Sidebar

27
Sat, Jul
5 New Articles

ஜல்லிக்கடும் அறுத்து உண்பதும் சமமா?

உயிர்களைக் கொன்று உண்ணுதல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

ஜல்லிக்கடும் அறுத்து உண்பதும் சமமா?

இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்குத் தடை விதித்துள்ளது. இதை விமர்சனம் செய்யும் பேஸ்புக் அறிவுஜீவிகள் உயிரினங்களை அறுத்து உண்பதையும் நீதிமன்றம் தடை செய்யுமா என்ற கேள்வியை எழுப்புகின்றனர். இந்தவாதம் ஏற்கத்தக்கது தானா?

மசூது, கடையநல்லூர்

பதில்

பொதுவாக அறிவுஜீகள் என்று அறியப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலோர் முழுமையாக ஆய்வு செய்யாமல் பிரச்சனைகளை அணுகி வாயில் வந்தபடி உளறி வருகின்றனர். வித்தியாசமாக எதையாவது சொன்னால் அறிவுஜீவிகளாக மக்கள் கருதுவார்கள் என்ற நினைப்பில் தான் இவ்வாறு உளறுவதாக நாம் கருதுகிறோம்.

அந்த வகையில் தான் நீங்கள் சுட்டிக்காட்டிய வாதமும் அமைந்துள்ளது.

முதலில் நீதிமன்றத் தீர்ப்பை எடுத்துக் கொள்வோம். நீதிபதிகள் நாட்டில் எது சட்டமாக ஆக்கப்பட்டுள்ளதோ அதனடிப்படையில் தான் தீர்ப்பு அளிக்க முடியும்.

இதை அறிவுஜீவிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவன் கோழி வியாபாரம் செய்கிறான். இன்னொருவன் கொக்கு வியாபாரம் செய்கிறான். காவல்துறைவினர் கோழி வியாபாரம் செய்பவனை விட்டுவிடுவார்கள். ஆனால் கொக்கு வியாபாரம் செய்பவனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள்.

ஒருவன் ஆட்டுத் தோலை வைத்திருந்தால் அல்லது பயன்படுத்தினால் அவனைச் சட்டம் ஒன்றும் செய்யாது. ஆனால் புலித்தோலை வைத்திருந்தால் அவனைப் பிடித்து சிறையில் தள்ளும்.

ஆட்டுக்கறி விருந்துக்கும் மான்கறி விருந்துக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. ஆனாலும் மான்கறி விருந்து வைத்தால் கம்பி எண்ண வேண்டும்.

நமது நாட்டில் இதுதான் சட்டம்.

வளர்ப்புப் பிராணிகளைத் தான் உணவுக்கு பயன்படுத்தலாம். வனவிலங்குகளையும் வளர்ப்பு பறவைகளாக இல்லாமல் சுதந்திரமாக சுற்றித்திரியும் பறவைகளையும் வேட்டையாடக் கூடாது. உண்ணவும் கூடாது. இது தான் நமது நாட்டில் உள்ள சட்டம்.

கொக்கு வேட்டையாடியவனை நீதிமன்றம் தண்டித்தால் கோழி வியாபாரியையும் தண்டிக்குமாறு நீதிமன்றத்தைக் கோர முடியாது.

நமது நாட்டின் சட்டம் வளர்ப்புப் பிராணிகளை உண்பதற்கு அனுமதிக்கிறது.

ஆனால் உணவுக்காக அல்லாமல், மனிதனுக்குப் பயன்படும் உழவு போன்ற பணிகளுக்கு அல்லாமல், மருந்துக்காக அல்லாமல், தற்காப்புக்காக அல்லாமல் எந்த உயிரினத்தையும் துன்புறுத்தக் கூடாது என்பதுதான் நம் நாட்டில் உள்ள சட்டம்.

இந்தச் சட்டப்படி ஜல்லிக் கட்டைத் தடுக்க முடியும். பிராணிகளை அறுத்து உண்பதைத் தடுக்க முடியாது.

பிராணிகள் வதைச் சட்டம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட சட்டத்தில் உணவுக்காக அறுத்து உண்பது சேர்க்கப்படவில்லை. சிங்கம், புலிகளை வதை செய்யாமல் சர்க்கஸ் நடத்துவதற்கு பயன்படுத்தினாலும் அது குற்றம் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே நீதிமன்றம் சட்டப்படி அளித்துள்ள தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு சட்டப்படி குற்றமாக இல்லாத காரியங்களைக் குற்றமாக அறிவிக்கக் கோருவது அறியாமையாகும்.

பிராணிகள் வதைச் சட்டத்தில் இருந்து காளைகளைச் சித்திரவதை செய்வதற்கு விதிவிலக்கு உண்டு என நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றினால் மட்டுமே இவர்கள் விரும்பக் கூடிய தீர்ப்பை நீதிமன்றங்கள் வழங்க முடியும்.

பிராணிகள் வதைச் சட்டத்தில் சரிபாதி சட்டங்கள் கிறுக்குத்தனமானவை என்பதில் நமக்கும் உடன்பாடு உள்ளது. மனிதர்களைக் கடித்துக் குதறும் வெறிநாய்களை நாம் தாக்கினால் புளூகிராஸ் எனும் மிருகநண்பர்கள் நம் மீது வழக்குப் போட்டு சிறையில் தள்ளிவிடுவார்கள்.

மனிதனை விட நாயை பெரிதாக மதிக்கும் இது போன்ற சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். அது தனி விஷயம்.

ஆனால் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சட்டப்படியானது என்பதில் சந்தேகம் இல்லை.

உயிரினங்க்ளைக் கொன்று புசிப்பதும் ஜல்லிக்கட்டும் சமமானது அல்ல என்பதை அறிவுஜீவிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜல்லிக் கட்டில் உயிர்வதை உள்ளது. ஆனால் அறுத்து உண்பதில் உயிர்வதை இல்லை என்று விஞ்ஞானம் நிரூபித்துள்ளது.

இது குறித்து திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் விளக்க உரையில் நாம் தெளிவாக விளக்கியுள்ளோம். அதனைக் கீழே தருகிறோம்.

இவ்வசனங்களில் (2:173, 5:3, 5:4, 6:118, 6:119, 6:121, 6:145, 11:69, 16:5, 16:14, 16:115, 22:28, 22:36, 23:21, 35:12, 36:72, 40:79, 51:27) உயிரினங்களை மனிதன் அறுத்து உண்ணலாம் என்று அனுமதிக்கப்படுகிறது. இந்த அனுமதி ஜீவகாருண்யத்திற்கு எதிரானதாக சிலரால் கருதப்படுகிறது. ஆழமாகச் சிந்திக்கும் பொழுது இது மனித குலத்துக்கு நன்மை செய்கின்ற ஒரு அனுமதி என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

உயிரினங்களை உணவுக்காகக் கொல்லக் கூடாது என்போர் அது உயிர்வதை என்றே காரணம் கூறுகின்றனர். உயிர்வதை தான் காரணம் என்றால் பல விஷயங்களை அவர்கள் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

  1. உயிர்வதை என்று சொல்வோர் கால்நடைகளை விவசாயப் பணிகளிலும், பாரம் இழுக்கும் பணிகளிலும் பயன்படுத்துகின்றனர். இது உயிர்வதையா? இல்லையா?
  1. உயிர்வதை என்று சொல்வோர் கன்றுகளுக்காக தாய்ப்பசுவிடம் சுரக்கும் பாலை ஏமாற்றி அருந்துகின்றனர். இது உயிர்வதையா? இல்லையா?
  1. இன்றைய அறிவியல் உலகில் தாவரங்களுக்கும் உயிர் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! தாவரங்களையும், காய் கனிகளையும் உண்பது உயிர்வதை இல்லையா?
  1. மனிதன் அருந்துகின்ற தண்ணீரிலும் கோடிக்கணக்கான உயிர்கள் இருப்பது இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த உயிர்களுடன் தண்ணீரை அருந்துவது உயிர்வதை இல்லையா?
  1. கொசு, தேள், பாம்பு போன்ற எத்தனையோ உயிர்களை மனிதன் தனது சுய நலத்திற்காகக் கொல்வது உயிர்வதைதானே?

