Sidebar

20
Sat, Jun
சமீபத்திய செய்திகள்

வாடகைக்கும் ஒத்திக்கும் என்ன வேறுபாடு?

பதில்

வீட்டை ஒத்திக்கு விடுவதற்கும், வாடகைக்கு விடுவதற்கும் வித்தியாசம் இருக்கின்றது.

வீட்டின் அல்லது நிலத்தின் உரிமையாளர் ஒரு குறிப்பிட்ட தொகையை மற்றவரிடம் வாங்கிக் கொண்டு ஒப்படைப்பதும்,  வாங்கிய பணத்தை நான் திரும்பத்தரும் வரை வாடகை தரவேண்டாம் என்ற அடிப்படையில் செய்யப்படும் ஒப்பந்தமும் ஒத்தி எனப்படுகிறது

வீட்டின் உரிமையாளர் அப்பணத்தை தன்னிடம் திரும்ப ஒப்படைக்கும் வரை பணத்தைக் கொடுத்தவர் வீட்டை விட்டு வெளியேற மாட்டார். வாடகையும் கொடுக்க மாட்டார்.

ஒப்பந்த காலம் முடிவடைந்த உடன் வீட்டின் உரிமையாளர் வாங்கிய பணத்தை அப்படியே திருப்பிக் கொடுப்பார். இதன் பின் பணம் கொடுத்தவர் தன் பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டு வீட்டைக் காலி செய்வார். இது ஒத்திக்கு விடுதல் என்று கூறப்படுகின்றது.

இது தெளிவான வட்டியாகும்.

பணத்தைக் கொடுத்துவிட்டு அப்பணம் தன்னிடம் திரும்பி வருகின்ற வரை பணம் வாங்கியவரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்குவது வட்டியாகும்.

மாத வாடகை 1000 ரூபாய் பெறுமானமுள்ள வீட்டை ஒத்திக்குப் பெற்றவர், ஒத்திக்குப் பணம் கொடுத்ததற்காக வாடகை செலுத்தாமல் வசிக்கின்றார். இதன் மூலம் பணம் பெற்றவரிடமிருந்து மாதம் மாதம் 1000 ரூபாய்களை வேறு வடிவில் பெறுகிறார்.

வீட்டின் உரிமையாளர் பணம் வாங்கிய காரணத்தாலே வாடகை வாங்காமல் வீட்டில் வசிப்பதற்கு அனுமதிக்கின்றார். அதாவது வாங்கிய பணத்துக்காக மாதம் மாதம் 1000 ரூபாய் செலுத்துகிறார். இது வட்டியாகும்.

ஆனால் வாடகை என்பது இது போன்றதல்ல. வீட்டைப் பயன்படுத்திவிட்டு அதற்குரிய கூலியாக குறிப்பிட்ட தொகையை வாடகைதாரர் வீட்டின் உரிமையாளரிடம் கொடுக்கின்றார். இங்கே வீட்டைப் பயன்படுத்தியதற்கான கூலி மட்டுமே வாங்கப்படுகின்றது. வாங்கப்பட்ட பணம் திருப்பித்தரப்பட மாட்டாது. இது வியாபாரமாகும்.

வாடகை விடுவதற்கு நபிமொழிகளில் ஆதாரம் உள்ளது.

2722 حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ سَمِعْتُ حَنْظَلَةَ الزُّرَقِيَّ قَالَ سَمِعْتُ رَافِعَ بْنَ خَدِيجٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ كُنَّا أَكْثَرَ الْأَنْصَارِ حَقْلًا فَكُنَّا نُكْرِي الْأَرْضَ فَرُبَّمَا أَخْرَجَتْ هَذِهِ وَلَمْ تُخْرِجْ ذِهِ فَنُهِينَا عَنْ ذَلِكَ وَلَمْ نُنْهَ عَنْ الْوَرِقِ رواه البخاري

அன்சாரிகளிலேயே வயல்கள் அதிகம் உடையவர்களாக நாங்கள் இருந்தோம். ஆகவே, விளைநிலங்களை நாங்கள் குத்தகைக்கு விட்டு வந்தோம். சில வேளைகளில் ஒரு பகுதி விளைச்சலைத் தரும்; மற்றொரு பகுதி விளைச்சலைத் தராது. இப்படிச் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களைத் தடுத்தார்கள்.  வெள்ளிக் காசுகளுக்கு வாடகைக்கு விடுவதை தடுக்கவில்லை. 

