Sidebar

21
Sun, Jun
சமீபத்திய செய்திகள்

பெண்கள் நீச்சல் குளத்தில் குளிக்கலாமா?

பெண்கள் அவர்களுக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளங்களுக்குச் சென்று குளிப்பது தவறில்லை. ஆனால் சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

நீச்சல் குளத்தின் பொறுப்பாளர் உட்பட எந்த அந்நிய ஆணும் அவர்கள் குளிப்பதைப் பார்க்க முடியாதவாறு தடுப்பும் பாதுகாப்பு இருக்க வேண்டும். மற்ற பெண்களுக்கு தனது அந்தரங்கப் பகுதிகளை வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும். இந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடித்து குளிப்பது தவறல்ல.

பாதுகாப்பான சூழ்நிலை இருந்தாலும் பெண்கள் நீச்சல் குளங்களுக்கு அறவே செல்லக்கூடாது என்று சிலர் தவறாகக் கூறுகின்றனர். இதற்கு இவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

 அபுல் மலீஹ் அல்ஹதலீ கூறுகிறார்

 حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ أَنْبَأَنَا شُعْبَةُ عَنْ مَنْصُورٍ قَال سَمِعْتُ سَالِمَ بْنَ أَبِي الْجَعْدِ يُحَدِّثُ عَنْ أَبِي الْمَلِيحِ الْهُذَلِيِّ أَنَّ نِسَاءً مِنْ أَهْلِ حِمْصَ أَوْ مِنْ أَهْلِ الشَّيامِ دَخَلْنَ عَلَى عَائِشَةَ فَقَالَتْ أَنْتُنَّ اللَّاتِي يَدْخُلْنَ نِسَاؤُكُنَّ الْحَمَّامَاتِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا مِنْ امْرَأَةٍ تَضَعُ ثِيَابَهَا فِي غَيْرِ بَيْتِ زَوْجِهَا إِلَّا هَتَكَتْ السِّتْرَ بَيْنَهَا وَبَيْنَ رَبِّهَا قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ رواه الترمذي

 ஹிம்ஸ் அல்லது ஷாம் நாட்டைச் சார்ந்த சில பெண்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தனர். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் உங்கள் பெண்களை குளியல் குளங்களுக்கு நீங்கள் தான் அனுப்புகின்றீர்களா? ஒரு பெண் தன்னுடைய கணவன் வீடு அல்லாத வேறு இடத்தில் தன் ஆடையை (கழற்றி) வைத்தால் அவள் தனக்கும் தன்னுடைய இறைவனுக்கும் இடையேயுள்ள திரையைக் கிழித்து விடுகிறாள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள்.

நூல் : திர்மிதீ (2727)

இந்தச் செய்தியை சரியான அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும். ஆயிஷா (ரலி) அவர்கள் வெளியில் ஆடையைக் களையக் கூடாது என்ற நபிமொழியை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அவர்கள் காலத்தில் ஷாம் அல்லது ஹிம்ஸ் பகுதிகளில் இருந்த குளியல் குளங்கள் நபிகளின் இந்தக் கட்டளையை மீறும் வகையில் அமைந்திருந்ததால் தான் ஆயிஷா (ரலி) இப்படி கூறி இருக்கிறார்கள்.

பெண்கள் ஆடையை அவிழ்ப்பது பற்றித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆடையை அவிழ்க்காமல் குளிக்கும் நிலை இருந்தால் அதை இந்தத் தடை கட்டுப்படுத்தாது.

மேலும் கணவனுடைய வீடு என்றால் வீடு என்று இதற்குப் பொருள் கொள்ளக் கூடாது. கணவன் அல்லாத மற்றவர்கள் முன்னால் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். கணவனும் மனைவியும் வேறு ஒரு உறவினரின் வீட்டுக்குச் செல்கின்றனர். இந்த வீட்டில் கணவன் முன்னால் மனைவி ஆடையை அவிழ்க்கக் கூடாது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். கணவன் முன்னால் என்பதைத் தான் கணவன் வீடு என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

பெண்கள் நவீன நீச்சல் குளத்தில் அன்னியர்கள் பார்க்காமலும் ஆடை அவிழ்க்காமலும் குளிக்கும் நிலை இருந்தால் அங்கே குளிப்பது தவறல்ல. இன்றைக்கு பெண்களுக்கான நவீன பாதுகாப்பான நீச்சல் குளங்கள் இருப்பதைப் போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருக்கவில்லை. குளம் குட்டை போன்ற நீர்நிலைகளே பொதுவிடங்களில் இருந்தது. அங்கு சென்று பெண்கள் குளித்து வந்தனர். இவர்கள் குளிப்பதை அந்நிய ஆண்கள் பார்க்க நேரிடும். பாதுகாப்பு அற்ற இது போன்ற நீர்நிலைக்கு சென்று குளிக்கக் கூடாது என்பது தான் நபிகளின் கூற்றிலிருந்து கிடைக்கும் கருத்தாகும்.

எனவே இந்த ஹதீஸின் அடிப்படையில் இஸ்லாமியப் பெண்கள் ஆறு குளம் ஏரி போன்ற நீர்நிலைகளுக்குச் சென்று அறைகுறை ஆடையுடன் குளிக்கக் கூடாது.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி பகுதி ஒதுக்கப்பட்டு மறைக்கப்பட்டு  இருந்தால் அப்போது இது தவறாகாது.

