Sidebar

21
Sun, Jun
சமீபத்திய செய்திகள்

திருடனின் கைவெட்டுவதை அல்லாஹ் தெளிவுபடுத்தவில்லையா?

கேள்வி

திருடனின் கையை வெட்ட வேண்டும் என்று திருக்குர்ஆன் 5:38 வசனம் கூறுகிறது.

கை என்பது விரலில் இருந்து தோள் புஜம் வரையிலா?

விரலில் இருந்து முழங்கை வரையிலா?

விரலில் இருந்து மணிக்கட்டு வரையிலா

என்பதற்கு குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ தெளிவுபடுத்தப்படவில்ல. சஹாபாக்களின் நடைமுறையை ஏற்காவிட்டால் இதற்குத் தெளிவு கிடைக்காது. சஹாபாக்கள் திருடனின் மனிக்கட்டு வரை வெட்டியதை ஆதாரமாகக் கொண்டு தான் இவ்வாறு முடிவு செய்கிறோம் என்று சிலர் வாதம் செய்கின்றார்கள். இந்த வாதம் சரியா?

அபூ அனூத், இலங்கை

பதில்

திருடனின் கைகளை எந்த அளவுக்கு வெட்ட வேண்டும் என்பதற்கு விளக்கம் அளிப்பதற்கு முன்னால் இப்படி கேள்வி கேட்டவர்களின் அறியாமையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சஹாபாக்கள் விளக்கம் இல்லாமல் 5: 38 வசனத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்று இவர்கள் வாதிடுவதன் மூலம் சஹாபாக்களுக்கு மதிப்பு சேர்ப்பதாக நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் இதன் மூலம் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் இழிவுபடுத்துகின்றனர். திருடனின் கையை வெட்ட வேண்டும் என்று சொன்ன அல்லாஹ் அதைத் தெளிவுபடுத்தாமல் குறைபடக் கூறி குழப்பத்தில் ஆழ்த்தி விட்டான் என்று இவர்கள் சொல்லாமல் சொல்கின்றனர்.

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 5:3

என்று அல்லாஹ் கூறுகிறான்.

இவர்களோ அல்லாஹ் மார்க்கத்தை முழுமைப்படுத்தவில்லை மற்றவர்கள் வந்து தான் அதை முழுமைப்படுத்தும் வகையில் குறைவுடைய மார்க்கத்தையே தந்துள்ளான் என்று சித்தரிக்கின்றனர்.

நன்கறிந்த (இறை)வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

திருக்குர்ஆன் 35:14

என்று அல்லாஹ் கூறுகிறான்.

இவர்களோ அல்லாஹ்வுக்கு அவ்வளவாக விளக்கத் தெரியவில்லை; சஹாபாக்கள் தான் அல்லாஹ்வை விட நன்றாக விளக்கக் கூடியவர்கள் என்று சொல்லாமல் சொல்கின்றனர்.

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

திருக்குர்ஆன் 16:44

என்று அல்லாஹ் கூறுகிறான்.

விளக்குவதற்காக யாரை அல்லாஹ் அனுப்பினானோ அந்தத் தூதர் சில விஷயங்களை விளக்காமல் சென்று விட்டார் என்று இவர்கள் நினைக்கின்றனர். அல்லது தூதருக்கு விளக்கத் தெரியவில்லை என்கின்றனர்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்ல வேண்டியதை முழுமையாகச் சொல்லி விட்டனர்; மற்றவர்கள் வந்து அதில் எதையும் சேர்க்கும் அளவுக்கு பலவீனமாக இந்த மார்க்கத்தை அல்லாஹ் தரவில்லை என்பதை நம்புபவன் தான் முஸ்லிமாவான் என்பதை முதலில் இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு விஷயத்தைச் சொல்லாமல் சஹாபாக்கள் அதைச் சொல்லி இருந்தால் அது அல்லாஹ் சொன்னதாக ஆகாது. அவர்களின் கருத்தாகத் தான் ஆகும். அதை ஏற்க வேண்டும் என்று ஆகவே ஆகாது. அதற்கு மார்க்க அந்தஸ்து எதுவும் வந்து விடாது. நாம் சிந்தித்துப் பார்த்து அந்த வசனத்தில் இருந்து எதை விளங்குகிறோமோ அதைத் தான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வும் அப்படித்தான் நமக்கு சொல்கிறான்.

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

திருக்குர்ஆன் 16:44

அல்லாஹ் அருளிய வேதத்தை அவனது தூதர் வழியாகக் கிடைக்கும் விளக்கத்தின் மூலம் அறிந்து கொள்ள வேண்டும். அப்படி இல்லாத விஷயங்களில் நாம் சிந்தித்துப் பார்த்துத் தான் விளங்க வேண்டும் என்று மேற்கண்ட வசனம் சொல்கிறது. சிந்தித்து விளங்கும் விஷயங்களும் குர்ஆனில் உள்ளடங்கியது தான் என்பது இந்த வசனத்தில் இருந்து தெரிகிறது.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒன்றைக் குறிப்பாகச் சொல்லாமல் பொதுவாகச் சொன்னால் அதில் சிந்தனையைச் செலுத்தி காரண காரியங்களுடன் ஆய்வு செய்து இதைத் தான் இவ்வசனம் சொல்கிறது என்று ஆய்ந்து அறிவது தான் நம் மீது உள்ள கடமை.

திருடினால் கையை வெட்ட வேண்டும் என்று அல்லாஹ் சொல்கிறான். எது வரை வெட்ட வேண்டும் என்று அல்லாஹ் சொல்லவில்லை. இதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அளித்த விளக்கம் குறித்து பலவீனமான ஹதீஸ் இருந்தாலும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவும் இல்லை.

கை என்பது இந்த இடத்தில் எதை குறிக்கிறது என்று நாம் தான் சிந்திக்க வேண்டும்.

கை என்பது விரலில் இருந்து தோள் புஜம் வரை உள்ள பகுதியைக் குறிக்கும் என்பது உண்மை தான்.

ஆனால் எல்லா மொழிகளிலும், மனிதர்களின் பேச்சுக்களிலும் பொதுவாக கை என்று சொன்னால் மனிக்கட்டு வரை உள்ள பகுதியைக் குறிக்கவே நாம் பயன்படுத்துகிறோம். வேறு அர்த்தம் தரும் வகையில் வாசக அமைப்பு இருந்தால் தவிர மற்ற சந்தர்ப்பங்களில் மனிக்கட்டு வரை உள்ள பகுதியைத் தான் கை எனக் கூறுகிறோம்.

கையால் பிடி, கையால் எடு, கை கழுவு, கையால் முஸாபஹா செய் என்றெல்லாம் சொன்னால் முழுக்கை என்று நாம் புரிந்து கொள்வதில்லை. மனிக்கட்டு வரை உள்ள பகுதி என்றே புரிந்து கொள்கிறோம்.

ஊசி போட கையை நீட்டு என்று மருத்துவர் கூறினால் ஊசி எங்கே போடுவார்கள் என்பது நமக்குத் தெரிந்துள்ளதால் முழுக்கையை நீட்டுகிறோம்.

கையைக் கட்டிக் கொள் என்று கூறினால் கட்டிக் கொள் என்ற வார்த்தை இணைந்துள்ளதன் காரணமாக முழங்கை வரை கட்டிக் கொள்கிறோம்.

இப்படியெல்லாம் சொல்லாமல் வெறும் கை என்று சொன்னால் மனிக்கட்டு வரை உள்ள பகுதியைக் குறிப்பதற்குத் தான் நாம் பயன்படுத்துகிறோம். மனிதர்களின் பேச்சு வழக்கில் தான் குர்ஆன் அருளப்பட்டது. எனவே இவ்வசனம் தெளிவாகவே உள்ளது.

கையைக் கழுவிவிட்டுச் சாப்பிடு என்று கூறினால் தோள் புஜம் வரை கழுவ வேண்டும் என்று யாரும் புரிந்து கொள்ள மாட்டோம். மனிக்கட்டு வரை என்று சொல்லா விட்டாலும் வேறு அர்த்தம் கொள்ளும் வகையில் வாசக அமைப்பு இல்லாததால் இதன் அர்த்தமே மனிக்கட்டு வரை என்பது தான்.

இதை அல்லாஹ்வும் தனது திருமறையில் தெளிவுபடுத்துகிறான்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.

திருக்குர்ஆன் 5:6

இவ்வசனத்தில் கைகள் என்று இரு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று உளூ செய்வது பற்றியும் மற்றொன்று தயம்மம் செய்வது பற்றியும் பேசுகிறது.

உளூ செய்வதைப் பற்றி பேசும் போது மூட்டுக்கள் முழங்கைகள்- வரை கழுவுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

ஆனால் தயம்மும் செய்வதைப் பற்றி பேசும் போது எந்த அளவும் கூறாமல் கைகள் என்று அல்லாஹ் சொல்கிறான்.

இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செயல் முறை விளக்கம் அளிக்கும் போது தரையில் உள்ளங்கையால் அடித்து முகத்தில் தடவிக் கொண்டார்கள். பின்னர் மனிக்கட்டு வரை கைகளில் தடவிக் கொண்டார்கள்.

பார்க்க : புகாரி 342, 343, 339, 338

தயம்மும் செய்யும் போது முழங்கை வரை அவர்கள் தடவவில்லை. பொதுவாக கை என்று கூறப்பட்டதால் மனிக்கட்டு வரை என்று செயல் விளக்கம் தந்துள்ளனர்.

கையை வெட்டுங்கள் என்று பொதுவாக அல்லாஹ் சொல்கிறான். மனிக்கட்டையும் தாண்டிய பகுதி என்று புரிந்து கொள்ள எந்த வாசகமும் இத்துடன் சேர்த்து சொல்லப்படவில்லை. எனவே மனிக்கட்டு வரை என்று தான் இதை அறிவுடைய அனைவரும் புரிந்து கொள்வார்கள். எனவே அல்லாஹ் தெளிவாகவே சொல்லி இருக்கிறான். யாரையும் சார்ந்து விளங்கும் நிலையில் வைக்கவில்லை.

இப்படி விளங்குவது அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் பெருமை சேர்க்குமா? இவர்கள் செய்யும் வாதம் பெருமை சேர்க்குமா?

01.01.2012. 0:08 AM

குறிப்பிட்ட சூழ்நிலையில் அருளப்பட்டவை பொதுவானதாக ஆகுமா?

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இறங்கிய குர்ஆன் வசனத்தை வேறு சந்தர்ப்பத்தில் ஆதாரமாக எடுக்கலாமா?

சமீர் அஹ்மது

பதில்:

திருக்குர்ஆனின் பல வசனங்களுக்கு அவை இறங்கிய பின்னணியும், வரலாறும் இருக்கின்றன. இவையனைத்தும் குறிப்பிட்ட சூழ்நிலையில் தான் இறங்கின. ஆனால் அந்த வசனத்தில் கூறப்படும் சட்டத்தை இன்றும் நாம் கடைப்பிடித்து வருகின்றோம்.

அப்படி கடைப்பிடிப்பதற்குத் தான் குர்ஆன் அருளப்பட்டது. ஒவ்வொரு வசனத்தையும் இது குறிப்பிட்ட சூழ்நிலையில் இறங்கியது என்று கூறி அதன் பொதுவான கருத்தை மறுத்தால் குர்ஆன் முழுவதையும் இவ்வாறு கூறி மறுத்துவிட முடியும். இதனால் குர்ஆனையே புறக்கணித்து வாழ்கின்ற நிலையே ஏற்படும்.

அவதூறு சொன்னவர்களுக்கு கசையடி கொடுக்க வேண்டும் என்ற சட்டம் ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு சொன்னவர்கள் விஷயத்தில் தான் இறங்கியது. இதனால் இன்றைக்கு இஸ்லாமிய நாட்டில் வசிக்கும் ஒருவர் ஒரு பெண் மீது அபாண்டமாக அவதூறு சொன்னால் அவருக்கு இந்தத் தண்டனையை நிறைவேற்றுவது கூடாது என்று கூறுவது சரியாகுமா?

ஒருவர் மீது விபச்சாரக் குற்றத்தைச் சுமத்துவதாக இருந்தால் அதற்கு நான்கு சாட்சிகள் அவசியம். ஆனால் தம் மனைவி வேறு ஒருவனுடன் விபச்சாரம் செய்வதை கணவன் மட்டுமே காணுகிறான் என்றால் அவன் ஒருவன் மட்டுமே அவள் மீது குற்றம் சாட்ட முடியும். நான்கு சாட்சி இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்தச் சட்டம் ஷரீக் பின் சஹ்மா என்ற நபித்தோழர் விஷயத்தில் குறிப்பிட்ட சூழ்நிலையில் தான் இறங்கியது (புகாரி : 4747). எனவே தற்போது இந்தச் சட்டம் (லிஆன்) இல்லை என்று கூற முடியுமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் இஸ்லாத்தை ஏற்காமலேயே மரணிக்கின்றார். அவருக்காக பாவமன்னிப்புத் தேடப் போவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது இறைவன் இஸ்லாத்தை ஏற்காமல் மரணித்தவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடக் கூடாது என்ற தடை விதிக்கின்றான் (புகாரி : 4675).

எனவே இந்தச் சட்டம் குறிப்பிட்ட சூழ்நிலையில் இறங்கியதால் இஸ்லாத்தை ஏற்காமல் மரணிப்பவர்களுக்கு இன்றைக்கு பாவமன்னிப்புத் தேடலாம் என்று கூறலாமா? இது போன்று ஏராளமான கேள்விகளைக் கேட்க முடியும்.

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இறங்கிய வசனத்தில் கூறப்படும் சட்டத்தை வேறு இடங்களில் பொறுத்தவே கூடாது என முழுவதுமாக மறுத்துவிடக் கூடாது.

குறிப்பிட்ட சூழ்நிலையில் அருளப்பட்ட வசனம் அந்தச் சூழ்நிலைக்கு மட்டுமே உரியது என்பது உறுதியானால் அதை பொதுவானதாக ஆக்கக் கூடாது.

அப்படி இல்லாமல் இருந்தால் அந்த வசனத்தின் கருத்து எங்கெல்லாம் பொருந்துமோ அங்கெல்லாம் பயன்படுத்தலாம்.

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.

திருக்குர்ஆன் 3 : 144

மேற்கண்ட வசனம் உஹதுப் போரில் நபியவர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி கிளம்பிய போது இறங்கியது. முஹம்மது நபி இறந்து விட்டாலும் நீங்கள் இஸ்லாத்தில் தான் இருக்க வேண்டும் என்று இவ்வசனம் கூறுகின்றது.

முஹம்மது (ஸல்) அவர்கள் மரணிப்பவர் தான் என்ற கருத்தையும் இவ்வசனம் உள்ளடக்கியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தவுடன் அவர்கள் மரணிக்கவில்லை என உமர் (ரலி) அவர்கள் உட்பட பலர் தவறாக நினைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் மேற்கண்ட வசனத்தை எடுத்துக் காட்டி நபியவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துகிறார்கள் (புகாரி : 1242)

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஒரு சூழ்நிலையில் இறங்கிய வசனத்தை அதற்குப் பொருத்தமான வேறு ஒரு இடம் வரும் போது அங்கே பயன்படுத்தியதால் மக்களைச் சரியான நம்பிக்கையின் பக்கம் கொண்டுவர முடிந்தது. இதைப் போன்று நாமும் நபியவர்கள் காலத்தில் இறங்கிய குர்ஆன் வசனங்களை இன்றைய பிரச்சனைகளுக்கு தீர்வாகச் சுட்டிக் காட்டினால் தான் மக்கள் சரியான பாதைக்கு வர முடியும்.

12.08.2011. 15:35 PM

 அல் குர்ஆன் 6:75 வசனத்தின் விளக்கம் என்ன?

உரை: பீ.ஜைனுல் ஆபிதீன்

சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்வி பதில்கள் 10/10/21

75. உறுதியான நம்பிக்கையாளராக இப்ராஹீம் ஆவதற்காக அவருக்கு வானங்கள்507 மற்றும் பூமியின் சான்றுகளை இவ்வாறே காட்டினோம்.

76. இரவு அவரை மூடிக்கொண்டபோது ஒரு நட்சத்திரத்தைக் கண்டு "இதுவே என் இறைவன்'' எனக் கூறினார். அது மறைந்த போது "மறைபவற்றை நான் விரும்ப மாட்டேன்'' என்றார்.

77. சந்திரன் உதிப்பதை அவர் கண்டபோது "இதுவே என் இறைவன்'' என்றார். அது மறைந்தபோது "என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டாவிட்டால் வழிகெட்ட கூட்டத்தில் ஒருவனாக ஆகி விடுவேன்'' என்றார்.

78. சூரியன் உதிப்பதை அவர் கண்டபோது "இதுவே என் இறைவன்! இதுவே மிகப் பெரியது'' என்றார். அது மறைந்தபோது "என் சமுதாயமே! நீங்கள் இணை கற்பிப்பவற்றை விட்டு நான் விலகிக் கொண்டவன்'' எனக் கூறினார்.162

79. "வானங்களையும்,507 பூமியையும் படைத்தவனை நோக்கி உண்மை வழியில் நின்றவனாக என் முகத்தைத் திருப்பி விட்டேன். நான் இணை கற்பித்தவனல்லன்'' (எனவும் கூறினார்)(6:75-79)

 

வாரிசு தொடர்பான 4:33 வசனத்தின் மொழிபெயர்ப்பு சரியா?

சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்வி பதில் 26/09/2021

உரை: பீ.ஜைனுல் ஆபிதீன்

 

மழை பொழியும் வானமா? திருப்பித்தரும் வானமா?

திருக்குர் ஆன் 86.11 வசனத்துக்கு

திருப்பித்தரும் வானத்தின் மீது சத்தியமாக

என்று நாம் தமிழாக்கம் செய்துள்ளோம்.

