Sidebar

25
Thu, Apr
0 New Articles

இறை  நேசர்களைக் கண்டறிய இயலுமா?

தமிழ் நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

இறை  நேசர்களைக் கண்டறிய இயலுமா?

மனிதர்கள் தனது நேசர்களாக ஆக வேண்டும் என்பதற்காக அல்லாஹ் நபிமார்களை அனுப்பினான். அவர்களுக்கு வேதங்களையும் அருளினான். அவனது கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நல்லடியார்களாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கடமைப்பட்ட முஸ்லிம்கள் அதை விட்டுவிட்டு அல்லாஹ்வின் நல்லடியார்கள் என்று சிலருக்குப் பட்டம் சூட்டி அவர்களைக் கொண்டாடி வருகின்றனர்.

தினமும் காலை பத்து மணிக்கு அலுவலகம் வர வேண்டும் என்று தனது ஊழியருக்கு ஒரு நிறுவனம் கட்டளையிடுகிறது. அப்படி வருபவர்களுக்குத் தான் சம்பளம் தரப்படும் என்றும் அந்த நிறுவனம் அறிவிக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.  அங்கே பணியாற்றும் ஊழியர்களில் ஓரிருவர் மட்டுமே குறித்த நேரத்தில் வருகிறார்கள். மற்றவர்கள் 10 மணிக்கு வருவதற்குப் பதிலாக அலுவல் நேரம் முடியும் போது ஆளுக்கு ஒரு மாலையுடன் வந்து குறித்த நேரத்தில் பணி செய்ய வந்தவர்களின் கழுத்தில் போட்டு பாராட்டுகின்றனர். இப்படி நடந்தால் இவர்களை நாம் என்னவென்போம்?

நீங்கள் எனது சொல் கேட்டு எனது நேசர்களாக ஆகுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். அந்தக் கட்டளையைப் பேணாமல், இறை நேசராக முயற்சிக்காமல் இறைவனின் சொல் கேட்டு நடந்தவர்களுக்குப் பாராட்டு விழா நடத்துபவர்களுக்கும், பொறுப்பற்ற அந்த ஊழியர்களுக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் சம்பளத்தை இழப்பதைப் போல் இவர்களும் சொர்க்கத்தை இழக்க மாட்டார்களா?

குறித்த  நேரத்தில் ஒருவர் வேலைக்கு வருவதை நாம் கண்டுபிடிக்க முடியும். அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்துவதில் சிறிதளவாவது நியாயம் உள்ளது. ஆனால் இறைவனுக்கு  நேசராகுதல் என்பது செயல்களை மட்டும் வைத்து முடிவு செய்யப்படுவதில்லை. அதைச் செய்பவரின் தூய எண்ணத்தை வைத்து இறைவனால் முடிவு செய்யப்படுவதாகும். இதை யாரும் கண்டுபிடிக்க முடியாது.

பொறுப்பற்ற அந்த ஊழியர்களாவது தங்களால் கண்டுபிடிக்க முடிந்த விஷயத்தைக் கண்டுபிடித்து பாராட்டினார்கள். ஆனால் அவ்லியா பட்டம் கொடுப்பவர்கள் தங்களால் கண்டுபிடிக்க முடியாத விஷயத்தைப் பற்றி முடிவு செய்கிறார்கள். இந்த வகையில் இவர்கள் அந்த பொறுப்பற்ற ஊழியரை விட இழிந்தவர்களாக உள்ளனர்.

சிலரைப் பற்றி இறைவனின் நேசர்கள் என்று இவர்களாகவே தவறான முடிவு எடுத்துக் கொண்டு இறைவனின் நேசர்கள் என்பதால் அவர்களிடம் பிரார்த்தனை செய்யலாம்; அவர்களை வழிபடலாம் எனவும் நினைக்கின்றனர். அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தர்கா எனும் வழிபாட்டுத் தலத்தை எழுப்பி, பிற மதத்தினர் தங்கள் வழிபாட்டுத் தலங்களில் செய்யும் அனைத்துக் காரியங்களையும் செய்து வருகின்றனர்.

எத்தனை குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் எடுத்துக் காட்டி இச்செயல் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல என்று நாம் அறிவுரை கூறினாலும் அதை அவர்கள் மதிப்பதில்லை.

காரணம் இவர்கள் மகான்கள்; இவர்கள் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள் என்பதால் எப்படியும் நம்மைக் காப்பாற்றி விடுவார்கள். நாம் வைக்கும் கோரிக்கைகளை அல்லாஹ்விடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி நிறைவேற்றித் தருவார்கள் என்ற நம்பிக்கை இவர்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்துள்ளதால் எந்த போதனையும் இவர்களின் உள்ளங்களில் இறங்குவதில்லை.

ஒருவரை மகான் என்று நாம் முடிவு செய்வது மார்க்கத்தில் எவ்வளவு பெரிய குற்றம் என்பதை விளக்கினால் தான் இந்த மாயையில் இருந்து இவர்கள் விடுபடுவார்கள்.

எனவே தான் ஒருவரை இறைநேசர் என்று கண்டுபிடிக்க முடியுமா? நாம் யாரை மகான்கள் என்கிறோமோ அவர்கள் அல்லாஹ்வின் நேசர்கள் தாமா என்ற அடிப்படையை விளக்குவதற்காக இந்த நூலை வெளியிடுகிறோம்.

முஸ்லிம்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்கக் கூடியவர்களாக வாழ்வை அமைத்துக் கொள்ள இந்த நூல் உதவும் என்று நம்பிக்கை வைக்கிறோம்.

நபீலா பதிப்பகம், சென்னை-1.

இறை நேசர்களைக் கண்டறிய முடியுமா?

மறுமையில் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனது கட்டளைகளை ஏற்றுச் செயல்பட்ட நல்லவர்கள் இறைநேசர்கள் எனப்படுகின்றனர். பொதுவாக இறை நேசர்களின் பண்புகளை நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் தனிப்பட்ட மனிதர்களை இறைநேசர்கள் என்று கூறமுடியுமா? அறிந்து கொள்ள முடியுமா?

இதை விளக்குவதே இந்த நூலின் நோக்கம்.

* இறைநேசர்கள் என்பதற்கு, இறைவனை நேசிப்பவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.

* இறைவனால் நேசிக்கப்பட்டவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.

இறை நேசர்கள் என்பதற்கான இரண்டு அர்த்தங்களையும் சிந்தித்தாலே ஒருவரை இறைநேசர் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்பதை அறியலாம்.

இறைநேசர் என்ற சொல்லுக்கு இறைவனை நேசிப்பவர் என்று பொருள் கொண்டால் அந்த நேசம் அவரது உள்ளத்தில் தான் இருக்கும். அவர் இறைவனை நேசிக்கிறாரா? அல்லது நடிக்கிறாரா? என்று மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாது.

இறவனால் நேசிக்கப்பட்டவர் என்று பொருள் கொண்டால் அது இறைவனுக்கு மட்டும் தான் தெரியும். இறைவனின் உள்ளத்தில் உள்ளதை இறைவனைத் தவிர யாரும் அறிய முடியாது என்பதால் இதையும் யாரும் கண்டுபிடிக்க முடியாது.

ஈஸா நபியை மறுமையில் அல்லாஹ் விசாரிக்கும் போது

எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்'' என்று பதிலளிப்பார்.

திருக்குர்ஆன் 5:116

அல்லாஹ்வின் உள்ளத்தில் உள்ளதை ஈஸா நபி உள்ளிட்ட எந்த நபியாலும் அறிய முடியாது என்று இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது.

இறைவனின் உள்ளத்தில் இருப்பதை அறிந்து கொள்வது இருக்கட்டும். ஒரு மனிதனை இன்னொரு மனிதன் மெய்யாக நேசிக்கிறான் என்பதைக் கூட அறிய முடியாது. கணவன் மனைவிக்கு இடையே எவ்வளவு நெருக்கம் இருந்தாலும் கணவன் மெய்யாக நேசிக்கிறானா என்று மனைவியால் கண்டுபிடிக்க முடியாது. மனைவி மெய்யாக நேசிக்கிறாளா என்று கணவனால் கண்டுபிடிக்க முடியாது.

நண்பர்களுக்கிடையே உள்ள நட்பாகட்டும்; உறவினர்களுக்கிடையே உள்ள உறவாகட்டும்; தலைவன் தொண்டனுக்கு இடையே உள்ள நேசமாகட்டும் இவை மெய்யானது தானா என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது.

வெளிப்படையான செயல்களை வைத்துத் தான் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அறிய முடியும். ஆனால் அந்த அறிவு முற்றிலும் சரியாக இருப்பதில்லை.

இவனை நம்பி கடன் கொடுத்தேன்; என்னை ஏமாற்றி விட்டான் என்று பலரும் புலம்புவதைக் கான்கிறோம். அவனது உள்ளத்தில் உள்ளதை அறிய முடியாததால் தான் கடன் கொடுத்து ஏமாந்து போகின்றனர்.

ஒருவனை நம்பி நம் கடையில் அவனை ஊழியராகச் சேர்க்கிறோம். அவன் அனைத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடி விடுகிறான். அவன் ஓடிப் போன பின்பு தான் அவனுடைய உள்ளத்தில் தவறான எண்ணம் இருந்தது தெரிகிறது. ஓடுவதற்கு முன்னால் அவன் நல்லவனாகத் தான் தெரிந்தான்.

என் மனைவி என்னை மெய்யாக நேசிக்கிறாள் என்று நம்பி என் சொத்துக்கள் அனைத்தையும் அவள் பெயரில் மாற்றிக் கொடுத்தேன் என்று புலம்பும் கணவர்களைப் பார்க்கிறோம். ஓருடல் ஈருயிராக இணைந்திருந்த மனைவி தன்னை நேசிக்கிறாளா என்று கணவனால் அறிய முடியவில்லை என்றால் அல்லாஹ்வை ஒருவர் நேசிக்கிறார் என்று எப்படி அறிய முடியும்?

அப்படி முடிவு செய்தால் அல்லாஹ் நினைப்பதைக் கண்டுபிடிக்கும் ஆற்றலுக்கு நாம் உரிமை கொண்டாடியதாக ஆகும்.

எனவே இவர் அவ்லியா, அவர் அவ்லியா என்று பட்டம் கொடுப்பதில் இருந்து முஸ்லிம்கள் விலகிக் கொள்ள வேண்டும் என்பதற்கு இதுவே போதுமான ஆதாரமாகும்.

ஒருவரை இறைநேசர் என்று யாரும் முடிவு செய்ய முடியாது என்பதற்கு நேரடியான பல ஆதாரங்களும் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள்.

திருக்குர்ஆன் 10:62, 63

இறைநேசர்களுக்கு அச்சமும் இல்லை; கவலையும் இல்லை என இறைவன் கூறிவிட்டு, யார் இறைநேசர்கள் என்பதையும் சொல்லித் தருகிறான்.

நம்ப வேண்டியவைகளைச் சரியான முறையில் நம்புவதும், அல்லாஹ்வை அஞ்சுவதுமே இறைநேசர்களுக்கான இலக்கணம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ்வின் மீதும், வானவர்கள் மீதும், நபிமார்கள் மீதும், வேதங்கள் மீதும், மறுமையின் மீதும், விதியின் மீதும் சரியான நம்பிக்கை யாருடைய உள்ளத்தில் இருக்கிறதோ அவர்களும், யாருடைய உள்ளத்தில் இறைவனைப் பற்றிய அச்சம் இருக்கிறதோ அவர்களுமே இறைநேசர்கள் என்று இறநேசர்களின் இலக்கணத்தை அல்லாஹ் சொல்கிறான்.

ஜுப்பா அணிந்திருப்பவர், தலைப்பாகை கட்டியவர், பெரிய தாடி வைத்திருப்பவர், பள்ளிவாசலிலேயே அமர்ந்து தவம் செய்பவர், வருடா வருடம் ஹஜ் செய்பவர், எல்லா நேரமும் வணக்கத்தில் மூழ்கியிருப்பவர், பொருளாதாரத்தை வாரி வாரி வழங்குபவர் போன்ற அடையாளங்களை அல்லாஹ் கூறி இருந்தால் இறைநேசர்களை நாம் கண்டுபிடித்து விடலாம். ஆனால் இறைநேசர்களுக்கு அடையாளமாக அல்லாஹ் கூறியவை உள்ளம் சம்மந்தப்பட்டவை.

நம்ப வேண்டியவைகளை ஒருவர் உண்மையாகவே நம்பி இருக்கிறாரா என்பதும், அல்லாஹ்வை ஒருவர் அஞ்சுகிறாரா என்பதும் அவரது உள்ளத்தில் உள்ளவையாகும். இதை யாரும் கண்டுபிடிக்க முடியாது என்பதால் இன்னார் இறைநேசர் என்பதையும் கண்டுபிடிக்க முடியாது என்பது இதிலிருந்து உறுதியாகின்றது.

இறைநேசர்கள் யார் என்பது மறுமையில் தான் தெரியவரும். எடுத்த எடுப்பிலேயே சொர்க்கவாசிகள் என்று யாருக்கு அல்லாஹ் தீர்ப்பளிக்கின்றானோ அவர்கள் இறைநேசர்கள் என்று அப்போது தான் அறிய முடியும். அல்லாஹ் தீர்ப்பளிப்பதற்கு முன்னர் இறைநேசர் பட்டம் கொடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.

صحيح البخاري

2662 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا عَبْدُ الوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ الحَذَّاءُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: أَثْنَى رَجُلٌ عَلَى رَجُلٍ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «وَيْلَكَ قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ، قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ» مِرَارًا، ثُمَّ قَالَ: «مَنْ كَانَ مِنْكُمْ مَادِحًا أَخَاهُ لاَ مَحَالَةَ، فَلْيَقُلْ أَحْسِبُ فُلاَنًا، وَاللَّهُ حَسِيبُهُ، وَلاَ أُزَكِّي عَلَى اللَّهِ أَحَدًا أَحْسِبُهُ كَذَا وَكَذَا، إِنْ كَانَ يَعْلَمُ ذَلِكَ مِنْهُ»

ஒரு மனிதர் இன்னொரு மனிதரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்ன்னிலையில் புகழ்ந்து பேசினார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அழிந்து போவீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர்'' என்று (பலமுறை) கூறினார்கள். பிறகு, "உங்களில் எவருக்காவது தன் சகோதரரைப் புகழ்ந்து ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் "இன்னாரை நான் இப்படிப்பட்டவர் என்று எண்ணுகிறேன். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவன் ஆவான். அல்லாஹ் (உண்மை நிலையை அறிந்தவனாக) இருக்க, அவனை முந்திக்கொண்டு நான் யாரையும் தூய்மையானவர் என்று கூற மாட்டேன். அவரை இன்னின்ன விதமாக நான் எண்ணுகிறேன்'' என்று கூறட்டும். அந்தப் பண்பை அவர் அந்த மனிதரிடமிருந்து அறிந்திருந்தால் மட்டுமே இப்படிக் கூறட்டும்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி),

நூல்: புகாரி 2662

இந்த சமுதாயத்தில் மிகச் சிறந்தவர்கள் நபித்தோழர்கள் என்பதை நாம் அறிவோம். இதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ஒரு நபித்தோழர் இன்னொரு நபித்தோழர் குறித்து நல்லவர் என்று புகழ்கிறார். ஒரு நபித்தோழரை இன்னொரு நபித்தோழர் நல்லடியார் என்று கூறியதை நபியவர்கள் கண்டிக்கிறார்கள். வெளிப்படையாக  நல்லவர் என்று ஒருவரைப் பற்றித் தெரிந்தால் அவரை நல்லடியார் என்று தீர்ப்பளித்து விடாதீர்கள். நானறிந்த வரையில் இவர் நல்லவராகத் தெரிகிறார். இவரை எந்தப் பட்டியலில் அல்லாஹ் வைத்துள்ளான் என்று எனக்குத் தெரியாது என்று கூறச் சொல்கிறார்கள்.

ஒரு நபித்தோழருக்குக் கூட நல்லடியார் பட்டம் கொடுக்க முடியாது என்றால் நபித்தோழர்களை விட பன்மடங்கு தாழ்ந்தவர்களை நல்லடியார் என்று அழைப்பது எவ்வளவு பெரிய குற்றம் என்று இதிலிருந்து அறியலாம்.

நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நம் சம்பந்தப்பட்ட விஷயத்திற்காக ஒருவரை நல்லவரா கெட்டவரா என்று தீர்மானிக்க வேண்டிய அவசியம் நமக்கு ஏற்படும்.

உதாரணமாக ஒரு தொழிலதிபர் தனது கடைக்கு ஒருவரை வேலைக்குச் சேர்ப்பதாக இருந்தால் அவர் நல்லவரா என்று கண்டுபிடிக்கும் அவசியம் ஏற்படுகிறது. தனது மகளை ஒருவனுக்குத் திருமணம் முடித்துக் கொடுக்கும் போது அவன் நல்லவனா கெட்டவனா என்று முடிவு செய்யும் அவசியம் ஏற்படுகிறது.

அவனைப் பற்றி அறிந்தவர்களிடம் விசாரித்து, அவனது வெளிப்படையான செயல்களின் அடிப்படையில் அவன் நல்லவன் என்று முடிவு செய்யலாம். இப்படி முடிவு செய்வதால் அவர் அல்லாஹ்விடம் நல்லவர் என்று நாம் கருத மாட்டோம். அவர் சொர்க்கவாசி என்றும் கருத மாட்டோம். நாம் எந்தக் காரியத்தைப் பார்த்து அவரை நல்லவர் என்று நினைத்தோமோ அதுவே பொய்யாகிப் போனாலும் போகலாம் என்ற சந்தேகத்தை ஒரு பக்கம் வைத்துக் கொண்டுதான் அவரை நல்லவர் என்று நம்புகிறோம்.

மகான்கள் என்று முடிவு செய்து மதிக்கப்படும் பலர் இவ்வாறு கருதப்படுவதில்லை. அவர்கள் அல்லாஹ்விடம் நல்லடியார்கள் என்றும், அவர்கள் சொர்க்கவாசிகள் என்றும், நம்மையும் சொர்க்கத்தில் சேர்க்கும் அளவுக்கு அல்லாஹ்வின் அன்பைப் பெற்றவர்கள் என்றும் நம்புகிறார்கள். இப்படி முடிவு செய்ய நமக்கு அதிகாரம் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்திற்கு மணமகளைத் தேர்வு செய்வதைப் பற்றி கூறும்போது,

صحيح البخاري

5090 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " تُنْكَحُ المَرْأَةُ  لِأَرْبَعٍ: لِمَالِهَا وَلِحَسَبِهَا وَجَمَالِهَا وَلِدِينِهَا، فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ، تَرِبَتْ يَدَاكَ "

"நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்.

  1. அவளது செல்வத்திற்காக,
  2. அவளது குடும்பத்திற்காக,
  3. அவளது அழகிற்காக,
  4. அவளது மார்க்கத்திற்காக.

மார்க்கம் உடைய பெண்ணை மணந்து வெற்றியடைந்து கொள். (இல்லையேல்) உன்னிரு கைகளும் மண்ணாகட்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி 5090

இந்த நான்கு விஷயங்களில் முதல் மூன்றை நாம் தீர்மானித்து விடலாம். நான்காவதாகக் கூறப்பட்ட மார்க்கப் பற்றை நாம் தீர்மானிக்க முடியுமா? முடியாது.

மார்க்கப் பற்றுள்ள பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்துகொள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். யார் மார்க்கப் பற்றுள்ளவர் என்று நாமே தீர்மானிக்க முடியும் என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.

ஏனெனில் ஒரு பெண்ணயோ, ஆணையோ மார்க்கப் பற்றுள்ளவர் என்று நாம் கூறினால் அதன் பொருள் என்ன? இவர் கண்டிப்பாக அல்லாஹ்வின் நேசர் என்ற பொருளிலோ, இவர் மறுமையில் சொர்க்கத்தை அடைவார் என்ற பொருளிலோ இப்படி யாரும் கூறுவதில்லை.

வெளிப்படையான செயல்களைப் பார்க்கும் போது நமக்கு அந்தப் பெண் நல்லவளாகத் தெரிகிறாள். அவள் அல்லாஹ்விடத்தில் மார்க்கப் பற்றுள்ளவளாகக் கருதப்படுவாளா என்று எனக்குத் தெரியாது என்ற பொருளில் தான் கூறுகிறோம். ஒரு மாப்பிள்ளையை நல்லவன் என்று முடிவு செய்தால் அவன் நல்லவன் என்று எனக்குத் தெரிகிறது. அவன் அல்லாஹ்விடத்தில் மார்க்கப் பற்றுள்ளவனாகக் கருதப்படுவானா என்று எனக்குத் தெரியாது என்ற பொருளில் தான் கூறுகிறோம்.

நம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் இப்படி முடிவு செய்யும் அதிகாரம் நமக்குத் தரப்பட்டுள்ளது.

நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர்.

திருக்குர்ஆன் 60:10

மூமினான - நம்பிக்கை கொண்ட - பெண்களைச் சோதித்து அறியமுடியும் என்று இவ்வசனம் கூறுவதால் நாம் ஒருவரை மகான் என்று முடிவு செய்யலாம் என்று கருதக் கூடாது.

வெளிப்படையான செயல்களையும், பேச்சுக்களையும் வைத்து நம்மளவில் முடிவு செய்வது பற்றியே இவ்வசனம் கூறுகிறது. மூமின்கள் என்று நாம் முடிவு செய்ததால் அல்லாஹ்விடமும் அவர்கள் மூமின்கள் பட்டியலில் இருப்பார்கள் என்ற கருத்தை இது தராது. சொர்க்கத்தை அடைவார்கள் என்ற கருத்தையும் இது தராது.

மூமின்களா என்று சோதித்து அறியுங்கள் என்று மட்டும் கூறாமல் அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன் என்றும் அல்லாஹ் சேர்த்துக் கூறுகிறான்.

அந்தப் பெண்கள் நம்பிக்கையுள்ளவர்களா என்று உங்கள் சக்திக்கு உட்பட்டு நீங்கள் முடிவு செய்தாலும் அவர்கள் உண்மையான நம்பிக்கை உள்ளவர்களா என்பது எனக்குத் தான் தெரியும் என்று அல்லாஹ் சொல்கிறான்.

வெளிப்படையான செயல்களையும், அடையாளங்களையும் வைத்து அவர்கள் முஸ்லிம்கள் என்று தெரிய வந்தால் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் அவர்களுடைய உள்ளத்தில் ஈமான் இருக்கிறதா என்பதை அல்லாஹ் தான் அறிவான் என்று கூறி இதன் சரியான பொருளை அல்லாஹ் விளக்கிவிட்டான்.

அவ்லியாக்கள் என்று பட்டம் சூட்டுவதற்கு மக்கள் பல அளவுகோல்களை வைத்துள்ளனர். வாதத் திறமையும், ஆராய்ச்சித் திறனும் அவற்றில் ஒன்றாகும். கடந்த காலங்களில் அறிஞர்கள் என்றும், ஆய்வாளர்கள் என்றும் அறியப்பட்டவர்களை இறைநேசச் செல்வர்கள் என்ற அடைமொழியால் குறிப்பிடுகின்றனர்.

