Sidebar

18
Sat, May
26 New Articles

34. பாதுகாக்கப்பட்ட புனிதத் தலம்

விளக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

34. பாதுகாக்கப்பட்ட புனிதத் தலம்

உலகில் இறைவனை வணங்குவதற்காக முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் கஅபா. இந்த ஆலயம் மக்களின் அபய பூமியாகத் திகழும் என இவ்வசனங்கள் (2:125, 3:97, 5:97, 14:35, 28:57, 105:1-5, 106:4) கூறுகின்றன.

மக்கா, அபயபூமி என அறிவிக்கப்பட்டு 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபய பூமியாகவே இருந்து வருகிறது.

14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலாலும் தோற்கடிக்கப்பட முடியாத ஆலயமாகவும், அப்படி தாக்க வருவோரை முறியடிக்கக் கூடியதாகவும் அது இருந்து வருகிறது. திருக்குர்ஆன் கூறியவாறு அது அபய பூமியாகவே நீடித்து வருகிறது.

ஹஜ்ஜின் போது பலர் மக்காவில் மரணிக்கிறார்கள். மக்கா அபய பூமியாக இல்லை என்பதற்கு இது ஆதாரமாக உள்ளதே? என்று சிலர் விதண்டாவாதம் செய்யக் கூடும்.

அபயபூமி என்பதன் பொருளைச் சரியான முறையில் அறிந்து கொள்ளாததால் இவ்வாறு வாதிடுகின்றனர்.

மக்காவில் ஒருவரும் சாகமாட்டார்கள் என்ற கருத்தில் இது சொல்லப்படவில்லை என்று அறிவுடைய மக்கள் புரிந்து கொள்வார்கள். இவ்வசனம் அருளப்படுவதற்கு முன்னரும், இவ்வசனம் அருளப்பட்ட பின்னரும் மக்காவில் பலரும் மரணித்துள்ளனர். பலரும் மரணித்துக் கொண்டு இருப்பதை அனைவரும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது தான் மக்கா அபய பூமி என்ற வசனம் அருளப்பட்டது.

நபிகள் நாயகத்தின் நெருக்கமான பல ‎தோழர்கள் மக்காவில் ‎மரணித்துள்ளனர்.‎ எனவே மக்காவில் யாரும் மரணிக்க மாட்டார்கள் என்ற கருத்தில் இது சொல்லப்படவில்லை.

ஒருவரது மரணம் எங்கே, எப்போது, எப்படி நிகழும் என்று இறைவனால் முடிவு செய்யப்பட்டுள்ளதோ அப்படி நிகழ்ந்தே தீரும். மக்காவில் மரணிப்பார்கள் என்று யார் விஷயத்தில் இறைவன் முடிவு செய்துள்ளானோ அவர் மக்காவில் தான் மரணிப்பார். இது தான் இஸ்லாத்தின் நம்பிக்கை.

மக்காவுக்குச் செல்லும் ஒருவர் நாம் திரும்பி வருவோமோ, இல்லையோ என்று கருதி உறவினர்களிடமும், நண்பர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு பயணிக்கும் வழக்கம் முஸ்லிம்களிடம் உள்ளது. மக்காவில் மரணம், விபத்து ஆகியன ஏற்படாது என்று முஸ்லிம்கள் நம்புவதில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. முஸ்லிம்கள் நம்பாத ஒன்றைக் குறித்து அவர்களிடம் கேள்வி கேட்க முடியாது.

சில சந்தர்ப்பங்களில் கஅபா ஆலயத்துக்குள் விஷமிகள் புகுந்து ஆயுதத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது அபய பூமி என்பதற்கு எதிராக உள்ளதே என்றும் சிலர் கேட்கின்றனர்.

அபய பூமியாக இருப்பதால் சிலர் தமக்குள் சண்டை போட மாட்டார்கள் என்று பொருளல்ல. ஆயுதம் தரித்து சிலர் புரட்சி செய்ய மாட்டார்கள் என்பதும் இதன் பொருளல்ல.

இஸ்லாத்தை அழிக்க நினைக்கும் எதிரிகளால் அபய பூமியை அழிக்கவோ, கைப்பற்றவோ இயலாது என்பது தான் இதன் கருத்தாகும்.

முஸ்லிம் சமுதாயத்தில் உள்ளவர்கள் அறியாமை காரணமாக இந்த அபய பூமியில் சண்டையிடுவார்களா; இரத்தம் சிந்துவார்களா? கஅபா ஆலயத்தைச் சேதப்படுத்துவார்களா என்றால் அதை இஸ்லாம் மறுக்கவில்லை. அது பற்றியும் இஸ்லாம் முன்னறிவிப்பு செய்கிறது.

இந்த ஆலயத்தை அதற்குச் சொந்தம் கொண்டாடும் மக்களால் தவிர மற்றவர்களால் அழிக்க முடியாது. அப்படி அழிக்கப்படும் போது அரபுகளுக்கு ஏற்படும் அழிவு பற்றி கேட்காதே! பின்னர் அபீசீனியர்கள் முற்றிலுமாக கஅபாவை அழிப்பார்கள். அதன் பின்னர் அதைச் சீர் செய்ய முடியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். – நூல் அஹ்மத்

அபிசீனியாவைச் சேர்ந்த, மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

நூல் : புகாரி 1591

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்தவாறு ஹஜ்ஜாஜ் பின் யூசுப், அப்துல்லாஹ் பின் ஸுபைர் ஆகியோருக்கு நடந்த சண்டையில் இந்த மண்ணில் இரத்தம் சிந்தப்பட்டது. கஅபா சேதமாக்கப்பட்டது. இரண்டு முறை இடித்துக் கட்டப்பட்டது.

அதுபோல் ஷியாக்களில் ஒரு பிரிவினரான கராமித் என்போர் ஹிஜ்ரி 317 ஆம் ஆண்டு ஹஜ் மாதம் திடீரென மக்காவில் நுழைந்து ஹாஜிகள் பலரைக் கொன்றார்கள். ஹஜருல் அஸ்வதைப் பெயர்த்து எடுத்து ஷியாக்களின் நாடாக இருந்த பஹ்ரைனுக்குக் கொண்டு சென்றார்கள். 22 ஆண்டுகள் கஅபாவில் ஹஜருல் அஸ்வத் இருக்கவில்லை. ஹிஜ்ரி 337 ஆம் ஆண்டு தான்  அதாவது 22 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் ஹஜருல் அஸ்வதை ஒப்படைத்தார்கள்.

இவை தமது அபய பூமியை முஸ்லிம்கள் தாமாக அழித்துக் கொண்ட நிகழ்வாகும். சமீப காலங்களிலும் இது போல் இந்த அபய பூமியில் புரட்சி நடந்ததுண்டு.

அல்லாஹ் இந்த ஆலயத்தை அபய பூமியாக ஆக்கியுள்ளான் என்பதற்கு இது மாற்றமாக ஆகாது. முஸ்லிம்கள் தாமாக அழித்துக் கொள்ளாத வரை இந்த பூமி அபயபூமியாக இருக்கும். அதன் புனிதத்தை அவர்களாக அழித்துக் கொள்வதை இது குறிக்காது.

அல்லாஹ்வின் இவ்வசனங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் சொன்ன இந்த விளக்கத்தையும் இணைத்தே விளங்க வேண்டும்.

இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தை ஒழிக்க முயல்வோர் முறியடிக்கப்படுவார்கள் என்பது தான் இதன் கருத்தாகும்.

அப்படி முயற்சிப்பவர்கள் முறியடிக்கப்படுவார்கள் என்பது தான் இதன் பொருள்.

அவர்களின் கைகள் ஓங்கி மக்காவின் புனிதத்தை மறுப்பவர்களின் கைகளுக்கு மக்கா நகரம் செல்லாது என்பதும் இதன் பொருளாகும்.

அகிலத்தையே கட்டி ஆண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தப் பூமிக்கு அருகில் உள்ள பகுதிகளை எல்லாம் தன் கைவசத்தில் கொண்டு வந்த காலத்தில் கூட மக்காவை அவர்களால் நெருங்க முடியவில்லை.

சிலுவைப் போர் என்ற பெயரில் இஸ்லாம் மதத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போர்களிலும் கூட மக்காவைக் கையகப்படுத்துவது தான் கிறித்தவர்களின் மெய்யான வெற்றி என்ற நிலையிலும் மக்காவை நெருங்க முடியவில்லை.

எனவே மக்கா அபயபூமியாகவே அன்றும் இன்றும் நீடித்து வருகிறது என்பதில் ஐயம் இல்லை.

திருக்குர்ஆன் இறைவேதமே என்பதற்கான சான்றுகளில் ஒன்றாக இவ்வசனங்கள் அமைந்துள்ளன.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account