Sidebar

19
Fri, Jun
சமீபத்திய செய்திகள்

பிறை விஷயமாக சாட்சிகள் கூறுவதை அப்படியே ஏற்கலாமா?

ஷஅபான் அல்லது ரமளான் மாதத்தின் 29ஆம் நாள், பிறையைக் கண்ணால் பார்க்க முடியாது என்று அறிவியல் உலகம் சொல்லும் ஒரு நாளில் கண்ணால் பார்த்ததாக நம்பத் தகுந்த முஸ்லிம்கள் கூறினால் அதை ஏற்றுக் கொள்ளலாமா?

எம். ஷபீர், திருவனந்தபுரம்.

இரண்டு சாட்சிகள் பிறை பார்த்ததாகக் கூறினால் அதை அப்பகுதியினர் ஏற்க வேண்டும் என்பதற்கு ஹதீஸில் ஆதாரம் உள்ளது. ஆனால் அவர்கள் எந்த நேரத்தில் பார்த்ததாகக் கூறினாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இதற்குப் பொருள் கொள்ளக் கூடாது.

இரவு பத்து மணிக்கு தலைப் பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினால் அதை ஏற்க முடியாது. ஏனெனில் அந்த நேரத்தில் தலைப் பிறையைப் பார்க்க முடியாது.

நண்பகலில் தலைப் பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினாலும் அதையும் ஏற்க முடியாது. ஏனெனில் நண்பகலில் தலைப் பிறையைப் பார்க்க முடியாது. மாலை நேரத்தில் கூட கிழக்கில் தலைப்பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் கண்ணால் பார்க்கும் வகையில் தலைப்பிறை தோன்றுவது மேற்குப் பகுதியில்தான்.

பிறை 25ல் தலைப் பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினாலும் அதை ஏற்க முடியாது. ஏனெனில் அது தலைப் பிறை பார்ப்பதற்குரிய நாள் அல்ல.

இது போன்று தான், சாதாரணக் கண்களுக்குப் பிறை தென்படாது என்று அறிவியல் உலகம் உறுதியாகக் கூறும் ஒரு நாளில் பிறை பார்த்ததாக நம்பத் தகுந்த சாட்சியங்கள் கூறினாலும் அதை ஏற்கக் கூடாது.

வேண்டுமென்று பொய் கூறாத சாட்சிகளாக இருந்தாலும் கண்கள் தவறு செய்வதுண்டு. சிறிய மேகத் துண்டு கூட பிறையாகத் தோற்றமளிக்க வாய்ப்பு உள்ளது.

நாம் வானத்தில் ஓரிடத்தை உற்று நோக்கும் போது அந்த இடத்தில் ஒரு நட்சத்திரம் இருப்பது போல் தெரியும் உடனே மறைந்து விடும். ஆனால் உண்மையில் அந்த இடத்தில் நட்சத்திரம் எதுவும் இருக்காது. இந்தத் தவறு பிறை விஷயத்திலும் நடக்க வாய்ப்புள்ளது.

ஒருவரை விஷம் வைத்துக் கொடுத்துக் கொன்றதாக நம்பகமானவர்கள் சாட்சியம் கூறுகிறார்கள். ஆனால் பிரேதப் பரிசோதனையில் விஷம் கொடுக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் சாட்சிகள் கூறியதை யாரும் ஏற்க மாட்டார்கள்.

இது போல் பிறை பார்க்கச் சாத்தியமற்ற நாளில் பிறை பார்த்ததாகக் கூறுவதை ஏற்கக் கூடாது. காரணம், பிறை தென்படாது என்று அறிவியல் உலகம் கூறுவது நிரூபிக்கப்பட்ட உண்மையாக இருப்பதால் அதை மறுக்க முடியாது.

இந்த இடத்தில் ஒரு சந்தேகம் எழலாம். பிறை தோன்றி விட்டது என்று அறிவியல் உலகம் கூறினாலும் புறக் கண்ணால் பார்க்காமல் நோன்பைத் தீர்மானிக்கக் கூடாது என்று சொல்லும் நாம், பிறை தோன்றாது என்று அறிவியல் கூறுவதை மட்டும் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்? என்பதே அந்தச் சந்தேகம்.

இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். வானியல் கணிப்பை ஏற்று, முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்று நாம் கூறுவதன் பொருளை விளங்கிக் கொள்ள வேண்டும்.

வானியல் நிபுணர்களால் கணிக்கவே முடியாது என்று நாம் வாதிடுவதாகக் கருதக் கூடாது.

பல நூறு வருடங்களுக்குப் பின்னால் சென்னையில் தோன்றக் கூடிய சந்திர கிரகணத்தை இன்றைக்கே அவர்களால் கணித்துச் சொல்ல முடியும். எத்தனை மணி, எத்தனை நிமிடத்தில் தோன்றும் என்று கணிக்கிறார்களோ அதில் எந்த மாற்றமுமின்றி அது நடந்தேறும். அந்த அளவுக்கு வானியல் வளர்ந்துள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்வோம்.

இன்று இந்தப் பகுதியில் பிறை தென்படும் வகையில் இருக்கும் என்று கணித்துக் கூறினால் அந்தப் பகுதியினர் காணும் வகையில் ஆகாயத்தில் நிச்சயம் இருக்கும். ஏனெனில் அந்த அளவுக்குத் துல்லியமாகக் கணிக்க இயலும். மேகம் மற்றும் சில புறக் காரணங்களால் நமது பார்வைக்குத் தெரியாமல் போகவும் கூடும்.

அவர்களது கணிப்பு சரியானது தான் என்பதை ஏற்றுக் கொள்ளும் அதே சமயத்தில் தலைப் பிறையைத் தீர்மானிக்க அதை அளவுகோலாகக் கொள்ளக் கூடாது என்பது தான் நமது வாதம். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாதத்தின் முதல் தினத்தைத் தீர்மானிப்பதற்குக் கண்களால் பார்க்க வேண்டும் என்று வரையறுத்து விட்டனர்.

வானியல் கணிப்பின் படி எங்கே எப்போது பார்க்க முடியும் என்று கூறுகிறார்களோ அதை நம்பி அங்கே அப்போது பார்க்க முயற்சிக்கலாமே தவிர பார்க்காமல் தலைப்பிறை என்ற தீர்மானத்திற்கு வரக் கூடாது. அதே சமயம், குறிப்பிட்ட நாளில் பிறை தென்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று அறிவியல் உலகம் கூறும் போது அதை நாம் ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சூரியனும், சந்திரனும் கணக்கின்படி இயங்குகின்றன.

திருக்குர்ஆன் 55:5

இந்த வசனத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் சந்திரன் தோன்றாது என்று அறிவியல் மூலம் உறுதி செய்யப்பட்ட கணக்கிற்கு மாற்றமாக நம்பத் தகுந்த சாட்சிகள் கூறினாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

உலகில் எங்கு பிறை தெரிந்தாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற வாதம் சரியா?

28/04/2020 ரமலான் மாத வாட்ஸ் அப் கேள்வி பதில்

பிறை காலண்டர் பித்தலாட்டம்

பிறை பார்த்து நோன்பையும் பெருநாளையும் முடிவு செய்ய வேண்டும் என்ற நபிவழியைக் குழி தோண்டிப் புதைத்து முன்னரே கணிக்கும் வகையில் காலண்டர் வெளியிட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். அதை நியாயப்படுத்த சில குதர்க்க வாதங்களையும் முன்வைக்கிறார்கள். அந்த வாதங்கள் அனைத்துமே தவறானவை என்பதை கீழே விளக்கியுள்ளோம்.

பிறை குறித்து அல்லாஹ்வின் தூதர் காட்டிய வழிமுறை இதுதான்

صحيح البخاري

1909 – حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَوْ قَالَ: قَالَ أَبُو القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ غُبِّيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلاَثِينَ»

அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1909

صحيح البخاري

1906 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ رَمَضَانَ فَقَالَ: «لاَ تَصُومُوا حَتَّى تَرَوُا الْهِلَالَ، وَلاَ تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ»

பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1906

صحيح البخاري

1907 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً، فَلاَ تَصُومُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا العِدَّةَ ثَلاَثِينَ»

மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1907

صحيح مسلم

2582 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا غُنْدَرٌ عَنْ شُعْبَةَ ح وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ قَالَ سَمِعْتُ أَبَا الْبَخْتَرِىِّ قَالَ أَهْلَلْنَا رَمَضَانَ وَنَحْنُ بِذَاتِ عِرْقٍ فَأَرْسَلْنَا رَجُلاً إِلَى ابْنِ عَبَّاسٍ – رضى الله عنهما – يَسْأَلُهُ فَقَالَ ابْنُ عَبَّاسٍ – رضى الله عنهما – قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِنَّ اللَّهَ قَدْ أَمَدَّهُ لِرُؤْيَتِهِ فَإِنْ أُغْمِىَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ ».

நாங்கள் தாதுஇரக் எனும் இடத்தில் ரமளான் பிறை பார்த்தோம். இது பற்றி விளக்கம் பெறுவதற்காக ஒருவரை இப்னு அப்பாஸ் (ரலி)யிடம் அனுப்பினோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பிறையைப் பார்ப்பது வரை (முந்தைய) மாதத்தை அல்லாஹ் நீட்டி விட்டான். எனவே மேகமூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முழுமையாக்குங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபுல்பக்தரீ
நூல்: முஸ்லிம்

இந்த நபிமொழிகளுக்கு தங்கள் இஷ்டப்படி விளக்கம் கொடுத்து ஹதீஸைச் சாகடித்து விட்டு தர்க்க ரீதியான சில வாதங்களை முன் வைக்கிறார்கள். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

உலகமெல்லாம் ஒரே சூரியன்; உலகமெல்லாம் ஒரே சந்திரன்

உலகத்தில் ஒரே ஒரு சந்திரன் தான் உள்ளது. எனவே உலகில் எங்காவது அது பிறந்து விட்டால் முழு உலகுக்கும் அது பிறந்து விட்டதாகத் தான் பொருள்.

விஞ்ஞான அடிப்படையில் கணித்து,

இன்று தலைப்பிறை என்று அறிவித்தால் அதை உலகமே ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உலகமெல்லாம் ஒரே சந்திரன் என்பது அடிபட்டுப் போய் விடும் என்று சிலர் வாதிடுகின்றனர்.

வானியல் அறிவு இல்லாத மக்களுக்கு இது பெரிய விஞ்ஞான உண்மை போலவும், அறிவுப்பூர்வமான வாதம் போலவும் தோன்றுகிறது.

ஆனால் சிந்தித்துப் பார்க்கும் போது இதை விட அபத்தமான வாதம் ஏதும் இருக்க முடியாது. இதில் எந்த விஞ்ஞானமும் இல்லை. அறிவுப்பூர்வமான வாதமும் இல்லை.

உலகத்தில் ஒரே சந்திரன் தான் உள்ளது என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. சந்திரன் எப்படி உலகுக்கெல்லாம் ஒன்று தான் உள்ளதோ அது போல் உலகம் முழுவதற்கும் ஒரு சூரியன் தான் உள்ளது.

சந்திரன் எப்படி காலத்தைக் காட்டுவதாக உள்ளதோ அது போல் தான் சூரியனும் நமக்குக் காலம் காட்டியாக உள்ளது.

அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன். இரவை அமைதிக் களமாகவும், சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் எற்பாடு.

அல்குர்ஆன் 6:96

சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன.

அல்குர்ஆன் 55:6

இந்த வசனங்களில் சூரியன், சந்திரன் ஆகிய இரண்டுமே நமக்குக் காலம் காட்டிகள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவில் இருள் சூழும் வரையில் தொழுகையையும் பஜ்ரு (தொழுகையில்) குர்ஆனையும் நிலை நாட்டுவீராக! பஜ்ரு (தொழுகையில்) குர்ஆன் சாட்சி கூறப்படுவதாக இருக்கிறது

அல்குர்ஆன் 17:78

(முஹம்மதே!) அவர்கள் கூறுவதைச் சகித்துக் கொள்வீராக! சூரியன் உதிப்பதற்கு முன்பும், அது மறைவதற்கு முன்பும், இரவு நேரங்களிலும் உமது இறைவனைப் போற்றிப் புகழ்வீராக! பகலின் ஓரங்களிலும் துதிப்பீராக! இதனால் (கிடைக்கும் கூலியில்) நீர் திருப்தியடையலாம்.

அல்குர்ஆன் 20:130

இந்த வசனங்களில் சூரிய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நமது வணக்கங்கள் அமைக்கப்பட்டதாகக் கூறுகிறான்.

இரண்டுமே காலம் காட்டிகள் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை.

இரண்டும் எவ்வாறு காலம் காட்டிகளாக உள்ளன என்பதைத் தான் பலரும் அறியாமல் உள்ளனர்.

சூரியன் நமக்கு இரவு, பகலைக் காட்டுகிறது. காலை, மாலை, நண்பகல் போன்ற நேரங்களையும் காட்டுகிறது. எப்படிக் காட்டுகிறது என்றால் நமது ஊரிலிருந்து அது எந்தக் கோணத்தில் உள்ளது என்பது தான் காலத்தைக் காட்டுமே தவிர சூரியனே காலத்தைக் காட்டாது.

நமது தலைக்கு நேராக 0 டிகிரியில் அது இருந்தால் நண்பகல் என்கிறோம்.

நமது தலையிலிருந்து கிழக்கே 90 டிகிரியில் இருந்தால் அதை அதிகாலை என்கிறோம்.

நமது தலையிலிருந்து மேற்கே 90 டிகிரியில் இருந்தால் அதை இரவின் துவக்கம் என்கிறோம்.

அதாவது சூரியனும் அது அமைந்துள்ள கோணமும் சேர்ந்து தான் காலம் காட்டுகிறது.

சூரியன் நமது தலைக்கு மேல் இருக்கும் போது, நமக்குக் கிழக்கே 90 டிகிரியில் உள்ளவர்களின் பார்வையில் மறைந்து கொண்டிருப்பதாகக் காட்சியளிக்கும். அதாவது அவர்கள் இரவின் துவக்கத்தை அடைவார்கள்.

நம் தலைக்கு மேல் உள்ள இதே சூரியன், நமக்கு மேற்கே 90 டிகிரியில் வாழ்கின்ற மக்களுக்கு, அப்போது தான் உதிப்பதாகக் காட்சியளிக்கும்.

உலகத்துக்கு எல்லாம் ஒரே சூரியன் தான். ஆனால் அது நமக்கு நண்பகல் நேரத்தைக் காட்டும் போது சிலருக்கு அதிகாலை நேரத்தைக் காட்டுகிறது. மற்றும் சிலருக்கு அந்தி மாலை நேரத்தைக் காட்டுகிறது.

நமக்கு நண்பகலைக் காட்டும் நேரத்தில் பாதி உலகுக்கு அது அறவே தென்படாமல் இரவைக் காட்டிக் கொண்டிருக்கும்.

எனக்கு நண்பகல் என்பதால் அது முழு உலகுக்கும் நண்பகல் தான் என்று எவரேனும் வாதிட்டால் அவனை விட முட்டாள் யாரும் இருக்க முடியாது.

நமது நண்பர் சவூதியில் இருக்கிறார். சென்னையில் சூரியன் மறைந்தவுடன் நாம் நோன்பு துறக்க வேண்டும். நமது சவூதி நண்பருக்குப் போன் செய்து, சூரியன் மறைந்து விட்டது; நோன்பு துறங்கள்' என்று கூற மாட்டோம். கூறினால் அவர் கேட்க மாட்டார். ஏனெனில் நாம் நோன்பு துறக்கும் நேரத்தில் தான் அவர் அஸர் தொழுதிருப்பார். அவருக்கு சூரியன் மறைய இன்னும் இரண்டரை மணி நேரம் காத்திருக்க வேண்டும்.

இதன் காரணமாகவே ஒரே சூரியன் என்பதை மறுத்ததாக ஆகுமா?

இதே போல் தான் சந்திரனும் காலம் காட்டும்.

சவூதியில் காட்சி தந்த சந்திரன் அத்தோடு உலகை விட்டு ஓடி ஒளிந்து விடாது. சூரியனைப் போன்று ஒவ்வொரு வினாடியும் பூமியைச் சுற்றி, பூமி முழுமைக்கும் காட்சி தர தன் பயணத்தைத் தொடர்கிறது. அந்தச் சந்திரன் நமக்கு நேராக எப்போது வருகிறதோ அப்போது தான் அது நமக்குக் காலத்தைக் காட்டும்.

சூரியன் காலம் காட்டுகிறது என்றால் சூரியனும், நமது பகுதியில் அது அமைந்துள்ள கோணமும் சேர்ந்து தான் காலம் காட்டுகிறது.

சந்திரன் காலம் காட்டுகிறது என்றால் சந்திரனும், நமது பகுதியில் அது அமைந்துள்ள கோணமும் சேர்ந்து தான் காலம் காட்டுகிறது.

இந்த அறிவியல் உண்மை விளங்காத காரணத்தால் தான் உலகமெல்லாம் ஒரே பிறை என்று அறிவீனமான உளறலை, அறிவியல் முகமூடி அணிந்து மக்களைச் சிலர் வழி கெடுக்கின்றனர்.

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.

சந்திரனில் எவ்வாறு ஒளி தோன்றுகிறது? சந்திரன் பூமியைப் போன்ற மண் உருண்டை தான். அதில் வெளிச்சம் தருவதற்கு ஒன்றுமே இல்லை.

நாம் ஒரு டார்ச் லைட் வெளிச்சத்தை ஒரு சுவரில் பாய்ச்சினால் அதன் மீது வெளிச்சம் பட்டு அதிலிருந்து இலேசான வெளிச்சம் பிரதிபலிக்கும்.

அது போல் தான் சூரியனின் வெளிச்சம் சந்திரன் மீது படும் போது சந்திரனிலிருந்து அவ்வெளிச்சம் பூமியை நோக்கி எதிரொளிக்கப்படுகிறது. அதன் காரணமாகவே சந்திரனில் நாம் வெளிச்சத்தைக் காண்கிறோம்.

மற்றபடி சந்திரனில் நெருப்போ, வெளிச்சம் தரும் வேறு எதுவுமோ கிடையாது. சந்திரனில் ஆம்ஸ்ட்ராங் இறங்கி எடுத்து வந்தது மண்ணைத் தான்.

ஓர் உருண்டை வடிவமான பொருள் மீது நாம் வெளிச்சம் பாய்ச்சினால் அவ்வுருண்டையின் சரிபாதியின் மீது மட்டுமே வெளிச்சம் பாய்ச்ச முடியும். இன்னொரு பாதியின் மீது வெளிச்சம் படாது. இதையும் நாம் அறிந்து வைத்திருக்கிறோம்.

அதனால் தான் எந்த நேரமும் பூமியின் பாதிப் பகுதி பகலாகவும், பாதிப் பகுதி இரவாகவும் உள்ளது.

இதே அடிப்படையில் தான் கிரகணம் ஏற்படும் நாட்களைத் தவிர மற்ற எல்லா நாட்களிலும் (அமாவாசை உட்பட) சூரியனின் ஒளி சந்திரனின் சரிபாதியில் பட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறது.

பவுர்ணமி தினத்தில் எப்படி பாதி சந்திரன் மீது ஒளி பட்டு பூமியை நோக்கித் தெரிகிறதோ அது போலவே அமாவாசையின் போதும் பாதி சந்திரன் மீது சூரிய ஒளி  பூமிக்கு எதிர்த் திசையில் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது.

முதல் பிறையின் போதும் பாதி சந்திரன் மீது ஒளி பட்டுக் கொண்டிருக்கிறது.

365 நாட்களும் (கிரகண நாட்கள் தவிர) சந்திரனின் சரிபாதியானது, வெளிச்சத்தைப் பிரதிபலிக்கக் கூடியதாகவும், மற்றொரு பாதி இருட்டாகவும் இருக்கிறது.

பவுர்ணமியில் சந்திரன் மீது வெளிச்சம் படும் போது, வெளிச்சம் படும் பகுதியை முழுமையாகப் பூமியை நோக்கி சந்திரன் காட்டுகிறது. அமாவாசையின் போது சூரிய ஒளி பட்ட பகுதியை பூமியின் எதிர்த் திசையில் காட்டி விட்டு வெளிச்சம் படாத பகுதியை நம்மை நோக்கிக் காட்டுகிறது.

அமாவாசையில் நமக்குத் தான் வெளிச்சம் தெரியவில்லையே தவிர சந்திரனில் எப்போதும் வெளிச்சம் இருந்து கொண்டு தான் உள்ளது.

நாம் ஒருவரை நேருக்கு நேராகப் பார்த்தால் நமது மூக்கு முழுமையாக அவருக்குக் காட்சி தருகிறது. நாம் சற்றே திரும்பினால் நமது மூக்கின் ஒரு பகுதி அவருக்குத் தெரிகிறது. நாம் முகத்தைத் திருப்பிக் கொண்டு முதுகைக் காட்டினால் அவருக்கு நமது மூக்கு தெரியாது. அவருக்கு மூக்கு தெரியாததால் நமக்கு மூக்கே இல்லை என்று கூற முடியாது.

அது போல் தான் சந்திரன் மீது படும் வெளிச்சத்தில் பெரும் பகுதியை பூமிக்கு எதிர்த் திசையில் காட்டி விட்டு, பூமியை நோக்கி ஓரமாகக் காட்டினால் அதை முதல் பிறை என்கிறோம். ஒவ்வொரு நாளும் காட்டும் அளவை அதிகரிக்கும் போது நாட்களின் எண்ணிக்கையையும் கூட்டிக் கொள்கிறோம்.

இந்த விபரங்களை எதற்குச் சொல்கிறோம் என்றால், சந்திரனில் காலத்தைக் காட்ட ஒன்றுமே இல்லை. அது எல்லா நாளிலும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. அது நம்மை நோக்கி எந்த அளவு திரும்புகிறது என்ற அடிப்படையில் தான் காலம் காட்டுகிறது.

எனவே நம்மை நோக்கி அது திரும்பி விட்டதா? என்பதன் அடிப்படையில் தான் நாளைத் தீர்மானிக்க வேண்டுமே தவிர, யாரையோ நோக்கித் திரும்பியதை நம்மை நோக்கித் திரும்பியதாகக் கருதக் கூடாது.

இதைப் புரிந்து கொண்டால் இவர்களின் அறியாமையை அனைவரும் புரிந்து கொள்வார்கள்.

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது.

 ஹதீஸ்களை நிராகரித்து விட்டு விஞ்ஞானக் கணிப்பின் படி தலைப்பிறையைத் தீர்மானிக்க வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர். இவர்களின் இந்த முடிவு சரியானதா என்பதை அறிவதற்கு முன்னால் இவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களை ஒவ்வொன்றாக அலசுவோம்.

பிறை பார்த்து நோன்பு நோற்க வேண்டும் என்ற கருத்தில் அமைந்த இத்தனை ஹதீஸ்களுமே ஆதாரப்பூர்வமானவை தான். ஆனாலும் வானியல் அறிவு வளராத காலகட்டத்தில் தான் நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள். இன்றைக்கு வானியல் அறிவு பெருகியுள்ள சூழ்நிலையில் அதை ஏற்பது தான் சரி என்று அவர்கள் வாதிடுகின்றார்கள்.

வானியல் அறிவு வளர்ச்சி பெறாத காலத்துக்கு மட்டுமே பிறை பார்த்தல் பொருந்தும். இன்றைய காலத்துக்குப் பொருந்தாது என்பது உங்கள் சொந்த யூகமா? அல்லது அல்லாஹ்வோ அவனது தூதரோ இவ்வாறு கூறியுள்ளார்களா? என்று நாம் அவர்களிடம் கேட்டால் எங்கள் சொந்த யூகமல்ல. அல்லாஹ்வின் தூதர் தான் இதைக் கூறியுள்ளார்கள் என்று கூறி கீழ்க்கண்ட நபிமொழியை எடுத்துக் காட்டுகின்றனர்.

صحيح البخاري

1913 – حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ قَيْسٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَمْرٍو، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «إِنَّا أُمَّةٌ أُمِّيَّةٌ، لاَ نَكْتُبُ وَلاَ نَحْسُبُ، الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا» يَعْنِي مَرَّةً تِسْعَةً وَعِشْرِينَ، وَمَرَّةً ثَلاَثِينَ

நாம் உம்மி சமுதாயமாவோம். நமக்கு எழுதவும் தெரியாது. வானியலையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதாவது ஒரு தடவை 29 ஒரு தடவை 30 என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1913

இது தான் இவர்கள் தமது வாதத்தை நிறுவிட எடுத்து வைக்கும் ஆதாரம்.

இந்த ஆதாரத்திலிருந்து இவர்கள் எடுத்துக் வைக்கும் வாதம் என்ன?

எழுதவும் தெரியாத வானியலையும் அறியாத சமுதாயமாக நாம் இருந்தால் பிறை பார்த்து நோன்பு வைக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அந்த நிலையை விட்டும் சமுதாயம் உயர்ந்து விட்டால் அப்போது பிறை பார்க்கத் தேவையில்லை. வானியல் அறிவின் மூலமே தீர்மானம் செய்து கொள்ளலாம். வானியல் அறிவு அன்றைக்கு இல்லாததால் தான் பிறை பார்க்கும் வழிமுறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தனர். அந்தக் காரணம் இன்று இல்லாததால் நாம் கணித்தே முடிவு செய்யலாம் என்பது தான் இவர்களின் வாதம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட காரணத்தைக் கூறி ஒரு சட்டத்தைக் கூறியிருந்தால் அந்தக் காரணம் நீங்கும் போது அந்தச் சட்டமும் நீங்கி விடும் என்ற வாதத்தை நாம் மறுக்க மாட்டோம். மறுக்கவும் கூடாது. ஆனால் இந்த ஹதீஸில் அத்தகைய காரணம் கூறப்பட்டிருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை.

இந்த ஹதீஸுக்கு தவறான பொருளைத் தருவதால் தான் இப்படி ஒரு தோற்றம் ஏற்படுகிறது.

அதை இங்கே அலசுவோம்.

இன்னா உம்மதுன் உம்மியதுன் என்பதற்கு நாம் உம்மி சமுதாயமாவோம் என்று மொழி பெயர்த்துள்ளனர். இது சரியான மொழி பெயர்ப்பு தான். (ஆனாலும் இதன் கருத்தாழத்தை இவர்கள் கவனிக்கவில்லை என்பதைப் பின்னர் விளக்கிக் காட்டுவோம்.)

அடுத்ததாக லா நக்துபு என்பதற்கு நாம் எழுதுவதை அறிய மாட்டோம்' என்று மொழி பெயர்த்துள்ளனர். இந்த மொழி பெயர்ப்பும் சரியானது தான்.

அடுத்ததாக வலா நஹ்சுபு என்ற வாசகத்துக்கு வானியலையும் அறிய மாட்டோம் என்று மொழி பெயர்த்துள்ளனர். இவ்வாறு மொழி பெயர்த்ததன் அடிப்படையில் தான் தங்கள் வாதத்தையே இவர்கள் நிலை நிறுத்துகிறார்கள். இந்த மொழி பெயர்ப்பு தவறு என்பது நிரூபணமானால் இவர்களின் வாதமே சுக்கு நூறாக நொறுங்கிப் போய்விடும்.

நஹசுபு என்று வார்த்தை இந்த ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஹஸிப என்ற மூலத்திலிருந்து பிறந்ததாகும். ஹிஸாப் என்ற சொல்லும் இதிலிருந்து பிறந்ததாகும்.

இன்றைக்குச் சிலர் ஹிஸாப் என்ற வார்த்தையை வானியல் என்ற பொருளிலும் கையாண்டு வருகின்றனர். வானியல் அறிவு பெருகிவிட்ட காலத்தில் அதற்கென ஒரு வார்த்தை அவசியம் எனக் கருதி ஹிஸாப் என்ற வார்த்தையை வானியலுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் ஹிஸாப் என்ற வார்த்தை வானியலைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதே இல்லை. எந்த மொழியாக இருந்தாலும் ஒரு வார்த்தைக்குப் பொருள் கொள்ளும் போது அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்ட காலத்தில் அதற்கு அந்தப் பொருள் இருந்ததா? என்பதைக் கவனிப்பது அவசியம்.

இதைப் புரிந்து கொள்வதற்கு ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.

துப்பாக்கி என்பது ஒரு வகையான ஆயுதம் என்பதை நாம் அறிவோம். துப்பாக்கி என்ற வார்த்தை ஒரு நூலில் பயன்படுத்தப்பட்டால் குறிப்பிட்ட அந்த ஆயுதம் என்று நாம் பொருள் செய்து கொள்வோம்.

ஆனால் திருக்குறளில் துப்பார்க்கு எனத் துவங்கும் குறளில் துப்பாக்கி என்ற வார்த்தை வருகிறது. இந்த வார்த்தைக்கு ஆயுதம் என்று பொருள் கொள்ள மாட்டோம். வள்ளுவர் காலத்தில் இந்த ஆயுதம் இருக்கவில்லை. அல்லது இந்த ஆயுதத்தைக் குறிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டதில்லை. உணவாக ஆக்கி' என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் திருக்குர்ஆனிலோ, நபிமொழியிலோ பயன்படுத்தப்பட்ட வார்த்தைக்குப் பொருள் கொள்ளும் போது அந்தப் பொருளில் அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்டதா என்பதைக் கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆனில் ஹஸிப என்ற மூலத்திலமைந்த சொற்கள் நான்கு பொருட்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

1 போதும், போதுமானது, போதுமானவன் என்பது போன்றவை முதலாவது பொருள். (உதாரணம்: அல்லாஹ் உனக்குப் போதுமானவன்.) 2.206, 2.173, 5.104, 8.62, 8.64, 9.59, 9.68,9.129, 39.38, 58.8, 65.3, ஆகிய பதினோரு இடங்களில் ஹஸிப என்ற மூலத்திலமைந்த சொற்கள் மேற்கண்ட அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

2. மனதால் நினைப்பது, கருதுவது, தீர்மானிப்பது போன்றவை இரண்டாவது பொருளாகும்.

2.214, 2.273, 3.78, 3.142, 3.169, 3.178, 3.180, 3.188, 5.71, 7.30, 8.59, 9.16, 14.42, 14.47, 18.9, 18.18, 18.102,18.104, 23.55, 23.115, 24.11, 24.15, 24.39, 24.57, 25.44, 27.44, 27.88, 29.2, 29.4, 33.20, 39.47, 43.37,43.80, 45.21, 47.29, 58.18, 59.2, 59.14, 65.3, 75.3, 75.36, 76.9, 90.5, 90.7, 104.3

இந்த வசனங்களில் எல்லாம் மனதால் நினைப்பது, கருதுவது என்ற பொருளில் ஹஸிப என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

3.கஹ்ப் அத்தியாயத்தில் ஓர் இடத்தில் மட்டும் ஹஸிப என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்த வார்த்தை வேதனை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

4.திருக்குர்ஆனில் இதைத் தவிர உள்ள ஏனைய இடங்களில் இந்த வார்த்தை கணக்கு, எண்ணிக்கை, கேள்வி கணக்கு என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இறைவன் விரைந்து கேள்வி கணக்கு கேட்பவன், கேள்வி கணக்கு கேட்கப்படும் நாள், உங்களிடம் கணக்கு கேட்பான், கணக்கின்றி வாரி வழங்குபவன், சூரியனும், சந்திரனும் ஒரு கணக்கின் படி இயங்குகின்றன என்பது போன்ற இடங்களில் இந்த வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2.202, 2.212, 2.284, 3.19, 3.27, 3.37, 3.199, 4.6, 4.86, 5.4, 6.52, 6.62, 6.69, 10.5, 13.18, 13.21, 13.40, 13.41,14.41, 14.51, 17.12, 17.14, 21.1, 21.47, 23.117, 24.38, 24.39, 26.39, 33.39, 38.16, 38.26, 38.39, 38.53, 39.10,40.17, 40.27, 40.40, 55.5, 65.8, 69.20, 69.26, 78.27, 78.36, 84.8, 88.26 ஆகிய 46 இடங்களில் கணக்கு, எண்ணிக்கை, கணக்குக் கேட்டல் என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. திருக்குர்ஆனின் எந்த இடத்திலும் வானியல் என்ற பொருளில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படவே இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை ஆராய்ந்தால் அவர்கள் எந்த இடத்திலும் ஹிஸாப் ஹஸிப போன்ற வார்த்தைகளை வானியல் என்ற கருத்தில் பயன்படுத்தியதே இல்லை.

உதாரணத்திற்கு புகாரியில் 25, 393, 1400, 2946, 6924, 7285, 103, 1500, 6979, 7197, 2412, 2641, 2718, 2933, 3221, 3415, 3700, 4115, 6392, 7489, 4666, 4712, 4939,6536, 6537, 5253, 5312, 5350, 5655, 5705, 5752, 472, 6541 ஆகிய இடங்களில் கணக்கு எண்ணிக்கை என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மற்ற இடங்களில் நன்மையை நாடி காரியமாற்றுதல், கருதுவது, போதுமானது, பாரம்பரியம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. கணக்கு, எண்ணிக்கை என்ற பொருளில் அல்லாது மேற்கண்ட பொருளில் சுமார் 125 இடங்களில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

கணக்கு, எண்ணிக்கை என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்ட இடங்களானாலும் மற்ற 125 இடங்களானாலும் எந்த இடத்திலும் வானியல் என்ற கருத்தில் பயன்படுத்தப்படவில்லை.

மேற்கூறிய இடங்களில் வீம்புக்காக யாராவது வானியல் என்று பொருள் செய்தாலும் அது பொருந்தக் கூடியதாக இருக்காது என்பதை எல்லோரும் விளங்கிக் கொள்ளலாம்.

உதாரணமாக அல்லாஹ் உங்களிடம் கணக்கு கேட்பான் என்பதற்கு வானியலைப் பற்றி கேட்பான் என்று கூற முடியாது. அது போல் அல்லாஹ் கணக்கின்றி கொடுப்பவன் என்பதற்கு வானியல் இல்லாமல் கொடுப்பான் என்று கூற முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வானியலைக் குறிப்பிட ஹிஸாப் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை எனும் போது, ஆயிரக்கணக்கான தடவை இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தும் ஒரு தடவை கூட வானியல் என்ற கருத்தில் பயன்படுத்தப்படவில்லை எனும் போது லா நஹ்சுபு என்ற வார்த்தை இடம் பெறும் இந்த ஹதீசுக்கு மட்டும் வானியல் அறிய மாட்டோம் என்று பொருள் கொள்வது ஏற்புடையதல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இந்த வார்த்தை வானியல் என்ற பொருளில் பயன்படுத்தப்படவில்லை என்பது மட்டுமே இவ்வாறு பொருள் கொள்வதை நிராகரிக்க ஏற்றதாகி விடும். ஆனால் இது தவிர வேறு காரணங்களாலும் வானியல் அறிய மாட்டோம்' என்று பொருள் கொள்வது பொருத்தமற்றதாகும்.

நாம் உம்மி சமுதாயமாவோம் என்று ஹதீஸின் வாசகம் துவங்குகிறது. உம்மு என்றால் தாய் என்று பொருள். உம்மீ என்றால் தாயைச் சார்ந்திருப்பவன் என்பது நேரடிப் பொருள். தாயைச் சார்ந்திருக்கும் கைக்குழந்தைக்கு எப்படி கல்வி ஞானம் இருக்காதோ அது போன்ற நிலையில் இருக்கும் சமுதாயம் என்ற கருத்தில் உம்மி சமுதாயம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக எழுதவும் படிக்கவும் தெரியாத சமுதாயம் என்ற கருத்தில் இது பயன்படுத்தப்படும்.

நாம் உம்மி சமுதாயம் (அதாவது பாமர சமுதாயம்) என்று கூறிவிட்டு பாமரத்தனத்தை உறுதிப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது தான் பொருத்தமாக இருக்கும்.

எழுதவும், படிக்கவும் தெரியாத ஒரு சமுதாயத்திடம் போய் நீங்கள் வடிகட்டிய பாமரர்களாக இருக்கிறீர்கள். உங்களுக்கு எழுதவும் தெரியவில்லை. கம்யூட்டர் சயின்சும் தெரியவில்லை என்று யாரும் கூற மாட்டார்கள். எழுதவும் தெரியவில்லை; படிக்கவும் தெரியவில்லை என்று கூறினால் அது பொருத்தமாக இருக்கும்.

நீங்கள் பாமரர்களாக இருக்கிறீர்கள் என்று கூறிய பிறகு அதை உறுதி செய்ய சாதாரண அடிப்படை அறிவு கூட இல்லையே என்று தான் கூறுவோம்.

இது போல் தான் நாம் உம்மி சமுதாயம் என்று நபிகள் நாயகம் (ஸல்) ஆரம்பம் செய்கிறார்கள். அதாவது ஏதுமறியாத சமுதாயம் என்று ஆரம்பம் செய்கிறார்கள். எதனால் உம்மியாக இருக்கிறோம் என்பதை இரண்டு காரணங்களைக் கொண்டு நிரூபிக்கிறார்கள். ஒன்று நமக்கு எழுதத் தெரியாது. மற்றொன்று நமக்கு ஹிஸாப் தெரியாது. ஹிஸாப் என்பதற்கு வானியல் என்று பொருள் கொள்வோமானால் அது எப்படிப் பொருந்தும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்?

இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா?

எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு நமக்கு இல்லை. அது போல் சாதாரணமான ஹிஸாப் (அதாவது எண்ணிக்கை) என்ற அறிவும் இல்லை. எனவே நாம் உம்மி சமுதாயமாக உள்ளோம் என்று கூறினால் அது பொருந்திப் போகிறது.

ஹிஸாப் என்பதற்கு வானியல் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத புதிய பொருளைக் கொள்வதை விட எண்ணிக்கை என்று அன்றைய காலத்தில் இந்த வார்த்தைக்கு கொடுக்கப்பட்டு வந்த சாதாரண பொருளைச் செய்து பாருங்கள். எவ்வளவு அற்புதமாக பொருந்திப் போகிறது என்பதை உணர்வீர்கள்.

அதாவது எழுதவும் தெரியாத எண்ணிக்கையும் தெரியாத உம்மி சமுதாயமாக நாம் இருக்கிறோம் என்பது தான் இதன் பொருள்.

அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து மக்களில் பலருக்கு ஒன்று இரண்டு என்று வரிசையாக எண்ணத் தெரியாது. இன்றைக்கும் கூட சுவற்றில் தினம் ஒரு கோடு வரைந்து பால் கணக்குப் பார்க்கக் கூடியவர்கள் உள்ளனர். 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தில் எண்ணத் தெரியாதவர்கள் இருந்ததில் யாரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

புகாரி அல்லாத மற்ற நூல்களில் உள்ள அறிவிப்புகள் எண்ணத் தெரியாத சமுதாயம் என்ற கருத்திலேயே இவ்வாசகம் பயன்படுத்தப்பட்டதை மேலும் உறுதிப்படுத்துகிறது.

நாம் உம்மி சமுதாயமாவோம். நமக்கு எழுதவும் தெரியாது. எண்ணவும் தெரியாது. மாதம் என்பது (பத்து விரல்களையும் விரித்துக் காட்டி) இப்படி, (மீண்டும் விரித்துக் காட்டி) மீண்டும் இப்படி (மீண்டும் விரித்துக்காட்டி) மீண்டும் இப்படி'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்றாவது தடவை கட்டை விரலை மடக்கிக் கொண்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம்

நாம் உம்மி சமுதாயமாவோம். நமக்கு எழுதவும் தெரியாது. எண்ணவும் தெரியாது. மாதம் என்பது இப்படியும் இப்படியும் இருக்கும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி 29 வரை குறிப்பிட்டார்கள். இரு கைகளையும் மூன்று தடவை விரித்து மடக்கினார்கள். மூன்றாவது தடவை கட்டை விரலை மடக்கிக் கொண்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: அஹ்மத்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு கைவிரல்களையும் விரிக்கிறார்கள். மீண்டும் இரு கைவிரல்களை விரிக்கிறார்கள். மீண்டும் இரு கை விரல்களை விரிக்கும் போது ஒரு விரலை மடக்கிக் கொள்கிறார்கள். மறுபடியும் அதே போல் மூன்று தடவை கைவிரல்களை விரித்துக் காட்டுகிறார்கள் இது தான் மாதம் எனவும் கூறுகிறார்கள்.

