Sidebar

27
Sat, Jul
5 New Articles

மத்ஹபு மோகத்துக்குக் காரணம் என்ன?

மத்ஹப் - தக்லீத் - தரீக்கா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

தனிமனித வழிபாடு

அல்ஜன்னத் மாத இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது எழுதிய கட்டுரை - தேவையான திருத்தங்களுடன்

இன்றைக்கு மார்க்க அறிஞர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் உலமாக்கள், ஏழாண்டு காலம் மதரஸாக்களில் காலம் கழித்த உலமாக்கள் மற்ற விஷயங்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தாலும் மத்ஹபு விஷயத்தில் மட்டும் இவ்வளவு பிடிவாதம் பிடிக்க வேண்டிய காரணம் என்ன?

பல மவ்லவிகளை நாம் சந்தித்துப் பேசும் போது நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் இந்த மத்ஹபு விஷயத்தை நீங்கள் எழுதியிருக்கக் கூடாது. அதைத் தான் எங்களால் ஜீரணிக்க முடியவில்லை என்று நம்மிடம் கூறுகின்றனர்.

மதரஸாக்களுக்குச் செல்லாதவர்கள் கூட எளிதில் புரிந்து கொள்ளும் இந்த உண்மையை மதரஸா சென்றவர்கள் புரிந்து கொள்ள முடியாமல் போவதற்குக் காரணமென்ன? மிகமிக முக்கியமான காரணம் இட்டுக் கட்டப்பட்ட பொய்யான ஹதீஸ்களை இவர்கள் நம்பியதும், நம்ப வைக்கப்பட்டதுமே ஆகும்.

தனி நபர்கள் மீது ஏற்பட்ட காரணமற்ற பக்தியின் காரணமாக அவர்களைச் சிறப்பித்து பொய்யான ஹதீஸ்களை உருவாக்கி அதை நம்ப வைத்து விட்டார்கள்.

முதன் முதலில் அலி (ரலி) அவர்களை உயர்த்தியும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரைத் தாழ்த்தியும் ஷியாக்கள் பல பொய்யான ஹதீஸ்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் உலவவிட்டனர். இஸ்லாமிய வரலாற்றில் உருவாக்கப்பட்ட பொய்யான ஹதீஸ்கள் முதன் முதலில் இந்த ஷியாக்களாலேயே தயாரிக்கப்பட்டன.

ஷியாக்களின் அதே வழிமுறையைப் பின்பற்றி இமாம்கள் பற்றி மத்ஹபுவாதிகள் பல ஹதீஸ்களைத் தயாரித்தனர். தங்களின் இமாம்களை உயர்த்துவதற்காக ஏனைய இமாம்களைத் தாழ்த்தி உருவாக்கப்பட்ட ஹதீஸ்களும் உள்ளன.

இந்தப் பொய்யான ஹதீஸ்கள் மதரஸா செல்லும் பிஞ்சு உள்ளங்களில் ஆழமாகப் பதிக்கப்பட்டு விட்டதால் தான் மத்ஹபு வெறியிலிருந்து மவ்லவிகள் விடுபட யோசிக்கிறார்கள்.

மதரஸாக்களில் ஐந்தாம் வகுப்புக்குச் சட்ட நூல் என்று ஓதிக் கொடுக்கப்படும் துர்ருல் முக்தாரிலும் அதன் விரிவுரையான ரத்துல்முக்தாரிலும் முன்னுரையில் இத்தகைய பொய்யான ஹதீஸ்கள் கூறப்பட்டு இமாம்கள் மீது பக்தி ஊட்டப்படுகின்றது. அதை உண்மை என்று நம்பிய காரணத்தாலேயே இமாம்கள் வழிபாட்டிலிருந்து விடுபட மவ்லவிகள் தயங்குகின்றார்கள்.

وعنه عليه الصلاة والسلام (إن آدم افتخر بي وأنا أفتخر برجل من أمتي اسمه نعمان وكنيته أبو حنيفة، هو سراج امتيالدر المختار

ஆதம் (அலை) அவர்கள் என் மூலம் பெருமை அடைந்தார்கள். நான் என் உம்மத்தில் வருகின்ற நுஃமான் எனும் இயற்பெயர் கொண்ட அபூஹனீஃபாவைக் கொண்டு பெருமையடைவேன். அவர் என் சமுதாயத்துக்கு விளக்காவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக அந்த துர்ருல் முக்தாரில் கூறப்பட்டுள்ளது.

 وعنه عليه الصلاة والسلام (إن ساير الانبياء يفتخرون بي، وأنا أفتخر بأبي حنيفة، من أحبه فقد أحبني، ومن أبغضه فقد أبغضني

எல்லா நபிமார்களும் என் மூலம் பெருமை அடைந்தனர். நான் அபூஹனீஃபா மூலம் பெருமை பெறுகிறேன். அவரை யார் விரும்புகிறாரோ அவர் என்னை விரும்புகிறார். அவரை யார் வெறுக்கிறாரோ அவர் என்னை வெறுக்கிறார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் துர்ருல் முக்தாரில் கூறப்பட்டுள்ளது.

சாதாரண அறிவு படைத்தவனுக்கும் பச்சைப் பொய் என்று தெளிவாகத் தெரியக்கூடிய இந்த ஹதீஸ் மவ்லவிகளின் சிறு பருவத்திலேயே போதிக்கப்பட்டால் எப்படி அவர்கள் மத்ஹபிலிருந்து விடுபடுவார்கள்.?

ஆதம் (அலை) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் பெருமையடைந்தார்கள் என்றால் அதில் நியாயமிருக்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆதம் (அலை) அவர்களை விட உயர்வானவர்கள். அவர்கள் மூலம் ஆதம் (அலை) அவர்கள் பெருமையடையலாம்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூஹனீபாவைக் கொண்டு பெருமை அடைகிறார்கள் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விடவும் அபூஹனீபா இமாம் அவர்கள் அல்லவா உயர்ந்த அந்தஸ்துக்கு போகின்றார்கள்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இல்லாத அந்தஸ்து அபூஹனீபா அவர்களுக்கு இருப்பதாகவும், அதன் மூலம் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருமையடைய இருக்கின்றார்கள் என்றும் கூறும் இந்த விஷக் கருத்து பலமாகப் பதிந்து விட்டதனால் தான் மவ்லவிகள் அதை இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரையே பயன்படுத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி, அவர்களை விட இமாமை உயர்வாகக் காட்டும் இந்தப் பொய்யைத் தான் எல்லா மதரஸாக்களும் சட்ட நூலாக ஒப்புக் கொண்ட துர்ருல் முக்தாரில் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொல்வது என்றால் அதன் அறிவிப்பாளர்கள் யார்? எந்த ஹதீஸ் நூலில் இடம் பெற்றுள்ளது? அறிவிப்பாளர்களின் தகுதி என்ன? என்றெல்லாம் ஆதாரம் இருக்க வேண்டும். இத்தகைய ஆதாரத்துடன் தான் எந்த நபிமொழியையும் எடுத்துக் காட்ட வேண்டும். ஆனால் மேற்கண்ட செய்திக்கு இது போன்ற எந்த ஆதாரத்தையும் அந்த நூலில் எடுத்துக் காட்டப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக மொட்டையாக அந்த நூலில் கூறப்படுகிறது.

இவர்கள் இத்துடன் நின்று விடவில்லை. அல்லாஹ்வின் பெயராலும் பொய்யைக் கூறி தங்கள் இமாமை உயர்த்த எண்ணுகின்றனர். அதே துர்ருல் முக்தார் முன்னுரையில் இடம் பெற்றுள்ள மற்றொரு பொய்யைக் காண்போம்.

