▶️வஹியே இஸ்லாத்தின் அடிப்படை
வஹியே இஸ்லாத்தின் அடிப்படை
வஹியே இஸ்லாத்தின் அடிப்படை
நபிவழிக்கு முரணான மத்ஹப் தரீக்காக்கள்
பாகம் ஒன்று
மார்க்க விஷயத்தில் பெரியார்களிடம் பைஅத் செய்யலாமா?
மார்க்க விஷயத்தில் மனிதனிடம் பைஅத் செய்ய ஆதாரம் உள்ளது என்கிறார்களே?
இப்படிக் கூறுபவர்களும், பைஅத் செய்யாமல் மறுமையில் வெற்றிபெற முடியாது என்று வாதிடும் கூட்டத்தினரும் 48:10, 9:103 வசனங்களை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
நம்மைப் போலவே வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டவரிடம் வணக்க வழிபாடுகள் செய்வதாக எப்படி உறுதிமொழி எடுக்கலாம் என்று நாம் கேள்வி எழுப்புகிறோம்.
அப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டவர்கள் தானே? அவர்களிடம் மட்டும் பையத் செய்யலாமா என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.
பதில் :
இவர்களின் வாதம் அபத்தமானது; அல்லாஹ்வின் தூதருக்கான தகுதி தங்களுக்கும் இருப்பதாகக் கருதுவது ஆணவத்தின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது.
உம்மிடத்தில் உறுதிமொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதிமொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் தம்மிடம் அல்லாஹ் எடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்.
திருக்குர்ஆன் 48 : 10
இந்த வசனத்துக்கு நாம் அளித்த முழு விளக்கத்தையும் (334 வது குறிப்பு) நீங்கள் படித்தால் இவர்கள் கேட்கும் அர்த்தமற்ற கேள்விக்கு நீங்களே பதில் கூறி விடலாம். இதோ அந்த விளக்கம்.
334. பைஅத் என்றால் என்ன?
இந்த வசனங்கள் (48:10, 48:12, 48:18) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் செய்து கொண்ட 'பைஅத்' எனும் உடன்படிக்கை பற்றிப் பேசுகின்றன.
ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்ரா செய்வதற்காக மக்காவை நோக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோழர்களுடன் புறப்பட்டனர்.
நாங்கள் போர் செய்ய வரவில்லை. உம்ரா வணக்கத்தை நிறைவேற்றவே வந்துள்ளோம் என்று மக்காவாசிகளுக்கு தகவல் தெரிவிக்க உஸ்மான் (ரலி) அவர்களை அனுப்பினார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்கள் மக்காவில் உள்ள தலைவர்களிடம் இது குறித்து ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
உஸ்மான் (ரலி) திரும்பி வருவதில் தாமதம் ஏற்பட்டு அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று பொய்யான செய்தி நபிகள் நாயகத்தை எட்டியபோது அவர்கள் கடும் கோபத்துக்கு ஆளானார்கள். தூதர்கள் கொல்லப்படக் கூடாது என்று அனைவரும் ஒப்புக் கொண்ட விதியை மீறியவர்களுக்கு எதிராகப் போர் தொடுப்பது என முடிவு செய்தார்கள்.
போர்க்களத்தில் இருந்து ஒருக்காலும் பின்வாங்க மாட்டோம் என்ற உறுதி மொழியைத் தம் தோழர்களிடமிருந்து பெற்றார்கள். ஒவ்வொரு தோழரும் தம் கையை நபியின் கை மீது வைத்து இந்த உறுதிமொழியை வழங்கினார்கள். இந்த உறுதிமொழிதான் இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளது.
சற்று நேரத்தில் உஸ்மான் (ரலி) திரும்பி வந்து விட்டதாலும், பின்னர் மக்காவாசிகளுடன் ஹுதைபியா எனுமிடத்தில் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டதாலும் இப்போருக்கு அவசியமில்லாமல் போய்விட்டது.
புகாரீ 2698, 2700, 2731, 2958, 4163, 4164, 4170, 1694, 3182, 4178, 4180, 4844 ஆகிய ஹதீஸ்களில் இதன் விபரத்தை அறியலாம்.
முஸ்லிம்களில் உள்ள போலி ஆன்மிகவாதிகளும், ஏமாற்றுப் பேர்வழிகளும், தங்களின் சீடர்களை அடிமைப்படுத்தி வைப்பதற்காகவும், எந்தக் கேள்வியும் கேட்காமல் கண்ணை மூடிக் கொண்டு தங்களைப் பின்பற்றச் செய்வதற்காகவும் இவ்வசனத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் பைஅத் செய்திருப்பதால் எங்களிடமும் பைஅத் செய்யுங்கள் என்று கூறுகின்றனர். இவ்வாறு பைஅத் எனும் உறுதிமொழி எடுத்த பிறகு, யாரிடத்தில் அந்த உறுதிமொழி எடுக்கிறார்களோ அவரைக் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற வேண்டும் எனவும் மூளைச் சலவை செய்கின்றனர்.
இவ்வாறு ஒரு மதகுருவிடம் பைஅத் செய்து விட்டால் அந்த மதகுரு என்ன சொன்னாலும், இஸ்லாத்திற்கு எதிராகவே சொன்னாலும் அதற்குக் கட்டுப்பட வேண்டும்; எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாது என்று கூறி மக்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடித்து வருகின்றனர்.
அறியாத மக்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் அடிமைகளைப் போல் வைத்துக் கொண்டு அவர்களைச் சுரண்டி வருகின்றனர்.
அதுபோல் சில இயக்கத்தினரும் தங்கள் தலைவர்களிடம் பைஅத் என்ற பெயரில் உறுதிமொழி வாங்குகின்றனர்.
தலைவர் எப்போது அழைத்தாலும், எதற்காக அழைத்தாலும் உடனே அந்த அழைப்பை ஏற்க வேண்டும். கொலை செய்யச் சொன்னாலும், யாரையாவது தாக்கச் சொன்னாலும் அதைச் செய்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் பைஅத்தை முறித்த மாபெரும் குற்றம் ஏற்படும் எனக்கூறி மூளைச் சலவை செய்கின்றனர்.
ஆனால் இவ்வசனத்தில் இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் உள்ள சிறப்புத் தகுதி என்று தெளிவாகவே கூறப்பட்டிருக்கிறது.
“உம்மிடத்தில் உறுதிமொழி எடுத்தவர்கள் அல்லாஹ்விடம் உறுதிமொழி எடுக்கிறார்கள்”
என்று அல்லாஹ் கூறுகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட தூதர் என்பதால் அவர்கள் அல்லாஹ்வின் சார்பில் உறுதிமொழி வாங்க அவர்கள் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எடுக்கும் உறுதிமொழி அல்லாஹ்விடம் எடுக்கும் உறுதிமொழியாகும் என்று அல்லாஹ் கூறுவதிலிருந்து இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் உள்ள சிறப்புத் தகுதி என்பதை விளங்கலாம். தூதரிடத்தில் எடுக்கும் உறுதிமொழிகள் பொதுவாகவே அந்தத் தூதரை அனுப்பியவரிடத்தில் எடுக்கின்ற உறுதிமொழி தான்.
நீ என்ன சொன்னாலும் கேட்பேன் என்று அல்லாஹ்விடம் மட்டும் தான் உறுதிமொழி எடுக்கலாம். ஏனெனில் அல்லாஹ் தான் அனைவருக்கும் அதிபதியாவான்.
நீங்கள் என்ன சொன்னாலும் கேட்பேன் என்று அல்லாஹ்வைத் தவிர வேறு எவரிடம் உறுதிமொழி எடுத்தாலும் அவர் அல்லாஹ்வின் இடத்தில் அவனது அடிமைகளில் ஒருவரை வைத்து விட்டார் என்பது தான் பொருளாகும். இது பகிரங்கமான இணைவைத்தலாகும்.
இத்தகைய உறுதிமொழிகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு தலைசிறந்து விளங்கிய பெரிய பெரிய நபித்தோழர்களிடம் மற்றவர்கள் வந்து எடுக்கவே இல்லை.
அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி) ஆகியோரிடம் நீங்கள் என்ன சொன்னாலும் கேட்போம் என்று நபித்தோழர்கள் பைஅத் எடுக்கவில்லை.
பைஅத் பற்றிய திருக்குர்ஆன் வசனங்களையும், நபிமொழிகளையும் ஒருவர் அறியாவிட்டாலும் பைஅத் என்பதன் பொருளை அறிந்து கொண்டாலே பைஅத் கும்பலிடம் சிக்கிக் கொள்ள மாட்டார்.
பைஅத் என்றால் உறுதிமொழி எடுத்தல் என்பது பொருளாகும். எந்தக் காரியம் குறித்து உறுதிமொழி எடுக்கப்படுகிறதோ அந்தக் காரியத்தில் யாருக்குச் சம்மந்தம் உள்ளதோ அவர்களிடம் தான் உறுதிமொழி எடுக்க முடியும். அப்படி எடுத்தால்தான் அது உறுதிமொழியாகும்.
ஃபாத்திமாவைத் திருமணம் செய்வதாக கதீஜாவிடம் உறுதிமொழி எடுக்க முடியாது.
மற்றவருக்குச் சொந்தமான கடையில் உள்ள பொருட்களை உனக்கு விற்பதாக உறுதி கூறுகிறேன் என்று ஒருவர் நம்மிடம் கூறினால் நீ என்ன அந்தக் கடைக்கு முதலாளியா என்று கேட்போம்.
ஒரு கல்லூரியில் சேர்வதற்கு இன்னொரு கல்லூரியில் விண்ணப்பம் கொடுக்க முடியாது. யார் எதற்கு உரிமையாளராகவும், பொறுப்பாளராகவும் இருக்கிறார்களோ அவர்களிடம்தான் உறுதிமொழி எடுக்க முடியும்.
அதுபோல் உரிமையாளரால் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பு வழங்கப்பட்டவரிடம் உறுதிமொழி எடுக்கலாம். என் சொத்தை விற்கும் அதிகாரத்தை யாருக்காவது நான் வழங்கி இருந்தால் அவர் எனது சொத்தை விற்கலாம். வாங்குபவர் அவரிடம் உறுதிமொழி வாங்கலாம்.
உலக விஷயங்களில் நாம் இதைச் சரியாகப் புரிந்து கொள்கிறோம். இதற்கு மாற்றமாக நடப்பவனை மூளை கெட்டவனாகவோ, மனநோயாளியாகவோ கருதுகிறோம். சம்மந்தமில்லாதவரிடம் செய்த ஒப்பந்தம் செல்லாது என்று தெளிவான தீர்ப்பை வழங்கி விடுகிறோம்.
ஆனால் மார்க்க விஷயத்தில் மட்டும் இந்த விழிப்புணர்வை நாம் மழுங்கடித்து விடுகிறோம்.
அல்லாஹ் எஜமான்; நாம் அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகள் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இக்கொள்கை லாயிலாஹ இல்லல்லாஹ்வுக்குள் அடங்கி இருக்கிறது.
அல்லாஹ் எஜமானனாகவும், நாம் அடிமைகளாகவும் இருப்பதால் இறைவா நீ என்ன சொன்னாலும் நான் கேட்பேன் என்று அல்லாஹ்விடம் உறுதிமொழி கொடுக்கலாம். அல்லது அல்லாஹ் என்ன சொன்னாலும் கேட்பேன் என்று அவனால் நியமிக்கப்பட்ட தூதரிடம் உறுதிமொழி கொடுக்கலாம். வேறு எவரிடமும் எடுக்க முடியாது.
