Sidebar

19
Fri, Jun
சமீபத்திய செய்திகள்

நோன்பாளி சுய இன்பத்தில் ஈடுபட்டால்?

ஒருவா் நோன்பு நோற்றுக் கொண்டு சுய இன்பத்தில் ஈடுபட்டால் நோன்பின் நிலை என்ன?

நாளிர்

சுயமாக விந்தை வெளியேற்றும் சுய இன்பம் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும்.

வழிகெட்ட சலஃபிக் கூட்டத்தையும், மற்றும் சிலரையும் தவிர மற்ற அனைவரிடமும் இது பாவமான செயலாகும்.

சுய இன்பம் கூடாது என்பதற்கான ஆதாரங்களை தனிக்கட்டுரையில் காணலாம்.

பார்க்க : சுய இன்பம் கூடுமா

நோன்பு என்பது இச்சையைக் கட்டுப்படுத்திக் கொள்வது தான். சுய இன்பம் மூலம் இச்சையைத் தீா்த்துக் கொள்வது எப்படி நோன்பாகும்? நோன்பு நோற்றுக் கொண்டு ஹலாலான வழிமுறையிலேயே (மனைவியுடன் உறவு கொண்டு) இச்சையைத் தணிக்கக் கூடாது என்றால் தடை செய்யப்பட்ட ஹராமான சுய இன்பம் மூலமாக இச்சையைத் தணிப்பது அறவே கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

صحيح البخاري

1903 – حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، حَدَّثَنَا سَعِيدٌ المَقْبُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالعَمَلَ بِهِ، فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ»

யார் பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும், பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!
அறிவிப்பவா் அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 1903

உண்ணாமல் பருகாமல் இருப்பது மாத்திரம் நோன்பல்ல! தீய நடவடிக்கைகளை முற்றிலுமாக விட்டொழிப்பது தான் நோன்பின் நோக்கம் என்று இந்த நபிமொழி உணா்த்துகின்றது. எனவே ஒருவா் நோன்பு நோற்றுக் கொண்டு இது போன்ற செயலில் ஈடுபட்டால் அது நோன்பாகவே ஆகாது. அல்லாஹ்விடத்தில் அதற்கு எந்தக் கூலியையும் பெற முடியாது.

நோன்பாளி ஆஸ்துமாவுக்காக ஸ்பிரே பயன்படுத்தலாமா?

எனக்கு ஆஸ்துமா இருக்கிறது. எனவே நான் அதற்கான ஸ்ப்ரே மருந்தை தினமும் உபயோகிக்கிறேன். இந்த ஸ்ப்ரே நேராக நுரையீரலுக்குச் செல்லும். நோன்பு இருக்கும் போது இதை நான் உபயோகிக்கலாமா ? இதனால் நோன்பு முறிந்துவிடுமா?

சாதிக் பாட்சா, சவூதி அரேபியா.

நோன்பாளிகள் சுபுஹ் முதல் மக்ரிப் வரை உண்ணாமலும்,, பருகாமலும் இல்லறத்தில் ஈடுபடாமலும் இருக்க வேண்டும்.

صحيح البخاري

1894 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " الصِّيَامُ جُنَّةٌ فَلاَ يَرْفُثْ وَلاَ يَجْهَلْ، وَإِنِ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ: إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ تَعَالَى مِنْ رِيحِ المِسْكِ» «يَتْرُكُ طَعَامَهُ وَشَرَابَهُ وَشَهْوَتَهُ مِنْ أَجْلِي الصِّيَامُ لِي، وَأَنَا أَجْزِي بِهِ وَالحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்பு கேடயம் ஆகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவோ, அறிவீனமான செயல்களில் ஈடுபடவோ வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் "நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) "எனக்காக நோன்பாளி தமது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டுவிடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!' (என்று அல்லாஹ் கூறுகிறான்)
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 1894

ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் பயன்படுத்துகின்ற மருந்து நிரப்பப்பட்ட குப்பிகள் அவர்களின் மூச்சி இறைப்பை சமநிலை செய்வதற்குத் தான் பயன்படுத்தப்படுகின்றன. இது அவர்களுக்கு உணவாகவோ, பானமாகவோ அமைவதில்லை.

நோன்பு நோற்ற நிலையில் நாம் மூச்சு விட்டு இழுக்கும் போது காற்றில் கலந்துள்ள பல பொருட்களையும் சேர்த்து உள்ளிழுக்கிறோம். மாசுபட்ட காற்றை சுவாசிக்கும் போது அதில் உள்ள நச்சுப் பொருள்களயும் சேர்த்தே நாம் உள்ளிழுக்கிறோம். இதனால் நமது நோன்பிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதை அறிந்து வைத்திருக்கிறோம்.

இது போன்று தான் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு வாயு வடிவிலான மருந்தை உள்ளே செலுத்துவதற்காக மருந்துக் குப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே அவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது உண்ணுவதிலோ, பருகுவதிலோ சேராது.

அதுபோல் காதுகளுக்கு சொட்டு மருந்து இடுவது உண்ணுவதிலோ, பருகுவதிலோ சேராது என்பதால் இதனால் நோன்புக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

ஆனால் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நோன்பு நோற்பதினால் உயிருக்கு ஆபத்து, அல்லது உடல்நிலை மோசமாகும் நிலை ஏற்படும் என்றால் நோன்பை விட்டு விட்டு நோய் தீர்ந்த பின் வசதியான நாட்களில் விடுபட்ட நோன்புகளை நோற்றுக் கொள்ளலாம்.

நோன்பு வைத்துக் கொண்டு இரத்தம் கொடுக்கலாமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும், அதற்கடுத்த கால கட்டங்களிலும் இரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்றும் வழக்கம் அரபியரிடம் இருந்தது.

தலையின் உச்சியில் கண்ணுக்குத் தெரியாத வகையில் துவாரமிட்டு கொம்பு போன்ற கருவியின் மூலம் அதை உறிஞ்சி வெளியேற்றி வந்தனர். கண்ணாடிக் குவளையைப் பயன்படுத்தியும் இவ்வாறு இரத்தத்தை வெளியேற்றி வந்தனர். இது உடலுக்கு ஆரோக்கியமானது எனவும் நம்பி வந்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த இந்த நடைமுறையிலிருந்து வேறு பல சட்டங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا خَالِدٌ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَبِي الْأَشْعَثِ عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ أَنَّهُ مَرَّ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَمَنَ الْفَتْحِ عَلَى رَجُلٍ يَحْتَجِمُ بِالْبَقِيعِ لِثَمَانِ عَشْرَةَ خَلَتْ مِنْ رَمَضَانَ وَهُوَ آخِذٌ بِيَدِي فَقَالَ أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ

இரத்தம் கொடுப்பவரும், எடுப்பவரும் நோன்பை முறித்து விட்டனர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் கூறினார்கள்.
நூல்: அஹ்மத்

இந்தக் கருத்தில் இன்னும் பல ஹதீஸ்களும் உள்ளன. இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இந்தச் சட்டம் நடைமுறையிலிருந்து பின்னர் மாற்றப்பட்டு விட்டது.

الدارقطنى

 2283 – حَدَّثَنَا أَبُو الْقَاسِمِ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُثَنَّى عَنْ ثَابِتٍ الْبُنَانِىِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ أَوَّلُ مَا كُرِهَتِ الْحِجَامَةُ لِلصَّائِمِ أَنَّ جَعْفَرَ بْنَ أَبِى طَالِبٍ احْتَجَمَ وَهُوَ صَائِمٌ فَمَرَّ بِهِ النَّبِىُّ -صلى الله عليه وسلم- فَقَالَ « أَفْطَرَ هَذَانِ » ثُمَّ رَخَّصَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- بَعْدُ فِى الْحِجَامَةِ لِلصَّائِمِ وَكَانَ أَنَسٌ يَحْتَجِمُ وَهُوَ صَائِمٌ كُلُّهُمْ ثِقَاتٌ وَلاَ أَعْلَمُ لَهُ عِلَّةً.

ஆரம்பத்தில் ஜஃப‌ர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைக் கடந்து சென்றார்கள். இரத்தம் கொடுத்தவரும், எடுத்தவரும் நோன்பை விட்டு விட்டனர் என்று அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினர்கள். இதன்  பிறகு நோன்பாளி இரத்தம் கொடுக்க அனுமதி வழங்கினார்கள்.
நூல் : தாரகுத்னீ

உயிர் காக்கும் அவசியத்தை முன்னிட்டு இரத்த தானம் செய்வதால் நோன்பு முறியாது என்பதை நோன்பு நோற்றவர் உடலிலிருந்து இரத்தத்தை வெளியேற்றுவதை ஆதாரமாகக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.

நோன்பு நோற்றவர் உடலில் இரத்தம் ஏற்றிக் கொள்ளுதல், குளுகோஸ் ஏற்றிக் கொள்ளுதல், ஊசி மூலம் மருந்துகளை உடலில் ஏற்றிக் கொள்ளுதல் போன்றவற்றுக்கு இதை ஆதாரமாகக் காட்ட முடியாது.

ஏனெனில் இரத்தத்தை வெளியேற்றுவதற்கும், உள்ளே செலுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது.

வெளியேற்றுவற்கான சான்று உள்ளே செலுத்துவதற்குப் பொருந்தாது.

மேலும் குளுகோஸ் ஏற்றும் அளவுக்கு ஒருவரது நிலை இருந்தால் அவர் நோன்பை முறித்துவிட சலுகை பெற்றவராக இருக்கிறார். குளுகோஸ் ஏற்றிக் கொண்டு நோன்பை முறித்து முறித்த நோன்பை மற்றொரு நாளில் வைத்துக் கொள்ளலாம்.

குளுகோஸ் ஏற்றும் நிலைமை ஏற்படாமல் உடலுக்குத் தெம்பு ஏற்றும் நோக்கத்தில் குளுகோஸ் ஏற்றப்பட்டால் இது உணவுடைய நிலையில் தான் உள்ளது. உணவு உட்கொள்வதற்குப் பதிலாக குளுகோஸ் ஏற்றிக் கொண்டு உணவு உட்கொண்டது போன்ற சக்தியைப் பெற இயலும். எனவே உண்ணக் கூடாது என்ற தடையை மீறியதாகவே ஆகும்.

இது போலவே இரத்தம் ஏற்றும் நிலையும் சாதாரண நிலையில் நடப்பது அல்ல.

உயிர் காக்கும் அசாதாரணமான நிலையில் தான் இரத்தம் ஏற்ற வேண்டிய நிலை ஏற்படும்.

இது போன்ற நிலையை அடைந்தவர் நோன்பை விட்டு விட சலுகை பெற்றுள்ளார்.

உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றால் நோன்பை விட்டு விடுவது இவரைப் பொருத்த வரை கடமையாகவும் ஆகிவிடும்.

ஊசி மூலம் மருந்து செலுத்தும் அளவுக்கு உடல் நிலை சரியில்லாதவரும் நோன்பை விட்டு விட அனுமதி பெற்றவர் தான்.

உடலுக்குள் இவற்றைச் செலுத்தினால் வயிற்றுக்குள் சென்று செயல்படுவதை விட விரைவாக இரத்தத்தில் கலப்பதால் உணவு உட்கொண்டதாகத் தான் இதைக் கருத வேண்டும்.

நோயாளியாக இருப்பவர் வேறு நாளில் அந்த நோன்பை வைத்துக் கொள்ள இறைவன் தெளிவான வழிகாட்டியிருக்கும் போது இவர்கள் நோன்பை விட்டு விடுவதே சிறப்பாகும்.

 

பள்ளிவாசலில் பணக்காரர்கள் நோன்பு துறக்கலாமா?

நோன்பு துறக்க எவர்கள் பள்ளிவாசலுக்கு வரலாம்?

பணக்காரர்கள் வரலாமா?

வசதியுள்ளவர்கள் வந்தால் அது யாசகம் கேட்பதாக ஆகுமா?

முஹம்மத் சபியுல்லாஹ்

பதில்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளிவாசலில் நோன்பு துறக்க எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. கஞ்சி காய்ச்சி வழங்கப்படவில்லை. இது நம்முடைய வசதிக்காக நாம் செய்து கொண்ட ஏற்பாடாகும். பள்ளிவாசலில் நோன்புக் கஞ்சி காய்ச்சும் ஏற்பாடு இல்லாவிட்டால் அதனால் ஒரு குற்றமும் வராது.

நம்முடைய வசதிக்காக நாம் செய்யும் காரியம் என்பதால் பள்ளிவாசலில் நோன்பு துறக்க பணக்காரர்கள் செல்லலாமா என்ற கேள்விக்கு எளிதில் விடை காணலாம்.

பள்ளிவாசலில் நோன்பு துறப்பதற்காக மக்களிடம் நிதி திரட்டும் போது தர்மம் என்ற அடிப்படையில் நிதி திரட்டுவதில்லை. ஏழைகளுக்கு மட்டும் தான் இதை வழங்குவோம் என்று கூறி நிதி திரட்டுவதில்லை.

வீட்டில் நோன்பு துறந்து விட்டு பள்ளிவாசலுக்கு வந்தால் மக்ரிப் ஜமாஅத்தில் கலந்து கொள்ள இயலாமல் போகும். இதற்காகத் தான் பள்ளிவாசலில் நோன்பு துறக்கும் வசதிகள் செய்யப்படுகின்றன. நோன்பு துறக்க உணவு கிடைக்காமல் ஏழைகள் சிரமப்படுவார்கள் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்படவில்லை.

உதவி செய்யும் மக்கள் வசதி படைத்தவர்களும் பயன்படுத்துவார்கள் என்பதைத் தெரிந்து கொண்டே தான் நிதி உதவி செய்கின்றனர்.

எனவே இது ஜகாத்திலும் சேராது. பிச்சையிடுவதிலும் சேராது. செல்வந்தர்களும், ஏழைகளும் ஒரே மாதிரியான உணவுடன் நோன்பு துறந்து சமத்துவம் பேணுவதை நாம் வரவேற்க வேண்டும்.

நோன்பாளி தன் மனைவியை முத்தமிடலாமா?

நோன்பு நோற்பவர் பகல் காலங்களில் உடலுறவு கொள்ளாமல் விலகியிருப்பதுடன் உடலுறவுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கைகளையும் தவிர்த்துக் கொள்வது சிறந்ததாகும்.

صحيح البخاري

1927 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: عَنْ شُعْبَةَ، عَنِ الحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُقَبِّلُ وَيُبَاشِرُ وَهُوَ صَائِمٌ، وَكَانَ أَمْلَكَكُمْ لِإِرْبِهِ»، وَقَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ {مَآرِبُ} [طه: 18]: «حَاجَةٌ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது தமது மனைவியரை முத்தமிடுவார்கள்; கட்டியணைப்பார்கள். அவர்கள் தம் உணர்வுகளை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1927

سنن أبي داود

2387 – حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ يَعْنِي الزُّبَيْرِيَّ، أَخْبَرَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي الْعَنْبَسِ، عَنِ الْأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلً سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْمُبَاشَرَةِ لِلصَّائِمِ، «فَرَخَّصَ لَهُ»، وَأَتَاهُ آخَرُ، فَسَأَلَهُ، «فَنَهَاهُ»، فَإِذَا الَّذِي رَخَّصَ لَهُ شَيْخٌ، وَالَّذِي نَهَاهُ شَابٌّ

நோன்பாளி (மனைவியை) கட்டியணைப்பது பற்றி ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். மற்றொருவர் வந்து கேட்ட போது அவருக்கு அனுமதி மறுத்தார்கள். அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், அனுமதி மறுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 2039

இதில் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது தான் முக்கியமான அளவுகோலாகும். முத்தமிடுவதில் ஆரம்பித்து உடலுறவில் போய் முடிந்து விடும் என்று யார் தன்னைப் பற்றி அஞ்சுகிறாரோ அத்தகையவர் பகல் காலங்களில் அதைத் தவிர்த்துக் கொள்வது அவசியம்.

புகைபிடித்தால் நோன்பு முறியுமா?

புகைபிடித்தல் என்பது மார்க்கத்திற்கு மாற்றமான ஒரு வீணாண காரியமாகும். இது உடலுக்கு கேடானது மட்டுமல்லாமல் வீண் விரையமாகும்.  நம்முடைய உடலுக்கு நாம் தீங்கிழைத்துக் கொள்வதை திருக்குர்ஆன் கடுமையாகக் கண்டிக்கிறது.

உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்.
திருக்குர்ஆன் 2:195
உங்களையே கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:29
வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.
திருக்குர்ஆன் 6:141
உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.
திருக்குர்ஆன் 7:31
விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
திருக்குர்ஆன் 17:27

மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் புகை பிடித்தல் எவ்வளவு கடுமையான குற்றம் என்பதை தெளிவாகக் கூறுகின்றன. இறைவன் ஒரு செயலைத் தடை செய்து விட்டால் அதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதைப் பற்றி வீணான கேள்விகளைக் கேட்பது கூடாது.

திருடுவது கடுமையான குற்றம் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. எனவே அதை விட்டும் தவிர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர பிஸ்மில்லாஹ் கூறி திருட்டை ஆரம்பிக்கலாமா? என்று கேட்பது கூடாது.

விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள். அது மானக்கேடான காரியம் என்று இஸ்லாம் கூறுகிறது. எனவே நாம் இத்தகைய பாவத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர விபச்சாரம் செய்தால் குளிப்பு கடமையா? என்று கேள்வி கேட்பது கூடாது.

