Sidebar

18
Sat, May
26 New Articles

மேலப்பாளையத்தில் பீஜே ஏன் வெட்டப்பட்டார்?

தமிழக தவ்ஹீத் வரலாறு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

இரத்தத் துளிகளில் வளர்ந்த ஏகத்துவக் கொள்கை

எம். ஷம்சுல்லுஹா

மதுரை ஷரீஅத் மாநாடு

நம்மைத் திட்டித் தீர்ப்பதற்காகக் கூட்டிய மாநாடுகளில் நம்மால் மறக்க முடியாத மாநாடு மதுரையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஷரீஅத் மாநாடு.

1991ம் ஆண்டு, ஜூலை மாதம் 6, 7 ஆகிய திகதிகளில் இம்மாநாடு நடைபெற்றது.

அம்மாநாட்டின் தலைமைப் பேச்சாளர் கலீல் அஹ்மத் கீரானூரி, தலைப்பு, தராவிஹ் 20 ரக்அத்கள்.

அப்போது அவர் பேசிய வெறிப் பேச்சை இப்போது கொஞ்சம் ஒலிபரப்புகிறோம்.

மூலையிலே வண்ணார் பள்ளியிலே (இன்றைய மஸ்ஜிதுல் முபாரக்) ஒளிந்து இருந்து கொண்டு நீ எங்களைப் பார்த்துப் பேசுகிறாயா? ஷரீஅத் மாநாடு எதற்காக? மதுவை ஒழிக்கவா? விபச்சாரத்தைத் தடுக்கவா? வரதட்சணையைக் கண்டிக்கவா? சாராயக் கடைகளை மூடுவதற்காகவா? என்றெல்லாம் கேட்டிருக்கிறாயா! இதைக் கேட்பதற்கு உனக்கு என்ன அருகதை இருக்கின்றது. நீ முதலில் இதையெல்லாம் செய்! அப்புறம் எங்களைப் பார்த்துக் கேள் நீ!

கப்ரு அனாச்சாரத்தை நாங்கள் போய் தடுக்க வேண்டுமாம்! இவர் (பி.ஜே.) ஒரு சந்திலே ஒதுங்கியிருந்து வெளியே வராமல் பத்திரிக்கை நடத்திக் கொண்டிருப்பாராம்.. ஏன்? நீ போய் தடுக்க வேண்டியது தானே! எப்போதாவது தடுத்திருக்கின்றாயா? தடுக்க முயன்று இருக்கின்றாயா? அப்போது நீ வெட்டப்பட்டாயா? யாரிடம் வந்து கதை சொல்கின்றாயா?

இது கீரனூரியார் மதுரை தமுக்கம் மைதானத்தில் நின்று கொண்டு பி.ஜே.வை நோக்கிப் பேசிய பேச்சாகும். பேசுகின்ற நாள் 07.07.1991 பேசுகின்ற நேரம் இரவு சுமார் 10 மணி.

தமுக்கம் மைதானத்தில் கீரானூரியார் இவ்வாறு கொதித்தெழுந்து, கொந்தளித்து, நெருப்பு வார்த்தைகளைக் கக்கிக் கொண்டிருந்த அதே வேளையில்...

மேலப்பாளையத்தில் மோத்தை மீறாப்பிள்ளை தெருவில் சிப்கத்துல்லாஹ் என்பவரது வீட்டு வாசலில், கர்பலா என்ற தலைப்பில் பரேலவிஸத்தை எதிர்த்து பி.ஜே. உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.

முதலில் தெருவில் தான் மேடை அமைக்கப்பட்டது. மழைக்காலம்! அதனால் தூறல் விழுந்து கொண்டிருந்தது. ஒலிபெருக்கி உரிமையாளர் வந்து மைக் மழையில் நனையும், அதனால் வீட்டு வாசலில் மைக்கை வைப்போம் என்று சொல்லவே நடுத் தெருவில் நின்ற மைக் வீட்டு வாசலுக்கு வருகின்றது.

அதனால் வீதியில் நின்ற பி.ஜே. வீட்டு வாசலுக்கு வருகின்றார். வீடு கிழக்குத் திசையில் மேற்கு நோக்கி அமைந்திருந்தது. அதனால் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நின்று பேசிக் கொண்டிருந்தார். மழை தூறிக் கொண்டிருந்ததால் வீட்டு வாசலுக்கு முன்னால் யாரும் அமரவில்லை.

எதிர் வீடுகளில் உள்ள திண்ணைகளில் தான் ஆட்கள் உட்கார்ந்து பேச்சை கேட்டுக் கொண்டிருந்தனர். எதிர் வீட்டுத் திண்ணையில் உள்ளவர்கள் மட்டும் பி.ஜேவைப் பார்க்க முடிந்தது. தெற்கு வடக்குப் பக்கம் உள்ளவர்களால் அவரைப் பார்க்க முடியவில்லை.