ولها قصة مشهورة وفي حجته الاخيرة استأذن حجبة الكعبة بالدخول ليلا، فقام بين العمودين على رجله اليمنى ووضع اليسرى على ظهرها حتى ختم القرآن، فلما سلم بكى وناجى ربه وقال: إلهي ما عبدك هذا العبد الضعيف حق عبادتك، لكن عرفك حق معرفتك فهب نقصان خدمته لكمال معرفته، فهتف هاتف من جانب البيت: يا أبا حنيفة قد عرفتنا حق المعرفة وخدمتنا فأحسنت الخدمة، قد غفرنا لك ولمن اتبعك ممن كان على مذهبك الى يوم القيامة. الدر المختار

அபூ ஹனீஃபா அவர்கள் கஅபாவின் காவலாளியிடம் கஅபாவின் உள்ளே செல்ல ஒரு இரவில் அனுமதி கேட்டார்கள். இரண்டு தூண்களுக்கிடையில் வலது காலில் நின்றார்கள். இடது காலை வலது கால் மீது வைத்துக் கொண்டார்கள். இந்த நிலையில் குர்ஆனை ஓதி முடித்தார்கள். ஸலாம் கூறியதும் அழுதார்கள். தமது இறைவனிடம் இரகசியமாக உரையாடினார்கள். என் இறைவா இந்த அடியான் உன்னை வணங்க வேண்டிய விதத்தில் வணங்கவில்லை. எனினும் உன்னை அறிய வேண்டிய விதத்தில் அறிந்துள்ளேன். எனவே இந்த அடியானின் முழு ஞானம் காரணமாக இவரது வணக்கத்தில் உள்ள குறைபாடுகளை மன்னித்து விடு என்று துஆ செய்தார்கள். அப்போது கஅபாவின் ஒரு பகுதியில் இருந்து அவர்களை நோக்கி அபூஹனீஃபாவே! நம்மை விளங்க வேண்டிய விதத்தில் விளங்கிக் கொண்டீர். உம்மையும் உம்மைப் பின்பற்றியவர்களையும் கியாம நாள் வரை மன்னித்து விட்டேன் என்று அசரீரியில் அல்லாஹ் கூறினானாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் தங்களின் இமாமுக்கும் வஹீ வந்திருக்கிறது; அதுவும் அவரைப் பின்பற்றியவர்களை கியாம நாள் வரை மன்னிக்கும் உத்திரவாதத்துடன் வஹீ வந்திருக்கிறது என்று சிறு பருவத்திலேயே நம்ப வைத்து விட்டார்கள்.

இமாம் அபூஹனீபா அவர்களிடம் அல்லாஹ்வே நேரடியாக உரையாடி விட்டான் என்று நம்ப வைக்கப்பட்டவர்கள் - கியாம நாள் வரை அவரைப் பின்பற்றியவர்களுக்கு மன்னிப்பு உண்டு என்று அல்லாஹ் உத்தரவாதம் தருவதாக நம்பியவர்கள் - எப்படி அதிலிருந்து விடுபட முடியும்?

இது போன்ற கதைகளை மதரஸா சென்றவர்கள் மட்டுமே அறியமுடியும்.

أحاديث مختارة للذهبي مأمون بن أحمد ثنا أحمد بن عبد الله الجوبياري أنا عبد الله بن معدان عن أنس مرفوعا يكون في أمتي رجل يقال له محمد بن إدريس أضر على أمتي من إبليس وآخر يقال له أبو حنيفة هو سراج أمتي

பொருள்: என் உம்மத்தில் முஹம்மத் இப்னு இத்ரீஸ் (அதாவது ஷாபி இமாம்) என்று ஒருவர் தோன்றுவார். இப்லீஸை விட என் சமுதாயத்திற்கு அவர் கேடு செய்வார். மேலும் என் சமுதாயத்தில் அபூஹனீஃபா என்று ஒருவர் தோன்றுவார். அவர் என் சமுதாயத்தின் விளக்கு ஆவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களாம்.

ஒரு தனி மனிதர் மீது ஏற்பட்ட பக்தி இன்னொரு இமாமை இப்லீஸை விட கெட்டவர் என்று கூறும் அளவுக்குச் சிலரை ஆக்கி விட்டது. அதுவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் இப்படிச் சொன்னார்கள் என்ற முத்திரையுடன்..