இவ்வசனத்துக்கு இலங்கை அன்ஸாருஸ்ஸுன்னா மூலம் வெளியிடப்பட்ட தமிழாக்கத்தில்

(திரும்பத் திரும்ப) மழை பொழிதலை உடைய வானத்தின் மீது சத்தியமாக

என்று மொழி பெயர்த்துள்ளனர்,

இஸ்மாயீல் ஸலபி உள்ளிட்ட ஸலபுகள் இது தான் சரியான மொழி பெயர்ப்பு என்றும் பீஜே செய்தது தவறான மொழி பெயர்ப்பு என்றும் வாதிடுகின்றனர்,

இஸ்மாயீல் ஸலபியும், ஸலபு கூட்டத்தினரும் எந்த மொழிபெயர்ப்பை சரியானது என்று வாதிட்டு பரப்பி வருகிறார்களோ அதில் அவர்கள் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மேற்கண்ட வசனத்திற்கு (திரும்பத் திரும்ப) மழை பொழிதலை உடைய வானத்தின் மீது சத்தியமாக என்று மொழிபெயர்ப்பு செய்தவர்கள் அந்த மொழி பெயர்ப்பில் இருந்து என்ன கருத்து கிடைக்குமோ அதைத் தான் சொல்ல வேண்டும்.

அதாவது வானத்தில் இருந்து அடிக்கடி மழை பொழிவதை இவ்வசனம் கூறுகிறது என்று தான் வாதிட வேண்டும்.

ஆனால் அன்ஸாருஸ்ஸுன்னா இயக்கம் நடத்தும் உண்மை உதயம் அக்டோபர் 2009 இதழில் மெய்சிலிர்க்க வைக்கும் அறிவியல் உண்மைகள் என்ற தலைப்பில் ஏழு பக்கக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அக்கட்டுரையில் மொத்தம் 14 அறிவியல் உண்மைகளைக் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் முதலாவதாக திருப்பித் தரும் வானம் என்ற தலைப்பில் சில அறிவியல் உண்மைகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

வானத்தில் இருந்து அடிக்கடி மழை பொழிகிறது என்பது இந்தத் தமிழாக்கம் கூறும் செய்தி. இது ஒவ்வொரு மனிதனும் கண்டு அனுபவித்து வருகின்ற சாதாரண உண்மை தான். இதில் எந்த அறிவியல் முன்னறிவிப்பும் கிடையாது எந்த மெய் சிலிர்ப்பும் கிடையாது.

பீஜேயின் தமிழாக்கத்தில் "திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (இது தான் சரியான தமிழாக்கம்.)

இந்தத் தமிழாக்கத்தின் படிதான் இதில் அறிவியல் உண்மைகள் அடங்கியுள்ளதாக பீஜேயின் தமிழாக்கத்தில் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

  1. திருப்பித் தரும் வானம்

இவ்வசனத்தில் (86:11) திருப்பித் தரும் வானம் என்று, வானத்திற்கு ஒரு அற்புதமான அடைமொழியை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.

வானம் எதைத் திருப்பித் தரும் என்றால் ஏராளமான விஷயங்களை நமக்கு திருப்பித் தந்து கொண்டே இருக்கிறது.

கடலிலிருந்தும், நீர் நிலைகளிலிருந்தும் உறிஞ்சுகின்ற தண்ணீரை மேலே எடுத்துச் சென்று மழையாக நமக்கு வானம் திருப்பித் தருகிறது. இங்கிருந்து அனுப்புகின்ற ஒலி அலைகளை வானம் நமக்கே திருப்பி அனுப்புகிறது.

வானம் திருப்பித் தருகின்ற தன்மை பெற்றிருக்கின்ற காரணத்தினால் தான் இன்றைக்கு நாம் ரேடியோ போன்ற வசதிகளை அனுபவிக்க முடிகிறது.

மேல் நோக்கி அனுப்பப்படும் செய்திகள் ஒரு இடத்தில் தடுக்கப்பட்டு திரும்பவும் கீழ் நோக்கி நமக்கே அனுப்பப்படுகின்றன.

இன்றைக்கு செயற்கைக் கோள் மூலம் ஒளி பரப்பப்படும் காட்சிகள் நமக்கு இங்கே வந்து சேருகின்றன.

மேலே இருந்து திருப்பித் தருகின்ற அம்சத்தோடு வானத்தை இறைவன் படைத்திருக்கிறான். இன்னும் நாம் சிந்திக்கும் போது ஏராளமான விஷயங்களை வானம் நமக்குத் திருப்பித் தருவதை அறியலாம்.

திருப்பித் தரும் வானம் என்று யாராவது வானத்திற்கு அடைமொழி சொல்வார்களா? அதுவும் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் சொல்வார்களா?

இந்த மாபெரும் அறிவியல் உண்மையை எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது சொல்கிறார் என்றால், நிச்சயமாக இது அவருடைய வார்த்தையாக இருக்க முடியாது; படைத்த இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும்.

மேற்கண்ட பீஜேயின் விளக்கத்தைத் தான் இஸ்மாயீல் ஸலஃபி பயன்படுத்தியுள்ளார்.

ஆனால் இந்த விளக்கத்துக்கும் இக்பால் மதனி தமிழாக்கத்துக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா?

இக்பால் மதனியின் தமிழாக்கம் தான் சரி என்பது இஸ்மாயீல் ஸலஃபியின் நிலையாக இருந்தால் அதற்கு எந்த வகையிலும் ஒத்துப் போகாத பீஜேயின் தமிழாக்கத்தையும் அதிலிருந்து பெறப்படும் கருத்தையும் அவர் நிராகரிக்க வேண்டும்.

திருக்குர்ஆனின் அறிவியல் உண்மைகள் என்று கட்டுரை எழுதும் போது பீஜேயின் தமிழாக்கத்தின் படி அதில் அடங்கியுள்ள அறிவியல் கருத்துக்களை எடுத்துக் காட்டுவதும், மற்ற நேரங்களில் பீஜேயின் தமிழாக்கம் தவறு என்று வாதிடுவதும் ஏன்?

இந்த இரட்டை நிலை ஏன்?