உயிரினங்களை உட்கொள்ளக் கூடாது என்பதற்கு உயிர்வதை தான் காரணம் என்றால் மேற்கண்டவற்றிலும் உயிர்வதை இருக்கிறது என்பதைச் சிந்திக்க வேண்டும்.

அசைவம் சாப்பிடக் கூடாது என்பதற்கு உயிர்வதை தான் காரணம் என்றால் தாமாகச் செத்த பிராணிகளையும், மீன்களையும் தவிர்ப்பது ஏன்?

மீன்களைத் தவிர எந்த உணவும் கிடைக்காத துருவப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் இக்கொள்கையைக் கடைப்பிடித்தால் உலகில் வாழ முடியுமா?

இவ்வாறு மாமிசத்தைத் தவிர்ப்பவர்கள் கண் பார்வை கூர்மையடைவதற்காக மீன் எண்ணெய்யை உட்கொள்கின்றனர். இவர்களின் மனசாட்சி இதை ஏற்றுக் கொள்கிறது.

சைவம், அசைவம் ஆகிய இரு உணவுகளையும் ஜீரணிக்கும் வகையில் மனிதனின் குடல் அமைந்திருப்பதும் சிந்திக்கத்தக்கது.

இது போன்ற கேள்விகளைச் சிந்தித்தால் தனது நன்மைக்காக மனிதன் அல்லாத பிற உயிரினங்களை வதைப்பதையும், கொல்வதையும் மனிதனின் உள்மனது ஏற்றுக் கொள்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

போலித்தனமாகவும், முன்னோர் கூறியதில் கொண்ட குருட்டு நம்பிக்கையின் காரணமாகவும் உயிர்வதை என்று காரணம் காட்டி அசைவ உணவுகளைத் தவிர்த்து வருகின்றனர்.

இஸ்லாம் கூறுகின்ற முறையில் உயிரினங்களை அறுக்கும் போது அவற்றுக்கு எந்த வேதனையும் தெரியாது என்று சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உயிரினங்களை உணவாகக் கொள்ளும் முஸ்லிமல்லாதவர்கள் அவற்றைத் தண்ணீரில் மூழ்கடித்தோ, அல்லது கழுத்தை நெரித்தோ, தடியால் அடித்தோ, ஈட்டியால் குத்தியோ இன்னும் இது போன்ற வழிகளிலோ பிராணிகளின் உயிரைப் போக்குகின்றனர்.

ஆனால் இந்த வழிமுறைகளில் பிராணிகளைக் கொல்வதை இஸ்லாம் கண்டிக்கிறது. பிராணிகளின் குரல்வளையில் கூர்மையான கத்தி மூலம் அறுத்துத்தான் பிராணிகளைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

குரல்வளை மிக விரைவாக அறுக்கப்படுவதால் மூளையுடன் உள்ள தொடர்பு அறுந்து போகின்றது. இதனால் அப்பிராணிகளால் வலியை உணர முடியாது. இரத்தத்தை வெளியேற்றுவதற்காக உடல் துடிக்கிறது; வேதனையால் அல்ல என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஜெர்மனி நாட்டில் உள்ள ஹனோவர் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வை நடத்தியவர்கள் பேராசிரியர் சூல்ட்ஜ் மற்றும் அவரது துணை ஆய்வாளர் டாக்டர் ஹாஸிம் ஆவார்கள்.

அவர்கள் செய்த பரிசோதனையின் விவரத்தையும் அதன் முடிவுகளின் விவரத்தையும் கீழே தருகின்றோம்.