குற்றாலம் போன்ற இடங்களிலும் தீம்ஸ் பார்க்குகளிலும் ஆண்கள் பார்வையில் படாமல் பெண்கள் குளிக்க முடியாது என்பதால் அது போன்ற இடங்களில் குளித்து ஆண்களின் காட்சிப்பொருளாக ஆகக் கூடாது

 ஆனால் இன்று விடுதிகளில் தங்கும் தமபதிகள் கூட ரகசியமாக படம் பிடிக்கப்படுகின்றனர். அது போல் குளியறையிலும் ரகசிய கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

பர்தா அணிந்த நிலையில் பொது இடங்களில் குளிக்கலாமா என்றால் அதுவும் கூடாது. ஏனெனில் பர்தா அணிந்தாலும் தண்ணீரில் மூழ்கி நனையும் போது பர்தா இருக்கமடையும். உடலின் கனபரிமானங்களை வெளிப்படுத்தும். அன்னிய ஆண்கள் பார்க்கும் வகையில் பர்தா அணிந்தும் பொது இடங்களில் குளிக்கக் கூடாது.

பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா?

தாஹிர் அரஃபாத்

பதில் :

அந்நியப் பெண்களை அழைத்துச் செல்வது கூடாது என்பது தெளிவானதாகும்.

மனைவி, தாய், மகள், சகோதரி போன்ற பெண்களாக இருந்தால் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வது குற்றமில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இரு சக்கர வாகனம் இருந்த்தில்லை. ஆனால் அவர்கள் காலத்தில் வழக்கத்தில் இருந்த ஒட்டகம் என்ற வாகனத்தில் தமது மனைவியை பின்னால் அமர வைத்து அழைத்துச் சென்றுள்ளதற்கு ஆதாரம் உள்ளது. இது டூ வீலருக்கும் பொருந்தும்.

حدثنا الحسن بن محمد بن صباح حدثنا يحيى بن عباد حدثنا شعبة أخبرني يحيى بن أبي إسحاق قال سمعت أنس بن مالك رضي الله عنه قال أقبلنا مع رسول الله صلى الله عليه وسلم من خيبر وإني لرديف أبي طلحة وهو يسير وبعض نساء رسول الله صلى الله عليه وسلم رديف رسول الله صلى الله عليه وسلم إذ عثرت الناقة فقلت المرأة فنزلت فقال رسول الله صلى الله عليه وسلم إنها أمكم فشددت الرحل وركب رسول الله صلى الله عليه وسلم فلما دنا أو رأى المدينة قال آيبون تائبون عابدون لربنا حامدون

5968 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபரிலிருந்து (மதீனாவை) நோக்கிப் புறப்பட்டோம். அபூதல்ஹா (ரலி) அவர்கள் சென்று கொண்டிருக்க, அவர்களுக்குப் பின்னால் நான் (வாகனத்தில்) அமர்ந்து கொண்டிருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களுடைய ஒட்டகத்தில்) அவர்களின் துணைவியரில் ஒருவர் (ஸஃபிய்யா) அமர்ந்து கொண்டிருந்தார். அந்த ஒட்டகம் இடறிவிழுந்தது. நான் (அந்த ஒட்டகத்தில்) பெண் இருக்கிறாரே! என்று சொன்னேன். பிறகு நான் (என் வாகனத்திலிருந்து) இறங்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவர் உங்கள் அன்னை என்று சொனனார்கள். பிறகு, நான் சேணத்தைக் கட்டினேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஏறிக் கொண்டு) பயணம் செய்யலானார்கள்.

மதீனாவை நெருங்கிய போது பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாகவும், எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும்,  (அவனைப் போற்றிப்) புகழ்ந்தவர்களாகவும் (நாங்கள் திரும்பிக் கொண்டிருக்கிறோம்) என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 5968

தொழுகையில் பெண்களின் வரிசை எப்படி அமைய வேண்டும்?

சமீபகாலமாக பள்ளிவாசல்களில் புது நடைமுறை ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. பள்ளிவாசலில் தொழுகைக்கு வரும் ஆண்கள் முதல் வரிசையில் இருந்து தொழுகையை ஆரம்பிக்கின்றனர். இது சரியான வழக்கமான நடைமுறைதான். ஆனால் பள்ளிவாசலுக்குப் பெண்கள் வந்து தொழும் போது ஆண்கள் வரிசை முடிந்தவுடன் அங்கிருந்து தங்கள் வரிசயைத் துவக்காமல் பள்ளிவாசலின் கடைசியில் நிற்கிறார்கள். கடைசி வரிசை தான் பெண்களுக்குச் சிறந்தது என்று ஹதீஸ் உள்ளதால் கடைசி வரிசையை முதலில் பூர்த்தி செய்து விட்டு அதற்கு முந்திய வரிசை என்ற அடிப்படையில் வரிசையை நிரப்ப வேண்டும் என்பது தான் அந்தப் புதிய நடைமுறை.

இந்த நடைமுறைக்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸைக் காட்டுகிறார்கள்.

664حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرُ صُفُوفِ الرِّجَالِ أَوَّلُهَا وَشَرُّهَا آخِرُهَا وَخَيْرُ صُفُوفِ النِّسَاءِ آخِرُهَا وَشَرُّهَا أَوَّلُهَا حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي الدَّرَاوَرْدِيَّ عَنْ سُهَيْلٍ بِهَذَا الْإِسْنَادِ  رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆண்களுடைய வரிசைகளில் சிறந்தது முதல் வரிசையாகும். அவற்றில் தீயது கடைசி வரிசையாகும். பெண்களுடைய வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும். அவற்றில் தீயது முதல் வரிசையாகும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம்

பெண்கள் பள்ளியின் கடைசி இடத்தில் முதல் வரிசையை அமைக்க வேண்டும். அடுத்து வரும் பெண்கள் அவர்களுக்கு முன்பாக இரண்டாவது வரிசையை அமைக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

அதாவது ஆண்கள் முன்னால் இருந்து வரிசையை துவக்குவார்கள். இதைப் போன்று பெண்கள் தங்களுடைய வரிசைகளை அமைக்காமல் இதற்கு நேர்மாறாக பின்னால் இருந்து வரிசையைத் துவக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதற்கு இவர்கள் மேற்கண்ட நபிமொழியை ஆதாரமாகக் கூறுகின்றனர்.

இந்த நபிமொழியின் சரியான பொருளை அறியாத காரணத்தால் இப்படிப்பட்ட தவறான சட்டத்தைக் கூறுகின்றனர். எனவே இந்த நபிமொழி தொடர்பான சரியான விளக்கத்தை அறிந்து கொள்வோம்.

இதை மேலோட்டமாகப் பார்க்கும் போது இவர்களின் செயலுக்கு ஆதாரமாக இருப்பது போல் தோன்றலாம். ஆனால் கவனமாகச் சிந்தித்தால் இவர்களின் செயல் இந்த ஹதீஸுக்கு எதிரானது என்பதை நாம் அறியலாம்.

முதல் காரணம்

பெண்கள் வரிசையில் கடைசி வரிசை சிறந்தது என்று இதில் கூறப்பட்டுள்ளது. பள்ளிவாசலின் கடைசி என்று இதில் கூறப்படவில்லை. வரிசைகளில் கடைசி என்று தான் கூறப்பட்டுள்ளது. கடைசி வரிசை என்று ஒன்றைக் கூறுவதாக இருந்தால் அதற்கு முன் சில வரிசைகள் – குறைந்தபட்சம் ஒரு வரிசையாவது இருக்க வேண்டும். அப்படில் இல்லாவிட்டால் அதைக் கடைசி என்று கூற முடியாது. இவர்கள் கடைசியாக நின்ற வரிசை அளவுக்கு மட்டும் பெண்கள் வந்தால் இவர்கள் கடைசி என்று நினத்தது முதல் வரிசையாகி விடும்.

இப்போது கடைசி வரிசை சிறந்தது என்ற இவர்களின் ஆசை நிறைவேறாமல் போய்விடும்.

இரண்டாம் காரணம்

எந்த ஒரு தொடரும் ஒன்றிலிருந்து இரண்டு மூன்று என்று தான் தொடங்கும். கடைசியில் இருந்து தொடங்காது. கடைசி இடத்தில் இருந்து துவக்கினால் இவர்கள் முதலில் வந்து அந்த இடத்தை நிரப்பியதால் இவர்கள் தான் முதல் வரிசையாக ஆகிவிடுவார்கள். எது முதலில் அமைந்த வரிசையோ அதுதான் முதல் வரிசையாகும். முதலில் அமைந்தது கடைசி வரிசையாக ஆக முடியாது.

எனவே இவர்கள் பள்ளியின் கடைசியில் போய் நின்றாலும் இவர்களின் வரிசை தான் முதலில் அமைவதால் இவர்கள் முதல் வரிசையில் நின்றவர்களாகத் தான் ஆவார்கள். இவர்கள் ஆசைப்பட்டபடி கடைசி வரிசையில் நின்றவர்களாக முடியாது.

மூன்றாவது காரணம்

எது சிறந்த்து என்பதை அறிவதற்கு முன்னர் எது முதல் வரிசை என்பதை நாம் அறியக் கடமைப்பட்டுள்ளோம். இந்தச் செய்தியில் பெண்களின் வரிசைகளில் எது முதலாவது? எது இறுதியானது? என்பதை நபியவர்கள் தெளிவாகக் கூறியிருக்கின்றார்கள்.

இதைக் கவனித்தால் பெண்கள் இறுதியிலிருந்து வரிசையைத் துவக்க வேண்டும் என்ற கருத்துக்கு இந்தச் செய்தி நேர் எதிராக இருப்பதை அறியலாம்.

ஆண்களின் இறுதி வரிசையை அடுத்துள்ள பெண்களின் வரிசையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதல் வரிசை என்று இந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே பெண்களுடைய வரிசையின் துவக்கம் ஆண்களை அடுத்துத் தான் இருக்க வேண்டும் என்பதை இதிலிருந்து அறியலாம்.

மேலும் பெண்களின் இறுதி வரிசையை கடைசி வரிசை என்றே நபி (ஸல்) அவர்கள் இந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்கள். எதை நபியவர்கள் இறுதி என்று சொன்னார்களோ அங்கிருந்து வரிசையைத் துவங்கினால் அதை இறுதி வரிசை என்று சொல்ல முடியாது. மாறாக அது முதல் வரிசையாகிவிடும். முதலாவது என்று நபியவர்கள் கூறியது இறுதி வரிசையாகவும் ஆகிவிடும். இது நபியவர்களின் சொல்லுக்கு மாற்றமான முடிவாகும்.

எனவே பெண்கள் இறுதியிலிருந்து வரிசையைத் துவங்க வேண்டும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என்பது தவறான வாதமாகும். இறுதியில் இருந்து எதையும் துவக்க முடியாது.