அறிவிப்பவர் : ராஃபிஉ  பின் கதீஜ் (ரலி)

நூல் : புகாரி 2722

நிலத்தை வடகைக்கு விடும் போது அதன் விளைச்சலில் ஒரு பகுதியை வாடகையாக நிர்ணயிப்பத்தைத் தடுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பணத்தை வாடகையாக நிர்ணயிப்பதை தடுக்கவில்லை என்று இந்த ஹதீஸில் இருந்து அறியலாம்.

காசுகளை வாங்கிக் கொண்டு நிலங்களை வாடகைக்கு விடுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுக்கவில்லை.

வட்டிக்கும் வாடகைக்கும் வித்தியாசம் அறிய

https://onlinepj.in/index.php/economy/economy-1/debt/vattikkum-vaadahaikkum

23.03.2011. 8:21 AM

வட்டி வாடகை வேறுபாடு?

உவைசுல் கரனி

பதில்:

வட்டியும், வாடகையும் ஒரேமாத்ரியனவை என்று சிலர் நினைக்கிறார்கள். வாடகைக்கு விடப்பட்ட வீட்டிற்கு தேய்மானம் ஏற்படுவது போல் பணத்திற்கும் மதிப்பு குறைவு ஏற்படுவதால் வாடகையும் வட்டியும் ஒரே மாதிரியாக உள்ளது எனக் கருதுவது தவறாகும். வாடகைக்கும் வட்டிக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் உள்ளன.

ஒரு வீட்டை நீங்கள் வாடகைக்கு விட்டால் அப்போதும் அந்த வீட்டின் உரிமையாளராக நீங்கள் தான் இருப்பீர்கள். வாடகைக்கு வந்தவருக்கு அந்த வீட்டில் தங்குவதைத் தவிர வேறு எந்த அதிகாரமும் இல்லை.

வீட்டை இடித்துக் கட்டுவதற்கோ, வீட்டின் அமைப்பை மாற்றுவதற்கோ அல்லது வீட்டின் உரிமையாளரைக் கேட்காமல் வேறு ஒருவரை அழைத்து வந்து உள்வாடகைக்கு விடுவதற்கோ வாடகைதாரருக்கு உரிமை இல்லை. வாடகைக்கு இருக்கும் நேரத்தில் எதார்த்தமாக வீடு இடிந்து விழுந்துவிட்டால் அல்லது அந்த வீட்டிற்கு ஏதாவது ஒரு பாதிப்பு வந்தால் அதற்கு வாடகைதாரர் பொறுப்பேற்க மாட்டார். வீட்டின் உரிமையாளரே இதை ஏற்க வேண்டிவரும்.

ஆனால் கடன் கொடுப்பது இது போன்றதல்ல.

ஒருவருக்கு நீங்கள் பணத்தைக் கடனாகக் கொடுத்தால் அந்தப் பணம் முழுவதுமாக அவருடைய கட்டுப்பாட்டிற்கு வந்து விடுகின்றது. பணம் தொலைந்தாலோ, திருட்டுப் போனாலோ அதற்குக் கடன் வாங்கியவர் தான் பொறுப்பாளி. கடன் கொடுத்தவர் இதைப் பற்றி கவலைப்பட மாட்டார். வாங்கிய பணத்துக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டாலும் அதைத் திருப்பிச் செலுத்துவது கடன் வாங்கியவரின் கடமை. இது முக்கிய வித்தியாசமாகும்.

மேலும் வாடகைக்கு விடும் போது வாடகை பெற்றவர் குடியிருக்கும் பலனை உறுதியாக அனுபவித்து விடுகின்றார். பலனைப் பெற்றெதற்குக் கூலியாக வாடகையைச் செலுத்துகிறார். அதாவது நிச்சயித்த பயனை வாடகைக்கு இருப்பவர் அடைந்து கொள்கிறார். அவராக வீட்டைப் பூட்டி விட்டு பயன்படுத்தாமல் தனக்குத் தானே இழப்பு ஏற்படுத்தினால் தவிர வாடகைக்கு இருப்பவருக்கு எந்த நட்டமும் இல்லை. கொடுக்கும் வாடகைக்கு உரிய பலன் அவருக்கு கிடைத்து விடுகிறது.

ஆனால் வட்டிக்கு கடன் பெறுபவர் அந்தப் பணத்தை வைத்து உறுதியாக பலனடைவார் என்று கூற முடியாது. பலனடையலாம். பலனடையாமல் நஷ்டப்படலாம். இந்த மாதிரியான சூழ்நிலையில் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுப்பதே பெரிய சுமையாகும். இதில் வாங்கியதை விட கூடுதலாக கொடு என்று கேட்பது அவருக்குச் சுமைக்கு மேல் சுமையைக் கொடுக்கும். இதனால் மனிதாபிமானம் அடிபட்டுப் போகின்றது.

மேலும் வீட்டைப் பொறுத்தவரை அதைப் பயன்படுத்த பயன்படுத்த அதில் தேய்மானம் கண்டிப்பாக ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் பணத்தைப் பொறுத்தவரை அதைப் பயன்படுத்துவதால் கண்டிப்பாக மதிப்பு குறையாது. பணவீக்கத்தின் காரணமாக பணத்தின் மதிப்பு குறைய வாய்ப்பு உண்டு என்றாலும் அதற்கு கடன் வாங்கியவர் காரணமாக மாட்டார். கடன் கொடுக்காமல் நமது பெட்டியில் அந்தப் பணத்தைப் பூட்டி வைத்தாலும் பணவீக்கத்தால் ஏற்படும் மதிப்பு குறைவு ஏற்படத்தான் செய்யும்.

பொருளாதார மாற்றத்தால் பணத்தின் மதிப்பு கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது போல் குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்று நடைமுறையில் அத்தியாவசியமான பல பொருட்களை வாடகையின் அடிப்படையில் நாம் பயன்படுத்தி வருகின்றோம்.

ஓரிடத்திற்கு இலகுவாகச் சென்று வர கார், பஸ் போன்ற வாகனங்களை வாடகைக்கு எடுக்கின்றோம். இரயில்களிலும், பேருந்துகளிலும், விமானங்களிலும் டிக்கெட் எடுத்து பயனம் செய்கின்றோம். வெறுமனே பெட்ரோலுக்கு மட்டும் நாம் பணம் கட்டுவதில்லை. பெட்ரோலுடன் அந்த வாகனத்தைப் பயன்படுத்தியற்கும் சேர்த்தே பணம் செலுத்துகிறோம். பொது நிகழ்ச்சிகளை நடத்தும் போது மைக் செட், சொற்பொழிவு மேடை, ஜென்ரேட்டர், மின் விளக்குகள் போன்ற பொருட்களை வாடகைக்கு எடுத்துத் தான் பயன்படுத்துகிறோம்.

பொருளின் தேய்மானம் காரணமாகவும் மற்றவரின் பொருளில் நிச்சயமான பயனை நாம் அடைந்து விடுகிறோம் என்ற அடிப்படையிலும் தான் இது மார்க்கத்தில் அனுமதிக்கப்படுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ் வாடகையை அனுமதித்துள்ளான் .வட்டியைத் தடை செய்துள்ளான் என்பதை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

06.10.2011. 9:20 AM

வங்கிக் கடனை மோசடி செய்யலாமா?

என்னிடம் ஒருவர் ஒரு மார்க்கத் தீர்ப்பு கேட்கிறார். அதாவது அவர் சில வருடங்களுக்கு முன் மேலை நாடொன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் அவர் தன்னுடைய கடன் அட்டையைப் பயன்படுத்தி சில லட்சம் ருபாய் பெறுமதியான பொருட்களை வாங்கி சொந்த நாட்டுக்குத் திரும்பி விட்டார். பல வருடங்கள் ஓடி விட்டன ஆனால் இது இவருக்கு இப்போது மிக உறுத்தலாக இருக்கிறது .அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளிக்கிறார்.  அந்த ரூபாய்களை அதே வங்கிக்குத் திருப்பி அனுப்பிவிட நினைக்கிறார். முஸ்லிம்களைக் கருவறுக்கும் இத்தகைய நாடுகளின் வங்கிக்கு பணத்தைத் திருப்பி அனுப்ப நினைக்கும் போது கஷ்டமாக இருக்கிறது. இந்தப் பணத்தை சத்தியத்தைச் சொல்வதற்காகப் பயன்படுத்தலாமா?

