Sidebar

19
Fri, Jun
சமீபத்திய செய்திகள்

நோன்பாளி பல் துலக்கலாமா? - எழுத்து வடிவில்

நோன்பின் சட்டங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நோன்பு நேரத்தில் பல் துலக்கலாமா?

நோன்பு நேரத்தில் பல் துலக்கலாமா?

கடையநல்லூர் இஸ்மாயில்.

பதில் :

நோன்பாளிகள் நகம் மற்றும் முடி வெட்டலாமா?

குளிக்கலாமா?

ஆற்றில் மூழ்கிக் குளிக்கலாமா?

பற்பசைகள் பயன்படுத்தலாமா?

சோப்பு மற்றும் நறுமணப் பொருட்களை உபயோகிக்கலாமா?

வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடுமா?

என்பன போன்ற கேள்விகள் பரவலாக எழுப்பப்படுகின்றன. இவை யாவும் நோன்பின் அடிப்படையைப் புரியாததால் ஏற்படும் கேள்விகளாகும்.

உண்ணாமலும், பருகாமலும், இல்லறத்தில் ஈடுபடாமலும் இருப்பது தான் நோன்பாகும். இவை தவிர உள்ள ஏனைய காரியங்களைச் செய்வது நோன்பில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

மேலும் நோன்பை முறிக்கும் செயல்கள் எவை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கி விட்டார்கள். பல் துலக்குவது நோன்பை முறிக்கும் என்றால் இறைவனோ, இறைத்தூதரோ அதைச் சொல்லாமல் விட்டிருக்க மாட்டார்கள். ஆனால் எதுவும் சொல்லப்படவில்லை.

மேலும் பல் துலக்குவதை (குறிப்பாக தொழுகை நேரங்களில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் வலியுறுத்தியுள்ளார்கள்.

صحيح البخاري

888 – حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ الحَبْحَابِ، حَدَّثَنَا أَنَسٌ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَكْثَرْتُ عَلَيْكُمْ فِي السِّوَاكِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பல்துலக்குவது பற்றி நான் உங்களிடம் பல முறை வலியுறுத்தியுள்ளேன்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி 888

صحيح البخاري

887 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي أَوْ عَلَى النَّاسِ لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ مَعَ كُلِّ صَلاَةٍ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"என் சமுதாயத்திற்கு' அல்லது "மக்களுக்கு' நான் சிரமத்தை ஏற்படுத்தி விடுவேனோ என்று (அச்சம்) இல்லையாயின் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்க வேண்டுமென நான் அவர்களுக்குக் கட்டளை பிறப்பித்திருப்பேன்.

நூல் : புகாரி 887

நோன்புக் காலங்களிலும் நபியவர்களின் இந்த சுன்னத் கடைப்பிடிக்கப்பட வேண்டியதாகும்.

ரமலான் கால தொழுகை நேரங்களில் பல் துலக்கக் கூடாது என்றிருந்தால் நபியவர்கள் அதை விளக்கியிருப்பார்கள்.

எனவே பல் துலக்குவதால் நோன்பு முறியாது.

பற்பசையின் சுவையை நாம் உணர்வதால் அது நோன்பைப் பாதிக்கும் என்று சொல்வது ஏற்புடையதல்ல. பல் குச்சியால் பல் துலக்கும் போதும் பல் குச்சியின் சுவையை நாக்கு உணரவே செய்யும். சுவையை உணர்ந்தாலும் அதை நாம் விழுங்குவதில்லை. எனவே பற்பசையைப் பயன்படுத்தி பல் துலக்கினால் நோன்பு முறியாது.