இறை நேசர் என்பதற்கு இது அளவுகோலாகாது என்று அல்லாஹ் கூறுகிறான்.

உம்மைக் கவரும் வகையில் இவ்வுலக வாழ்வைப் பற்றி பேசும், கடுமையான வாதத் திறமை உள்ளவனும் மனிதர்களில் இருக்கிறான். தன் உள்ளத்தில் இருப்பதற்கு அல்லாஹ்வையும் சாட்சியாக்குகிறான்.

திருக்குர்ஆன் 2:204

ஒருவன் நல்லதைப் பேசுகிறான் என்று சொன்னால் அவன் ஈமானுடன் இருக்கிறான் என்று நாம் சொல்ல முடியாது. தன்னை மகான் என்று சொல்லக் கூடியவன் பல நல்ல செய்திகளை எடுத்துச் சொல்லி விட்டு, அதுதான் என் உள்ளத்தில் இருக்கிறது என்று கூறுவான். அதற்கு அல்லாஹ்வை சாட்சியாக்குவான். ஆனால் அது உண்மை அல்ல என்று இவ்வசனத்தில் இறைவன் கூறுகிறான்.

சிலருடைய வாதம் உங்களுக்கு அழகாக, கவர்ச்சியாக இருக்கிறது என்பதற்காக அவர்களை நல்லவர்களாக நினைத்து விடாதீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இறைவன் கூறுகிறான்:

நீர் அவர்களைக் காணும் போது அவர்களின் உடல்கள் உம்மை வியப்பில் ஆழ்த்தும். அவர்கள் பேசினால் அவர்களது பேச்சை நீர் செவியேற்பீர். அவர்கள் சாய்த்து வைக்கப்பட்ட மரக்கட்டைகள் போல் உள்ளனர். ஒவ்வொரு பெரும் சப்தத்தையும் அவர்கள் தமக்கு எதிரானதாகவே கருதுவார்கள். அவர்களே எதிரிகள். எனவே அவர்களிடம் கவனமாக இருப்பீராக! அவர்களை அல்லாஹ் அழிப்பான். அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

திருக்குர்ஆன் 63:4

இந்த வசனத்தில் நயவஞ்சகர்களைப் பற்றி இறைவன் கூறுகிறான். அவர்களுடைய தோற்றம் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். உங்களுக்கு வியப்பை ஏற்படுத்துகின்ற விதத்தில் அவர்கள் பேசுவார்கள். எனவே அவர்களின் பேச்சை உண்மையென நம்பிவிடாதீர்கள். அவர்களை முஃமீன்கள் என்றும் நம்பி விடாதீர்கள். அவர்கள் தான் உங்களுக்கு முதல் எதிரிகள் என்று இறைவன் கூறுகிறான்.

"அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பினோம்'' எனக் கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (ஆனால்) அவர்கள் நம்புவோர் அல்லர்.

திருக்குர்ஆன் 2:8

வெளிப்படையான தோற்றத்தை வைத்து நம்மளவில் ஒருவரை நல்லவர் என்று கூறிக் கொண்டாலும், அவர்கள் இறைநேசர்கள் என்றோ, அல்லாஹ்வின் பார்வையிலும் நல்ல்லவர்களாக இருப்பார்கள் என்றோ முடிவு செய்யக்கூடாது என்பதை இவ்வசனத்தில் இருந்தும் அறியலாம்.

உலகில் நல்லடியார்களாகக் கருதப்பட்ட பலர் நரகில் கிடப்பார்கள். கெட்டவர்களாகக் கருதப்பட்ட பலர் சொர்க்கத்தில் இருப்பார்கள் என்று பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

தடுப்புச் சுவர் மேல் இருப்போர், (நரகிலுள்ள) சிலரை அழைப்பார்கள். அவர்களது அடையாளத்தைக் கொண்டு அவர்களை அறிந்து கொள்வார்கள். "உங்களுடைய ஆள் பலமும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததும் உங்களைக் காப்பாற்றவில்லை; அல்லாஹ் அருள் புரிய மாட்டான் என (சொர்க்கவாசிகளான) இவர்களைப் பற்றியா சத்தியம் செய்தீர்கள்?'' என்று கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 7:48, 49

அவ்லியாக்கள் எனக் கருதப்பட்டவர்கள் நரகத்தில் கிடப்பதையும், கெட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் சொர்க்கத்தில் இருப்பதையும் அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான்.

நரகவாசிகளில் சிலர் நரகில் புலம்புவதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான். கெட்டவர்கள் என்று கருதப்பட்டவர்கள் இறைநேசர்களாக இருப்பார்கள் என்பதை அந்தப் புலம்பலும் தெளிவுபடுத்துகிறது.

