குரங்கு விபச்சாரம் செய்யுமா?
3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார்.
அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் என்று புகாரியில் உள்ளதே இதற்கு விளக்கம் என்ன?
பதில் :
புகாரியாக இருந்தாலும் வேறு எந்த நூலாக இருந்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்மந்தப்பட்டவைகளை மட்டும் தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நபிகள் நாயகம் ஸல் அவர்களுடன் தொடர்பு இல்லாத இது போன்ற கட்டுக்கதைகளை புகாரி அவர்கள் தமது நூலில் பதிவு செய்யாமல் இருந்திருக்க வேண்டும் என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்தி புகாரியில் 3849 ஆவது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
3849 حَدَّثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ حُصَيْنٍ عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ قَالَ رَأَيْتُ فِي الْجَاهِلِيَّةِ قِرْدَةً اجْتَمَعَ عَلَيْهَا قِرَدَةٌ قَدْ زَنَتْ فَرَجَمُوهَا فَرَجَمْتُهَا مَعَهُمْ رواه البخاري
அம்ர் பின் மைமூன் என்பவர் கூறுகிறார் :
அறியாமைக் காலத்தில் விபச்சாரம் புரிந்த பெண்குரங்கை குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை நான் கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன்.
நூல் : புகாரி 3849
இச்செய்தியில் ஏராளமான பொய்களும் முரண்பாடுகளும் உள்ளன.
இதை அறிவிப்பவர் அம்ருபின் மைமூன் என்பவராவார். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தவராகவோ அதற்கு முந்திய காலததவராகவோ இருந்தால் தான் ஜாஹிலிய்யா காலத்தில் நடந்த ஒன்றைப் பார்த்திருக்க முடியும். இவரோ நபித்தோழருக்கு அடுத்த காலத்தவர் ஆவார். அறியாமைக் காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தாலும் அதை இவர் பார்த்திருக்க முடியாது.
பொதுவாக மார்க்க சட்டதிட்டங்கள் யாவும் மனிதர்களுக்கே வகுக்கப்பட்டுள்ளன. மிருகங்களுக்கு எந்தச் சட்டதிட்டமும் கிடையாது. இது எல்லோரும் அறிந்து வைத்துள்ள பொதுவான அடிப்படையாகும். இந்த அடிப்படைக்கு முரணான கருத்தை இச்சம்பவம் உள்ளடக்கியிருக்கின்றது.
குரங்குகளுக்கிடையே திருமண உறவு என்ற கட்டுப்பாடு இருந்ததாகவும் அதை ஒரு குரங்கு மீறியதாகவும் ஒழுக்கமுள்ள மற்ற குரங்குகள் விபச்சாரம் செய்த குரங்கைக் கல்லெறிந்து கொன்றதாகவும் இதில் கூறப்படுகின்றது.
திருமணம் செய்து குடும்பம் நடத்த வேண்டும் என்ற எந்தச் சட்டமும் குரங்குகள் உட்பட எந்த மிருகத்துக்கும் கிடையாது. அவை விரும்பியவாறு இச்சையைத் தீர்த்துக் கொள்கிறது. இது தான் உலகத்தில் எதார்த்தமாக நடந்து கொண்டிருக்கின்றது. இதற்கு மாற்றமான இந்தச் செய்தியை அறிவுள்ளவர்கள் வடிகட்டிய பொய் என்று உடனே அறிந்து கொள்வார்கள்.
மேலும் குரங்குகள் திருமணம் செய்து வாழ்ந்தன என்று வைத்துக் கொண்டாலும் ஒரு குரங்கு தனது மனைவியான குரங்கிடம் சேர்கிறதா? மனைவியல்லாத குரங்கிடம் சேர்கிறதா என்பதை எப்படி மனிதர்கள் அறிய முடியும்?
இது புகாரியில் இடம் பெற்றாலும் இது பொய்யாகும். இதை நாம் அலட்சியப்படுத்தி விட வேண்டும்.
குரங்கு விபச்சாரம் செய்யுமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode