Sidebar

20
Sat, Apr
4 New Articles

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பின் சட்டங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

صحيح البخاري

1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا سَعِيدٍ، وَقَدْ غَزَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثِنْتَيْ عَشْرَةَ غَزْوَةً، قَالَ: أَرْبَعٌ سَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ قَالَ: – يُحَدِّثُهُنَّ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ -، فَأَعْجَبْنَنِي وَآنَقْنَنِي: " أَنْ لاَ تُسَافِرَ امْرَأَةٌ مَسِيرَةَ يَوْمَيْنِ لَيْسَ مَعَهَا زَوْجُهَا، أَوْ ذُو مَحْرَمٍ، وَلاَ صَوْمَ يَوْمَيْنِ الفِطْرِ وَالأَضْحَى، وَلاَ صَلاَةَ بَعْدَ صَلاَتَيْنِ بَعْدَ العَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ، وَبَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَلاَ تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ: مَسْجِدِ الحَرَامِ، وَمَسْجِدِي، وَمَسْجِدِ الأَقْصَى

நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1864

ஓர் ஊரில் அல்லது அந்த ஊரைச் சார்ந்துள்ள பகுதியில் பிறை பார்க்கப்பட்டு பெருநாளை முடிவு செய்கின்றார்கள். இந்த ஊரில் நோன்பு நோற்பது மேற்கண்ட ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும்.

உலகமெங்கும் ஒரே பிறை என்று வாதிடுபவர்கள் இந்த ஹதீஸை எடுத்துக் கொண்டு உலகில் ஏதோ ஒரு பகுதியில் பெருநாளாக இருந்தால் உலகம் முழுவதும் நோன்பு வைப்பது ஹராம் என்று கூறுகின்றார்கள்.

உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாள் என்று கூறுவது மார்க்க அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியாத அபத்தமான வாதம் என்பதை சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்துள்ளோம்.

எனவே பெருநாளில் நோன்பு நோற்பது ஹராம் என்றால் தத்தமது பகுதியில் பிறை பார்த்து பெருநாள் என்று அறிவிக்கப்பட்டால் அப்பகுதியில் உள்ளவர்கள் அன்று நோன்பு வைக்கக் கூடாது என்பதே பொருள். பிறை பார்க்கப்படாத பகுதிகளுக்கு இன்னும் பெருநாள் வராததால் அவர்கள் நோன்பு பிடிப்பதை விட்டு விடக் கூடாது.

பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பது ஹராம் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரிந்திருப்பதால் இதைத் தங்களுக்குச் சாதகமாக்கி மக்களை அச்சுறுத்துகிறார்கள்.

சவூதியில் பெருநாள் என்று அறிவித்த பின் நாம் எப்படி நோன்பு வைக்கலாம்? என்ற அச்சத்தில் சிலர் நோன்பை விட்டு விடுகிறார்கள். பெருநாளில் நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டது போல் ரமளானுக்கு ஒருநாள் முன் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் நோன்பு நோற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

நமது பகுதியில் நாளை தான் நோன்பு ஆரம்பமாகவுள்ளது என்ற நிலையில் சவூதியின் அறிவிப்பைக் கேட்டு முதல் நாள் நோன்பு வைத்தால் அந்தத் தடையை மீறும் நிலை ஏற்படுகிறது.

பெருநாளில் நோன்பு நோற்பது பற்றி நமக்கு அச்சம் ஏற்படுவது போல் ரமளானுக்கு முந்தைய இரண்டு நாட்களில் நோன்பு நோற்பது பற்றியும் அஞ்ச வேண்டும்.

صحيح البخاري

1914 – حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لاَ يَتَقَدَّمَنَّ أَحَدُكُمْ رَمَضَانَ بِصَوْمِ يَوْمٍ أَوْ يَوْمَيْنِ، إِلَّا أَنْ يَكُونَ رَجُلٌ كَانَ يَصُومُ صَوْمَهُ، فَلْيَصُمْ ذَلِكَ اليَوْمَ»

உங்களில் ஒருவர் ரமளான் மாதத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னால் நோன்பு பிடிக்க வேண்டாம். அவர் வழக்கமாகப் பிடிக்கும் நோன்பு அந்நாளில் அமைந்து விட்டால் தவிர'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1914

பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பது தடுக்கப்பட்டது போல் ரமலானுக்கு ஒரு நாள் முன்பாகவும், இரண்டு நாட்களுக்கு முன்பாகவும் அதாவது ஷஃபான் 29, 30 ஆகிய நாட்களில் நோன்பு நோற்கத் தடை உள்ளது. எனவே யாரோ அறிவித்து விட்டார்கள் என்பதற்காக ரமலான் அல்லாத நாளை ரமளான் என்று எண்ணி நோன்பு நோற்றால் அது மேற்கண்ட தடையை மீறியதாக ஆகி விடும்.

 

சந்தேகத்துக்கு உரிய நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது எனத் தடை செய்யும் ஹதீஸ் உண்டு. அதில் பிரச்சனைகள் உள்ளன.

 سنن الترمذي

686 – حَدَّثَنَا أَبُو سَعِيدٍ عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الأَشَجُّ قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، قَالَ: كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ فَأُتِيَ بِشَاةٍ مَصْلِيَّةٍ، فَقَالَ: كُلُوا، فَتَنَحَّى بَعْضُ القَوْمِ، فَقَالَ: إِنِّي صَائِمٌ، فَقَالَ عَمَّارٌ: «مَنْ صَامَ اليَوْمَ الَّذِي يَشُكُّ فِيهِ النَّاسُ فَقَدْ عَصَى أَبَا القَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»

சந்தேகத்திற்குரிய நாளில் யார் நோன்பு நோற்கிறாரோ அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார்.

அறிவிப்பவர்: அம்மார் (ரலி)

நூல்கள்: திர்மிதி, நஸாயீ, அபூதாவூத், இப்னுமாஜா, தாரிமி

இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் தொடர் அடிப்படையில் பலவீனமானதாகும்.

அனைத்து நூல்களிலும் உள்ள அறிவிப்பாளர் தொடரில் அபூ இஸ்ஹாக் என்பாரிடமிருந்து அம்ரு  பின் கைஸ் என்பார் அறிவிப்பதாக இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்விருவரும் நம்பகமானவர்கள் என்றாலும் அபூ இஸ்ஹாக் முதுமையில் மனக்குழப்பத்துக்கு உள்ளானார். மனக்குழப்பம் ஏற்பட்டவர்கள் வழியாக அறிவிக்கும் ஹதீஸ்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும். அவர் மனக்குழப்பம் அடைவதற்கு முன் அறிவித்தவை மட்டும் ஏற்கப்படும். மனக்குழப்பம் ஏற்பட்ட பின்னர் அறிவித்தவை பலவீனமாகிவிடும்

அம்ருபின் கைஸ் என்பார் அபூ இஸ்ஹாக் முதுமை அடைந்த பின்னர் தான் சந்தித்துள்ளார்.

إسناده ضعيف عمرو بن قيس متأخر السماع من أبي إسحاق السبيعي

இதன் காரணமாக இந்தக் கருத்தில் உள்ள எல்லா ஹதீஸ்கலும் பலவீனமாகி விடுகின்றன.

மேலும் கருத்து மிகவும் தவறாக அமைந்துள்ளது.

ஒவ்வொரு மாதத்திலும் 29 நாட்கள் வரை உறுதியான நாட்கள் ஆகும். ஒவ்வொரு மாதமும் 30 வது நாள் சந்தேகத்துக்கு உரியதாகும். அது முப்பதாம் நாளா அடுத்த மாதத்தின் முதல் நாளா என்று சந்தேகத்தில் உள்ளதால் முப்பதாம் நாட்கள் சந்தேகமான நாட்கள் எனப்படுகிறது.