ஒன்று, இரண்டு என்று முப்பது வரை கூட எண்ணத் தெரியாத சமுதாயத்துக்கு முதலில் பத்து விரல்களைக் காட்டுகிறார்கள். மீண்டும் பத்து விரல், மீண்டும் பத்து விரல் காட்டி விளக்குகிறார்கள். அடுத்த மாதத்துக்கு ஒரு விரலை மடக்கிக் காட்டுகிறார்கள். எண்ணத் தெரிந்த சமுதாயமாக இருந்தால் 29 அல்லது 30 என்று கூறினால் போதாதா? (சில சமயங்களில் அதைப் புரிந்து கொள்ளும் மக்கள் இருந்த சபையில் அப்படியும் கூறியுள்ளார்கள்) எண்ணத் தெரிந்த சமுதாயத்திடம் போய் முப்பது என்பதை மூன்று தடவை விரல்களைக் காட்டி யாரேனும் விளக்குவதுண்டா?

எண்ணத் தெரிந்தவரிடம் முப்பது ரூபாய் கடன் கேட்கும் போது மூன்று தடவை விரல்களை விரித்துக் காட்டி இந்த ரூபாயையும் இந்த ரூபாயையும் இந்த ரூபாயையும் தா என்று கேட்டால் நமக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று அவன் நினைப்பான். நாம் ஒரு கடைக்குச் சென்று ஒரு பொருளின் விலை கேட்கிறோம். அதற்கு கடைக்காரர் தனது விரல்களை ஐந்து தடவை விரித்துக்காட்டி இவ்வளவு விலை என்று சொன்னால் நாம் என்ன செய்வோம்?

ஆனால் அதே சமயம் எண்ணத் தெரியாதவர்களிடம் இப்படித் தான் கேட்க முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து மக்களுக்கு வானியல் தான் தெரியாது. மற்றபடி எண்ணிக்கையெல்லாம் அத்துபடி என்று வாதிடுவோமேயானால், எண்ணிக்கை அறிந்த சமுதாயத்திடம் போய் ஒருவன் 29ஐயும் 30ஐயும் இப்படிக் கூறினால் அவனது நிலை என்னவாகும்? அந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கருதப்பட்டாலும் பரவாயில்லை நான் இப்படித் தான் பொருள் செய்வேன் என்று எந்த முஸ்லிமும் சொல்ல மாட்டான். எனவே எப்படிப் பார்த்தாலும் மேற்கண்ட ஹதீஸிற்கு வானியலை அறிய மாட்டோம் என்ற பொருளைக் கொள்வது எந்த வகையிலும் ஏற்றதல்ல.

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள்.

நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை பார்த்து நோன்பு விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டமாக இருந்தால் கணித்துக் கொள்ளுங்கள் என்பதே அந்த நபிமொழி.

இந்த நபிமொழியில் மேகமூட்டமாக இருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கணித்துக் கொள்ளச் சொல்லி விட்டதால் வானியல் கணிப்பை ஏற்கலாம் என்று வாதிடுகிறார்கள்.

இவ்வாறு கூறுவது அவர்களுடைய வாதத்திற்கே முரண்பாடானது என்பதைப் பற்றி இவர்கள் சிந்திப்பதில்லை.

நாம் உம்மி சமுதாயம். நமக்கு வானியல் தெரியாது என்று முந்தைய வாதத்தில் கூறினார்கள். வானியல் தெரியாத அந்த சமுதாயம் மேகமூட்டம் ஏற்படும் போது கணித்துக் கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்றும் கூறினார்கள். இவர்களது வாதப்படி வானியல் தெரியாத சமுதாயத்திடம் கணித்துக் கொள்ளுங்கள் என்று எப்படிக் கூற முடியும்?

இவர்கள் ஆதாரமாக எடுத்துக் காட்டும் ஹதீஸில் நீங்கள் கணித்துக் கொள்ளுங்கள் என்று பொருள் செய்த இடத்தில் ஃபக்துரூ என்ற வாசகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாசகத்துக்கு எண்ணிக்கையை எண்ணுதல், மதிப்பிடுதல் என்றெல்லாம் பொருள் உண்டு.

எண்ணிக்கை கூட தெரியாதவர்கள் வாழ்ந்த ஒரு சமுதாயத்திடம் மதிப்பிட்டுக் கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள். மற்ற அறிவிப்புகளில் மேகமூட்டமாக இருந்தால் முப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள். ஷஅபானை முப்பது நாட்கள் என்று முழுமையாக்குங்கள் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்புகளையும் கவனத்தில் கொண்டு, எந்தச் சமுதாயத்திடம் இது முதலில் கூறப்பட்டதோ அந்தச் சமுதாயம் கணித்து முடிவு செய்யும் நிலையில் இருந்ததா என்பதையும் கவனத்தில் கொண்டு இந்த ஹதீஸை ஆராய்ந்திருந்தால் ஃபக்துரூ என்பதற்கு மேகமாக இருக்கும் போது முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள் என்று பொருள் செய்திருக்க வேண்டும். இன்னும் சொல்வதானால் மற்றொரு அறிவிப்பில் ஃபக்துரூ என்பதுடன் ஸலாஸீன என்ற வாசகமும் சேர்ந்து இடம் பெற்றுள்ளது. ஸலாஸீன என்றால் முப்பதாக என்று பொருள். முப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள் என்று பொருள் செய்தால் அது பொருத்தமாக உள்ளது. முப்பது நாட்களாகக் கணியுங்கள் என்றால் அதற்கு அர்த்தமே இல்லாமல் போய் விடுகிறது. எண்ணிக்கையைத் திட்டவட்டமாகக் கூறிய பிறகு அங்கே கணிப்புக்கு என்ன வேலை இருக்கும்?

லா நஹ்ஸிபு என்பதற்கு வானியலை அறிய மாட்டோம் என்று ஒரு வாதத்துக்காக பொருள் கொண்டாலும் இவர்களுக்கு எதிராகத் தான் இந்த ஹதீஸ் அமைந்துள்ளது.

நாம் உம்மி சமுதாயம் என்று இந்த ஹதீஸ் துவங்குகிறது. நாம் எழுதுவதை அறிய மாட்டோம். ஹிஸாபையும் அறிய மாட்டோம் என்று ஒரே தொடராகக் கூறப்பட்டுள்ளது. எழுதுவதை அறிய மாட்டோம் என்பதற்கு எப்படிப் பொருள் கொள்கிறோமோ அதே போன்று தான் ஹிஸாபை அறிய மாட்டோம் என்ற வாசகத்திற்கும் பொருள் கொள்ள வேண்டும்.

எழுதுவதை அறிய மாட்டோம் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் யாருக்குமே எழுதத் தெரியாது என்ற பொருள் அல்ல. ஏனென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எழுதத் தெரிந்தவர்களும் இருந்தார்கள். குர்ஆன் எழுதப்பட்டது எழுதத் தெரிந்த நபித்தோழர்களால் தான்.

அதே போல் ஹிஸாபையும் அறிய மாட்டோம் என்பதற்கு வானியல் அறிய மாட்டோம் என்ற பொருளைக் கொடுத்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய சமுதாயத்தில் வானியல் தெரிந்தவர்களும் இருந்தார்கள் என்று தான் அர்த்தமாகிறது. எண்ணிக்கையில் குறைவாக இருந்தார்கள் என்று வேண்டுமானால் கூறலாம்.

ஹிஸாபையும் அறிய மாட்டோம் என்பதற்கு வானியல் அறிய மாட்டோம் என்ற பொருளின் படி வானியல் கணிப்பு தெரிந்த சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் இருந்த போதிலும் அவர்களிடம் கேட்டு பிறையைத் தீர்மானிக்காமல் பிறையைப் பார்க்க வேண்டும்; அல்லது மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

எனவே கணிப்பு தெரிந்தவர்களாக சிலர் இருந்தாலும் அதன் அடிப்படையில் செயல்படக் கூடாது ஓட்டு மொத்த சமுதாயமும் என்றைக்கு வானியல் மேலோங்கி இருக்கிறதோ அப்போது தான் வானியல் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று தான் இவர்கள் வாதப்படி கூற வேண்டும். இது எந்தக் காலத்திலும் சாத்தியமில்லை.

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் பரிசீலிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன். இரவை அமைதிக் களமாகவும், சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் எற்பாடு.

அல்குர்ஆன் 6:96

ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்.

அல்குர்ஆன் 10:5

தொடர்ந்து இயங்கும் நிலையில் சூரியனையும், சந்திரனையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான். இரவையும், பகலையும் உங்களுக்காகப் பயன்படச் செய்தான்.

அல்குர்ஆன் 14:33

அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன.

அல்குர்ஆன் 21:33

இரவும் அவர்களுக்கு ஓரு சான்று. அதிலிருந்து பகலை உரித்தெடுக்கிறோம். உடனே அவர்கள் இருளில் ஆழ்ந்து விடுகிறார்கள். சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம். முடிவில் அது காய்ந்த பேரீச்சம் பாளை போல் ஆகிறது. சூரியனால் சந்திரனை அடைய முடியாது. இரவு, பகலை முந்தாது. ஒவ்வொன்றும் ஆகாயத்தில் நீந்துகின்றன.

அல்குர்ஆன் 36:36, 37, 38, 39, 40

சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன.

அல்குர்ஆன் 55:5

பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்'' எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 2:189

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்!

அல்குர்ஆன் 9.36

இரவையும், பகலையும் இரண்டு சான்றுகளாக்கினோம். உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடவும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் இரவின் சான்றை ஒளியிழக்கச் செய்து பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம். ஒவ்வொரு பொருளையும் நன்கு தெளிவுபடுத்தினோம்.

அல்குர்ஆன் 17:12

வானத்தில் நட்சத்திரங்களை ஏற்படுத்தி, அதில் விளக்கையும், ஒளி சிந்தும் சந்திரனையும் ஏற்படுத்தியவன் பாக்கியமானவன்.

அல்குர்ஆன் 25:61

என்பன போன்ற வசனங்களை ஆதாரமாகக் காட்டுகின்றனர். அல்லாஹ் சந்திரனுக்குப் பல படித்தரங்களை ஏற்படுத்தியுள்ளான். அந்தப் படித்தரங்கள் நாட்களை அறிந்து கொள்வதற்குத் தானே? வானியல் முடிவுப்படி நாட்களைக் கணித்தால் தானே அது காலம் காட்டியாக இருக்க முடியும்?

சந்திரன் காலம் காட்டி என்று அல்லாஹ் கூறுவது உண்மை தான். இதில் யாருக்கும் இரண்டாவது கருத்து இல்லை.

2007 முதல் தான் சந்திரன் காலத்தைக் காட்ட ஆரம்பித்துள்ளதா? அல்லது சந்திரனை அல்லாஹ் படைத்தது முதல் காலம் காட்டுகிறதா? என்று சிந்தித்தாலே இந்த வாதத்தின் பலவீனத்தை உணர முடியும்.

அல்லாஹ் சந்திரனை எப்போது படைத்தானோ அப்போது முதல் அது காலம் காட்டியாகத் தான் இருக்கிறது. அந்த காலம் முதல் அதைப் பார்த்துத் தான் மக்கள் நாட்களைத் தீர்மானித்துக் கொண்டனர். ஹஜ் எப்போது கடமையாக்கப்பட்டதோ அப்போது முதல் ஹஜ்ஜின் காலத்தைக் காட்டக் கூடியதாகவும் பிறை அமைந்துள்ளது.

என்னவோ இவ்வளவு நூற்றாண்டுகளாக பிறை காலம் காட்டாமல் இருந்தது போலவும் 2007ல் வானியல் அறிவு வளர்ந்த பின் தான் அது காலத்தைக் காட்டக் கூடியதாக ஆகி விட்டது போலவும் இவர்கள் நினைக்கிறார்கள் போலும்.

வருங்காலத்தில் காலம் காட்டியாக இருந்தால் மட்டும் போதாது எந்தக் காலத்தில் இது கூறப்பட்டதோ அந்தக் காலத்தில் நிச்சயம் காலம் காட்டியாக அமைந்திருப்பது அவசியம். இல்லையென்றால் அன்றைக்கு இந்த வசனம் அருளப்பட்ட போது உண்மையில்லாத செய்தியை அது கூறியதாக ஆகி விடும்.

பிறை எவ்வாறு காலம் காட்டியாக இருக்கிறது என்பதை மிகத் தெளிவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கி விட்டனர். (இதை முன்னர் நாம் விளக்கியுள்ளோம்) அவர்கள் காலத்தில் அது எப்படி காலம் காட்டியாக இருந்ததோ அப்படியே இன்றளவும் இனி சந்திரன் உள்ளளவும் அது காலம் காட்டியாக இருக்கும்.

இன்னும் சொல்வதானால் அன்றைக்கு எப்படி சந்திரன் சிறிதாகத் தோன்றி பின்னர் படிப்படியாக வளர்ந்து பின்னர் தேய ஆரம்பித்ததைக் கண்ணால் பார்த்து காலத்தைக் கணித்துக் கொண்டார்களோ அதே போல் இன்றைக்கும் கண்களால் பார்த்துத் தான் காலத்தை அறிந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட வசனங்கள்அனைத்தும் இதைத் தான் கூறுகின்றன.

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

சூரியன் விஷயத்தில் கணிப்பை ஏற்றுக் கொள்ளும் நாம் சந்திரன் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வேறுபடுத்திக் கூறுவது சரி தான். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறையைப் பார்த்துத் தான் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்று கூறி விட்டார்கள்.

சூரியன் மறைந்தவுடன் மக்ரிப் தொழ வேண்டும் என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையாகும். சூரியன் மறைந்தது என்பதை எப்படித் தீர்மானிக்க வேண்டும் என்பது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த உத்தரவையும் இடவில்லை.

மேக மூட்டமான நாட்களில் சூரியன் தென்படாத பல சந்தர்ப்பங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வந்ததுண்டு. அது போன்ற நாட்களில் சூரியன் மறைவதைக் கண்டால் மக்ரிப் தொழுங்கள். இல்லாவிட்டால் அஸர் நேரம் என்றே அதைக் கருதிக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. அது போல் சூரியன் மறைவதைக் கண்ணால் கண்ட பின் தான் நோன்பு துறக்க வேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்கள் துஆச் செய்தவுடன் மழை பெய்ய ஆரம்பித்து ஆறு நாட்கள் நாங்கள் சூரியனையே பார்க்கவில்லை என்று புகாரியில் ஹதீஸ் உள்ளது.

(பார்க்க: புகாரி 1013, 1014)

ஆறு நாட்களும் சூரியனையோ அது உதிப்பதையோ மறைவதையோ பார்க்க முடியவில்லை. இந்த ஆறு நாட்களும் கணித்துத் தான் தொழுதிருக்க முடியும். அனேகமாக சூரியன் மறைந்திருக்கும் என்று கருதும் நேரத்தில் தான் மக்ரிப் தொழதிருக்க முடியும்.

மேகம் சூரியனை மறைத்தது போல் சந்திரனையும் மறைக்கிறது. சந்திரன் மறைக்கப்படும் போது எப்படியாவது கணித்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறவில்லை. பிறை தெரியாததால் மேகத்தின் உள்ளே பிறை இருந்தாலும் அது முப்பதாம் நாள் தான். முதல் நாள் அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விட்டனர்.

சூரியனை மேகம் மறைத்த போது கணித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்திரனை மேகம் மறைத்த போது கணிக்கக் கூடாது. அது முப்பதாம் நாள் தான் என்று தெளிவாகப் பிரகடனம் செய்து விட்டனர். எனவே தொழுகைக்கும் நோன்புக்கும் ஒரே மாதிரியான அளவு கோல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

வானியல் கணிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுபவர்கள் சுபுஹ் வரை தகவலை எதிர்பார்க்க வேண்டும் என்று கூறுவது ஏன்? கணிப்பை ஏற்றுச் செயல்பட வேண்டியது தானே? வானியல் மூலம் 1000 வருடங்களுக்குப் பிறகுள்ள பிறையையும் கணித்து விடலாம் அல்லவா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

….அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், மற்றொரு நாள் ஒரு மாதம் போன்றும், அடுத்த நாள் ஒரு வாரம் போன்றும், ஏனைய நாட்கள் இன்றைய நாட்களைப் போன்றும் இருக்கும்'' என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஒரு வருடத்தைப் போன்ற அந்த நாளில் ஒரு நாள் தொழுகை எங்களுக்குப் போதுமா?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், போதாது; அதற்குரிய அளவை அதற்காக (தொழுகைக்காக) கணித்துக் கொள்ளுங்கள்'' என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி)

நூல்: முஸ்லிம்

நாட்களைக் கணித்துக் கொள்ளலாம் என்று இந்த ஹதீஸிலிருந்து தெரிகிறது.

மேலும் சந்திர மண்டலத்தில் வசிக்கும் நிலை ஏற்பட்டால் அப்போது சந்திரனைப் பார்த்து மாதம் மற்றும் நாட்களைத் தீர்மானிப்பது சாத்தியமற்றதாகி விடும். எனவே கணிப்புகள் அடிப்படையில் முடிவு செய்வது தான். நவீன யுகத்திற்கு ஏற்றதாகும் என்ற அடிப்படையில் பிறையை நாம் கணித்துக் கொள்வதில் என்ன தவறு என்று சிலர் வாதிடுகின்றனர்.

இந்த ஹதீஸில் கணித்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியது உண்மை தான்.

எப்போது கணிக்கச் சொன்னார்கள்? ஒரு நாள் ஒரு வருடம் போன்று நீண்டதாக (அதாவது ஆறு மாத அளவு பகலாகவும் ஆறு மாத அளவு இரவாகவும்) இருக்கும் போது தான் கணிக்கச் சொன்னார்கள். இந்த இடத்தில் கணிப்பதைத் தவிர வேறு வழி இருக்காது. இதே அடிப்படையில் துருவப் பிரதேசத்தில் ஆறு மாதம் பகலாகவும் ஆறு மாதம் இரவாகவும் இருக்கும். அங்கே மக்கள் வாழ்ந்தால் அவர்களும் கூட ஒரு வருடம் முழுவதற்கும் ஐந்து வேளை மட்டுமே தொழ வேண்டும் என்று கூற முடியாது. அவர்கள் கணித்துக் தான் தொழுகை, நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற முடியும்.

இவர்கள் குறிப்பிடுவது போல சந்திரனில் வாழ்கின்ற சூழ்நிலை இல்லை. ஒருவேளை அப்படி ஒரு நிலை ஏற்பட்டாலும் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி கணிப்பது தான். தினந்தோறும் சூரியன் உதித்து மறையக் கூடிய பகுதிகளில் வாழக் கூடிய நமக்கு இந்தச் சலுகை உண்டா? என்று கேட்கக் கூடாது.

முடவர், நொண்டி, குருடர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட சலுகைகளை கை, கால்கள் சுகமாக உள்ளவர், நல்ல கண் பார்வையுள்ளவர் கேட்பது போல் தான் இது ஆகும்.

சந்திர மண்டலத்தில் வசிக்கும் நிலை ஏற்பட்டால் அங்கிருந்து கொண்டு கஃபாவை நோக்கித் தொழும் வாய்ப்பில்லை. அதனால் அங்கே வசிப்பவர் எந்தத் திசையை நோக்கியும் தொழலாம் என்று தான் கூறியாக வேண்டும். நானும் அது போல் தொழுவேன் என்று பூமியில் இருந்து கொண்டு கஃபாவை நோக்கும் வாய்ப்புள்ளவர் கூறக் கூடாது. நிர்பந்தத்தில் மாட்டிக் கொண்டவருக்கு வழங்கப்பட்ட சலுகைகளை சாதாரண நிலையில் உள்ளவர் சட்டமாக எடுத்துக் கொள்வது அறிவீனமாகும்.

துருவப் பிரதேசத்தில் வாழ்பவன் ஒரு நிர்பந்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றான். அவன் கை, கால் ஊனமுற்ற முடவனைப் போன்றவன். பிறை பார்க்கக் கூடிய வாய்ப்பு அவனுக்கு அறவே கிடையாது என்பதால் அவனுக்கு இந்த ஹதீஸ் கணித்தல் என்ற சலுகையை வழங்கியிருக்கின்றது. பிறை பார்க்கும் வசதியுள்ள நமக்கு இந்த கணிப்பு என்ற சலுகை ஒரு போதும் பொருந்தாது.

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். வானியல் நிபுணர்களால் கணிக்கவே முடியாது என்று நாம் வாதிடுவதாகக் கருதக் கூடாது.

பல நூறு வருடங்களுக்குப் பின்னால் சென்னையில் தோன்றக் கூடிய சந்திர கிரகணத்தை இன்றைக்கே அவர்களால் கணித்துச் சொல்ல முடியும். எத்தனை மணி, எத்தனை நிமிடத்தில் தோன்றும் என்று கணிக்கிறார்களோ அதில் எந்த மாற்றமுமின்றி அது நடந்தேறும். அந்த அளவுக்கு வானியல் வளர்ந்துள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்வோம்.

இன்று இந்தப் பகுதியில் பிறை தென்படும் வகையில் இருக்கும் என்று கணித்துக் கூறினால் அந்தப் பகுதியினர் காணும் வகையில் ஆகாயத்தில் நிச்சயம் இருக்கும். ஏனெனில் அந்த அளவுக்குத் துல்லியமாக கணிக்க இயலும். மேகம் மற்றும் சில புறக் காரணங்களால் நமது பார்வைக்குத் தெரியாமல் போகவும் கூடும்.

அவர்களது கணிப்பு சரியானது தான் என்பதை ஏற்றுக் கொள்ளும் அதே சமயத்தில் தலைப் பிறையைத் தீர்மானிக்க அதை அளவுகோலாக கொள்ளக் கூடாது என்பது தான் நமது வாதம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் மாதத்தின் முதல் தினத்தைத் தீர்மானிப்பதற்கு கண்களால் பார்க்க வேண்டும் என்று வரையறுத்து விட்டனர்.

வானியல் கணிப்பின் படி எங்கே எப்போது பார்க்க முடியும் என்று கூறுகிறார்களோ அதை நம்பி அங்கே அப்போது பார்க்க முயற்சிக்கலாமே தவிர பார்க்காமல் தலைப்பிறை என்ற தீர்மானத்திற்கு வரக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் வானியல் வளர்ச்சியடையாத காலத்துக்குத் தான் அவ்வாறு கூறினார்கள் என்று ஹதீஸுக்கு விளக்கம் கூறித் தான் இவர்கள் இதை நியாயப்படுத்தினார்கள். அந்த விளக்கம் சரியில்லை எனும் போது நிலையை மாற்றிக் கொள்வது தான் இறையச்சமுடையோரின் செயலாக இருக்கும்.

வானியல் கணிப்பின் படி முடிவு செய்யலாம் என்ற கருத்தை ஏற்கக் கூடியவர்களுக்கு மற்றொரு விஷயத்தையும் நாம் நினைவுபடுத்த விரும்புகிறோம்.

வானியல் வாதம் புரிவோரின் கருத்துப்படி பிறையைப் பார்த்து நோன்பைத் தீர்மானிப்பது பாவமான காரியம் அல்ல. பிறை பார்த்து நோன்பு நோற்பது குற்றம் என்று அவர்களால் கூற முடியாது. அதற்கு ஆதாரம் காட்டவும் முடியாது.

பிறையைப் பார்த்து நோன்பு நோற்க வேண்டும் என்ற கருத்துக் கொண்டவர்களின் பார்வையில் பிறை பார்க்காமல் கணித்து முடிவு செய்வது குற்றமாகும். ஏராளமான நபிமொழிகளுக்கு எதிரானதாகும்.

அதாவது இரண்டு சாராரின் கருத்துப்படியும் பிறை பார்த்து நோன்பைத் தீர்மானிப்பது குற்றச் செயல் அல்ல. ஆனால் பிறை பார்க்காமல் கணித்து நோன்பு நோற்பது ஒரு சாரார் பார்வையில் குற்றச் செயலாகும். மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்ட ஒரு முஸ்லிம், இரு சாராரின் கருத்துப்படியும் எது குற்றமற்றதோ எவரது கருத்துப் படியும் எது குற்றமில்லையோ அதைத் தான் செய்வார். செய்ய வேண்டும்.

எனவே பிறை பார்த்து நோன்பு நோற்று நபி (ஸல்) அவர்களின் போதனையை உலகம் உள்ளளவும் கடைப்பிடித்தவர்களாவோம்.

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி பதில் வடிவில் பதில் அளித்துள்ளோம்.

உலகமெல்லாம் ஒரே கிழமை

உலகம் முழுவதும் ஒரே கிழமை தான் வருகின்றது. சவூதியில் வெள்ளிக்கிழமை என்றால் உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமையாகத் தான் உள்ளது. அங்கே வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழும் போது இங்கேயும் ஜும்ஆ தொழுகின்றோம். பெருநாளை மட்டும் அங்கே வெள்ளிக்கிழமை என்றால் இங்கே சனிக்கிழமை எப்படி கொண்டாட முடியும்?

உலகம் முழுவதும் ஒரே பிறை என்று வாதிடக் கூடியவர்கள் இதையே பெரிய ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

உலகம் சுருங்கி விட்டது விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. தகவல் தொடர்பு சாதனங்கள் பெருகி விட்டன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் போல் நாம் உம்மியல்ல. நாங்கள் அறிவியல் மேதைகள் என்று கூறுபவர்களின் விஞ்ஞான அறிவு எந்த அளவுக்கு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள அவர்களின் இந்தக் கேள்வி போதுமானது.

உலகம் முழுவதும் ஒரே கிழமையாகத் தான் உள்ளது என்ற அவர்களது வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதை முடிவு செய்யப் பெரிய அறிவியல் ஞானம் ஒன்றும் தேவையில்லை. சாதாரணமாகச் சிந்தித்தாலே போதும்.

இஸ்லாமிய அடிப்படையில் ஒரு நாள் என்பது மக்ரிபிலிருந்து துவங்குகிறது. உதாரணமாக வெள்ளிக்கிழமை மாலையில் சூரியன் மறைந்ததும் சனிக்கிழமை உதயமாகி விடுகின்றது. இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.

இப்போது சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு சூரியன் மறைந்து விட்டால் சனிக்கிழமை உதயமாகி விடுகின்றது. அந்த நேரத்தில் சவூதியில் வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியாக இருக்கும்.

சென்னையில் சனிக்கிழமையாக இருக்கும் அதே நேரத்தில் சவூதியில் வெள்ளிக்கிழமையாக இருக்கிறது. (சூரியக் கணக்கு அடிப்படையில் பார்த்தால் நள்ளிரவு பன்னிரண்டு மணியை உதாரணமாகக் கொள்ள வேண்டும்.)

இதைப் புரிந்து கொள்வதற்கு சில விஞ்ஞான விளக்கங்களைப் பார்ப்போம்.

உருண்டை வடிவிலுள்ள பூமி தன்னைத் தானே சுற்றுவதால் இரவு பகல் ஏற்படுகின்றது. பூமி சுற்றிக் கொண்டேயிருப்பதால் இந்தியாவில் சூரியன் உதயமாகும். அதே நேரத்தில் இந்தியாவிற்கு எதிர் கோடியிலுள்ள மற்றொரு நாட்டில் சூரியன் அஸ்தமனமாகிக் கொண்டிருக்கும்.

இப்படி ஒவ்வொரு நாட்டிலும் இரவு பகல் மாறி மாறி வந்து கொண்டிருக்கும் போது ஒரு நாள் என்பதை எதிலிருந்து துவக்குவது என்பதில் தடுமாற்றம் ஏற்பட்டது.

இதனால் ஒரு சீரான நிலையை ஏற்படுத்துவதற்காக பூமியின் ஓர் இடத்தை மையமாக வைத்து அதிலிருந்து தேதியைக் கணக்கிட வேண்டும் என்ற முடிவுக்கு புவியியல் விஞ்ஞானிகள் வந்தனர். அந்த அடிப்படையில் ஒரு கடல் பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கே சர்வதேச தேதிக்கோடு  (Date line ) என்ற மையத்தை உருவாக்கி அந்த இடத்தை தேதி கிழமை மாறும் இடமாக உலகம் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தார்கள்.

1884ஆம் ஆண்டு இந்த முடிவு எட்டப்பட்டது. இதன்படி சர்வதேச தேதிக் கோட்டில் நள்ளிரவு 12 மணியைக் கடக்கும் நேரத்தில் ஒரு நாள் பிறப்பதாகக் கணக்கிடப்படுகிறது.

சர்வதேச தேதிக் கோட்டினை பூமி கடக்கின்ற அந்த ஒரு மைக்ரோ வினாடி மட்டுமே உலகம் முழுவதும் ஒரே கிழமையாக இருக்கும். அதாவது அந்த வினாடியில் தேதிக் கோட்டின் கிழக்குப் புறத்தில் உள்ள நாடு வெள்ளிக்கிழமையின் ஆரம்பத்திலும், மேற்குப்புறம் உள்ள நாடு வெள்ளிக்கிழமையின் இறுதியைக் கடந்து சனிக்கிழமையைச் சந்தித்துக் கொண்டிருக்கும்.

சவூதிக்கும், இந்தியாவிற்கும் இரண்டரை மணி நேரம் வித்தியாசப்படுவது போல் தேதிக் கோட்டின் கிழக்கு மற்றும் மேற்குப் புறத்தில் உள்ள இரண்டு நாடுகளுக்கும் இடையில் 24 மணி நேரம் வித்தியாசப்படுகிறது. இதனால் பக்கத்து பக்கத்து இரு நாடுகளுக்கிடையில் ஒரு நாள் வித்தியாசம் ஏற்படுகின்றது.

இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் இங்கிருந்து சவூதி சென்றவுடன் 2.30 மணி நேரத்தை உங்கள் கடிகாரத்தில் குறைத்துக் கொள்ளுங்கள் என்று விமானத்தில் அறிவிப்புச் செய்வார்கள். அதே போல் விமானத்தில் சர்வதேச தேதிக் கோட்டைக் கடந்து செல்லும் போது நேரத்தை மாற்றச் சொல்வதில்லை. மாறாக ஒரு தேதியை ஒரு கிழமையை மாற்றிக் கொள்ளச் சொல்வார்கள்.

உதாரணமாக சர்வதேச தேதிக் கோட்டிற்கு அருகிலிருக்கும் நியூசிலாந்து ஹானலுலு ஆகிய இரு தீவுகளை எடுத்துக் கொள்வோம்.

நியூசிலாந்தில் காலை எட்டு மணியாக இருக்கும் போது ஹானலுலுவில் காலை நேரம் 10 மணியாக இருக்கும்.

ஆனால் நியூசிலாந்தில் வெள்ளிக்கிழமையாகவும் ஹானலுலுவில் வியாழக்கிழமையாகவும் இருக்கும்.

இரண்டு நாடுகளிலும் ஒரே இரவில் முதல் பிறை தென்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு தென்பட்டால் நியூசிலாந்து ஹானலுலு ஆகிய இரு நாடுகளிலும் ஒரே நாளில் தான் நோன்பு வைக்க வேண்டும்.

ஆனால் நியூசிலாந்தில் வெள்ளிக்கிழமையாகவும் ஹானலுலுவில் வியாழக்கிழமையாகவும் இருக்கும்.

நியூசிலாந்தில் பிறை பார்த்து, ஹானலுலுவில் பிறை பார்க்காவிட்டால் அப்போது இரண்டு நாட்கள் வித்தியாசம் ஏற்படும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உலகம் முழுவதும் ஒரே நாள் தான் என்று வாதம் செய்பவர்களிடம் நாம் கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்புகிறோம்.

ஹானலுலு நாட்டில் வியாழக்கிழமை அன்று சுப்ஹு தொழுதுவிட்டு அன்றைய லுஹருக்கு நியூசிலாந்த் நாட்டிற்குச் சென்று விடுகின்றோம். ஆனால் அங்கே வெள்ளிக்கிழமை. இப்போது நாம் ஜும்ஆ தொழ வேண்டுமா?

வியாழக்கிழமையின் லுஹர் அஸர் மக்ரிப் இஷா மறுநாள் சுப்ஹு ஆகிய தொழுகைகளைக் களாச் செய்ய வேண்டுமா?

நியூசிலாந்து நாட்டில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுது விட்டு அன்றே ஹானலுலு செல்கிறோம். அங்கே மறு நாள் ஜும்ஆ அதனால் அது வரையிலான தொழுகைகளை நிறைவேற்றாமல் விட்டுவிட்டு மறுநாள் அஸர் தொழுகையிலிருந்து தொழுதால் போதுமா? அல்லது அடுத்தடுத்த நாளில் இரண்டு ஜும்ஆக்கள் தொழ வேண்டுமா?

நியூசிலாந்து நாட்டில் வியாழக்கிழமை காலை பத்து மணிக்கு ஒளிபரப்பும் கிரிக்கெட்டை ஹானலுலுவில் புதன்கிழமையே பார்க்கிறோம். வியாழனில் நடப்பதை புதனில் (அதாவது விளையாட்டு நடப்பதற்கு முன்பே) எப்படிப் பார்க்க முடிகிறது.

ஹானலுலு நாட்டில் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 22ந் தேதி காலை பத்து மணிக்குத் துவங்குகிறது. அதே நாளில் காலை எட்டு மணிக்கு நியூசிலாந்து தொலைக்காட்சியில் அதன் நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  ஆனால் அது 23ம் தேதியின் காலை எட்டு மணி. இது எப்படி சாத்தியம்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உலகம் முழுவதும் ஒரே நாள் என்று வாதிடுபவர்கள் பதில் சொல்ல வேண்டும். சம்பந்தமில்லாத நான்கு குர்ஆன் வசனங்களைப் போட்டுவிட்டு ஒரே சூரியன் ஒரே சந்திரன் என்று வியாக்கியானம் செய்பவர்களும் அது தங்களுடைய கருத்துக்கு ஆதரவாக இருக்கிறது என்ற ஒரே காரணத்தால் அதற்கு அணிந்துரை மதிப்புரை எழுதுபவர்களும் மேலே நாம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

இதில் வேடிக்கை என்னவென்றால் சர்வதேச தேதிக்கோடு மனிதர்களால் வரையப்பட்ட கற்பனையான கோடு தான். இந்தக் கோடு ஏதேனும் ஒரு நாடு வழியாகச் சென்றால் ஒரே நாட்டில் ஒரே நாளில் வெவ்வேறு தேதி வெவ்வேறு கிழமை ஏற்பட்டு அதனால் குழப்பங்கள் தோன்றும் இதைத் தவிர்ப்பதற்காக சர்வதேச தேதிக் கோடு எந்த நாடு வழியாகவும் செல்லாத வண்ணம் ஒரு கடல் பகுதியைத் தேர்ந்தெடுத்து வரையப்பட்டது. இந்த தேதிக் கோடு இந்தியாவிற்கும் சவூதிக்கும் மத்தியில் வரையப்பட்டிருந்தால் இரண்டரை மணி நேர வித்தியாசத்திலேயே வெவ்வேறு கிழமைகளை வெவ்வேறு தேதிகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதையும் மறந்து விடக் கூடாது.

உலகம் எப்போது அழியும்?

உலகம் ஒரு நாளில் அழிக்கப்படும் என்று 83:5, 69:15 வசனங்களில் கூறப்படுகிறது பிறை 1ல் உலகம் அழிக்கப்படும் என்று வைத்துக் கொண்டால் சவூதி பிறை ஒன்றிலா? அல்லது இந்தியா பிறை ஒன்றிலா?

உலகம் வெள்ளிக்கிழமை தான் அழிக்கப்படும் என்று ஹதீஸ்களில் உள்ளது. இது ஒரே கிழமையில் தான் நிகழும் எனும் போது உலகம் முழுவதும் ஒரே கிழமை தான் என்பதில் என்ன சந்தேகம்? என்றும் கேட்கின்றனர்.

உலகம் முடிவு நாள் வெள்ளிக்கிழமை நடக்கும் என்று ஹதீஸ் உள்ளது. ஆனால் பிறைக் கணக்கில் 1ல் தான் அழிக்கப்படும் என்றோ 2ல்தான் அழிக்கப்படும் என்றோ ஹதீஸ் இல்லை.

குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விஞ்ஞானத்தை உரிய முறையில் விளங்கினால் நிச்சயமாக இந்தக் கேள்விகளுக்குப் பதில் கூற முடியும்.

ஒவ்வொரு நாளும் தேதிக் கோட்டை பூமி கடக்கும் அந்த மைக்ரோ வினாடியில் உலகம் முழுவதும் ஒரே கிழமை. தேதியில் இருக்கும் என்பதை முன்னர் கூறியுள்ளோம். அதாவது இந்த நிலையை அடையும் போது தேதிக் கோட்டின் கிழக்குப் புறம் உள்ள பகுதி கிழமையின் துவக்கத்திலும் தேதிக் கோட்டின் மேற்குப்புறம் உள்ள பகுதி அதே கிழமையின் இறுதியிலும் இருக்கும்.

இந்த விநாடியில் மட்டுமே உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமையாக இருக்கும். இது மனிதன் வரைந்த கற்பனையான கோட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட வெள்ளிக்கிழமை.

அல்லாஹ் பூமியைப் படைத்து நாள் கணக்கைத் துவக்கிய அந்த நேரத்தை அவன் தான் அறிவான். அல்லாஹ் அமைத்த உண்மையான அந்தத் தேதிக் கோட்டின் அடிப்படையில் ஒரு வினாடியில் உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமையாக இருக்கும் போது உலகத்தை அழிப்பது அவனுக்குச் சிரமமான காரியமில்லை.

ஆதம் (அலை) அவர்கள் குறித்த ஹதீஸுக்கும் இதே விளக்கத்தைக் கொடுக்க முடியும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

இரண்டு நாள் வித்தியாசம் ஏன்?

சவூதிக்கும் நமக்கும் இரண்டரை மணி நேரம் வித்தியாசம் ஆனால் சவூதி பிறைக்கும் நமது பிறைக்கும் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் வித்தியாசம் வருகின்றதே அது எப்படி? உதாரணமாக சவூதியில் 8ந் தேதி பெருநாள் என்றால் நமக்கு 9 அல்லது 10ந் தேதியில் தான் பெருநாள் வருகிறது. அது எப்படி?

முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். சவூதிக்கும் நமக்கும் இரண்டரை மணி நேரம் வித்தியாசம் என்பது சூரியனுடைய கணக்கின் அடிப்படையில் ஏற்படுவதாகும். சூரியனின் உதயம் அஸ்தமனம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து நேரத்தைத் தீர்மானிக்கிறோம். அதாவது சென்னையில் சூரியன் மறைந்து கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் கழித்து சவூதியில் சூரியன் மறையும். இது சூரியக் கணக்கு இதை பிறை தென்படுவதற்கு அளவு கோலாக எடுக்க முடியாது.

உதாரணமாக சவூதியில் 8ந் தேதி மாலை 6.30 மணிக்கு முதல் பிறை பிறக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் நமது நாட்டில் இரவு 9.00 மணி. அதாவது சவூதியில் பிறை பார்த்த நேரத்தை விட இரண்டரை மணி நேரத்தைக் கடந்திருப்போம். தலைப்பிறையை ஒன்பது மணிக்கெல்லாம் பார்க்க முடியாது. சவூதியில் பார்த்த பிறையை நாம் பார்க்க வேண்டுமானால் நமது நாட்டில் மறுநாள் (9ந் தேதி) மாலை 6.30 அல்லது ஏழு மணிக்குத் தான் பார்க்க முடியும்.