இவ்வாறு கேட்பது அதனை அங்கீகரிப்பது போன்றாகி விடும். இது பல மோசமான பின்விளைவுகளைத் தான் ஏற்படுத்தும்.

நாம் நோன்பு நோற்பதன் நோக்கமே மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களை விட்டொழித்து, இறையச்சத்தை வளர்த்துக் கொள்வதற்காகத் தான். இப்படிப்பட்ட நோன்பில் நாம் பாவமான காரியங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர இதைச் செய்தால் நோன்பு முறியுமா? என்று கேட்பது நோன்பிலும் அந்தப் பாவமான காரியத்தை அங்கீகரிப்பது போன்றாகி விடும்.

எனவே புகை பிடித்தல் என்பது ஒரு மோசமான, ஹராமான காரியமாகும். இதனை எல்லாக் காலங்களிலும் கண்டிப்பாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அதுபோல சிலர் நோன்பு நேரத்தில் மட்டும் புகை பிடிக்காமல் இருந்து விட்டு நோன்பு திறந்தவுடன் கஞ்சி குடித்தார்களோ இல்லையோ கழிவறையை நோக்கி புகைபிடிக்க ஓடுவார்கள். நடுத்தெருவில் நின்று புகை பிடித்தால் நான்கு பேர் பார்த்து விடுவார்களே என்ற அச்சம் தான் கழிவறைக்கு ஓட்டமெடுக்கக் காரணம்.

இந்தப் பூமியில் நான்கு பேர் பார்ப்பார்களே என்று அஞ்சக்கூடிய அவர்கள் படைத்த இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றானே என்ற பய உணர்வு இல்லாமல் இருக்கின்றார்கள்.

صحيح البخاري

1903 – حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، حَدَّثَنَا سَعِيدٌ المَقْبُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالعَمَلَ بِهِ، فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ»

யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1903, 6057

நோன்பின் மூலம் எடுக்கப்படும் பயிற்சி நம்மிடம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது இங்கே விளக்கப்படுகிறது.

நோன்பின் மூலம் பெற்ற பயிற்சி, பொய் சொல்வதிலிருந்தும், தீய நடவடிக்கையிலிருந்தும் ஒருவனைத் தடுக்கவில்லை என்றால் அது நோன்பு அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாலூட்டும் தாய்மார்கள் கண்டிப்பாக நோன்பு வைக்க வேண்டுமா?

பதில் :

குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்கள் நோன்பை விட்டு விடுவதற்குச் சலுகை பெற்றுள்ளனர். பாலூட்டும் சமயத்தில் பெண்களுக்குப் போதிய உணவு அவசியம் என்பதால் இவர்கள் நோன்பு நோற்பதில் மார்க்கம் சலுகையளிக்கின்றது.

2276 أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ قَالَ حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ وُهَيْبِ بْنِ خَالِدٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَوَادَةَ الْقُشَيْرِيُّ عَنْ أَبِيهِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَجُلٌ مِنْهُمْ أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ وَهُوَ يَتَغَدَّى فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلُمَّ إِلَى الْغَدَاءِ فَقَالَ إِنِّي صَائِمٌ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَضَعَ لِلْمُسَافِرِ الصَّوْمَ وَشَطْرَ الصَّلَاةِ وَعَنْ الْحُبْلَى وَالْمُرْضِعِ رواه النسائي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பயணத்தில் உள்ளவருக்கு நோன்பையும், தொழுகையில் பாதியையும் இறைவன் தளர்த்தியுள்ளான். மேலும் பாலூட்டும் பெண்ணுக்கும், கர்ப்பிணிக்கும் தளர்த்தியுள்ளான்.(நோன்பு நோற்காமல் இருக்க சலுகை வழங்கியுள்ளான்.)
நூல் : நஸாயீ

நோன்பு வைத்துக்கொண்டு குழந்தைக்குப் பாலூட்டினால் தாயும், குழந்தையும் பாதிக்கப்படலாம். எனவே பாலூட்டும் தாய் நோயாளியுடைய நிலையில் இருக்கின்றார். இவர் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது.

நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

திருக்குர்ஆன் 2:184

அதே நேரத்தில் நோயாளி நோய் நீங்கிவிட்டால் விடுபட்ட நோன்பை நோற்பது கடமையாகும். எனவே பாலூட்டும் பெண் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.

More Articles …