"தீயோர் என்று நாங்கள் கருதி வந்த மனிதர்களை (நரகில்) ஏன் காணாமல் இருக்கிறோம்? (அவர்கள் நல்லோராக இருந்தும்) அவர்களை ஏளனமாகக் கருதினோமா? அல்லது அவர்களை விட்டும் (நமது) பார்வைகள் சாய்ந்து விட்டனவா?'' என்று கேட்பார்கள். நரகவாசிகளின் இந்த வாய்ச்சண்டை உண்மை!

திருக்குர்ஆன் 38:62-64

நல்லவர்கள் என்றும், கெட்டவர்கள் என்றும் நம்மால் முடிவு செய்யப்பட்டவர்களின் நிலை நமது முடிவுக்கு மாற்றமாக இருக்கும் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.

நல்லடியார்கள் என்றும், கெட்டவர்கள் என்றும் நாம் எடுக்கும் முடிவுகள் தவறாக ஆகிவிடும் என்று பின்வரும் வசனத்திலும் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.

திருக்குர்ஆன் 49:11

மேற்கூறப்பட்ட அனைத்து வசனங்களும் கூறும் செய்தி என்ன? இந்த உலகத்தில் ஒருவரை நல்லவர் என்று நாம் தீர்மானிக்க முடியாது. அல்லாஹ் மட்டும் தான் அதை அறிந்தவன் என்பதுதான்.

صحيح مسلم

6938 - حَدَّثَنِى زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا جَرِيرٌ عَنِ الْعَلاَءِ بْنِ الْمُسَيَّبِ عَنْ فُضَيْلِ بْنِ عَمْرٍو عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ قَالَتْ تُوُفِّىَ صَبِىٌّ فَقُلْتُ طُوبَى لَهُ عُصْفُورٌ مِنْ عَصَافِيرِ الْجَنَّةِ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « أَوَلاَ تَدْرِينَ أَنَّ اللَّهَ خَلَقَ الْجَنَّةَ وَخَلَقَ النَّارَ فَخَلَقَ لِهَذِهِ أَهْلاً وَلِهَذِهِ أَهْلاً ».

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளில் ஒரு குழந்தை இறந்த போது, அதன் நல்லடக்கத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! அக்குழந்தைக்கு நல்வாழ்த்துக்கள்! அது சொர்க்கத்தின் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி. அது எந்தத் தீமையையும் செய்யவில்லை. அதற்கான பருவத்தையும் அது அடையவில்லை'' என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேறு ஏதேனும் உண்டா, ஆயிஷா? அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களை அவன் படைத்து விட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களைப் படைத்து விட்டான்'' என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5175

ஒன்றுமே அறியாத சிறு குழந்தையைக் கூட சுவர்க்கவாசி என்று கூறும் அதிகாரம் நமக்கு இல்லை எனும் போது பாவம் செய்ய வாய்ப்புள்ள பெரியவர்களை அவ்லியாக்கள் என்றும், அல்லாஹ்வின் நேசர் என்றும் நாம் எவ்வாறு கருத முடியும்?

صحيح البخاري

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي خَارِجَةُ بْنُ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ أُمَّ العَلاَءِ، امْرَأَةً مِنَ الأَنْصَارِ بَايَعَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ: أَنَّهُ اقْتُسِمَ المُهَاجِرُونَ قُرْعَةً فَطَارَ لَنَا عُثْمَانُ بْنُ مَظْعُونٍ، فَأَنْزَلْنَاهُ فِي أَبْيَاتِنَا، فَوَجِعَ وَجَعَهُ الَّذِي تُوُفِّيَ فِيهِ، فَلَمَّا تُوُفِّيَ وَغُسِّلَ وَكُفِّنَ فِي أَثْوَابِهِ، دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: رَحْمَةُ اللَّهِ عَلَيْكَ أَبَا السَّائِبِ، فَشَهَادَتِي عَلَيْكَ: لَقَدْ أَكْرَمَكَ اللَّهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَا يُدْرِيكِ أَنَّ اللَّهَ قَدْ أَكْرَمَهُ؟» فَقُلْتُ: بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ، فَمَنْ يُكْرِمُهُ اللَّهُ؟ فَقَالَ: «أَمَّا هُوَ فَقَدْ جَاءَهُ اليَقِينُ، وَاللَّهِ إِنِّي لَأَرْجُو لَهُ الخَيْرَ، وَاللَّهِ مَا أَدْرِي، وَأَنَا رَسُولُ اللَّهِ، مَا يُفْعَلُ بِي» قَالَتْ: فَوَاللَّهِ لاَ أُزَكِّي أَحَدًا بَعْدَهُ أَبَدًا

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவுக்கு வந்த) முஹாஜிர்களில் யார், எவர் வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்டிருந்த போது உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரது உடல் நீராட்டப்பட்டு அவரது ஆடையிலேயே கஃபனிப்பட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), "ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சியம் கூறுகிறேன்'' எனக் கூறினேன். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது, உனக்கெப்படித் தெரியும்?'' என்று கேட்டார்கள். "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத் தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?'' என நான் கேட்டேன். அதற்கு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இவர் இறந்து விட்டார். எனவே அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே நான் விரும்புகின்றேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் எனது நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள். "அல்லாஹ்வின் மீதாணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை.''

