்கு நம்முடைய தொழுகைக்கும் போதுமானதாகும்.

مسند أحمد

11613 - حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا سُلَيْمَانُ الْأَسْوَدُ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ رَجُلًا جَاءَ وَقَدْ صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَقَالَ: " أَلَا رَجُلٌ يَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّيَ مَعَهُ "

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுது முடித்தவுடன் ஒருவர் வந்தார். இவருடன் சேர்ந்து தொழுது இவருக்கு (ஜமாஅத் தொழுகையின் நன்மை கிடைக்க) தர்மம் செய்பவர் உண்டா எனக் கேட்டார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி)

நூல்: அஹ்மத்

ஜமாஅத்தைத் தவற விட்டு தாமதமாக வந்த நபித்தோழரைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருடன் இன்னொருவரை சேர்ந்து தொழுமாறு கட்டளையிட்டார்கள். இன்னொரு பாங்கு சொல்லுமாறு கட்டளையிடவில்லை.

எனவே ஒரு பகுதியில் பாங்கு சொல்லப்பட்டால் அப்பகுதியில் உள்ளவர்கள் தாமதமாகத் தொழும் போது அல்லது வீட்டில் தொழும் போது மீண்டும் பாங்கு சொல்லும் அவசியம் இல்லை.

அப்பகுதியில் பாங்கு சொல்லப்படாவிட்டால் வீட்டில் கடமையான தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுதாலும், தனியாகத் தொழுதாலும் பாங்கும், இகாமத்தும் சொல்ல வேண்டும்.

صحيح البخاري 
2848 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا أَبُو شِهَابٍ، عَنْ خَالِدٍ الحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ مَالِكِ بْنِ الحُوَيْرِثِ، قَالَ: انْصَرَفْتُ مِنْ عِنْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَنَا أَنَا وَصَاحِبٍ لِي: «أَذِّنَا، وَأَقِيمَا وَلْيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا»

நான் நபிகள நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பினேன். அப்போது "நீங்கள் இருவரும் பயணத்தில் தொழுகை நேரம் வந்தால் பாங்கும், இகாமத்தும் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு இமாமாக நின்று தொழுவிக்கட்டும்'' என்று எனக்கும், என் நண்பர் ஒருவருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி)

நூல் : புகாரி 2848

கூட்டுத் தொழுகை நடத்த வாய்ப்பு கிடைக்காமல் தனியாகத் தொழுதாலும் பாங்கும், இகாமத்தும் கூறியே தொழ வேண்டும். பின்வரும் நபிமொழிகள் இவ்வாறு செய்வதைச் சிறப்பித்துக் கூறுகின்றன.

1017حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ أَنَّ أَبَا عُشَّانَةَ الْمَعَافِرِيَّ حَدَّثَهُ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَعْجَبُ رَبُّكُمْ مِنْ رَاعِي غَنَمٍ فِي رَأْسِ شَظِيَّةٍ بِجَبَلٍ يُؤَذِّنُ بِالصَّلَاةِ وَيُصَلِّي فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ انْظُرُوا إِلَى عَبْدِي هَذَا يُؤَذِّنُ وَيُقِيمُ الصَّلَاةَ يَخَافُ مِنِّي قَدْ غَفَرْتُ لِعَبْدِي وَأَدْخَلْتُهُ الْجَنَّةَ رواه أبو داود

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(மக்களே) மலைப் பாறைகளின் உச்சியில் பாங்கு சொல்லி தொழும் ஆட்டு இடையன் ஒருவனைப் பார்த்து உங்கள் இரட்சகன் மகிழ்ச்சியடைகின்றான்.  ”பாருங்கள் என் அடியானை! பாங்கும், இகாமத்தும் கூறித் தொழுகின்றான். (காரணம்) என்னை அவன் அஞ்சுகிறான். (ஆகவே) என் அடியானை நான் மன்னித்து விட்டேன் என்று இறைவன் கூறுகின்றான்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல் : அபூதாவூத் 1017

3667حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ حَدَّثَنَا سَعِيدٌ حَدَّثَنَا قَتَادَةُ وَعَبْدُ الْوَهَّابِ عَنِ ابْنِ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَبِي الْأَحْوَصِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ بَيْنَمَا نَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْفِطْرَةِ فَقَالَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ مِنْ النَّارِ قَالَ فَابْتَدَرْنَاهُ فَإِذَا هُوَ صَاحِبُ مَاشِيَةٍ أَدْرَكَتْهُ الصَّلَاةُ فَنَادَى بِهَا رواه أحمد

நாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த போது அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று ஒருவர் சொன்னதைச் செவியுற்றோம். (இதைச் செவியுற்ற) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவர் இயற்கை மார்க்கத்தில் உள்ளார் என்றார்கள். அவர் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு என்று கூறிய போது இவர் நரகிலிருந்து தப்பித்து விட்டார் என்றார்கள். உடனே நாங்கள் அவரிடம் விரைந்து சென்றோம். அவர் கால்நடைகளை மேய்ப்பவராக இருந்தார். தொழுகை நேரம் வந்தவுடன் அதற்காக பாங்கு கூறியுள்ளார்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : அஹ்மது 3667

More Articles …

Page 4 of 5