சரியான விளக்கம் என்ன?

பிறகு ஏன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களின் வரிசைகளில் முதலாவது தீயது என்றும், கடைசி வரிசை நல்லது என்றும் கூற வேண்டும் என்ற கேள்விக்கு வருவோம்.

முதல் வரிசை சிறந்தது என்றும், கடைசி வரிசை கெட்டது என்றும் சொல்லப்பட்டுள்ளதால் தொழுகை துவங்கும் போது பல வரிசையில் நிற்கும் அளவுக்கு ஆட்கள் இருந்தால் தான் இப்படிச் சொல்ல முடியும்.

இப்படி அதிகமான அளவுக்கு ஆண்கள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆண்கள பொறுத்தவரை முதலாவது வரிசையில் நிற்பது அவர்களுக்கு ஆர்வமூட்டப்பட்டுள்ளது. எனவே ஆண்கள் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு முதல் வரிசைக்குச் செல்ல ஆசைப்பட வேண்டும். முதல் வரிசையில் இடம் கிடைக்காவிட்டால் அடுத்த வரிசையில் நின்று கொள்ளலாம். இதை உணர்த்தும் விதமாகவே ஆண்களின் வரிசைகளில் முதலாவது சிறந்தது என்றும் இறுதி தீயது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுபோல் அதிகமான அளவுக்குப் பெண்கள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆண்களுடன் தொழும் பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு முதல் வரிசையில் நிற்க போட்டி போடக் கூடாது.

முதலாவது வரிசையில் இடம் கிடைத்தால் நின்று தொழுது கொள்ளலாம். கிடைக்காவிட்டால் முதலாவது வரிசையில் நிற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று கவலைப்பட வேண்டியதில்லை. மாறாக பின்னால் நிற்பது தான் சிறந்தது என்று எண்ணி இதை நல்லதாக எண்ணிக் கொள்ள வேண்டும்.

பெண்களின் வரிசைகளில் முதலாவது தீயது என்றால் முதலாவது வரிசையில் நிற்கக்கூடாது என்பது இதன் பொருள் அல்ல. முதலாவது வரிசை நிற்பது தவறில்லை என்றாலும் இதில் போட்டிபோட்டு விரும்பி தேர்வு செய்யும் அளவுக்கு இது சிறந்தது அல்ல என்பது இதன் கருத்தாகும்.

எனவே பெண்கள் இறுதியிலிருந்து வரிசையைத் துவக்க வேண்டும் என்று கூறுவதற்கு இந்த நபிமொழியில் எந்த ஆதாரமும் இல்லை. இறுதியில் இருந்து துவக்க முடியாது என்பதால் இதற்கு அர்த்தமும் இல்லை.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் அவர்களைப் பின்பற்றித் தொழும் போது ஆண்கள் வரிசை எந்த இடத்தில் முடிகின்றதோ அந்த இடத்தில் தான் பெண்கள் வரிசையை ஆரம்பித்துள்ளனர் என்பதைப் பின்வரும் ஹதீஸில் இருந்து அறியலாம்.

5235  حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ الْوَارِثِ وَحَجَّاجُ بْنُ الشَّاعِرِ كِلَاهُمَا عَنْ عَبْدِ الصَّمَدِ وَاللَّفْظُ لِعَبْدِ الْوَارِثِ بْنِ عَبْدِ الصَّمَدِ حَدَّثَنَا أَبِي عَنْ جَدِّي عَنْ الْحُسَيْنِ بْنِ ذَكْوَانَ حَدَّثَنَا ابْنُ بُرَيْدَةَ حَدَّثَنِي عَامِرُ بْنُ شَرَاحِيلَ الشَّعْبِيُّ شَعْبُ هَمْدَانَ أَنَّهُ سَأَلَ فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ أُخْتَ الضَّحَّاكِ بْنِ قَيْسٍ وَكَانَتْ مِنْ الْمُهَاجِرَاتِ الْأُوَلِ فَقَالَ حَدِّثِينِي حَدِيثًا سَمِعْتِيهِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تُسْنِدِيهِ إِلَى أَحَدٍ غَيْرِهِ فَقَالَتْ لَئِنْ شِئْتَ لَأَفْعَلَنَّ فَقَالَ لَهَا أَجَلْ حَدِّثِينِي فَقَالَتْ نَكَحْتُ ابْنَ الْمُغِيرَةِ وَهُوَ مِنْ خِيَارِ شَبَابِ قُرَيْشٍ يَوْمَئِذٍ فَأُصِيبَ فِي أَوَّلِ الْجِهَادِ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا تَأَيَّمْتُ خَطَبَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ فِي نَفَرٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَخَطَبَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَوْلَاهُ أُسَامَةَ بْنِ زَيْدٍ وَكُنْتُ قَدْ حُدِّثْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَحَبَّنِي فَلْيُحِبَّ أُسَامَةَ فَلَمَّا كَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ أَمْرِي بِيَدِكَ فَأَنْكِحْنِي مَنْ شِئْتَ فَقَالَ انْتَقِلِي إِلَى أُمِّ شَرِيكٍ وَأُمُّ شَرِيكٍ امْرَأَةٌ غَنِيَّةٌ مِنْ الْأَنْصَارِ عَظِيمَةُ النَّفَقَةِ فِي سَبِيلِ اللَّهِ يَنْزِلُ عَلَيْهَا الضِّيفَانُ فَقُلْتُ سَأَفْعَلُ فَقَالَ لَا تَفْعَلِي إِنَّ أُمَّ شَرِيكٍ امْرَأَةٌ كَثِيرَةُ الضِّيفَانِ فَإِنِّي أَكْرَهُ أَنْ يَسْقُطَ عَنْكِ خِمَارُكِ أَوْ يَنْكَشِفَ الثَّوْبُ عَنْ سَاقَيْكِ فَيَرَى الْقَوْمُ مِنْكِ بَعْضَ مَا تَكْرَهِينَ وَلَكِنْ انْتَقِلِي إِلَى ابْنِ عَمِّكِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو ابْنِ أُمِّ مَكْتُومٍ وَهُوَ رَجُلٌ مِنْ بَنِي فِهْرٍ فِهْرِ قُرَيْشٍ وَهُوَ مِنْ الْبَطْنِ الَّذِي هِيَ مِنْهُ فَانْتَقَلْتُ إِلَيْهِ فَلَمَّا انْقَضَتْ عِدَّتِي سَمِعْتُ نِدَاءَ الْمُنَادِي مُنَادِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنَادِي الصَّلَاةَ جَامِعَةً فَخَرَجْتُ إِلَى الْمَسْجِدِ فَصَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكُنْتُ فِي صَفِّ النِّسَاءِ الَّتِي تَلِي ظُهُورَ الْقَوْمِ فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ جَلَسَ عَلَى الْمِنْبَرِ  ………………            مسلم

ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) கூறுகிறார்:

…………….. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட உடன் நான் பள்ளிவாசலுக்குச் சென்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து தொழுதேன். அப்போது ஆண்களின் முதுகை ஒட்டி அமைந்துள்ள பெண்கள் வரிசையில் நான் நின்று கொண்டேன்.

என்று குறிப்பிடுகிறார்.

நூல் : முஸ்லிம்

ஆண்கள் வரிசை எந்த இடத்தில் முடிகின்றதோ அங்கிருந்து பெண்கள் வரிசை ஆரம்பிக்கிறது என்பது இதில் இருந்து தெரிகிறது. இந்தப் பெண்மணி தாமதமாகச் சென்று இருந்தால் கடைசியில் இருந்து பெண்கள் வரிசை நிரப்பப்பட்டு இவர் நின்ற வரிசை கடைசியாக நிரம்பி இருக்கலாம் என்று சமாளிக்கலாம். ஆனால் இவர் இகாமத் சொன்ன உடன் பள்ளிக்கு வந்து ஆண்களை அடுத்த வரிசையில் சேர்ந்து கொண்டார் என்பது இவ்வாசகத்தில் இருந்து தெளிவாகத் தெரிகின்றது.

மேலும் ஒரு சட்டத்தை நாம் சொல்வதாக இருந்தால் அது போன்றுள்ள அனைத்து இடத்திற்கும் அது பொருந்த வேண்டும்.

பெண்கள் தங்கள் வரிசையைக் கடைசியிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்றால் பெரிய பள்ளிவாசல்களில் அதைச் செயல்படுத்த இயலாது. உதாரணமாக மஸ்ஜித் நபவியில் பெண்கள் கடைசி வரிசையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்றால் பெண்களின் கடைசி வரிசை எது? எந்த இடத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்? எவ்வளவு பேர் வந்து கலந்து கொள்வார்கள் என்பதை நாம் கணிக்க முடியாது என்பதால் அவர்கள் எந்த இடத்தை முதலில் நிரப்ப வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியாமல் போய்விடும்.

பெண்களுக்கு பாதி சொத்துரிமை சரியா?

ஆண்களை விட பெண்களுக்கு சொத்துரிமையில் பாதி என்பது சரியா? இதை விமர்சிப்பவர்களுக்கு நாம் எப்படி பதில் அளிப்பது?

இது குறித்து இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா என்ற நூலில் விளக்கியுள்ளோம். அதையே பதிலாகத் தருகிறோம்

பாகப்பிரிவினை

இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் ஆண்களுக்கு இரு பங்குகளும் பெண்களுக்கு ஒரு பங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பெண்களுக்கு அநீதி இழைக்கின்றது என்பதும் முஸ்லிமல்லாதாரின் குற்றச் சாட்டுகளில் ஒன்றாகும்.

பலமுடையவர்களாகவும், பொருளைத் திரட்டுவதற்கான வாய்ப்புகளை அதிகம் பெற்றவர்களாகவும் உள்ள ஆண்களுக்குக் குறைந்த அளவும், பலவீனர்களாகவும், பொருளீட்டும் வாய்ப்புகளைக் குறைவாகப் பெற்றவர்களாகவும் உள்ள பெண்களுக்கு அதிக அளவும் வழங்குவதே நியாயமானதாகும். அதிகச் சொத்துரிமைக்குப் பெண்களுக்கே அதிகத் தகுதி இருக்கும் போது இருவருக்கும் சம அளவில் வழங்குவதே நியாயமாக இராது. இந்நிலையில் - ஆணுக்குக் கிடைப்பதில் பாதியளவு தான் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டுமென்பது மாபெரும் அநீதியாகும். இப்படி அவர்களின் குற்றச்சாட்டு விரிவடைகின்றது.

இஸ்லாம் மார்க்கத்துக்கு முன் உலகில் பெண்களுக்கு சொத்துரிமை இருந்ததில்லை. பெற்றோர்களின் சொத்துக்களிலிருந்தோ, ஏனைய உறவினர்களின் சொத்துக்களிலிருந்தோ பெண்கள் வாரிசுரிமை பெறுவதுமில்லை.

இஸ்லாம் மார்க்கம் தான் முதலில் பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கியது. இஸ்லாம் மார்க்கம் வந்த பின்பு கூட பல நூற்றாண்டுகளாக முஸ்லிமல்லாத சமுதாயத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை இருந்ததில்லை.

பெண்களுக்குச் சொத்துரிமை உள்ளது என்று சமீப காலத்தில் தான் நமது நாட்டில் சில பகுதிகளில் சட்டமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழக அரசு பெற்றோர்களின் சொத்துக்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம அளவிலான உரிமை உண்டு என்று கருணாநிதி ஆட்சியின் போது சட்டமியற்றியது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்குச் சொத்துரிமையை வழங்கியது.

அறிவுப்பூர்வமான, நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் ஆண்களுக்கு இரு மடங்குகளும், பெண்களுக்கு ஒரு மடங்கும் எனப் பாகப்பிரிவினைச் சட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்களுக்கே கூடுதல் சுமை.

இஸ்லாமியச் சமூக அமைப்பில் பெண்களை விட ஆண்கள் மீது கூடுதலான சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒரு ஆண் தனது மனைவிக்கு உணவும், உடையும்,  உறைவிடமும் வழங்கக் கடமைப்பட்டிருக்கிறான். ஒரு பெண் தன் கணவனுக்காக இதைச் செய்ய வேண்டியதில்லை.

ஒரு ஆண் தன் குழந்தைகளின் பராமரிப்புச் செலவையும் சுமக்கக் கடமைப்பட்டுள்ளான். குழந்தையின் உற்பத்தியிலும், வளர்ச்சியிலும் கூடுதலாகப் பங்கெடுத்துக் கொண்ட பெண் தன் குழந்தைகளின் பராமரிப்புச் செலவுக்குக் கூடப் பொறுப்பாளியாக மாட்டாள்.

தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை மற்றும் தூரத்து, நெருங்கிய உறவினர்கள் ஆகியோர் சிரம தசையிலிருக்கும் போது அவர்களையும் பராமரிக்கும் கடமை ஆண்களுக்கு இருக்கின்றது.

பெண்களைப் பொறுத்த வரை இது போன்ற கடமைகள் எதுவும் அவர்களுக்குக் கிடையாது.

இஸ்லாமியச் சமூக அமைப்பில் மட்டுமின்றி ஏனைய சமூகங்களிலும் கூட இந்த நிலையை நாம் காணலாம். இந்த அடிப்படையான விஷயத்தை மறந்து விடுபவர்கள் தாம் இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தை குறை கூறக் கூடியவர்கள்.

யாருக்குத் தேவைகள் அதிக அளவு இருக்கின்றதோ அவர்களுக்குக் கூடுதலாகவும், யாருக்குத் தேவைகள் குறைந்த அளவு இருக்கின்றதோ அவர்களுக்குக் குறைவாகவும் வழங்குவது எந்த விதத்தில் அநீதியாகும்?

ஒரு ஆண், வாரிசுரிமை மூலம் பெண்ணை விட இரு மடங்குகள் பெற்றாலும் அவை போதாது என்ற அளவுக்கு அவன் மீது கடமைகள் உள்ளன. ஒரு பெண் ஒரு மடங்கைப் பெற்றாலும் அவளுக்கு அது தேவையில்லை என்ற அளவுக்குப் பொறுப்புகளிலிருந்து அவளுக்கு விலக்களிக்கப்படுகின்றது.

தனக்காகக் கூட இன்னொரு ஆண் செலவு செய்ய வேண்டும் என்ற அளவுக்கு அவளது சொத்துக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது.

எனவே ஆண்களுக்கு இரு பங்குகளும் பெண்களுக்கு ஒரு பங்கும் என்ற இஸ்லாமிய பாகப் பிரிவினைச் சட்டம் அறிவுக்குப் பொருத்தமான நியாயமான சட்டமாகும் என்பது தெளிவு!

பெண்ணின் சொத்து அன்னியருக்குச் சேரும்.

ஒவ்வொரு மனிதனும் தனது சொத்துக்கள் தன் மரணத்திற்குப் பிறகு தன் இரத்த சம்மந்தமுடையவர்களுக்குச் சேர வேண்டுமென விரும்புகிறான். தன் குடும்பத்திற்குள்ளேயே அந்தச் சொத்துக்கள் செலவிடப்பட வேண்டும் என்றும் விரும்புகிறான். இந்த விருப்பத்தில் நியாயமும் இருக்கின்றது. எல்லா மனிதரும் விரும்பக் கூடிய இந்த விருப்பம் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது நிறைவேற்றப்படுவதற்கு வாரிசுரிமைச் சட்டத்தில் இந்தப் பாரபட்சம் காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.

உதாரணமாக ஒரு மனிதனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும், மனைவியும் சில சகோதர சகோதரிகளும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தச் சகோதர சகோதரிகள் மிகவும் ஏழ்மையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.

அவனது மரணத்திற்குப் பின்னர் அவனது மகளுக்குச் சேரும் ஒரு பங்கு அவனது இரத்த பந்தங்களுக்குச் செலவிடப்படாது. அது இன்னொரு குடும்பத்துக்குப் போய்ச் சேரும். அந்த மகள் தனக்கே அதை வைத்துக் கொள்ள முடியும் என்றாலும் கணவனுக்காக அனைத்தையும் வழங்கி விடுதல் என்ற பலவீனம் இல்லாத பெண்கள் அரிது.