சூரிய உதயத்தை நாம் சவூதியை விட இரண்டரை மணி நேரம் முன்னதாக அடைகிறோம். அதே சமயத்தில் சந்திரன் தென்படும் நிலையை அவர்களை விட சுமார் 21.30 மணி நேரம் பிந்தி அடைகிறோம். இதனால் நமது நாட்டில் பிறை தென்படும் நாளில் சவூதியில் பிறை 2 ஆக இருக்கும் வாய்ப்பிருக்கிறது. (ஒரே நாளிலும் தெரியலாம்) எனவே சந்திரன் அடிப்படையில் மாதத்தைத் தீர்மானிக்கும் போது சூரியக் கணக்கில் உள்ள நேர வித்தியாசத்தைப் பொருத்திப் பார்க்கக் கூடாது.

சவூதிக்கும் நமக்கும் ஒரு நாள் வித்தியாசம் ஏற்படுவது இயற்கையானது தான். அல்லாஹ்வும் அதனால் தான் அம்மாதத்தை யார் அடைகிறாரோ என்று கூறுகின்றான். இதை ஏற்கனவே கூறியுள்ளோம்.

இரண்டு நான் வித்தியாசம் வருகின்றதே இது எப்படி?

எப்படிப் பார்த்தாலும் ஒரு நாளுக்கு மேல் வித்தியாசம் ஏற்பட சாத்தியமில்லை என்பது உண்மை தான். இரண்டு நாள் வித்தியாசம் ஏற்படுவதற்கு ஒரு தரப்பில் ஏற்படும் தவறுகள் தான் காரணம்.

பொதுவாக அமாவாசை முடிந்து 20 மணி நேரம் ஆவதற்கு முன்னால் உலகில் எந்தப் பகுதியிலும் பிறை தென்படுவதற்கு வாய்ப்பில்லை. 20 மணி நேரத்திற்குப் பின் ஏதேனும் ஒரு நாட்டில் பிறை தெரிய ஆரம்பித்து எல்லா நாட்டிற்கும் தெரிவதற்கு சுமார் 20 மணி நேரம் ஆகும். அதாவது அமாவாசை முடிந்த பின்னர் பிறை தென்படுவதற்கு சுமார் 20 மணி நேரத்திலிருந்து நாற்பது மணி நேரம் வரை ஆகும். இந்த காலவரையறைக்கு முன்னதாக யாராவது பிறை பார்த்ததாகக் கூறினால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

சவூதி அரேபியாவைப் பொறுத்தவரை இது வரை பிறை பார்த்ததாக அறிவித்த பல ஆண்டுகளில் பிறை தென்படுவதற்கே வாய்ப்பில்லாத நேரத்தில் பிறை பார்க்கப்பட்டதாகத் தான் அறிவித்துள்ளார்கள். இதை நாம் சுயமாகச் சொல்லவில்லை. லண்டனிலிருந்து வெளியாகும் என்ற ஈழ்ங்ள்ஸ்ரீங்ய்ற் என்ற பத்திரிகையும் மலேசியாவிலுள்ள சர்வதேச இஸ்லாமிய தேதி கவுன்சில் என்ற அமைப்பும் மற்றும் நமது நாட்டிலுள்ள வானியல் ஆராய்ச்சி நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன.

சவூதி எந்த அடிப்படையில் இவ்வாறு அறிவிக்கின்றது என்பது நமக்குத் தெரியவில்லை.

சந்திர சுழற்சியின் அடிப்படையில் சவூதிக்கும் நமக்கும் இடையில் ஒரு நாள் வித்தியாசம் ஏற்படுகின்றது. சவூதியின் தவறான நிலைபாட்டினாலும் ஒரு நாள் வித்தியாசம் ஏற்படுகின்றது. இதனால் தான் சவூதி அரசாங்கம் பிறை பார்த்ததாக அறிவித்த நாளுக்கும் நாம் பிறை பார்க்கும் நாளுக்கும் இரண்டு நாட்கள் வித்தியாசம் ஏற்படுகின்றது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிறை பார்த்து அல்லது குறிப்பிட்ட பகுதிகளிலிருந்து தகவல் வந்தால் அதை ஏற்று மக்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த போது ஒரு பகுதிக்கும் மற்றோர் பகுதிக்குமிடையில் ஒரு நாள் மட்டுமே வித்தியாசம் இருந்து வந்தது.

புதிதாக சவூதியிலிருந்து நோன்பு, பொருநாள் ஆகியவற்றை இறக்குமதி செய்ததால் தான் தமிழ்நாட்டிற்குள்ளேயே இரண்டு நாட்கள் வித்தியாசம் ஏற்பட ஆரம்பித்தது.

உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாளைக் கொண்டு வர வேண்டும் என்று கூறி அறிமுகப்படுத்தப்பட்டது தான் சவூதி பெருநாள் கொள்கை. இதன் மூலம் இரண்டு நாட்களில் பெருநாளைச் சந்தித்துக் கொண்டிருந்த தமிழகத்தில் மூன்று நாட்கள் பெருநாள் ஏற்படுவதற்கு வழி வகுத்ததைத் தவிர வேறு எந்தச் சாதனையையும் இந்தக் கொள்கை ஏற்படுத்தவில்லை என்பது நிதர்சனமாக உண்மையாகும்.

பிறையை ஒவ்வொரு பகுதியிலும் பார்த்தே தீர்மானிக்க வேண்டும். பிறை தென்படாத பகுதிகள் முந்தைய மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் கூறியுள்ளோம். மார்க்கம் நமக்குக் கற்றுத் தந்த இந்த எளிமையான நடைமுறையை ஒவ்வொரு பகுதியினரும் கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டால் உலகம் முழுவதும் ஒரு நாளுக்கு மேல் வித்தியாசம் ஏற்பட வாய்ப்பில்லை. அந்த நிலை விரைவில் ஏற்பட்டுவிடும் என்று நம்புவோம். இன்ஷாஅல்லாஹ்.

எத்தனை லைலத்துல் கத்ர்?

லைலத்துல் கத்ர் என்ற பாக்கியமிக்க இரவு ஒற்றைப்படை இரவுகளில் தான் அமையும் என்பது நபிமொழி. ஆளுக்கு ஒரு தலைப்பிறை இருந்தால் பாதிப் பேருக்கு லைலத்துல் கத்ர் கிடைக்காதே? எனவே உலகம் முழுவதும் ஒரே நாளில் தான் நோன்பைத் துவக்க வேண்டும். இன்றிரவு இங்கே பிறை பார்க்கிறோம். இந்த நேரத்தில் அமெரிக்காவில் பகலாக இருக்கும். பகல் எப்படி லைலத்துல் கத்ராக, அதாவது கத்ருடைய இரவாக ஆகும்?

அடுத்து வரும் இரவில் தான் பிறை என்று கூறினால் இங்கே லைலத்துல் கத்ர் ஏற்பட்டு 24 மணி நேரம் கழித்துத் தானே அமெரிக்காவில் ஏற்படுகிறது.?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மதீனாவில் ஒரு நாளும் மற்ற ஊர்களில் ஒரு நாள் முன்னதாகவும் பிறை காணப்பட்டுள்ளது. வாகனக் கூட்டம் பற்றிய ஹதீஸ் இதற்குப் போதிய ஆதாரமாகும்.

முதலில் பிறை பார்த்தவர்கள் கணக்குப் படி ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ர் வந்து விடுகிறது. இவர்களுக்கு ஒற்றைப்படையாக அமையும் நாட்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இரட்டைப்படை நாட்களாக அமையுமே? அப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் பாக்கியம் கிட்டாதா?

அல்லாஹ் ஒரு பாக்கியத்தை வழங்கினால் அனைவரும் அடைந்து கொள்ள ஏற்ற வகையில் தான் அருளுவான். முஸ்லிம்கள் பரந்து விரிந்த அந்தக் காலத்தில் ஒரு பகுதியில் காணப்பட்ட பிறை மறு பகுதிக்குத் தெரியாது. இருவேறு நாட்களில் தான் நோன்பு ஆரம்பமாகியிருக்கும். அப்படியானால் யாருடைய கணக்கு ஒற்றைப்படை? ஒரு சாரார் அதை அடைந்து மறு சாரார் அடைய மாட்டார்கள் என்பது தான் பொருளா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களும் மக்களும் எப்படி லைலதுல் கத்ரை அடைந்தார்களோ அவ்வாறே நாமும் அடைய முடியும். குர்ஆன் இறங்கிய அந்த இரவு தான் லைலதுல் கத்ர். அந்த இரவே நிச்சயமாக திரும்பாது. அந்த இரவே திரும்பினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்போது வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். எனவே சென்று போன அந்த இரவே திரும்பி வரும் என்று கருதக் கூடாது. அந்த இரவை மதிக்கும் வகையில் நாம் வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் போது அல்லாஹ் 1000 மாதங்களுக்கு நிகரான நன்மையைத் தருகிறான் என்பது தான் இதன் கருத்தாகும்.

அந்த நாள் திரும்பாது. அந்த இரவை மதிக்கும் வகையில் நாம் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதே இதன் நோக்கம் என்று ஆகும் போது நாம் எதை ஒற்றைப்படை என்று கருதுகிறோமோ அந்த இரவில் அந்த நன்மைகளை இறைவன் வாரி வழங்கி விடுவான். இப்படிக் கருதும் போது இறைவனது அருளில் எந்தப் பாரபட்சமும் இல்லை.

யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வசனம் மாதத்தை அடைவதில் முன்பின்னாக இருக்கும் என்று ஒத்துக் கொள்கிறது. ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி முதல் பிறை என்றால் தனித்தனி ஒற்றைப்படையும் வரத் தான் செய்யும். இதை உணர்ந்தால் குழப்பம் இருக்காது.

எந்தக் கணக்கின் அடிப்படையிலும் உலகம் முழுவதும் ஒரே நாளில் தலைப்பிறை என்பது சாத்தியமில்லை என்பதை பலமுறை விளக்கியுள்ளோம்.

மக்காவைப் புறக்கணிக்கலாமா?

மக்காவைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் உம்முல் குரா கிராமங்களின் தாய் என்று வர்ணித்துக் கூறுகின்றான். அந்த மக்காவில் தான் இறை வணக்கத்திற்காக முதன் முதலில் கட்டப்பட்ட கஃபா அமைந்துள்ளது. ஹஜ் செய்வதற்காக உலகம் முழுவதிலிருந்தும் அங்கு தான் மக்கள் செல்ல வேண்டும். உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் கஃபாவை நோக்கியே தொழ வேண்டியிருக்கிறது.

இப்படி எல்லா வகையிலும் மக்காவிற்கு அல்லாஹ் ஒரு மகத்துவத்தை வழங்கியிருக்கிறான். பூகோள ரீதியாகவும் மக்கா நடு நாயகமாக அமைந்துள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு மக்காவில் காணப்பட்ட பிறையை உலகம் முழுவதும் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?

மக்கா என்பது உம்முல் குரா என்பதிலும் கஃபா தான் உலகம் முழுவதற்கும் கிப்லா என்பதிலும் ஹஜ் செய்வதற்கு அங்கு தான் செல்ல வேண்டும் என்பதிலும் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. ஏன் கஃபாவை கிப்லாவாக ஏற்றுக் கொண்டுள்ளோம்? ஏன் ஹஜ் செய்வதற்கு கஃபாவிற்குச் செல்கிறோம்? அல்லாஹ் அவ்வாறு கட்டளையிட்டுள்ளான். அதனால் அதை ஏற்று நாம் செயல்படுத்துகிறோம்.

இதையெல்லாம் கூறிய அல்லாஹ் இவர்கள் கேட்பது போல் மக்காவில் பார்க்கப்பட்ட பிறையை உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்தால் அதையும் கூறியிருப்பான். உம்முடைய இறைவன் எதையும் மறப்பவன் அல்ல என்று குர்ஆன் கூறுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் வாழ்ந்த போதெல்லாம் மக்காவில் பிறை பார்த்து விட்டார்களா என்று பார்த்து தங்களுடைய நோன்பு மற்றும் பெருநாளைத் தீர்மானிக்கவில்லை.

அல்லாஹ்வோ அவனது தூதரோ கட்டளையிடாத ஒரு விஷயத்தை நாமாக ஏற்படுத்துவது அல்லாஹ்வையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் குறை கூறுவதாகும்.

இவர்கள் கூறிய சிறப்பெல்லாம் மக்காவிற்கு இருக்கிறது என்பதால் மக்காவில் கஃபாவில் அஸர் தொழும் போது தான் நாமும் அஸர் தொழ வேண்டும் என்று யாரும் கூற மாட்டார்கள். நமது ஊரில் எப்போது அஸர் தொழுகையின் நேரம் வருகின்றதோ அப்போது தான் தொழ வேண்டும். இதே அளவுகோல் தான் பிறைக்கும்.

மக்காவில் பிறை தென்படும் நாள் வேறு. நமது ஊரில் பிறை தென்படும் நான் வேறு. கஃபாவை எதற்குப் பயன்படுத்த வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றானோ அதற்குத்தான் பயன்படுத்த வேண்டும். மக்காவில் என்றைக்குப் பிறை பார்க்கின்றார்களோ அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வசனத்திற்கும் நாம் எடுத்துக்காட்டிய நபிமொழிகளுக்கும் மாற்றமானதாகும்.

மக்கா உலகின் மையமாக இருக்கிறது என்று கூறுவது அறிவியலுக்கு முரணானது; அடிப்படையில்லாதது. உருண்டையான பூமியில் எது மையப்பகுதி என்று யாராலும் கூற முடியாது. அப்படியே மையப்பகுதி என்று கூறுவதாக இருந்தால் பூமத்திய ரேகைப் பகுதியைச் சொல்லலாம். பூமத்திய ரேகை ஓடும் பகுதியில் ஒரு குறிப்பிட்ட ஊர் மட்டும் இல்லை. பல நாடுகள் உள்ளன. இந்த பூமத்திய ரேகை ஓடும் நாடுகளை எடுத்துப் பார்த்தால் அதிலும் மக்கா இல்லை. அப்படியே மக்கா அதில் அமைந்திருந்தாலும் அதன் காரணமாக மக்காவைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுவது ஆதாரமற்ற வாதமாகும்.

காலத்திற்கேற்ப மார்க்கம் மாறுமா?

பிறை பார்த்து நோன்பு வையுங்கள் என்பதெல்லாம் அந்தக் கால மக்களைக் கருத்தில் கொண்டு சொல்லப்பட்டதாகும். அறிவியல் வளர்ச்சி கண்ட இந்தக் காலத்திற்குப் பொருந்தாது அல்லவா?

அது மிகவும் ஆபத்தான வாதமாகும். இபாதத் சம்பந்தமான மார்க்கக் கட்டளையை காலத்துக்குத் தக்கவாறு மாற்றுவது என்று சொன்னால் மோசமான விளைவுகளை இது ஏற்படுத்திவிடும்.

ஜகாத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தோடு முடிந்து விட்டது என்று வியாக்கியானம் கொடுத்த கூட்டத்துடன் அபூபக்கர் (ரலி) போர் நடத்திய வரலாறு அறிவோம்.

அந்தக் காலத்தில் உள்ள அரபியருக்குக் கொழுப்பு அதிகம். அதைக் குறைக்கத் தான் நோன்பு வைக்கச் சொன்னார்கள். இப்போது அது தேவையில்லை என்று வாதிட்டால் நாம் ஏற்க மாட்டோம். பிறை விஷயத்திலும் இப்படித் தான் முடிவெடுக்க வேண்டும்.

அறிவியல் முடிவை பிறை விஷயத்தில் ஏன் ஏற்கக்கூடாது என்பதை முன்னர் விளக்கியுள்ளோம்.

பூதக்கண்ணாடியும் மூக்குக்கண்ணாடியும்

பூதக் கண்ணாடிகளால் பிறையைப் பார்த்து முடிவு செய்யலாமா?

பிறை தோன்றி விட்டாலும் நம் கண்களுக்குத் தெரியும் அளவுக்கு வளர்ந்த பிறையையே நாம் தலைப்பிறை என்கிறோம். பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது இந்தப் பிறையைத் தான். கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு இருப்பதைப் பார்க்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருக்க மாட்டார்கள்.

பூதக் கண்ணாடியைப் பொறுத்தவரை சாதாரண கண்ணுக்குத் தெரிவதையும் அது காட்டும். சாதாரண கண்ணுக்குத் தெரியாததையும் அது காட்டும். சாதாரணக் கண்ணுக்குத் தெரியாத சிறிய அளவிலான பிறையையும் காட்டும்.

கண்ணுக்குத் தெரியாத அளவில் உள்ள பிறையைப் பூதக் கண்ணாடியால் பார்த்து முடிவு செய்யக் கூடாது. கண்ணுக்குத் தெரியாத பிறை தலைப்பிறையைத் தீர்மானிக்க உதாவது.

சாதாரணக் கண்களால் பார்க்கும் அளவுக்கு வளர்ந்த பிறையைப் பூதக்கண்ணாடியால் பார்க்கலாமா? என்றால் பார்ப்பதில் தவறு இல்லை.

ஆனால் பூதக் கண்ணாடியிலிருந்து கண்களை விலக்கி நேரடியாகப் பார்த்து நிருபிக்க வேண்டும். பூதக் கண்ணாடியால் தெரிந்தது சாதாரணக் கண்களுக்குத் தெரியாவிட்டால் பார்க்கும் அளவுக்குப் பிறை வளரவில்லை என்று பொருள்.

பூதக் கண்ணாடியால் பிறை இருப்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியும். அவ்வாறு கண்டுபிடித்த பின் அதே இடத்தில் சாதாரணக் கண்களால் பார்க்கலாம். இதற்கு மட்டும் தான் பூதக் கண்ணாடி உதவும்.

கண்ணாடி அணிந்து பிறை பார்த்தவரின் சாட்சியத்தை ஏற்கலாமா? என்று குதர்க்கமாகக் கேட்கிறார்கள்.

ஏற்கனவே எழுதப்பட்டவற்றிலேயே இதற்கான விளக்கமும் அடங்கியுள்ளது.

ஒரு பொருளை சாதாரணக் கண்களால் பார்க்கும் போது எப்படி இருக்குமோ அப்படிப் பார்ப்பதற்குத் தான் கண்ணாடி அணிகிறோம். சிறியதைப் பெரியதாகக் காட்டவோ தொலைவில் உள்ளதை அருகில் பார்க்கவோ யாரும் கண்ணாடி அணிவதில்லை. இயல்பான பார்வையைப் பெறுவது தான் கண்ணாடியின் தன்மை.

பார்வைக் குறைவு ஏற்பட்டவர் கண்ணாடி அணிந்து பார்ப்பதும் பார்வைக் குறைவு அற்றவர் கண்ணாடியில்லாமல் பார்ப்பதும் சமமானவை தான் இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.

இயல்பான பார்வையின் தன்மையை அடைவதற்காக இல்லாமல் சிறியதைப் பெரிதாகக் காட்டும் கண்ணாடியையோ தூரத்தில் உள்ளதை அருகில் காட்டும் கண்ணாடியையோ அணிந்து பிறை பார்த்தால் அதை ஏற்க முடியாது.

சேரமான் பெருமாள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் ஒரே சந்திரன் தான் என்பது தெளிவாகிறது. ஏன் நாட்டுக்கு நாடு பிறை வேறுபட வேண்டும்?

பிறையைத் தீர்மானிப்பதற்கு அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழிமுறைகள் என்ன என்பதை விட்டுவிட்டு இது போன்ற அபத்தமான வாதங்களையெல்லாம் ஆதாரமாகக் காட்டும் அளவுக்கு வந்து விட்டனர். அல்லாஹ்வும், அவனது தூதரும் சேரமான் பெருமாளை ஆதாரமாக ஏற்குமாறு கூறவில்லை என்பது மட்டுமே இதற்குரிய மறுப்பாகி விடும். ஆயினும் இதிலுள்ள அபத்தங்களையும் இவ்வாறு கேள்வியெழுப்வோரின் அறியாமையையும் சுட்டிக்காட்டித் தான் ஆக வேண்டும்.

பௌர்ணமி நிலவு பிளந்ததை உலகின் பல பாகங்களில் காண முடியும். காரணம் பௌர்ணமி நிலவு வானில் நீண்ட நேரம் காட்சி தரும். ஆனால் தலைப்பிறை சில நிமிடங்களில் மட்டுமே தெரியும். அதுவும் சூரியன் மறைந்த உடன் தான் அதைக் காண முடியும். எனவே சேரமான் பெருமாள் பார்த்தாலும் அது தலைப்பிறையைத் தீர்மானிக்கப் போதிய ஆதாரமாகாது.

விண்ணில் பறந்து

மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா?

வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த அமாவாசை தினத்தில் சூரிய ஒளி சந்திரன் மீது படாது என்று இவர்கள் நினைக்கிறார்கள். அவ்வாறில்லை. பௌர்ணமி தினத்தில் சூரிய ஒளி சந்திரனில் படுவது போல் தான் அமாவாசையிலும் படுகிறது. சந்திரனில் பிரதிபலிக்கவும் செய்கிறது. ஆனால் அது பூமியின் எதிர்த் திசையில் பிரதிபலிக்கிறது.

பூமியின் பக்கம் உள்ள சந்திரன் இருட்டாக உள்ளது. ஆனால் சந்திரனின் அடுத்த பக்கம் பௌர்ணமியாக உள்ளது. ராக்கெட்டில் மேலே போய் பார்க்கலாம் என்றால் குறிப்பிட்ட இடத்துக்கு ராக்கெட்டில் போனால் அமாவாசை தினத்திலே பௌர்ணமியைக் காணலாம். குறிப்பிட்ட கோணத்தை அடைந்தால் ஏழு அல்லது எட்டாம் பிறை அளவைக் காணலாம்.

அதை வைத்து ஏழாம் நாள் என்று அமாவாசை தினத்தில் முடிவு செய்ய மாட்டோம். பூமிக்கு சந்திரனிலிருந்து ஒளி வருகிறதா என்பதும் அது நம் கண்களுக்குத் தெரிகிறதா என்பதும் நமக்கு தேவை.

ஆகாயத்தில் ஏறிச் சென்றால் சந்திர கிரகணம் ஏற்பட்டிருக்கும் நாளைத் தவிர வேறு எந்த நாளிலும் நாம் விரும்புகிற எந்த அளவிலும் பிறையைக் காண முடியும். எனவே இதை அளவுகோலாக வைத்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளாகக் கூறுவார்கள். மக்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

நாளின் துவக்கம் பகலா? இரவா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நாளின் துவக்கம் இரவாக இருந்ததா? அல்லது பகலாக இருந்ததா? என்பதைக் காண்போம்.

صحيح مسلم

5345 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ يَحْيَى الْبَهْرَانِىِّ قَالَ ذَكَرُوا النَّبِيذَ عِنْدَ ابْنِ عَبَّاسٍ فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يُنْتَبَذُ لَهُ فِى سِقَاءٍ – قَالَ شُعْبَةُ مِنْ لَيْلَةِ الاِثْنَيْنِ – فَيَشْرَبُهُ يَوْمَ الاِثْنَيْنِ وَالثَّلاَثَاءِ إِلَى الْعَصْرِ فَإِنْ فَضَلَ مِنْهُ شَىْءٌ سَقَاهُ الْخَادِمَ أَوْ صَبَّهُ.

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு (சுவையான நீர் வழங்க) திங்கள் கிழமை இரவு (பேரீச்சம் பழங்கள் போட்டு) பாத்திரத்தில் ஊற வைக்கப்படும். திங்கள் கிழமை பகலிலும், செவ்வாய்க்கிழமை அஸர் வரையிலும் அதை அருந்துவார்கள். மீதமிருந்தால் அதைப் பணியாளுக்கு வழங்குவார்கள். அல்லது கொட்டி விடுவார்கள்.''

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : முஸ்லிம்

நாளின் ஆரம்பம் பகல் என்றிருக்குமானால் திங்கள் கிழமை இரவுக்குப் பின்னர் செவ்வாய் பகல் தான் வரும். திங்கள் கிழமைக்கான பகல் வராது.

திங்கள் இரவு ஊற வைத்ததை திங்கள் பகலில் அருந்தினார்கள் என்று இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளதால் திங்கள் இரவுக்குப் பிறகு தான் திங்கள் பகல் வரும் என்பது தெளிவாக விளங்குகிறது.

مسند أحمد بن حنبل

 2068 – حدثنا عبد الله حدثني أبى ثنا وكيع ثنا شعبة عن يحيى بن عبيد عن بن عباس : ان النبي صلى الله عليه و سلم كان ينبذ له ليلة الخميس فيشربه يوم الخميس ويوم الجمعة قال وأراه قال ويوم السبت فإذا كان عند العصر فإن بقي منه شيء سقاه الخدم أو أمر به فأهريق

تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح على شرط مسلم

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக வியாழன் இரவு (பேரீச்சம் பழங்கள் போட்டு பாத்திரத்தில்) ஊற வைக்கப்படும். அதை வியாழன் பகலிலும், வெள்ளிக் கிழமையிலும் அருந்துவார்கள்.''

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : அஹ்மத்

வியாழன் இரவு ஊற வைத்ததை வியாழன் பகலில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருந்துவார்கள் என்ற இந்த ஹதீஸிலிருந்தும் வியாழன் இரவுக்குப் பின் வெள்ளி பகல் வராமல் வியாழன் பகலே வந்துள்ளது.  நாளின் ஆரம்பம் இரவு என்பது இதில் இருந்தும் தெளிவாகிறது.

صحيح البخاري

1387 – حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: دَخَلْتُ عَلَى أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: فِي كَمْ كَفَّنْتُمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: «فِي ثَلاَثَةِ أَثْوَابٍ بِيضٍ سَحُولِيَّةٍ، لَيْسَ فِيهَا قَمِيصٌ وَلاَ عِمَامَةٌ» وَقَالَ لَهَا: فِي أَيِّ يَوْمٍ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: «يَوْمَ الِاثْنَيْنِ» قَالَ: فَأَيُّ يَوْمٍ هَذَا؟ قَالَتْ: «يَوْمُ الِاثْنَيْنِ» قَالَ: أَرْجُو فِيمَا بَيْنِي وَبَيْنَ اللَّيْلِ، فَنَظَرَ إِلَى ثَوْبٍ عَلَيْهِ، كَانَ يُمَرَّضُ فِيهِ بِهِ رَدْعٌ مِنْ زَعْفَرَانٍ، فَقَالَ: اغْسِلُوا ثَوْبِي هَذَا وَزِيدُوا عَلَيْهِ ثَوْبَيْنِ، فَكَفِّنُونِي فِيهَا، قُلْتُ: إِنَّ هَذَا خَلَقٌ، قَالَ: إِنَّ الحَيَّ أَحَقُّ بِالْجَدِيدِ مِنَ المَيِّتِ، إِنَّمَا هُوَ لِلْمُهْلَةِ فَلَمْ يُتَوَفَّ حَتَّى أَمْسَى مِنْ لَيْلَةِ الثُّلاَثَاءِ، وَدُفِنَ قَبْلَ أَنْ يُصْبِحَ

நான், அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்ற போது "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எத்தனை துணிகளில் கஃபன் செய்திருந்தீர்கள்?'' என்று அவர் கேட்டார். "வெண்மையான மூன்று பருத்தித் துணிகளில் கஃபன் செய்தோம். அவற்றில் சட்டையோ, தலைப்பாகையோ இல்லை என்றேன்'. அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் கிழமையில் மரணமடைந்தார்கள்? எனக் கேட்டார்கள். நான் திங்கள் கிழமை என்றேன். "இன்று என்ன கிழமை? என்று கேட்டதும் நான் திங்கள் கிழமை என்றேன். அதற்கவர்கள் "இன்றிரவுக்குள் (எனது மரணம்) நிகழும் என நான் எண்ணுகிறேன்.' என்று கூறிவிட்டு, தாம் நோயுற்றிருந்த போது அணிந்திருந்த ஆடையைப் பார்த்தார்கள். அதில் குங்குமப்பூவின் கறை படிந்திருந்தது. "இதைக் கழுவி இத்துடன் இன்னும் இரு துணிகளையும் சேர்த்து அவற்றில் என்னைக் கஃபனிடுங்கள் எனக் கூறினார்கள். நான், இது பழையதாயிற்றே என்றேன். அதற்கவர்கள் "இறந்தவரை விட உயிருடனிருப்பவரே புத்தாடை அணிய அதிகத் தகுதி படைத்தவர். மேலும் அது (இறந்த) உடலிலிருந்து வழியும் சீழுக்குத் தான் போகும் என்றார்கள். பிறகு அன்று மாலை வரை மரணிக்கவில்லை. செவ்வாய் இரவில் தான் மரணித்தார்கள். காலை விடிவதற்கு முன் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 1384

அபூபக்ர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்த நாளான திங்கட்கிழமையில் இறக்க ஆசைப்பட்டார்கள். இன்று இரவு முடிவதற்குள் மரணித்தால் திங்கள் கிழமை மரணித்தவராக ஆகலாம் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் அந்தப் பகலில் மரணிக்காமல் இரவு வந்த பின் தான் மரணித்தார்கள். அந்த இரவுக்குப் பெயரிடும் போது ஆயிஷா (ரலி) அவர்கள் திங்கள் இரவு எனக் கூறவில்லை. மாறாக செவ்வாய் இரவு என்று குறிப்பிடுகிறார்கள்.

ஒரு நாளின் பகல் முடிந்து விட்டால் அடுத்து வரும் இரவு அடுத்த நாளின் இரவே தவிர முந்திய நாளின் இரவு அல்ல என்பது இதில் இருந்து தெளிவாக விளங்குகிறது.

நாளின் துவக்கம் பகல் என்றிருக்குமானால் அபூபக்ர் (ரலி) அவர்கள் இன்றிரவுக்குள் மரணித்து விடுவேன் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. மேலும் அன்றிரவு மரணமடைந்த அபூபக்ர் (ரலி) அவர்களை, செவ்வாய் இரவு மரணமடைந்தார்கள் என்று கூறவும் கூடாது. எனவே நாளின் ஆரம்பம் இரவு தான் என்பதை இந்தச் செய்தியிலிருந்தும் விளங்க முடிகிறது.

سنن أبي داود

1379 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَفْصِ بْنِ عَبْدِ اللَّهِ السُّلَمِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ عَبَّادِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ مُسْلِمٍ الزُّهْرِيِّ، عَنْ ضَمْرَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أُنَيْسٍ، عَنْ أَبِيهِ، قَالَ: كُنْتُ فِي مَجْلِسِ بَنِي سَلَمَةَ وَأَنَا أَصْغَرُهُمْ، فَقَالُوا:: مَنْ يَسْأَلُ لَنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لَيْلَةِ الْقَدْرِ، وَذَلِكَ صَبِيحَةَ إِحْدَى وَعِشْرِينَ مِنْ رَمَضَانَ؟ فَخَرَجْتُ فَوَافَيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْمَغْرِبِ، ثُمَّ قُمْتُ بِبَابِ بَيْتِهِ، فَمَرَّ بِي فَقَالَ: «ادْخُلْ»، فَدَخَلْتُ فَأُتِيَ بِعَشَائِهِ، فَرَآنِي أَكُفُّ عَنْهُ مِنْ قِلَّتِهِ، فَلَمَّا فَرَغَ، قَالَ: «نَاوِلْنِي نَعْلِي» فَقَامَ وَقُمْتُ مَعَهُ، فَقَالَ: «كَأَنَّ لَكَ حَاجَةً»، قُلْتُ: أَجَلْ، أَرْسَلَنِي إِلَيْكَ رَهْطٌ مِنْ بَنِي سَلَمَةَ، يَسْأَلُونَكَ عَنْ لَيْلَةِ الْقَدْرِ، فَقَالَ: «كَمِ اللَّيْلَةُ؟» فَقُلْتُ: اثْنَتَانِ وَعِشْرُونَ، قَالَ: «هِيَ اللَّيْلَةُ»، ثُمَّ رَجَعَ، فَقَالَ: «أَوِ الْقَابِلَةُ»، يُرِيدُ لَيْلَةَ ثَلَاثٍ وَعِشْرِينَ

லைலதுல் கத்ர் இரவு பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் யார் விளக்கம் கேட்பது என்று பேசிக் கொண்டோம். இது ரமளான் மாதம் 21 ஆம் காலையில் நடந்தது. நான் புறப்பட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மஃரிப் தொழுகையில் பங்கு கொண்டேன். லைலதுல் கத்ர் பற்றி கேட்டு வர என்னை பனூ ஸலமா கூட்டத்தினர் அனுப்பியதைத் தெரிவித்தேன். இது எத்தனையாவது இரவு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். 22 ஆம் இரவு என்று நான் குறிப்பிட்டேன். இது தான் அந்த (லைலதுல் கத்ர்) இரவு என்று கூறினார்கள். பின்னர் திரும்பி வந்து அடுத்த இரவும் எனக் கூறி 23 ஆம் இரவைக் குறிப்பிட்டனர்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி)

நூல்: அபூதாவூத்

அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி), 21 ஆம் காலையில் புறப்பட்டு மக்ரிபை அடைகிறார். நாளின் ஆரம்பம் ஸுப்ஹு தான் என்றால் அன்றைய மக்ரிபை 21 ஆம் நாள் மக்ரிப் என அவர் கூற வேண்டும். ஆனால் 22 ஆம் நாள் மக்ரிப் என்று கூறுகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அதை அங்கீகரிக்கிறார்கள். இதிலிருந்து மக்ரிப் தான் நாளின் துவக்கம் என்பதைச் சந்தேகமற அறியலாம்.

صحيح البخاري

2027 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الحَارِثِ التَّيْمِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَعْتَكِفُ فِي العَشْرِ الأَوْسَطِ مِنْ رَمَضَانَ، فَاعْتَكَفَ عَامًا، حَتَّى إِذَا كَانَ لَيْلَةَ إِحْدَى وَعِشْرِينَ، وَهِيَ اللَّيْلَةُ الَّتِي يَخْرُجُ مِنْ صَبِيحَتِهَا مِنَ اعْتِكَافِهِ، قَالَ: «مَنْ كَانَ اعْتَكَفَ مَعِي، فَلْيَعْتَكِفِ العَشْرَ الأَوَاخِرَ، وَقَدْ أُرِيتُ هَذِهِ اللَّيْلَةَ ثُمَّ أُنْسِيتُهَا، وَقَدْ رَأَيْتُنِي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ مِنْ صَبِيحَتِهَا، فَالْتَمِسُوهَا فِي العَشْرِ الأَوَاخِرِ، وَالتَمِسُوهَا فِي كُلِّ وِتْرٍ»، فَمَطَرَتِ السَّمَاءُ تِلْكَ اللَّيْلَةَ وَكَانَ المَسْجِدُ عَلَى عَرِيشٍ، فَوَكَفَ المَسْجِدُ، فَبَصُرَتْ عَيْنَايَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى جَبْهَتِهِ أَثَرُ المَاءِ وَالطِّينِ، مِنْ صُبْحِ إِحْدَى وَعِشْرِينَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் நடுவில் உள்ள பத்து நாட்கள் இஃதிகாப் இருப்பது வழக்கம். அவ்வழக்கப்படி ஒரு ஆண்டு இஃதிகாப் இருந்தனர். 21 ஆம் இரவு வந்த போது, – அந்த இரவுக்குரிய காலையில் தான் இஃதிகாபிலிருந்து வெளியேறுவது அவர்களின் வழக்கம் – என்னுடன் இஃதிகாப் இருந்தவர்கள் கடைசிப் பத்து நாட்களும் இஃதிகாப் இருக்கட்டும். அவ்விரவு எனக்குக் காட்டப்பட்டு பின்னர் மறக்கடிக்கப்பட்டு விட்டது. அன்று காலையில் சேற்றிலும், தண்ணீரிலும் ஸஜ்தாச் செய்வதாகக் (கனவு) கண்டேன். எனவே கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடுங்கள்! ஒவ்வொரு ஒற்றைப்படை நாட்களிலும் தேடுங்கள் என்றனர். அன்றிரவு மழை பொழிந்தது. பள்ளியின் பந்தலிலிருந்து தண்ணீர் வழிந்தது. 21 ஆம் நாள் காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெற்றியில் சேற்றையும், தண்ணீரையும் என் கண்கள் கண்டன.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

நூல்: புகாரி 2027

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 21 ஆம் இரவில் மீண்டும் இஃதிகாப் இருந்தனர். அன்றிரவு மழை பெய்து அவர்களின் நெற்றியில் சேறு படிந்ததை ஸுப்ஹ் நேரத்தில் அபூஸயீத் (ரலி) பார்த்ததாகக் கூறுகிறார். நாளின் துவக்கம் ஸுப்ஹு என்றால் 22 வது நாள் ஸுப்ஹு என்று தான் அதைக் கூற வேண்டும். ஆனால் நபித்தோழரோ 21 ஆம் இரவுக்கு அடுத்து வரும் ஸுப்ஹை 21 வது நாள் ஸுப்ஹ் எனக் கூறுகிறார். இதிலிருந்து நாளின் துவக்கம் இரவு தான் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

மேலும் அன்று காலை தான் இஃதிகாபை விட்டு வெளியேறுவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழக்கம் என்ற சொல்லும் கவனிக்கத்தக்கது. ஸுப்ஹிலிருந்து தான் நாள் துவங்குகிறது என்றால் மறுநாள் காலையில் வெளியேறுவார்கள் என்று தான் கூற வேண்டும். அன்று காலையில் வெளியேறுவார்கள் எனக் கூற முடியாது. அன்று காலையில் என்று கூறியிருப்பதால் நாளின் துவக்கம் இரவு தான் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகின்றது.

سنن الدارمي

213 – أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ الْفَزَارِيِّ، عَنْ أَسْلَمَ الْمِنْقَرِيِّ، عَنْ بِلَادِ بْنِ عِصْمَةَ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ، وَكَانَ إِذَا كَانَ عَشِيَّةَ الْخَمِيسِ ليْلةِ الْجُمُعَةِ، قَامَ فَقَالَ: «إِنَّ أَصْدَقَ الْقَوْلِ قَوْلُ اللَّهِ عَزَّ وَجَلَّ وَإِنَّ أَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالشَّقِيُّ مَنْ شَقِيَ فِي بَطْنِ أُمِّهِ، وَإِنَّ شَرَّ الرَّوَايَا رَوَايَا الْكَذِبِ، وَشَرَّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلَّ مَا هُوَ آتٍ قَرِيبٌ»

[تعليق المحقق] إسناده جيد

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் வெள்ளிக் கிழமை இரவிற்குரிய வியாழன் மாலை ஆகும் போது எழுந்து "சொல்லில் மிக உண்மையான சொல் அல்லாஹ்வின் சொல்லாகும்….'' என்று கூறுவார்.

அறிவிப்பவர்: பிலாத் பின் இஸ்மா

நூல்: தாரமீ

நபித்தோழர்கள் காலத்திலும் நாளின் ஆரம்பம் இரவாகவே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்பதற்கு இச்செய்தி சிறந்த சான்றாகும்.

வியாழன் மாலையைப் பற்றிக் குறிப்பிடும் போது அது வெள்ளிக் கிழமை இரவிற்குரியது என்று கூற வேண்டுமானால் இரவு தான் நாளின் ஆரம்பமாக இருக்க வேண்டும். இல்லையெனில் இது சாத்தியமான வாசகமாக அமையாது.

இன்றும் இஸ்லாமியப் பெண்களிடம் இதைப் போன்ற வாசகங்கள் பயன்படுத்துவதும் நடைமுறையில் உள்ளது.

இதைப் போன்ற வாசகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

مسند أحمد بن حنبل (2/ 483)

 10277 – حدثنا عبد الله حدثني أبي ثنا يونس بن محمد قال حدثني الخزرج يعني بن عثمان السعدي عن أبي أيوب يعني مولى عثمان عن أبي هريرة قال سمعت رسول الله صلى الله عليه و سلم قال : إن أعمال بني آدم تعرض كل خميس ليلة الجمعة فلا يقبل عمل قاطع رحم

تعليق شعيب الأرنؤوط : إسناده حسن

ஒவ்வொரு வியாழனின் மாலை வெள்ளி இரவன்று ஆதமுடைய மக்களின் அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக்காட்டப்படும். (அப்போது) குடும்ப உறவை முறித்தவனின் அமலை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல் : அஹ்மத்

இதைப் போன்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் சொல்லும் இதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

مصنف ابن أبي شيبة

5114 – حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «إِذَا أَدْرَكَتْكَ لَيْلَةُ الْجُمُعَةِ، فَلَا تَخْرُجْ حَتَّى تُصَلِّي الْجُمُعَةَ»

நீ வெள்ளிக் கிழமை இரவை அடைந்து விட்டால் ஜும்ஆத் தொழாமல் (பயணமாக) வெளியே செல்லாதே!

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

நாளின் ஆரம்பம் பகல் என்றிருக்குமானால் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் சொல்லில் ஏதாவது பொருள் இருக்குமா? வெள்ளி இரவு வந்து விட்டால் எப்படி அடுத்த நாள் ஜும்ஆ தொழ முடியும்? அடுத்த நாள் சனிக்கிழமையாக அல்லவா இருக்கும்?.

மக்ரிப் தான் நாளின் ஆரம்பம் என்றிருக்குமானால் தான் ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்றிற்குப் பொருள் இருக்கும். எனவே அறிவுச் சுடர் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூட இரவு தான் நாளின் ஆரம்பம் என்று எண்ணியிருந்ததை இச்செய்தி தெளிவாகக் காட்டுகிறது.

(இச்செய்தியை வெள்ளிக் கிழமை இரவு தங்கியவர் வெளியே செல்லலாமா? செல்லக் கூடாதா? என்பதற்குரிய சான்றாக நாம் எடுத்து வைக்கவில்லை. நாளின் ஆரம்பம் எது என்பதில் ஆயிஷா (ரலி) அவர்களின் கருத்து என்ன என்பதைத் தெளிவுபடுத்தவே நாம் கூறியுள்ளோம் என்பதைக் கவனத்தில் கொள்க.)

நாம் மேலே குறிப்பிட்ட அனைத்து ஆதாரங்களும் நாளின் துவக்கம் இரவு என்பதை ஐயத்திற்கிடமின்றி தெளிவுபடுத்துகின்றன. குறிப்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நாளின் துவக்கம் இரவாகவே இருந்தது என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறது.

நாளின் துவக்கம் பகல் என்று கூறுவோரின் தவறான வாதங்கள்!

நாளின் ஆரம்பம் பகல் தான், இரவு அல்ல என்று கூறுபவர்கள் சில ஆதாரங்களை எடுத்து வைக்கின்றனர்.

அவற்றின் உண்மை நிலை என்ன? என்பதைப் பார்ப்போம்.

"தொழுகைகளையும், நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்விற்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்!''

திருக்குர்ஆன் 2:239

இவ்வசனத்தில் கூறப்படும் நடுத்தொழுகை என்பது அஸர் தொழுகை தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள். எனவே நாளின் ஆரம்பம் பகல் என்றிருந்தால் தான் அஸர் தொழுகை நடுத்தொழுகையாக வர முடியும். இரவு என்று கூறினால், இரவின் முதல் தொழுகை மக்ரிப் ஆகும், இதன்படி ஸுப்ஹுத் தொழுகை தான் நடுத்தொழுகையாக வர வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸுப்ஹு தான் நடுத்தொழுகை என்று கூறாமல் அஸர் தான் நடுத் தொழுகை என்று கூறியிருப்பதால் நாளின் ஆரம்பம் பகலே என்று எதிர்க்கருத்துடையோர் கூறுகின்றனர்.

2:239 வசனத்தில் கூறப்படும் நடுத்தொழுகை என்பது அஸர் தொழுகை தான் என்று நபிமொழித் தொகுப்புகளில் கூறப்பட்டிருப்பது உண்மை தான். அப்படியானால் இரவு தான் துவக்கம் என்றால் எப்படி அஸர் தொழுகை நடுத்தொழுகையாகும்? என்ற கேள்விக்கான பதில்கள் இதோ!

நடுத்தொழுகை என்ற சொல்லை வைத்து நாளின் துவக்கத்தை முடிவு செய்வதை விட கிழமையும், தேதியும் குறித்துப் பேசும் இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் முடிவு செய்வதே சரியானதாகும்.

நடுத்தொழுகை என்பதில் நடு என்பது வரிசைக் கிரமத்தை மட்டும் குறிக்காது. நடுத்தரம், சிறப்பு என்ற கருத்திலும் இச்சொல் பயன்படுத்தப்படுவதுண்டு.

நடுத்தொழுகை என்று மொழிபெயர்த்த இடத்தில் "நடு' என்ற கருத்தைத் தர பயன்படுத்தப்பட்ட சொல் "அல் உஸ்தா' என்ற அரபிச் சொல்லாகும். இதற்கு "நடு' என்றும் சிறப்பிற்குரியது என்றும் பொருள் உண்டு. 2:239 வசனத்தில் சிறப்பிற்குரியது என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை ஹாபிழ் இப்னு ஹஜர் தனது புகாரியின் விரிவுரை நூலான பத்ஹுல் பாரியில் தெளிவுபடுத்துகிறார்கள்.

ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களின் கூற்றுக்கு குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் சான்றாக உள்ளன. "அல் உஸ்தா' என்ற சொல்லின் மூலச் சொல்லிலிருந்து பிறந்த சொற்கள் இரண்டு பொருள்களுக்கு மத்தியில் உள்ளவை என்ற பொருளல்லாமல் சிறந்தது என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

(பார்க்க அல்குர்ஆன் 68:28, 2:143)

ஐவேளைத் தொழுகைகளும் முக்கியமானவை என்றாலும் ஸுப்ஹு, அஸர் ஆகிய இரண்டு தொழுகைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் அழைத்துச் செல்லப்பட்ட இரவில் தான் தொழுகை கடமையாக்கப்பட்டது

நூல் : புகாரி 349

மேலும் இரவில் தான் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டார்கள். இதைக் குர்ஆன் 17 அத்தியாயத்தின் முதல் வசனம் தெளிவுபடுத்துகிறது. மிஃராஜ் இரவில் தொழுகை கடமையாக்கப்பட்டாலும் கடமையாக்கப்பட்ட பிறகு வந்த முதல் தொழுகை ஸுப்ஹு தான். கடமையாக்கப்பட்ட வரிசைப்படி அஸர் நடுத்தொழுகை என்று தான் முடிவு செய்ய முடியுமே தவிர நாளின் துவக்கத்தை முடிவு செய்ய இது சான்றாகாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு தொழுகை விண்ணுலகப் பயணத்தில் கடமையாக்கப்பட்ட பிறகு இவ்வுலகத்திற்கு வந்த பின்னர் அவர்கள் சந்தித்த முதல் தொழுகை நேரம் ஸுப்ஹு. எனவே ஸுப்ஹுத் தொழுகையிலிருந்து கணக்கிடப்பட்டு அஸர் தொழுகை நடுத்தொழுகையாக வருகிறது. நாளின் ஆரம்பம் காலை என்ற அடிப்படையில் வந்தவை அல்ல.

அல்லது நடுத்தொழுகை என்று மொழிபெயர்ப்பதை விட "சிறப்பு மிக்கத் தொழுகை' என்று பொருள் கொள்ள வேண்டும்.

எக்கருத்தைக் கொண்டாலும் நாளின் ஆரம்பம் பகல் என்று வராது. மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நாளின் துவக்கம் இரவு தான் என்பதற்கு வலுவான ஆதாரங்களை நாம் காட்டியுள்ளோம்.

அடுத்து நாளின் ஆரம்பம் பகல் தான் என்று கூறுபவர்கள் எடுத்துக்காட்டும் மற்றொரு ஆதாரம் :

"வைகறை எனும் வெள்ளைக் கயிறு (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்!''

திருக்குர்ஆன் 2:187

மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை (பஜ்ர்) வரை இருக்கும்.

திருக்குர்ஆன் 97:3-5

இதிலிருந்து எதிர்த்தரப்பினர் செய்யும் வாதம் இதுதான்:

முதலில் குறிப்பிட்ட (2:187) வசனத்தில் நாளின் ஆரம்பம் பஜ்ர் (காலை) என்றும், இரண்டாவது குறிப்பிட்ட (97:3-5) வசனத்தில் நாளின் முடிவு பஜ்ர் உதயமாகும் வரை என்று கூறப்பட்டுள்ளதாம்.

அதனால் நாளின் ஆரம்பம் காலை தான் என்கிறார்கள். மேற்கண்ட இரு வசன்ங்களும் நாளின் ஆரம்பம் எது என்பதை மறைமுகமாகவோ நேரடியாகவோ சொல்லவில்லை.

(2:187) வசனத்தில் நாளின் ஆரம்பம் பஜ்ர் என்று கூறப்படவில்லை. நோன்பு என்ற கடமை பஜ்ரிலிருந்து ஆரம்பித்து இரவு வரை முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே தவிர நாளின் துவக்கத்தைப் பற்றி பேசவே இல்லை. இதைச் சாதாரண மக்கள் கூட விளங்குவார்கள்.

இதைப் போன்று தான் (97:3-5) வசனத்தில் லைலத்துல் கத்ர் என்ற இரவின் துவக்கமும் அதன் முடிவும் கூறப்பட்டுள்ளதே தவிர நாளின் முடிவு எங்கே கூறப்பட்டுள்ளது?

அடுத்து அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரம்:

صحيح البخاري

472 – حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ المُفَضَّلِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: سَأَلَ رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى المِنْبَرِ، مَا تَرَى فِي صَلاَةِ اللَّيْلِ، قَالَ: «مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيَ الصُّبْحَ صَلَّى وَاحِدَةً، فَأَوْتَرَتْ لَهُ مَا صَلَّى» وَإِنَّهُ كَانَ يَقُولُ: اجْعَلُوا آخِرَ صَلاَتِكُمْ وِتْرًا، فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِهِ

"உங்களின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 472

மேலும் வித்ரின் கடைசி நேரம் பஜ்ருக்கு முந்திய நேரமாகும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நம்முடைய கடைசித் தொழுகையாக வித்ரை பஜ்ருக்கு முன் தொழுது கொள்ள வேண்டுமென நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் நாளின் துவக்கம் பஜ்ராகும் என்று வாதிடுகின்றனர்.

ஒரு நாளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. இரவில் தொழும் தொழுகையில் இறுதியாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என்று தான் கூறியுள்ளார்கள். இதை பின்வரும் ஹ்தீஸில் இருந்து அறியலாம்.

صحيح البخاري

998 – حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اجْعَلُوا آخِرَ صَلاَتِكُمْ بِاللَّيْلِ وِتْرًا»

"இரவின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி 998

அவர்களின் மற்றொரு ஆதாரம் :

ரமலானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும் பெருநாள் தொழுகை தொழும் திடலுக்குச் செல்லுமாறும் கட்டளையிட்டார்கள்.

(அபூதாவூத், அஹ்மத்)

இதைப் போன்ற கருத்துள்ள இன்னும் சில ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டி, நாளின் ஆரம்பம் இரவு என்றிருக்குமானால் அந்தக் கிராமவாசிகள் இன்று பிறை பார்த்தோம் என்றல்லவா கூறியிருக்க வேண்டும். ஏன் நேற்று என்று கூறினார்கள்? என்று கேட்கின்றனர்.

மக்ரிபில் பிறை பார்த்து விட்டு அடுத்த நாள் காலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்கிறார்கள். இரவு பார்த்து விட்டு அதைத் தொடர்ந்து வரும் காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்கும் அந்தக் கிராமவாசிகள் இன்று பிறை பார்த்ததாகவல்லவா கூற வேண்டும் என இந்த ஹதீஸை எடுத்து வைத்து வாதிடுகின்றனர்.

இவ்வாதம் அரபி மொழியில் உள்ள சொல்லுக்குரிய சரியான பொருளை அறியாததால் வந்த வினையாகும்.

அவர்கள் "நேற்று' என்று மொழி பெயர்த்த இடத்தில் அரபி மூலத்தில் "அம்ஸி' என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இதற்கு தமிழில் பரவலாக நேற்று என்று மொழி பெயர்க்கப்படுகிறது. இதனுடைய சரியான பொருள் என்ன?

இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், வானிலிருந்து நாம் இறக்கிய தண்ணீரைப் போன்றது. மனிதர்களும், கால்நடைகளும் உண்ணுகிற பூமியின் தாவரங்களுடன் அத்தண்ணீர் கலக்கிறது. முடிவில் பூமி அலங்காரம் பெற்று கவர்ச்சியாக ஆகிறது. அதன் உரிமையாளர்கள் அதன் மீது தமக்குச் சக்தியிருப்பதாக நினைக்கும் போது நமது கட்டளை இரவிலோ, பகலிலோ அதற்கு (பூமிக்கு) கிடைக்கிறது. உடனே நேற்று அவ்விடத்தில் இல்லாதிருந்தது போல் அறுக்கப்பட்டதாக அதை ஆக்கினோம். சிந்திக்கிற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம்.

திருக்குர்ஆன் 10:24

இவ்வசனத்தில் நேற்று என்று மொழிபெயர்த்த இடத்தில் "அம்ஸி' என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இதற்கு 24 மணி நேரத்திற்கு முந்திய நாள் என்று பொருள் அல்ல! கடந்த நாட்கள் என்ற பொருளே கொள்ள வேண்டும். அதுவே இவ்விடத்தில் பொருத்தமாக அமையும். நேற்று என்ற தமிழ்ச் சொல்லும் கடந்து விட்டவைகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. "நேற்று எப்படி இருந்தான்? இன்று எப்படி இருக்கிறான்?' என்று தமிழ் வழக்கில் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். இந்த நேற்றுக்கு 24 மணி நேரத்திற்கு முந்திய நாள் என்று பொருளில்லை என்பதை நாம் அறிவோம்.

இதைப் போன்று அரபி மொழியில் "அம்ஸி'  என்ற சொல் ஒரு இரவு கடந்த நாளையும் குறிக்கவும், பொதுவாகக் கடந்து விட்ட காலத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இதன் அடிப்படையில் இரவில் பிறை பார்த்தவர்கள் ஒரு இரவைக் கடந்து வந்து கூறியுள்ளதால் "அம்ஸி' நேற்று என்று பயன்படுத்தியுள்ளனர்.

அவர்களின் ஆதாரம் :

"மக்ரிப் தொழுகை பகலின் வித்ர். எனவே இரவிலும் வித்ரு தொழுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அஹ்மத்)

இந்த ஹதீஸிலிருந்தும் நாளின் ஆரம்பம் பஜ்ர் என்று தெளிவாகிறதாம். இந்த ஹதீஸில் எந்த இடத்தில் நாளின் ஆரம்பம் பஜ்ர் என்று சொல்லப்பட்டுள்ளது. மக்ரிப் தொழுகையின் ரக்அத் ஒற்றைப் படையில் இருப்பதால் அது பகலின் வித்ர் என்றும் இரவில் அவ்வாறு இல்லாததால் வித்ர் தொழுங்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதைத் தவிர இந்த ஹதீஸில் வேறு எதுவும் இல்லை.

அவர்களின் ஆதாரம் :

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். (5:3) என்ற வசனம் நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அரஃபாவில் நின்று கொண்டிருந்த போது இறங்கியது.

(புகாரி, முஸ்லிம்)

அரஃபா நாள் வெள்ளிக்கிழமை மாலை இறங்கியது.

(அஹ்மத்)

வெள்ளிக் கிழமை இரவு நாங்கள் அரஃபாவில் இருக்கும் போது இறங்கியது.

(நஸாயீ)

இச்செய்தியை அறிவிக்கும் உமர் (ரலி) அவர்கள்  வெள்ளிக் கிழமை அரஃபா மாலை, வெள்ளிக் கிழமை இரவு எனக் கூறியதிலிருந்து நாள் பஜ்ரிலிருந்து ஆரம்பமாகிறது என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாக(?) விளங்குகிறது என்று கூறுகின்றனர்.

பலவிதமாக அறிவிக்கப்பட்ட ஹதீஸ்களைத் தனக்குச் சாதகமாக வரிசைப்படுத்திக் கொண்டு முதலில் பகல் பின்னர் இரவு என்று கூறி மிகப் பெரிய ஆதாரமாக எடுத்துக் காட்டுகிறார்.

"முதலில் இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்' (5:3) என்ற வசனம் அரஃபா பகலில் இறங்கியதா? அல்லது மாலையில் இறங்கியதா? அல்லது இரவில் இறங்கியதா? என்பதை முதலில் அவர்கள் தெளிவுபடுத்தட்டும். அனைத்து செய்திகளும் உமர் (ரலி) வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்க.

மாறுபட்ட செய்திகளை ஒன்றோடு ஒன்றை இணைத்து தனக்கு சாதகமாகப் பயன்படுத்துவது சரியல்ல.

பிறை பார்த்தல் வரட்டு வாதங்கள்

பிறையைக் கணித்துத் தான் நாளை முடிவு செய்ய வேண்டும்; பிறையைப் பார்க்கத் தேவை இல்லை என்று வரட்டு வாதம் புரிவோர் தங்கள் வாதத்தை நிறுவிட பிரசுரங்கள் வெளியிட்டு தங்கள் மதியீனத்தைப் பறைசாற்றி வருகின்றனர். இவர்களின் முழு வாதமும் கிறுக்குத்தனமாகவும், ஆதாரமற்ற உளறலாகவும் உள்ளன என்பதை சிறிதளவு சிந்தனை உள்ளவர்கள் கூட அறிய முடியும்.

ஹிஜ்ரா கமிட்டி என்ற பெயரில் பித்தலாட்டம் செய்யும் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் இது குறித்து வரிசை எண் போட்டு முப்பது கேள்விகளைக் கேட்டுள்ளனர். இத்துடன் நாளின் ஆரம்பம் எது என்பது குறித்தும் வரிசை எண் போட்டு கேள்விகள் கேட்டுள்ளனர்.

வரட்டுக் கேள்வி –1

பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் (ரஃயல் ஐன் 3:13) என்று நேரடியாகக் கூறும் குர்ஆன் வசனமோ ஹதீஸோ இருக்கிறதா?

நமதுபதில் – 1

1 .  பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று நேரடியாக ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்று கேட்கிறார்கள். எதற்கு நேரடியாக ஆதாரம் உள்ளதோ, அது குறித்து கேள்வி கேட்கும் இவர்களை என்னவென்று சொல்ல?

புறக்கண்ணால் பார்த்துத் தான் பிறையை முடிவு செய்ய வேண்டும் என்பதற்கு,பிறை குறித்து வரும் அனைத்து ஹதீஸ்களுமே ஆதாரம் தான்.

வாகனக் கூட்டத்தினர் நேற்று பிறை பார்த்ததாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் வந்து சொல்கின்றனர்.  "நேற்று பிறை பார்த்தோம்",  என்பது புறக்கண்ணால் பார்த்ததைத் தான் குறிக்கும்.

நீங்கள் பிறையைப் பார்ப்பது வரை அல்லாஹ் முந்தைய மாதத்தை நீட்டித் தருவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியுள்ளதும் புறக்கண்ணால் பார்க்கப்படுவதைத் தான் குறிக்கிறது.

இன்னும் சொல்லப் போனால், பிறையைப் பார்த்து நோன்பை வையுங்கள், பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள், என்பதற்கும்  புறக்கண்ணால் பார்த்து முடிவு செய்வது தான் பொருள்!

எதற்கு நேரடியாக ஆதாரம் இருக்கிறதோ, அதில் கேள்வி கேட்கும் இவர்களை நோக்கி நாம் ஒரு கேள்வி வைக்கிறோம்.

முன்கூட்டியே கணித்துத் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்களே ,அதற்குரிய குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் என்ன?

ரஃயல் ஐன் என்ற வார்த்தை வந்தால் தான் புறக்கண்ணால் பார்த்ததாக அர்த்தம் வருமாம். அதாவது ரஃய் என்றால் பார்த்தல் என்பது பொருள். ஐன் என்றால் கண் என்பது பொருள். பார்த்தல் என்பதுடன் கண்னைச் சேர்த்து கண்ணால் பார்த்தல் என்று ஆதாரம் உண்டா எனக் கேட்கின்றனர்.

சாப்பிட வேண்டும் என்றாலும் வாயால் சாப்பிட வேண்டும் என்றாலும் ஒரே அர்த்தம் தான். அது போல் பார்த்தல் என்றாலும் கண்ணால் பார்த்தல் என்றாலும் ஒரே அர்த்தம் தான்.

ஆனால் எந்த மொழியாக இருந்தாலும் பார்த்தல் என்பதற்கு கண்ணால் பார்த்தல் என்று தான் பொருள் செய்ய வேண்டும். அந்த அர்த்தம் பொருந்தாத இடத்தில் மட்டும் தான் வேறு பொருத்தமான அர்த்தம் செய்ய வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் ரஃயல் ஐன் என்ற வார்த்தை இருந்தால் தான் கண்ணால் பார்த்தல் என்று அர்த்தம் செய்வார்களாம்.

அல்லாஹவைக் காட்டு என்று மூஸா நபி சமுதாயம் கேட்ட போது வெறும் ரஃய் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. கண்ணுக்குக் காட்டு என்று அர்த்தம் செய்வார்களா? கருத்துக்குக் காட்டு என்று அர்த்தம் செய்வார்களா? இது போல் நூற்றுக் கணக்கான வசனங்களில் ஐன் என்ற வார்த்தை சேராமல் தான் ரஃய் என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அதற்கு கண்களால் பார்த்தல் என்று பொருள் இல்லை என்று சொல்வார்களா?

இவர்கள் சுட்டிக் காட்டும் 3:13 வசனத்தில் பார்த்தல் என்பதுடன் ஐன் அதாவது கண் என்ற சொல் ஏன் சேர்த்துச் சொல்லப்ட்டது என்ற அறிவும் இவர்களுக்கு இல்லை. கண் பார்வைக்கு இரு மடங்காகத் தெரிந்தது ஆனால் உண்மையில் அப்படி இல்லை என்ற கருத்தைக் கூறுவதற்காக இவ்வாறு கூறப்பட்டது. இதை அந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்க்கும் மூளையுள்ள யாரும் அறிந்து கொள்ளலாம்.

வரட்டுக் கேள்வி -2

ஹதீதில் மேக மூட்டம் என்று இருக்கிறதா? மறைக்கப்படும் போது என்று இருக்கிறதா? பார்க்க 10:71 கும்ம, குப்பிய, கும்மிய இந்த அரபி பதங்களின் நேரடி தமிழ்ப் பதங்கள் என்ன?

நமது பதில் – 2

ஹிஜ்ரா காலண்டர் என்று மார்க்க ஆதாரமில்லாத ஒன்றை நிலைநாட்டும் இந்தக் கூட்டத்தினர் வெறும் கேள்விகளாகத் தான் கேட்பார்கள். இதற்கு இது தான் அர்த்தம் என்று ஆதாரத்துடன் வாதத்தை எடுத்து வைக்க மாட்டார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

10:71 வசனத்தைக் காட்டி மேற்கண்ட சொல்லுக்கு மறைத்தல் என்று தான் பொருள் என வாதிடுகின்றனர். இவர்களுக்கு ஆய்வு அறிவும் இல்லை. மொழி அறிவும் இல்லை. தனித்துச் சொல்லப்பட்டாலும் இன்னொரு சொல்லுடன் சேர்த்துச் சொல்லப்பட்டாலும் ஒரே அர்த்தம் தரக் கூடிய சொற்கள் எல்லா மொழிகளிலும் உள்ளன. தனித்துச் சொல்லப்படும் போது ஒரு அர்த்தமும் இன்னொரு சொல்லுடன் சேர்த்துச் சொல்லும் போது வேறு அர்த்தம் தரக் கூடிய சொற்களும் உள்ளன.

உதாரணமாக இந்த ஆணியின் மறை கழன்று விட்டது அல்லது லூசாகி விட்டது என்றால் நேரடி அர்த்தம் தான் இதற்குச் செய்ய வேண்டும். ஆனால் இந்த மனிதனுக்கு மறை கழன்று விட்டது என்று கூறினால் அல்லது லூஸ் என்று கூறினால் அதற்கு நேரடி அர்த்தம் செய்ய முடியாது. கிறுக்கன் என்று தான் அர்த்தம் செய்ய வேண்டும்.

கிறுக்கன் என்று நேரடி அர்த்தத்தில் உள்ளதா என்று கேட்பது போல் இவர்களின் கேள்வி அமைந்துள்ளது.

பிறையை  வானத்துடன் தொடர்புபடுத்தி  சொல்லப்படும் போது கண்ணுக்குத்  தெரியாமல் மேகம் அல்லது பனி மூட்டம் மறைத்து பார்க்க முடியாமல் செய்தல் என்ற பொருளைத் தரும்.

இதனால் தான் மேகத்துக்கு கும்ம என்ற சொல்லில் இருந்து பிறந்த கமாம் என்ற சொல் திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பார்க்க 2:57, 2:210, 7:160, 25:25

பொதுவாக கும்மவுக்கு மறைத்தல் என்று பொருள் சொல்லும் அகராதி நூல்கள் பிறையுடன் அதைச் சேர்த்து சொல்லும் போது கண்ணுக்குப் புலப்படாமல் கண்ணால் பார்க்க முடியாமல் மேகம் அல்லது பனி மூட்டம் பிறையை மறைப்பது என்று கூறுகின்றன.

ولَيْلَةُ الغُمى: هي اللَّيلةُ التي لا يُرى فيها الهلالُ، وكذلك الغُمَيَّةُ إذا غُمَّ الهِلالُ على الناس

[المحيط في اللغة 1/ 391، بترقيم الشاملة آليا]

ويقال أيضاً: غُمَّ الهلال على الناس، إذا ستره عنهم غيمٌ أو غيره فلم يُرَ

[الصحاح في اللغة 2/ 26، بترقيم الشاملة آليا]

وَفِي حَدِيثٍ { فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ } أَيْ فَإِنْ سُتِرَتْ رُؤْيَتُهُ بِغَيْمٍ أَوْ ضَبَابٍ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلَاثِينَ لِيَكُونَ الدُّخُولُ فِي صَوْمِ رَمَضَانَ بِيَقِينٍ .

وَفِي حَدِيثٍ { فَاقْدُرُوا لَهُ } قَالَ بَعْضُهُمْ أَيْ قَدِّرُوا مَنَازِلَ الْقَمَرِ وَمَجْرَاهُ فِيهَا قَالَ أَبُو زَيْدٍ غُمَّ الْهِلَالُ غَمًّا فَهُوَ مَغْمُومٌ وَيُقَالُ كَانَ عَلَى السَّمَاءِ غَمٌّ وَغَمْيٌ فَحَالَ دُونَ الْهِلَالِ وَهُوَ غَيْمٌ رَقِيقٌ أَوْ ضَبَابَةٌ

[المصباح المنير في غريب الشرح الكبير  7/ 84]

وصُمْنا للغُمَّى وللغَمَّى بالفتح والضم إذ غُمَّ عليهم الهلال في الليلة التي يرون أن فيها استهلاله وصُمْنا للغَمَّاء بالفتح والمد وصُمْنا للغُمِّيَّة وللغُمَّة كل ذلك إذا صاموا على غير رؤية وفي الحديث أنه قال صوموا لرؤيته وأَفطروا لرؤيته فإن غُمَّ عليكم فأَكملوا العدة قال شمر يقال غُمَّ علينا الهلال غَمّاً فهو مَغْموم إذا حال دون رؤية الهلال غَيْمٌ رَقِيق من غَمَمْت الشيء إذا غَطَّيته

[لسان العرب 12/ 441]

ويقال أيضا غُمَّ الهلال على الناس إذا ستره عنهم غيم أو غيره فلم يُر

[مختار الصحاح ص: 488]

(கும்ம)  மறைக்கப்படும்,  என்ற  வார்த்தை ஒரு பொதுவான சொல். எந்தப் பொருளோடு அது  இணைத்து பேசப்படுகிறதோ, அதைப் பொறுத்து அந்தச் சொல்லுக்கு அர்த்தம் வேறுபடும். பொதுவாக, ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னால், "குழப்பமடைந்தவர்" என்று பொருள்.

வானத்தோடு  இணைத்துச் சொல்லப்படுமானால், வானத்தில் எது மறைக்கும்? என்று சிந்தித்து, அதை இந்தச் சொல்லுக்கு பொருளாக கொடுப்பது தான் முறையான செயல். அவ்வகையில் பார்த்தால், க்ம்மு – என்ற மறைக்கப்படுதல் என்பதற்கு இந்த இடத்தில் "மேகம் மறைத்தல் " என்ற பொருள் தான் கொடுக்க முடியும்.

எந்தப் பொருளையும் முதலில் நம் நிலையில் இருந்து மட்டும் சிந்திப்பதால் ஏற்படும் கோளாறு தான் இத்தகைய கேள்விகள். இந்த ஹதீஸ் சொல்லப்பட்ட நபியின் காலத்தில், இதற்குரிய பொருள் என்ன? இதை நபி கூறிய பொழுது, சஹாபாக்கள் எவ்வாறு  இதைப்  புரிந்திருப்பார்கள்?  என்பதைச்  சிந்தித்தால் இது போன்ற அறிவார்ந்த(?) கேள்விகள் எழாது.

வரட்டுக் கேள்வி – 3

நபி (ஸல்) பிறை 29 மாலை பிறை பார்க்கச் சொன்னார்களா? அல்லது தினசரி பார்க்கச் சொன்னார்களா?

நமது பதில் – 3

இந்தக் கேள்வியின் மூலம் பிறையைக் கணிக்க வேண்டும் என்ற நச்சுக் கருத்தை எப்படி நிறுவுகிறார்கள் என்பதை இவர்கள் விளக்கவில்லை. இத்தகைய அறிவுப்பூர்வமான வழிமுறை இவர்களிடம் கடுகளவும் இல்லை. மாற்றுக் கருத்து உடையவர்களை நோக்கி கேள்விகள் கேட்டால் அந்தக் கேள்வி மூலம் என்ன கருத்தை எப்படி நிலை நாட்டப் போகிறார்கள் என்பதையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். இவர்களின் கேள்விப் பட்டியலில் இந்த அறிவுப்பூர்வமான அம்சம் இல்லவே இல்லை.

இவர்கள் கேட்டுள்ள மூன்றாவது கேள்வி கூட முரண்பாட்டின் வடிவமாக உள்ளது.

29 அன்று பிறை பார்க்கச் சொல்வது தினசரி பார்க்க வேண்டும் என்பதற்கு முரணானது அல்ல. ஒன்றுடன் ஒன்று பிண்ணிப் பிணைந்ததாகும்.

வாகனக் கூட்டத்தினர்  நேற்று  பிறை  பார்த்ததாகச்  சொல்லியுள்ள  அறிவிப்பில், "நேற்று"  என்பது  29 ஐ தான்  குறிக்கும். மாதம் என்பது  29 நாட்கள் தான். பிறை தெரிந்தால் அந்த மாதம் அதோடு முடியும். பிறை தெரியவில்லை என்றால் முப்பதாக பூர்த்தி ஆகும்.

இதனடிப்படையில் பார்க்கும் போது, ஒரு மாதம் முடிவடைந்து விட்டதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க அந்த மாதத்தின் 29 நாட்கள் கழித்த பிறகு தான் பிறை பார்க்க வேண்டும். இது அந்த அறிவிப்பிலேயே புரிகிறது   மட்டுமல்லாமல்,  வாகனக் கூட்டம் ஹதீசும் தெளிவுப்படுத்துகிறது.

29 இல் மட்டும் பார்க்க வேண்டுமா? அல்லது ஒவ்வொரு நாளும் பார்க்க வேண்டுமா? என்ற கேள்வியைக் கேட்கிறார்கள்.  மாதத்திற்கு எத்தனை நாட்கள் ஆகியுள்ளது? 29 நாட்களுக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன  என்பதைக்  கணக்கிடுவதற்கு ஒவ்வொரு நாட்களையும் நாம் கணக்கிட்டாக (எண்ணியாக) வேண்டும்.

இந்தச் சாதாரண உண்மை கூட தெரியாமல் உளறியுள்ளனர்.

 வரட்டுக் கேள்வி – 4, 5, 6

மாத ஆரம்ப நாட்களில் பார்க்கப்படும் பிறை மறையும் பிறையா? அல்லது பிறக்கும் பிறையா?

மறையும் பிறையைப் பார்த்து விட்டுத் தான் ஆரம்பிப்பதாக நபி (ஸல்) கூறியிருப்பார்களா?

நபி (ஸல்) அந்த அளவு விளக்கக் குறைவானவர்கள் என்பது தான் உங்கள் நம்பிக்கையா?

நமது பதில் – 4, 5, 6

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒன்றைச் சொன்னால் அந்தச் சொல்லுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கேவலப்படுத்தும் வகையில் இது போன்ற கேள்வியைக் கேட்டுள்ளனர்.

இவர்கள் அறிவும், சிந்தனையும் உள்ளவர்களாக இருந்தால் இந்தக் கேள்விகளைக் கேட்பதற்கு முன் இது குறித்த தங்கள் வாதத்தை முன் வைக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறையும் பிறையைக் கூறவில்லை. அதற்கு இதோ ஆதாரம் என்று வாதிட வேண்டும். தனது தரப்பு வாதமாக எதையும் வைக்காமல் கேள்வி கேட்பதில் இருந்து இவர்களின் மடமை தெளிவாகின்றது.

மறையும் பிறையைப் பார்த்து விட்டு ஆரம்பிக்கச் சொல்லி இருப்பார்களா? என்று கேட்பதன் மூலம் தங்களுக்கு கடுகளவும் சிந்திக்கும் திறன் இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டனர்.

நாம் மக்ரிப் தொழுகையை ஆரம்பிப்பதற்கு சூரியன் மறைவதைத் தான் காரணமாகக் கொண்டுள்ளோம். மறையும் சூரியனைப் பார்த்து விட்டுத் தான் மக்ரிப் தொழுகையை ஆரம்பிப்பதாக நபிகள் சொல்லி இருப்பார்களா? அந்த அளவுக்கு நபிகளுக்கு விளக்கக் குறைவு உள்ளது என்று கருதுகிறீர்களா என்று ஒருவன் கேட்டால் அவனை நாம் என்னவென்போம்?

இனி மேல் மக்ரிப் தொழுகையை சூரியன் உதிக்கும் போது தான் ஆரம்பிக்க வேண்டும் என்று அடுத்த கண்டுபிடிப்பை இந்தக் கூறு கெட்டவர்கள் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்ப்போம். மறையும் நேரத்தில் சில காரியங்களைத் துவங்கலாம். உதிக்கும் நேரத்திலும் துவங்கலாம். எதற்கு எப்படி ஆதாரம் கிடைத்துள்ளதோ அப்படிப் புரிந்து கொள்வது தான் மூளை உள்ளவர்களின் முடிவாக இருக்க வேண்டும்.

ஆதாரம் எப்படி உள்ளது என்பதை முதலில் பார்ப்போம்.

முந்தைய  கேள்விக்கான  நமது  பதில்  மேலே  தரப்பட்டுள்ள  நிலையில்,  அந்த  பதில் குறித்த  இவர்கள்  நிலையை  இவர்களே  விளக்கினால்  இதற்கு  பதில்  கிடைத்து விடும்.

மறையும்  பிறையா  உதிக்கும்  பிறையா  என்பதைக்  கேள்வியாக  கேட்பதற்கு  முன்னர், பிறையை  எப்போது, எந்த நேரத்தில் பார்க்க வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு நாம் விடை வைத்திருக்க வேண்டும்.

வாகனக்  கூட்டம்  அறிவிக்கிற ஹதீஸில், மாலையில் பிறை பார்த்ததாக வருகிறது. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்தும் இருக்கிறார்கள் எனும் போது,பிறையை மாலை தான் பார்க்க வேண்டும் என்பது உறுதியாகிறது.

இப்போது நமது கடமை, மாலையில் பிறை பார்ப்பது தானே தவிர, அது உதிக்கும் பிறையா மறையும் பிறையா என்று ஆராய்ச்சியில் இறங்குவது அல்ல!

மறையும் பிறையைப் பார்க்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது உறுதியாக தெரிந்த பிறகும்  இப்படி  சொல்லியிருப்பார்களா? என்று கேட்கப்படும் கேள்வி, நம்மை நோக்கிய கேள்வி அல்ல, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்படும் கேள்வி.

விபரம் கெட்டவர்களாக இவர்கள் இருந்து கொண்டு நபிகள் நாயகத்தை அப்படி சித்தரிக்கப் பார்ப்பதில் இருந்து இவர்கள் ஷைத்தானின் வலையில் விழுந்து கிடப்பவர்கள் என்பது தெளிவாகிறது.

வரட்டுக்கேள்வி – 7

2:185ல் அல்லாஹ் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அதாவது சாட்சியமளிக்கிறாரோ (ஃபமன்ஷஹித) அவர் நோன்பு நோற்கட்டும் என்று கட்டளையிட்டிருக்கின்றானா? அல்லது எவர் தலைப்பிறையை புறக்கண்ணால் பார்க்கிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்று கட்டளையிட்டிருக்கின்றானா?

நமது பதில் – 7

"ஃபமன் ஷஹித மின்குமு ஷ்ஷஹ்ர" என்பதற்கு"யார் அம்மாதத்திற்கு சாட்சியாக இருக்கிறாரோ", என்று பொருள் செய்வது முற்றிலும் தவறான ஒன்றாகும்.

ஷஹித என்பதற்கு சில இடங்களில் சாட்சி கூறுதல் என்ற அர்த்தம் இருந்தாலும் அதற்கு அடைவது என்ற பொருளும் உள்ளது. யார் சாட்சியாக இருக்கிறாரோ என்று இவர்கள் செய்வது போல் பொருள் கொண்டால் அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்பு கடமையாகாது. யார் பிறையைக் கண்ணால் பார்த்து அதற்கு சாட்சி கூறுகிறாரோ அவர் மீது மட்டும் தான் கடமையாகும்.

ஒரு ஊரில் பத்து பேர் பிறை பார்த்தார்கள் என்றால் அவர்கள் மட்டுமே பிறைக்கு சாட்சிகளாக உள்ளனர். அந்த ஊரைச் சேர்ந்த மற்றவர்கள் அதற்கு சாட்சிகளாக இல்லாததால் அவர்கள் மீது நோன்பு கடமையாகாது என்று இவர்கள் கூற வேண்டும். அவ்வாறு கூற இவர்கள் தயங்கினால் யார் சாட்சி கூறுகிறாரோ என்ற அர்த்தத்தை இவர்களே மறுத்துக் கொள்கின்றனர்.

மாதத்தை அடைந்தவர் என்று பொருள் கொண்டால் சிலர் பிறை பார்த்து சாட்சி சொன்னாலும் அவர்களின் சாட்சியம் மூலம் மற்றவர்களும் மாதத்தை அடைந்து விடுகின்றனர் என்று பொருத்தமாக அமைந்துள்ளது. இதை விளங்காமல் உளறியுள்ளனர்.

புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளதா என்று கேட்பதன் மூலம் தங்களுக்கும் சிந்தனைக்கும் அறவே தொடர்பு இல்லை என்று நிரூபித்துக் கொள்கின்றனர்.

ஒரு குறிப்பிட்ட வசனம் அல்லது ஒரு ஹதீஸின் வாசகம் நான் விரும்புகின்ற முறையில் இருந்தால் தான் ஏற்றுக் கொள்வேன் என்பதும், அனைத்து விஷயங்களும் ஒரு ஹதீஸில் அல்லது ஒரு வசனத்தில் கூறப்பட்டிருக்க வேண்டும் என்பதும் மார்க்க அறிவு அற்றவர்களின் நடவடிக்கையாகும்.

இது குறித்து வந்துள்ள அனைத்து ஆதாரங்களையும் திரட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல் விளக்கத்தையும் பார்த்து அதற்கு ஏற்ப புரிந்து கொள்வது தான் அறிவுடையோரின் செயலாகும்.

