முஸாஃபஹா, முஆனகா சட்டம் என்ன?
ஜே. அப்துல் அலீம், அய்யம்பேட்டை.
இரண்டு பேர் சந்தித்துக் கொள்ளும் போது, ஒருவருடைய கையை மற்றவர் பிடித்து பரஸ்பரம் நட்பைப் பரிமாறிக் கொள்வதற்கு முஸாஃபஹா என்று பெயர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் முஸாஃபஹா (கை குலுக்குதல்) வழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது.
صحيح البخاري
6263 – حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ: قُلْتُ لِأَنَسٍ: أَكَانَتِ المُصَافَحَةُ فِي أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «نَعَمْ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் முஸாஃபஹா செய்யும் வழக்கம் இருந்ததா? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ஆம் என்றனர்.
அறிவிப்பவர் : கதாதா
நூல் : புகாரி 6263
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களும் மற்றும் இருவரும் தபூக் போரில் பங்கெடுக்காத காரணத்தால் சமூகப் புறக்கணிப்பு செய்யப்பட்டு இருந்தார்கள். சில நாட்கள் நீடித்த இந்தப் புறக்கணிப்பு அல்லாஹ் அம்மூவரையும் மன்னித்து விட்டதாக அல்லாஹ் 9:118 வசனத்தை அருளியதன் மூலம் முடிவுக்கு வந்தது.
அதை மக்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அது பற்றி பின்வரும் ஹதீஸில் கூறபப்ட்டுள்ளது.
صحيح البخاري
قَالَ كَعْبٌ: حَتَّى دَخَلْتُ المَسْجِدَ، فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ حَوْلَهُ النَّاسُ، فَقَامَ إِلَيَّ طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ يُهَرْوِلُ حَتَّى صَافَحَنِي وَهَنَّانِي، وَاللَّهِ مَا قَامَ إِلَيَّ رَجُلٌ مِنَ المُهَاجِرِينَ غَيْرَهُ،
கஅப் கூறுகிறார். இந்த செய்தியைக் கேட்டவுடன் நான் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் சூழ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமர்ந்து இருந்தார்கள். என்னைக் கண்டதும் தல்ஹா (ரலி) அவர்கள் என்னை நோக்கி வந்து எனக்கு வாழ்த்துக் கூறி முஸாஃபஹா செய்தார் .
நூல் : புகாரி
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னிலையில் ஒரு நபித்தோழர் மற்றொரு நபித்தோழருக்கு முஸாஃபஹா செய்துள்ளதால் இந்த வழக்கம் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இருந்துள்ளது என்பதை அறியலாம்.
முஸாஃபஹா செய்தால் பாவமன்னிப்பு கிடைக்கும் என்பது போல் சிறப்பித்து பல ஹதீஸ்கள் உள்ளன. நாம் தேடிய வரை அவற்றில் விமர்சனங்கள் உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நல்ல வழக்கம் முஸாஃபஹா என்பதில் சந்தேகம் இல்லை.
முஸாஃபஹா செய்யும் போது கைகளைப் பிடித்துக் கொண்டு ஸலவாத் ஒதுவதோ, வேறு எதையும் ஓதுவதோ பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பித்அத் ஆகும். மேலும் இரு கைகளையும் நேருக்கு நேராக வைத்து முஸாஃபஹா செய்யாமல் X வடிவில் கைகளை வைத்துக் கொண்டு முஸாஃபஹா செய்வதும் மடமையாகும்
முஆனகா என்றால் கட்டித் தழுவுதல் என்று பொருள். இரண்டு முஸ்லிம்கள் சந்திக்கும் போதோ அல்லது பரஸ்பரம் வாழ்த்து தெரிவிக்கும் போதோ, கட்டித் தழுவி முகத்தை இடது புறத்திலும் வலது புறத்திலும் மாறி மாறி வைத்துக் கொள்ளும் வழக்கம் முஸ்லிம்களிடம் பரவலாக உள்ளது. இதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் ஏதும் இல்லை.
முஆனகா தொடர்பாக இடம் பெறும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாகவே உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பேரனை முஆனகா (கட்டித்தழுவி) உள்ளதாக பின்வரும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
صحيح البخاري
2122 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ الدَّوْسِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي طَائِفَةِ النَّهَارِ، لاَ يُكَلِّمُنِي وَلاَ أُكَلِّمُهُ، حَتَّى أَتَى سُوقَ بَنِي قَيْنُقَاعَ، فَجَلَسَ بِفِنَاءِ بَيْتِ فَاطِمَةَ، فَقَالَ «أَثَمَّ لُكَعُ، أَثَمَّ لُكَعُ» فَحَبَسَتْهُ شَيْئًا، فَظَنَنْتُ أَنَّهَا تُلْبِسُهُ سِخَابًا، أَوْ تُغَسِّلُهُ، فَجَاءَ يَشْتَدُّ حَتَّى عَانَقَهُ، وَقَبَّلَهُ وَقَالَ: «اللَّهُمَّ أَحْبِبْهُ وَأَحِبَّ مَنْ يُحِبُّهُ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பகல் நேரத்தில் புறப்பட்டார்கள். அவர்கள் என்னுடன் பேசவில்லை. நானும் அவர்களுடன் பேசவில்லை. பனூ கைனுகா எனும் கடைவீதிக்கு அவர்கள் வந்ததும் ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தார்கள். இங்கே அந்தப் பொடிப் பையன் இருக்கின்றானா? இங்கே அந்தப் பொடிப் பையன் இருக்கின்றானா? என்று கேட்டார்கள். ஃபாத்திமா (ரலி), அவர்கள் தம் மகனைச் சற்று நேரம் தாமதப்படுத்தினார். அவர் தம் மகனுக்கு நறுமண மாலை அணிவித்துக் கொண்டிருக்கின்றார் என்றோ அல்லது மகனைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார் என்றோ நான் நினைத்தேன். அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்களின் மகன் (ஹஸன்) ஓடி வந்தார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைக் கட்டியணைத்து முத்தமிட்டார்கள். இறைவா! இவனை நீ நேசி! இவனை நேசிப்பவர்களையும் நீ நேசி! என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 2122
இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஹஸன் (ரலி)யைக் கட்டியணைத்திருப்பதால் இதை ஆதாரமாக வைத்து முஆனகா செய்யலாம் என்று சிலர் வாதிடுகின்றார்கள்.
பொதுவாக பிள்ளைகளை அணைத்து முத்தமிடுவது இயல்பான ஒன்று தான். இதைத் தான் நபியவர்களும் செய்துள்ளார்கள். இதை ஆதாரமாக வைத்து இரண்டு முஸ்லிம்கள் சந்திக்கும் போது முஆனகா செய்யலாம் என்று வாதிட முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உற்ற தோழர்களான அபூபக்ர் (ரலி) உமர் (ரலி) உள்ளிட்ட எந்த நபித்தோழரையும் முஆனகா செய்ததில்லை.
பெரியார்களாக மதிக்கப்படுவோரை முஆனகா செய்தால் பவர் அதிகரிக்கும் என்று சிலர் நம்புவது அறிவீனமாகும். அப்படி இருந்தால் அந்தப் பாக்கியத்தை நபிகள் நாயகத்தைக் கட்டியணைத்து நபித்தோழர்கள் அடைந்திருப்பார்கள்.
முஸாஃபஹா, முஆனகா சட்டம் என்ன?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode