Sidebar

29
Wed, Jul

மனிதர்களை எந்த அளவுக்கு நேசிக்கலாம்?

மனிதர்களிடத்தில் எந்த அளவிற்கு அன்பு கொள்ள வேண்டும்?

பைசுல் ரஹ்மான்.

பதில் :

மனிதர்கள் மீது நாம் கொண்டுள்ள நேசம் இறைவனுக்கு மாறு செய்யும் அளவிற்குக் கொண்டு  செல்லாத அளவுக்கு நாம் நேசிக்கலாம். நாம் யாரை நேசித்தாலும், பகைத்தாலும் அல்லாஹ்விற்காக என்ற அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். இறை நேசத்தை விட வேறு எதுவும் மோலோங்கி விடக்கூடாது.

صحيح البخاري

16 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلاَوَةَ الإِيمَانِ: أَنْ يَكُونَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا، وَأَنْ يُحِبَّ المَرْءَ لاَ يُحِبُّهُ إِلَّا لِلَّهِ، وَأَنْ يَكْرَهَ أَنْ يَعُودَ فِي الكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُقْذَفَ فِي النَّارِ "

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார். (அவை:) 1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரியோராவது. 2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது. 3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப்பது.
அறிவிப்பவர் :  அனஸ் (ரலி)
நூல் : புகாரி 16

நேசம் என்பது வணக்கம் ஆகும். நாம் அல்லாஹ்வைப் போன்று யாரையும் நேசிப்பது கூடாது.

அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள். அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும் போது அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே என்பதையும், அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும் கண்டு கொள்வார்கள்.

அல்லாஹ்வை நேசிப்பது போல் அல்லாஹ் அல்லாதவர்களை நேசிக்கலாகாது என்று அல்லாஹ் இங்கே நமக்குக் கற்றுத் தருகிறான்.

மற்ற எவரையும், எதனையும் விட அல்லாஹ்வை அதிகம் நேசிப்பவர்களே மூஃமின்கள் என்றும் இங்கே விளக்கம் தருகிறான்.

யார் அல்லாஹ்வை நேசிப்பது போல் அல்லாஹ் அல்லாதவர்களை நேசிக்கின்றாரோ அவர் அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கியவராவார். இய்யாக நஃபுது' (இறைவா உன்னையே வணங்குகிறோம்) எனும் உறுதிமொழியை மீறியவராவார்.

இறைவனை நேசிக்கும் அளவுக்கு மற்றவர்களை நேசிப்பது நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த காஃபிர்களுடைய (இஸ்லாத்தை ஏற்காதவர்களுடைய) கொள்கையாக இருந்திருக்கின்றது என்பதை பின்வரும் வசனம் விளக்குகின்றது.

அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

இறைவனின் பெயரைக் கூறும் போது ஏற்படாத மகிழ்ச்சி இறைவனல்லாத மற்றவர்களைக் கூறும் போது ஒருவனுக்கு ஏற்படுமானால் – இறைவனின் – அழைப்பை பாங்கைக் கேட்கும் போது ஏற்படாத பக்தி சமாதிகளைக் காணும் போது ஒருவனுக்கு ஏற்படுமானால் அவனது உள்ளத்தில் இறைவனின் நேசத்தை விட மற்றவர்களின் நேசமே அதிகமாகக் குடிகொண்டுள்ளது என்று பொருள்.

இய்யாக நஃபுது' என்பதை அவன் பூரணமாக ஏற்கவில்லை. இறைவனது கட்டளை இது தான் என்று கூறப்படும் போது எனது தந்தை, எனது தாய், எனது மனைவி இப்படிக் கூறுகிறார்களே என்று ஒருவன் கூறத் துணிந்து விட்டால், அவனது உள்ளத்திலும் இறை நேசத்தை விட அவனது குடும்பத்தினர் மீது அதிக நேசம் இருக்கிறது என்று பொருள்!

இய்யாக நஃபுது' என்பதற்கும் இவனுக்கும் சம்பந்தம் எதுவுமில்லை.

பின்வரும் வசனங்களில் நாம் இறைவனை விட வேறு யாரையும் நேசிக்கக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

"உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நீங்கள் இழப்பிற்கு அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்'' என்று கூறுவீராக!

அல்லாஹ்வை நேசித்தல் என்பது இறைச் செய்திகளைப் பெற்றுத் தந்த நபிகள் நாயகத்தை நேசிப்பதையும் உள்ளடக்கியதாகும்.

"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக!
நம்பிக்கை கொண்டோருக்கு தங்களைவிட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர்.

صحيح البخاري

15 – حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ عَبْدِ العَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ح وحَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ، حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆக மாட்டார்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி 15

صحيح البخاري

6632 – حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي حَيْوَةُ، قَالَ: حَدَّثَنِي أَبُو عَقِيلٍ زُهْرَةُ بْنُ مَعْبَدٍ، أَنَّهُ سَمِعَ جَدَّهُ عَبْدَ اللَّهِ بْنَ هِشَامٍ، قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ آخِذٌ بِيَدِ عُمَرَ بْنِ الخَطَّابِ، فَقَالَ لَهُ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، لَأَنْتَ أَحَبُّ إِلَيَّ مِنْ كُلِّ شَيْءٍ إِلَّا مِنْ نَفْسِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْكَ مِنْ نَفْسِكَ» فَقَالَ لَهُ عُمَرُ: فَإِنَّهُ الآنَ، وَاللَّهِ، لَأَنْتَ أَحَبُّ إِلَيَّ مِنْ نَفْسِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الآنَ يَا عُمَرُ»

அப்துல்லாஹ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தவிரவுள்ள எல்லாவற்றையும் விட நீங்களே எனக்கு மிகவும் விருப்பமானவர்கள் என்று சொன்னார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இல்லை! என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உம்மை விடவும் நானே உமக்கு மிகவும் விருப்பமானவனாக ஆகும் வரை (நீர் உண்மையான இறைநம்பிக்கையாளர் ஆக முடியாது) என்று கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி உமர் (ரலி) அவர்கள், இப்போது அல்லாஹ்வின் மீதாணையாக! என்னை விடவும் தாங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள் என்றார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்போது தான்  உமரே! (சரியாகச் சொன்னீர்கள்) என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 6632

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கொடுக்கும் இடத்தை யாருக்கும் கொடுக்காத வகையில் தான் மற்றவர்களை நேசித்தல் இருக்க வேண்டும்.

பைஅத்தை நியாயப்படுத்தும் பொருந்தாத ஆதாரங்கள்!

இலங்கை உமர் அலி என்பவர் பைஅத் அவசியம் என்று பேசி வருகிறார். இதற்கு 48:10,  9:103 வசனங்களை ஆதாரமாகக் காட்டுகிறார்.

பையத் ஓர் ஆய்வு என்ற உங்கள் பயானில் கூறிய விஷயங்களுக்கு அவர் மறுப்பாக  9:103  வசனத்தை எடுத்துக் காட்டுகிறார். நம்மைப் போலவே வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டவரிடம் வணக்க வழிபாடுகள் செய்வதாக உறுதி மொழி எடுக்கக் கூடாது  என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டவர்கள் தானே? அவர்களிடம் மட்டும் பைஅத் செய்யலாமா என்றும் அவர் கேட்கிறார்.

பதில் :

நம்மைப் போல் வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டுள்ள மனிதர்களிடம் பைஅத் செய்யக் கூடாது என்று நாம் கூறியதை மட்டும் வைத்து இவ்வாறு  கேள்வி எழுப்பியுள்ளார். முன்பின் வாசகங்களையும் நாம் கூறிய விளக்கங்களையும் கவனத்தில் கொள்ளவில்லை.

உம்மிடத்தில் உறுதிமொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுத மொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் தம்மிடம் அல்லாஹ் எடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்.

திருக்குர்ஆன் 48:10

இந்த வசனத்துக்கு நாம் அளித்த முழு விளக்கத்தையும் நீங்கள் படித்தால் இவர்கள் கேட்கும் அர்த்தமற்ற கேள்விக்கு நீங்களே பதில் கூறி விடலாம். இதோ அந்த விளக்கம்.

இந்த வசனங்கள் (திருக்குர்ஆன் 48:10, 48:12, 48:18) நபிகள் நாயகம் அவர்களிடம் நபித்தோழர்கள் செய்து கொண்ட பைஅத் எனும் உடன்படிக்கை பற்றிப் பேசுகிறது.

இந்த வசனத்தைச் சான்றாகக் கொண்டு போலி ஆன்மீகவாதிகளும், ஏமாற்றுப் பேர்வழிகளும், தங்களின் சீடர்களை அடிமைப்படுத்தி வைப்பதற்காகவும், எந்தக் கேள்வியும் கேட்காமல் கண்ணை மூடிக் கொண்டு தங்களைப் பின்பற்றச் செய்வதற்காகவும் இவ்வசனத்தைப் பயன்படுத்துகின்றனர்.

நபிகள் நாயகத்திடம் நபித்தோழர்கள் பைஅத் செய்திருப்பதால் எங்களிடமும் பைஅத் செய்யுங்கள் என்று கூறுகின்றனர். இவ்வாறு பைஅத் எனும் உறுதிமொழி எடுத்த பிறகு, யாரிடத்தில் அந்த உறுதிமொழி எடுக்கிறார்களோ அவரைக் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற வேண்டும் எனவும் மூளைச் சலவை செய்கின்றனர்.

ஆனால் இவ்வசனத்தில் இது நபிகள் நாயகத்திற்கு மட்டும் உள்ள சிறப்புத் தகுதி என்று தெளிவாகவே கூறப்பட்டிருக்கிறது. உம்மிடத்தில் உறுதிமொழி எடுத்தவர்கள் அல்லாஹ்விடம் உறுதிமொழி எடுக்கிறார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

நபிகள் நாயகத்திடம் எடுக்கும் உறுதிமொழி அல்லாஹ்விடம் எடுக்கும் உறுதிமொழியாகும் என்று அல்லாஹ் கூறுவதிலிருந்து இது நபிகள் நாயகத்திற்கு மட்டும் உள்ள சிறப்புத் தகுதி என்பதை விளங்கலாம்.

இது போல் பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகத்திடம் நபித் தோழர்கள் பைஅத் எனும் உறுதி மொழி எடுத்திருக்கிறார்கள். நாங்கள் தொழுவோம்; நோன்பு வைப்போம்: தப்புச் செய்ய மாட்டோம் என்றெல்லாம் பல்வேறு கட்டங்களில் நபிகள் நாயகத்திடம் நபித் தோழர்கள் உறுதி மொழி எடுத்திருக்கிறார்கள்.

பார்க்க திருக்குர்ஆன் 60:12

இவை யாவும் நபிகள் நாயகம் (ஸல்) அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டவை. தூதரிடத்தில் எடுக்கும் உறுதிமொழிகள் பொதுவாகவே அந்தத் தூதரை அனுப்பியவரிடத்தில் எடுக்கின்ற உறுதிமொழி தான்.

இத்தகைய உறுதி மொழிகளை நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு தலை சிறந்து விளங்கிய பெரிய பெரிய நபித்தோழர்களிடம் மற்றவர்கள் வந்து எடுக்கவே இல்லை.

அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி (ரலி) ஆகியோரிடம் வந்து "நாங்கள் ஒழுங்காகத் தொழுவோம்; நோன்பு நோற்போம் என்றெல்லாம் யாரும் எந்த பைஅத்தும் எடுக்கவில்லை.

இறைவனிடம் செய்கின்ற உறுதிமொழியை இறைத் தூதரிடம் செய்யலாம் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயகத்திடம் வணக்க வழிபாடுகள் குறித்து பைஅத் செய்தார்கள்.

எனவே நபிகள் நாயகத்தைத் தவிர எந்த மனிதரிடமும் நான் மார்க்க விஷயத்தில் சரியாக நடந்து கொள்வேன் என்று உறுதி மொழி எடுப்பது இஸ்லாத்தில் இல்லாத, இஸ்லாத்திற்கு எதிரான, நபிகள் நாயகத்தை இழிவுபடுத்துகிற, தங்களையும் இறைத் தூதர்களாக கருதிக் கொள்கின்ற வழிகேடர்களின் வழிமுறையாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கலைத் தவிர மற்றவர்களிடம் உறுதிமொழி எடுப்பதென்று சொன்னால் அது இரண்டு விஷயங்களில் எடுக்கலாம்.

ஒருவர் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்கும் போது உங்களை ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொள்கிறோம் என்று மக்கள் உறுதிமொழி கொடுக்கின்ற பைஅத். இது மார்க்கத்தில் உண்டு.

இந்த உறுதிமொழியை நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களிடம் மக்கள் செய்தார்கள். அவர்களின் மரணத்திற்குப் பிறகு உமர் (ரலி) அவர்களிடம் செய்தார்கள்.

இப்படி முழு அதிகாரம் படைத்த ஆட்சியாளரிடம் மட்டும் இவ்வாறு பைஅத் எடுப்பதற்கு அனுமதி இருக்கிறது.  இது மார்க்கக் காரியங்களை நிறைவேற்றுவதாகக் கூறுகின்ற பைஅத் அல்ல. ஆட்சியாளராக ஏற்றுக் கொள்ளும் பைஅத் ஆகும்.

இவ்வுலகில் நடக்கும் கொடுக்கல் வாங்கலின் போது சம்மந்தப்பட்டவர்களிடம் செய்து கொள்ளும் உறுதிமொழி அனுமதிக்கப்பட்ட மற்றொரு பைஅத் ஆகும்.

எனக்குச் சொந்தமான இந்த வீட்டை உமக்கு நான் விற்கிறேன் என்று விற்பவரும் வாங்குபவரும் ஒருவருக்கொருவர் உறுதிமொழி - பைஅத் - எடுக்கலாம். தனக்குச் சொந்தமான ஒரு உடமை விஷயத்தில் ஒருவர் உறுதிமொழி எடுப்பது அவரது உரிமை சம்மந்தப்பட்டதாகும்.

ஒரு நிறுவனத்தை நடத்துபவர் அந்த நிறுவனத்தின் ஊழியரிடம் நிறுவனத்தின் விதிகளைக் கூறி உடன்படிக்கை பைஅத் எடுக்கலாம்., ஏனேனில் இது அவர் சம்மந்தப்பட்ட விஷயமாகும்.

வணக்க வழிபாடுகள் யாவும் இறைவனுக்கே சொந்தமானது. இதற்கு இறைவனிடமோ, இறைவனால் அனுப்பப்பட்ட தூதரிடமோ மட்டும் தான் உறுதிமொழி எடுக்க முடியும்.

நம்மைப் போலவே வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டுள்ள நம்மைப் போன்ற அடிமைகளிடம் இந்த உறுதிமொழியை எடுக்கலாகாது. அவ்வாறு எடுத்திருந்தால் அதை உடனடியாக அவர்கள் முறித்து விட வேண்டும்.

அல்லாஹ்வுக்குச் சொந்தமானதை மனிதனுக்கு வழங்கிய குற்றத்துக்காகவும், அல்லாஹ்வின் தூதருடைய தகுதியைச் சாதாரண மனிதருக்கு வழங்கிய குற்றத்துக்காகவும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பும் தேடிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதரிடத்தில் உறுதிமொழி எடுப்பவர்கள் அல்லாஹ்விடமே உறுதிமொழி எடுக்கிறார்கள் என்று இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள இந்தச் சொற்றொடர் முக்கியமாகக் கவனிக்கத்தது.

48 : 10  ம் ஆவது வசனத்துக்கு மேற்கண்டவாறு நாம் விளக்கம் அளித்திருந்தோம்.

இவ்விளக்கத்தைப் புறக்கணித்து விட்டு வணக்கவழிபாடுகள் செய்யக் கடமைப்பட்ட அடிமையிடம் ஆன்மீக பைஅத் செய்யக் கூடாதென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்ட அடிமை இல்லையா? அவர்களிடம் மட்டும் பைஅத் செய்யலாமா என்ற கேள்வி அர்த்தமற்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்ட அடிமை என்பதில் எள்ளளவும் மாற்றுக் கருத்து இல்லை. எனினும் அவர்களிடம் மட்டும் ஆன்மீக பைஅத் செய்வதற்கு அல்லாஹ் அனுமதி கொடுத்துள்ளான்.  அல்லாஹ் அனுமதி கொடுத்த பிறகு அதற்கு எதிராகக் கேள்வி எழுப்ப யாருக்கும் உரிமை இல்லை.

வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்ட அடிமைகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர்த்து உமர் அலீ உட்பட மற்ற யாரிடத்திலும் ஆன்மீக பைஅத் செய்யக் கூடாது.

போலி பைஅத்வாதிகள் தங்கள் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் நாம் ஆதாரமாகக் காட்டிய  48: 10  வது வசனத்துக்கு சரியான விளக்கத்தைக் கொடுத்திருக்க வேண்டும். இது வரை அதற்கு இவர்கள் பதில் கூறவில்லை.

இவர்களின் கொள்கையை வேரோடு களையும் வகையில் அமைந்த அந்த வசனத்துக்கும், நாம் எழுப்பிய பல வினாக்களுக்கும் பதில் கூறாமல் அர்த்தமற்ற கேள்வியை மட்டும் கேட்பதிலிருந்து உமர் அலியின் சுய ரூபம் தெளிவாகிறது.

பின்வரும் வசனத்தை எடுத்துக்காட்டி உமர் அலி எழுப்பும் கேள்வி சரியா?

(முஹம்மதே) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி, பரிசுத்தமாக்குவீராக! அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! உமது பிரார்த்தனை அவர்களுக்கு மன அமைதி அளிக்கும். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

திருக்குர்ஆன் 9:103

இதிலிருந்து அவர் எடுத்து வைக்கும் வாதம் என்ன? 9 : 103  ஆவது வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் இரண்டு கட்டளைகளைப் பிறப்பிக்கின்றான்.

மக்களிடமிருந்து ஸகாத் வசூலிக்க வேண்டும் என்பது ஒரு கட்டளை.

பிறகு அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பது இன்னொரு கட்டளை.

(முஹம்மதே!) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! என்று அல்லாஹ் கூறுவதால் தர்மத்தை வசூலிப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய தகுதி. மற்றவர்களுக்கு ஸகாத்தை வசூலிக்க அனுமதியில்லை என்று கூறுவீர்களா? என்பதே இவர்களின் வாதம்.

பைஅத் எப்படி நபிகளுக்கு மட்டும் உரியதாக உள்ளதோ அது போல் தான் ஜகாத் வசூலிப்பதும் நபிகளுக்கு மட்டும் உரியது. அப்படி இருந்தும் நாம் ஜகாத் வசூலிக்கிறோம். அது போல் தான் பைஅத்தும் எடுக்கலாம்.

இதுதான் உமர் அலியின் வாதம்

மேற்கண்ட வசனத்தில் ஸகாத்தை வசூலிக்கும் தகுதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரியது என்று அல்லாஹ் கூறவில்லை.

நபியே உம்மிடம் இவர்கள் ஸகாத் வழங்குவது அல்லாஹ்விடம் வழங்குவதாகும் என்று அந்த வசனத்தில் கூறப்பட்டிருந்தாலே ஸகாத்தை வசூலிப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய தகுதி என்று புரியலாம். ஆனால் அவ்வாறு கூறப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய கட்டளையாக இருந்தால் அதைத் தெளிவாகவோ, மறைமுகவோ அல்லாஹ் தெளிவுபடுத்தி விடுவான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய சட்டம் என்பதை உணர்த்தக் கூடிய எந்தச் சான்றும் இல்லாமல் பொதுவாக இறைவன் ஒரு கட்டளையைப் பிறப்பித்தால் அது எல்லோருக்கும் உரிய சட்டமாகும்.

உதாரணமாக

மரணிக்காது, உயிரோடு இருப்பவனையே சார்ந்திருப்பீராக! அவனைப் போற்றிப் புகழ்வீராக! தனது அடியார்களின் பாவங்களை நன்கு அறிந்திட அவன் போதுமானவன்.

திருக்குர்ஆன் 25:58

இவ்வசனத்தில் அல்லாஹ்வையே சார்ந்திருக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தான் அல்லாஹ் உத்தரவிடுகிறான். எனவே மற்றவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களைச் சார்ந்திருக்க வேண்டும். அல்லாஹ் அல்லாதவர்களை போற்றிப் புகழ வேண்டும் என்று புரிந்துகொள்ள மாட்டோம்.

மாறாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் இவ்வாறு உத்தரவிடுவதன் மூலம் நாமும் இவ்வாறு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறான் என்றே புரிந்து கொள்வோம்.

இறைவனிடமும் இறைத்தூதரிடம் மட்டுமே ஆன்மீக பைஅத் செய்ய முடியும் என்று நாம் கூறுவதற்கு 48:10 வது வசனத்தை ஆதாரமாகக் காட்டியுள்ளோம்.

மற்றவர்களிடமும் ஆன்மீக பைஅத் எடுக்கலாம் என்று உமர் அலீ கூறுவதற்குத் தான் மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. அப்படி இருந்தால் அவர் எடுத்துக் காட்டட்டும்.

பெரியார்களின் கை கால்களை முத்தமிடலாமா?

நபியின் கால்களை நபித்தோழர்கள் முத்தமிட்டார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்க வெளியூரிலிருந்து வந்த சிலர் நபிகள் நாயகத்தின் கைகளையும், கால்களையும் முத்தமிட்டதாக சில ஹதீஸ்கள் உள்ளன.

பெரியார்களின் கால்களை முத்தமிடுவதற்கும், சிரம் பணிவதற்கும் இவை சான்றுகளாக உள்ளந என்று தவறான கொள்கையுடையோர் வாதிடுகின்றனர்.

அந்த ஹதீஸ்களின் நிலை என்ன என்பதைப் பார்ப்போம்.

حدثنا أبو كريب حدثنا عبد الله بن إدريس وأبو أسامة عن شعبة عن عمرو بن مرة عن عبد الله بن سلمة عن صفوان بن عسال قال قال يهودي لصاحبه اذهب بنا إلى هذا النبي فقال صاحبه لا تقل نبي إنه لو سمعك كان له أربعة أعين فأتيا رسول الله صلى الله عليه وسلم فسألاه عن تسع آيات بينات فقال لهم لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ولا تمشوا ببريء إلى ذي سلطان ليقتله ولا تسحروا ولا تأكلوا الربا ولا تقذفوا محصنة ولا تولوا الفرار يوم الزحف وعليكم خاصة اليهود أن لا تعتدوا في السبت قال فقبلوا يده ورجله فقالا نشهد أنك نبي قال فما يمنعكم أن تتبعوني قالوا إن داود دعا ربه أن لا يزال في ذريته نبي وإنا نخاف إن تبعناك أن تقتلنا اليهود وفي الباب عن يزيد بن الأسود وابن عمر وكعب بن مالك قال أبو عيسى هذا حديث حسن صحيح – ترمذي 2657 وابن ماجة 3695 واحمد 17397

இந்த நபியிடம் என்னை அழைத்துச் செல் என்று ஒரு யூதர் தனது தோழரிடம் கூறினார். அவரை நபி என்று சொல்லாதே! அவரது காதில் விழுந்தால் அவருக்கு நான்கு கண்கள் ஏற்பட்டு விடும் (அதாவது கர்வம் ஏற்பட்டு விடும்) என்று அந்தத் தோழர் கூறினார். பின்னர் இருவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தனர். தெளிவான ஒன்பது அத்தாட்சிகள் யாவை என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காதீர்கள்! திருடாதீர்கள்! விபச்சாரம் செய்யாதீர்கள்! தக்க காரணமில்லாமல் கொலை செய்வதை அல்லாஹ் ஹராமாக்கியுள்ளதால் கொலை செய்யாதீர்கள்! குற்றம் செய்யாதவனைக் கொலை செய்வதற்காக மன்னரிடம் பிடித்துக் கொடுக்காதீர்கள்! சூனியம் செய்யாதீர்கள்! வட்டியை உண்ணாதீர்கள்! ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு சொல்லாதீர்கள்! போர்க்களத்தில் பின்வாங்காதீர்கள்! யூதர்களே குறிப்பாக நீங்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்! என்று கூறினார்கள்! உடனே அவர்கள் நபிகள் நாயகத்தின் கைகளையும், கால்களையும் முத்தமிட்டனர். நீங்கள் நபி என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறினார்கள். அப்படியானால் என்னைப் பின்பற்ற உங்களுக்கு என்ன தடை? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள் தாவூத் நபியவர்கள் தனது வழித்தோன்றலில் ஒரு நபி இருந்து கொண்டே இருப்பார் என்று கூறியுள்ளனர். எனவே உங்களை நாங்கள் ஏற்றுக் கொண்டால் யூதர்கள் எங்களைக் கொன்று விடுவார்கள் என்று அஞ்சுகிறோம் என்றனர்.

அறிவிப்பவர் : ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி)

நூல்கள் : அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா

இதைப் பதிவு செய்த திர்மிதி இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று கூறியுள்ளார்.

ஆனால் இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல. நஸாயீ அவர்கள் இதன் கருத்து சரியாக இல்லை என்பதால் முன்கர் (இதை விட வலுவான ஆதாரத்துக்கு எதிரானது) என்று கூறியுள்ளார்.

அறிவிப்பாளரில் குறை உள்ளதால் இது பலவீனமானது என்று முன்திரி கூறியுள்ளார்.

இதன் கருத்து எப்படி தவறானது என்பதை விளக்கமாகப் பார்ப்போம்.

திருக்குர்ஆனில் 17:101 வசனத்தில் மூஸா நபிக்கு ஒன்பது அத்தாட்சிகளைக் கொடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான். இது யூத வேதங்களிலும் உள்ளது. இதைப் பற்றித் தான் அவர்கள் கேள்வி கேட்கின்றனர். மூஸா நபிக்கு கொடுத்த ஒன்பது அத்தாட்சிகள் என்பது மூஸா நபிக்கு கொடுத்த அற்புதங்கள் பற்றியதாகும். அவருக்கு வழங்கப்பட்ட கட்டளைகள் பற்றியதல்ல.

தெளிவான ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம். அவர்களிடம் அவர் வந்தபோது (நடந்ததை) இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக! "மூஸாவே! உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன்'' என்று அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன் கூறினான்.

திருக்குர்ஆன் 17:101

ஒன்பது அத்தாட்சிகளை மூஸா நபிக்கு வழங்கியதாகக் கூறும் இறைவன் அதன் பொருளைப் பின்வரும் வசனத்தில் சொல்லித் தருகிறான்.

"உமது கையை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக! அது எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக வெளிப்படும். ஃபிர்அவ்னிடமும், அவனது சமுதாயத்திடமும் ஒன்பது சான்றுகளுடன் (செல்வீராக!) அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாகவுள்ளனர்'' (என்று இறைவன் கூறினான்).

திருக்குர்ஆன் 27:12

ஒன்பது சான்றுகள் என்பது மூஸா நபிக்கு வழங்கப்பட்ட ஒன்பது அற்புதங்களையே குறிக்கிறது என்று இவ்வசனம் சொல்வதால் இதற்கு மாற்றமாக நபியவர்கள் பதிலளித்ததாகக் கூறுவது கட்டுக் கதையாகும். இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் அப்துல்லாஹ் பின் சலமா அல் ஹமதானி என்பார் அறிவிப்பவற்றில் ஏற்கத் தக்கவையும் நிராகரிக்கத் தக்கவையும் உள்ளன என்று அபூ ஹாதம் கூறுகிறார்கள். (ஆதாரம் அல்ஜர்ஹு வத்தஃதீல்)

மேலும் காலில் விழுவதைத் தடை செய்யும் வலுவான ஆதாரங்களுக்கு முரணாக இந்தச் செய்தி அமைந்துள்ளதால் மேலும் இது பலவீனப்படுகிறது. இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

இது போல் அமைந்த பின்வரும் ஹதீஸையும் தவறான கொள்கையுடயவர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

حدثنا محمد بن عيسى بن الطباع حدثنا مطر بن عبد الرحمن الأعنق حدثتني أم أبان بنت الوازع بن زارع عن جدها زارع وكان في وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلنا نتبادر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجله قال وانتظر المنذر الأشج حتى أتى عيبته فلبس ثوبيه ثم أتى النبي صلى الله عليه وسلم فقال له إن فيك خلتين يحبهما الله الحلم والأناة قال يا رسول الله أنا أتخلق بهما أم الله جبلني عليهما قال بل الله جبلك عليهما قال الحمد لله الذي جبلني على خلتين يحبهما الله ورسوله

– ابو داود 4548 - سنن البيهقي الكبرى ج: 7 ص: 102 -13365 - المعجم الأوسط ج: 1 ص: 133 - 418 // المعجم الكبير ج: 5 ص: 275 - 5313

(அப்துல் கைஸ் கூட்டத்தைச் சேர்ந்த) நாங்கள் மதீனா வந்து எங்கள் வாகனத்திலிருந்து இறங்கியதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கைகளையும், கால்களையும் முத்தமிடலானோம்....

அறிவிப்பவர் : ஸாரிவு (ரலி)

நூல்கள் : அபூதாவூத், பைஹகீ, தப்ரானி அவ்ஸத், தப்ரானி கபீர்

இந்த ஹதீஸை சில அறிஞர்கள் சரியான ஹதீஸ் என்று கூறி இருந்தாலும் தக்க காரணமில்லாமல் தான் அவ்வாறு கூறுகிறார்கள்.

இது பற்றி விபரமாகப் பார்ப்போம்.

ஸாரிவு என்ற நபித்தோழர் கூறியதாக இதை அறிவிப்பவர் அவரது பேத்தி உம்மு அபான் என்று இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.

இவர் நபித்தோழர் அல்ல என்பதால் இவரது நம்பகத் தன்மைக்கு ஆதாரங்கள் இருந்தால் தான் இவரது அறிவிப்புகளை ஏற்றுக் கொள்ள முடியும்.

இந்த ஹதீஸ் சரியானது என்று கூறுபவர்கள் உம்மு அபான் என்ற பெண்ணின் நாணயம், நேர்மை, நினைவாற்றல் குறித்த நற்சான்றுகளை எடுத்துக் காட்டி அப்படிக் கூற வேண்டும். இவரது நாணயம், நேர்மை பற்றி ஒரு அறிஞரும் நற்சான்று கொடுக்கவில்லை. ஒரு அறிஞருக்கும் இவரைப் பற்றி தெரியவில்லை.

أم أبان بنت الوازع عن جدها زارع، تفرد عنها مطر الأعنق.

இவர் வழியாக ம(த்)தர் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார் என்று தஹபி கூறுகிறார்.

அதாவது ஒரே ஒருவர் தான் இவரைப் பற்றி அறிந்திருக்கிறார் என்று தஹபி கூறுகிறார்.

رواه الطبراني وأم أبان لم يرو عنها غير مطر

உம்மு அபான் வழியாக ம(த்)தர் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார் என்று மஜ்மவுஸ் ஸவாயித் நூலில் ஹைஸமீ கூறுகிறார்.

ஒரு அறிவிப்பாளர் மட்டுமே அறிவித்து வேறு எந்த அறிஞரும் ஒருவரைப் பற்றி நற்சான்று அளிக்காவிட்டால் அவர் யாரென அறியப்படாதவர் ஆவார். அதாவது பலவீனமானவராவார்.

இது பற்றி இப்னு ஹஜர் அவர்கள் தமது நுக்பா எனும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்.

النوع (40): فإن سمى الراوي وانفرد راو واحد بالرواية عنه فهو مجهول العين

ஒரு அறிவிப்பாளர் தனக்கு முந்தைய அறிவிப்பாளரின் பெயரைக் கூறுகிறார். அவர் மட்டுமே அந்த அறிவிப்பாளரிடமிருந்து அறிவித்து இருந்தால் அந்த அறிவிப்பாளர் யாரென அறியப்படாதவர் ஆவார்.

இந்தக் காரணத்தால் உம்மு அபான் மஜ்ஹூல் - யாரென அறியப்படாதவர் - ஆவார். எனவே இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல.

இப்னு ஹஜர் அவர்கள் தமது தக்ரீப் நூலில் இவர் மக்பூல் – ஒப்புக் கொள்ளப்பட்டவர் என்று கூறியதை ஆதாரமாகக் காட்டி இது சரியான ஹதீஸ் என்று சிலர் வாதிடுகின்றனர்.

மக்பூல் என்ற சொல்லுக்கு ஒப்புக் கொள்ளப்பட்டவர் என்று அகராதியில் பொருள் இருந்தாலும் இப்னு ஹஜரின் வழக்கத்தில் இதன் பொருள் அதுவல்ல.

அறிவிப்பாளர்களைப் பன்னிரண்டு தரமுடையவர்களாக பிரித்திருப்பதாகக் கூறும் இப்னு ஹஜர் அவர்கள் அதன் விளக்கத்தையும் தக்ரீப் நூலின் முன்னுரையில் கூறுகிறார்.

மக்பூல் என்பதை ஆறாவது தரமாகக் குறிப்பிடுகிறார்.

ஐந்தாவது தரமாக அவர் கூறுவதைப் பாருங்கள்.

الخامسة: من قصر عن الرابعة قليلاً، وإليه الإشارة بصدوق سيء الحفظ، أو صدوق يهم، أو له أوهام، أو يخطئ، أو تغير بأخرة ويلتحق بذلك من رمي بنوع من البدعة، كالتشيع والقدر، والنصب، والإرجاء، والتجهم، مع بيان الداعية من غيره.

உண்மையாளர் ஆனால் நினைவாற்றல் குறைந்தவர் என்றோ, உண்மையாளர் என்றாலும் தவறாகவும் கூறுவார் என்றோ, அல்லது தவறு செய்பவர் என்றோ, இறுதிக் காலத்தில் மூளை குழம்பியவர் என்றோ நான் குறிப்பிடுபவர்கள் ஐந்தாவது தரத்தில் உள்ளவர்களாவர் எனக் கூறுகிறார்.

இவர்களை விட தாழ்ந்த தரத்தில் உள்ள ஆறாவது தரத்தில் உள்ளவர்களைத் தான் மக்பூல் என்று தான் சொல்வதாக இப்னு ஹஜர் கூறுகிறார்.

மக்பூல் பற்றி இப்னு ஹஜர் கூறும் விளக்கத்தைப் பாருங்கள்!

السادسة: من ليس له من الحديث إلا القليل، ولم يثبت فيه ما يترك حديثه من أجله، وإليه الإشارة بلفظ: مقبول، حيث يتابع، وإلا فلين الحديث.

ஒருவர் குறைவான ஹதீஸ் அறிவித்து, அவரைக் காரணம் காட்டி ஒரு ஹதீஸ் பலவீனம் என்று சொல்லப்படவில்லையானால் அவர் தான் மக்பூல் என்கிறார்.

நான்காம் படித்தரத்தில் உள்ள அறிவிப்பாளர்கள் இடம் பெறும் ஹதீஸ்களை பலவீனம் என்று சொல்பவர்கள் அதைவிட தரத்தில் குறைந்த ஐந்தாம் நிலையில் உள்ளவர் இடம் பெற்ற ஹதீஸை சரியானது என்று கூறியிருப்பது வியப்பாக உள்ளது.

மேலும் காலில் விழக் கூடாது என்று தடை செய்யும் ஆதாரங்களை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். அந்த ஆதாரங்களுக்கு மாற்றமாக இந்த ஹதீஸ்கள் அமைந்திருப்பதால் இன்னும் கடுமையான பலவீனமுடையதாக இந்த ஹதீஸ்கள் ஆகிவிடுகின்றன.

கைகளை முத்தமிடுதல்

பெரியார்கள், உலமாக்கள், ஹஜரத் கிப்லாக்கள் ஆகியோரைப் புனிதமானவர்கள் என்று கருதிக் கொண்டு அவர்களின் கைகளை முத்தமிட்டுவது பாக்கியம் என்ற நம்பிக்கை சிலரிடம் காணப்படுகிறது.

மிகச் சில நபித்தோழர்கள் மிகச் சில சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கைகளை முத்தமிட்டுள்ளதாக சில ஹதீஸ்கள் உள்ளன. அதன் நம்பகத் தன்மையில் கருத்து வேறுபாடு உள்ளது.

அவற்றை நம்பகமானது என்று வைத்துக் கொண்டாலும் அது இச்செயலுக்கு ஆதாரமாகாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மகான் என்று நம்புவது மார்க்கத்தின் கடமையாகும். அல்லாஹ்வும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் யாரை மகான்கன் என்று குறிப்பிட்டுச் சொன்னார்களோ அவர்களையும் மகான்கள் என்று நாம் நம்ப வேண்டும்.

மற்ற எவரையும் மகான் என்றோ, இறைவனுக்கு நெருக்கமானவர் என்றோ முடிவு செய்யும் அதிகாரம் நமக்கு இல்லை. நாம் மகான் என்று நினைப்பவர் இறைவனிடம் ஷைத்தானாக இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.

எனவே மகான் என்று இறைவனாலும், இறைத் தூதராலும் அறிவிக்கப்படாத அனைவரும் சமமான நிலையில் உள்ளவர்களே. இறைவனுக்கு இவர் நெருக்கமானவர் என்று யாரைப் பற்றியும் முடிவு செய்ய முடியாது எனும் போது வெறும் தாடியையும், ஜுப்பாவையும், பேச்சாற்றலையும், அரபுமொழி அறிவையும் வைத்துக் கொண்டு ஒருவரை மகான் என்று முடிவு செய்வது இறைவனது அதிகாரத்தைக் கையில் எடுக்கும் குற்றமாகும்.

ஒருவர் மகானா? அல்லவா? என்பதை நானல்லவா தீர்மானிக்க வேண்டும். இதைத் தீர்மானிக்க நீ யார்' என்று அல்லாஹ் கேட்டால் அதற்கு நம்மிடம் ஏற்கத்தக்க பதில் இல்லை.

எனவே எந்த மனிதரையும் முத்தமிட நமக்கு அனுமதி இல்லை. ஸலாம் கூறுவதும், முஸாஃபஹா செய்வதும் தவிர வேறு எதுவும் இஸ்லாத்தில் இல்லை.

ஒருவரை நல்லடியார் என்று நாம் முடிவு செய்ய முடியாது என்பதை விரிவான ஆதாரங்களுடன் அறிய அவ்லியாக்களைக் கண்டறிவது எப்படி என்ற நமது நூலைப் பார்வையிடுக!

சுருங்கச் சொல்வதென்றால்

மக்களால் மதிக்கப்படும் அறிஞர்களும், பெரியார்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் தான்.

நாம் அவர்களைப் பார்ப்பதோ, அவர்கள் நம்மைப் பார்ப்பதோ பாக்கியம் அல்ல.

அவர்களைத் தொடுவதோ, அவர்கள் நம்மைத் தொடுவதோ அவர்கள் தொட்டுத்தரும் பொருட்களைத் தொடுவதோ புனிதமாக ஆகாது.

அவர்களின் வாய்களிலிருந்து வரும் வார்த்தைகள் மற்ற மனிதர்களின் வாய்களில் இருந்து வரும் வார்த்தைகள் போன்றவை தான். அவற்றுக்கு எந்தச் சக்தியும் இல்லை.

அவர்களின் கைகளால் திறந்து வைக்கப்படும் வீடுகள், கடைகள் மற்ற மனிதர்களால் திறந்து வைக்கப்படும் வீடுகள் போன்றவை தான்.

அவர்கள் புனிதமானவர்கள் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்கள் செய்யும் துஆவிலும், அவர்கள் வழங்கும் பொருட்களிலும் சில சந்தர்ப்பங்களில் பரகத் இருந்துள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

அவர்களைத் தவிர மற்ற யாராக இருந்தாலும் அவர்கள் அல்லாஹ்வின் அன்பைப் பெற்றவர்கள் என்பதற்கோ, அவர்கள் பாக்கியம் பெற்றவர்கள் என்பதற்கோ, அவர்கள் நல்லடியார்கள் என்பதற்கோ ஆதாரம் இல்லாததால் அவர்களைக் கொண்டாடும் பேச்சுக்கே இடமில்லை.

அவர்கள் அனைவரும் நம்மைப் போன்ற மனிதர்களே என்று உணர்ந்து நடக்கும் நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக!

ஆலிம்களும் பெரியார்களும் மக்களோடு மக்களாக கலந்து பழகலாமா

மக்களோடு மக்களாக நபிகள் நாயகம்

2899 و3373عن سلمة بن الأكوع قال مر النبي صلى الله عليه وسلم على نفر من أسلم ينتضلون فقال النبي صلى الله عليه وسلم ارموا بني إسماعيل فإن أباكم كان راميا ارموا وأنا مع بني فلان قال فأمسك أحد الفريقين بأيديهم فقال رسول الله صلى الله عليه وسلم ما لكم لا ترمون قالوا كيف نرمي وأنت معهم قال النبي صلى الله عليه وسلم ارموا فأنا معكم كلكم البخاري

பனூ அஸ்லம் குலத்தார் சிலர் அம்பெய்யும் போட்டியில் ஈடுபட்டிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இஸ்மாயீலின் சந்ததிகளே! அம்பெய்யுங்கள். ஏனெனில், உங்கள் தந்தை (இஸ்மாயீல் அவர்கள்) அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்கள். நீங்கள் அம்பெய்யுங்கள். (போட்டியில்) நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன் என்று கூறினார்கள். உடனே, இரு பிரிவினரில் ஒரு சாரார் அம்பெய்வதை நிறுத்திக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்களுக்கென்ன ஆயிற்று? ஏன் அம்பெய்யாமலிருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், தாங்கள் அவர்களுடன் இருக்க, நாங்கள் எப்படி அம்பெய்வோம்? என்று சொன்னார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அப்படியானால் நான் உங்கள் அனைவருடனும் இருக்கின்றேன். நீங்கள் அம்பெய்யுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸலமா பின் அக்வவு (ரலி)

நூல் : புகாரி 2889, 3373

இரு கூட்டத்தினர் விளையாட்டுப் போட்டி நடத்தும் போது, விளையாட்டுப் பருவத்தைக் கடந்த வயதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்தும் அவர்களுடன் சேர்ந்து தாமும் அதில் பங்கெடுத்தது எதைக் காட்டுகிறது?