யார் ரமளானை அடைகிறாரோ என்றால் அனைவரும் ஒரே நேரத்தில் அடைய மாட்டார்கள் என்ற கருத்து அதனுள் இருக்கிறது. ஒவ்வொரு பகுதியினரும் வெவ்வேறு நேரங்களின் அடைவார்கள் என்பது பிறை பார்த்து மாதத்தை முடிவு செய்தால் தான் சாத்தியமாகும். பிறையைக் கணித்தால் அனைவரும் ஒரு நேரத்தில் மாதத்தை அடையும் நிலை ஏற்பட்டு மேற்கண்ட வசனத்தை நிராகரிக்கும் நிலை ஏற்படும்.

புறக்கண்ணால் பார்த்துத் தான் மாதத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்பதை ஏராளமான ஹதீஸ்களின் துணையுடன் நாம் நிரூபித்துள்ளோம். அவை இந்த வசனத்தின் விளக்கமாக அமைந்துள்ளது என்பதையும் இவர்களுக்கு அறிந்து கொள்ளும் திறன் இல்லை.

ஒரே நாளில் பெருநாளை அமைத்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தும் கூட,  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைச் செய்யாமல் இரண்டு நாளட்களில் பெரு நாள்  ஏற்படுவதை அங்கீகரித்து நமக்கு முன்மாதிரியாக விட்டுச் சென்றார்கள் என்பதற்கு சிரியா – மதினா பிறை வேறுபாடு சம்மந்தமான ஹதீஸ், வாகனக்கூட்டம் அறிவிப்பு கொண்ட ஹதீஸ் போன்றவை நமக்கு தெளிவான ஆதாரமாக உள்ளன.

வாய்ப்பிருந்தும் செய்யவில்லை என்பது எதைக் காட்டுகிறது? ஒரே நாளில் உலகம் முழுவதும் முதல் நாள் வராது என்ற குர்ஆன் வசனத்தை நடைமுறையில் உணர்த்தும் முகமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்துள்ளார்கள் என்பதையே காட்டுகிறது.

வரட்டுக் கேள்வி – 8, 9, 10

8-எவர் அடைகிறாரோ என்ற சொல் ஒரு நாளின் 24 மணி நேரத்துக்குள் அடைவதைக் குறிக்குமா? அல்லது 2,3 நாட்களில் அடைவதைக் குறிக்குமா?

9-உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம்கள் ஜும்மா தொழுகையை வெள்ளிக் கிழமை 24 மணி நேரத்துக்குள் தொழுகிறார்களா? அல்லது வியாழன் வெள்ளி என 48 மணி நேரத்துக்குள் தொழுகிறார்களா? வியாழன் வெள்ளி சனி என 72 மணி நேரத்துக்குள் தொழுகிறார்களா?

10-சூரியக் கணக்கின்படி 1 தேதி 1 நாள் என்பது 24 மணி நேரம். திங்கள் செவ்வாய் போன்ற கிழமை 24 மணி நேரம் என்பது உலகறிந்த உண்மை. இதே போல் சந்திரக் கணக்குப்படி தலைப்பிறையான முதல் நாள் 24 மணி நேரத்துக்குள் வர வேண்டுமா? அல்லது இன்றைய முஸ்லிம்கள் கடிப்பிடிப்பது போல் துல்லியக் கணக்கீட்டின் படி (கணிப்பின்படி அல்ல) ஒரு சாராருக்கு ஒரு நாள் தலைப்பிறை, மற்றொரு சாராருக்கு சர்வதேசப் பிறை என்ற அடிப்படிய்ல் இரண்டா, நாள் தலைப்பிறை பிரிதொரு சாராருக்கு தத்தம் பகுதி பிறை என்ற அடிப்படியில் மூன்றாம் நாள் தலைப்பிறை என 24 மணி நேரம் கொண்ட தலைப்பிறை 2 நாள் 48 மணி நேரம்  மூன்று நாள் 72 மணி நேரம் என வருவது பகுத்தறிவு ஏற்கும் செயலா? பகுத்தறிவற்றவர்களின் பிதற்றலா?

நமது பதில் – 8, 9, 10

8 , 9 , 10 : ஒரு நாள் என்பது 24 மணி நேரமா 48 மணி நேரமா என்று கேட்கின்றனர். ஒரு நாள் 24 மணி நேரம் தான். பிறை அடிப்படையில் இஸ்லாமிய நாட்களை முடிவு செய்யும் பொழுது ஒரு சாராருக்கு மாதத்தின் முதல் நாள் ஒரு தினத்திலும், இன்னொரு சாராருக்கு இரண்டாம் தினத்திலும் துவங்குவதை வைத்து, மாதத்தின் முதல் நாளே இரண்டு நாட்களாகி விட்டதைப் போன்று கேட்கின்றனர்.

ஒவ்வொரு சாராருக்கும் நாள் என்பது 24 மணி நேரம் தான் ஆகிறது. யாருடைய நாளும் 48 மணி நேரம் கொண்டதாக ஆகவில்லை.. கேள்வி கேட்பவர்கள் விளங்காமல் கேள்வி எழுப்புகின்றனர் என்றால் அதைப் படிப்பவர்களும் எதையும் விளங்க மாட்டார்கள் என்று எண்ணுவது வடி கட்டிய முட்டாள்தனமே தவிர வேறில்லை.

மாதம் எந்த தினத்தில் துவங்குகிறது என்பதில் இரு நாள் வேறுபாடு வருவதால் மாதத்தின் முதல் நாளே இரண்டு நாள் ஆகி விட்டதாக அர்த்தம் இல்லை.

நாளின் துவக்கம் வேறுபடுவதால் யாருக்கும் 48 மணி நேரம் கொண்ட நாள் அல்லது 72 மணி நேரம் கொண்ட நாள் வரவே வராது. இல்லாத ஒன்றை இருப்பது போல் சித்தரித்து தங்களின் மடமையை தாங்களே அம்பலமாக்கிக் கொள்கின்றனர்.

ஒருவர் காலை என்று சொல்லும் நேரத்தை பூமியில் அவருக்கு நேர்கீழே உள்ளவர் மாலை என்று சொல்வார். காலையை எப்படி மாலை என்று சொல்லலாம். இதோ சூரியன் உதிப்பதை நான் பார்க்கும் போது நீ எப்படி மாலை என்று சொல்லலாம் என்று கேட்க முடியாது. ஏனெனில் நாம் உதிப்பதைப் பார்க்கும் அதே நேரத்தில் சூரியன் மறைவதை இன்னொரு பகுதியினர் பார்த்து விட்டுத் தான் மாலை என்கின்றனர்.

ஒரு பொருளை அடையக் கூடியதில்  கால வித்தியாசம் இருக்கிறது என்பதால், அந்தப் பொருளே இரண்டாகி விடாது. மக்ரிபை அடைவதில் நமக்கும் சவுதிக்கும் இடையே இரண்டரை மணி நேர வித்தியாசம் இருக்கிறது. இதை வைத்து , இரண்டு மக்ரிப் என்று யாரும் சொல்ல மாட்டோம். மக்ரிபை அடைவதில் இரண்டு நேரங்கள்! என்று தான் எந்த அறிவார்ந்தவரும் புரிவோம். இதை யாரேனும் பிதற்றல் என்று சொன்னால் அவர்கள் தான் பிதற்றுகின்றனர்.

அதே போன்று, மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்றால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியைப் பின்பற்றி புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்ற கொள்கையின் படி, ஒரு பகுதிக்கு புறக்கண்களில் தென்படும் தலைப்பிறையானது உலகின் இன்னொரு பகுதியில் தென்படாது.

தென்பட்டவர்கள் முதல் நாளை அனுபவிப்பார்கள், தென்படாதவர்கள் மறுநாளை முதல் நாள் என கொள்வார்கள்.

எல்லோரும் வெள்ளிக்கிழமை தான் ஜும்மா தொழுகிறோம். யாரும் வியாழக்கிழமையோ, சனிக்கிழமையோ ஜும்மா தொழுவதில்லை என்பதும் உண்மை தான். ஆனால் ஒருவர் வெள்ளிக் கிழமை என்று சொல்வது இன்னொருவருக்கு வியாழக்கிழமையாக இருக்குமா இருக்காதா? இது தான் கேள்வி.

உதாரணமாக தேதிக் கோட்டுக்கு (டேட்லைன்) இந்தப் பக்கம் இருப்பவர்கள் பகல் ஒரு மணியானதும் ஜும்மா தொழுவார்கள். ஆனால் தேதிக் கோட்டுக்கு அந்தப் பக்கம் உள்ளவர்கள் அதை வியாழக் கிழமையாகக் கருதுவதால் அவர்கள் அந்த நேரத்தில் ஜும்மா தொழ மாட்டார்கள். மறு நாள் அதாவது இந்தப் பக்கம் உள்ளவர்கள் சனிக்கிழமைக்குச் சென்ற பின் அவர்கள் வெள்ளிக்கிழமையை அடைந்து ஜும்மா தொழுகிறார்கள். அதாவது ஒரே நேரம் – பகல் ஒரு மணி- அருகருகே உள்ள இரண்டு இடங்களுக்கு வெள்ளிக்கிழமையாகவும் வியாழக்கிழமையாகவும் இருக்கிறதே? இது பிதற்றலா? ஒரே நாள் எப்படி வெள்ளிக்கிழமையாகவும், வியாழக்கிழமையாகவும் இருக்கும் என்று கேட்பது தான் பகுத்தறிவா?

இதை விட முக்கியமான ஒரு விஷயம் இவர்களின் மேற்கண்ட கேள்விகள் மூலம் தெளிவாகின்றது. அதாவது இவர்கள் குர்ஆன் ஹதீஸ் கூறுவதை நம்ப மாட்டார்கள் மாறாக இவர்களின் குறைமதிக்கு ஏற்ப அமைந்தால் தான் ஏற்றுக் கொள்வார்கள் என்பது தான் அந்த விஷயம்.

ஒருவனுக்கு காற்றுப் பிரிந்து விட்டால் உளூ செய்ய வேண்டும் என மார்க்கம் சொல்கிறது. பின் துவாரத்தில் காற்றுப் பிரிவதற்கும் கைகால்களைக் கழுவுவதற்கும் என்ன சம்மந்தம்? என்று இவர்கள் கேட்டாலும் கேட்பார்கள். பகுத்தறிவு ஏற்கும் செயலா? பகுத்தறிவற்றவர்களின் பிதற்றலா என்று கேட்டாலும் கேட்பார்கள்.

தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும் செய்ய வேண்டும் என்று மார்க்கம் சொல்கிறது. மண்ணைத் தடவிக் கொண்டால் தூய்மையாகுமா? அழுக்காகுமா எனக் கூறி இதையும் மறுத்தாலும் மறுப்பார்கள் போலும். பகுத்தறிவு ஏற்கும் செயலா? பகுத்தறிவற்றவர்களின் பிதற்றலா என்று கேட்டாலும் கேட்பார்கள்.

வரட்டுக் கேள்வி 11,12,13

11-பிறையைப் பார்த்து மாதத்தை முடிவு செய்யுங்கள் என்று அன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது துல்லிய கணிணி கணக்கீடு அன்று இல்லாத காரணத்தால். அன்று முஸ்லிம்களிடையே எழுந்த இம்மாதம் 29 ல் முடிகிறது என்று ஒரு சாராரும், இல்லை 30 ல் முடிகிறது என்று பிரிதொரு சாராரும் சச்சரவிட்டுப் பிளவுபட்டதை முடிவுக்குக் கொண்டு வந்து சமுதாய ஒற்றுமை (29:92, 23:52) காக்கவா அல்லது பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதை மார்க்கமாக்கி அப்படிக் கூறினார்களா?

12- அன்று நபிகள் நாயகம் (ஸல்) பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதை மார்க்கமாக்கி அப்படிக் கூறினார்கள் என்றால் மனிதனின் கண்கள் சந்திரனில் பட்டால் தான் அது தனது சுற்றுப்பாதையில் செல்லும். மனிதக் கண் அதில் படாதவரை சந்திரன் அப்படியே நிற்கும்; சந்திரனின் ரிமோட் கண்ட்ரோல் மனிதக் கண்கள் என்று கூறியதாகப் பொருள்படுகிறதே? நபி (ஸல்) பிறையைப் புறக்கண்ணால் பார்த்தலை மார்க்கமாக்கி இருக்க முடியுமா?

13- அப்படி  என்றால் சூரியன் சந்திரன் மற்றும் இதர கோள்கள் அனைத்தும் அதனதன் சுற்றுப் பாதைகளில் ஒரு நொடி கூட முன்பின் ஆகாமல் பல கோடி வருடங்கள் சீராக சுழன்று வருகின்றன என அல்குர்ஆனின்  2:189, 6:96,  7:54,  9:36,37,  10:5,  13:2,  14:33,  16:12,  17:12, 21:33, 25:61, 29:61, 31:29, 35:13, 36:40,  39:5, 55:5  போன்ற எண்ணற்ற கட்டளைகளை  நபி (ஸல்) நிராகரித்து விட்டு (நவூது பில்லாஹ்) சந்திரன் மனிதனின் கண்களில் பட்டால் தான் சுழலும். பார்வையில் படும் வரை பிரை ஒன்றிலேயே சுழலாமல் நிற்கும் என்ற மூடத்தனமான் ஒரு கட்டளையைப் பிறப்பித்திருக்க முடியுமா?

நமது பதில் 11, 12, 13

பிறையைப் பார்த்து மாதத்தை முடிவு செய்யுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவே இல்லை என்று உளறி வந்த இவர்கள் இப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறையைப் பார்க்கச் சொன்னார்கள் என்று கூறி அந்தர் பல்டி அடித்து விட்டனர். அந்தக் காலத்தை கவனத்தில் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்களாம்!

மார்க்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தோடு முழுமை பெற்று விட்டது. அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட மார்க்கத்தின் எந்தச் சட்டமும் பிற்காலத்தில் மாற்றப்படாது என்ற அடிப்படை அறிவு கூட இவர்களுக்கு இல்லை.

பயணிகள் ஜம்மு கஸர் செய்ய சலுகை மார்க்கத்தில் உள்ளது. அந்தக் காலத்தில் பயணம் என்பது மிகவும் சிரமமானதாகவும், அதிக நேரத்தை விழுங்கக் கூடியதாகவும் இருந்ததால் இந்தச் சலுகை அளிக்கப்பட்டது. இன்று விமானப் பயணம் மிக எளிதாகவும் எவ்விதக் களைப்பும் சிரமமும் அற்றதாகவும் ஆகி விட்டதால் இப்போது ஜம்மு கஸர் கூடாது என்று இந்த மேதாவிகள் கூறுவார்களா?

பிறை பார்த்து நோன்பு வையுங்கள் என்று நபிகள் நாயகம் கூறியது எதற்காக தெரியுமா என்ற அற்புதமான விளக்கத்தையும் இவர்கள் கொடுக்கின்றனர். அதாவது 29ஆ 30ஆ என்று கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது அதை நீக்குவதற்காகத் தான் பிறை பார்க்கச் சொல்லி அனைவரையும் ஒரு கருத்துக்குக் கொண்டு வந்தார்களாம்!

இவர்கள் சொல்வதில் கடுகளவாவது லாஜிக் இருக்கிறதா? மதீனாவில் மட்டும் இஸ்லாம் இருந்தால் இவர்கள் கூறுவது போன்ற நிலை ஏற்படலாம். உலகின் பல பகுதி மக்கள் இஸ்லாத்தை ஏற்றிருந்தனர். அப்போது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறை பார்த்து நோன்பு நோற்கச் சொன்னார்கள். இதனால் ஏற்படும் விளைவு என்ன? மதீனாவில் பிறை பார்க்கும் நாளில் மற்ற பகுதிகளில் வாழ்பவர்கள் பிறை பார்க்க முடியாது. வெவ்வேறு நாட்களில் தான் பிறை பார்க்க முடியும். இதனால் வெவ்வேறு நாட்களில் தான் பெருநாள் ஏற்படும் என்ற சாதாரண அறிவு கூட இவர்களுக்கு இல்லை.

சம்மந்தமில்லாத வசனங்களைப் பொருத்தமில்லாமல் இணைத்து வாதம் செய்வதில் இவர்களை மிஞச ஆள் இல்லை. 21:92 வசனத்தில் அல்லாஹ் நம்மை நோக்கி "நீங்கள் ஒரே சமுதாயம்", என்கிறான். ஆகவே நாம் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட வேண்டுமாம்!

ஒரே சமுதாயம் என்று பெருநாள் கொண்டாடுவதற்கா அல்லாஹ் சொல்கிறான்? இறைவனை வணங்குவதைக் குறித்து விளக்குவதற்காகச் சொல்லும் வசனம் அது. அதை பெருநாளோடு தொடர்பு படுத்தி தங்களைச் சிந்தனையற்றவர்கள் என்று தாங்களே நிரூபித்துக் கொண்டுள்ளார்கள்..

ஒரு வாதத்திற்கு, நாம் ஒரே சமுதாயம் என்று அல்லாஹ் சொல்லி விட்டதால் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட வேண்டும் என்றால், நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் அவர்கள் எத்தனை சமுதாயம்? 22 சமுதாயமா? அவர்களுக்கு மேற்கூறப்பட்ட வசனம் பொருந்தாதா? அவர்கள் காலத்தில் ஏன் ஒரே நாளில் அனைவரும் பெருநாள் கொண்டாடவில்லை?

அடிப்படையற்று வாதம் வைத்தால் இவ்வாறு தான் உளறலான வாதமாக சென்று சேரும்!

அடுத்து இவர்கள் வைக்கும் இன்னொரு வாதம், சந்திரனின் இயக்கம் மிக துல்லியமாக இருக்கும் பட்சத்தில், நம் கண்களில் பட்டால் தான் மாதம் துவங்கும், இல்லையெனில் துவங்காது என்று சொல்வது சந்திரனின் துல்லியத்தில் சந்தேகம் கொள்வது போல் உள்ளதே? என்று கேட்கின்றனர்.

பிறை தெரிந்தால் மாதம் பிறக்கிறது, என்று முடிவு செய்வதற்கும், பிறை தெரிந்தால் தான் பிறை துல்லியமாக இயங்குகிறது என்று கூறுவதற்கும் வேறுபாடு உள்ளது.

பிறை தென்பட்டாலும் தென்படாவிட்டாலும், பிறையின் ஓட்டத்தில் யாரும் சந்தேகம் கொள்வதில்லை. பிறை தென்படாவிட்டால், துல்லியமாக ஓடிக் கொண்டிருக்கும் பிறையை நம் கண்களுக்கு அல்லாஹ் காட்டித் தரவில்லை, அவ்வளவு தான்!

நம் கண்களுக்கு அல்லாஹ் காட்டித் தரவில்லை என்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கும் அல்லாஹ்வின் தூதர் வழி சொல்லித் தருகிறார்கள்.

முதல் பிறையை நீங்கள் பார்ப்பது வரை முந்தைய மாதத்தை அல்லாஹ் நீட்டித் தருகிறான் என்ற நபிமொழி இதற்கு பொருத்தமான வழியாக இருக்கிறது.

கேள்வியையும் முன்வைத்து, அதற்குரிய வழியையும் அல்லாஹ்வே சொல்லி தந்து விட்ட பிறகு, இவர்கள் அதிலிருந்து கேள்வி எழுப்புவது நம்மிடமா அல்லது அல்லாஹ்விடமா?

வரட்டுக் கேள்வி 14

அல்குர்ஆன் 3:13ல்  காணப்படுவது  போல்  எதிரிகள்  தம்  புறக்கண்ணால்  பார்த்தார்கள் (ரஃயல் ஐன்)  என்றிருப்பது  போல்  பிறையைப்  புறக்கண்ணால்  பார்க்க  வேண்டும்  என்று ஒரேயொரு  ஹதீஸும் நேரடியாகக்  கூறாத  நிலையில் பிறையைப்  புறக்கண்ணால் பார்த்தே  மாதத்தை  ஆரம்பிக்க  வேண்டும்  என்று  பிடிவாதம்  பிடிக்கும்  நீங்கள் அல்குர்ஆன்  22:27ல்  ஹஜ்ஜுக்கு  நடந்தும்  தொலைவிலிருந்து மெலிந்த  ஒட்டகங்களிலும் வருவார்கள்  என  அல்லாஹ் நேரடியாகச்  சொல்லி  இருந்தும் அல்லாஹ்வின் இக்கட்டளையைப்  புறக்கணித்து  விட்டு  இன்று  ஹஜ்ஜுக்கு  விமானத்தில்  செல்வதை எந்த  அடிப்படையில்  சரி  காண்கிறீர்கள்?

நமது பதில் 14

புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று ஒரு ஹதீஸ் கூட கூறவில்லை என்பது எந்த அளவுக்கு அபத்தமானது என்பதை முதலாவது கேள்விக்கான பதிலில் நாம் தெளிவுபடுத்தி விட்டோம். அதுவே இந்த உளறலுக்கும் உள்ள பதிலாகும். மேலும் அந்தக் காலத்தில் சொன்னது இந்தக் காலத்துக்குப் பொருந்தாது என்ற ஷைத்தானின் சிந்தனை இவர்களின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து போய் விட்டதால் ஹஜ்ஜுக்கு ஒட்டகத்தில் வருவார்கள் என்று அல்லாஹ் சொல்லி இருப்பதை உதாரணமாகக் காட்டி தங்கள் மடமைக்கு சாட்சி சொல்கிறார்கள்.

மேற்கண்ட வாதத்தை அறிவார்ந்த கேள்வி என்று நினைத்து  முன் வைக்கிறார்கள். அதாவது,  அல்குர்ஆன்  22:27ல் அல்லாஹ் ஹஜ்ஜுக்கு  ஒட்டகத்தில் வருவார்கள் என்று சொல்வதால் நீங்களும்  இன்று ஒட்டகத்தில்  செல்ல வேண்டியது  தானே? ஏன் விமானத்தில்  செல்கிறீர்கள்?  என்று கேட்கிறார்கள்.

குர்ஆன்  குறித்த  ஞானம் இல்லாத  காரணத்தாலும்,  நுனிப்புல்  மேய்வதாலும்  ஏற்படும் பாதிப்பு தான் இது போன்ற கேள்விகள்..

அந்த  வசனத்தையும்,  அது  அல்லாத  இன்ன பிற  இறை வசனங்களையும், தெரிந்து கொண்டு  வாதம்  செய்தால்  இது  போன்ற  கிறுக்குத்தனங்கள்  கேள்வியாக  எழுந்திருக்காது.

கியாம நாள்  வரை  ஒட்டகத்தில்  ஹஜ்ஜுக்கு  வருவார்கள் என்று  கூறப்பட்டிருந்தால் தான் இவர்களின்  கேள்வியில்  நியாயமிருக்கும். ஆனால்  இந்த  வசனம் இவர்கள்  கற்பனை  செய்து  கூறும்  அர்த்தத்தைத் தரவில்லை. இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்ட உன்னிடம் என்ற  சொல்லை  இவர்கள்  இருட்டடிப்புச் செய்து விட்டு குழப்பப்  பார்க்கின்றனர்.

இந்த வசனத்தில், "உம்மிடம்"  வருவார்கள் என்று  அல்லாஹ்,  இப்ராஹீம்  நபியை நோக்கிச் சொல்கிறான்.

இப்ராஹீம்  நபியை  நோக்கி  உம்மிடம்  ஒட்டகத்தில்  வருவார்கள்  என்று  சொன்னால் உலகம்  அழியும்  வரை  அனைவரும்  ஒட்டகத்தில்  செல்ல வேண்டும் என்ற கருத்து எப்படி வரும்?

இவ்வாறு  கிறுக்குத்தனங்கள் எழும் என்பதால் தான், "அது  அந்தக்  காலத்திற்கு  மட்டும் உரியது, மற்ற  காலங்களில் அவரவர் வசதிக்கேற்ப பயணம் செய்யலாம்  என்பதை வலியுறுத்தும்  பொருட்டு,  "உம்மிடம்",  வருவார்கள்  என்று  சேர்த்துச் சொல்கிறான் அல்லாஹ்.

இன்று  நாம்  ஒட்டகத்தில்  செல்ல வேண்டும்  என்றால்  இன்றும்  இப்ராஹீம்  நபி  மக்காவில் இருக்க  வேண்டும்.  அப்போது  தான்  இவர்களது  வாதம்  செல்லுபடியாகும்.

இன்னும்  சொல்வதாக  இருந்தால்,  வருவார்கள்,  என்பதற்கும்  வர வேண்டும் என்பதற்கும்  உள்ள வேறுபாட்டைப்  புரிந்தாலும்  இவ்வாறான  கேள்விகள் எழுந்திருக்காது.

ஒரு  பெண்  தனியாக  ஒட்டகத்தில்  ஹஜ்ஜுக்காக  பயணம்  செய்வாள்  என்ற ஹதீஸை  வைத்து,  எந்தப் பெண்ணும்  ஹஜ்  செல்வதாக  இருந்தால்  ஒட்டகத்தில்  தான் பயணம்  செய்ய  வேண்டும்  என்று  யாரும் வாதம்  செய்ய  மாட்டோம் . அல்லது, தனியாகத் தான் பயணம்  செய்ய வேண்டும் என்றும் கூற மாட்டோம். தனியாக பயணம் செய்வதோ, ஒட்டகத்தில் பயணம் செய்வதோ அனுமதி தானேதவிர, கட்டாயமல்ல என்றே புரிந்து கொள்வோம்.  இதே   போன்று எளிதாகப் புரிகிற ஒன்றை  தங்கள்  அபார(?) அறிவின்  மூலம்  எவ்வாறு குழப்புகிறார்கள் என்பதற்கு  இந்த கேள்வியே  சான்றாகும்!

எனவே  இப்ராஹீம்  நபியிடம்  அல்லாஹ்  சொன்னது  ஒரு  முன்னறிவிப்பாகும். . யாருமே குடியிருக்காத வனாந்தரத்தில்  கஅபாவைக்  கட்டியதாக  நினைத்து  நீ கவலைப்படாதே! காபாவைக்  கட்டிய பின்  உலகின்  பல  பாகங்களில் இருந்தும்  மக்கள்  ஒட்டகங்களில் உம்மிடம்  வருவார்கள்.  இதை  நீயே  காணப்போகிறாய் என்று  அல்லாஹ் சொன்னான். உம்மிடம் என்ற  சொல்லுக்குள் இந்த  அர்த்தம் அடங்கியுள்ளதை உணரும் அளவுக்கு இவர்களின்  அறிவு  வேலை  செய்யவில்லை.

வரட்டுக் கேள்வி 15

நபி (ஸல்)  அவர்கள்  ஒரு மாதம்  தங்கள்  மனைவிமார்களிடம்  செல்வதில்லை  எனக் கூறிவிட்டு  அந்த மாதம்  29லேயே  பிறயைப்  பார்க்காமலேயே  மாதம்  முடிந்து  விட்டது என்பதை  ஜிப்ரீல்  (அலை)  அவர்கள்  வந்து  சொன்னதன்  பேரில்  முடித்துக் கொண்டார்களே பிறை பார்த்து மாதத்தை முடிவு செய்ய வேண்டும்  என்று சொன்ன நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள்  தமது  சொல்லுக்கே   முரணாக  நடந்தார்கள் என்று சொல்கிறீர்களா?  ஜிப்ரீல் சொன்னதன்  பேரில்  அறிந்து  கொண்டார்கள்.  இங்கு  பிறை பார்க்க வேண்டிய  அவசியம் இல்லை என்பது  உங்கள்  பதில்  என்றால்  அதே  போல் கோள்கள்  சம்மந்தப்பட்ட நிரூபிக்கப்பட்ட  விஞ்ஞான  உண்மைகள்  அல்லாஹ்வின் செயல்கள்  என்ற  அடிப்படையில்  கணிணி கணக்கீட்டின் படி  (கணிப்புப்படி அல்ல)  மாதம் பிறப்பதை  துல்லியமாக  அறிந்த  பின்பும்  பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிப்பது சரியா?

நமது பதில் 15

ஒரே  கேள்வி என்றாலும் வேறு வேறு வார்த்தைகளில் கேட்பதன் மூலம் பல கேள்விகளைக்  கேட்ட தோற்றத்தை  ஏற்படுத்தலாம்   என்று  எண்ணுவது  இவர்களின் தகுதியைக் காட்டுகிறது.

நிரூபிக்கப்பட்ட  விஞ்ஞானம், மாதம்  பிறந்து விட்டது  என்பதைத்  தெளிவாகச்  சொன்ன பிறகும்  கூட, புறக்கண்ணால் பார்த்துத் தான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்வது ஏன் என்றால்,  புறக்கண்ணால்  பார்க்க வேண்டும்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்  என்பதால் தான்.

என்றைக்கும்  இருக்கும்  விஞ்ஞானத்தை,  அது  நிரூபிக்கப்பட்டு  விட்டது என்பதற்காக மட்டும்  பின்பற்ற  வேண்டும்  என்று  சொல்வதாக  இருந்தால்,  நிரூபிக்கப்படாத காலத்திலும்  விஞ்ஞானம்  என்பதும்,  பிறை என்பதும்,  அதன் துல்லியமான ஓட்டம் என்பதும் இருந்து தான் வந்துள்ளது!

அந்தக் கால கட்டத்தில்  எந்த வழியைச்  செய்வது சரி?  நிரூபிக்கப்பட்டு  விட்டதால்  இன்று நீங்கள்  செய்வது  தான் சரி  என்றால்,  நிரூபிக்கப்படாத  காலத்தில் செய்தவைகள் குறித்த உங்கள் நிலை என்ன?

சரி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்  காலத்தில், அந்தக்  காலத்துக்கு  ஏற்ப நிரூபிக்கப்பட்ட  விஞ்ஞானம்  இருந்து  வந்ததே!  பயணம்  செய்து  வந்து  பிறை தகவலைச் சொல்வது  அன்றைய  காலத்தில்  உள்ள  நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம் தானே!

ஒரு  நபரை  மற்றொரு  இடத்திற்கு  அனுப்பி  பிறை  தகவல்  சேகரிப்பதும்  அன்று  இருந்த நிரூபிக்கப்பட்ட  விஞ்ஞானம் தானே!

உலகில்  ஒரு  பகுதியில் பிறை பார்த்த  தகவலை இன்னொரு பகுதிக்கு  எடுத்துச்  செல்லும் விஞ்ஞானத்தைப்  பெற்றிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அதை முழுமையாக ஏன் பயன்படுத்தவில்லை என்ற  நமது  கேள்விக்கு இவர்கள் பதில்  சொல்லாத வரை, இன்றைய  நிரூபிக்கப்பட்ட  விஞ்ஞானத்தைப்  பற்றி பேச எந்தத் தகுதியும் இல்லை.

இந்த  இடத்தில்  குர்ஆன்  கூறும்  விஞ்ஞானத்தை  நாம்  மறுக்கிறோமா  என்ற கேள்வி எழலாம்.

குர்ஆன்  ஒன்றைக்  கூறினால்  அதை  எந்த  முஸ்லிமும்  மறுக்கக்  கூடாது. ஆனால்,  பிறை குறித்தும் விஞ்ஞானம்  குறித்தும்  குர்ஆன்  கூறுவது  என்ன  என்பதைச்  சிந்தித்தால் உண்மை  விளங்கி  விடும். இறைவனின்  வல்லமையையும்,  ஆற்றலையும்  பறை சாற்றுவதற்காக,  சூரியன் குறித்தும்  சந்திரன் குறித்தும், அதன் துல்லியமான  அமைப்பைக்  குறித்தும்  அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான். அதன் மூலம்  சூரியனும்,  சந்திரனும் காலம் காட்டுகின்றன என்றும் சொல்கிறான்.

இதை நாம் எந்த நிலையிலும்  மறுக்கவில்லை.  சூரியனும்,  சந்திரனும்  காலம்  காட்டுகின்றன  என்பதை  மறுக்கவே இயலாது.

ஆனால், விஷயம் என்னவென்றால், விஞ்ஞானத்தின் படி  முன்கூட்டியே  கணித்து  முடிவு  செய்வதால் மட்டும் தான் காலம் காட்டுமா? புறக்கண்ணால் ஒவ்வொரு மாதமும் பார்த்து  முடிவு  செய்வதால்  காலம் காட்டாதா? காலம் காட்டுவதற்காக அல்லாஹ் படைத்த சந்திரன் 14 நூற்றாண்டுகளாக வழ்ந்த மக்களுக்கு காலம் காட்டவில்லையா? விஞ்ஞானம் வளர்ந்த பின்னர் தான் காலம் காட்டுகிறதா?

நாம்  செய்து  வரும்  வழியை  தொடர்ந்து  செய்து  வந்தாலும்  பிறை  நமக்கு  காலம் காட்டத் தான் செய்யும்.

பிறையைப் பார்த்து  அது  இரண்டாம்  பிறையாக  இருக்குமோ,  மூன்றாம்  பிறையாக இருக்குமோ  என்றெல்லாம்  சந்தேகம்  கொண்ட  சஹாபாக்களிடம்  இப்னு அப்பாஸ் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்)  அவர்களின்  ஹதீஸை  எடுத்துச் சொல்கிறார்கள்.

"நீங்கள்  எப்போது  பார்க்கிறீர்களோ,  அப்போது தான்  உங்களுக்கு  முதல் பிறை.  ஏதேனும் காரணங்களால்  முதல் பிறை (நிரூபிக்கப்பட்ட  விஞ்ஞானத்தின்  படி உள்ள  முதல் பிறை) உங்களுக்குத்  தென்படாமல்  போனாலும்,  உங்கள்  கண்களுக்குத்  தென்படும்  நாள் வரை, முந்தைய  மாதத்தை  அல்லாஹ்வே  நீட்டித்  தந்து விட்டான்!""

அதாவது,  நிரூபிக்கப்பட்ட  விஞ்ஞானத்தின்  படி  பிறை  வானில்  இருந்தால்  கூட,  அது நம் கண்களுக்குத் தெரிய வேண்டும், அதனடிப்படையில் மாதத்தை நாம் முடிவு செய்ய வேண்டும்  என்றே அல்லாஹ் விரும்புகிறான்.

அதற்குரிய  முயற்சியில்  நாம் இறங்க  வேண்டும்..  ஒரு வேளை பிறை  (மேகமூட்டம் காரணமாக) தெரியாமல்   இருந்தால்,  மாதம்  பிறக்கவில்லை, முந்தைய  மாதமே நீடிக்கிறது  என்று முடிவு  செய்து கொள்ளலாம்.

ஆக,  எந்த  நிலையிலும்  நம்  புறக்கண்ணால்  பார்க்காமல்  மாதத்தை  முடிவு  செய்து கொள்வதை  அல்லாஹ்  விரும்பவில்லை  என்பதை  இந்த ஹதீஸ்  தெளிவாகஉணர்த்துகிறது.

ஹிஜ்ரா கமிட்டியின் கிறுக்கு வாதங்கள்!

அமாவாசையை முதல் பிறையாகக் கருதும் ஹிஜ்ரா கமிட்டி எனும் கூட்டத்தின் வாதங்களுக்கு தக்க ஆதாரம் கேட்டு நாம் கேள்வி எழுப்பி இருந்தோம். இதற்கு மறுப்பாக ஒரு துண்டுப் பிரசுரத்தை அவர்கள் வெளியிட்டு சில கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

அக்கேள்விகளும் அதற்கு நாம் அளிக்கும் பதில்களும் இதோ!

வாதம் ஒன்று

சுன்னத் (?) ஜமாஅத் போன்ற மற்ற மற்ற இயக்கங்களை உங்கள் மேடைகளில் ஏற்ற மாட்டீர்கள், அவர்களுடன் சேர்ந்து சமுதாயப் பிரச்சனைகளுக்காக போராட மாட்டீர்கள், ஆனால் அவர்கள் பெருநாள் கொண்டாடும் தினத்தில் அவர்களுடன் சேர்ந்து கொண்டாடுவீர்களோ? இது முரண்பாடில்லையா?

அமாவாசைப் பிறையை நியாயப்படுத்த இவர்கள் எடுத்து வைக்கும் முதல் கேள்வி இதுதான்.

நமது பதில்

சுன்னத் ஜமாஅத்தினர் சில காரியங்களைச் சரியாகச் செய்தாலும் அதை எதிர்த்து தம்மை விளம்பரமாக்கிக் கொள்ள வேண்டும் என்று இவர்கள் கருதுவது இக்கேள்வியில் இருந்து தெரிகிறது. ஆதாரங்கள் அடிப்படையில் இவர்கள் அணுகுவதில்லை என்பதும் இதிலிருந்து தெளிவாகிறது.

சுன்னத் (?) ஜமாஅத்தினர் ஒரு தினத்தில் ஒன்றைச் செய்தால் அதே தினத்தில் நாமும் அதையே செய்வது இவர்கள் பார்வையில் ஒரே மேடையில் இணைந்து போராட்டங்களைச் சந்திப்பது போன்றதாகத் தெரிகிறது.

சுன்னத் (?) ஜமாஅத்தினர் ஐந்து வேளை தொழுவதால் நாம் ஆறு வேளை தொழ வேண்டும் என்று சொல்வது போல் இது அமைந்துள்ளது.

இந்த அளவுக்கு மடமையால் நிரப்பப்பட்ட இவர்களின் ஆய்வு எந்த இலட்சணத்தில் இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

பிறை பார்த்த அடிப்படையில் நாம் தலைப்பிறையை முடிவு செய்கிறோம். சில மாதங்கள் சுன்னத் ஜமாஅத்தினரின் தலைப்பிறையும், நமது தலைப்பிறையும் ஒத்துப் போய் உள்ளன. சில மாதங்கள் அவர்களுக்கு மாற்றமாகவும் அமைந்துள்ளன. அவர்களை அணுசரித்து நாம் பிறையைத் தீர்மானிப்பதில்லை. இந்த உண்மை பரவலாக அறியப்பட்டு இருந்தும் உண்மைக்கு மாற்றமாக இக்கேள்வியை எழுப்பியுள்ளனர்.

வாதம் இரண்டு

சுன்னத் (?) ஜமாஅத்தினரும், நாம் நடத்தும் தொழுகையில் கலந்து கொண்டால் அதிகக் கூட்டம் கூட்டலாம் என்பதற்காகவே சுன்னத் ஜமாஅத் அறிவிக்கும் நாளில் பெருநாளைக் கொண்டாடுகிறீர்கள்

என்றும் அப்பிரசுரத்தில் கேள்வி கேட்டுள்ளனர்.

நமது பதில்

இதுவும் மடமையான வாதமே! உண்மைக்கு மாறானதும் கூட.

பல தடவை சுன்னத் ஜமாஅத் அறிவிப்புக்கு மாற்றமாக நாம் பெருநாள், மற்றும் நோன்பு அறிவிப்பு செய்துள்ளதை அறிந்திருந்தும் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்துள்ளனர்.

சில வருடங்களுக்கு முன் குல்பர்காவிலும், மாலேகானிலும் பிறை பார்த்ததாக டவுன் காஜி சொன்ன போது தமிழகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து அதாவது தத்தமது பகுதியிலிருந்து பிறை பார்க்கப்பட்டால் தான் அதை ஏற்றுக் கொள்வோம் என்று கூறி உறுதியாக நின்று தவ்ஹீத் சகோதரர்கள் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடினார்கள்.

இந்த ஆண்டு (2016 நோன்புப் பெருநாளில்) டவுன் காஜி அறிவிப்புக்கு மாற்றமாகத் தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் நோன்பு பற்றிய நிலைபாடு இருந்தது.

வாதம் மூன்று

ருஃயத் என்றால் என்ன?

பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள் என்ற ஹதீஸில் ருஃயத் என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வார்த்தைக்கு பார்த்தல் என்கிற அர்த்தம் கொடுக்கக் கூடாது என்றும், சிந்தித்தல் என்கிற அர்த்தம் தான் கொடுக்க வேண்டும் எனவும், குர்ஆனிலும் பல இடங்களில் அந்த அர்த்தத்தில் தான் ருஃயத் என்கிற வார்த்தை பொருள் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறி, தமிழாக்கத்திலும், மொழியறிவிலும் நாம் மிகப்பெரிய தவறைச் செய்துள்ளதாக அப்பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

நமது பதில்

பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் என்கிற ஹதீஸ் அமாவாசைப் பெருநாளுக்கு மரண அடி கொடுப்பதால் ஹதீஸின் அர்த்தத்தையே மாற்றி வாதிடுகின்றனர்.