கணவனின் நலனுக்காகக் காதுகளில், கழுத்துகளில் கிடப்பதைக் கூட கழற்றிக் கொடுப்பவர்களைக் காண்கின்றோம். இந்த பலவீனத்தினால் அவளுக்குக் கிடைக்கின்ற வாரிசுச் சொத்துக்கள் தாமாக இன்னொரு குடும்பத்துக்குப் போய்ச் சேர்ந்து விடுகின்றன.

ஆனால் மகனுக்குக் கிடைத்த இரு மடங்குச் சொத்துக்கள் தந்தையின் இரத்த சம்மந்தமான உறவுகளுக்காகவும், அவனையும், அவளையும் பெற்ற தாய்க்காகவும் செலவிட ஏற்ற வகையில் இறந்தவனின் குடும்பத்தையே சுற்றி வருகின்றன. இறந்தவனின் இயல்பான விருப்பம் ஓரளவு நிறைவு செய்யப்பட்டு விடுகின்றது. இந்தக் காரணத்தைச் சிந்திக்கும் போது ஆண்களுக்குச் சிறிது அதிகமாக வழங்குவதில் எந்த அநியாயமும் இல்லை என்பதை உணரலாம்.

பெண் கைவிடப்பட்டால் பிறந்த வீடு தான் அவளைப் பாமரிக்க வேண்டும்.

பெண்கள் பலவீனர்களாக இருப்பதனால் அவர்களுக்குக் கூடுதலாக வழங்க வேண்டும் என்று முஸ்லிமல்லாதார் கூறுகின்றனர். பெண்கள் பலவீனர்களாக இருப்பதும் அவர்களின் பங்கைக் குறைத்ததற்கான காரணங்களில் ஒன்றாகும் என்று நாம் கூறுகிறோம்.

அவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கணவனாலும், கணவனது குடும்பத்தினராலும் அவர்களுக்குக் கிடைக்கின்ற சொத்துக்கள் எடுத்துக் கொள்ளப்படலாம். எடுத்துக் கொள்ளப்படுவது கூட பிரச்சனையில்லை. எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு அவள் தள்ளப்பட்டும் விடலாம். இந்த நிலையில் அவளது வருங்காலப் பாதுகாப்புக்கு யார் உத்திரவாதம் தருவது? அவள் பிறந்தகம் தான் வந்தாக வேண்டும். அவளது உடன் பிறந்தவன் தான் அவளையும் பராமரிக்க வேண்டும்.

அவளை விடச் சிறிது கூடுதலாக அவன் பெற்றிருந்தால் தான் உடன் பிறந்தவள் மீது பச்சாதாபம் ஏற்பட முடியும். அவளைத் தொடர்ந்து பராமரிக்க முடியும்.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமான பங்குகள் என்று பிரிக்கப் பட்டால் பாதிச் சொத்தைப் பெற்றுச் சென்றாளே? எனக்குக் கிடைத்தது போன்று தானே இவளுக்கும் கிடைத்தது? இவளை ஏன் நான் கவனிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆண்களுக்கு ஏற்பட்டு அவள் புறக்கணிக்கப்படுவாள்.

ஆண் இரண்டு பங்கைப் பெற்றிருந்தால் நம் சகோதரிக்குக் கிடைத்தது போல் இரு மடங்கை நாம் பெற்றுள்ளோம். எனவே சகோதரியையும் இந்த இக்கட்டான நேரத்தில் நாம் தான் கவணிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இது பெண்களின் எதிர்காலத்துக்குப் பாதுகாப்பாக அமையும்.

சொத்தைப் பெருக்குவதில் ஆண்களின் பங்கு அதிகம்.

பெரும்பாலும் சொத்துக்களைப் பெருக்குவதில் ஆண்களே உறுதுணையாக உள்ளனர். ஒரு தந்தைக்கு ஒரு மகனும் மகளும் இருந்தால் அந்தத் தந்தைக்குச் சொந்தமான நிறுவனங்களில் தந்தைக்கு உறுதுணையாக ஆண்களே இருக்கின்றனர். சொத்து பெருகுவதில் ஆண்களுக்கே அதிக உழைப்பு உண்டு என்பதும் பாரபட்சம் காட்டப்படுவதற்குரிய காரணங்களில் ஒன்றாகும்.

பெரும்பாலும் பெண்கள் தந்தையின் சொத்து வளர்ச்சியில் ஈடுபாடு காட்டுவதில்லை. யார் சொத்து வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறார்களோ அவர்களுக்குக் கூடுதலாக பாகங்கள் வழங்குவதை அநியாயம் என்று எப்படிக் கூற முடியும்?

தந்தையிடமிருந்து அதிகம் பெறுவது பெண்களே.

உணவு, உடை போன்ற செலவினங்கள் ஆண்கள், பெண்கள் இரு பாலருக்கும் சம அளவில் செய்யப்பட்டாலும் இதர வகையில் பெண்களுக்கென்று ஆண்களை விடக் கூடுதலாக செலவு செய்யப்படுகின்றது.