நீங்கள் என்ன சொன்னாலும் கேட்பேன் என்ற முழுச் சரணாகதியை அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அளிக்க முடியாது. மனிதன் அல்லாஹ்வுக்கு மட்டும்தான் அடிமையாவான். என்ன சொன்னாலும் கேட்பேன் என்ற உறுதிமொழிக்கு அல்லாஹ் மட்டுமே சொந்தக்காரனாவான். அல்லாஹ்வைத் தவிர இந்த உறுதிமொழியை யார் எடுத்தாலும், யாரிடம் எடுத்தாலும் அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்த மாபாவிகளாவர்.
தரீக்கா என்ற பெயரிலோ, அமீர் என்ற பெயரிலோ யார் பைஅத் எடுத்தார்களோ அவர்கள் தங்கள் குருமார்கள் சொல்லும் மார்க்க விரோதமான காரியங்களிலும் கட்டுப்பட்டு சிந்திக்கும் திறனை அடகுவைத்து விட்டு ஆட்டு மந்தைகள் போல் மாறிவிடுவதை நாம் காண்கிறோம்.
இவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் குற்றத்தைச் செய்கிறார்கள் என்பது இதன் மூலம் உறுதியாகின்றது.
மதகுருவிடம் போய் நீங்கள் என்ன சொன்னாலும் கேட்போம் என்று உறுதிமொழி எடுப்பதும், இயக்கத் தலைவரிடம் போய் நீங்கள் என்ன சொன்னாலும் கட்டுப்படுவோம் என்று உறுதிமொழி எடுப்பதும் இஸ்லாத்தில் மாபெரும் குற்றமாகும்.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் தவிர வேறு எவருக்கும் கட்டுப்படுவதாக ஒருவர் உறுதிமொழி எடுத்தால் அவர் அல்லாஹ்வுடைய இடத்தையும் அல்லாஹ்வின் தூதருடைய இடத்தையும் அவர்களுக்கும் வழங்கியவராவார். அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தவருமாவார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எடுக்கும் பைஅத்தை நிறைவேற்றுவது மட்டுமே மார்க்கக் கடமை. அப்படி இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இயன்றவரை அதை நிறைவேற்றுமாறு தான் பைஅத் எடுத்துள்ளனர்.
நீங்கள் சொல்வதைச் செவியுற்று கட்டுப்படுவேன் என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி எடுத்தேன். அப்போது அவர்கள் "என்னால் இயன்றவரை'' என்று சேர்த்துச் சொல்லுமாறு திருத்திக் கொடுத்தார்கள்.
அறிவிப்பவர் : ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல் : புகாரீ 7204
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எடுத்த உறுதிமொழியைக் கூட அப்படியே நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை. நம்மால் இயன்ற அளவுக்குத்தான் நிறைவேற்ற வேண்டும் என்று நமக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்க போலி ஆன்மிகவாதிகளும், போலித் தலைவர்களும் தங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விட மேலான நிலையில் வைக்க முயற்சிக்கின்றனர். இதன் மூலம் முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றப் பார்க்கின்றனர்.
இப்படி யாரிடம் உறுதிமொழி எடுத்திருந்தாலும் அதை உடனடியாக முறிப்பது மார்க்கக் கடமையாகும். அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விட்டு அதைவிடச் சிறந்ததைக் காணும்போது அந்தச் சத்தியத்தை முறிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.
நான் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து அதைவிட சிறந்ததைக் கண்டால் அந்த சத்தியத்தை முறித்து விட்டு சிறந்ததைச் செய்வேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
பார்க்க : புகாரீ 3133, 4385, 5518, 6649, 6721, 7555
அல்லாஹ்வுடைய இடத்திலும், அல்லாஹ்வின் தூதருடைய இடத்திலும் போலிகளை வைக்கும் வகையில் பைஅத் செய்தவர்கள் அதை நிறைவேற்றக் கூடாது. உடனடியாக அதில் இருந்து விடுபட வேண்டியது மார்க்கக் கடமையாகும்.
ஒருவர் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்கும்போது உங்களை ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொள்கிறோம் என்று மக்கள் உறுதிமொழி எடுக்கலாம். ஏனெனில் இது அவர் சம்மந்தப்பட்ட விஷயமாகும்.
இந்த உறுதிமொழியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அபூபக்கர் (ரலி) அவர்களிடம் மக்கள் செய்தார்கள். அவர்களின் மரணத்திற்குப் பிறகு உமர் (ரலி) அவர்களிடம் செய்தார்கள்.
இவ்வுலகில் நடக்கும் கொடுக்கல் வாங்கலின்போது சம்பந்தப்பட்டவர்களிடம் பைஅத் செய்யலாம். ஏனெனில் இது அவர் சம்மந்தப்பட்ட விஷயமாகும்.
எனக்குச் சொந்தமான இந்த வீட்டை உமக்கு நான் விற்கிறேன் என்று விற்பவரும், வாங்குபவரும் ஒருவருக்கொருவர் உறுதிமொழி – பைஅத் – எடுக்கலாம். தனக்குச் சொந்தமான ஒரு உடைமை விஷயத்தில் உறுதிமொழி எடுக்க அவருக்கு உரிமை உள்ளது.
ஒரு நிறுவனத்தில் சேரும்போது அது தொடர்பாக அதன் உரிமையாளரிடமோ, அல்லது அவரால் அதிகாரம் வழங்கப்பட்டவரிடமோ உறுதிமொழி எடுக்கலாம். ஏனெனில் இது அவர்கள் சம்மந்தப்பட்ட விஷயமாகும்.