உங்கள் தமிழாக்கத்தின் படி என்ன கருத்து கிடைக்குமோ அதைத் தானே நீங்கள் வாதிட வேண்டும்.

இந்தக் கேள்வி கேட்டு பல ஆண்டுகள் ஓடி விட்டன. இன்னும் பதில் வரவில்லை.

தூண்களையுடைய வானமா? தூண்களில்லாத வானமா?

திருக்குர்ஆனின் 31:10 வசனத்துக்கு பீஜேயும் அன்ஸாருஸ்ஸுன்னாவும் முரண்பட்டவாறு மொழிபெயர்ப்பு செய்துள்ளனர்.

அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்கள் பார்க்கிறீர்கள்.

இது அன்ஸாருஸ்ஸுன்னா ஆதரிக்கும் இக்பால் மதனியின் தமிழாக்கம்.

நீங்கள் பார்க்கக் கூடிய தூண் இன்றி வானங்களைப் படைத்தான்.

இது பீஜேயின் தமிழாக்கம். இது தான் சரியான தமிழாக்கம்.

இஸ்மாயீல் ஸலஃபி கூட்டத்தினர் இக்பால் மதனியின் தமிழாக்கமே சரி என்று வாதிடுகின்றனர்.  பீஜேயின் தமிழாக்கம் தவறு என்றும் பிரச்சாரம் செய்கின்றனர்.

இதில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவ்வசனம் குறித்து பேசும் போது இக்பால் மதனியின் தமிழாக்கத்தில் இருந்து கிடைக்கும் கருத்தைத் தான் பேச வேண்டும்.

அதாவது வானத்துக்கு தூண்கள் இல்லை. தூண்கள் இல்லாமல் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள் என்ற இக்பால் மதனியின் மொழிபெயர்ப்பின் படி இதில் எந்த அறிவியல் உண்மைகளும் இல்லை.

பீஜேயின் மொழி பெயரப்பின் படி நீங்கள் பார்க்காத தூண்கள் வானத்துக்கு உள்ளன அதாவது பூமிக்கும் வானத்துக்கும் இடையே அவ்விரண்டையும் இழுத்துப் பிடிக்கும் ஈர்ப்பாற்றல் உள்ளது. சூரியனின் கட்டுப்பாட்டிலிருந்து பூமி விலகி விடாமல் இருக்க உதவும் அந்த ஈர்ப்பாற்றல் தான் தூண் எனப்படுகிறது. இதை நாம் காண முடியாது என்ற கருத்து கிடைக்கும்.

இக்பால் மதனியின் தமிழாக்கத்தின் படி பூமிக்கும் வானத்துக்கும் இடையே ஈர்ப்பு விசை உள்ளது என்று எப்படி நிறுவ முடியும்?

வானத்துக்கும், பூமிக்கும் தூண்கள் இல்லை என்று கூறும் போது சாதாரண பாமரன் பேசுவது போன்ற கருத்து தான் இதில் உள்ளது.

பீஜே அவர்கள் தனது தமிழாக்கத்தின் விளக்க குறிப்பில் பின்வருமாறு விளக்கியுள்ளார்.

  1. வானத்திற்கும் தூண்கள் உண்டு

இவ்வசனங்களில் (13:2, 31:10, 22:65) நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களையும், பூமியையும் படைத்தான் எனக் கூறப்படுகிறது. "வானங்களுக்கும், பூமிக்கும் தூண்கள் உள்ளன; ஆனால் அவைகளைப் பார்க்க முடியாது'' என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.

பார்க்க முடியாத தூண்கள் இருக்கின்றனவா? என்றால் நிச்சயமாக இருக்கின்றன. உலகத்தில் இருக்கின்ற பூமி உள்ளிட்ட எல்லாக் கோள்களும் அவற்றிற்குரிய இடங்களில் நீந்துவதற்கு, அவற்றைக் குறிப்பிட்ட வேகத்துடன் இழுத்துப் பிடித்திருக்கின்ற ஒரு ஈர்ப்பு விசை எல்லாப் பகுதியிலும் பரவி யிருப்பது தான் காரணம்.

உதாரணமாக நாம் வாழ்கின்ற பூமி, மணிக்கு 1670 கி.மீ. வேகத்தில் தன்னைத் தானே சுற்றுகிறது. அதே சமயம் சூரியனை, மணிக்கு 1,07,000 கி.மீ. வேகத்தில் சுற்றி வருகின்றது.

இவ்வளவு வேகமாக தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் பூமி சுற்றும் பொழுது அதை ஈர்த்துப் பிடிக்கக் கூடிய ஒரு சக்தி இல்லாவிட்டால் தனது நீள்வட்டப் பாதையிலிருந்து இப்பூமி தூக்கி வீசப்பட்டு விடும்.

பூமியின் எடை (நிறை) 6,000,000,000,000,000,000,000,000 கிலோ கிராம் ஆகும்.

இந்த வேகத்தில் சுற்றுகின்ற, இவ்வளவு பாரமான ஒரு பொருளை அதன் பாதையை விட்டு விலகாமல் தடுத்து நிறுத்த வேண்டுமானால், ஐந்து மீட்டர் குறுக்களவு கொண்ட ஒரு லட்சம் கோடி உருக்குக் கம்பிகளாலான தூண்களைக் கொண்டு பூமியிலிருந்து சூரியனை இணைக்க வேண்டும். அந்தத் தூண்கள் இல்லாமலேயே பூமி, தனது பாதையிலிருந்து விலகாமல் இருப்பதற்கு ஈர்ப்பு விசை என்ற கண்ணுக்குத் தெரியாத தூண்களே காரணம்.

இந்த அறிவியல் உண்மையைத் தான், "நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி' என்று அல்லாஹ் கூறுகின்றான்.

இந்த ஈர்ப்பு விசையின் காரணமாகத் தான் ஒவ்வொரு கோளும் அந்தரத்தில் எவ்விதப் பிடிமானமும் இன்றி தொங்கும் காட்சியைப் பார்க்கின்றோம்.

எனவே 17வது நூற்றாண்டில் மனிதன் கண்டறிந்த ஈர்ப்பு விசை எனும் கண்டுபிடிப்பை, ஆயிரத்து நூறு (1,100) ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறுகிறது.

வானத்திற்கும், பூமிக்கும் எந்தத் தூண்களும் இல்லை என்று தெளிவாகத் தெரியும் போது, முஹம்மது நபியவர்கள் "பார்க்கின்ற தூண்களின்றி' என்ற வார்த்தையைத் தேவையில்லாமல் பயன்படுத்தி இருக்க முடியாது.

இந்த வானங்களையும், பூமியையும் படைத்தவன் பேசுகின்ற வார்த்தையாக இருப்பதால் தான் "பார்க்கின்ற தூண்களின்றி' என்ற சொல்லைப் பயன்படுத்தி, பார்க்காத தூண்கள் இருக்கின்றன என்ற உண்மையை மறைமுகமாகக் குறிப்பிடுகிறான்.

திருக்குர்ஆன், முஹம்மது நபியின் கற்பனையல்ல; ஏக இறைவனின் கூற்றுத் தான் என்பதற்கு மற்றுமொரு சான்றாக இது அமைந்துள்ளது.

இவ்வாறு பீஜே இவ்வசனத்துக்கு விளக்கவுரை எழுதியுள்ளார்.

இந்த அறிவியல் உண்மை இவ்வசனத்தில் உள்ளது என்று இஸ்மாயீல் சலபி உண்மை உதயம் அக்டோபர் 2009 இதழில் மெய்சிலிர்க்க வைக்கும் அறிவியல் உண்மைகள் என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

தூண்கள் இல்லவே இல்லை என்பதும் கண்ணுக்குத் தெரியாத தூண்கள் உள்ளன என்பதும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட அர்த்தங்கள்.

இக்பால் மதனியின் தமிழாக்கம் தான் சரி என்ற கருத்தில் உள்ள இஸ்மாயில் சலபி அந்தத் தமிழாக்கத்தில் இல்லாத கருத்தை அதில் இருப்பதாகக் காட்டுவது மோசடி இல்லையா?

எனது தமிழாக்கம் தான் சரி என்ற அடிப்படையில் இவ்வாறு எழுதி இருந்தால் எனக்கு மகிழ்ச்சி தான். ஆனால் இக்பால் மதனி இந்த வசனத்துக்கு சம்மந்தமில்லாமல் தவறாக மொழிபெயர்த்து விட்டார் என்று அறிவிக்க வேண்டுமல்லவா? இது வரை அறிவிக்காவிட்டாலும் இனியாவது பகிரங்கமாக அறிவிக்கத் தயாரா?

இந்த இரட்டை நிலை ஏன்?

உங்கள் தமிழாக்கத்தின் படி என்ன கருத்து கிடைக்குமோ அதைத் தானே நீங்கள் வாதிட வேண்டும்.

திருக்குர்ஆனில் அறிவியல் உண்மைகள் உள்ளன என்று கட்டுரை எழுதும் போது பீஜேயின் தமிழாக்கத்தை அடிப்படையாக வைத்து வாதிடுவதும், மற்ற நேரங்களில் பீஜேயின் தமிழாக்கம் தவறு என்று பிரச்சாரம் செய்வதும் அறிவு நாணயமான செயலா?

இந்தக் கேள்வி கேட்டு பல ஆண்டுகள் ஓடி விட்டன. இன்னும் பதில் வரவில்லை.

பூமியைப் பிளக்க முடியாதா? பூமிக்குள் மலையளவு செல்ல முடியாதா?

17.37 வசனத்தின் படி பூமிக்குள் குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் செல்ல முடியாது என்ற அறிவியல் உண்மையை எடுத்துக் காட்டுகிறார் இஸ்மாயில் சலபி.

இவ்வசனத்துக்கு இக்பால் மதனி செய்துள்ள தமிழாக்கம் இது தான்.

மேலும் பூமியில் கர்வம் கொண்டு நீர் நடக்க வேண்டாம். அவ்வாறு நீ நடப்பதால் நிச்சயமாக நீர் பூமியை(ஆழத்தால்) பிளந்து விடவே மாட்டீர். இன்னும் உயரத்தால் மலைகளை அடைந்து விடவே மாட்டீர்.

அதாவது கர்வமாக நடந்தால் பூமியைப் பிளக்க மாட்டீர் என்ற சாதாரண செய்தி தான் இதில் உள்ளது. எந்த அறிவியல் உண்மையும் இதில் இல்லை.

மேலும் உண்மைக்கு மாறான செய்தியாகவும் இது அமைந்துள்ளது. கர்வமாக இருந்தாலும் கர்வமாக இல்லாவிட்டாலும் மனிதனால் பூமியைப்யைப் பிளக்க முடியும். இந்த உண்மைக்கு மாற்றமாக இக்பால் மதனியின் தமிழாக்கம் அமைந்துள்ளது.

17.37 வசனத்துக்கு பீஜேயின் தமிழாக்கத்தின் படி

பூமியைப் பிளந்து மலையின் உயரம் அளவுக்குக் கீழே செல்ல முடியாது

என்ற அறிவியல் உண்மை அடங்கி மாபெரும் அற்புதமாக அமைந்துள்ளது.

இதைத் தான் பீஜே பின்வருமாறு தனது தமிழாக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  1. பூமியின் ஆழத்திற்குச் செல்ல முடியாது

விண்வெளிப் பயணம் போக முடியும் என்று சொல்கின்ற திருக்குர்ஆன், விண்வெளிப் பயணம் செல்லும் போது இதயம் சுருங்கி விடும் என்று விளைவையும் கூட சொல்லித் தருகின்ற திருக்குர்ஆன், பூமிக்கு அடியில் மலையின் நீளத்திற்குப் போக முடியாது என்று (17:37) சொல்கின்றது.

இவ்வசனம் மிகப் பெரிய அறிவியல் முன்னறிவிப்பாக அமைந்துள்ளது.

தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் இவ்வசனத்திற்குத் தவறான மொழி பெயர்ப்பைச் செய்து, இவ்வசனத்தை அர்த்தமற்றதாக ஆக்கியுள்ளனர்.