ஒரு தந்தைக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தால் அந்த மகளுக்காக அந்தத் தந்தை ஆபரணங்கள், நகைகள் என்று செய்து போட்டு அழகு பார்க்கிறார். இவை வெறும் அழகு சாதனங்கள் மட்டுமல்ல. பெரும் சொத்துக்களாகவும் உள்ளன. வசதி படைத்தவர்கள் தங்கள் பெண்களுக்காக இலட்சக் கணக்கிலும் வசதியே இல்லாதவர்கள் பல ஆயிரங்களுக்கும் நகைகள் செய்து போடுகின்றனர். இது அந்தப் பெண்களின் சொத்தாகவே ஆகி விடுகின்றது. இது தவிர திருமணத்தின் போது மகளுக்காகச் சீர் என்று பல சாதனங்களையும் தந்தை வழங்குகின்றார்.

தந்தையின் சொத்தில் ஆண்கள் அனுபவிப்பதை விடக் கூடுதலாக பெண்கள் அனுபவிக்கிறார்கள். தந்தையின் மரணத்திற்குப் பிறகு எஞ்சியுள்ள சொத்துக்களில் தான் இரண்டுக்கு ஒன்று என்ற விகிதாச்சாரம் பேணப்படுகின்றதேயன்றி தந்தை உயிருடனிருக்கும் போது பெண்களே அதிக அளவில் பெற்றுக் கொள்கிறார்கள்.

இது போன்ற நியாயமான காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளதை நாம் உணரலாம்.

2.8.2001 தினமணி நாளேட்டில் (சென்னை பதிப்பு) சொத்தில் சமபங்கு! கடமையில்? என்ற கட்டுரை வெளியானது. சுதந்திர தயாகான் அவர்கள் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள முக்கியமான அம்சத்தைச் சிந்தித்தால் இஸ்லாமியச் சொத்துரிமைச் சட்டம் எவ்வளவு அறிவுப்பூர்வமானது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

கட்டுரையின் முக்கியப் பகுதி இதோ...

...எனவே, சொத்தில் சம உரிமை என்பது அதிசயிக்கத்தக்க ஒரு விஷயம் அல்ல. எனினும் சொத்தில் சம உரிமை கொடுக்கப்படும் போது, கடமையிலும் பெண் குழந்தைகள் பங்கு கொள்கிறார்களா என்பது ஆராய வேண்டிய ஒன்று. ஆண் பிள்ளைகளைப் போல், பெண் பிள்ளைகளைப் படிக்க வைத்து, நல்ல வரண் பார்த்து, ஒரு லட்சத்திற்கு நகை, ஒரு லட்சம் திருமணச் செலவு எனப் பெற்றோர் மணம் முடித்து வைக்கிறார்கள். பேறு காலம் பார்த்து, விருந்துக்கு அழைத்து, விடுமுறைக்கு அழைத்து மகிழ்விக்கின்றனர். பின், ஆண் பிள்ளைகளுக்குக் கொடுப்பது போல், பணம், வீடுவாசல் என சொத்திலும் சமபங்கு அளிக்கின்றனர். அவ்வாறு செய்யும் பெற்றோர், வயதான காலங்களில், முடியாத காலங்களில், பெண் பிள்ளைகளுடன் சென்று தங்கி, அவர்கள் கண்காணிப்பில் இருக்க முடியுமா? என்பது கேள்விக்குறியே.

கிடைத்த வரை பெற்றுக் கொண்டு, கொடுத்தவர்களுக்கு முடியாத காலங்களில் அவர்களைக் கவனிக்க வேண்டிய கடமை மகனுக்கு மட்டுமே என்ற நடைமுறை மாற வேண்டும்.

தன் மனைவி வீட்டில் சகலமும் அனுபவிக்கும் மருமகன், தன் மாமனார், மாமியாரை, அவர்களின் வயதான காலங்களில் தம்முடன் வைத்துப் பராமரிக்க முன் வரவேண்டும். உரிமை மகளுக்கு கடமை மகனுக்கு என்ற நிலை வரும் போது மகனும் மருமகளும் சற்று சோர்வடைவதில் வியப்பில்லை.

ஆண் பிள்ளைகளைப் போல், பெண் பிள்ளைகளும் தங்கள் பெற்றோரைப் பராமரிக்க வேண்டும். சொத்தில் சம உரிமை பெறுவதால், தம் சகோதரியும் பெற்றோரைக் கவனித்தால் என்ன? என்று சகோதரர்கள் நினைப்பது இயற்கை. சகோதரிகளுக்கும், பெற்றோருக்கும் கடமை செய்ய மாத்திரமே ஆண் மகன் என்ற நிலை மாற வேண்டும். உரிமையில் சமம் எனில், கடமையிலும் சமபங்கு வகிக்கப் பெண் குழந்தைகள் நிர்பந்திக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.

முதியோர் இல்லங்கள் பெருகுவது ஒருவேளை, பெண் குழந்தைகளுக்கு உரிமை (மட்டும்) சமபங்கு கொடுக்கப் படுவதால் ஏற்பட்ட கால மாற்றத்தின் விளைவோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

இவ்வாறு அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இஸ்லாம் கூறுகின்ற வாரிசுரிமைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் இந்த தீய விளைவுகளை நாம் கண்டிப்பாகத் தவிர்க்க இயலும்.

பெண்களுக்கு ஒன்று ஆண்களுக்கு இரண்டு என்ற வகையில் பங்கீடு செய்வது தான் அறிவுப்பூர்வமானது; பெண்களுக்கும், பெற்றோருக்கும் சிறந்தது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இந்த அடிப்படையில் பார்க்கும் போது இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் காட்டப்படும் இந்த வித்தியாசம் முற்றிலும் நியாயமானதே! அறிவுக்குப் பொருத்தமானதே!

12.03.2011. 2:32 AM

More Articles …