இதை அறியாமல் பைஅத் கும்பலிடம் சிக்கியவர்கள் அல்லாஹ்வுக்குச் சொந்தமானதை மனிதனுக்கு வழங்கிய குற்றத்துக்காகவும், அல்லாஹ்வின் தூதருடைய தகுதியைச் சாதாரண மனிதருக்கு வழங்கிய குற்றத்துக்காகவும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் தூதரிடத்தில் உறுதிமொழி எடுப்பவர்கள் அல்லாஹ்விடமே உறுதிமொழி எடுக்கிறார்கள் என்று இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள இந்தச் சொற்றொடர் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது.
தீட்சை, பைஅத், மெஞ்ஞானம் ஆகியன இஸ்லாத்தில் இல்லை என்பதை மேலும் அறிந்து கொள்ள 81, 182, 273, ஆகிய குறிப்புகளை வாசிக்கவும்.
48:10 ஆவது வசனத்துக்கு மேற்கண்டவாறு நாம் திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் விளக்கம் அளித்திருந்தோம்.
எனவே வணக்கவழிபாடுகள் செய்யக் கடமைப்பட்ட அடிமையிடம் ஆன்மிக பைஅத் செய்யக் கூடாதென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்ட அடிமை இல்லையா? என்ற கேள்வி அர்த்தமற்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்ட அடிமை என்பதில் எள்ளளவும் மாற்றுக் கருத்து இல்லை. எனினும் அவர்களிடம் மட்டும் ஆன்மிக பைஅத் செய்வதற்கு அல்லாஹ் அனுமதி கொடுத்துள்ளான். அல்லாஹ் அனுமதி கொடுத்த பிறகு அதற்கு எதிராகக் கேள்வி எழுப்ப யாருக்கும் உரிமை இல்லை.
வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்ட அடிமைகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர்த்து மற்ற யாரிடத்திலும் ஆன்மிக பைஅத் செய்யக் கூடாது.
போலி பைஅத்வாதிகள் தங்கள் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் நாம் ஆதாரமாகக் காட்டிய 48:10 வது வசனத்துக்கு சரியான விளக்கத்தைக் கொடுத்திருக்க வேண்டும்.
இது வரை அதற்கு இவர்கள் பதில் கூறவில்லை. இவர்களின் கொள்கையை வேறோடு களையும் அந்த வசனத்துக்கும், நாம் எழுப்பிய பல வினாக்களுக்கும் பதில் கூறாமல் அர்த்தமற்ற கேள்வியை மட்டும் கேட்பதிலிருந்து இவர்கள் பொய்யர்கள் என்பது தெளிவாகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனித்தகுதி பெற்றவர்கள் என்பதையும் அதில் மற்றவர்கள் போட்டியிடக் கூடாது என்பதையும் பின்வரும் வசனத்தில் இருந்தும் அறியலாம்.
خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْ إِنَّ صَلَاتَكَ سَكَنٌ لَهُمْ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ(103)9
(முஹம்மதே!) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி, பரிசுத்தமாக்குவீராக! அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! உமது பிரார்த்தனை அவர்களுக்கு மன அமைதி அளிக்கும். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
திருக்குர்ஆன் 9 : 103
ஜகாத் வசூலிக்கும் போது அவர்களுக்காக நீ துஆ செய்வீராக! அது அவர்களுக்கு அமைதியைத் தரும் என்பது நபிக்கு மட்டும் உரியதாகும். ஜகாத் வசூலித்து அவர்களுக்காக நபி துஆ செய்யும் போது அம்மக்களின் மனம் அமைதி பெறும்.
அவர்களுக்குப் பின்னர் வரும் ஆட்சியாளர்களிடம் ஜகாத் வழங்கி அவர்கள் துஆ செய்தால் மக்களுக்கு அதனால் மன அமைதி ஏற்படாது.
நபிகள் நாயகத்துக்கு மட்டும் சிறப்புச் சட்டமாக பைஅத் இருப்பது போல் அவர்களின் துஆ மனஅமைதியை ஏற்படுத்தும் என்பதும் சிறப்புச் சட்டமாக உள்ளது.
மறுமை வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் 25/10/19 தம்மாம் சகோதரர்களுக்கான நேரலை
இஜ்மா என்றால் என்ன ? 23/12/18 வாட்ஸ் அப் கேள்வி பதில்
முரண்பாடுகள் களைவோம்
அல்ஜன்னத் மாத இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது அவர் எழுதிய கட்டுரை- திருத்தங்களுடன்
திருக்குர்ஆனையும். நபிவழியையும் மட்டுமே தங்கள் வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட முஸ்லிம்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். திருக்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் முரண்படும் எவரது கருத்தையும் நிராகரித்து விடும் கடமையும் அவர்களுக்கு உண்டு. ஆனால் நம்மில் பெரும்பாலோர் இதில் சர்வ அலட்சியமாக நடந்து கொள்கின்றனர்.
இதெல்லாம் சாதாரண விஷயங்கள் என்று தங்களையே ஏமாற்றிக் கொள்கின்றனர். இஸ்லாத்தின் அடிப்படையே இவர்களுக்குச் சாதாரணமாகத் தோன்ற என்ன காரணம்?
திருக்குர்ஆனையும், நபிவழியையும் புறக்கணிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இப்படிச் செய்கிறார்களா? இல்லை இத்தகைய அலட்சியப் போக்கை ஏற்படுத்துவதற்காகவே சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் பல பொய்களைப் புனைந்திருக்கிறார்கள். நபிகள் நாயகம் சொன்னதாக சிலரால் உருவாக்கப்பட்ட பொய்யான ஹதீஸ்கள் (?) தான் இந்தச் சமுதாயம் குர்ஆன் ஹதீஸைப் புறக்கணித்துச் செல்லக் காரணமாகி விட்டன.
அவற்றில் அதிக அளவில் மவ்லவிகளால் அரங்கேற்றப்படும் ஒரு ஹதீஸை (?) நாம் ஆராய்வோம். அந்த ஹதீஸ் மேடைகள் தோறும் சமீபகாலமாக முழங்கப்படுகின்றன. ஏடுகளில் எழுதவும் படுகின்றன. தங்களின் தவறான போக்குகளை நியாயப்படுத்திட அந்த ஹதீஸ் (?) இவர்களுக்கு பெரிதும் துணையாக இருக்கின்றது. சாதாரணமாகச் சிந்தித்துப் பார்ப்பவனுக்கும் கூட பொய்யென்று தெரிந்துவிடும் இந்த நச்சுக் கருத்தை துணிந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் சொல்ல எப்படித் துணிந்தார்கள்? வேண்டுமென்றே இதைக் கூறுகிறார்களா? அல்லது அறியாமை இருளில் அவர்கள் சிக்கிக் கொண்டார்களா? என்பது நமக்குப் புரியவில்லை.
اختلاف العلماء رحمة للامة
இக்திலாபுல் உலமாயி ரஹ்மதுன் லில் உம்மா - (அறிஞர்கள் ஆளுக்கொரு விதமாக சட்டங்களைக் கூறுவது இந்த சமுதாயத்திற்குக் கிடைத்த அருட்கொடையாகும்.)
اختلاف امتي رحمة
இக்திலாபு உம்மதீ ரஹ்மா - (என் சமுதாயத்தினர்கள் ஆளுக்கொரு விதமாக நடப்பது ரஹ்மத் (எனும் இறையருள்) ஆகும்,
இஸ்லாத்தின் அடிப்படையையே ஆட்டம் காணச் செய்யும் இந்த நச்சுக் கருத்தைத் தான் நபிகள் நாயகத்தின் பெயரால் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். திருக்குர்ஆனின் எத்தனை வசனங்களுடன் இது நேரடியாக மோதுகின்றது. எத்தனை ஆதாரப்பூர்வமான நபிமொழிகளைப் பொய்யாக்க முற்படுகின்றது என்பதை ஏனோ இவர்கள் உணர மறுக்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் சொன்னார்கள் என்பதை ஏற்றுக் கொள்வதாக இருந்தால்
நபிகள் நாயகத்திடம் செவியுற்றவர் யார்?
அவரிடமிருந்து செவியுற்ற மற்ற அறிவிப்பாளர்கள் யார்?
அவர்களின் தகுதிகள் என்ன?
எந்த நூலில் இது பதிவாகியுள்ளது
என்றெல்லாம் அலசி ஆராய்ந்த பின்பே நபிகள் நாயகம் (ஸல்) பெயரால் எந்த ஒன்றையும் கூற வேண்டும். இவ்வாறு பரிசீலனை செய்யக் கடமைப்பட்டவர்கள் இதைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. யாருக்கோ வந்த விருந்தாகவே மார்க்கத்தைக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். மக்களும் அரபியில் சொல்லப்படுமானால் ஆமீன் சொல்வதற்குத் தங்களைத் தயார் படுத்திக் கொண்டு விட்டார்கள். இந்த ஹதீஸின் தரத்தை நாம் ஆராய்வோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொல்லப்படுபவைகளை அறிவிப்பவர் நினைவாற்றல் குறைந்தவராகவோ, தீய நடத்தை உடையவராகவோ இருந்தால் அந்தச் செய்திகள் பலவீனமானவை என்று தள்ளப்பட்டுவிடும்.
அறிவிப்பவர் திட்டமிட்டுப் பொய் கூறுபவராக இருந்தால் அவர் மூலம் வருகின்ற செய்திகள் இட்டுக்கட்டப்பட்டவை என்று கூறி முற்றாக நிராகரிக்கப்பட்டு விடும்.
இட்டுக்கட்டப்பட்டவை என்றாலும், பலவீனமானவை என்றாலும் ஏதேனும் ஹதீஸ் நூலில் அது இடம் பெற்றிருக்கும். ஆனால் மவ்லவிமார்களால் தயாரிக்கப்பட்ட இந்த ஹதீஸ் எந்த ஹதீஸ் நூலிலும் இடம் பெறவே இல்லை. இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸை விடவும் ஒரு படி கீழே இறங்கி வடிகட்டிய பச்சைப் பொய்யாகி விடுகின்றது.
ضعيف الجامع الصغير وزيادته 230 - اختلاف أمتي رحمة (نصر المقدسي في الحجة البيهقي في الرسالة الأشعرية) بغير سند وأورده الحليمي والقاضي حسين وإمام الحرمين وغيرهم ولعله خرج في بعض كتب الحفاظ التي لم تصل إلينا.
அறிவிப்பாளர் வரிசை இல்லாமல் இதை ரிசாலா நூலில் பைஹகீ பதிவு செய்துள்ளார். ஹுலைமீ, காளீ ஹுசைன், இமாமுல் ஹரமைன் மற்றும் பலர் இதை எடுத்து எழுதியுள்ளனர். ஒரு வேளை நமக்கு கிடைக்காத ஏதோ ஒரு நூலில் அறிவிப்பாளர் வரிசையுடன் பதிவாகி இருக்கலாம்.
