Sidebar

21
Sun, Jun
சமீபத்திய செய்திகள்

ஹஜ்ஜின் போது நபிகளாரின் கப்ரை ஜியாரத் செய்வது அவசியமா?

ஹஜ்ஜுக்கும், நபிகளாரின் கப்ரை ஸியாரத் செய்வதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஒருவர் ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு மதீனா செல்லாமல் வந்துவிட்டால் அவரின் ஹஜ்ஜுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

கஅபத்துல்லாஹ், ஸஃபா, மர்வா, அரஃபா, முஸ்தலிஃபா, மினா ஆகிய இடங்களில் செய்ய வேண்டிய அமல்களை மட்டும் செய்தால் ஹஜ் முழுமையாக நிறைவேறிவிடும். இந்த இடங்களில் செய்ய வேண்டிய அமல்களைத் தான் ஹஜ்ஜின் கிரியைகளாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். வேறு இடங்களுக்குச் சென்று எந்த அமலையும் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஆதாரப்பூர்வமான செய்திகள் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்யாதவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை வெறுத்தவராவார் என்ற செய்தி சில நூல்களில் இடம்பெற்றுள்ளது. ஆனால் அது ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல.

الكامل في ضعفاء الرجال)

 ثنا على بن إسحاق ثنا محمد بن محمد بن النعمان بن شبل حدثني جدي حدثني مالك عن نافع عن بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من حج البيت فلم يزرنى فقد جفانى

யார் ஹஜ் செய்து என்னை (என் கப்ரை) சந்திக்கவில்லையோ அவர் என்னை வெறுத்தவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : அல்காமில் ஃபில் லுஅஃபா இப்னு அதீ, 

இச்செய்தியில் இடம்பெறும் நுஃமான் பின் ஷிப்ல் என்பவர் நபிமொழிகளை இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று ஹதீஸ்கலை அறிஞர்களால் குற்றம் சுமத்தப்பட்டவர்.

المجروحين –)

النعمان بن شبل: من أهل البصرة، يروى عن أبى عوانة ومالك أخبرنا عنه الحسن بن سفيان، يأتي عن الثقات بالطامات، وعن الاثبات بالمقلوبات.

நுஃமான் பின் ஷிப்ல் என்பவர் பஸரா பகுதியைச் சார்ந்தவர். இவர் நம்பகமானவர் பெயரைப் பயன்படுத்தி பிரமாண்டமான செய்திகளை அறிவிப்பவர். மேலும் அறிவிப்பாளர் வரிசைகளை மாற்றி நம்பகமானவர் (பெயரைப் பயன்படுத்தி பொய்யான செய்திகளை) அறிவிப்பவர் என்று இப்னு ஹிப்பான் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
நூல் : அல்மஜ்ரூஹீன்

இதைப் போன்று பின்வரும் செய்தியையும் சிலர் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

من زارني وزار أبي ابراهيم في عام واحد ضمنت له الجنة

யார் ஒரு வருடத்தில் என் (கப்ரை) ஸியாரத் செய்து, என் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்களின் (கப்ரையும்) ஸியாரத் செய்வாரோ அவருக்கு நான் சொர்க்கத்திற்கு பெறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்தச் செய்தியின் தரத்தைப் பற்றி இமாம் நவவீ அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள் :

المجموع شرح المهذب –(

)فرع (مما شاع عند العامة في الشام في هذه الازمان المتأخرة ما يزعمه بعضهم ان رسول الله صلى الله عليه وسلم قال (من زارني وزار أبي ابراهيم في عام واحد ضمنت له الجنة) وهذا باطل ليس هو مرويا عن النبي صلى الله عليه وسلم ولا يعرف في كتاب صحيح ولا ضعيف بل وضعه بعض الفجرة

என்னையும் என் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்களையும் ஒரே வருடத்தில் ஜியாராத் செய்வாரோ அவருக்காக நான் சொர்க்கத்திற்கு பெறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக சிரியா நாட்டு மக்களிடம் பரவியுள்ளது. இது பொய்யான செய்தியாகும். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியாக அறிவிக்கப்படவில்லை. ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் இது இல்லை. பலவீனமான ஹதீஸ்களிலும் இது இல்லை. மாறாக இது தீயவர்களால் இட்டுக்கட்டப்பட்டதாகும்.
நூல் : அல்மஜ்மூவு,