இறைத்தூதராக இருந்தாலும் மக்களோடு மக்களாக்க் கலந்து வாழ்வதில் எந்தக் குறையும் வைக்கக் கூடாது என்பதைத் தான் காட்டுகிறது.

ஹஜரத் கிப்லாக்களைக் கண்டால் விளையாட்டை நிறுத்தி விட வேண்டும் என்று மக்களை மூளைச்சலவை செய்து ஏமாற்றுவதை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்! மார்க்கத்தை விட தங்களின் வெற்றுப் பெருமையே இவர்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது என்பதை அறியலாம்.

2837 و 3034 عن البراء قال رأيت رسول الله صلى الله عليه وسلم يوم الأحزاب ينقل التراب وقد وارى التراب بياض بطنه وهو يقول لولا أنت ما اهتدينا ولا تصدقنا ولا صلينا فأنزلن سكينة علينا وثبت الأقدام إن لاقينا إن الألى قد بغوا علينا إذا أرادوا فتنة أبينا البخاري

அகழ்ப் போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மண்ணைச் சுமந்து கொண்டு செல்வதை நான் பார்த்தேன். மண் அவர்களுடைய வயிற்றின் வெண்மையை மறைத்திருந்தது. அப்போது அவர்கள் இவ்வாறு (பாடிய வண்ணம்) கூறிக் கொண்டிருந்தார்கள்:

(இறைவா!) நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்க மாட்டோம்; தருமம் செய்திருக்கவும் மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம். நாங்கள் பகைவர்களைச் சந்திக்கும் போது எங்கள் மீது அமைதியை இறக்கியருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இவர்கள் (எதிரிகள்) எங்கள் மீது அக்கிரமம் புரிந்து விட்டார்கள். இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால் அதற்கு நாங்கள் இடம் தர மாட்டோம்.

அறிவிப்பவர் : பரா பின் ஆஸிப் (ரலி)

நூல் : புகாரி 2837, 3034

எதிரிகள் படையெடுத்து வந்த போது மதீனாவைச் சுற்றி அகழ் தோண்டப்பட்டது. அப்பணியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடும் தலைவராக மட்டும் இராமல் மக்களோடு மக்களாக அகழ் வெட்டும் பணியிலும், மண் சுமக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்கள்.

மக்களிடமிருந்து தம்மைத் தனித்துக் காட்டாமல் மக்களோடு மக்களாக்க் கலந்து பழகியுள்ளார்கள் என்பதை இது காட்டுகிறது.

எந்த ஹஜரத் கிப்லாவாவது சட்டையில் அழுக்குப்படும் வேலை செய்வதையோ, கடின உழைப்பு செய்வதையோ நீங்கள் பார்த்ததுண்டா? இவர்கள் நபிகள் நாயகத்தை முன்மாதிரியாகக் கொள்ளவில்லை என்பதையும் கிறித்தவ பாதிரிமார்களையே முன்மாதிரியாகக் கொண்டுள்ளனர் என்பதையும் அறிந்து கொள்கிறோம்.

2322 عن سماك بن حرب قال قلت لجابر بن سمرة أكنت تجالس رسول الله صلى الله عليه وسلم قال نعم كثيرا كان لا يقوم من مصلاه الذي يصلي فيه الصبح حتى تطلع الشمس فإذا طلعت قام وكانوا يتحدثون فيأخذون في أمر الجاهلية فيضحكون ويتبسم صلى الله عليه وسلم صحيح مسلم

நீங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது சபையில் அமர்ந்ததுண்டா? என்று ஜாபிர் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஆம் அதிகமாகவே அமர்ந்துள்ளேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுததும் சூரியன் உதிக்கும் வரை தொழுத இடத்திலேயே அமர்ந்துவிட்டு சூரியன் உதித்த பின்னர் எழுவார்கள். அவர்கள் அமர்ந்திருக்கும் போது நபித்தோழர்கள் தமது அறியாமைக்கால செயல்களை நினைவு கூர்ந்து சிரிப்பார்கள். அதைக் கண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புன்னகை சிந்துவார்கள் என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம் 2322

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்கும் சபையில் அவர்கள் முன்னிலையில் நபித்தோழர்கள் தமது கடந்த காலச் செயல்களை எண்ணிச் சிரிக்க முடிந்தது எப்படி? நபியவர்கள் அதைக் கேட்டு புன்னகைக்க முடிந்தது எப்படி?

இது ஒரேயொரு நாள் நடந்த நிகழ்வு அல்ல; நபிகள் நாயகத்தின் வழக்கமே இதுதான் என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இந்தத் தோழர்கள் நமக்கு முன்னால் அமர்ந்து சிரிக்கிறார்களே என்று கருதி நபியவர்கள் அதைக் கண்டித்து இருக்கலாம். அல்லது புன்னகை செய்யாமல் இலேசாக முகத்தில் வெறுப்பைக் காட்டினால் கூட நபித்தோழர்கள் கதை பேசிச் சிரிப்பதை கைவிட்டிருப்பார்கள். அல்லது தொழுதவுடன் அந்தச் சபையில் அமராமல் எழுந்து போய் இருக்கலாம். இதில் எந்த ஒன்றையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யவில்லை.

மக்களில் இருந்து அப்பாற்பட்டவர்களாக நபியவர்கள் தன்னைக் கருதியதில்லை. மக்களுக்கும் இதை அவர்கள் தெளிவாக அறிவித்து இருந்ததால் தான் தமக்குச் சமமான நண்பர்கள் மத்தியில் நடப்பது போல் நபித்தோழர்களால் நடக்க முடிந்தது.

சிறுவர்களுடன் கூட நபிகள் நாயகம் (ஸல்) சக மனிதனாக மதித்துப் பழகி உள்ளனர் என்பதைப் பின்வரும் ஹதீஸில் இருந்து அறியலாம்.

6129 - حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو التَّيَّاحِ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: إِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيُخَالِطُنَا، حَتَّى يَقُولَ لِأَخٍ لِي صَغِيرٍ: يَا أَبَا عُمَيْرٍ، مَا فَعَلَ النُّغَيْرُ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுடன் கலந்து பழகுவார்கள். எந்த அளவிற்கென்றால், சிறுவனாக இருந்த என் தம்பியிடம் அபூஉமைரே! பாடும் உனது சின்னக் குருவி (புள்புள்) என்ன ஆயிற்று? என்று கூடக் கேட்பார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி 6129

எப்போதும் வளர்ப்புப் பறவையுடன் காட்சி தரும் சிறுவனிடம் அப்பறவை இல்லாமல் இருப்பதைக் கண்டு அதைப் பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்பாக விசாரித்துள்ளார்கள். இப்படி மக்களுடன் சகஜமாகப் பழகும் ஒரு ஹஜரத் கிப்லாவைக் கூட காண முடியவில்லை. மக்களால் நெருங்க முடியாத உயரத்தில் இருப்பதாக தம்மைப் பற்றி கர்வம் கொண்டவர்களாகவே உள்ளனர். இது சரிதானா?

407 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «رَأَى فِي جِدَارِ القِبْلَةِ مُخَاطًا أَوْ بُصَاقًا أَوْ نُخَامَةً، فَحَكَّهُ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளி வாசலின்) கிப்லாத் திசையிலுள்ள சுவரில் மூக்குச் சளியை' அல்லது எச்சிலை' அல்லது காறல் சளியை'க் கண்டார்கள். உடனே அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி) விட்டார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 407

பள்ளிவாசல் சுவற்றில் யாரோ எச்சிலைத் துப்பி இருந்தால் அதை அப்புறப்படுத்துமாறு நபித்தோழர்களுக்கு அவர்கள் கட்டளையிட்டிருக்கலாம். அப்படிச் செய்யாமல் அதைத் தாமே செய்துள்ளார்கள் என்றால் இதை ஒரு ஹஜரத் கிப்லாவாவது முன்மாதிரியாகக் கொண்டு நீங்கள் பார்த்ததுண்டா?