ஜாமிவுஸ் சகீர் நூலில் சுயூத்தி
ونقل المناوي عن السبكي أنه قال: وليس بمعروف عند المحدثين، ولم أقف له على سند صحيح ولا ضعيف ولا موضوع. وأقره الشيخ زكريا الأنصاري في تعليقه على " تفسير البيضاوي
இந்த ஹதீஸ் ஹதீஸ் கலை வல்லுனர்களிடம் அறிமுகமானதல்ல. ஆதாரப்பூர்வமான அல்லது பலவீனமான அல்லது இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்பாளர் வரிசை கூட இதற்கு உள்ளதாக எனக்குத் தெரியவில்லை என்று ஸுப்கீ என்னும் அறிஞர் குறிப்பிடுகிறார். பைளாவி என்னும் நூலின் ஓரக் குறிப்பில் ஷைகு ஜகரிய்யா அன்சாரி என்பவரும் இதை ஊர்ஜிதம் செய்கிறார்கள்.
இவரது நூல்களில் சில அரபிக்கல்லூரிகளின் பாடத்திட்டத்திலும் உள்ளது.
இந்த மவ்லவிகள் தாங்கள் ஒப்புக் கொண்ட அறிஞர்களின் கூற்றையாவது நம்பி இந்தப் பொய்யை அரங்கேற்றுவதைத் தவிர்க்க வேண்டாமா?
பல தவறான் கருத்துக்களையும் நியாயப்படுத்தும் ஸுயூத்தி என்ற அறிஞர் நமக்குக் கிடைக்காத ஏதேனும் ஹதீஸ் நூலில் இது இருக்கக்கூடும் என்று விசித்திரமான தீர்ப்பு வழங்குகிறார். ஹதீஸ் கலையில் ஓரளவாவது ஈடுபாடு உள்ளவர்களும் இவரது அர்த்தமற்ற வாதத்தை ஏற்க மாட்டார்கள்.
இந்த நூலில் தான் இருக்கிறது என்று திட்டவட்டமாகத் தெரிந்த பின்பும் கூட அறிவிப்பவர்களின் தகுதிகளைப் பரிசீலனை செய்தே எற்க வேண்டும் என்றிருக்க ஏதோ ஒரு நூலில் இருக்கலாம் என்ற அனுமானம் எப்படிப் போதுமாகும்?
நபிகள் நாயகம் (ஸல்) பெயரால் பல பொய்கள் உருவாக்கப்பட்ட நேரத்தில் அறிவிப்பாளர்களை எடைபோட்டுப் பரிசீலிக்கும் துறையில் இறங்கி ஹதீஸ் கலை வல்லுநர்கள் பொய்களைக் களை எடுத்தனர். இவரோ ஏதோ ஒரு நூலில் இருக்கலாம் என்ற யூகத்தின் அடிப்படையிலேயே இதைச் சரி காண்கிறார்.
இது எவ்வளவு ஆபத்தான வாதம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வாதத்தை மக்கள் ஏற்றுக் கொண்டால் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடு பாதுகாப்பற்றதாக ஆகி விடும். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் நபிமொழி என்று கூறமுடியும். ஆதாரம் கேட்டால் நாம் பார்க்காத ஏதோ கிதாபில் இருக்கலாம் என்று சொல்லிவிட முடியும்.
இது எந்த ஹதீஸ் நூலிலும் பதிவு செய்யப்படவில்லை என்பதே இதைத் தூக்கி எறிய போதுமானதாகும். இதன் கருத்தும் ஆபத்தானதாகவும் இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் வகையில் இருக்கும் போது இதை ஒரு முஸ்லிம் எப்படி நம்ப முடியும்?
அறிஞர்களும் சமுதாயமும் ஆளுக்கொரு விதமாக நடப்பது அல்லாஹ்வின் அருட்கொடை என்ற கருத்து சரியானது தானா என்று ஆராய்வோம்.
இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏரளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்
أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا
அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.
திருக்குர்ஆன் 4:82
இந்தக் குர்ஆனில் முரண்பாடு இல்லாமல் இருப்பது தான் இறை வேதம் என்பதற்கு சரியான சான்று என்று அல்லாஹ் இதன் மூலம் தெளிவுபடுத்துகிறான். முரண்பாடுகள் தான் அருட்கொடை என்றிருந்தால் எவ்வளவு முரண்பாடு பார்த்தீர்களா என்றல்லவா அல்லாஹ் சொல்லியிருப்பான்.
ولو شاء ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين(118)إلا من رحم ربك ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين(119)
உமது இறைவன் நாடியிருந்தால் மனிதர்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். (அவ்வாறு நாடாததால்) உமது இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர மற்றவர்கள் முரண்பட்டோராகவே நீடிப்பார்கள். இதற்காகவே அவர்களை அவன் படைத்தான். "மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவராலும் நரகத்தை நிரப்புவேன்'' என்ற உமது இறைவனின் வாக்கு முழுமையாகி விட்டது.
திருக்குர் ஆன் 11:118,119
இறைவனின் அருள் பெற்றவர்களைத் தவிர மற்றவர்கள் கருத்து வேறுபாடு கொண்டவர்களாகவே நீடிப்பார்கள் என்று அல்லாஹ் கூறுவது கருத்து வேறுபாடுகளை நீக்கிக் கொள்வது தான் அல்லாஹ்வின் அருள் என்ற கருத்தைத் தருகிறது. கருத்து வேறுபாடுதான் அல்லாஹ்வின் அருள் என்று கூறுவது அல்லாஹ்வின் மேற்கண்ட வசனத்துடன் நேரடியாக மோதுகிறது.
கருத்து வேறுபாடு கொண்டு அதை நியாயப்படுத்துவது கொள்கை கெட்ட வழிகேடர்களின் செயல் என்று பின்வரும் வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم(213)2
மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அவர்களுடன் அருளினான். தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்த பின்பும் வேதம் வழங்கப்பட்டவர்களே அதற்கு முரண்பட்டனர். அவர்களுக்கிடையே இருந்த பொறாமையே (இதற்குக்) காரணம். அவர்கள் முரண்பட்டதில் எது உண்மை என நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் தனது விருப்பப்படி வழி காட்டினான். அல்லாஹ் நாடியோரை நேரான வழியில் செலுத்துவான்.
திருக்குர் ஆன் 2:213
إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب(19)3
அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே. வேதம் கொடுக்கப்பட்டோர் தம்மிடம் விளக்கம் வந்த பின் தமக்கிடையே ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே முரண்பட்டனர். அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போரை அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.
திருக்குர்ஆன் 3:19
ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم(105)3
தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பு முரண்பட்டுப் பிரிந்து விட்டோரைப் போல் ஆகாதீர்கள்! அவர்களுக்கே கடும் வேதனை உண்டு.
திருக்குர் ஆன் 3:105
وما كان الناس إلا أمة واحدة فاختلفوا ولولا كلمة سبقت من ربك لقضي بينهم فيما فيه يختلفون(19)10
மனிதர்கள் ஒரே சமுதாயமாகவே இருந்தனர். பின்னர் முரண்பட்டனர். உமது இறைவனிடமிருந்து விதி முந்தியிராவிட்டால் அவர்கள் முரண்பட்ட விஷயத்தில் அவர்களிடையே தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்.
திருக்குர் ஆன் 10:19
ولقد بوأنا بني إسرائيل مبوأ صدق ورزقناهم من الطيبات فما اختلفوا حتى جاءهم العلم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون(93)10
இஸ்ராயீலின் மக்களைச் சிறந்த நிலப்பரப்பில் குடியமர்த்தினோம். தூய்மையானவற்றை அவர்களுக்கு வழங்கினோம். அறிவு அவர்களிடம் வரும் வரை அவர்கள் முரண்படவில்லை. உமது இறைவன் கியாமத் நாளில் அவர்கள் முரண்பட்டதில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான்.
திருக்குர் ஆன் 10:93.
وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه وهدى ورحمة لقوم يؤمنون(64)16
அவர்கள் முரண்பட்டதை அவர்களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்குவதற்காகவே உமக்கு இவ்வேதத்தை நாம் அருளியுள்ளோம். (இது) நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர் வழியாகவும், அருளாகவும் உள்ளது.
திருக்குர் ஆன் 16:64
إن هذا القرآن يقص على بني إسرائيل أكثر الذي هم فيه يختلفون(76)27
இஸ்ராயீலின் மக்கள் முரண்பட்டவற்றில் அதிகமானவற்றை இக்குர்ஆன் அவர்களுக்கு விவரிக்கிறது.
திருக்குர் ஆன் 27:76
ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب(45)41
மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அதில் கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டது. உமது இறைவனிடமிருந்து வார்த்தை முந்தியிருக்காவிட்டால் இவர்களுக்கிடையே தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். இவர்கள் இதில் கடுமையான சந்தேகத்தில் உள்ளனர்.
திருக்குர்ஆன் 41:45
وآتيناهم بينات من الأمر فما اختلفوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون(17)45
இம்மார்க்கம் பற்றி பல சான்றுகளையும் அவர்களுக்கு வழங்கினோம். அவர்களுக்கு அறிவு வந்த பின்னரே அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட பொறாமை காரணமாக முரண்பட்டனர். உமது இறைவன் கியாமத் நாளில் அவர்கள் முரண்பட்டதில் தீர்ப்பளிப்பான்.
திருக்குர்ஆன் 45:17
கருத்து வேறுபாடுகளைக் களை எடுத்து இறவனின் ஒரே வழியின் பால் அழைப்பதே இறவனின் விருப்பம் என்று இவ்வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. எனவே கருத்து வேறுபாடுகளை நியாயபடுத்துவதும் அது அல்லாஹ்வின் அருள் என்று வாதிடுவதும் இஸ்லாத்துக்கு எதிரான வாதமாகும்.
அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுவதைக் கண்டால் அதில் எது சரியானது என்பதை நம்மால் இயன்ற அளவுக்கு முயற்சி செய்து சரியான ஒரே கருத்தையே ஏற்று மற்றதை மறுக்க வேண்டும் என்பது தான் இஸ்லாம் காட்டும் சரியான பாதையாகும்.
Published on: September 23, 2010, 8:07 PM
ஹஇரகசிய ஞானம் உண்டா?
கேள்வி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இரண்டு வகையான பாத்திரங்களை நான் நினைவில் வைத்துக் கொண்டு இருக்கிறேன். அவற்றில் ஒன்றை நான் பரப்பி விட்டேன். மற்றொன்றை நான் பரப்பியிருந்தால் என் அடித் தொண்டை வெட்டப்பட்டிருக்கும் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிப்பதாக புகாரியில் ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இது திருக்குர்ஆனின் 2:159,160 வசனத்திற்கு மாற்றமாக உள்ளதே!
பதில்
நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் இதுதான்:
صحيح البخاري
120 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي أَخِي، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: " حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وِعَاءَيْنِ: فَأَمَّا أَحَدُهُمَا فَبَثَثْتُهُ، وَأَمَّا الآخَرُ فَلَوْ بَثَثْتُهُ قُطِعَ هَذَا البُلْعُومُ "
120 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இரண்டு பை(செய்தி)களை மனனமிட்டேன். அவற்றில் ஒன்றை நான் (மக்களிடையே) பரப்பிவிட்டேன்; மற்றொன்றை நான் பரப்பியிருந்தால் (என்) அடித் தொண்டை வெட்டப்பட்டிருக்கும்.
நூல் : புகாரி 120
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் மக்களிடையே சொல்லாத செய்தி எது?
மக்களுக்குச் சொல்ல வேண்டிய ஞானம், மக்களுக்குச் சொல்லக் கூடாத ஞானம் என இரு வகை ஞானம் உண்டு என முரீது வியாபாரிகள் மக்களை வழிகெடுத்து வருகின்றனர். அதற்கு முக்கிய ஆதாரமாக இந்த ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர்.