"நீ பூமியில் அகந்தையுடன் நடக்காதே! ஏனெனில் நீ பூமியைப் பிளக்கவுமில்லை. மலையின் உயரத்தை அடையவுமில்லை'' என்ற கருத்துப் படவே பெரும்பாலான மொழி பெயர்ப்புக்கள் அமைந்துள்ளன.

ஆரம்ப காலம் முதல் சுரங்கம் வெட்டுதல், கிணறு தோண்டுதல், அணைகள், கண்மாய்கள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளுக்காக மனிதர்கள் பூமியைப் பிளந்து கொண்டு தான் வருகின்றனர். குர்ஆன் அருளப்பட்ட காலத்திலும் இப்பணிகள் நடந்து வந்தன. அப்படி இருக்கும் போது, நீ பூமியைப் பிளக்கவில்லை என்று எப்படிக் கூற முடியும் என்பதை இவர்கள் சிந்திக்கவில்லை.

மேலும் பூமியைப் பிளப்பதற்கும், மலையின் உயரத்தில் இருப்பதற்கும் பெருமையடிக்கக்கூடாது என்ற செயலுடன் எந்தச் சம்பந்தமும் இல்லை.

இவ்வசனத்தின் சரியான பொருள் இது தான்.

"நீ பூமியைப் பிளந்து மலையின் உயரத்தை அடையவில்லை''

மனிதன் ஆகாயத்தில் எவ்வளவோ உயரத்திற்குச் செல்கிறான். அது மனிதனுக்கு எளிதாக இருந்தாலும் பூமியின் ஆழத்தில் அப்படியெல்லாம் செல்ல முடியாது. பெரிய மலையின் உயரம் எவ்வளவோ அவ்வளவு ஆழத்திற்கு மனிதனால் பூமியைப் பிளந்து செல்ல முடியாது என்பது தான் இவ்வசனம் கூறும் கருத்தாகும்.

நடக்க முடியாத இந்த அரிய செயலை உன்னால் செய்ய முடியும் என்றால் நீ பெருமையடிப்பதில் ஏதாவது பொருள் இருக்கும் என்று இறைவன் இடித்துரைக்கிறான்.

இதில் அடங்கியுள்ள அறிவியல் உண்மை என்னவென்பதைப் பார்ப்போம்.

மனிதன், பூமிக்கு மேலே 3,56,399 கி.மீ. தொலைவுடைய சந்திரனுக்கு ஆளை அனுப்பி அதன் உயரத்தை அடைந்து விட்டான். மேலும் பூமிக்கு மேலே 8 கோடி கி.மீ. தொலைவிலுள்ள செவ்வாய் கிரகத்துக்கு இயந்திரத்தை அனுப்பி அதன் உயரத்தை மனிதன் அடைந்து விட்டான்.

பூமியின் குறுக்களவு 12,756 கி.மீ. ஆகும். அதாவது பூமியின் ஒரு முனையிலிருந்து அதன் எதிர் முனை வரையுள்ள தூரம் (விட்டம்) 12,756 கி.மீ. ஆகும்.

இதில் மனிதன் சென்றடைந்துள்ள தூரம் 3.3 கி.மீ. மட்டுமே. தென் ஆப்பிரிக்காவில் உள்ள உலகின் மிக ஆழமான சுரங்கம் எனப்படும் டிரான்ஸ் வால் பாக்ஸ்பர்க் என்ற இடத்திலுள்ள சுரங்கத்தின் ஆழம் இது தான்.

உண்மையில் இது கூடச் சரியான அளவு என்று சொல்ல முடியாது. ஏனெனில் இந்தப் பகுதி கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து அளவிட்டால் இந்தச் சுரங்கத்தின் ஆழம் 1700 மீட்டர் மட்டுமே! அதாவது 2 கி.மீ. கூட பூமியின் ஆழத்தில் மனிதன் செல்லவில்லை.

உலகின் மிக உயரமான இமய மலையின் உயரம் 9 கி.மீ. ஆகும். இந்த 9 கி.மீ. ஆழத்திற்கு, அதாவது மலையின் உயரம் அளவுக்குப் பூமியில் மனிதன் செல்ல முடியாது என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கிறார்கள்.

பூமியின் மேற்பரப்பில் சராசரியாக 40 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தையே மனிதனால் தாங்க முடியாது. கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் ஆழமுள்ள மேற்கண்ட சுரங்கத்தில் 57 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உள்ளது. தொழிலாளர்களுக்கு இந்த வெப்பம் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் அதன் அருகிலுள்ள பகுதிகள் குளிரூட்டப்பட்டுள்ளன. பூமிக்கு அடியில் 700 மீட்டர் கடந்து விட்டாலே காற்று, முகத்தைச் சுட்டுப் பொசுக்கும் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந் துள்ளனர். எனவே மலையின் உயரமான 9 கி.மீ. அளவுக்குப் பூமிக்குள் செல்வது சாத்தியமே இல்லை.

மேலும் பூமியின் ஆழத்தில் செல்லச் செல்ல புவி ஈர்ப்பு விசையும் அதிகரிக்கின்றது. இதன் காரணமாகவும் பூமியின் ஆழத்தில் மனிதன் செல்ல முடியாது.

இந்தப் பேருண்மைகளை 14 நூற் றாண்டுகளுக்கு முன்பே பறைசாற்றியதன் மூலம் திருக்குர்ஆன் இறை வேதம் என்பது நிரூபணமாகின்றது.

இந்த அறிவியல் உண்மை இவ்வசனத்தில் உள்ளது என்று இஸ்மாயீல் சலபி உண்மை உதயம் அக்டோபர் 2009 இதழில் மெய்சிலிர்க்க வைக்கும் அறிவியல் உண்மைகள் என்ற தலைப்பில் எழுதியுள்ளார். இக்பால் மதனியின் தமிழாக்கத்தில் இந்த அறிவியல் உண்மை இருக்கிறதா?

இவ்விரு தமிழாக்கத்தில் இக்பால் மதனி கூறுவது தான் சரி என்றால் பீஜேயின் தவறான மொழிபெயர்ப்பை போட்டு அதன் படி எவ்வாறு வாதிட்டுள்ளீர்கள்?