ருஃயத் என்பதற்கு பார்த்தல் என்கிற அர்த்தம் மட்டும் கிடையாது; அறிவால் அறிதல், புரிந்து கொள்ளுதல் எனப் பல அர்த்தங்கள் உள்ளன; அகராதிப்படியும் உள்ளன; குர்ஆனிலேயே கூட ஏராளமான வசனங்களில் அறிதல் என்கிற பொருளில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே பிறை பார்த்து முடிவு செய்யுங்கள் என்றால் கண்ணால் தான் பார்க்க வேண்டும் என்ற அர்த்தமில்லை, அறிவால் சிந்தித்து புரிந்து கொள்வதைத் தான் குறிக்கும் என்று வியாக்கியானம் கொடுக்கின்றனர்.

பல வருடங்களுக்கு முன்பும் இதே வறட்டு வாதத்தை இவர்கள் வைத்து, அதிலுள்ள அபத்தங்களுக்கு தெளிவான முறையில் நம்மால் விளக்கமும் கொடுக்கப்பட்டது.

ஆனால் அன்று ருஃயத் என்கிற வார்த்தைக்கு சிந்தித்து அறிதல் என்று பொருள் செய்ய வேண்டும் என்பதை நிலைநாட்ட அவர்கள் வேறொரு வாதத்தை வைத்திருந்தார்கள்!

அதாவது பார்த்தல் (ருஃயத்) என்கிற வார்த்தையுடன் கண்ணால் (ஐன்) என்கிற சொல் சேர்ந்தால் தான் கண்ணால் பார்த்தல் என்று பொருள் வரும். வெறுமனே ருஃயத் என்றால் சிந்தித்தல் என்று தான் அர்த்தம் வைக்க வேண்டும் என்பது அன்றைக்கு இவர்களது வாதமாக இருந்தது.

இந்த மடமைத் தனத்திற்கு அன்றைக்கே கீழ்க்கண்டவாறு மறுப்பு கொடுக்கப்பட்டது.

ரஃயல் ஐன் என்ற வார்த்தை வந்தால் தான் புறக்கண்ணால் பார்த்ததாக அர்த்தம் வருமாம். அதாவது ரஃய் என்றால் பார்த்தல் என்பது பொருள். ஐன் என்றால் கண் என்பது பொருள். பார்த்தல் என்பதுடன் கண்னைச் சேர்த்து பிறையைக் கண்ணால் பார்க்க வேண்டும் என்று ஹதீஸில் உள்ளதா எனக் கேட்கின்றனர்.

சாப்பிட வேண்டும் என்றாலும், வாயால் சாப்பிட வேண்டும் என்றாலும் ஒரே அர்த்தம் தான். அது போல் பார்த்தல் என்றாலும், கண்ணால் பார்த்தல் என்றாலும் ஒரே அர்த்தம் தான்.

எந்த மொழியாக இருந்தாலும் பார்த்தல் என்பதற்கு கண்ணால் பார்த்தல் என்று தான் பொருள் செய்ய வேண்டும். அந்த அர்த்தம் பொருந்தாத இடத்தில் மட்டும் தான் வேறு பொருத்தமான அர்த்தம் செய்ய வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் ரஃயல் ஐன் என்ற வார்த்தை இருந்தால் தான் கண்ணால் பார்த்தல் என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

4:153 வசனத்தில் அல்லாஹ்வைக் காட்டு என்று மூஸா நபியிடம் அவர்களின் சமுதாயம் கேட்டதாக அல்லாஹ் கூறுகிறான்.

இதில் கண்ணுக்குக் காட்டு என்று சொல்லப்படவில்லை. காட்டு என்பது மட்டும் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் கண்ணுக்குக் காட்டு என்று அர்த்தம் செய்வார்களா? கருத்துக்குக் காட்டு என்று அர்த்தம் செய்வார்களா?

இது போல் நூற்றுக் கணக்கான வசனங்களில் ஐன் என்ற வார்த்தை சேராமல் ரஃய் என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அதற்குக் கண்களால் பார்த்தல் என்று பொருள் இல்லை என்று சொல்வார்களா?

இப்படி அன்று நாம் கேட்ட இந்தக் கேள்விக்கு இன்று வரை விடை சொல்லவில்லை.

அது மடமை என்பது உறுதியாகிவிட்டதால் துண்டுப் பிரசுரத்தில் வேறு விதமாக வாதம் வைக்கின்றனர்.

இந்த வாதமாவது சரியா என்பதை விளக்கமாகப் பார்ப்போம்.

لسان العرب

( رأي ) الرُّؤيَة بالعَيْن تَتَعدَّى إلى مفعول واحد وبمعنى العِلْم تتعدَّى إلى مفعولين يقال رأَى زيداً عالماً ورَأَى رَأْياً ورُؤْيَةً ورَاءَةً مثل راعَة وقال ابن سيده الرُّؤيَةُ النَّظَرُ بالعَيْن والقَلْب

ருஃயத் என்பது கண்ணால் காண்பது என்ற பொருளில் வந்தால் அதற்கு ஒரு மஃப்வூல் (OBJECT) தான் வரும். அறிதல் என்ற பொருளில் வரும்போது அதற்கு இரண்டு மஃப்வூல் (OBJECT) வரும்

நூல் : லிஸானுல் அரப், பாகம் 14, பக்கம் 291

உதாரணம்

رأيت محمدا

முகம்மதைப் பார்த்தேன்

رأيت محمدا عالما

முகம்மதை ஆலிமாகப் பார்த்தேன்

இந்த இரண்டு வாசகங்களையும் பாருங்கள்!

முதலாவது உதாரணத்தில் பார்த்தல் என்பதற்கு முகம்மத் என்ற ஒரு ஆப்ஜெக்ட்டு (செயப்படு பொருள்) தான் வந்துள்ளது.

ஒரு ஆப்ஜக்ட் வந்தால் கண்ணால் காண்பது என்பதைத் தவிர வேறு பொருள் கொடுக்க முடியாது.

இரண்டாவது உதாரணத்தில் பார்த்தல் என்ற செயலுக்கு 1. முகம்மத் 2. ஆலிம் என்ற இரண்டு ஆப்ஜெக்ட் (செயப்படு பொருள்) வந்துள்ளது.

இவ்வாறு இரண்டு ஆப்ஜெக்ட்கள் வந்தால் தான் அறிதல் என்ற பொருள் வரும். சில நேரங்களில் அரிதாக இரண்டு ஆப்ஜெக்ட் வரும் போது கண்ணால் பார்த்தல் என்ற பொருளும் வரலாம்.

ஆனால் பார்த்தல் என்ற சொல்லுக்கு ஒரு ஆப்ஜெக்ட் வந்தால் கண்டிப்பாக அது கண்ணால் பார்த்தல் என்ற பொருளை மட்டும் தான் கொடுக்கும்.

பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள். பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் முப்பதாகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

என்ற ஹதீஸில் பார்த்தல் என்பதற்கு பிறை என்ற ஒரு ஆப்ஜக்ட்டு தான் வந்துள்ளது.

எனவே கண்ணால் பார்த்தல் என்பது தான் இந்த ஹதீஸின் பொருள் என்பது உறுதியாகி விட்டதால் இவர்களின் அமாவாசைப் பிறைக் கொள்கை ஹதீஸுக்கு முரணானது. இஸ்லாத்துக்கு சம்மந்தமில்லாதது என்பது உறுதி.

திருக்குர்ஆனில் பார்த்தல் என்ற வினைச்சொல் அதிகமாக இரண்டு ஆப்ஜெக்டுகளைக் கொண்டுதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு ஆப்ஜக்டுகள் வரும் போது அறிதல் என்ற பொருள்தான் பெரும்பாலும் வரும்.

யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் (பார்க்கவில்லையா?) அறியவில்லையா?

திருக்குர்ஆன் 105 :1

மேற்கண்ட வசனத்தில் யானைப் படையைப் பார்க்கவில்லையா? என்று மட்டும் அல்லாஹ் கூறியிருந்தால் அது கண்ணால் பார்ப்பதை மட்டும் தான் குறிக்கும்.

ஆனால் மேற்கண்ட வசனத்தில் பார்த்தல் என்ற வினைச்சொல்லுக்கு இரண்டு ஆப்ஜெக்ட்கள் வந்துள்ளன.

யானைப்படையை (பார்த்தல்)

எப்படி அழித்தான் என்ற செயலைப் (பார்த்தல்)

எனவே இங்கு இரண்டு ஆப்ஜெக்ட்கள் வந்துள்ளதால் இங்கு ருஃயத் என்பதின் பொருள் அறிதல் என்பதாகும்.

வானங்களையும், பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்ற (அற்பமான)வர்களைப் படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் (பார்க்கவில்லையா?) அறியவில்லையா?

திருக்குர்ஆன் 17:99

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ்வைப் பார்க்கவில்லையா? என்று மட்டும் வந்திருந்தால் கண்ணால் பார்த்தல் என்ற பொருளைத் தான் தரும்.

ஆனால் மேற்கண்ட வசனத்தில் பார்த்தல் என்ற வினைச் சொல்லுக்கு இரண்டு ஆப்ஜெக்ட்கள் வந்துள்ளன.

அல்லாஹ்வை (பார்த்தல்)

அவனுடைய படைப்பாற்றலைப் (பார்த்தல்)

இங்கு இரண்டு ஆப்ஜெக்ட்கள் வந்துள்ளதால் இதற்கு அறிதல் என்ற பொருள் தான் கொடுக்க வேண்டும்.

மரணத்திற்கு அஞ்சி தமது ஊர்களை விட்டு வெளியேறியோரை நீர் (பார்க்கவில்லையா?) அறியவில்லையா?

திருக்குர்ஆன் 2:243

மேற்கண்ட வசனத்தில் ஊர்களை விட்டு வெளியேறியோரைப் பார்க்கவில்லையா? என்று மட்டும் வந்திருந்தால் கண்ணால் பார்த்தல் என்று பொருள் மட்டும் தான் வரும்.

ஆனால் மேற்கண்ட வசனத்தில் பார்த்தல் என்ற வினைச்சொல்லுக்கு இரண்டு ஆப்ஜெக்ட்கள் வந்துள்ளன.

ஊரை விட்டு வெளியேறியோரை (பார்த்தல்)

அவர்கள் மரணத்திற்கு அஞ்சுவதை (பார்த்தல்)

இங்கு இரண்டு ஆப்ஜெக்ட்கள் வந்துள்ளதால் இங்கு அறிதல் என்ற பொருள்தான் கொடுக்க வேண்டும்.

ஆது, தூண்களையுடைய இரம் சமுதாயங்களை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் (பார்க்கவில்லையா?) அறியவில்லையா?

திருக்குர்ஆன் 89:6, 7

மேற்கண்ட வசனத்தில் பார்த்தல் என்ற வினைச் சொல்லுக்கு இரண்டு ஆப்ஜக்டுகள் வந்துள்ளன.

ஆது, இரம் சமுதாயத்தைப் (பார்த்தல்)

அவர்களை எப்படி ஆக்கினான் என்பதை (பார்த்தல்)

எனவே இங்கு அறிதல் என்ற பொருள்தான் கொடுக்க வேண்டும்.

அதே சமயம், கீழ்க்காணும் வசனங்களைப் பாருங்கள்.

அவ்வாறில்லை! நீங்கள் உறுதியாக அறிவீர்களாயின் நரகத்தைக் காண்பீர்கள்.

திருக்குர்ஆன் 102:5,6

மேற்கண்ட வசனத்தில் பார்த்தல் என்ற வினைச் சொல்லுக்கு ஒரு ஆப்ஜெக்ட்டு தான் வந்துள்ளது. எனவே இது கண்ணால் காண்பதை மட்டும் தான் குறிக்கும்.

மொத்தத்தில் பார்த்தல் என்ற வினைச் சொல்லிற்கு ஒரு ஆப்ஜெக்ட் வந்தால் அதற்குக் கண்ணால் பார்த்தல் என்ற பொருள் மட்டும் தான் வரும். வேறு பொருள் வராது.

இரண்டு ஆப்ஜெக்ட்கள் வரும் போது தான் அங்கே அறிதல் என்ற பொருள் வரும். திருமறைக்குர்ஆனில் அறிதல் என்ற பொருள் கொள்வதற்கு சான்றாக அவர்கள் எடுத்துக் காட்டும் வசனங்கள் அனைத்தும் இரண்டு ஆப்ஜெக்ட்டுகளுடன் வரக்கூடியவையாகும்.

பிறை பார்த்தல் பற்றிய ஹதீஸ்களில் பார்த்தல் என்ற வினைச் சொல்லிற்கு பிறை என்ற ஒரு ஆப்ஜக்ட்டு தான் வந்துள்ளது. எனவே இது கண்ணால் காண்பதை மட்டும் தான் குறிக்கும்.

குர்ஆனில் கண்ணால் காணுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட சில இடங்கள்.

நட்சத்திரத்தைப் பார்த்தார் (6:76)

சந்திரனைப் பார்த்தார் (6:77)

சூரியனைப் பார்த்தார் (6:78)

ஆதாரத்தைப் பார்த்தார் (11:70)

சட்டையைப் பார்த்தார் (12:28)

இணைக் கடவுள்களைப் பார்த்தல் (16:86)

நரகத்தைப் பார்த்தல் (16:83, 20:10)

கூட்டுப் படையைப் பார்த்தல் (33:22)

இறை அத்தாட்சியில் மிகப் பெரியதைப் பார்த்தல் (53:18)

தெளிவான அடிவானத்தில் பார்த்தார். (81:23)

ருஃயத் என்ற சொல்லுக்கு கண்ணால் பார்த்தல் என்ற பொருளில் ஏராளமான ஆதாரங்களை குர்ஆனில் காணமுடியும்.

ஆக இவர்களது இந்த வாதமும் அறியாமை காரணமாக எழுப்பப்பட்டுள்ளது உறுதியாகிறது.

பிறையைப் பார்த்தல் என்பது கண்ணால் பார்த்தலைத் தான் குறிக்கும் என்பது தெள்ளத் தெளிவாக நிரூபணம் ஆகி விட்ட நிலையில் பிறையைக் கணக்கிடலாம், விஞ்ஞான ரீதியாகச் சிந்திக்கலாம் என்பன போன்ற வாதங்கள் அனைத்தும் விழுந்து நொறுங்கி விட்டன.

தங்களது இந்த வாதத்தில் தாங்களே நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை, தொடர்ந்து இவர்கள் வைக்கும் அடுத்தடுத்த கேள்விகள் நிரூபிக்கின்றன.

வாதம் நான்கு

கிராமவாசிகள் சம்மந்தமான ஹதீஸில் பிறைபார்த்தல் பற்றி கூறப்பட்டுள்ளதே, இங்கு ருஃயத் என்கிற சொல் எங்கே உள்ளது?

இந்த ஹதீஸ் முர்ஸல் வகையைச் சார்ந்தது, இதை எப்படி ஆதாரமாகக் கொள்ளலாம்?

கிராமவாசிகள் பிறை பார்த்த ஹதீஸ் குறித்து இப்படி இரு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

நமது பதில்

கிராமவாசிகள் பிறைபார்த்து விட்டு வந்து நபிகள் நாயகத்திடம் சொன்னதாக அறிவிக்கப்படும் ஹதீஸ் குறித்து இரு கேள்விகள் கேட்கிறார்கள்.

அறிவீனர்கள் மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள் என்ற நபியின் எச்சரிக்கையை மெய்ப்படுத்தும் வகையில் தங்களது மடமையை இக்கேள்விகள் மூலம் நிரூபித்துக் கொள்கிறார்கள்.

இக்கேள்விக்கும் அமாவாசைப் பிறைக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

இவர்களுக்கு மொழியறிவும் இல்லை, அரபு இலக்கணமும் தெரியவில்லை, குர்ஆன், ஹதீஸை அணுகும் முறையும் தெரியவில்லை, ஹதீஸ் கலையும் தெரியவில்லை.

தங்களுக்கு இது பற்றிய அறிவு இல்லை என்று நிரூபிப்பதற்காகவே இது போன்ற வாதத்தை வைத்திருக்கிறார்கள் போலும்.

முர்ஸல் என்றால் என்ன என்று தெரியாமல் இந்த ஹதீஸை முர்ஸல் என்கிறார்கள்.

நபி சொன்னதாக ஒருவர் அறிவிப்பதாக இருந்தால் அவர் நபித்தோழராக இருக்க வேண்டும். நபித்தோழராக இல்லாத ஒருவர் நபி சொன்னதாக அறிவித்தால் அதன் பெயர் தான் முர்ஸல் ஆகும். நபியிடம் கேட்காமல் அறிவிப்பதால், இச்செய்தியை அவருக்கு நபித்தோழர் ஒருவர் கூறிருக்கவும் வாய்ப்பு உண்டு,  தாபியீ இவருக்குச் சொல்லி இருக்கவும் வாய்ப்பு உள்ளது. நபிக்கும், இவருக்கும்  மத்தியில் நபித்தோழரோ அல்லது தாபியீயும், நபித்தோழருமோ விடுபட்டிருப்பர்.

விடுபட்டவர் தாபியீயாக இருந்தால் அவர் யார் என்று தெரிய வேண்டும். அது தெரியாததால் அது பலவீனமானதாகும். இப்படி அமைந்த ஹதீஸ்கள் தான் முர்ஸல் ஆகும். 

ஆனால் அபூதாவூதில் இடம் பெற்ற கிராமவாசிகள் பற்றிய ஹதீஸ் இவ்வாறு இல்லை. நபித்தோழர் அறிவிப்பதாகவே இந்த ஹதீஸ் உள்ளது. அந்த நபித்தோழரின் பெயரைக் குறிப்பிட்டவில்லை என்பதே உண்மையாகும்.

1992 حَدَّثَنَا مُسَدَّدٌ وَخَلَفُ بْنُ هِشَامٍ الْمُقْرِئُ قَالَا حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ مَنْصُورٍ عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اخْتَلَفَ النَّاسُ فِي آخِرِ يَوْمٍ مِنْ رَمَضَانَ فَقَدِمَ أَعْرَابِيَّانِ فَشَهِدَا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّهِ لَأَهَلَّا الْهِلَالَ أَمْسِ عَشِيَّةً فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ أَنْ يُفْطِرُوا زَادَ خَلَفٌ فِي حَدِيثِهِ وَأَنْ يَغْدُوا إِلَى مُصَلَّاهُمْ * رواه ابوداود

அதாவது ரிப்யீ பின் கிராஷ் (தாபியீ) என்பவர் நபித்தோழர்களில் ஒருவரிடமிருந்து அறிவிக்கிறார் என்று இதில் இடம் பெற்றுள்ளது. நபித்தோழர் தான் இதை எனக்குச் சொன்னார் என்று ரிப்யீ பின் கிராஷ் கூறுகிறார்.

எனவே இது முர்ஸல் என்று கூறுவது அறியாமையாகும்.

ஸஹாபாக்கள் அனைவரும் நீதமானவர்கள் என்பதால் அவர்களின் பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும் நபித்தோழரிடமிருந்து கேட்டேன் என்று நம்பகமான தாபியீ சொன்னாலே அது ஆதாரப்பூர்வமானதாகும். இது தான் ஹதீஸ் கலை விதியாகும்.

முர்ஸல் என்பதில் ஸஹாபி விடுபட்டாரா? சஹாபியும் தாபியீயும் விடுபட்டாரா என்ற சந்தேகம் இருக்கும்.

இங்கு ஸஹாபி தான் அறிவிக்கிறார் என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளதால் இது முர்ஸல் கிடையாது.

இதைக் கூட அறியாமல் அறிவீனர்கள் எல்லாம் ஆய்வு செய்யப் புகுந்தால் அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்.

அடுத்ததாக, ருஃயத் என்றால் பார்த்தல் என்று பொருள் இருப்பதாகச் சொல்பவர்கள் இந்த வாகனக் கூட்டம் ஹதீஸில் ருஃயத் என்கிற வார்த்தை எங்குள்ளது? என்று காட்டுவார்களா எனக் கேட்கிறார்கள்.

பார்த்தல் என்பதற்கு ருஃயத் என்ற ஒரே ஒரு சொல் தான் உள்ளது என்று  நாம் சொல்லவில்லை. எந்த அரபு மொழி அகராதி நூலிலும் கூறப்படவில்லை. பார்த்தல் என்பதற்கு ஏராளமான சொற்கள் உள்ளன. இது பாமர மனிதனும் தெரிந்து வைத்திருக்கும் உண்மையாகும்.

பிறையைப் பார்த்ததாக சிலர் சாட்சி கூறினால் அதை ஏற்க வேண்டும் நாம் கூறுகிறோம். இந்த நிலையில் சிலர் நம்மிடம் வந்து நாங்கள் இன்றிரவு பிறையைக் கண்டோம் என்று கூறுகிறார்கள். அப்போது இந்த மேதாவிகளும் அங்கே இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.  அப்போது இந்த அதி மேதாவிகள் இந்த சாட்சிகள் பிறை பார்த்தோம் என்றா சொன்னார்கள்? பார்த்தல் என்ற வார்த்தை இவர்களின் கூற்றில் இல்லையே? கண்டோம் என்று தானே உள்ளது என்று கூறினால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இவர்களின் மடமை வாதம் அமைந்துள்ளது.

கிராமவாசிகள் பிறை பார்த்தது தொடர்பாக வரக்கூடிய ஹதீஸில் ”ருஃயத்” என்ற வார்த்தை இடம் பெறவில்லை. ஆனால் ”அஹல்ல” என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.

المحكم والمحيط الأعظم – (ج 2 / ص 126) وأهَلَّ الرجل: نظر إلى الهِلال. وأهلَلنا هِلال شهر كذا، واستَهْلَلناه: رأيناه

”அஹல்ல” என்று சொன்னால் ”பிறையை நோக்கிப் பார்த்தான்” ”பிறையைக் கண்களால் பார்த்தான்” என்பதாகும்.

நூல் : அல்முஹ்கம் வல் முஹீத்துல் அஃளமு. பாகம் 2 பக்கம் 126

மேற்கண்ட கிராமவாசிகள் பற்றிய ஹதீஸில் ”அஹல்லா அல்ஹிலால” என்று இடம் பெற்றுள்ளது. இதன் பொருள் ”அந்த இருவரும் பிறையைக் கண்களால் பார்த்தார்கள்” என்பதாகும்.

இந்த வகையிலும் இவர்களது வறட்டு சிந்தனை சந்தி சிரிப்பதைக் காணலாம்.

இதில் மேலும் சில கேள்விகளைக் கேட்கின்றனர்.

பிறையைக் கண்ணால் காண வேண்டும் என்றும், காணவில்லை என்றால் 30 ஆகப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் உங்கள் கருத்துப்படி சொல்லப்பட்டு விட்டதே, பிறகு ஏன் ஸஹாபாக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது? ஏன் கருத்து வேறுபாடு கொண்டனர்? என்று கேட்டுள்ளனர்

ஒரு ஊரார் பார்த்த நாளுக்கு மறு நாள் இன்னொரு ஊரார் பிறை பார்த்தால் முப்பது எது என்பதில் இருவருக்கும் கருத்து வேறுபாடு வரும் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் இப்படிக் கேட்கின்றனர்.

தலைப் பிறை குறித்து ஸ்ஹாபாக்கள் தங்களுக்கிடையே விவாதித்துக் கொண்டனர், அதில் கருத்து வேறுபாடு கொண்டனர் என்பதே, அவர்கள் இந்த ஹிஜ்ரா கூட்டம் கொண்டிருப்பதைப் போன்ற கொள்கையைக் கொண்டிருக்கவில்லை என்பதைத் தான் காட்டுகிறது.

மற்றுமொரு வினோதமான கேள்வியை முன் வைக்கிறார்கள்.

அதாவது, மாதத்தின் இறுதி பற்றி மக்களுக்கு கருத்து வேறுபாடு வந்தது என்று வாகனக் கூட்டம் ஹதீஸில் சொல்லப்பட்டிருப்பதில் இருந்து, அவர்களுக்கு முன் கூட்டியே மாதத்தின் இறுதி தெரிந்திருக்கிறது என்று தானே அர்த்தம்? அதனால் தானே கருத்து வேறுபாடு கொள்ள நேர்ந்தது? என்று கேட்கிறார்கள்.

இவர்களின் எல்லையற்ற மடமைக்கு இந்தக் கேள்வி ஆதாரமாக உள்ளது.

மாதத்தின் இறுதி பற்றி கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்றால் சர்வதேசப் பிறை என்ற கிறுக்குத்தனம் அந்த மக்களிடம் இல்லை என்பதற்குத் தான் இது ஆதாரமாக உள்ளது. ஒருவர் பார்த்து மற்றவர் பார்க்காததால் எது கடைசி என்று கருத்து வேறுபாடு வரத்தானே செய்யும்.

ஒரு மாத இறுதியில் மக்கள் முதல் பிறை குறித்து கருத்து வேறுபாடு கொண்டிருந்தால் அது விஞ்ஞான ரீதியாக பிறையைக் கணிக்கலாம் என்பதற்கு ஆதாரமா?

முன்கூட்டியே மாதம் முடியும் கணக்கை அறிந்திருந்தால் தானே ஒரு சாராருக்கும், மற்றொரு சாராருக்கும் கருத்து வேறுபாடு வரும்? என்று கேட்கிறார்கள்.

தங்களது சிந்தனை அடகு வைக்கப்பட்டு விட்டது என்பதற்கு இவர்களது இந்த ஒரு கேள்வியே சான்று பகர்கிறது.

தலைப்பிறையைப் பார்த்து ஒரு மாதத்தைத் துவங்கி விட்டார்கள் என்றால் ஒவ்வொரு நாளையும் எண்ணுவதற்கு ஸஹாபாக்களுக்குத் தெரியும். இது முதல் பிறை, இது இரண்டாவது பிறை என்று எண்ணி இறுதியில் 29 பிறைகள் முடிந்தால் மறு பிறை தென்பட்டதா இல்லையா? என்கிற கருத்து வேறுபாடுகள் வரும். இது ஒவ்வொரு மாதமும் பிறையைக் கண்ணால் பார்த்து மாதங்களை தீர்மானிப்பவர்களிடையே ஏற்படும். இதற்கும் பிறையை முன்கூட்டியே கணிக்க வேண்டும் என்பதற்கும் என்ன சம்மந்தம் உள்ளது?

வாதம் ஐந்து

கும்ம என்பதன் பொருள் என்ன?

அடுத்ததாக, "உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் 30 ஆகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்பதாக வரும் ஹதீஸில் மேகமூட்டம் என்று நாம் மொழியாக்கம் செய்த இடத்தில் "கும்ம" என்கிற சொல் உள்ளது, இதற்கு மேகமூட்டம் என்கிற பொருள் வராது, அறிவிற்கு எட்டாத, சிந்தனை விட்டும் மறைந்த.. என்பதாகத் தான் பொருள் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.

நமது பதில்

இவர்களின் இந்த வாதமும் அர்த்தமற்றதாகும்.

கும்ம என்ற சொல்லின் நேரடிப் பொருள் மறைக்கப்படுதல் என்பது தான். இது ஹிலால் என்ற வார்த்தையோடு இணைத்து கூறப்படும் போது மேகமூட்டத்தால் மறைக்கப்படுதல் என்பது பொருளாகும்.

المحكم والمحيط الأعظم – (ج 2 / ص 390) وغُمّ الهلالُ غَماًّ: ستره الغيمُ فلم يُرَ.

கும்ம அல்ஹிலாலு கம்மன் என்பதின் பொருள் பிறையை மேகம் மறைத்தது. அது பார்க்கப்படவில்லை என்பதாகும். 

நூல்: அல்முஹ்கம் வல் முஹீத்துல் அஃளம் என்ற அரபி அகராதி நூல் . பாகம் 2 பக்கம் 390

ஒரு வாதத்திற்கு மேகமூட்டம் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு பிறை மறைக்கப்பட்டது என்று மட்டும் பொருள் செய்தால் கூட இது கண்பார்வைக்கு மறைந்திருப்பதைத் தான் குறிக்கும்.

அறிதலை விட்டும் மறைதல் என்று பொருள் வராது.

ஏனென்றால் பார்த்தல் என்பதற்கு ஒரு ஆப்ஜக்ட் வருமென்றால் அது கண்ணால் காண்பதை மட்டும் தான் குறிக்கும் என்பதை முன்னர் விளக்கி விட்டோம்.

பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள். பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் முப்பதாகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்!

என்ற ஹதீஸில் பார்த்தல் என்பதற்கு பிறை என்ற ஒரு ஆப்ஜெக்ட் மட்டும் வந்துள்ளதால் அது கண் பார்வைக்கு மறைக்கப்படுவதை மட்டும் தான் குறிக்கும்.

இதை ஏற்கனவே நாம் விளக்கியுள்ளோம்.

அந்த வகையில், கும்ம என்கிற சொல்லுக்கு இந்த இடத்தில் கண்களை விட்டும் மறைதல் என்கிற பொருள் மட்டும் தான் கொடுக்க முடியும். வானத்தில் உள்ள ஒன்றைப் பற்றி பேசுகிற பொழுது, அது கண்களை விட்டு மறையும் என்றால் மேகமூட்டம், புகை மூட்டம், பனிமூட்டம் போன்றவை மறைப்பதைத் தான் குறிக்க முடியும்.

இதற்கு வலுசேர்க்கும் விதமாக கீழ்க்காணும் இறை வசனங்களிலும் கும்ம என்கிற சொல்லின் வேர்ச் சொல்லான கமாம் என்கிற வார்த்தை – மேகமூட்டம் என்கிற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.

உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம்.

திருக்குர்ஆன் 2:57

ஒவ்வொரு கூட்டத்தினரும் தமக்குரிய நீர்த்துறையை அறிந்து கொண்டனர். அவர்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். அவர்களுக்கு மன்னு, ஸல்வா (எனும் உண)வை இறக்கினோம்.

திருக்குர்ஆன் 7:160

மேகத்தால் வானம் பிளக்கப்பட்டு, வானவர்கள் உறுதியாக இறக்கி வைக்கப்படும் நாள்!

திருக்குர்ஆன் 25:25

மேற்கண்ட வசனங்களில் மேகம் என்கிற வார்த்தையைக் குறிக்க கமாம் என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது, அதிலிருந்து பிறந்த சொல்லே கும்ம ஆகும்.

இந்த விளக்கமும் நாம் புதிதாகக் கொடுக்கும் விளக்கமல்ல. இதை நமது முந்தைய மறுப்புகளின் போதே தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம்.

கமாம் என்பது கும்ம என்ற சொல்லிலிருந்து வந்தது தான். இது பல அரபி அகராதி நூற்களில் கூறப்பட்டுள்ளது.

இரண்டு நூற்களில் உள்ள ஆதாரங்கள் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது.

உம்தத்துல் காரி என்பது புகாரியின் விரிவுரை நூல். இதே கருத்து அரபி அகராதி நூற்களிலும் உள்ளது.

قوله فإن غم عليكم أي فإن ستر الهلال عليكم ومنه الغم لأنه يستر القلب والرجل الأغم المستور الجبهة بالشعر وسمي السحاب غيما لأنه يستر السماء ويقال غم الهلال إذا استتر ولم ير لاستتاره بغيم ونحوه وغممت الشيء أي غطيته -عمدة القاري شرح صحيح البخاري – (ج 16 / ص 268)

கும்ம அலைக்கும் என்றால் சுதிரல் ஹிலாலு அலைக்கும் (பிறை உங்களுக்கு மறைக்கப்பட்டால்) என்பது பொருள். கவலைக்கு அல்கம்மு என்று கூறப்படும். ஏனென்றால் அது உள்ளத்தை மறைக்கிறது. முடியினால் நெற்றி மறைக்கப்பட்ட மனிதனுக்கு அர்ரஜூலுல் அகம்மு என்று கூறுவார்கள். மேகத்திற்கு கய்முன் என்று கூறுவார்கள். ஏனென்றால் அது வானத்தை மறைக்கிறது. கும்ம அல்ஹிலாலு என்றால் பிறை மறைக்கப்பட்டது என்பது பொருள். அதாவது மேகத்தினால் அது மறைக்கப்பட்டதினால் காணப்படவில்லை என்பதாகும்.

நூல் : உம்தத்துல் காரீ

وأما قوله فإن غم عليكم فذلك من الغيم والغمام وهو السحاب يقال منه يوم غم وليلة غمة وذلك أن تكون السماء مغيمة التمهيد – (ج 2 / ص 38)

கும்ம அலைக்கும், இதன் பொருள் உங்களுக்கு மறைக்கப்பட்டது என்பதாகும். இதில் மறைத்தல் என்பது கைம் இன்னும் கமாம் மூலம் ஏற்படுதலாகும். கைம் கமாம் என்பது மேகம் ஆகும். வானம் மேகமூட்டமாக இருக்கும் போது யவ்முன் கம்முன் (மேகமூட்டமான நாள்) லைலத்துன் கம்மத்துன் (மேகமூட்டமான இரவு) என்று கூறுவார்கள்.

நூல் : அத்தம்ஹீத் பாகம் 2 பக்கம் 38

கமாம் என்கிற வார்த்தைக்கு மேகம் என்கிற பொருள் இருக்கிறதா? கும்ம என்பதன் வேர்ச்சொல் தான் கமாமா? என்கிற கேள்விகளுக்கு விடை அறிய அகராதி நூற்களையும் அரபுப் புலமையின் தேவையும் உள்ளது.

நாளின் துவக்கம் எது?

நாளின் துவக்கம் மக்ரிபில் இருந்துதான் ஆரம்பம் ஆகிறது. சுப்ஹில் இருந்து அல்ல என்பதற்கு நாம் ஏராளமான ஆதாரங்களை முன் வைத்து விளக்கியுள்ளோம்.

இதை மறுக்கப் புகுந்த அமாவாசைக் கூட்டம் நாம் வெளியிட்ட அந்த ஆதாரங்களில் இரண்டே இரண்டை மட்டும் மறுத்து சில வாதங்களை வைத்து விட்டு நாளின் துவக்கம் சுப்ஹு என்று நிரூபித்து விட்டோம் என்று  கூறியுள்ளனர்.

வாதம் ஆறு

2:239 வசனத்தில் கூறப்படும் நடுத்தொழுகை என்பது அஸர் தொழுகைதான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள்.

இதைக் கொண்டு நாளின் துவக்கம் பகல் தான் என்று சிலர் புதிதாக வாதிடத் துவங்கியுள்ளனர்.

இரவில் இருந்து தான் நாள் ஆரம்பமாகிறது என்றால் மக்ரிப் முதல் தொழுகையாக ஆகிறது. இதன்படி ஸுப்ஹுத் தொழுகைதான் நடுத்தொழுகையாக ஆகும்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறாமல் அஸர் தொழுகையை நடுத்தொழுகை என்று கூறியுள்ளனர். நாளின் ஆரம்பம் காலை என்றால் தான் அஸர் தொழுகை, நடுத்தொழுகையாக வர முடியும். எனவே ஸுப்ஹில் இருந்து தான் நாள் ஆரம்பமாகிறது என்பதற்கு நடுத்தொழுகைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த விளக்கம் ஆதாரமாக அமைந்துள்ளது என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

நாளின் துவக்கம் மக்ரிப் தான் என்பதற்கு நாம் எடுத்து வைத்த ஆதாரங்களைப் பாருங்கள்.

நமது பதில்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலம் முதல் இன்று வரை முஸ்லிம் சமுதாயத்தில் மக்ரிப் தான் நாளின் துவக்கம் என்பது கருத்து வேறுபாடின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டு வரும் நிலையில் இவர்கள் நடுத்தொழுகைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அளித்த விளக்கத்தைச் சான்றாகக் காட்டி, ஸுப்ஹ் தான் நாளின் துவக்கம் என்று வாதிடுகின்றனர்.

இதுவரை கருத்து வேறுபாடின்றி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றை மறுத்து, புதிதாக ஒரு கருத்தை நிறுவ விரும்புபவர்கள், தங்களின் வாதத்தைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்ற தெளிவான சான்றுகளைக் காட்ட வேண்டும்.

மேற்கண்ட வசனம் இவர்களின் கருத்தைத் தெளிவாக அறிவிக்கும் வகையில் இருக்கவில்லை. நடு என்று பொருள் செய்யப்படும் உஸ்தா என்ற சொல் பல அர்த்தங்களில் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.

நடுத்தொழுகை என்பதில் நடு என்பது வரிசைக் கிரமத்தை மட்டும் குறிக்காது. நடுத்தரம், சிறப்பு என்ற கருத்திலும் இச்சொல் பயன்படுத்தப்படும்.

2:239 வசனத்தில் நடுத்தொழுகை என்ற சொல் சிறப்பிற்குரியது என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதை ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானீ தமது புகாரியின் விரிவுரை நூலான பத்ஹுல் பாரியில் தெளிவுபடுத்துகிறார்கள்.

ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களின் கூற்றுக்கு குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் சான்றாக உள்ளன. அல்உஸ்தா என்ற சொல்லின் மூலச்சொல்லிலிருந்து பிறந்த சொற்களுக்கு 'நடுவில் உள்ளது' என்ற பொருள் இருப்பது போல் 'சிறந்தது' என்ற பொருளும் உள்ளதை 68:28, 2:143 ஆகிய வசனங்களில் இருந்து அறியலாம்.

இரவில் தொழுகை கடமையாக்கப்பட்டது. இவ்வாறு கடமையாக்கப்பட்ட பிறகு வந்த முதல் தொழுகை ஸுப்ஹு தான். கடமையாக்கப்பட்ட வரிசைப்படி பார்த்தால் அஸர் நடுத் தொழுகையாகின்றது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

இவ்விரண்டும் எந்தச் சான்றுகளுடனும் மோதாமலும் அறிவுக்குப் பொருத்தமான வகையிலும் அமைந்துள்ளன.

ஆனால் இவர்கள் புதிதாகக் கண்டுபிடித்த மூன்றாவது கருத்து, நாளின் துவக்கம் மக்ரிப் தான் எனத் தெளிவாகக் கூறும் ஏராளமான சான்றுகளை மறுப்பதாக அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மக்ரிப் தான் ஒரு நாளின் துவக்கம் என்று கருதப்பட்டு வந்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

سنن أبي داود

1379 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَفْصِ بْنِ عَبْدِ اللَّهِ السُّلَمِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ عَبَّادِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ مُسْلِمٍ الزُّهْرِيِّ، عَنْ ضَمْرَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أُنَيْسٍ، عَنْ أَبِيهِ، قَالَ: كُنْتُ فِي مَجْلِسِ بَنِي سَلَمَةَ وَأَنَا أَصْغَرُهُمْ، فَقَالُوا:: مَنْ يَسْأَلُ لَنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لَيْلَةِ الْقَدْرِ، وَذَلِكَ صَبِيحَةَ إِحْدَى وَعِشْرِينَ مِنْ رَمَضَانَ؟ فَخَرَجْتُ فَوَافَيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْمَغْرِبِ، ثُمَّ قُمْتُ بِبَابِ بَيْتِهِ، فَمَرَّ بِي فَقَالَ: «ادْخُلْ»، فَدَخَلْتُ فَأُتِيَ بِعَشَائِهِ، فَرَآنِي أَكُفُّ عَنْهُ مِنْ قِلَّتِهِ، فَلَمَّا فَرَغَ، قَالَ: «نَاوِلْنِي نَعْلِي» فَقَامَ وَقُمْتُ مَعَهُ، فَقَالَ: «كَأَنَّ لَكَ حَاجَةً»، قُلْتُ: أَجَلْ، أَرْسَلَنِي إِلَيْكَ رَهْطٌ مِنْ بَنِي سَلَمَةَ، يَسْأَلُونَكَ عَنْ لَيْلَةِ الْقَدْرِ، فَقَالَ: «كَمِ اللَّيْلَةُ؟» فَقُلْتُ: اثْنَتَانِ وَعِشْرُونَ، قَالَ: «هِيَ اللَّيْلَةُ»، ثُمَّ رَجَعَ، فَقَالَ: «أَوِ الْقَابِلَةُ»، يُرِيدُ لَيْلَةَ ثَلَاثٍ وَعِشْرِينَ

அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) கூறுகிறார்கள்:

"லைலதுல் கத்ர் இரவு பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் யார் விளக்கம் கேட்பது?'' என்று நாங்கள் பேசிக் கொண்டோம். இது ரமளான் மாதம் 21 ஆம் காலையில் நடந்தது. நான் புறப்பட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மக்ரிப் தொழுகையில் பங்கு கொண்டேன். லைலதுல் கத்ர் பற்றிக் கேட்டு வர என்னை பனூஸலமா கூட்டத்தினர் அனுப்பியதைத் தெரிவித்தேன். இது எத்தனையாவது இரவு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். 22ஆம் இரவு என்று நான் குறிப்பிட்டேன். இதுதான் அந்த (லைலதுல் கத்ர்) இரவு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் திரும்பி வந்து அடுத்த இரவும் எனக் கூறி 23ஆம் இரவைக் குறிப்பிட்டனர்.