அவர் பேசிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு ஆள் சென்று வரும் இடைவெளி இருந்தது. அப்போது நான் வாசலுக்கு முன்னால் உள்ள ஒரு சிறிய திண்டில் வடக்கு நோக்கி அமர்ந்திருந்தேன்.

எதிர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தவர்கள், கடுமையான குளிர் என்பதால் அரைத் தூக்கத்தில் அமர்ந்திருந்தனர். இந்நேரத்தில் வடக்கில் உள்ள ஒரு சந்திலிருந்து ஒருவர், ஒரு கையில்லாதவர் தோளில் துண்டு போட்டுக் கொண்டு வருவது போல் வந்தார்.

வித்தியாசமான அவரை சற்று வியப்புடன் நான் உற்று நோக்கிப் கொண்டிருக்கும் வேளையில் ஒரு நொடிப் பொழுதில் வீட்டு வாசலுக்கு வந்து, ஒரு வீச்சரிவாளை எடுத்து பி.ஜே.யின் கையில் வீசுகின்றார்.

அதே வேளையில் எனக்கு அருகில் நின்ற இன்னொருவர் மற்றொரு அரிவாளைத் திருப்பிப் பிடித்து என் இடது கையை தாக்குகின்றார். இவ்வாறு அவர் என்னை தாக்குவதற்குக் காரணம், பி.ஜே.வை வெட்ட வந்த முதலாமவரை நான் தடுத்து விடக் கூடாது என்பதற்காகத் தான். அரிவாளின் மறுபக்கத்தால் என் கையை தாக்கியதால் என் கை வீக்கத்தில் அப்படியே உப்பி விடுகின்றது.

மேலப்பாளையத்தில் பீஜே வெட்டப்படும் போது லுஹாவும் வெட்டப்பட்டதாக இந்தக் கட்டுரையில் லுஹா குறிப்பிட்டுள்ளார். இது உண்மையில்லை என்று ஆரம்பண்ணை இப்ராஹீம் கூறுகிறார். இவர் தான் பீஜே வெட்டப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது பீஜேக்கு துணையாக இருந்தவர்.

சகோதரர் பீஜே மேலப்பாளையத்தில் தாக்கப்பட்டு வெட்டப்பட்ட சம்பவத்தின் உண்மை நிலை என்ன? என்று அறிந்துகொள்ளும் நோக்கத்தோடு, அந்தச் சம்பவம் நடந்த நேரத்தில் உடன் இருந்து பீஜே வுக்கு அனைத்து உதவிகளையும் செய்த சகோதரர் ஆறாம்பண்ணை இப்ராஹிம் அவர்களை தொடர்பு கொண்டு கருத்து கேட்டோம். லுஹா வெட்டப்பட்டதாகக் கூறுவது பச்சைப் பொய் என்று அவர் உறுதிபடக் கூறுகிறார்.

அவர் சொன்ன செய்திகளை இங்கே சுருக்கமாக பதிவு செய்கிறோம்.

பீஜே கர்பலாவைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார். சிறிய மழை தூறல் இருந்ததால் மேடையிலும் மழை நீர் சொட்டத் தொடங்கியது. மைக் போன்ற உபகரணங்கள் பாதித்து விட கூடாது என்பதற்காக பக்கத்து வீட்டுத் திண்ணையில் சகோதரர் பிஜே மாற்றப்பட்டார் அது சிறிய இடம். அங்கே ஒரு ஆள் மட்டும் தான் நிற்க முடியும்.

பிஜே பேசிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது ஒரு மர்ம நபர் மேலே டவல் மட்டும் போர்த்தியவராக வந்தார். சகோதரர் பிஜே அருகில் வந்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டத் தொடங்கினார். பிஜே மைக்கை எடுத்து தடுத்தார். இருந்தாலும் இரண்டு வெட்டுக்கள் விழுந்துவிட்டன. சரியான காயம். .இரத்த வெள்ளத்தில் இருந்த பிஜே வை உடனே நான் மற்றும் சில சகோதரர்களின் உதவியுடன் குறிப்பாக சகோதரர் ஃபஸூலுல் இலாஹி ஆகியோரின் உதவியுடன் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தோம்.

வெட்டுக்காயம் பட்டது சகோதரர் பிஜேவுக்கு மட்டும் தானே தவிர ஷம்சுல்லுஹா எங்கே இருந்தார் என்று கூட தெரியவில்லை. பீஜே வை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகும் நேரத்தில் அங்கே நின்று கொண்டிருந்த சம்சுல் லுஹாவை சகோதர இலாஹி நீங்களும் ஏறிக் கொள்ளுங்கள் என்று சொன்ன பிறகு தான் காரில் ஏறினார். ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்த பிறகு லுஹா மற்றும் மற்றவர்களெல்லாம் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை இலாஹி எர்ணாகுளம் வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி இருந்ததால் அவராலும் பிஜே உடன் தங்க முடியவில்லை.

நானும் வேறொரு சகோதரரும் பிஜே க்கு பாதுகாப்பாக உதவிக்காக இரவில் ஆஸ்பத்திரியில் தங்கினோம்.

இன்னும் சொல்லப்போனால் ஆஸ்பத்திரியில் வைத்து பிஜேயைக் கொலை செய்வதற்கான முயற்சியும் எடுக்கப்பட்டது. அதற்கான சில மர்ம நபர்கள் கூட வந்தார்கள் அவருடைய பார்வையும் செயல்பாடுகளும் சந்தேகம் அளிக்கும் விதமாக இருந்தது. யாரையும் உள்ளே அனுமதிக்காமல் பாதுகாப்பாக உயிரைப் பணயம் வைத்து நானும் அந்த சகோதரரும் மட்டும் தான் இருந்தோம் ஷம்சுல்லுஹா தாக்கப்படவில்லை. வெட்டு காயம் இல்லை. எங்கே போனார் என்று தெரியவில்லை , லுஹா தாக்கப்பட்டார் என்று சொல்வது பச்சை பொய் என்று சகோதரர் ஆறாம்பண்ணை இப்ராஹிம் அவர்கள் சொல்லியிருக்கிறார். 

ஆராம்பண்ணை இப்ராஹீம் கூறும் மற்றொரு நபர் அய்யுப் அலி பைஜி ஆவார். இவர் தற்போது ஜாக் இயக்கத்தில் இருக்கிறார். - பீஜே

பி.ஜே.யின் இடது கையில் வெட்டிய பிறகு, அவரது கழுத்தை நோக்கி மீண்டும் அரிவாளை வீசுகின்ற போது, பி.ஜே. தன் வலது கையால் மைக்கின் கம்பியைத் தூக்கி தடுக்கின்றார். மைக் ஸ்டாண்டின் மீது அரிவாள் பட்டவுடன் ஒரு சப்தம் எழுகிறது.

அப்போது தான் அதுவரை என்ன நடக்கின்றது என்பதை அறியாதவர்கள், அரைத் தூக்கத்தில் இருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு வருவதற்குள்ளாக வந்த இருவரும் ஓட்டமெடுக்கிறார்கள். ஒரு சிலர் அவர்களைத் துரத்திக் கொண்டு பின் தொடர்ந்து ஓடுகின்றார்கள். ஆனால், அவர்கள் தப்பி விடுகின்றார்கள்.

அல்லாஹ் ஒருவரைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து விட்டால் அதை யார் தடுக்க முடியும்? தெருவின் மத்தியில் போட்ட மேடையில் பேசவிருந்த பி.ஜே. தூறல் விழுந்த காரணத்தால் வீட்டு வாசலில் வந்து நின்று கொண்டு உரையாறிறனார். அது தான் அவருக்குப் பாதுகாப்பானது. அதாவது வெட்டுக் கையுடன் நின்றது. அரிவாளை கழுத்தை நோக்கி லாவகமாக வீசுவதற்கு வழியில்லாமல் அந்த இடம் குறுகிய இடமாக அமைந்து விட்டது. அதனால் வந்தவர்கள் சாதிக்க முடியாமல் போனது. ஆனால் அவர் தெருவில் நின்று கொண்டு பேசியிருந்தால் வந்தவர்கள் கனகச்சிதமாக தலையைக் கையோடு கொண்டு சென்றிருப்பார்கள். அல்லாஹ்வின் அற்புதக் காவல், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பது போல், கழுத்துக்கு வந்தது கையோடு போனது.

கையில் இரத்தம் பீறிட்டவாறு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பி.ஜே. அனுமதிக்கப்படுகின்றார். மரத்துப் போவதற்காக ஊசிகள் ஒன்றுக்கு இரண்டு போட்டும் காயத்தின் ஆழம் காரணமாக வேதனையில் அவர் விடிய விடியத் தூங்கவில்லை.

இந்தக் கொலை முயற்சி பற்றி காவல்துறையில் நான் புகார் தெரிவித்தேன். முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

புகார் கொடுக்க லுஹா மறுத்து விட்டார் என்று இலாஹி சாட்சி கூறுகிறார் - பீஜே

ஆனால் ஆள் தான் பிடிபடவில்லை. நான் சாட்சி சொல்லி விடக் கூடாது என்பதற்காக எனக்கு ஒரு மொட்டைக் கடிதமும் வந்தது. அதில், உலகத்தில் நீ எந்தப் பகுதியில் இருந்தாலும் உன்னை வெட்டாமல் விட மாட்டேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கிடையே பி.ஜே.யும் சிகிச்சை முடிந்து தன் சொந்த ஊருக்குத் திரும்பினார். ஆனால் குற்றவாளிகள் பிடிபடவில்லை. பரேலவிகளின் செல்வாக்கு! பலமான பின்னணி!

இந்தக் கொலை வெறித் தாக்குதலின் இயக்குனராகச் செயல்பட்டவர் அடுத்த ஆண்டு அதே ஜூலை 7ஆம் திகதி அவரது எதிர்க் கோஷ்டியினரால் கொல்லப்பட்டார்.

இதை இங்கே குறிப்படக் காரணம், பரேலவிஸத்தின் வேகத்தையும், வீரியத்தையும், அதன் விஷத் தன்மையையும் விவரிப்பதற்காகத் தான்.

அந்தப் பரேலவிஸம், அதன் ஆதரவாளர்கள் மேலப்பாளையத்தில் பி.ஜே.யைக் கொன்று தீர்த்து விட வேண்டும் என்று கொடுவாளைத் தூக்கி வீசும் போது தான் கீரனூரியார் தமுக்கம் மைதானத்தில்,

வெட்டப்பட்டாயா? கொல்லப்பட்டாயா?... என்ற வசனங்களைப் பேசிக் கொண்டிருந்தார்.

அவர் கேட்டது போல் கப்ரு அனாச்சாரங்களை எதிர்த்து வெறும் சத்தம் மட்டும் போடாமல் இரத்தமும் சிந்திக் கொண்டிருந்தார்.

இது போன்று இந்த ஏகத்துவத்தல் இணைந்த எத்தனையோ சகோதரர்கள் இரத்தம் சிந்திக் கொண்டும், பொருள் இழப்பைச் சந்தித்துக் கொண்டும் இருக்கின்றனர். இந்தப் பரேலவிஸ எதிர்ப்புப் போராட்டத்தல் சிறைவாசம் அனுபவித்தவர்கள், ஊர் நீக்கம் செய்யப்பட்டவர்கள், காவல்துறையின் சித்ரவதைக்கு ஆளானவர்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

அல்லாஹ்வின் பள்ளிவாசலில் கூட இது வரை, இன்று வரை எத்தனையோ ஊர்களில் ஏகத்துவ சகோதரர்கள் தடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பவர்கள் கலீல் அஹ்மத் கீரனூரி போன்றவர்கள் தான்.

மேலப்பாளயத்தில் பி.ஜே. வெட்டப்பட்ட பிறகு தான் நமது ஜமாஅத்திற்கென்று தனிப் பள்ளிவாசல் மஸ்ஜிதுர்ரஹ்மான் என்ற பெயரில் கண்டோம். இன்று அந்த தவ்ஹீத் ஜமாஅத்தினர் பெருநாள் தொழுகை நடத்தும் போது சாதாரணமாக 10,000 பேர் கலந்து கொள்கின்றார்கள். 2,000 பெண்கள் கலந்து கொள்கின்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்! திருநெல்வேலி மாவட்டத்திலேயே அதிகமான ஆண்களும் பெண்களும் பங்கெடுக்கும் பெருநாள் தொழுகை இது தான் என்று பத்திரிக்கைகள் வர்ணிக்கும் அளவுக்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது. அதுபோல் நமது பிரச்சாரக் கூட்டங்களிலும் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிகின்றது.

அன்று திடலில் நின்று பேசிய கீரனூரி போன்றோர் இன்று பள்ளி வாசல் வளாகத்திற்குள் மட்டும் பேசி விட்டுச் செல்லும் நிலை! ஆனால் இன்னும், இன்றும் இந்த ஊரில் பரேலவிஸத்தை எதிர்த்துப் பேசவில்லை. இவ்வாறு நாம் குறிப்பிட்டுக் கூறுவதற்கான காரணம், இங்க அவரை வைத்துக் கூட்டம் நடத்துபவர்கள் பக்கா பரேலவிகள், முரீது ஏஜெண்டுகள்.

பரேலவிஸத்தை எதிர்த்து நடக்கும் இந்த யுத்தத்தில் இப்போதாவது இவர்கள் மூச்சு விட ஆரம்பித்துள்ளார்களே! அதற்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

05.08.2009. 5:09 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account