இக்பால் மதனி தமிழாக்கம் தவறு என்றால் அதை அறிவிக்க உங்களுக்குத் துணிவு இருக்கிறதா?

இரத்தக்கட்டியா? சினை முட்டையா?

திருக்குர் ஆன் 23:14 வசனத்துக்கு இக்பால் மதனி பின்வருமாறு மொழி பெயர்த்துள்ளார்.

இந்திரியத்தை இரத்தக் கட்டியாக ஆக்கினோம்

இந்திரியம் இரத்தக் கட்டியாக ஆவதில்லை என்பதால் இவரது தவறான தமிழாக்கம் விஞ்ஞானத்தை மறுக்கும் வகையில் உள்ளது.

ஆனால் பீஜே பின்வருமாறு மொழிபெயர்த்துள்ளார்.

பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினைமுட்டையாக்கினோம்.

இப்படி தமிழாக்கம் செய்து விட்டு அதைப் பின்வருமாறு பீஜே விளக்கியுள்ளார்.

  1. கருவுற்ற சினை முட்டை

இவ்வசனங்களில் (22:5, 23:14, 40:67, 75:38, 96:2) மனிதனின் துவக்க நிலையைச் சொல்லும்போது அலக், அலக்கத் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இச்சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உள்ளன.

இரத்தக் கட்டி, தொங்கிக் கொண்டிருக்கும் நிலை, ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொண்டது என்று இதற்குப் பொருள் உண்டு.

இந்த இடத்தில் இரத்தக் கட்டி என்று பொருள் கொள்ள முடியாது. கருவில் இரத்தக் கட்டி என்று ஒரு நிலை இல்லை. தொங்கிக் கொண்டிருக்கும் நிலை எனவும் பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் மனிதனின் மூலத்தைக் கூறும்போது அது ஒரு பொருளாகத்தான் இருக்க முடியும். தொங்கும் நிலை என்பது ஒரு பொருள் அல்ல.

மனிதப் படைப்பு பற்றி இறைவன் வரிசைப்படுத்திக் கூறும்போது, முதலாவதாக நுத்ஃபா என்ற மூலப்பொருளைக் குறிப்பிடுகிறான். இரண்டாவதாக அலக்கத் என்ற மூலப்பொருளைக் குறிப்பிடுகிறான்.

நுத்ஃபா என்பது ஆணுடைய விந்திலுள்ள உயிரணுக்களாகும். மனிதன் உருவாவதற்கு ஆணுடைய நுத்ஃபா எனும் உயிரணு மட்டும் போதாது. பெண்ணுடைய சினை முட்டையுடன் ஆணின் உயிரணு சேரும்போது தான் கரு உருவாகும்.

ஆணின் உயிரணுவும், பெண்ணின் சினைமுட்டையும் இணைந்த கலவை தான் இரண்டாவது மூலப்பொருளாகும்.

இதன்படி திருக்குர்ஆனில் கூறப்பட்ட அலக் என்பது இதைத்தான் குறிக்கும் என்பதை எளிதாக விளங்க முடியும். மேலும் அலக் என்ற சொல், பல அர்த்தங்களைக் கொண்டதாக இருந்தாலும் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொள்வது என்ற பொருளில் தான் மிக அதிகமான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆணுடைய உயிரணு, பெண்ணின் சினை முட்டையுடன் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொள்வதால் இதைக் குறிப்பிட இதை விடப் பொருத்தமான வேறு சொல் இருக்க முடியாது.

இதனால் தான் அலக் என்ற சொல் இடம் பெற்ற எல்லா இடங்களிலும் கருவுற்ற சினைமுட்டை என்று தமிழ்ப்படுத்தியுள்ளோம். இரண்டு பொருள்கள் ஒன்றுடன் ஒன்று கலப்பது என்பது இதன் நேரடிப் பொருள். இதன் கருத்து தான் கருவுற்ற சினைமுட்டை.

இவ்வாறு பீஜே விளக்கியுள்ளார்.

ஆனால் இஸ்மாயீல் ஸலபி இந்த அறிவியல் உண்மை 23:14 வசனத்தில் உள்ளதாக உண்மை உதயம் அக்டோபர் 2009 இதழில் மெய்சிலிர்க்க வைக்கும் அறிவியல் உண்மைகள் என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

ஆனால் இவர் ஏற்றுள்ள இக்பால் மதனியின் இரத்தக் கட்டி என்ற தமிழாக்கத்தின்படி அதில் எந்த அறிவியலும் இல்லை. அறிவியலுக்கு எதிரான கட்ருத்தையே அது தருகிறது.

பீஜேயின் தமிழாக்கத்தின் படி தான் அறிவியல் கருத்துக்கள் உள்ளன.

ஒருவரது கொள்கை சரியானதோ தவறானதோ அக்கொள்கை உடையவரைப் பொருத்தவரை அது சரியானது என்று நம்புகிறார். அவ்வாறு நம்புவதில் அவர் உண்மையாளராகவும் உறுதியுடையவராகவும் இருக்க வேண்டும்.

இக்பால் மதனிக்கு மாற்றமாக அமைந்துள்ள பீஜேயின் தமிழாக்கம் தவறு என்று கருதுபவர் எந்தக் காலகட்டத்திலும் அந்தத் தவறான தமிழாக்கத்தைப் பயன்படுத்தி அதன் அடிப்படையில் வாதங்களை எடுத்து வைக்கக் கூடாது.

அனைத்து வசனங்களைப் பற்றியும் நான் பேசவில்லை. இக்பால் மதனி தமிழாக்கம் செய்ததற்கு நேர் முரணாக நான் தமிழாக்கம் செய்திருந்தால் அதை மட்டும் புறக்கணித்தால் தான் அவருக்கே அதில் நம்பிக்கை இருப்பதாக ஆகும்.

அவ்வாறு இல்லாவிட்டால் அவரிடம் எந்தக் கொள்கையும் கிடையாது என்பது தான் பொருள்.

More Articles …