ஆனால் 30ஆம் நாளை நாம் அடையும் முன்னர் 30 ஆம் நாளைப் பற்றி பேசும் போது சந்தேகத்திற்குரிய நாள் என்று அதைக் குறிப்பிட முடியும்.

முப்பதாம் இரவை அடைந்து விட்டால் சில நிமிடங்களில் சந்தேகத்துக்கு உரிய நாள் என்ற நிலை நீங்கி விடும்.

முப்பதாம் இரவில் நாம் பிறை கண்டு விட்டால் அடுத்த மாதம் என்ற உறுதி ஏற்பட்டு விடும். பிறை காணாவிட்டாலும் முப்பதாகவே நீடிக்கிறது என்ற உறுதியான நிலை ஏற்பட்டு விடும்.

முப்பதாம் இரவுக்கு முன்னர் தான் அந்த நாள் சந்தேகத்துக்கு உரிய நாள் என்ற நிலையில் இருக்கும். முப்பதாம் இரவு வந்து விட்டால் அந்த நாள் எந்த மாதத்துக்கு உரியது என்று உறுதியாகி விடும்.

இந்த உறுதி ஏற்பட்ட பின்னர் அது எப்படி சந்தேகத்துக்கு உரிய நாளாக இருக்க முடியும்?

எனவே இந்த ஹதீஸின் கருத்தில் பிழை உள்ளது.

இந்த ஹதீஸை சந்தர்ப்பவாதமாக ஆதாரம் காட்டுபவர்கள் இதன் படி நடப்பதில்லை.

சந்தேகத்துக்கு உரிய நாளாக அந்த நீடிக்கிறது என்று சொல்வோர் ஒவ்வொரு மாதமும் முப்பதாம் நாளில் நோன்பு நோற்கக் கூடாது என்று கூற வேண்டும்.

நோன்பும் இல்லை பெருநாளும் இல்லை என்ற நிலையில் ஒரு நாள் உள்ளதாக நம்ப வேண்டும்.

மேலும் ரமலான் மாதம் முதல் நோன்பும் அவர்கள் வைக்கக் கூடாது. ஏனெனில் அந்த நாள் ஷஃபான் மாதத்தின் முப்பதாம் நாளாக சந்தேகத்துக்கு உரிய நாளாக உள்ளது.

இந்த நாள் ஷஃபானும் அல்ல, ரமலானும் அல்ல என்று ஒருவரும் சொல்ல மாட்டார்கள். அது போல் இந்த நாள் ரமலானும் அல்ல ஷவ்வாலும் அல்ல என்றும் சொல்ல மாட்டார்கள்.

எனவே சந்தேகத்துக்கு உரிய நாளை நாம் அடைந்த பின்னர் சந்தேகத்துக்கு உரிய நாள் உறுதியான நாள் என்ற நிலை ஏற்பட்டு விடுகிறது

பிறை பார்த்து நாளை உறுதி செய்யலாம் எனக் கூறும் அத்தனை ஹதீஸ்களுக்கும் இது முரணாக உள்ளதாலும் பொருளற்றதாக் உள்ளதாலும் இது இட்டுக்கட்டப்பட்ட தரத்தில் வைக்க வேண்டிய ஹதீஸாகி விடுகிறது.

இறுதியாக இது நபியின் கூற்றாகச் சொல்லப்படவில்லை. அம்மார் என்ற நபித்தோழரின் கூற்றாகவே உள்ளது. சந்தேக நாளில் நோன்பு வைப்பவர் நபிக்கு மாறு செய்து விட்டார் என்று அம்மார் சுயமாகக் கூறுகிறார், நபியின் எந்தக் கட்டளைக்கு முரண் என அவர் கூறவில்லை. இதற்கு மாற்றமாக நபியின் கட்டளை இருக்கும் போது அவர் கூறியது நபியின் கட்டளைக்கு ஏற்ப அமையவில்லை.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account