இதை அறிவிப்பவர்களில் மஃமூன் இப்னு அஹ்மத் என்ற பெரும் பொய்யனும், அஹ்மத் இப்னு அப்துல்லாஹ் அல் ஜூவைபாரி என்ற பொய்யனும் இடம் பெறுகின்றனர். இவ்விரு பொய்யர்களில் யாரோ ஒருவர் தான் இதை இட்டுக் கட்டியிருக்கின்றனர் என்று ஹதீஸ் கலை மேதை இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தமது மவ்லூஆத் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.

மஃமூன் என்ற பொய்யனிடம் ஷாபி இமாமையும், அவரைச் சார்ந்தவர்களையும் பற்றி நீர் என்ன கருதுகிறீர்? என்று கேட்கப்பட்ட போது மேற்கூறிய பொய்யான ஹதீஸை அவன் கூறினான். மஃமூன் என்ற பொய்யனே இதை இட்டுக்கட்டி இருக்க முடியும் என்று இமாம் ஹாகிம் அவர்கள் தனது அல்மத்ஹல் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள். மேலும் சிறிதளவாவது அறிவு உள்ள ஒவ்வொருவனுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பெரும் பொய் இது என்று தெளிவாகத் தெரியும் எனக் குறிப்பிடுகிறார்கள்.

ஸூயூத்தி அவர்கள் அல்லஆலில் மஸ்னூஆ என்ற நூலில் முதல் பாகத்தில் 457 ஆம் பக்கத்தில் இதைப் பொய்யென நிரூபித்துள்ளார்கள். மேலும் பல அறிஞர்களும் இதைப் பொய்யென நிரூபித்துள்ளனர். இவ்வளவு தெளிவாகப் பொய் என்று அறிஞர்கள் முடிவு செய்த பின்பும் ஹனபி அறிஞர்கள் பலர் இதைச் சரி காணவே முயற்சிக்கிறார்கள்.

ரத்துல் முக்தார் ஆசிரியர் இது சரியான ஹதீஸ் என்று சாதிக்கிறார். மேற்கூறிய அறிஞர்கள் எல்லாம் அபூஹனீபா அவர்கள் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியினால் இதைப் பொய் என்று கூறுவதாகத் தெரிவிக்கிறார்.

ஐனீ போன்ற அறிஞர்களும் இதிலிருந்து தப்பவில்லை. ஹதீஸ் கலை மேதைகள் அறிவிப்பாளர்களின் தராதரத்தை எடை போட்டு தக்கக் காரணங்களுடன் அடையாளம் காட்டியுள்ளதை ஒரு ஆதாரமுமின்றி இந்த ஹனஃபீ அறிஞர்கள் மறுக்கிறார்கள்.

இந்தக் குருட்டுப் பக்தி ஏற்பட்டு விட்டதால் தான் தங்கள் இமாம் சொன்னதில் தவறே ஏற்படாது என்று நம்புகின்றனர். தவறே ஏற்பட்டாலும் கியாம நாள் வரைக்கும் அல்லாஹ் அதை மன்னித்து விடுவான் என்றும் நம்புகின்றனர். மற்றொரு இமாமை இப்லீஸை விட மோசமானவர் என்று நம்புவதால் தான் அந்த இமாமுடைய எந்தக் கருத்தையும் நாம் ஏற்கக் கூடாது என்ற அளவுக்கு தங்களை மாற்றிக் கொண்டு விட்டார்கள்.

وقد جعل الله الحكم لاصحابه وأتباعه من زمنه الى هذه الايام، الى أن يحكم بمذهبه عيسى عليه السلام- الدر المختار

ஈஸா (அலை) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் படி தீர்ப்பு வழங்குவார்கள் என்றிருக்க இமாம் அபூஹனீஃபா அவர்களைப் பின்பற்றி ஹனஃபி மத்ஹபின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்குவார்களாம். இதுவும் துர்ருல் முக்தார் என்ற நூலில் தான் கூறப்பட்டுள்ளது.

இமாம்களை இப்லீஸை விடக் கெட்டவர்கள் என்று சித்தரிக்கக் கூடியவர்கள் தான் இமாம்களை மதிக்கின்றார்களா?

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account