لسان الميزان)

حدثنا النعمان بن هارون ثنا أبو سهل بدر بن عبد الله المصيصي ثنا الحسن بن عثمان الزيادي ثنا عمار بن محمد ثنا خالي سفيان عن منصور عن إبراهيم عن علقمة عن بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه و سلم من حج حجة الإسلام وزار قبري وغزا غزوة وصلى في بيت المقدس لم يسأله الله فيما افترض عليه

ஒருவர் ஹஜ் செய்து என் கப்ரை ஜியாரத் செய்து, போர் செய்து, பைத்துல் மக்திஸில் தொழுதிருந்தால் அவர் மீது கடமையாக்கியவை குறித்து அல்லாஹ் கேள்வி கேட்க மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: லிஸானுல் மீஸான்

இந்தச் செய்தியில் இடம்பெறும் பத்ரு பின் அப்துல்லாஹ் என்பவரின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் எந்தத் தகவலும் இல்லை. மேலும் இவர் பொய்யான செய்திகளை அறிவிப்பவர் என்று ஹாபிழ் தஹபீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

ميزان الاعتدال في نقد الرجال)

 1137 ( 1548 ) بدر بن عبد الله أبو سهل المصيصي عن الحسن بن عثمان الزيادي بخبر باطل وعنه النعمان بن هارون

பத்ரு பின் அப்துல்லாஹ் என்பவர் ஹஸன் பின் உஸ்மான் என்பவர் வழியாக பொய்யான செய்திகளை அறிவித்துள்ளார்.
நூல் : மீஸானுல் இஃதிதால்

سنن الدارقطني 

2695 – ثنا الْقَاضِي الْمَحَامِلِيُّ , نا عُبَيْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْوَرَّاقُ , نا مُوسَى بْنُ هِلَالٍ الْعَبْدِيُّ , عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:  مَنْ زَارَ قَبْرِي وَجَبَتْ لَهُ شَفَاعَتِي

யார் என் கப்ரை ஜியாரத் செய்வாரோ அவருக்கு என்னுடைய பரிந்துரை கடமையாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் ; இப்னு உமர் (ரலி)
நூல் : தாரகுத்னீ

இந்தச் செய்தியில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் மூஸா பின் ஹிலால் அல்அப்தீ என்பவரின் நம்பகத் தன்மை உறுதி செய்யப்படவில்லை.

الجرح والتعديل 

734 – موسى بن هلال العبدى البصري روى عن هشام بن حسان سمعت ابى يقول ذلك قال أبو محمد وروى عن عبد الله العمرى روى عنه أبو بجير محمد بن جابر المحاربي ومحمد بن اسماعيل الاحمسي وابو امية الطرسوسى محمد بن ابراهيم. حدثنا عبد الرحمن قال سألت ابى عنه فقال: مجهول.

மூஸா பின் ஹிலால் அல்அப்தீ என்பவர் யாரென அறியப்படாதவர் ஆவார்.
நூல் : அல்ஜரஹ் வத்தஃதீல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரை ஸியாரத் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வரும் செய்திகள் அனைத்தும் பலவீனமானவையாகும்.

மதீனா ஸியாரத் ஹஜ்ஜின் ஓர் அங்கமா?

மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவீயை ஜியாரத் செய்வது ஹஜ்ஜில் உள்ள ஒரு வணக்கம் என்றே அதிகமான மக்கள் விளங்கி வைத்துள்ளனர். மதீனாவுக்குச் சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தை ஜியாரத் செய்வது ஹஜ்ஜின் நிபந்தனையாகவோ, அல்லது சுன்னத்தாகவோ, அல்லது விரும்பத்தக்கதாகவோ எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸிலும் கூறப்படவில்லை. இது குறித்து பலவீனமான அல்லது இட்டுக்கட்டப்பட்ட சில ஹதீஸ்களே உள்ளன.,மதீனாவுக்குச் செல்வது பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தை ஜியாரத் செய்வது பற்றியும் நாம் அறிந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாகும்.

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ أَخْبَرَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ عَنْ قَزَعَةَ قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَرْبَعًا قَالَ سَمِعْتُ مِنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ غَزَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثِنْتَيْ عَشْرَةَ غَزْوَةً ح حَدَّثَنَا عَلِيٌّ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ الْمَسْجِدِ الْحَرَامِ وَمَسْجِدِ الرَّسُولِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَسْجِدِ الْأَقْصَى

"(அதிக நன்மையை நாடி) மூன்று பள்ளிவாசல்கள் தவிர வேறு பள்ளிகளுக்குப் பிரயாணம் மேற்கொள்ளக் கூடாது. அவைகளாவன: மஸ்ஜிதுல் ஹராம், எனது பள்ளி (மஸ்ஜிதுன்னபவீ), மஸ்ஜிதுல் அக்ஸா'' என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

நூல்: புகாரி 1189, 1197, 1864, 1996

இந்த ஹதீஸினடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் உட்பட எந்த அடக்கத்தலத்துக்கும் பிரயாணம் செய்யக் கூடாது என்று அறிய முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டிய பள்ளிவாசல் ஒன்று மதீனாவில் உள்ளது; பிரயாணம் செய்து அதிக நன்மையை நாடும் மூன்று பள்ளிகளில் ஒன்றாக அது அமைந்துள்ளது; அங்கே தொழுவது ஏனைய பள்ளிகளில் (மஸ்ஜிதுல் ஹராம் நீங்கலாக) தொழுவதை விட ஆயிரம் மடங்கு உயர்வானது என்ற நோக்கத்திற்காக மதீனாவுக்குச் செல்லலாம். இதே நோக்கத்துக்காக ஹஜ்ஜுக்குச் சென்றவர்களும் மதீனா செல்லலாம்.சொந்த ஊரிலிருந்து அப்பள்ளியில் தொழுவதற்காகவே தனிப் பிரயாணமும் மேற்கொள்ளலாம்.

இவ்வாறு மதீனாவுக்குச் சென்றவர்கள் அப்பள்ளியில் இயன்ற அளவு தொழ வேண்டும். அதன் பிறகு அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தையும், மற்ற அடக்கத்தலங்களையும் ஜியாரத் செய்யலாம். மறுபடியும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நமது மதீனா பயணத்தின் நோக்கம் ஜியாரத் செய்வதாக இருக்கக் கூடாது. மஸ்ஜிதுந் நபவியில் தொழுவது தான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். நாம் மதீனா வந்து விட்டதால் வந்த இடத்தில் ஜியாரத்தையும் செய்கிறோம். ஜியாரத்துக்காக பயணத்தை மேற்கொள்ளவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வது பற்றி ஒரே ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கூட இல்லை. பொதுவாக கப்ருகளை ஜியாரத் செய்வது பற்றிக் கூறப்படும் ஹதீஸ்களின் அடிப்படையிலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரையும் நாம் ஜியாரத் செய்கிறோம் என்பதையும் கவனத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு ஜியாரத் செய்பவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى عَنْ شَيْبَانَ عَنْ هِلَالٍ هُوَ الْوَزَّانُ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ لَعَنَ اللَّهُ الْيَهُودَ وَالنَّصَارَى اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسْجِدًا قَالَتْ وَلَوْلَا ذَلِكَ لَأَبْرَزُوا قَبْرَهُ غَيْرَ أَنِّي أَخْشَى أَنْ يُتَّخَذَ مَسْجِدًا

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்த போது, "யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டனர்'' என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1330, 1390, 4441

இந்த எச்சரிக்கை எப்போதும் நினைவில் இருக்க வேண்டும். நமக்கு முந்தைய சமுதாயங்கள் எதனால் அல்லாஹ்வின் சாபத்துக்கு உரியவர்கள் ஆனார்களோ அதைச் செய்து விடாதவாறு நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கப்ரில் ஸஜ்தாச் செய்வது,