1) முதலில் உணவுக்காக அறுக்கப்படும் விலங்குகள் தேர்வு செய்யப்பட்டன.

2) அறுவை சிகிச்சை செய்து அவ்விலங்குகளின் தலையில் மூளையைத் தொடும்படி பல பகுதிகளில் மின்னணுக் கருவிகள் பொருத்தப்பட்டன.

3) உணர்வு திரும்பியதும். முழுவதுமாகக் குணமடைய பல வாரங்களுக்கு அப்படியே விடப்பட்டன.

4) அதன் பிறகு பாதி எண்ணிக்கை விலங்குகள் இஸ்லாமிய ஹலால் முறைப்படி அறுக்கப்பட்டன.

5) மறு பாதி எண்ணிக்கை விலங்குகள் மேற்கத்தியர் கையாளும் முறைப்படி கொல்லப்பட்டன.

6) பரிசோதனையின் போது கொல்லப்பட்ட எல்லா விலங்குகளுக்கும் E.E.G மற்றும் E.C.G பதிவு செய்யப்பட்டன. அதாவது E.E.G மூளையின் நிலையையும், E.C.G இருதய நிலையையும் படம் பிடித்துக் காட்டின.

இப்போது மேற்கண்ட பரிசோதனையின் முடிவுகளையும், அதன் விளக்கங்களையும் காண்போம்.

1) இஸ்லாமிய முறையில் விலங்குகள் அறுக்கப்பட்ட போது, முதல் மூன்று வினாடிகளுக்கு E.E.G யில் எந்த மாற்றமும் தென்படவில்லை. அறுக்கப்படுவதற்கு முன்னிருந்த நிலையிலேயே அது தொடர்ந்து நீடித்தது. விலங்குகள் அறுக்கப்படும்போது அவை வலியினால் துன்பப்படவில்லை என்பதை இது காட்டியது.

2) மூன்று வினாடிகளுக்குப் பின் அடுத்த மூன்று வினாடிகளுக்கு விலங்குகள் ஆழ்ந்த தூக்கம் அல்லது உணர்வற்ற நிலைக்கு ஆளாகின்றன என்பதை E.E.G. பதிவு காட்டியது. அந்நிலை உடம்பிலிருந்து அதிகப்படியான ரத்தம் பீறிட்டு வெளியாவதால் ஏற்படுகின்றது.

3) மேற்கண்ட ஆறு வினாடிகளுக்குப் பின் E.E.G பூஜ்ய நிலையைப் பதிவு செய்தது. அறுக்கப்பட்ட விலங்கு எந்த வலி அல்லது வதைக்கும் ஆளாகவில்லை என்பதை இது காட்டியது.

4) மூளையின் நிலையை பூஜ்யமாகப் பதிவு செய்த நேரத்திலும், இதயத்துடிப்பு நிற்காமல் தொடர்ந்து துடிப்பதாலும் உடலில் ஏற்படும் வலிப்பினாலும் உடலிருந்து முற்றிலுமாக ரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதனால் அந்த மாமிசம் உணவுக்கேற்ற சுகாதார நிலையை அடைகிறது.

மேற்கத்தியர் கையாளும் முறைப்படி கொல்லப்பட்ட பிராணிகள் வேதனைக்கு உள்ளாகின்றன் என்பதும் இந்தச் சோதனையில் தெரிய வந்தன.

1) இந்த முறையில் கொல்லப்படும் விலங்குகள் உடனே நிலைகுலைந்து உணர்வற்ற நிலைக்குப் போகின்றன.

2) அப்போது விலங்குகள் மிகக் கடுமையான வலியால் அவதியுறுவதை E.E.G பதிவு காட்டியது.

3) அதே நேரத்தில் விலங்குகளின் இதயம் ஹலால் முறையில் அறுக்கப்பட்ட விலங்குகளோடு ஒப்பிடும் போது முன்னதாகவே நின்று விடுகிறது. அதனால் உடலில் மிகுதியான ரத்தம் தேங்கிவிடுகிறது. ரத்தம் உறைந்த அந்த மாமிசம் உட்கொள்ளத்தக்க சுகாதார நிலையை அடையவில்லை.

மேற்கண்ட ஆய்வுகள் இஸ்லாமிய ஹலால் முறையே சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதோடு அம்முறையே மனிதாபிமான முறை என்பதையும் நிரூபித்துள்ளது.

எனவே பிராணிகளை இஸ்லாம் கூறும் முறையில் அறுத்தால் அதில் உயிரினங்களுக்கு வதை இல்லை என்பது நிரூபணமாகின்றது.

அப்படியானால் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுப்பதைச் சாப்பிட வேண்டும்; அவ்வாறு கூறாவிட்டால் சாப்பிடக் கூடாது என்று சொல்வதற்குக் காரணம் என்ன? என்ற சந்தேகம் ஏற்படலாம்.

பொதுவாக எந்த உயிரினத்தையும் எந்த ஒரு மனிதனாலும் உருவாக்க முடியாது. உலகமே ஒன்று திரண்டாலும் ஒரு எறும்பைக் கூட படைக்க முடியாது. அவ்வாறு இருக்கும் போது அல்லாஹ் படைத்த உயிரைக் கொல்வதற்கு மனிதனுக்கு உரிமையில்லை.

ஆனால் எந்த அல்லாஹ் இந்த உயிரினங்களைப் படைத்தானோ அவனே அதை அறுத்து உண்ண நமக்கு அனுமதி அளித்து விட்டால் அப்போது நமக்கு எந்த உறுத்தலும் ஏற்படத் தேவை இல்லை. ஆனால் இந்த அனுமதியைப் பயன்படுத்துவதாக இருந்தால் ஒவ்வொரு உயினத்தை அறுக்கும் போதும் அனுமதி பெற்றாக வேண்டும்.

அந்த அனுமதி தான் பிஸ்மில்லாஹ் என்று கூறுவதாகும். இதன் பொருள் அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன் என்பதாகும்.

இதன் கருத்து என்னவென்றால் இறைவா நீ படைத்த ஒரு உயிரைக் கொன்று ஒழிக்க வேண்டும் என்பதற்காக நான் இதை அறுக்கவில்லை. நான் அந்த அளவுக்குக் கொடூரமானவனல்லன். இந்த உயிரைப் படைத்த நீயே இதை எனக்கு அனுமதித்ததால்தான் இதை அறுக்கிறேன். இல்லாவிட்டால் நான் உயிரைக் கொல்பவன் அல்லன் என்பது இதன் கருத்தாகும்.

இந்த உறுதிமொழி தான் அறுப்பதற்கான அனுமதியாகும். அல்லாஹ்வின் பெயரால் தான் இதை அறுக்கிறேன் எனக் கூறாவிட்டால் உயிரினங்களின் உண்மை எஜமானனிடம் அனுமதி பெறாத காரணத்தால் அதை அறுப்பதும், உண்பதும் குற்றமாகி விடும்.

ஒருவனுக்குச் சொந்தமான ஆட்டை நாம் திருடிச் சாப்பிட்டால் அது குற்றம் என்பதை நாம் அறிவோம். அந்த மனிதன் அந்த இறைச்சிக்குத் தான் உரிமையாளன். உயிருக்கு உரிமையாளனாகிய அல்லாஹ்விடமும் அனுமதி பெற வேண்டியது இதனால் அவசியமாகிறது.

 பொதுவாக கத்தியை எடுத்து இரத்தத்தைப் பார்த்துப் பழகியவன் யாரையும் மிரட்டி உருட்டி காரியம் சாதிப்பவனாக ரவுடியாக தலைஎடுத்து விடுகிறான். அன்றாடம் ஆடுகளை அறுக்கும் ஒரு முஸ்லிம் இப்படி கத்தியைக் காட்டி மிரட்டும் ரவுடியாக அலைவதில்லை.