2351 - حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، قَالَ: حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَدَحٍ، فَشَرِبَ مِنْهُ، وَعَنْ يَمِينِهِ غُلاَمٌ أَصْغَرُ القَوْمِ، وَالأَشْيَاخُ عَنْ يَسَارِهِ، فَقَالَ: «يَا غُلاَمُ أَتَأْذَنُ لِي أَنْ أُعْطِيَهُ الأَشْيَاخَ»، قَالَ: مَا كُنْتُ لِأُوثِرَ بِفَضْلِي مِنْكَ أَحَدًا يَا رَسُولَ اللَّهِ، فَأَعْطَاهُ إِيَّاهُ- 2366, 2451, 2602, 5620

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து அவர்கள் குடித்தார்கள். அப்போது அவர்களுடைய வலப் பக்கம் மக்களில் மிகக் குறைந்த வயதுடைய சிறுவர் ஒருவரும், இடப் பக்கம் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர். ஆகவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அச்சிறுவரை நோக்கி), சிறுவனே! நான் இதை முதியவர்களுக்குக் கொடுத்துவிட எனக்கு நீ அனுமதியளிக்கிறாயா? என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கக் கூடிய மீதத்தை எவருக்கும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறினார். ஆகவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தாம் மீதம் வைத்ததை அந்தச் சிறுவருக்கே கொடுத்து விட்டார்கள்.

அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஅது (ரலி)

நூல் : புகாரி 2351

2352 - حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّهَا حُلِبَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةٌ دَاجِنٌ، وَهِيَ فِي دَارِ أَنَسِ بْنِ مَالِكٍ، وَشِيبَ لَبَنُهَا بِمَاءٍ مِنَ البِئْرِ الَّتِي فِي دَارِ أَنَسٍ، فَأَعْطَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ القَدَحَ، فَشَرِبَ مِنْهُ حَتَّى إِذَا نَزَعَ القَدَحَ مِنْ فِيهِ، وَعَلَى يَسَارِهِ أَبُو بَكْرٍ، وَعَنْ يَمِينِهِ أَعْرَابِيٌّ، فَقَالَ عُمَرُ: وَخَافَ أَنْ يُعْطِيَهُ الأَعْرَابِيَّ، أَعْطِ أَبَا بَكْرٍ يَا رَسُولَ اللَّهِ عِنْدَكَ، فَأَعْطَاهُ الأَعْرَابِيَّ الَّذِي عَلَى يَمِينِهِ، ثُمَّ قَالَ: «الأَيْمَنَ فَالأَيْمَنَ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் வீட்டில் இருந்தபோது வளர்ப்பு ஆட்டின் பாலை அவர்களுக்காகக் கறந்து, என் வீட்டில் இருந்த கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து, அந்தப் பால் பாத்திரத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நான் கொடுத்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிலிருந்து அருந்தி விட்டு, தம் வாயிலிருந்து அந்தப் பாத்திரத்தை எடுத்தார்கள். (அப்போது) அவர்களின் வலப் பக்கத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களும், இடப் பக்கத்தில் ஒரு கிராமவாசியும் இருந்தனர். ஆகவே, உமர் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்கே மீதிப் பாலை அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்து விடுவார்களோ என்று அஞ்சி, உங்களிடம் இருப்பதை அபூபக்ருக்குக் கொடுங்கள் அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார்கள். ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தமது வலப் பக்கம் இருந்த கிராமவாசிக்கே கொடுத்து விட்டு, (முதலில்) வலப் பக்கம் இருப்பவரிடமே கொடுக்க வேண்டும். வலப் பக்கமிருப்பவரே அதிக உரிமையுடையவர் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : புகாரி 2352

நபிகள் நாயகத்துக்கு இடது புறத்தில் நபிகள் நாயகத்தின் உயிர்த் தோழர் அபூபக்ர் (ரலி) இருக்கிறார். வலது புறத்திலோ யாரெனத் தெரியாத கிராமவாசி இருக்கிறார். நபிகள் நாயகத்தின் அருகில் அமரத் தக்கவர்கள் என்ற தர வரிசை ஏதும் நபிகள் நாயகத்தால் வகுக்கப்படவில்லை. யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் நபிகள் நாயகத்தின் அருகில் அமரலாம். எவ்வளவு சாதாரணமானவராக அவர் இருந்தாலும் பிரச்சினையில்லை என்பது தான் அவர்கள் ஏற்படுத்திய நடைமுறை.

நீ அனுமதி தந்தால் பெரியவர்களுக்குக் கொடுக்கிறேன். நீ அனுமதி தராவிட்டால் அவ்வாறு செய்ய மாட்டேன் என்று வேண்டுகிறார்கள். அவர் விட்டுத் தர விரும்பவில்லை என்ற போது இந்த அற்பமான விஷயத்திலும் அவரது முன்னுரிமையை நிலை நாட்டுகிறார்கள்.

சாதாரண மனிதருக்குக் கூட அவரது உரிமையையும், மரியாதையையும் நபிகள் நாயகம் (ஸல்) வழங்குகிறார்கள்.

ஆனால் பணக்காரர்களுக்கும், முத்தவல்லிகளுக்கும் பல்லக்கு தூக்கி சட்டத்தை வளைக்கும் ஹஜரத் கிப்லாக்கள் இந்த விஷயத்திலும் நபியை முன்மாதிரியாகக் கொள்ளவில்லை.

458 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَجُلًا أَسْوَدَ أَوِ امْرَأَةً سَوْدَاءَ كَانَ يَقُمُّ المَسْجِدَ فَمَاتَ، فَسَأَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهُ، فَقَالُوا: مَاتَ، قَالَ: «أَفَلاَ كُنْتُمْ آذَنْتُمُونِي بِهِ دُلُّونِي عَلَى قَبْرِهِ - أَوْ قَالَ قَبْرِهَا - فَأَتَى قَبْرَهَا فَصَلَّى عَلَيْهَا»

(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த ஒரு கறுப்பு ஆண்' அல்லது ஒரு கறுப்புப் பெண்' இறந்துவிட்டார். ஆகவே அவரைப் பற்றி (ஒரு நாள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அப்போது மக்கள், அவர் இறந்துவிட்டார் எனக் கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அது பற்றி (முன்பே) என்னிடம் நீங்கள் அறிவித்திருக்கக் கூடாதா? அவருடைய அடக்கத்தலத்தை எனக்குக் காட்டுங்கள் என்று கூறிவிட்டு அவரது அடக்கத்தலத்திற்குச் சென்று அவருக்காக ஜனாஸா தொழுகை தொழுதார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 458

பள்ளிவாசலில் கூட்டிப் பெருக்கும் வேலை செய்த பணிப்பெண்ணுக்கும் மற்றவர்களுக்கு வழங்கும் மரியாதையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழங்குகிறார்கள். சில நாட்களாக அவரைக் காணவில்லை என்றவுடன் அக்கரையுடன் விசாரிக்கிறார்கள். அவர் மரணித்தது தெரிவிக்கப்பட்டவுடன் அவர் அடக்கம் செய்யப்பட்ட இட்த்துக்குச் சென்று அந்த இடத்தில் அவருக்காக ஜனாஸா தொழுகை நடத்துகிறார்கள்.

எல்லா மனிதர்களுடனும் சகஜமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பழகி வந்தார்கள் என்பதற்கு இது ஆதாரமாக உள்ளது.

2097 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزَاةٍ، فَأَبْطَأَ بِي جَمَلِي وَأَعْيَا، فَأَتَى عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ «جَابِرٌ»: فَقُلْتُ: نَعَمْ، قَالَ: «مَا شَأْنُكَ؟» قُلْتُ: أَبْطَأَ عَلَيَّ جَمَلِي وَأَعْيَا، فَتَخَلَّفْتُ، فَنَزَلَ يَحْجُنُهُ بِمِحْجَنِهِ ثُمَّ قَالَ: «ارْكَبْ»، فَرَكِبْتُ، فَلَقَدْ رَأَيْتُهُ أَكُفُّهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «تَزَوَّجْتَ» قُلْتُ: نَعَمْ، قَالَ: «بِكْرًا أَمْ ثَيِّبًا» قُلْتُ: بَلْ ثَيِّبًا، قَالَ: «أَفَلاَ جَارِيَةً تُلاَعِبُهَا وَتُلاَعِبُكَ» قُلْتُ: إِنَّ لِي أَخَوَاتٍ، فَأَحْبَبْتُ أَنْ أَتَزَوَّجَ امْرَأَةً تَجْمَعُهُنَّ، وَتَمْشُطُهُنَّ، وَتَقُومُ عَلَيْهِنَّ، قَالَ: «أَمَّا إِنَّكَ قَادِمٌ، فَإِذَا قَدِمْتَ، فَالكَيْسَ الكَيْسَ»، ثُمَّ قَالَ: «أَتَبِيعُ جَمَلَكَ» قُلْتُ: نَعَمْ، فَاشْتَرَاهُ مِنِّي بِأُوقِيَّةٍ، ثُمَّ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلِي، وَقَدِمْتُ بِالْغَدَاةِ، فَجِئْنَا إِلَى المَسْجِدِ فَوَجَدْتُهُ عَلَى بَابِ المَسْجِدِ، قَالَ: «آلْآنَ قَدِمْتَ» قُلْتُ: نَعَمْ، قَالَ: «فَدَعْ جَمَلَكَ، فَادْخُلْ، فَصَلِّ رَكْعَتَيْنِ»، فَدَخَلْتُ فَصَلَّيْتُ، فَأَمَرَ بِلاَلًا أَنْ يَزِنَ لَهُ أُوقِيَّةً، فَوَزَنَ لِي بِلاَلٌ، فَأَرْجَحَ لِي فِي المِيزَانِ، فَانْطَلَقْتُ حَتَّى وَلَّيْتُ، فَقَالَ: «ادْعُ لِي جَابِرًا» قُلْتُ: الآنَ يَرُدُّ عَلَيَّ الجَمَلَ، وَلَمْ يَكُنْ شَيْءٌ أَبْغَضَ إِلَيَّ مِنْهُ، قَالَ: «خُذْ جَمَلَكَ وَلَكَ ثَمَنُهُ»

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் இருந்தேன்; அப்போது எனது ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ஜாபிரா? என்று கேட்டார்கள். நான், ஆம்! என்றேன். என்ன விஷயம் (ஏன் பின்தங்கிவிட்டீர்)? என்று கேட்டார்கள். என் ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அதனால் நான் பின்தங்கி விட்டேன்! என்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கீழே இறங்கி தலைப் பகுதி வளைந்த ஒரு கைத்தடியால் எனது ஒட்டகத்தைத் தட்டி(எழுப்பி)னார்கள். பிறகு (உமது வாகனத்தில்) ஏறுவீராக! என்றனர். நான் (வாகனத்தில்) ஏறினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விட எனது ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீர் மணமுடித்து விட்டீரா? என்று கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். கன்னியையா? விதவையையா? என்று கேட்டார்கள். விதவையைத்தான்! என்று நான் கூறினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் கூடிக்குலாவி மகிழலாமே! என்று கூறினார்கள். நான், எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர்! அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்! என்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இப்போது ஊருக்கு செல்லப் போகிறீர்! ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்து கொள்வீராக! நிதானத்துடன் நடந்துகொள்வீராக! என்று கூறிவிட்டு பின்னர், உமது ஒட்டகத்தை எனக்கு விற்று விடுகிறீரா? என்று கேட்டார்கள். நான், சரி (விற்று விடுகிறேன்!) என்றேன். அவர்கள் என்னிடமிருந்து, ஒரு ஊக்கியா எடை (தங்கத்து)க்குப் பகரமாக அதை வாங்கிக் கொண்டார்கள். பிறகு, எனக்கு முன்பே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) சென்று விட்டார்கள். நான் மறுநாள் சென்றடைந்தேன். நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்த போது அதன் நுழைவாயிலில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். இப்போது தான் வருகிறீரா? என்று அவர்கள் (என்னைப் பார்த்துக்) கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். உமது ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என்று சொன்னார்கள். அவ்வாறே, நான் உள்ளே சென்று தொழுதேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்காக ஒரு ஊக்கியா (தங்கத்தை) எடை போடுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால் (ரலி) அவர்கள் எடை போட்டுச்சற்று தாராளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச்சென்று விட்டேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்! என்றனர். நான் (மனத்திற்குள்) இப்போது என் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டுவிடும்; அதைவிட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லை என்று கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உமது ஒட்டகத்தை எடுத்துக் கொள்வீராக! அதனுடைய விலையையும் நீரே வைத்துக் கொள்வீராக! என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல் : புகாரி 2097

ஜாபிர் என்பவர் முக்கியமான பிரமுகர் அல்ல. ஒரு இளைஞர். அவரது ஒட்டகம் சண்டித்தனம் செய்து உட்கார்ந்து விட்டதைக் கவனித்த நபிகள் நாயகம் (ஸல்) யாரையாவது அனுப்பி அவருக்கு உதவுமாறு கூறியிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் அவரை நோக்கி தாமே வருகிறார்கள்.

வந்தவுடன் ஜாபிரா? என்று கேட்கிறார்கள். சாதாரணமானவரையும் பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவுக்கும், பெயரைத் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கும் அவர்கள் மக்களுடன் நெருங்கிப் பழகி வந்தார்கள் என்பது தெரிகிறது.

தமது ஒட்டகத்திலிருந்து இறங்கி அவரது ஒட்டகத்தை எழுப்பி விடுகிறார்கள். எழுப்பி விட்டது மட்டுமின்றி அவருடைய பொருளாதார நிலை, குடும்ப நிலவரம் ஆகிய அனைத்தையும் சாவகாசமாக விசாரிக்கிறார்கள்.

அவரது ஒட்டகம் எதற்கும் உதவாத ஒட்டகம் என்பதை அறிந்து கொண்டு அவர் வேறு தரமான ஒட்டகத்தை வாங்குவதற்காக அதை விலைக்குக் கேட்கிறார்கள்.

அவர் மற்றவர்களுடன் சேரும் வரை கூடவே வந்து விட்டு அதன் பின்னர் வேகமாக அவர்கள் புறப்படுகிறார்கள்.

ஊர் சென்றதும் தாம் கொடுத்த வாக்குப் படி ஒட்டகத்திற்குரிய விலையைக் கொடுப்பதற்காக இவரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தாம் சொன்ன படி அதற்கான விலையையும் கொடுத்து விட்டு அந்த ஒட்டகத்தையும் அவரிடம் கொடுத்து விடுகிறார்கள்.

இப்படி மக்களோடு மக்களாக சகஜமாக ஹஜ்ரத் கிப்லாக்கள் நடக்கிறார்களா? மக்களுக்கும் தமக்கும் மிகப்பெரிய இடைவெளி இருப்பதாகக் காட்டிக் கொள்கிறார்களா என்று சிந்தித்துப் பாருங்கள்!

5664 - حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبَّاسٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدٍ هُوَ ابْنُ المُنْكَدِرِ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «جَاءَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُنِي، لَيْسَ بِرَاكِبِ بَغْلٍ وَلاَ بِرْذَوْنٍ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (நான் நேயுற்றிருந்த போது) என்னை உடல் நலம் விசாரிக்க வந்தார்கள். அப்போது அவர்கள் கோவேறு கழுதையின் மீது பயணம் செய்தபடியும் வரவில்லை; குதிரையின் மீது பயணம் செய்தபடியும் வரவில்லை. (மாறாக, நடந்தே வந்தார்கள்.)

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : புகாரி 5664

பெரிய அளவுக்கு அறிமுகமில்லாத இளைஞரான ஜாபிர் (ரலி) உடல் நலம் பாதிக்கப்பட்ட போது வீடு தேடி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய் விசாரிக்கச் சென்றுள்ளார்கள். பெரிய பிரமுகர்களும், சாதாரணமானவர்களும் அவர்களைப் பொருத்தவரை சமமாகவே நடத்தினார்கள் என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன.

இன்றைய ஹஜரது கிப்லாக்கள் முன்னால் பொதுமக்களோ, அவர்களிடம் பயிலும் மாணவர்களோ இப்படியெல்லாம் நடக்க முடிகிறதா?

ஹஜரத் கிப்லாக்களின் கோபப்பார்வைக்கு ஆளானால் தொலைந்தீர்கள் என்று மக்களைப் பயமுறுத்தி வைத்துள்ளதால் அனைவரும் ஹஜரத் கிப்லாக்கள் எதிர்பார்க்கும் போலி மரியாதையை வழங்கி வருகின்றனர்.

இந்த விஷயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்து கொண்டது எப்படி என்று பாருங்கள்!

More Articles …