Sidebar

18
Thu, Apr
4 New Articles

முன்னர் ஜிஹாதை ஆதரித்தீர்களா?

தமிழக தவ்ஹீத் வரலாறு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

முன்னர் ஜிஹாதை ஆதரித்து பின்னர் மாற்றிக் கொண்டீர்களா?

முன்னர் ஜிஹாதை நீங்கள் ஆதரித்ததாகவும் பின்னர் ஜிஹாத் கூடாது என்று உங்கள் நிலையை மாற்றிக் கொண்டதாகவும் உங்களால் தான் பலர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு சிறை சென்றதாகவும் சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது பற்றிய உண்மை நிலை என்ன?

பதில்

இப்படி ஒரு பிரச்சாரம் சிலரால் செய்யப்பட்டு வருகின்றது. பல்வேறு அரங்குகளில் இது குறித்து நான் விளக்கம் கொடுத்து இருக்கிறேன். எழுத்து வடிவில் இப்போது தான் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. எழுத்து மூலமாக விளக்கம் அளிக்கும் வாய்ப்பு உங்களால் கிடைத்துள்ளது.

பயங்கரவாதம் வேறு ஜிஹாத் வேறு

எனக்கு விபரம் தெரிந்த காலம் முதல் இன்றைய தேதி வரை ஜிஹாத் என்ற பெயரில் அப்பாவிகளைக் கொலை செய்வதை நான் ஆதரித்ததே இல்லை.

உதாரணமாக கோவை குண்டு வெடிப்பில் பொது மக்களும், சிறுவர்களும் அதிக அளவில் பலியானார்கள். இந்தச் செயலை நான் எந்த ஒரு காலத்திலும் ஆதரிக்கவில்லை. எனவே குண்டு வைத்தவர்கள் என்னுடைய போதனையைக் கேட்டு அதைச் செய்தார்கள் என்பது கடுகளவும் உண்மை இல்லாததாகும்.

தற்காப்பு போர்

முஸ்லிம்கள் சங்பரிவாரத்தால் திட்டமிட்டு தாக்கப்படுகின்றனர். இது போல் தாக்கப்படும் போது பின்வாங்கி ஓட்டம் எடுக்காமல் துணிவுடன் எதிர்த்து நிற்க வேண்டும். தக்க பதிலடி கொடுக்க வேண்டும். ஓட்டம் பிடித்தால் சேதம் தான் அதிகமாகும். எதிர்த்து நின்றால் சேதம் குறைவாகவே இருக்கும் என்று நான் அன்றும் கூறினேன். இன்றும் கூறுகிறேன். இதை மேடை போட்டும் பேசியுள்ளேன். தன்னையும், தனது உடமைகளையும் காத்துக் கொள்வதற்காக போரிட்டு உயிர் துறந்தால் ஷஹீத் என்பதற்கு ஆதாரம் உள்ளது. இந்த நிலையை நான் மாற்றிக் கொள்ளவில்லை.

படை திரட்டுவது

சண்டை வரும் போது அல்லாமல் முன் கூட்டியே ஒரு படை திரட்டுவதும் பயிற்சி அளிப்பதும் அவசியம் என்ற நிலையில் நான் முன்னர் இருந்தேன்.

அதைத் தான் நான் மாற்றிக் கொண்டுள்ளேன்.

அது போல் இஸ்லாத்தின் எதிரிகளைக் குறி வைத்து தாக்குவது தவறல்ல என்றும் முன்னர் நான் கூறினேன்.

அந்தக் கருத்தையும் நான் மாற்றிக் கொண்டேன்.

யாருக்கும் பயந்தோ, விளைவுகளுக்கு அஞ்சியோ நான் மாற்றிக் கொள்ளவில்லை.

மாறாக திருக்குர்ஆனிலும் நபிவழியிலும் இதற்கு ஆதாரம் இல்லை என்பது தெரிய வந்ததால் இதை மாற்றிக் கொண்டேன். இது குறித்து திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் பல இடங்களில் நான் விளக்கியுள்ளேன்.

எனது இந்தக் கருத்து தவறு என்று ஆதாரத்துடன் எடுத்துக் காட்டினால் நான் எனது நிலையை மாற்றிக் கொள்வேன்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account