Sidebar

27
Sat, Jul
5 New Articles

அடிக்கடி காற்றும், சிறுநீரும் வெளியேறினால் உளூ நீங்குமா

உளூ, குளிப்பு, தூய்மை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

அடிக்கடி காற்றும், சிறுநீரும் வெளியேறினால் உளூ நீங்குமா

ஒருவர் உளூ செய்த பின் காற்று வெளியேறினால் உளூ நீங்கி விடும். அது போல் மலஜலம் கழித்தாலும் உளூ நீங்கி விடும். மீண்டும் உளூ செய்து விட்டுத்தான் தொழ வேண்டும்.

ஆனால் நோயின் காரணமாக ஒருவரது கட்டுப்பாட்டை மீறி காற்று வெளியேறிக் கொண்டே இருந்தால் அல்லது சிறு நீர் கசிந்து கொண்டே இருந்தால் இவர் என்ன செய்வது?

இது பற்றி நேரடியாக எந்த ஆதாரமும் ஹதீஸ்களில் கிடைக்கவில்லை. ஆயினும் இது குறித்து நாம் எந்த முடிவை எடுப்பது என்பதை மறைமுகமாகச் சொல்லும் ஆதாரம் உள்ளது.

صحيح البخاري

306 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ: قَالَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : يَا رَسُولَ اللَّهِ، إِنِّي لَا أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلاَةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا ذَلِكِ عِرْقٌ وَلَيْسَ بِالحَيْضَةِ، فَإِذَا أَقْبَلَتِ الحَيْضَةُ فَاتْرُكِي الصَّلاَةَ، فَإِذَا ذَهَبَ قَدْرُهَا، فَاغْسِلِي عَنْكِ الدَّمَ وَصَلِّي»

306 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் என்ற பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), அல்லாஹ்வின் தூதரே! நான் சுத்தமாவதில்லை. நான் தொழுகையை விட்டுவிடலாமா? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இல்லை; தொழுகையை விட்டுவிடாதே! ஏனெனில்,) இது இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும்; மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும் போது தொழுகையை விட்டு விடு! (உனக்குரிய) மாதவிடாய்க் காலம் கழிந்ததும் இரத்தத்தைச் சுத்தம் செய்து (குளித்து)விட்டுத் தொழுதுகொள்! என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி 306

صحيح البخاري

310 - حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «اعْتَكَفَتْ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ امْرَأَةٌ مِنْ أَزْوَاجِهِ، فَكَانَتْ تَرَى الدَّمَ وَالصُّفْرَةَ وَالطَّسْتُ تَحْتَهَا وَهِيَ تُصَلِّي»

310 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அன்னாரின் துணைவியரில் ஒருவர் இஃதிகாஃப் இருந்தார். அப்போது அவர் குசும்பப்பூவின் நீரின் நிறத்தில் உதிரப்போக்கைக் காண்பவராக இருந்தார். அவர் தொழும் போது அவருக்குக் கீழே கையலம்பும் பாத்திரம் இருக்கும்.

நூல் : புகாரி 310

மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு தொழுகை கடமை இல்லை என்பதை அறிவோம். சில பெண்களுக்கு மாதவிடாய் அல்லாத உதிரப்போக்கு நோய் ஏற்பட்டு எல்லா நேரமும் இரத்தம் கசிந்து கொண்டே இருக்கும். இப்படி இரத்தம் கசிந்து கொண்டே இருந்தாலும் தொழுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர். பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கவும் அனுமதியளித்துள்ளார்கள்.

இதுபோல் தான் தொடர் சிறுநீர்ப் போக்கு, தொடர் காற்றுப் போக்கு ஆகியவையும் ஒரு வகை நோயாகும், மேலும் மனிதனால் கட்டுப்படுத்த முடியாமல் மீறி வரக்கூடியதாகும்.

இவ்வாறு உள்ளவர்கள் ஒரு தடவை உளூ செய்தால் காற்றும் சிறுநீரும் வெளியேறினாலும் ஒரு தொழுகை மட்டும் தொழலாம். அடுத்த தொழுகைக்கு உளூச் செய்ய வேண்டும்.

صحيح البخاري مشكول (1/ 55)

228 - حَدَّثَنَا مُحَمَّدٌ هُوَ ابْنُ سَلاَمٍ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: جَاءَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلاَةَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ، إِنَّمَا ذَلِكِ عِرْقٌ، وَلَيْسَ بِحَيْضٍ، فَإِذَا أَقْبَلَتْ حَيْضَتُكِ فَدَعِي الصَّلاَةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ ثُمَّ صَلِّي» - قَالَ: وَقَالَ أَبِي: - «ثُمَّ تَوَضَّئِي لِكُلِّ صَلاَةٍ، حَتَّى يَجِيءَ ذَلِكَ الوَقْتُ»

228 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் என்ற பெண்மணி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் உயர் இரத்தப்போக்கு ஏற்படும் ஒரு பெண் ஆவேன்; (தொடர்ந்து உதிரம் கசிவதால்) நான் சுத்தமாவதில்லை. நான் தொழுகையை விட்டுவிடலாமா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இல்லை! இது இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும். மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும் போது தொழுகையை விட்டுவிடு; அது நின்றுவிட்டால் இரத்தத்தைக் கழுவி(குளித்து)விட்டுத் தொழுதுகொள்! என்று கூறினார்கள். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அப்பெண்மணியிடம்) பின்னர் அடுத்த மாதவிடாய் காலம் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ உளூ செய்துகொள்! என்றும் சொன்னார்கள்.

நூல் : புகாரி 228

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account