இதற்குக் காரணம் பிஸ்மில்லாஹ் தான்.

அல்லாஹ்வின் அனுமதி இருப்பதால்தான் நான் ஆட்டை அறுக்கிறேன் என்று தினமும் சொல்லியும், நினைத்தும் வருவதால் மனிதனை அறுக்க அல்லாஹ் அனுமதிக்கவில்லை என்ற கருத்து அவன் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து விடுகிறது.

இது போன்ற காரணங்களால் தான் பிஸ்மில்லாஹ் சொல்லி அறுக்க வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது. இது நாம் சிந்திக்கும் போது தெரிய வரும் காரணங்களாகும். இது அல்லாத இன்னும் பல காரணங்களும் இருக்கலாம்.

இவ்வாறு நாம் முன்னரே விளக்கியுள்ளோம்.

அறுத்து உண்பதையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் இந்த அறிவுஜீவிகள் உண்மையாளர்களாக இருந்தால் இவர்கள் தமது கோரிக்கையை இன்னும் விரிவுபடுத்திட வேண்டும். அறுத்து உண்பதை மட்டும் தடுக்குமாறு கோரக்கூடாது.

எலியைக் கொல்லக்கூடாது, கொசுவைக் கொல்லக் கூடாது; பாம்பு தேள் உள்ளிட்ட எதையும் கொல்லக் கூடாது. உயிரினங்களில் இருந்து தயாரிக்கப்படும் உயிர்காக்கும் மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது. மீனவர்கள் மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலுக்குச் செல்ல வேண்டும்.

தோல்தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும். தோலால் தயாரிக்கப்படும் ஷூக்கள், கைப்பைகள், பெட்டிகள், அலங்காரப்பொருட்கள் அனைத்தும் தடுக்கப்பட வேண்டும்.

கோழிப்பண்ணைகளை ஒழிக்க வேண்டும். தேனி வளர்ப்பு பட்டு வளர்ப்பு ஆகிய அனைத்தையும் தடுக்க வேண்டும். பட்டாடை, தேன் ஆகியன தடை செய்யப்பட வேண்டும்.

இப்படி அனைவரின் வயிற்றிலும் அடிக்கும் வகையில் தெளிவாக தங்கள் கோரிக்கையை சொல்ல இவர்கள் தயாரா?

ஜல்லிக்கட்டு என்பது மனிதனுக்கு எந்தப் பயனும் இல்லாத ஒரு காரியத்துக்காக மாடுகளை வதை செய்யும் செயல் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது.

நூறு பேர் சேர்ந்து கொண்டு ஒரு மாட்டை அடக்குவதில் வீரத்தின் எந்த அம்சமும் இல்லை. ஒண்டிக்கு ஒண்டி என்று காளையை அடக்கினால் கூட அதிலும் கூட வீரமில்லை. முட்டுவதைத் தவிர வேறு எதுவும் அறிந்திராத ஜீவனிடம் இவர்கள் வீரத்தைக் காட்டுகிறார்கள்.

ஒரு காட்டுப்புலியைப் பிடித்து வந்து ஒண்டிக்கு ஒண்டியாக இந்த வீரர்களை மோதச் சொன்னால் யார் முன்வருவார்? ஒருவரும் வரமாட்டார்கள். ஏனெனில் புலிக்கு அதன் பற்களும் கூரிய நகங்களும் பேசும். இவனை விட வலிமையாக கொடுக்கும் ஒரு அரையில் இந்த வீரன் சுருண்டு விடுவான்.

இங்கே தான் வீரத்தைக் காட்ட வேண்டும். எனவே ஜல்லிக்கட்டைத் தடை செய்தது காளைகளுக்கு மட்டுமின்றி மனிதக் காளைகளுக்கும் நன்மை செய்யக் கூடியது என்பது தான் நமது கருத்து.

12.05.2014. 6:07 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account