பெயர் இல்லை

பதில் :

வாக்கு மீறுவதும், நம்பிக்கை மோசடி செய்வதும் எந்த ஒரு முஸ்லிமிடமும் இருக்கக் கூடாது. நம்முடைய எதிரிகளாக இருந்தாலும் அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தைப் பேணுவதும் அவர்களுக்குரிய பொருளை முறையாகக் கொடுத்து விடுவதும் அவசியம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது எதிரிகளுடன் எத்தனையோ ஒப்பந்தங்களைச் செய்தார்கள். இந்த ஒப்பந்தங்களில் ஒன்றில் கூட அவர்கள் மோசடி செய்ததில்லை.

ஒரு சாராரின் மீதுள்ள வெறுப்பால் நாம் அநியாயம் செய்துவிடக் கூடாது என்று குர்ஆன் கூறுகின்றது.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ(8)5

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 5 : 8

صحيح البخاري

6177 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ الغَادِرَ يُرْفَعُ لَهُ لِوَاءٌ يَوْمَ القِيَامَةِ، يُقَالُ: هَذِهِ غَدْرَةُ فُلاَنِ بْنِ فُلاَنٍ "

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நாட்டப்பட்டு,  இது இன்னாருடைய மகன் இன்னாரின் மோசடி  என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 6177

صحيح مسلم

295 - وحدثنى يحيى بن أيوب وقتيبة وابن حجر جميعا عن إسماعيل بن جعفر - قال ابن أيوب حدثنا إسماعيل - قال أخبرنى العلاء عن أبيه عن أبى هريرة. أن رسول الله -صلى الله عليه وسلم- مر على صبرة طعام فأدخل يده فيها فنالت أصابعه بللا فقال « ما هذا يا صاحب الطعام ». قال أصابته السماء يا رسول الله. قال « أفلا جعلته فوق الطعام كى يراه الناس من غش فليس منى ».

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு உணவுக் குவியலைக் கடந்து சென்றார்கள். அதிலே தன் கையை விட்டார்கள். அவர்களுடைய விரல்களில் ஈரம் பட்டது. (அந்த உணவுக்காரரைப் பார்த்து) உணவுக்குச் சொந்தக்காரரே! இது என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அவர், அல்லாஹ்வின் தூதரே! மழை நீர் இதில் விழுந்து விட்டது   என்று கூறினார். அதற்கு அவர்கள், மக்கள் பார்க்கும் வண்ணம் இதை உணவுப் பொருளுக்கு மேலே வைத்திருக்க வேண்டாமா? யார் ஏமாற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல!   என்று கூறினார்கள்..

அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம்

صحيح مسلم ـ

6744 - حدثنا قتيبة بن سعيد وعلى بن حجر قالا حدثنا إسماعيل - وهو ابن جعفر - عن العلاء عن أبيه عن أبى هريرة أن رسول الله -صلى الله عليه وسلم- قال « أتدرون ما المفلس ». قالوا المفلس فينا من لا درهم له ولا متاع. فقال « إن المفلس من أمتى يأتى يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتى قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته قبل أن يقضى ما عليه أخذ من خطاياهم فطرحت عليه ثم طرح فى النار ».

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்)  முஃப்லிஸ் (திவாலாகிப் போனவன்) பற்றி உங்களுக்குத் தெரியுமா?   என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள்,  யாரிடத்தில் பொற்காசுகளும் இன்னும் எந்தப் பொருளும் இல்லையோ அவன் தான் முஃப்லிஸ் (திவாலானவன்)   என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  என்னுடைய சமுதாயத்தில் முஃப்லிஸ், மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத்துடன் வருவான். (உலகில் வாழும் போது) இவனை இட்டிகட்டியிருப்பான். இவனைத் திட்டியிருப்பான். இவனது இரத்தத்தை ஓட்டியிருப்பான். இவனை அடித்திருப்பான். எனவே இவனுக்கு அவனுடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுக்கப்படும். அவன் மீது கடமையாக உள்ளவற்றை நிறைவேற்றுவதற்கு முன்பே அவனது நன்மைகள் அழிந்து விட்டால் அவர்களுடைய தீமைகளிலிருந்து எடுத்து அவன் மீது வைக்கப்படும். பிறகு அவன் நரகில் வீசப்படுவான்   என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம்

ஹலாலான வழியில் கிடைத்த நமக்குரிய பொருளை நல்வழியில் செலவு செய்தாலே அதற்குக் கூலி கிடைக்கும். தவறான வழியில் ஈட்டிய பொருளை நல்வழியில் செலுத்தினால் அதை இறைவன் ஏற்க மாட்டான். அதற்கு நற்கூலி தரவும் மாட்டான்.

صحيح مسلم ـ

2393 - وحدثنى أبو كريب محمد بن العلاء حدثنا أبو أسامة حدثنا فضيل بن مرزوق حدثنى عدى بن ثابت عن أبى حازم عن أبى هريرة قال قال رسول الله -صلى الله عليه وسلم- « أيها الناس إن الله طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين فقال ( يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إنى بما تعملون عليم) وقال (يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم) ». ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا رب يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذى بالحرام فأنى يستجاب لذلك ».

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் தூய்மையானவன்.  தூய்மையானதைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம்

உங்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் தங்களது பொருளாதாரத்தை நமக்கு எதிரான வழியில் செலவு செய்தால் இதைப் பற்றி இறைவன் உங்களிடம் கேள்வி கேட்க மாட்டான்.

எனவே நீங்கள் அவர்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விடுவதே சரி.

06.11.2010. 15:07 PM

வட்டிக்கு வாங்கி கட்டிய வீட்டில் வசிக்கலாமா?

கேள்வி :எனது தந்தை வட்டிக்கு கடன் வாங்கி கட்டிய வீடு எனக்கு ஹலாலாகுமா? வீடு எங்கள் பரம்பரைச் சொத்தாக உள்ள இடத்தில் கட்டப்பட்டுள்ளது.

ஷா

பதில்  :

முதலில் ஒரு வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். வட்டி வாங்குவது வேறு; வட்டி கொடுப்பது வேறு.

நாம் ஒருவருக்கு கடன் கொடுத்து அதற்காக வட்டி வாங்கினால் அந்தப் பணம் ஹராமாகும். அது வட்டியின் மூலம் சம்பாதித்ததாகும்.

நமது தேவைக்காக கடன் வாங்கி அதற்காக வட்டி செலுத்தினால் அந்தப் பனம் வட்டியால் சம்பாதித்த பணம் அல்ல. நாம் வட்டி செலுத்தியுள்ளோமே தவிர வட்டி வாங்கவில்லை.

எனவே வட்டிக்குக் கடன் வாங்கியதால் அந்தப் பணம் ஹராமாகாது. மாறாக வட்டி கொடுத்த குற்றத்தையே அவர் செய்திருக்கிறார்.

அந்த வீட்டில் உங்கள் தந்தை வசித்தது கூட ஹராமான சம்பாத்தியத்தில் அல்ல. ஒரு ஹராமான செயலுக்குத் துணை செய்த குற்றமே அவரைச் சேரும்.

எனவே வாரிசு முறையில் உங்களுக்கு அந்த வீடு உரிமையாகும் போது தாராளமாக நீங்கள் வசிக்கலாம்.

ஒருவர் வட்டி மூலம் சம்பாதித்து அந்தப் பணத்தில் வீடு கட்டி இருந்தால் அவர் ஹராமான வீட்டில் வசிக்கிறார் என்று ஆகும். ஆனால் அவர் வட்டிப் பணத்தில் கட்டிய வீடு அவரது மகனுக்கு வாரிசு முறையில் கிடைக்கும் போது மகனுக்கு அது ஹராமாகாது.

இது குறித்து கூடுதலான விளக்கம் அறிய

இந்த லின்கை

பார்க்கவும்.

 15.04.2010. 23:42 PM

More Articles …