ஆனால் இந்த ஹதீஸில் அவர்களின் வாதத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை. அபூஹுரைரா அவர்கள் ஒரு வகை ஞானத்தை மக்களுக்குச் சொல்லி விட்டு, இன்னொரு வகை ஞானத்தை ஒருவருக்கும் சொல்லவில்லை எனும் போது அந்த இரகசிய ஞானம் முரீது வியாபாரிகளுக்கு எப்படிக் கிடைத்தது?
மேலும் மார்க்கம் சம்மந்த்மான எந்த ஒன்றையும் சொல்லாமல் மறைப்பது மார்க்கத்தில் பெரிய குற்றமாகும். இது குற்றம் என்பதை அபூ ஹுரைரா (ரலி) அவர்களும் அறிந்து வைத்திருந்தார்கள் என்பதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறியலாம்.
صحيح البخاري
118 - حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: " إِنَّ النَّاسَ يَقُولُونَ أَكْثَرَ أَبُو هُرَيْرَةَ، وَلَوْلاَ آيَتَانِ فِي كِتَابِ اللَّهِ مَا حَدَّثْتُ حَدِيثًا، ثُمَّ يَتْلُو {إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنَ البَيِّنَاتِ وَالهُدَى} [البقرة: 159] إِلَى قَوْلِهِ {الرَّحِيمُ} [البقرة: 160] إِنَّ إِخْوَانَنَا مِنَ المُهَاجِرِينَ كَانَ يَشْغَلُهُمُ الصَّفْقُ بِالأَسْوَاقِ، وَإِنَّ إِخْوَانَنَا مِنَ الأَنْصَارِ كَانَ يَشْغَلُهُمُ العَمَلُ فِي أَمْوَالِهِمْ، وَإِنَّ أَبَا هُرَيْرَةَ كَانَ يَلْزَمُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشِبَعِ بَطْنِهِ، وَيَحْضُرُ مَا لاَ يَحْضُرُونَ، وَيَحْفَظُ مَا لاَ يَحْفَظُونَ "
அபூஹுரைரா அதிகமாக அறிவிக்கின்றாரே' என மக்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு வசனங்கள் மட்டும் இல்லையென்றால் நான் ஒரு நபிமொழியைக் கூட அறிவித்திருக்க மாட்டேன்' என்று அபூஹுரைரா (ரலி) கூறி விட்டு, மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர். மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு, (மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியோரைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:159,160) ஆகிய இரு வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள். மேலும் தொடர்ந்து, 'மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வந்த எங்கள் சகோதரர்களோ வியாபாரப் பேரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். மதீனாவிலிருந்த அன்சாரிகளோ தங்கள் (விவசாய) செல்வங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த அபூஹுரைராவோ, முழுக்க முழுக்க (வேறு வேலைகளில் ஈடுபடாமல்) வயிறு நிரம்பினால் போதும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடனேயே இருந்தேன். மற்றவர்கள் வருகை தராத இடங்களுக்கெல்லாம் நான் செல்வேன். அவர்கள் மனப்பாடம் செய்யாதவற்றை எல்லாம் நான் மனப்பாடம் செய்து கொண்டு இருந்தேன்' என்று அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அஃரஜ்
நூல்: புகாரி 118
மார்க்கம் தொடர்பான எந்தச் செய்தியையும் மறைக்கக் கூடாது என்று கூறும் மேற்கண்ட இரு வசனங்களும் கூறுவதால் தான் எதையும் மறைக்காமல் அறிவிப்பதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். எனவே அவர்கள் பரப்பாமல் விட்டு விட்டதாகக் கூறுவது மார்க்கம் தொடர்பான செய்திகள் அல்ல என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
அவை எது குறித்த செய்திகள் என்பதையும் அபூஹுரைரா (ரலி) அவர்களின் வார்த்தையிலிருந்தே விளக்கத்தைப் பெற முடியும். அந்தச் செய்திகளைச் சொல்லியிருந்தால் கழுத்து வெட்டப்பட்டிருக்கும் என்று கூறுகின்றார்கள். எனவே அரசியல், அதிகாரம் குறித்த செய்திகளாக அவை இருக்கலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் குறித்த செய்திகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். அந்த முன்னறிவிப்புக்கள் அன்றைய ஆட்சியாளர்கள் சிலருக்கு எதிராகவும் இருந்தன.
அது போன்ற செய்திகள் அபூஹுரைரா (ரலி) அவர்களுக்குத் தெரிந்திருந்து, அதைப் பரப்பினால் அன்றைய ஆட்சியாளர்களால் மரண தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்பதைத் தான் சொலலமல் விட்டிருப்பார்கள்.
மேலும் அனைவரையும் சமநிலையில் வைத்து அனைவருக்கும் சமமாக சொல்லுமாறு தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான்.
فَإِنْ تَوَلَّوْا فَقُلْ آذَنْتُكُمْ عَلَى سَوَاءٍ وَإِنْ أَدْرِي أَقَرِيبٌ أَمْ بَعِيدٌ مَا تُوعَدُونَ (109)21
அவர்கள் புறக்கணித்தால் உங்களுக்கு சமமாக நான் அறிவித்து விட்டேன் எனக் கூறுவீராக!
திருக்குர்ஆன் 21:109
சிலருக்கு மட்டும் இரகசிய ஞானத்தை நபிகள் நாயகம் சொல்லிக் கொடுக்கவில்லை. அவர்கள் சொன்ன அனைத்தும அனைவருக்கும் சமமானதாகும் என்பதை இவ்வசனத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
Published on: August 15, 2009, 5:10 PM