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமே துஆச் செய்வது

போன்றவற்றைச் செய்தால் அதை வணங்குமிடமாக ஆக்கிய குற்றம் நம்மைச் சேரும். இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்வது மிகவும் அவசியம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த ஏகத்துவக் கொள்கையை நிலைநாட்டுவதற்காக கல்லால் அடிக்கப்பட்டார்களோ, ஒதுக்கி வைக்கப்பட்டார்களோ, ஊரை விட்டு விரட்டப்பட்டார்களோ, பல போர்க்களங்களைச் சந்தித்தார்களோ அந்த ஏகத்துவக் கொள்கைக்கு அவர்களின் அடக்கத்தலத்திலேயே பங்கம் விளைவிக்கக் கூடாது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே ஜியாரத் செய்ய வேண்டும்.

மக்காவில் பணி செய்வோர் எங்கே இஹ்ராம் கட்டவேண்டும்?

மக்காவில் பணியாற்றும் நாங்கள் உம்ராச் செய்யும் போது இஹ்ராமை எங்கள் அறைகளில் கட்டிக் கொள்ளலாமா? அல்லது ஆயிஷா பள்ளி சென்று இஹ்ராம் கட்டி விட்டு வர வேண்டுமா?

ஜாஃபர்

பதில்

ஒவ்வொரு நாட்டினருக்கும் குறிப்பிட்ட இடங்களை நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் இஹ்ராம்  கட்டுவதற்கு  எல்லையாக நிர்ணயித்துள்ளார்கள்.

இந்த  எல்லைகளுக்கு வெளியில்  இருந்து  வருபவர்களுக்கே  இவை எல்லைகளாகக் கூறப்பட்டுள்ளன.

வரையறுக்கப்பட்ட எல்லைப் பகுதிகளுக்குள் ஒருவர் இருந்தால்,  இருக்கும் இடத்திலிருந்தே  இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

1529حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ عَمْرٍو عَنْ طَاوُسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَّتَ لِأَهْلِ الْمَدِينَةِ ذَا الْحُلَيْفَةِ وَلِأَهْلِ الشَّأْمِ الْجُحْفَةَ وَلِأَهْلِ الْيَمَنِ يَلَمْلَمَ وَلِأَهْلِ نَجْدٍ قَرْنًا فَهُنَّ لَهُنَّ وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِ أَهْلِهِنَّ مِمَّنْ كَانَ يُرِيدُ الْحَجَّ وَالْعُمْرَةَ فَمَنْ كَانَ دُونَهُنَّ فَمِنْ أَهْلِهِ حَتَّى إِنَّ أَهْلَ مَكَّةَ يُهِلُّونَ مِنْهَا رواه البخاري

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும், ஷாம்வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும், யமன்வாசிகளுக்கு  யலம்லமையும், நஜ்த்வாசிகளுக்கு கர்னையும் இஹ்ராம் கட்டும் எல்லைகளாக  நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும், ஹஜ்  உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். மக்காவாசிகள் உள்ளிட்ட இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள்,  தாம் இருக்கும் இடத்திலேயே  இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.

நூல் : புகாரி 1529

மேற்கண்ட எல்லைகளுக்கு அப்பால் இருந்து வருபவர்கள் மேற்கண்ட இடங்களை அடையும் போது இஹ்ராம் கட்ட வேண்டும்.

மக்காவாசிகள் உள்ளிட்ட மேற்கண்ட எல்லைகளுக்கு உள்ளே இருப்பவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இஹ்ராம் கட்டலாம்.

மக்காவைச் சொந்த ஊராகக் கொள்ளாமல் வெளியூரில் இருந்து வந்தவர்கள் மக்காவாசிகள் கணக்கில் வர மாட்டார்கள். எனவே அவர்கள் ஹரம் எல்லைக்கு வெளியே சென்று இஹ்ராம் கட்டிக் கொண்டு உள்ளே வந்து உம்ராச் செய்ய வேண்டும்.

இதற்குப் பின்வரும் செய்தி ஆதாரமாக இருக்கின்றது.

19حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الْوَدَاعِ فَمِنَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجٍّ فَقَدِمْنَا مَكَّةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَحْرَمَ بِعُمْرَةٍ وَلَمْ يُهْدِ فَلْيُحْلِلْ وَمَنْ أَحْرَمَ بِعُمْرَةٍ وَأَهْدَى فَلَا يُحِلُّ حَتَّى يُحِلَّ بِنَحْرِ هَدْيِهِ وَمَنْ أَهَلَّ بِحَجٍّ فَلْيُتِمَّ حَجَّهُ قَالَتْ فَحِضْتُ فَلَمْ أَزَلْ حَائِضًا حَتَّى كَانَ يَوْمُ عَرَفَةَ وَلَمْ أُهْلِلْ إِلَّا بِعُمْرَةٍ فَأَمَرَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَنْقُضَ رَأْسِي وَأَمْتَشِطَ وَأُهِلَّ بِحَجٍّ وَأَتْرُكَ الْعُمْرَةَ فَفَعَلْتُ ذَلِكَ حَتَّى قَضَيْتُ حَجِّي فَبَعَثَ مَعِي عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ وَأَمَرَنِي أَنْ أَعْتَمِرَ مَكَانَ عُمْرَتِي مِنْ التَّنْعِيم رواه البخاري

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

(உம்ராவிற்காக  இஹ்ராம்  கட்டியிருந்த)  எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. அரஃபா (துல்ஹஜ்  9 ஆம்)  நாள்  ஆகும் வரை  நான்  மாதவிடாயில்  நீடித்தேன். அப்போது நான் உம்ராவிற்காகவே இஹ்ராம் கட்டியிருந்தேன். (இது குறித்து நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் முறையிட்ட போது)  எனது தலைமுடியை அவிழ்த்து தலைவாரிக் கொள்ளும்படியும் உம்ராவை விட்டுவிட்டு ஹஜ்ஜிற்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளுமாறும் என்னைப் பணித்தார்கள். அவ்வாறே நான்  செய்து  எனது  ஹஜ்ஜை  நான் செய்து முடித்த போது என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரை அனுப்பி தன்யீம் என்ற இடத்திலிருந்து (புறப்பட்டு) எனது (விட்டுப்போன) உம்ராவிற்காக இஹ்ராம் கட்டுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைப் பணித்தார்கள்.

நூல் : புகாரி 319

வேறு  ஒரு  அறிவிப்பில்  ஆயிஷா (ரலி) அவர்களை ஹரமுடைய  எல்லையை  விட்டும் வெளியே  அழைத்துச் செல்லுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

1788 فَدَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَبْكِي فَقَالَ مَا يُبْكِيكِ قُلْتُ سَمِعْتُكَ تَقُولُ لِأَصْحَابِكَ مَا قُلْتَ فَمُنِعْتُ الْعُمْرَةَ قَالَ وَمَا شَأْنُكِ قُلْتُ لَا أُصَلِّي قَالَ فَلَا يَضِرْكِ أَنْتِ مِنْ بَنَاتِ آدَمَ كُتِبَ عَلَيْكِ مَا كُتِبَ عَلَيْهِنَّ فَكُونِي فِي حَجَّتِكِ عَسَى اللَّهُ أَنْ يَرْزُقَكِهَا قَالَتْ فَكُنْتُ حَتَّى نَفَرْنَا مِنْ مِنًى فَنَزَلْنَا الْمُحَصَّبَ فَدَعَا عَبْدَ الرَّحْمَنِ فَقَالَ اخْرُجْ بِأُخْتِكَ الْحَرَمَ فَلْتُهِلَّ بِعُمْرَةٍ رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானை அழைத்து, "உனது சகோதரியை ஹரமுக்கு வெளியே அழைத்துப் போ! அவர் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும்! என்று கூறினார்கள்.

 நூல் : புகாரி 1788

தந்தைக்காக உம்ராச் செய்யலாமா?

எனது தந்தை மரணித்து சில வருடங்கள் ஆகின்றன. நான் ஒரு முறை உம்ரா செய்து விட்டேன். இந்த ரமலானில் எனது தந்தைக்காக உம்ரா செய்யலாம் என்று இருக்கிறேன். இதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா?

ஹம்மாத்

பெற்றோர்களுக்கு ஹஜ் கடமையாக இருந்து அதை அவர்கள் செய்யாமல் மரணித்து விட்டால் அவர்களுக்காக அவர்களது பிள்ளைகள் ஹஜ் செய்யலாம்.

பெற்றோருக்கு ஹஜ் கடமையாக இல்லாத நிலையில் மரணித்து விட்டால் பெற்றோரை இது குறித்து அல்லாஹ் கேள்வி கேட்க  மாட்டான். எனவே பெற்றோருக்கு ஹஜ் கடமையாக இல்லாவிட்டால் அவருக்காக பிள்ளைகள் ஹஜ் செய்ய ஆதாரம் இல்லை.

1852 – حدثنا موسى بن إسماعيل، حدثنا أبو عوانة، عن أبي بشر، عن سعيد بن جبير، عن ابن عباس رضي الله عنهما، أن امرأة من جهينة، جاءت إلى النبي صلى الله عليه وسلم، فقالت: إن أمي نذرت أن تحج فلم تحج حتى ماتت، أفأحج عنها؟ قال: «نعم حجي عنها، أرأيت لو كان على أمك دين أكنت قاضية؟ اقضوا الله فالله أحق بالوفاء»

என் தாயார் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து ஹஜ் செய்யாமல் மரணித்து விட்டார். அவர் சார்பில் நான் ஹஜ் செய்யட்டுமா என்று ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன் தாய் மீது கடன் இருந்தால் நீ தானே நிறைவேற்றுவாய்? எனவே அவருக்காக நீ ஹஜ் செய். அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வின் கடன் நிறைவேற்ற அதிகத் தகுதி உள்ளது என்றார்கள்.

நூல் : புகாரி 1582, 7315

அல்லாஹ்வின் கடன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதில் இருந்து ஹஜ் கடமையாக இருந்து அதைச் செய்யாமல் தந்தை மரணித்து இருந்தால் பிள்ளைகள் அதைச் செய்ய முடியும் என்று அறிந்து கொள்ளலாம்.

உம்ராவைப் பொருத்த வரை அது ஹஜ் போல் கடமையான வணக்கம் அல்ல. உம்ரா செய்யாவிட்டால் அல்லாஹ் கேள்வி கேட்க மாட்டான். எனவே மற்றவருக்காக உம்ரா செய்ய முடியாது.

ஆயினும் ஹஜ்ஜுடன் சேர்த்து உம்ரா செய்வதும் ஹஜ்ஜின் வகையில் ஒன்றாக உள்ளதால் பெற்றோருக்காக ஹஜ் செய்யும் போது அதனுடன் உம்ராவையும் செய்யலாம்.

سنن الترمذي

930 – حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ النُّعْمَانِ بْنِ سَالِمٍ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ، عَنْ أَبِي رَزِينٍ العُقَيْلِيِّ، أَنَّهُ أَتَى  النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَبِي شَيْخٌ كَبِيرٌ لَا يَسْتَطِيعُ الحَجَّ، وَلَا العُمْرَةَ، وَلَا الظَّعْنَ، قَالَ: «حُجَّ عَنْ أَبِيكَ وَاعْتَمِرْ»: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَإِنَّمَا ذُكِرَتِ العُمْرَةُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الحَدِيثِ أَنْ يَعْتَمِرَ الرَّجُلُ عَنْ غَيْرِهِ وَأَبُو رَزِينٍ العُقَيْلِيُّ: اسْمُهُ لَقِيطُ بْنُ عَامِرٍ

அபூ ரஸீன் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தை வயது முதிர்ந்த பெரியவராக இருக்கின்றார். அவரால் ஹஜ் செய்யவோ, உம்ரா செய்யவோ, பயணிப்பதற்கோ முடியாது என்றேன். உனது தந்தைக்காக நீ ஹஜ்ஜும், உம்ராவும் செய்து கொள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : திர்மிதி 852

பெற்றோருக்காக உம்ரா செய்யலாம் என்ற இந்த அனுமதி உம்ராவை மட்டும் தனித்து செய்வதற்கான அனுமதி இல்லை. மாறாக ஹஜ்ஜூடன் சேர்த்து உம்ராவை செய்யும் போது மட்டும் உள்ள அனுமதியாகும்.