நூல்: அபூதாவூத் 1174

இந்த ஹதீஸ் கூறுவது என்ன?

அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) 21 ஆம் நாள் காலையில் புறப்பட்டு மக்ரிபில் நபிகள் நாயகத்தைச் சந்திக்கிறார். நாளின் ஆரம்பம் ஸுப்ஹு தான் என்றால் அவர் அடைந்த மக்ரிபை 21 ஆம் நாள் மக்ரிப் எனக் கூறி இருக்க வேண்டும். ஆனால் 22 ஆம் நாள் மக்ரிப் என்று கூறுகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அதை அங்கீகரிக்கிறார்கள். இதிலிருந்து மக்ரிப் தான் நாளின் துவக்கம் என்பதைச் சந்தேகமற அறியலாம்.

21ஆம் நாள் ஸுப்ஹுக்குப் பின் வரும் மக்ரிப், 21ஆம் நாள் மக்ரிப் என்று சொல்லப்பட்டால் ஸுப்ஹிலிருந்து நாள் ஆரம்பமாகி விட்டது என்று சொல்லலாம். 21ஆம் நாள் ஸுப்ஹுக்குப் பின் வரக்கூடிய மக்ரிப் 22ஆம் நாள் மக்ரிப் என்று இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளதால் மக்ரிபில் தான் தேதி மாறுகிறது என்பது உறுதியாகத் தெரிகிறது.

மற்றொரு ஹதீஸையும் பாருங்கள்!

தண்ணீரில் பேரீச்சம் பழத்தை ஊறவைத்து மறுநாள் அந்தத் தண்ணீரை அருந்துவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழக்கம்.

இது பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) பின்வருமாறு கூறுகிறார்கள்:

صحيح مسلم

5345 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ يَحْيَى الْبَهْرَانِىِّ قَالَ ذَكَرُوا النَّبِيذَ عِنْدَ ابْنِ عَبَّاسٍ فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يُنْتَبَذُ لَهُ فِى سِقَاءٍ – قَالَ شُعْبَةُ مِنْ لَيْلَةِ الاِثْنَيْنِ – فَيَشْرَبُهُ يَوْمَ الاِثْنَيْنِ وَالثَّلاَثَاءِ إِلَى الْعَصْرِ فَإِنْ فَضَلَ مِنْهُ شَىْءٌ سَقَاهُ الْخَادِمَ أَوْ صَبَّهُ.

திங்கட்கிழமை இரவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காகத் தண்ணீரில் பேரீச்சம் பழத்தை நாங்கள் ஊற வைப்போம். அதைத் திங்கள்கிழமையும், செவ்வாய்க்கிழமை அஸர் வரையும் அருந்துவார்கள்.

நூல்: முஸ்லிம் 4083

திங்கட்கிழமை இரவில் ஊறவைத்து திங்கள்கிழமை பகலில் அருந்துவார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

நாளின் ஆரம்பம் ஸுப்ஹ் அல்ல என்பதற்கு இது தெளிவான ஆதாரமாக அமைந்துள்ளது. நாளின் ஆரம்பம் ஸுப்ஹ் என்றால் திங்கட்கிழமை இரவுக்கு அடுத்து வரும் காலையை செவ்வாய்க் கிழமை என்று சொல்ல வேண்டும். அப்படி இந்த ஹதீஸில் சொல்லப்படவில்லை. திங்கட்கிழமை இரவுக்குப் பின்வரக் கூடிய பகல் திங்கட்கிழமை என்றே இந்த ஹதீஸில் குறிப்பிடப்படுவதால் ஸுப்ஹ் வந்தும் கிழமை மாறவில்லை என்று தெளிவாகத் தெரிகிறது.

மக்ரிபில் இருந்து தான் நாள் ஆரம்பமாகிறது என்பதைப் பின்வரும் ஹதீஸில் இருந்தும் அறியலாம்.

صحيح البخاري

2027 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الحَارِثِ التَّيْمِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَعْتَكِفُ فِي العَشْرِ الأَوْسَطِ مِنْ رَمَضَانَ، فَاعْتَكَفَ عَامًا، حَتَّى إِذَا كَانَ لَيْلَةَ إِحْدَى وَعِشْرِينَ، وَهِيَ اللَّيْلَةُ الَّتِي يَخْرُجُ مِنْ صَبِيحَتِهَا مِنَ اعْتِكَافِهِ، قَالَ: «مَنْ كَانَ اعْتَكَفَ مَعِي، فَلْيَعْتَكِفِ العَشْرَ الأَوَاخِرَ، وَقَدْ أُرِيتُ هَذِهِ اللَّيْلَةَ ثُمَّ أُنْسِيتُهَا، وَقَدْ رَأَيْتُنِي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ مِنْ صَبِيحَتِهَا، فَالْتَمِسُوهَا فِي العَشْرِ الأَوَاخِرِ، وَالتَمِسُوهَا فِي كُلِّ وِتْرٍ»، فَمَطَرَتِ السَّمَاءُ تِلْكَ اللَّيْلَةَ وَكَانَ المَسْجِدُ عَلَى عَرِيشٍ، فَوَكَفَ المَسْجِدُ، فَبَصُرَتْ عَيْنَايَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى جَبْهَتِهِ أَثَرُ المَاءِ وَالطِّينِ، مِنْ صُبْحِ إِحْدَى وَعِشْرِينَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் நடுவில் உள்ள பத்து நாட்கள் இஃதிகாப் இருப்பது வழக்கம். அவ்வழக்கப்படி ஒரு ஆண்டு இஃதிகாப் இருந்தனர். 21 ஆம் இரவு வந்தபோது, – அந்த இரவுக்குரிய காலையில் தான் இஃதிகாபிலிருந்து வெளியேறுவது அவர்களின் வழக்கம் – "என்னுடன் இஃதிகாப் இருந்தவர்கள் கடைசிப் பத்து நாட்களும் இஃதிகாப் இருக்கட்டும். அவ்விரவு எனக்குக் காட்டப்பட்டு பின்னர் மறக்கடிக்கப்பட்டு விட்டது. அன்று காலையில் சேற்றிலும், தண்ணீரிலும் ஸஜ்தாச் செய்வதாகக் (கனவு) கண்டேன். எனவே "கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடுங்கள்! ஒவ்வொரு ஒற்றைப்படை நாட்களிலும் தேடுங்கள்'' என்றனர். அன்றிரவு மழை பொழிந்தது. பள்ளியின் பந்தலிலிருந்து தண்ணீர் வழிந்தது. 21ஆம் நாள் காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெற்றியில் சேற்றையும், தண்ணீரையும் என் கண்கள் கண்டன.

நூல் : புகாரி 2027

ஸுப்ஹில் இருந்து தான் நாள் ஆரம்பமாகிறது என்ற கருத்துப்படி 21ஆம் இரவுக்குரிய காலைப் பொழுதைப் பற்றிக் கூறுவதாக இருந்தால் அடுத்த நாளுக்குரிய காலை என்றோ, 22ஆம் நாளுக்குரிய காலை என்றோ கூறியிருக்க வேண்டும். அப்படிக் கூறாமல் 21 ஆம் நாளுக்கு உரிய காலைப் பொழுது என்று இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. 21ஆம் நாளை அடுத்து வரும் காலைப் பொழுது அதே நாளுக்கு உரியது என்று சொல்லப்படுவதால் காலைப் பொழுதில் தேதி மாறவில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

அடுத்து இந்த ஹதீஸில் 21ஆம் இரவு வந்தபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை கூறினார்கள் என்று சொல்லப்படுகிறது. அதன் முடிவில் அன்றிரவு மழை பொழிந்தது. பள்ளியின் பந்தலிலிருந்து தண்ணீர் வழிந்தது. 21 ஆம் நாள் காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெற்றியில் சேற்றையும், தண்ணீரையும் என் கண்கள் கண்டன என்று சொல்லப்படுகிறது.

அதாவது அன்றிரவில் அதாவது 21ஆம் இரவில் மழை பொழிந்தது. அம்மழையின் காரணமாக 21ஆம் காலையில் நபிகளின் நெற்றியில் சேறு படிந்தது என்று இந்த வாசகம் கூறுகிறது.

21ஆம் இரவுக்குப் பின்னர் வரக் கூடிய காலைப் பொழுது 21ஆம் நாளாகவே இருந்துள்ளது என்பதை இதிலிருந்து அறிகிறோம். அதாவது மக்ரிபில் எந்தத் தேதி இருந்ததோ அதே தேதி தான் ஸுப்ஹிலும் நீடித்துள்ளது. ஸுப்ஹ் நேரம் வந்தும் தேதி மாறவில்லை. நாளின் துவக்கம் காலைப் பொழுது அல்ல என்பதற்கு இதுவும் தெளிவான ஆதாரமாக அமைந்துள்ளது.

நாளின் துவக்கம் ஸுப்ஹு என்றால் 21 ஆம் இரவுக்கு அடுத்து வரும் ஸுப்ஹை 22வது நாள் என்று தான் கூற வேண்டும். ஆனால் நபித்தோழரோ 21 ஆம் இரவுக்கு அடுத்து வரும் ஸுப்ஹை 21வது நாள் ஸுப்ஹ் எனக் கூறுகிறார். இதிலிருந்து நாளின் துவக்கம் இரவு தான் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

மேலும் அன்று காலை தான் இஃதிகாபை விட்டு வெளியேறுவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழக்கம் என்ற வாசகமும் கவனிக்கத்தக்கது. ஸுப்ஹிலிருந்து தான் நாள் துவங்குகிறது என்றால் மறுநாள் காலையில் வெளியேறுவார்கள் என்று தான் கூற வேண்டும். அன்று காலையில் வெளியேறுவார்கள் எனக் கூற முடியாது. அன்று காலையில் என்று கூறியிருப்பதால் நாளின் துவக்கம் இரவுதான் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகின்றது.

மற்றொரு ஹதீஸையும் பாருங்கள்!

مسند أحمد بن حنبل (2/ 483)

 10277 – حدثنا عبد الله حدثني أبي ثنا يونس بن محمد قال حدثني الخزرج يعني بن عثمان السعدي عن أبي أيوب يعني مولى عثمان عن أبي هريرة قال سمعت رسول الله صلى الله عليه و سلم قال : إن أعمال بني آدم تعرض كل خميس ليلة الجمعة فلا يقبل عمل قاطع رحم

ஒவ்வொரு வியாழனின் மாலை வெள்ளி இரவன்று ஆதமுடைய மக்களின் அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக்காட்டப்படும். (அப்போது) குடும்ப உறவை முறித்தவனின் அமலை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூற்கள்: அஹ்மத் 9883, அல்அதபுல் முஃப்ரத் 61 , ஷுஅபுல் ஈமான் 7966

இந்த ஹதீஸ் சொல்வது என்ன? வியாழன் மாலைக்குப் பின் வியாழன் இரவு என்று சொல்லப்பட்டால் இரவில் தேதி மாறவில்லை; காலையில் உள்ள தேதியே நீடிக்கிறது என்று சொல்லலாம். ஆனால் இந்த ஹதீஸில் வியாழன் மாலைக்குப் பின் வரக் கூடிய இரவு வெள்ளி இரவு என்று சொல்லப்படுகிறது. அதாவது மக்ரிப் வந்தவுடன் அடுத்த நாள் ஆரம்பித்து விட்டது என்பதற்கு இது தெளிவான சான்றாக அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பிறகு நபித்தோழர்கள் காலத்திலும் மக்ரிபில் தான் நாள் ஆரம்பிக்கிறது என்ற கோட்பாடுதான் இருந்துள்ளது என்பதற்கும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

صحيح البخاري

(2/ 102) 1387 – حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: دَخَلْتُ عَلَى أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: فِي كَمْ كَفَّنْتُمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: «فِي ثَلاَثَةِ أَثْوَابٍ بِيضٍ سَحُولِيَّةٍ، لَيْسَ فِيهَا قَمِيصٌ وَلاَ عِمَامَةٌ» وَقَالَ لَهَا: فِي أَيِّ يَوْمٍ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: «يَوْمَ الِاثْنَيْنِ» قَالَ: فَأَيُّ يَوْمٍ هَذَا؟ قَالَتْ: «يَوْمُ الِاثْنَيْنِ» قَالَ: أَرْجُو فِيمَا بَيْنِي وَبَيْنَ اللَّيْلِ، فَنَظَرَ إِلَى ثَوْبٍ عَلَيْهِ، كَانَ يُمَرَّضُ فِيهِ بِهِ رَدْعٌ مِنْ زَعْفَرَانٍ، فَقَالَ: اغْسِلُوا ثَوْبِي هَذَا وَزِيدُوا عَلَيْهِ ثَوْبَيْنِ، فَكَفِّنُونِي فِيهَا، قُلْتُ: إِنَّ هَذَا خَلَقٌ، قَالَ: إِنَّ الحَيَّ أَحَقُّ بِالْجَدِيدِ مِنَ المَيِّتِ، إِنَّمَا هُوَ لِلْمُهْلَةِ فَلَمْ يُتَوَفَّ حَتَّى أَمْسَى مِنْ لَيْلَةِ الثُّلاَثَاءِ، وَدُفِنَ قَبْلَ أَنْ يُصْبِحَ

நான், அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்றபோது "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எத்தனை துணிகளில் கஃபன் செய்திருந்தீர்கள்?'' என்று அவர் கேட்டார். "வெண்மையான மூன்று பருத்தித் துணிகளில் கஃபன் செய்தோம். அவற்றில் சட்டையோ, தலைப்பாகையோ இல்லை என்றேன்'. அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் கிழமையில் மரணமடைந்தார்கள்? எனக் கேட்டார்கள். நான் திங்கள் கிழமை என்றேன். "இன்று என்ன கிழமை? என்று அவர்கள் கேட்டதும் நான் திங்கள் கிழமை என்றேன். அதற்கவர்கள் "இன்றிரவுக்குள் (எனது மரணம்) நிகழும் என நான் எண்ணுகிறேன்.' என்று கூறிவிட்டு, தாம் நோயுற்றிருந்தபோது அணிந்திருந்த ஆடையைப் பார்த்தார்கள். அதில் குங்குமப்பூவின் கறை படிந்திருந்தது. "இதைக் கழுவி இத்துடன் இன்னும் இரு துணிகளையும் சேர்த்து அவற்றில் என்னைக் கஃபனிடுங்கள் எனக் கூறினார்கள். நான், இது பழையதாயிற்றே என்றேன். அதற்கவர்கள் "இறந்தவரை விட உயிருடனிருப்பவரே புத்தாடை அணிய அதிகத் தகுதி படைத்தவர். மேலும் அது (இறந்த) உடலிலிருந்து வழியும் சீழுக்குத் தான் போகும் என்றார்கள். பிறகு அன்று மாலை வரை மரணிக்கவில்லை. செவ்வாய் இரவில் தான் மரணித்தார்கள். காலை விடிவதற்கு முன் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1387

அபூபக்ர் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்த கிழமையாகிய திங்கட்கிழமை இறக்க ஆசைப்பட்டார்கள். இன்று இரவு வருவதற்கு முன் மரணித்தால் திங்கள் கிழமை மரணித்தவராக ஆகலாம் என்று கருதினார்கள். ஆனால் அந்தப் பகலில் மரணிக்காமல் இரவு வந்த பின் தான் மரணித்தார்கள். அந்த இரவுக்குப் பெயரிடும்போது ஆயிஷா (ரலி) அவர்கள் திங்கள் இரவு எனக் கூறவில்லை. மாறாக செவ்வாய் இரவு என்று குறிப்பிடுகிறார்கள்.

அதாவது திங்கள் கிழமை பகலுக்குப் பின் வரக் கூடிய இரவைப் பற்றி திங்கள் கிழமை இரவு என்று சொல்லப்பட்டால் இரவில் கிழமை மாறவில்லை என்று கூறலாம். காலையில் தான் தேதி மாறுகிறது என்று சொல்லலாம். ஆனால் திங்கள் கிழமைக்கு பகலுக்குப் பின் வரக்கூடிய இரவை செவ்வாய் இரவு என்று இந்த ஹதீஸில் சொல்லப்படுகிறது. அதாவது திங்கள் கிழமை என்பது மக்ரிபுக்கு முன் முடிந்து விட்டது. மக்ரிப் ஆனதும் செவ்வாய்க் கிழமை ஆரம்பித்து விட்டது என்று இந்த ஹதீஸ் தெள்ளத் தெளிவாக கூறுகிறது.

மற்றொரு செய்தியைப் பாருங்கள்!

سنن الدارمي

213 – أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ الْفَزَارِيِّ، عَنْ أَسْلَمَ الْمِنْقَرِيِّ، عَنْ بِلَادِ بْنِ عِصْمَةَ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ، وَكَانَ إِذَا كَانَ عَشِيَّةَ الْخَمِيسِ ليْلةِ الْجُمُعَةِ، قَامَ فَقَالَ: «إِنَّ أَصْدَقَ الْقَوْلِ قَوْلُ اللَّهِ عَزَّ وَجَلَّ وَإِنَّ أَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالشَّقِيُّ مَنْ شَقِيَ فِي بَطْنِ أُمِّهِ، وَإِنَّ شَرَّ الرَّوَايَا رَوَايَا الْكَذِبِ، وَشَرَّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلَّ مَا هُوَ آتٍ قَرِيبٌ»

[تعليق المحقق] إسناده جيد

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் வெள்ளிக் கிழமை இரவிற்குரிய வியாழன் மாலை ஆகும்போது எழுந்து "சொல்லில் மிக உண்மையான சொல் அல்லாஹ்வின் சொல்லாகும்….'' என்று கூறுவார்.

அறிவிப்பவர்: பிலாத் பின் இஸ்மா

நூல்: தாரமீ 209

வியாழன் மாலைக்குப் பின் வருவது வெள்ளிக்கிழமை இரவு என்று இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதாவது மக்ரிப் நேரம் வந்ததும் தான் தேதி மாறுகிறது. இது தான் நபித்தோழர்கள் காலத்து நடைமுறை என்று இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

ஆயிஷா (ரலி) கூறுவதைப் பாருங்கள்!

مصنف ابن أبي شيبة

5114 – حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «إِذَا أَدْرَكَتْكَ لَيْلَةُ الْجُمُعَةِ، فَلَا تَخْرُجْ حَتَّى تُصَلِّي الْجُمُعَةَ»

நீ வெள்ளிக்கிழமை இரவை அடைந்து விட்டால் ஜும்ஆத் தொழாமல் (பயணமாக) வெளியே செல்லாதே!

நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா 5114

காலையில் தான் நாள் ஆரம்பமாகிறது என்ற கருத்துப் படி வெள்ளிக்கிழமை இரவுக்குப் பின் வரக் கூடிய காலை நேரம் சனிக்கிழமையாக ஆகும். ஆனால் வெள்ளிக்கிழமை இரவுக்குப் பின் வரக் கூடிய பகலும் வெள்ளிக்கிழமையாக இருப்பதால் தான் ஜும்மா தொழாமல் பயணம் போகாதே என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்.

ஸுப்ஹ் நேரத்தில் நாள் ஆரம்பமாகவில்லை என்பதற்கு இந்தச் செய்தியும் ஆதாரமாக அமைந்துள்ளது.

இதுபோல் இன்றும் ஏராளமான சான்றுகள் மக்ரிப் தான் நாளின் துவக்கம் என்பதற்குச் சான்றாக உள்ளன.

பல அர்த்தம் கொண்ட நடுத்தொழுகை என்ற சொல்லை வைத்து, நாளின் துவக்கத்தை முடிவு செய்வதை விட கிழமையும், தேதியும் குறித்துப் பேசும் மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில் முடிவு செய்வதே சரியானதாகும்.

மேற்கண்ட ஆதாரங்களில் இரு ஆதாரங்களுக்கு மட்டும் தான் இவர்கள் பதில் அளித்துள்ளனர். அந்தப் பதிலும் தவறானது என்பதைப் பின்னர் விளக்குவோம். பல ஆதாரங்களைக் கொண்டு நிறுவிய ஒரு நிலைபாட்டை மறுப்பது என்றால் அந்த அனைத்து ஆதாரங்களுக்கும் பதில் சொல்ல வேண்டும். இரண்டே இரண்டுக்கு மட்டும் தான் பதில் கொடுக்கிறார்கள் என்றால் மற்ற ஆதாரங்களுக்கு அவர்களிடம் பதில் இல்லை என்பது உறுதியாகி விடுகிறது.

பலகீனமான ஹதீஸ்கள் என இவர்கள் தங்களது மறுப்பில் குறிப்பிட்டிருக்கும் செய்திகள் கீழ்க்காணும் இரு ஹதீஸ்கள் ஆகும்.

லைலத்துல் கத்ர் இரவு பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் யார் விளக்கம் கேட்பது என்று பேசிக் கொண்டோம். இது ரமலான் மாதம் 21ஆம் நாள் காலையில் நடந்தது நான் புறப்பட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மக்ரிப் தொழுகையில் பங்கு கொண்டேன். லைலத்துல் கத்ர் பற்றி கேட்டுவர என்னை பனூ ஸலமா கூட்டத்தினர் அனுப்பியதைத் தெரிவித்தேன். இது எத்தனையாவது இரவு என்று கேட்டனர். 22 ஆம் இரவு என்று நான் குறிப்பிட்டேன் இது தான் அந்த இரவு என்று கூறினார்கள். பின்னர் திரும்பி வந்து அடுத்த இரவும் எனக் கூறி 23 ஆம் இரவைக் குறிப்பிட்டனர்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரழி)

நூல்: அபூதாவூத் 1171

ஒவ்வொரு வியாழனின் மாலை வெள்ளி இரவன்று ஆதமுடைய மக்களின் அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக்காட்டப்படும். (அப்போது) குடும்ப உறவை முறித்தவனின் அமலை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூற்கள்: அஹ்மத்(9883), அல்அதபுல் முஃப்ரத்(61), ஷுஅபுல் ஈமான்(7966)

மேலே நாம் எத்தனை ஹதீஸ்களை எடுத்துக் காட்டியுள்ளோம். அவற்றைக் கண்டு கொள்ளாமல் பதில் சொல்லமல் அவற்றில் இரு ஹதீஸ்களை மட்டும் குறிப்பிட்டு பலவீனமானவை என்று பிரசுரத்தில் போட்டுள்ளனர். இவ்விரு ஹதீஸ்களும் பலவீனமானவை அல்ல; அதைப் பின்னர் விளக்கியுள்ளோம். பலவீனமானவை என்று வைத்துக் கொண்டாலும் இந்த இரண்டைத் தவிர மற்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு என்ன பதில்? ஒரு பதிலும் அந்தப் பிரசுரத்தில் இல்லை.

நாளின் துவக்கம் மக்ரிப் தான் என்பதற்கான ஆதாரங்களில் ஒன்றாக நாம் முன்வைத்த அபூதாவூத் 1174 ஹதீஸ் புகாரியிலும் பதிவாகியுள்ளது. அதை பலவீனமானது என்று சொல்லப் போகிறார்களா? அந்த ஹதீஸ் இதோ.

صحيح البخاري

2027 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الحَارِثِ التَّيْمِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَعْتَكِفُ فِي العَشْرِ الأَوْسَطِ مِنْ رَمَضَانَ، فَاعْتَكَفَ عَامًا، حَتَّى إِذَا كَانَ لَيْلَةَ إِحْدَى وَعِشْرِينَ، وَهِيَ اللَّيْلَةُ الَّتِي يَخْرُجُ مِنْ صَبِيحَتِهَا مِنَ اعْتِكَافِهِ، قَالَ: «مَنْ كَانَ اعْتَكَفَ مَعِي، فَلْيَعْتَكِفِ العَشْرَ الأَوَاخِرَ، وَقَدْ أُرِيتُ هَذِهِ اللَّيْلَةَ ثُمَّ أُنْسِيتُهَا، وَقَدْ رَأَيْتُنِي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ مِنْ صَبِيحَتِهَا، فَالْتَمِسُوهَا فِي العَشْرِ الأَوَاخِرِ، وَالتَمِسُوهَا فِي كُلِّ وِتْرٍ»، فَمَطَرَتِ السَّمَاءُ تِلْكَ اللَّيْلَةَ وَكَانَ المَسْجِدُ عَلَى عَرِيشٍ، فَوَكَفَ المَسْجِدُ، فَبَصُرَتْ عَيْنَايَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى جَبْهَتِهِ أَثَرُ المَاءِ وَالطِّينِ، مِنْ صُبْحِ إِحْدَى وَعِشْرِينَ

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளானில் நடுப்பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ஓர் ஆண்டு அவர்கள் இஃதிகாஃப் இருந்து இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும் – அந்த இரவின் காலையில் தான் இஃதிகாபிலிருந்து வெளியேறுவார்கள்- , யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் கடைசிப் பத்து நாட்களிலும் இஃதிகாஃப் இருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்கு (கனவில்) காட்டப்பட்டது; பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது! (அந்தக் கனவில்) காலை நேரத்தில் ஈரமான மண்ணில் நான் சஜ்தா செய்யக் கண்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாட்களில் தேடுங்கள். (அந்த நாட்களின்) ஒவ்வோர் ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடுங்கள்! எனக் கூறினார்கள். அன்றிரவு மழை பொழிந்தது. அன்றைய பள்ளிவாசல் (பேரீச்சை ஓலையால்) கூரை வேயப்பட்டதாக இருந்தது. எனவே பள்ளிவாசல் ஒழுகியது. இருபத்தொன்றாம் நாள் சுப்ஹுத் தொழுகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெற்றியில் ஈரமான களிமண் படிந்திருந்ததை எனது இரு கண்களும் பார்த்தன.

இந்த ஹதீஸ் நாளின் துவக்கம் எது மக்ரிப் தான் என்பதை தெளிவாகக் கூறுகிறது என்பதை முன்னர் விளக்கியுள்ளோம்.

இது தவிர, மேலும் பல சான்றுகளை நாம் எடுத்து வைத்திருந்தும் கூட அவற்றையெல்லாம் இந்தக் கூட்டம் கண்டுகொள்ளவேயில்லை.

வாதம் ஏழு

இவர்களது கீறல் விழுந்த கேள்விகளில் ஒன்று

பிறைச் செய்தியைச் சொல்வதற்கு மாலை வந்தடைந்த அந்த வாகனக் கூட்டம் நேற்று பிறை பார்த்தோம் என்று ஏன் கூறினார்கள்? நாளின் துவக்கம் பஜர் என்பதால் தானே

என்று கேள்வி கேட்கின்றனர்.

நமது பதில்:

மேலே நாம் அடுக்கியுள்ள சான்றுகள் எதுவும் இவர்களுக்கு ஒரு பொருட்டில்லையாம்! நேற்று என்று அந்த வாகனக் கூட்டம் சொன்னது தான் இவர்கள் கைவசம் உள்ள ஒரே சரக்காக உள்ளது.

இவ்வாதம் அரபி மொழியில் உள்ள சொல்லுக்குரிய சரியான பொருளை அறியாததால் வந்த வினையாகும்.

அவர்கள் நேற்று என்று மொழி பெயர்த்த இடத்தில் அரபி மூலத்தில் அம்ஸி என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

இதற்கு தமிழில் பரவலாக நேற்று என்று மொழிபெயர்க்கப்படுகிறது. இதனுடைய சரியான பொருள் என்ன?

இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், வானிலிருந்து நாம் இறக்கிய தண்ணீரைப் போன்றது. மனிதர்களும், கால்நடைகளும் உண்ணுகிற பூமியின் தாவரங்களுடன் அத்தண்ணீர் கலக்கிறது. முடிவில் பூமி அலங்காரம் பெற்று கவர்ச்சியாக ஆகிறது. அதன் உரிமையாளர்கள் அதன் மீது தமக்குச் சக்தியிருப்பதாக நினைக்கும் போது நமது கட்டளை இரவிலோ, பகலிலோ அதற்கு (பூமிக்கு) கிடைக்கிறது. உடனே நேற்று அவ்விடத்தில் இல்லாதிருந்தது போல் அறுக்கப்பட்டதாக அதை ஆக்கினோம். சிந்திக்கிற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம்.

திருக்குர்ஆன் 10:24

இவ்வசனத்தில் நேற்று என்று மொழிபெயர்த்த இடத்தில் அம்ஸி என்ற சொல்லே இடம் பெற்றுள்ளது. இதற்கு 24 மணி நேரத்திற்கு முந்திய நாள் என்று பொருள் அல்ல!

கடந்த நாட்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும். அதுவே இவ்விடத்தில் பொருத்தமாக அமையும். நேற்று என்ற தமிழ்ச் சொல் கடந்து விட்டவைகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுவது போலவே அரபி மொழியில் அம்ஸி என்பதும் பயன்படுத்தப்படுகிறது.

நேற்று எப்படி இருந்தான்? இன்று எப்படி இருக்கிறான்?' என்று தமிழ் வழக்கில் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். இந்த நேற்றுக்கு 24 மணி நேரத்திற்கு முந்திய நாள் என்று பொருளில்லை என்பதை நாம் அறிவோம்.

இதைப் போன்று அரபி மொழியில் அம்ஸி என்ற சொல் முந்தைய நாளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படும். பொதுவாகக் கடந்த காலத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த போன வருடங்களைக் கூட அம்ஸி என்று கூறலாம்.

இதன் அடிப்படையில் இரவில் பிறை பார்த்தவர்கள் ஒரு இரவைக் கடந்து வந்து கூறியுள்ளதால் அம்ஸி நேற்று என்று பயன்படுத்தியுள்ளனர்.

இங்கே இவர்களுக்கு சான்று எதுவும் இல்லை.

வாதம் எட்டு

அடுத்ததாக மற்றுமொரு ஹதீஸை பஜர் தான் நாளின் துவக்கம் என்பதற்கு சான்று எனக்கூறி வைத்துள்ளனர்.

அந்த ஹதீஸ் இதோ:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போல அடிக்க வேண்டாம். (ஏனெனில்,) பிறகு அதே நாளின் இறுதியில் (இரவில்) அவளுடனேயே (நாணமில்லாமல்) உறவுகொள்வீர்கள்.

நூல் : புகாரி 5204

இந்த ஹதீஸில் இரவை அந்த நாளின் இறுதி என்று சொல்லப்பட்டிருப்பதால் ஒரு நாளின் துவக்கம் பஜர் தான் என்று வாதிடுகின்றனர்.

நமது பதில்

இதுவும் நுனிப்புல் மேய்வதால் கிடைத்திருக்கும் முடிவே!

இந்தச் செய்தி நாளின் ஆரம்பம் ஃபஜ்ர் என்பதற்கு ஆதாரமாகாது. இங்கே இறுதி என்று கூறப்படுவது இஷாத் தொழுகைக்குப் பிறகு படுக்கைக்குச் செல்லும் நேரம் தான். வேண்டுமானால் இரவு பத்து மணிக்குப் பிறகு 11 மணிக்கு நாளின் துவக்கம் என்று தான் இவர்கள் கூறவேண்டும்.

இங்கே இறுதி என்று கூறப்படுவதின் உண்மையான பொருள் ஒரு மனிதன் கண்விழித்ததிலிருந்து அவன் இறுதியாக தூங்கச் செல்லும் நேரம் என்ற கருத்தில் தான்.

ஒரு பள்ளிக் கூடம் காலை எட்டு மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிக்கு முடிகிறதென்றால் கடைசி வகுப்பை அந்த நாளின் இறுதி வகுப்பு என்று கூறுவார்கள். இதனால் மாலை ஐந்து மணி தான் நாளின் கடைசி என்றாகி விடாது.

ஜனவரி மாதம் தான் வருடம் ஆரம்பமாகிறது என்று நாம் அறிவோம். ஆனால் பள்ளிக்கூடத்தில் பாட நாட்கள் மார்ச் மாதத்தில் முடிவடையும் போது அதனை வருடத்தின் கடைசி நாள் என்பார்கள்.

மார்ச் என்பது வருடத்திற்கே கடைசி அல்ல. மாறாக அந்தப் பள்ளியின் ஆரம்பப் பாட நாட்களைக் கவனிக்கும் போது அது கடைசியாக இருக்கும்.

அது போன்று இங்கு ஒரு மனிதன் விழிப்பது அவனுக்கு ஆரம்பம், அவன் மீண்டும் படுக்கைக்குச் செல்வது அவனுக்குக் கடைசி. இதன் அடிப்படையில் தான் இங்கே நாளின் கடைசி என்று கூறப்பட்டுள்ளது.

இதே ஹதீஸ் அஹ்மதில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.

مسند أحمد بن حنبل

16269 – حدثنا عبد الله حدثني أبي ثنا سفيان بن عيينة عن هشام عن أبيه عن عبد الله بن زمعة وعظهم في النساء وقال : علام يضرب أحدكم امرأته ضرب العبد ثم يضاجعها من آخر الليل

 تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح على شرط الشيخين

உங்களில் ஒருவர் தன்னுடைய மனைவியை அடிமையை அடிப்பதைப் போன்று எதற்காக அடிக்க வேண்டும். பிறகு இரவின் கடைசியில் அவளுடனேயே உறவு கொள்வீர்கள்.

நூல் :  அஹ்மத்

இரவின் கடைசி ஃபஜ்ர் வரை உள்ளது என்பது தான் சரியானது. ஆனால் இங்கே இரவில் தூங்கச் செல்லும் நேரத்தை இரவின் கடைசி என்று கூறப்பட்டுள்ளது.

இதிலிருந்தே இந்த ஹதீஸில் நாளின் துவக்கத்தைப் பற்றிக் கூறப்படவில்லை. மாறாக ஒரு மனிதன் தூங்கச் செல்லும் கடைசி நேரத்தைப் பற்றிக் கூறப்படுகிறது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இதே செய்தி பின்வருமாறும் இடம் பெற்றுள்ளது.

مسند أحمد بن حنبل

16266 – قال حدثنا عبد الله حدثني أبي ثنا وكيع عن هشام عن أبيه عن عبد الله بن زمعة قال : سمعت النبي صلى الله عليه و سلم يذكر النساء فوعظ فيهن وقال علام يضرب أحدكم امرأته ولعله ان يضاجعها من آخر النهار أو آخر الليل

قال تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح على شرط الشيخين

உங்களில் ஒருவர் தன்னுடைய மனைவியை அடிமையை அடிப்பதைப் போன்று எதற்காக அடிக்க வேண்டும். பிறகு பகலின் கடைசியில் அல்லது இரவின் கடைசியில் அவளுடனேயே உறவு கொள்வீர்கள்.

நூல் : அஹ்மத் 16266

பகலின் கடைசி, அல்லது இரவின் கடைசி என்று இதில் கூறப்பட்டுள்ளது. பகல் இரவு ஆகியவற்றில் எது முதலாவது என்பது கூறப்படவில்லை. எனவே இந்தச் செய்தி நாளின் ஆரம்பம் ஃபஜ்ர் என்பதற்கு ஒரு போதும் ஆதாரம் ஆகாது.

வாதம் ஒன்பது

அடுத்ததாக, 17:12 இறை வசனமும் நாளின் துவக்கம் பஜ்ர் என்று சான்று பகர்கிறது என்று கூறி, தங்கள் தரப்பிலும் ஆதாரங்கள் வைக்கத்தான் செய்கிறோம் என்று காட்ட முயற்சிக்கிறது இந்த கூட்டம்.

நமது பதில்

இவர்கள் நிஜமாகவே சுய அறிவுடன் தான் இதை எழுதுகிறார்களா என்று நாம் சந்தேகம் கொள்கிறோம்.

இவர்கள் சுட்டிக்காட்டும் வசனத்திற்கும் நாளின் துவக்கத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா?

இரவையும், பகலையும் இரண்டு சான்றுகளாக்கினோம். உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடவும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் இரவின் சான்றை ஒளியிழக்கச் செய்து பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம். ஒவ்வொரு பொருளையும் நன்கு தெளிவு படுத்தியுள்ளோம்.

திருக்குர்ஆன் 17:12

இதுதான் இவர்கள் சுட்டிக்காட்டும் வசனம்.

இரவின் சான்றைக் குறைத்து பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம் என்று இதில் சொல்லப்படுகிறது. ஆகவே ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் அறிவதற்கு பகலின் சான்றை வெளிச்சமாக்கியதாக அல்லாஹ் சொல்வதிலிருந்து பகல் தான் நாளின் துவக்கம் என்று இவர்களது ஏழாவது அறிவுக்கு எட்டுகிறதாம்.

அதை விட, தங்களது இந்த மலட்டு சிந்தனை எப்படி தோன்றியது என்பதை விளக்க, அல்லாஹ்வின் மீதே பொய் கூறி இட்டுக் கட்டுகின்றனர் என்பதே இங்குள்ள உச்சகட்ட ஹைலைட்.

அதாவது, ஆண்டுகளின் எண்ணிக்கையையும் காலக் கணக்கையும் அறிய வேண்டும் என்று அல்லாஹ் கூறி விட்டான்.

அல்லாஹ் இப்படி மொட்டையாகச் சொல்வானா? ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் அறிய வேண்டும் என்றால் எப்படி அறிவது என்பதையும் அல்லாஹ் சொல்வான். அது தான் பகலிலிருந்து கணக்கை துவங்குவது. அதனால் தான் பகலின் அத்தாட்சியை வெளிச்சமாக்கினோம் என்கிறான்.

என்று அல்லாஹ் சொல்லாத செய்திகளை இவர்களாகத் திணித்து அல்லாஹ்வின் மீதே பொய்யுரைக்கிறார்கள் என்றால் தங்களது நிலையை நியாயப்படுத்த எத்தகைய தகுதிக்கும் இறங்குவார்கள் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகவில்லையா?

நாளின் துவக்கத்தைச் சொல்வதற்கா அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கியுள்ளான்?

காலக் கணக்கை அறிவதற்கு சூரியனை அல்லாஹ் படைத்திருக்கிறான் என்கிற விஷயத்தைச் சொல்வதற்கு இறக்கப்பட்ட வசனம் தான் இது.

ஆகவே தான் பகலைத் தந்திருக்கிறேன் என்று சொல்லாமல் பகலின் சான்றைத் தந்திருக்கிறேன் என்கிறான். பகலின் சான்று என்பது சூரியன் ஆகும். சூரியனைப் பிரகாசமாக்கியதன் மூலம் வியாபாரம், இன்னபிற தொழில்கள் என அல்லாஹ்வின் அருளைத் தேடிச் செல்லலாம், அத்துடன் காலத்தையும் அறிந்து கொள்ளலாம்.

இந்தக் கருத்து தான் இவ்வசனத்திலிருந்து கிடைக்குமே தவிர, பகல் தான் முதன்மை என்பதற்கோ, ஃபஜர் தான் ஆரம்பம் என்பதற்கோ இவ்விடம் எந்த சான்றுமில்லை.

இவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு எழுதிய 24 பக்க நோட்டீசில், நாளின் துவக்கம் ஃபஜ்ர் தான் என்பதற்கு சான்றாக இவர்கள் வைத்த ஆதாரங்கள் மேலே உள்ள மூன்று தான். அந்த மூன்றின் லட்சணத்தை நாம் பார்த்து விட்டோம்.

அது போல், நமது நிலைபாடான மக்ரிப் தான் நாளின் துவக்கம் என்கிற கருத்தை முறியடிக்கிறேன் பேர்வழி என்று புகுந்த இவர்கள், இரண்டு செய்திகளை பலகீனம் என்று அறிவிப்பு செய்து செய்து விட்டு, நாம் அடுக்கிய ஏனைய சான்றுகள் குறித்து வாய் திறக்காத அவலநிலையையும் நாம் கண்டோம்.

வாதம் பத்து

நாளின் துவக்கம் தொடர்பாக நாம் வைத்த ஹதீஸில் லைல் என்பதற்கு இரவு என்று மொழியாக்கம் செய்திருந்தோம். இதை விமர்சனம் செய்த இந்தக் கூட்டம், லைல் என்றால் நாள் என்றல்லவா பல ஹதீஸ்களில் அர்த்தம் உள்ளது, நீங்கள் ஏன் இரவு என்று மொழியாக்கம் செய்துள்ளீர்கள் ? என்று கேட்டுள்ளனர்.

நமது பதில்:

எந்த அரபி மொழி அகராதியிலும் லைல் என்ற சொல் நாள் என்ற பொருளில் பயன்படுத்தப்படவில்லை.

லைல் என்ற சொல்லுக்கு நாள் என்று பொருள் இருப்பதாகக் கூறுவது அறியாமை ஆகும்.

لمعجم الوسيط

( الليل ) ما يعقب النهار من الظلام وهو من مغرب الشمس إلى طلوعها وفي لسان الشرع من مغربها إلى طلوع الفجر ويقابل النهار

லைல் என்பது பகலைத் தொடர்ந்து வரும் இருள் ஆகும். லைல் என்பது சூரியன் மறைந்ததிலிருந்து அது உதிக்கும் வரை ஆகும். ஷரியத்தின் மொழி வழக்கிலே சூரியன் மறைந்ததிலிருந்து ஃபஜ்ர் உதயமாகும் வரை ஆகும். லைல் (இரவு) என்பது நஹார் (பகல்) என்பதற்கு எதிர்ச் சொல் ஆகும்.

நூல் அல் முஃஜமுல் வஸீத் பாகம் 2 பக்கம் 619

நான் இரண்டு இரவுகளாகத் தூங்கவில்லை என்று ஒருவர் கூறுகிறார் என வைத்துக் கொள்வோம்.

இந்த வாசகத்தின் பொருள் இரண்டு இரவுகள் அவர் தூங்கவில்லை என்பதுதான்.

இரண்டு இரவுகள் என்பது தொடர்ச்சியாக வராது. ஒரு இரவிற்கு அடுத்து ஒரு பகல் அடுத்துதான் மற்றொரு இரவு வரும்.

இதன் அடிப்படையில் அதில் நாள் என்ற கருத்து அடங்கியுள்ளது என்று கூறலாம். அதாவது இரண்டு நாட்களுக்குரிய இரண்டு இரவுகளில் அவர் தூங்கவில்லை என்பது தான் அதன் பொருள். மாறாக லைல் என்பதற்கு நாள் என்று பொருள் இருப்பதாகக் கூறுவது முட்டாள் தனமாகும்.

உதரணமாக ஒருவர் நான் நெல்லையிலிருந்து சென்னை வரை சென்றேன் எனக் கூறுகிறார். நெல்லையிலிருந்து சென்னை வரை செல்லும் போது அவர் தாம்பரத்தைத் தாண்டித்தான் செல்ல முடியும். எனவே நெல்லையிலிருந்து சென்னை வரை சென்றேன் என்ற வாசகத்தில் தாம்பரமும் உள்ளடங்கியுள்ளது என்று தான் விளங்கிக் கொள்ள முடியும். மாறாக சென்னை என்ற வார்த்தைக்கே ஒருவர் தாம்பரம் என்று தான் பொருள் என ஒருவர் கூறினால் அது முட்டாள்தனமானதாகும்.

அது போன்று தான் மூஸா நபிக்கு அல்லாஹ் நாற்பது இரவுகளை வாக்களித்தான் என்றால் நாற்பது இரவு என்பது தொடர்ச்சியாக வராது. ஒவ்வொரு இரவும் ஒரு பகலைத் தாண்டித்தான் வரும் என்ற அடிப்படையில் இதில் நாற்பது நாள் அடங்கியுள்ளது.

அதாவது நாற்பது நாட்களில் அடங்கியுள்ள நாற்பது இரவுகளை அல்லாஹ் வாக்களித்தான் என்று கூறலாமே தவிர இரவு என்பதின் பொருளே நாள் என்பது தவறானதாகும்.

மேலும் மூஸா நபிக்கு அல்லாஹ் நாற்பது இரவுகளை வாக்களித்தான் என்ற வாசகத்தின் மூலம் மூஸா நபிக்கும், இறைவனுக்கும் உள்ள சம்பாசனைகள் இரவில் தான் நடந்ததே தவிர பகலில் நடந்தது என்ற பொருள் வராது.

ஒருவர் நான் நாற்பது இரவுகள் வேலை பார்த்தேன் என்று சொன்னால் அவர் பகலில் வேலை பார்க்கவில்லை என்பது தான் உண்மை. அதே நேரத்தில் நாற்பது இரவுகள் என்று சொல்வதிலிருந்து அதில் ஒவ்வொரு இரவிற்குரிய பகலும் உள்ளடங்கியிருப்பதால் நாற்பது நாட்களிலுள்ள நாற்பது இரவுகள் என்று தான் விளங்கிக் கொள்ள வேண்டுமே தவிர இரவு என்பதற்கு நாள் என்ற பொருள் உள்ளதாகக் கூறுவது தவறானதாகும்.

லைலத் என்பதற்கு நாள் என்று பொருள் செய்தால் பின்வரும் வசனங்களின் பொருளே தலைகீழாக புரண்டு விடும்.

நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

திருக்குர்ஆன் 2:187

இங்கே லைலத் என்பதற்கு பகல் என பொருள் செய்தால் நோன்பின் பகல் காலங்களில் மனைவியுடன் கூடுவது அனுமதிக்கப்பட்டுள்ளது என்று பொருள் வரும். நாள் என்று பொருள் கொண்டால் நோன்பு வைத்துக் கொண்டு பகலிலும் இரவிலும் நாள் முழுவதும் மனைவியுடன் கூடலாம்  என்ற பொருள் வரும். அப்படித்தான் இந்த அமாவாசைக் கூட்டம் சொல்லப் போகிறதா?

صحيح البخاري

1124 – حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَسْوَدِ، قَالَ: سَمِعْتُ جُنْدَبًا، يَقُولُ: «اشْتَكَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَقُمْ لَيْلَةً أَوْ لَيْلَتَيْنِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது ஓர் இரவோ, அல்லது இரண்டு இரவுகளோ (தொழுகைக்காக) அவர்கள் எழவில்லை.

அறிவிப்பவர் : ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல் : புகாரி 1124

இங்கே லைலத் என்பதற்கு நாள் எனப் பொருள் செய்தால் நபியவர்கள் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் தொழுகைக்கு எழவில்லை என்ற பாரதூரமான கருத்து வரும்.

صحيح البخاري

1678 – حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي يَزِيدَ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ: «أَنَا مِمَّنْ قَدَّمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ المُزْدَلِفَةِ فِي ضَعَفَةِ أَهْلِهِ»

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்திலுள்ள பலவீனர்களை முஸ்தலிஃபாவில் தங்கும் இரவில் (மினாவுக்கு) முன் கூட்டியே அனுப்பி வைத்தார்கள். அப்படி அவர்கள் அனுப்பி வைத்தவர்களில் நானும் ஒருவன்.

நூல் : புகாரி 1678

இங்கே முஸ்தலிஃபா இரவு என்பதற்கு முஸ்தலிஃபா நாள் என்று பொருள் செய்தால் ஹஜ்ஜின் வணக்கமே தலைகீழாகிவிடும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

صحيح البخاري

35 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَقُمْ لَيْلَةَ القَدْرِ، إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»

எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 35

இங்கே லைலத் என்பதற்கு நாள் எனப் பொருள் செய்தால் ரமலான் மாதம் பகலிலும் நின்று தொழலாம் என்று வரும். இது நபியவர்களின் நடைமுறைக்கு எதிரானதாகும்.

صحيح البخاري

465 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، قَالَ: حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ «أَنَّ رَجُلَيْنِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَا مِنْ عِنْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي لَيْلَةٍ مُظْلِمَةٍ، وَمَعَهُمَا مِثْلُ المِصْبَاحَيْنِ يُضِيئَانِ بَيْنَ أَيْدِيهِمَا، فَلَمَّا افْتَرَقَا صَارَ مَعَ كُلِّ وَاحِدٍ، مِنْهُمَا وَاحِدٌ حَتَّى أَتَى أَهْلَهُ»

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களில் இருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து இருள் கப்பிய ஓர் இரவில் நடந்துசென்றனர். அவ்விருவருடனும் இரு விளக்குகளைப் போன்றவை அவர்களுக்கு முன்னால் ஒளி வீசிச் சென்றன. அவர்கள் (வழியில்) பிரிந்து சென்றபோது, அவர்கள் தம் வீட்டாரிடம் போய்ச் சேரும் வரை ஒவ்வொருவருடனும் ஓர் ஒளி (மற்றறொன்றை விட்டுப் பிரிந்து அவர்களுடன்) சென்றது.

நூல் : புகாரி  465

இங்கே லைலத் என்பதற்கு நாள் என்று பொருள் செய்தால் இருள் கப்பிய நாள் என்று ஆகும். பகலிலும் இருள் இருந்ததாக ஆகும்.

ஆக, லைல் என்பதன் நேரடி அர்த்தம் இரவு தானே தவிர இவர்கள் கூறுவது போல் பகல் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது.

வாதம் பதினொன்று

இவர்களது அழுகிப்போன கேள்விப் பட்டியலில் அடுத்ததாக வருவது,

சவூதிக்கும், இந்தியாவுக்கும் 2 1/2 மணி நேர வேறுபாடு இருக்கும் போது பிறைக் கணக்கில் மட்டும் 21 1/2 மணி நேர வேறுபாடு எப்படி வந்தது? என்கிற கேள்வி.

நமது பதில்

அவர்கள் பிறை பார்த்ததன் அடிப்படையில் அவர்களுக்கு மாதம் துவங்கியது, நாம் பிறை பார்த்ததன் மூலம் நமக்கு மாதம் துவங்கியது, பிறை பார்க்க வேண்டும் என்கிற ஹதீஸைச் செயல்படுத்தினால் இந்த வேறுபாடு வரத் தான் செய்யும்.

சவூதியில் பிறை தென்படும் போது இந்தியாவில் பிறை தென்படவும் செய்யலாம், தென்படாமலும் போகலாம். தென்படாமல் போகுமேயானால் அதே பிறையானது மறுநாள் மக்ரிபின் போது நமக்குத் தென்படும். அந்த வகையில் வேறுபாடு வரத்தான் செய்யும்.

ஒருவர் அடைந்து மற்றவர் அடையாமல் இருப்பாரா? அது எப்படி? என்று அறிவியல் அறிவு வளராத காலத்தில் கேட்கலாம். உலகம் தட்டை என்று எண்ணிக் கொண்டிருந்த காலத்தில் இவ்வாறு கேட்கலாம். இன்றைக்குக் கேட்க முடியாது.

ஏனெனில் உலக மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அல்லது ஒரே நாளில் ரமளானை அடைவதில்லை.

பிறையைப் பார்த்து மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.

(பார்க்க: புகாரி 1906, 1909)

வானில் பிறை தோன்றி அதைக் கண்ணால் பார்க்கும்போது முதல் பிறை என்கிறோம். பிறை கண்ணுக்குத் தெரிவதற்குப் பல்வேறு அம்சங்கள் ஒருங்கிணைய வேண்டும்.

பிறை பிறந்து குறைந்தது 15 முதல் 20 மணி நேரமாவது ஆகியிருக்க வேண்டும். இதற்குக் குறைவான நேரம் கொண்ட பிறையைக் கண்களால் காண முடியாது.

சூரியன் மறைந்த பிறகு பிறை மறைய வேண்டும். சூரியன் மறைவதற்கு முன் பிறை மறைந்து விட்டால், பிறை வானில் இருந்தாலும் அதைக் காண முடியாமல் சூரிய ஒளி தடுத்து விடும்.

மேகம் இல்லாமல் வானம் தெளிவாக இருக்க வேண்டும். மெல்லிய மேகம் கூட தலைப்பிறையை மறைத்து விடும்.

சூரியன் மறைந்து சுமார் 20 – 30 நிமிடங்கள் கழித்து பிறை மறைய வேண்டும். ஏனெனில் சூரியன் மறைந்து அதன் ஒளி அடிவானத்தில் இருந்தால் அந்த வெளிச்சத்தை மீறி பிறை நம் கண்களுக்குத் தென்படாது.

பார்ப்பவரின் கண்கள் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிறிய வெண்மேகத்தைக் கூட அவர் பிறை என்று கருதி விடுவார்.

இது போன்ற பல காரணங்கள் ஒருங்கே அமைந்திருந்தால் மட்டுமே தலைப்பிறையைக் காண முடியும்.

ஒரு ஊரைச் சேர்ந்தவர்கள் பிறையின் வயது 14 மணியாக இருக்கும் போது சூரியன் மறையும் நேரத்தை அடைகிறார்கள். இவர்களின் ஊருக்கு நேராக பிறை இருந்தாலும் உரிய நேரத்தை அப்பிறை அடையாததால் அது இவர்களின் கண்களுக்குத் தென்படாது.

உதாரணமாக சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் சூரியன் மறையும் நேரத்தை அடையும்போது பிறையின் வயது 14 மணியாக இருந்தால் அது அவர்களின் கண்களுக்குத் தென்படாது.

சென்னையை விட சிங்கப்பூர் இரண்டரை மணி நேரம் முந்தி உள்ளது. எனவே சென்னைவாசிகள் இரண்டரை மணி நேரம் கழித்தே சூரியன் மறையும் நேரத்தை அடைவார்கள். இந்த இரண்டரை மணி நேரத்தில் பிறையின் வயதும் இரண்டரை மணி நேரம் அதிகமாகி விடும். 14+2.30=16.30 மணி வயதை பிறை அடைந்து விடும். இது கண்ணால் காண்பதற்குரிய அளவாகும்.

சூரியன் மறைந்தவுடன் மாலை ஆறு மணிக்கு நாம் சென்னையில் தலைப் பிறையைப் பார்க்கிறோம். இவ்வாறு நாம் பிறை பார்க்கும் நேரத்தில் சிங்கப்பூரில் இரவு சுமார் எட்டரை மணியாக இருக்கும்.

நாம் பிறை பார்த்து விட்டதால் நாம் ரமளானை அடைந்து விட்டோம். சிங்கப்பூர்வாசிகள் பிறை பார்க்காமலே பிறை பார்க்கும் நேரத்தைக் கடந்ததால் அவர்கள் ரமளானை அடையவில்லை. மறுநாள் தான் அவர்கள் பிறையைப் பார்க்க முடியும். எனவே மறுநாள் தான் அவர்கள் ரமளானை அடைகிறார்கள். இப்படி இரண்டு ஊரைச் சேர்ந்தவர்களும் இரு வேறு நாட்களில் ரமலானை அடைகிறார்கள்.

யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும் என்ற 2:185 வசனம் இதைத் தான் கூறுகிறது.

சென்னையில் பிறை பார்த்ததால் சிங்கப்பூருக்கும், ஏன் உலக முழுமைக்கும் ரமளான் பிறந்து விட்டது என்று யாரேனும் வாதிட்டால் அவர்கள் இவ்வசனத்தின் கருத்தை நிராகரித்தவர்களாகிறார்கள்.

ஏனெனில் இந்தக் கருத்துப்படி அனைவரும் ஒரு நேரத்தில் ரமளானை அடைந்து விட்டனர் என்று ஆகிறது. யார் அடைகிறாரோ என்ற அல்லாஹ்வின் வார்த்தை அர்த்தமற்றதாக ஆக்கப்படுகிறது.

உலகின் ஒரு பகுதியில் பிறை காணப்பட்டால் முழு உலகுக்கும் ரமளான் வந்து விட்டது என்ற வாதத்தை இவ்வசனம் அடியோடு நிராகரிக்கிறது.

உலகின் ஒரு பகுதியில் பிறை காணப்பட்ட தகவல் கிடைத்தால் முழு உலகுக்கும் ரமளான் வந்து விட்டது என்ற வாதத்தையும் இவ்வசனம் அடியோடு நிராகரிக்கிறது.

உலகின் ஏதோ ஒரு பகுதியில் பிறை இன்று தோன்றும் என்று கணிக்கப்படுகிறது. அவ்வாறு கணிக்கப்பட்டால் அது அப்பகுதியில் மட்டுமின்றி அகில உலகுக்கும் தலைப்பிறையாகும் என்ற வாதத்தையும் இவ்வசனம் அடியோடு நிராகரிக்கின்றது.

எல்லோரும் ஒரே நேரத்தில் மாதத்தை அடைய மாட்டார்கள் என்பது திருக்குர்ஆன் கருத்து.

இவ்வசனம் தலைப்பிறையை எவ்வாறு தீர்மானிக்க வேண்டும் என்பதைக் கூறாவிட்டாலும் 'எவ்வாறு தீர்மானிக்கக் கூடாது' என்பதைக் கூறுகிறது. உலகம் முழுவதும் ஒரே பெருநாள் என்ற கருத்து ஏற்புடையதல்ல என்றும் பிரகடனம் செய்கிறது.

வாதம் பன்னிரண்டு

அப்படியே வேறுபாடு என்றாலும் நேர வித்தியாசம் தானே ஏற்பட வேண்டும், ஒரு நாள் எப்படி மாறுபடும்? என்றும் அப்பிரசுரத்தில் கேட்டுள்ளனர்.

நமது பதில்

இதற்கு, குறைப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்ற சிரியா – மதினா தொடர்பான ஹதீஸே இவர்களுக்குப் பதிலாகும். சிரியாவில் வெள்ளிக்கிழமை மாதம் துவங்கியதையும், மதினாவில் சனிக்கிழமை தான் துவங்கியது என்பதையும் அந்த ஹதீஸிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

முக்கியமாக, இந்த வேறுபாடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்த வேறுபாடு தான் எனவும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கியதிலிருந்து மாதம் பிறப்பதில் நாள் வேறுபாடு ஏற்படுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

வாதம் பதிமூன்று

சூரியனைக் கணக்கிட்டு முடிவு செய்யும் நீங்கள் சந்திரனை மட்டும் கணக்கிட மாட்டீர்களோ? என்பது இவர்களது அடுத்த கேள்வி.

நமது பதில்

சூரியன் விஷயத்தில் கணிப்பை ஏற்றுக் கொள்ளும் நாம் சந்திரன் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வேறுபடுத்திக் கூறுவது சரி தான். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறையைப் பார்த்துத் தான் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்று கூறி விட்டார்கள்.

சூரியன் மறைந்தவுடன் மக்ரிப் தொழ வேண்டும் என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையாகும். சூரியன் மறைந்தது என்பதை எப்படித் தீர்மானிக்க வேண்டும் என்பது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த உத்தரவையும் இடவில்லை.

மேக மூட்டமான நாட்களில் சூரியன் தென்படாத பல சந்தர்ப்பங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வந்ததுண்டு. அது போன்ற நாட்களில் சூரியன் மறைவதைக் கண்டால் மக்ரிப் தொழுங்கள். இல்லாவிட்டால் அஸர் நேரம் என்றே அதைக் கருதிக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. அது போல் சூரியன் மறைவதைக் கண்ணால் கண்ட பின் தான் நோன்பு துறக்க வேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்கள் துஆச் செய்தவுடன் மழை பெய்ய ஆரம்பித்து ஆறு நாட்கள் நாங்கள் சூரியனையே பார்க்கவில்லை என்று புகாரியில் ஹதீஸ் உள்ளது.

(பார்க்க: புகாரி 1013, 1014)

ஆறு நாட்களும் சூரியனையோ, அது உதிப்பதையோ, மறைவதையோ பார்க்க முடியவில்லை. இந்த ஆறு நாட்களும் கணித்துத் தான் தொழுதிருக்க முடியும். அனேகமாக சூரியன் மறைந்திருக்கும் என்று கருதும் நேரத்தில் தான் மக்ரிப் தொழதிருக்க முடியும்.

மேகம் சூரியனை மறைத்தது போல் சந்திரனையும் மறைக்கிறது. சந்திரன் மறைக்கப்படும் போது எப்படியாவது கணித்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறவில்லை. பிறை தெரியாததால் மேகத்தின் உள்ளே பிறை இருந்தாலும் அது முப்பதாம் நாள் தான். முதல் நாள் அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விட்டனர்.

சூரியனை மேகம் மறைத்த போது கணித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்திரனை மேகம் மறைத்த போது கணிக்கக் கூடாது. அது முப்பதாம் நாள் தான் என்று தெளிவாகப் பிரகடனம் செய்து விட்டனர். எனவே தொழுகைக்கும் நோன்புக்கும் ஒரே மாதிரியான அளவு கோல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

வாதம் பதினான்கு

தொடர்ந்து, சூரியன் விஷயமாக தொழுகை நேரங்களை முடிவு செய்ய நிழலை வைத்து அறிந்து கொண்டார்கள். இப்போது ஏன் முன்கூட்டியே கணக்கிட்டு வைத்திருக்கிறீர்கள்? என்று அடுத்த பழைய சரக்கொன்றை கேள்வியாக வடித்துள்ளனர்.

நமது பதில்

முன்னர் சொன்ன பதிலில் இதற்கும் விடை உள்ளது. சூரியன் விஷயமாகக் கணிக்கலாம் என்று அனுமதி இருப்பதால் கணிப்பது பற்றி கேள்வி கேட்க முடியாது. சந்திரனைப் பார்த்துத் தான் பிறயை முடிவு செய்ய வேண்டும் என்பதால் அதைக் கணித்து முடிவு செய்யக் கூடாது.

பிறை பற்றி சொல்லப்படும் எந்தச் செய்தியிலும் பிறை உதித்தால் இதைச் செய்யுங்கள் என்று சொல்லப்படவில்லை, பிறையைக் கண்டால் இதைச் செய்யுங்கள் என்று மட்டும் தான் உள்ளது.

பிறை உதித்தால் இதைச் செய்யுங்கள் என்று சொல்வதற்கும் பிறையைப் பார்த்தால் இதைச் செய்யுங்கள் என்பதற்கும் வேறுபாடு உண்டு.

வாதம் பதினைந்து

அடுத்ததாக, தங்களது கணிப்பு சித்தாந்தம் தான் சரி என்பதை நிலைநாட்டுவதற்காக எத்தகைய தகுதிக்கும் இவர்கள் இறங்குவார்கள் என்று முன்னரே நாம் சொல்லியிருந்ததை மெய்ப்பிக்கும் வகையில் இவர்கள் வைக்கும் அடுத்த வாதமானது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தவறு செய்திருப்பதாகவும் அவர்களை விட நாங்கள் தான் சரியாக நடக்கிறோம் என்றும் கூறுகிற இவர்களது அறிவிப்பு!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூரியன் தென்படாத நேரத்தில் கணித்து நேரத்தை முடிவு செய்தார்கள் என்று இவர்களே நம் சார்பாக சான்று ஒன்றை காட்டியுள்ளார்கள் என்று சொன்னோமே, அந்த சான்றைக் காட்டி விட்டு இவர்கள் அதிலிருந்து வைக்கும் வாதம் என்ன தெரியுமா?

அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மேகம் சூழ்ந்த ஒரு நாளில் நாங்கள் நோன்பை நிறைவு செய்த பின்னர் சூரியன் தென்பட்டது.

பார்க்க : புகாரி 1959

முன்கூட்டியே கணித்துக் கொள்ளும் வசதி கொண்ட இந்தக் காலத்தில் இப்படியொரு நிலை ஏற்படுமா? எனக் கேட்கிறார்கள்.

நமது பதில்

முன்கூட்டியே கணித்துக் கொள்ளும் வசதி கொண்ட இந்தக் காலத்தில் இப்படியொரு நிலை ஏற்படுமா? எனக் கேட்கிறார்கள். ஏற்படாது தான்.

நபிகள் நாயகம் காலத்தில் சூரியனை எவ்வாறு கணிப்பது அவர்களுக்கு இயன்றதாக இருந்ததோ அவ்வாறு அவர்கள் கணித்தார்கள். இன்று எது நமக்கு இயலுமோ அதை நாம் செய்யலாம்.

அதே சமயம், பிறையை இயன்ற அளவிற்குக் கூட நபியவர்கள் கணிக்கவில்லை, நாமும் இயன்ற அளவிற்குக் கூட கணிக்கக் கூடாது.

குர்ஆன் இது பற்றி என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.

சூரியன் விஷயமாக பல்வேறு வழிமுறைகள் உள்ளன என்று ஹதீஸ்கள் இருந்தாலும், குர்ஆனில் சூரியனைக் கணிப்பது கட்டாயம் என்று சொல்லப்பட்டுள்ளது.

(முஹம்மதே!) நீரும், உம்முடன் உள்ள ஒரு தொகையினரும் இரவில் மூன்றில் இரு பகுதிக்கு நெருக்கமாகவும், இரவில் பாதியும், இரவில் மூன்றில் ஒரு பகுதியும் நின்று வணங்குகின்றீர்கள்' என்பதை உமது இறைவன் அறிவான். அல்லாஹ்வே இரவையும், பகலையும் அளவுடன் அமைத்துள்ளான். நீங்கள் அதைச் சரியாகக் கணிக்க மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிவான். எனவே அவன் உங்களை மன்னித்தான்.

திருக்குர்ஆன் 73:20

இந்த வசனத்தில் நேரத்தைத் துல்லியமாக அறிந்து கொள்ள இயலாத நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்தார்கள் எனவும், அது தவறு எனவும், அதைத் துல்லியமாக்க் கணிக்க அவர்களால் இயலாது என்பதால் அவர்களை தான் மன்னித்ததாகவும் அல்லாஹ் சொல்கிறான்.

துல்லியமாகக் கணிக்காமல் இருப்பது தவறு என்றும், அது இயலாது என்பதால் அல்லாஹ் மன்னித்தான் எனவும் அல்லாஹ் சொன்னால், அதை துல்லியமாக அறிவதற்குரிய ஆற்றலைப் பெற்றவர்கள் அவ்வாறு கட்டாயம் செய்ய வேண்டும் என்று பொருள்.

ஆக, இறை வசனங்களின் அடிப்படையில் நாம் சிந்திக்கையில், சூரியனை இன்றைய காலகட்டத்தில் கணித்து, துல்லியமான முறையில் நேரத்தைக் கணிக்க வேண்டும் என்று புரிகிறோம்.

இத்தகைய விதி எதுவும் பிறை விஷயமாக குர்ஆனிலோ, ஹதீஸிலோ சொல்லப்படவில்லை எனும் போது, இப்போதும், சூரியனை ஏன் கணிக்கிறீர்கள், அது போல பிறையை ஏன் கணிப்பதில்லை என்கிற பாமரத்தனமான கேள்விகள் அர்த்தமற்றதாகின்றன.

குர்ஆன், சூரியனைக் கணித்துத் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு விட்ட பிறகு, இந்தக் கட்டளைக்கு முரணில்லாத வகையிலும், இது தொடர்பாக மேலே நாம் சுட்டிக்காட்டிய இன்னபிற ஹதீஸ்களுக்கு அர்த்தம் கொடுக்கின்ற வகையிலும் தான், இவர்கள் சுட்டிக்காட்டும் நோன்பு திறத்தல் பற்றிய ஹதீஸைப் புரிய வேண்டும்.

இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்!

திருக்குர்ஆன் 2:187

இரவு வரை முழுமைப்படுத்த வேண்டும், என்று தான் குர்ஆன் சொல்கிறதே தவிர இரவு வருவதைக் காண்பது வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள் என்று சொல்லப்படவில்லை. இரவு வருவதை எந்த வகையிலும் தீர்மானித்துக் கொள்வதை தடுக்கும் வகையில் இவ்வாசகம் அமையவில்லை.

ஆக, எந்த அடிப்படையில் பார்த்தாலும் சூரியனுக்குரிய பார்வை வேறு! சந்திரனுக்குரிய பார்வை வேறு என்பது சந்தேகத்திற்கிடமில்லாத வகையில் நிரூபணம் ஆகின்றது.

வாதம் பதினாறு

அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, பிறையைக் கணிக்கலாம், கணக்கிடலாம், சிந்திக்கலாம், ஆய்வு செய்யலாம் என்பதற்கு திருக்குர்ஆன் 55:5, 10:5 மற்றும் வசனங்களை மட்டுமே இவர்கள் தங்களது ஆதாரமாகச் சமர்ப்பிக்கின்றனர்.

சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன

திருக்குர்ஆன் 55:5

ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். (10:5)

நமது பதில்

சந்திரன் கணக்கின் படி இயங்குகின்றது எனபதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை. சந்திரன் மட்டுமின்றி எல்லா கோள்களும் கணக்கின்படியே இயங்குகின்றன என்பதும் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை. உலக நடப்புகளுக்காக ஆய்வுக்காக சந்திரனைக் குறித்து ஆய்வு செய்யலாம். ஆனால் நமது வணக்கங்களை நிறைவேற்ற அதைப் பயன்படுத்தலாமா என்பது தான் கேள்வி.

முன்னரே பிறை பிறந்திருந்தாலும் உங்கள் கண்களுக்குத் தெரிவதை வைத்து நாளை முடிவு செய்யுங்கள் என்ற ஹதீஸ் காரணமாகவே இந்த வணக்கத்தை செய்ய கணிப்பைப் பயன்படுத்தாதீர்கள் என்பது தான் நமது நிலைபாடு.

ஆண்டுகளின் எண்ணிக்கையை அறிய சூரியனும் உதவுகிறது, சந்திரனும் உதவுகிறது.

முன்கூட்டியே கணக்கிட்டாலும், இந்த வசனத்தை நீங்கள் மீறியவர்கள் ஆக மாட்டீர்கள். நான் ஒவ்வொரு மாதமும் பிறையைப் பார்த்தாலும் இந்த வசனத்தை மீறியவர்கள் ஆக மாட்டோம்.

குர்ஆன் வசனங்களுக்கு விளக்கமாக அமைந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள், என்ன நிலையை எடுத்திருக்கிறார்கள் என்று பார்த்து, அதிலிருந்து எந்த வழிகாட்டுதல் சரியானது என்பதை முடிவு செய்ய வேண்டும்.

அந்த வழிகாட்டுல்கள் அனைத்தும் தெள்ளத் தெளிவான முறையில் புறக்கண்ணால் பிறையைப் பார்த்து மாதங்களைத் துவக்க வேண்டும் என்கிற சட்டத்தைத் தான் சொல்கிறது என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை.

விவாதத்துக்கு நாங்கள் தயாரில்லை!

ஹிஜ்ரா கமிட்டி அறிவிப்பு!!

பிறையைத் தீர்மானிப்பதற்கு பிறையைப் பார்க்கத் தேவை இல்லை; விஞ்ஞான முறையில் கணித்துத் தான் முடிவு செய்ய வேண்டும்; இதுதான் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான முடிவு என்று ஹிஜ்ரா கமிட்டி எனும் அமைப்பு பிரச்சாரம் செய்து வருகிறது. மேலும் நம்மை விவாதத்துக்கும் பகிரங்கமாக அழைத்திருந்தனர். அந்த அழைப்பை நாம் ஏற்றுக் கொண்டவுடன் விவாதம் செய்வதில் இருந்து பின் வாங்கி விட்டனர்.  பகிரங்கமாக இதை தங்கள் இணைய தளத்திலும் பின்வருமாறு அறிவித்துள்ளனர்.

நேரடி விவாத்திற்கு எங்களால் வர இயலாது. நாங்கள் தெரியாமல் பி.ஜேவை நேரடி விவாதத்திற்கு அழைத்து விட்டோம் என பகிரங்கமாக இதன் மூலம் அறிவித்து விடுகின்றோம்.

– Hijra Committee (Yervadi) – 29 March, 2011

இன்றைய தினம் (மார்ச் 29) இவ்வாறு அறிவித்தவர்கள் இதற்கு முன் என்ன சொன்னார்கள் என்பதையும் அதற்கு நாம் அளித்த பதில் என்ன என்பதையும் நேயர்களின் நினைவுக்கு கொண்டு வருகிறோம்.

பி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு!

டி.என்.டி.ஜே யையும், ஜாக் மாநிலத் தலைவரையும், ஏர்வாடி ஜாக் ஒரு சேர பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறது.

நீலிக்கண்ணீர் வடிக்கும் பி.ஜே, ஜாக் தலைவரை அழைத்து பேசி, ஒரு சேர விவாதத்திற்கு வந்தால் நாங்கள் மேற்கண்ட இரு தலைப்பில் விவாதம் செய்யத்தயார்.

– ஹிஜ்ரா கமிட்டி – ஜூலை, 2010

இதற்கு பிஜே (TNTJ ) வின் பதில் :

பிறை குறித்த அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கும் வகையில் இரு சாராரும் பேசி ஒப்பந்தம் செய்து அதனடிப்படையில் விவாதிக்கத் தயார் என்றால் அதைக் குறிப்பிட்டு தவ்ஹீத் ஜமாஅத் தலைமைக்கு கடிதம் எழுதி அனுப்பட்டும்.

மேலும் கருத்து வேறுபாடுள்ள அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கத் தயார் என்று ஒப்புக் கொண்டு கடிதம் எழுதினால் தவ்ஹீத் ஜமாஅத் உடனே அதை ஏற்று ஒப்பந்தம் செய்வதற்கான நாளை அறிவிக்கும்.

மடமையைத் தான் நிபந்தனையாக்கியுள்ளனர். விவாதத்துக்கு அழைப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும்; ஆனால் ஓடி ஒளியும் வகையில் அந்த அழைப்பு இருக்க வேண்டும் என்று பாமரனும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் விவாத அழைப்பு இருந்ததால் தான் இதை நாம் கண்டு கொள்ளவில்லை.

கீழ்க்கண்டவாறு அவர்கள் தெளிவு பட எழுதி கடிதம் எழுதினால் உடனே விவாத ஒப்பந்தத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வோம்.

எங்களுக்கும், உங்களுக்கும் இடையே முரண்பாகவுள்ள பிறை தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும், மேலும் நமக்கிடையே கருத்து வேறுபாடுள்ள பாரதூரமான அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்க நாங்கள் தயார்!

மேற்கண்டவாறு எழுதி

விவாதக் குழுத் தலைவர்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

30 அரண்மனைக்காரன் தெரு,

மண்ணடி சென்னை-1

என்ற முகவரிக்கு கடிதம் மூலம் எழுதி விவாதத்துக்கு சவடால் விடுவதை மெய்யாக்கட்டும்!

அன்புடன்

பீ.ஜைனுல் ஆபிதீன் September 20 , 2010

அதன் பிறகு, இவர்கள் முறையான பதிலைச் சொல்லி, முறைப்படி விவாதத்திற்கு முன்வந்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல் பல சாக்கு போக்குகள் சொல்லி காலம் கடத்தி வந்தார்கள். பல சகோதரர்கள் இது குறித்து கேள்விகள் பல எழுப்பிய போதும், மழுப்பலான பதிலைத் தந்து காலம் கடத்துவதிலேயே தான் குறியாக இருந்து வந்தார்கள் இந்த ஹிஜ்ரா கமிட்டியினர்.

கூடிய விரைவில் அனைத்து கருத்துகளையும் பரீசீலித்து அதன் பிறகு முழுமையான பதில் வெளியிடுவோம். இன்ஷாஅல்லாஹ்.

இப்படிக்கு

தள நிர்வாகி July 15, 2010

பி.ஜேயும், எஸ்.கேயும் பதிலளித்தால் மட்டும் தான் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை முடிவு செய்ய முடியும் என்பதை உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தி முடித்துக்கொள்கிறோம். எங்கள் இமெயில் முகவரி

:This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. (August 14 2010

உங்கள் முயற்சிக்கு நன்றி சகோதரரே. இன்ஷாஅல்லாஹ் கூடிய விரைவில் பதில் வெளியாகும்.

மற்றவை பின்

admin

jaqh.net September 20 2010

இன்ஷா அல்லாஹ் விரைவில் பதில் எழுதுவோம். பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான் என்பதை நினைவுபடுத்தி கொள்கிறேன்.

இப்படிக்கு

நிர்வாகி September 22 2010

பகிரங்க விவாதம் என்பதால் அனைவரின் கருத்துகளையும் பெற்று பரீசீலிக்க வேண்டியது அவசியம் தானே?

நாங்கள் ஹஜ் பிரயாணம் மேற்கொள்ள இருப்பதால் ஹஜ்ஜிற்கு பிறகு தான் எங்களால் இன்ஷாஅல்லாஹ் இதில் முழு கவனம் செலுத்த முடியும் என்பதையும் தாங்களின் மேலான கவனத்திற்கு தருகிறேன்.

எனவே தாங்கள் பொறுத்திருந்து கவனியுங்கள். இன்ஷாஅல்லாஹ் கூடிய விரைவில் எங்கள் பதில் வெளிவரும்.

இப்படிக்கு

தள நிர்வாகி September 23 2010

நாஷித் போன்றவர்களுக்கு இந்த விவாத ஒப்பந்தத்தில் எந்தப் பங்கும் கிடையாது. அதனால் விவாதக்குழு என்றெல்லாம் பதிந்து மக்களை திசை திருப்புவதை விட்டுவிட்டு, பி.ஜே யின் கொள்கையை மட்டுமாவது இணையத்தில் ஒழுங்காக பிரச்சாரம் செய்து வந்தால் சரி. மேலும் யாருடன் எப்படி தொடர்பு கொள்ள வேண்டுமோ அதை நாங்கள் நன்கறிவோம். ஆகவே சம்மந்தமில்லாத உங்களைப் போன்றவர்கள் தலையிடாமல் ஒதுங்கியிருப்து நலம்.

நிர்வாகி January 22 , 2011

விவாதம் அல்லாஹ் நாடினால் கூடிய விரைவில் நடைபெறும். அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.

இப்படிக்கு

நிர்வாகி January 22 , 2011

விவாத சவடாலை மெய்ப்படுத்துங்கள், ஏன் தாமதிக்கிறீர்கள்? என்று பல சகோதரர்கள் கேட்டுக்கொண்டபோது இவர்கள் தங்கள் இணையதளத்தில் சொல்லியுள்ள பதில்..

பிஜே உடன் விவாதிக்கப் போகிறார்கள், என்று அவர்களது கொள்கையில் இருப்பவர்கள் கூட மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்து வந்த நிலையில், அவர்களது எதிர்ப்பார்ப்பை "பூர்த்தி" செய்யும் வண்ணம் இவர்கள் விடுத்துள்ள இறுதி அறிக்கை இதோ..

நேரடி விவாத்திற்கு எங்களால் வர இயலாது. நாங்கள் தெரியாமல் பி.ஜேவை நேரடி விவாதத்திற்கு அழைத்து விட்டோம் என பகிரங்கமாக இதன் மூலம் அறிவித்து விடுகின்றோம்.

– Hijra Committee (Yervadi) – 29 March, 2011

அறிந்து கொள்ளுங்கள். இவர்கள் தான் ஏர்வாடி JAQH என்று செயல்படும் ஹிஜ்ரா கமிட்டியினர்  !!

More Articles …