நூல்: புகாரி 1243

உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் மிக நல்லவராகவும், வணக்கசாலியாகவும் வாழ்ந்தார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் எனும் தியாகப் பயணத்தையும் மேற்கொண்டவர்கள். அன்னார் மரணித்த போது அவர்களோடு பல காலம் நட்பு கொண்ட, அவர்களுடைய நல்லொழுக்கங்களை அவர்களோடு இருந்து அறிந்து கொண்ட உம்முல் அலா அவர்கள், "அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சியம் கூறுகிறேன்' எனக் கூறுகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கடுமையாகக் கண்டிக்கிறார்கள்.

நம்முடைய பார்வைக்கு நல்லவராக இருந்தாலும் அவர் நிலை என்னவென்று நாம் தீர்மானிக்க இயலாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட ஒரு நபித்தோழரின் நிலையை அறிய முடியாது என்றால் இன்று நாம் அவ்லியாக்கள் என்று பட்டம் சூட்டுகின்றோமே இது எந்த வகையில் சரியானது?

தனக்கு அறிமுகமான ஒரு நபித்தோழர் குறித்து இன்னொரு நபித்தோழர் இறைநேசர் என்று கூறியது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் கண்டிக்கப்பட்டு இருக்கும் போது நமக்கு எந்த அறிமுகமும் இல்லாத, நம்முடைய காலத்தில் வாழாத ஒருவரை இறைநேசர் என்று பட்டம் சூட்டுவது சரிதானா?

ஒரு நபித்தோழர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இணைந்து போரிட்டார். அப்போரில் அவர் கொல்லப்பட்டார். அவர் சொர்க்கவாசி என்று நபித்தோழர்கள் கூறியதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

صحيح مسلم

323 - حَدَّثَنِى زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ قَالَ حَدَّثَنِى سِمَاكٌ الْحَنَفِىُّ أَبُو زُمَيْلٍ قَالَ حَدَّثَنِى عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ قَالَ حَدَّثَنِى عُمَرُ بْنُ الْخَطَّابِ قَالَ لَمَّا كَانَ يَوْمُ خَيْبَرَ أَقْبَلَ نَفَرٌ مِنْ صَحَابَةِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقَالُوا فُلاَنٌ شَهِيدٌ فُلاَنٌ شَهِيدٌ حَتَّى مَرُّوا عَلَى رَجُلٍ فَقَالُوا فُلاَنٌ شَهِيدٌ. فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « كَلاَّ إِنِّى رَأَيْتُهُ فِى النَّارِ فِى بُرْدَةٍ غَلَّهَا أَوْ عَبَاءَةٍ »

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் போர் தினத்தன்று நபித்தோழர்களில் சிலர் "இன்னார் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆகி விட்டார், இன்னார் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்' என்று கூறிக் கொண்டே வந்து இறுதியாக ஒரு மனிதரைப் பற்றி "இன்னாரும் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்' என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இல்லை! (போர்ச்செல்வங்கள் பங்கிடப்படும் முன் அவற்றிலிருந்து) கோடுபோட்ட வண்ணப் போர்வை ஒன்றை அவர் எடுத்துக் கொண்ட காரணத்தால் அவரை நான் நரகத்தில் கண்டேன் (எனவே அவரை உயிர்த்தியாகி என்று கூறாதீர்கள்)'' என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம்

இது போல் அமைந்த மற்றொரு ஹதீஸைப் பாருங்கள்!

صحيح البخاري

2898 - حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، التَقَى هُوَ وَالمُشْرِكُونَ، فَاقْتَتَلُوا، فَلَمَّا مَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عَسْكَرِهِ، وَمَالَ الآخَرُونَ إِلَى عَسْكَرِهِمْ، وَفِي أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، لاَ يَدَعُ لَهُمْ شَاذَّةً وَلاَ فَاذَّةً إِلَّا اتَّبَعَهَا يَضْرِبُهَا بِسَيْفِهِ، فَقَالَ: مَا أَجْزَأَ مِنَّا اليَوْمَ أَحَدٌ كَمَا أَجْزَأَ فُلاَنٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا إِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ»، فَقَالَ رَجُلٌ مِنَ القَوْمِ: أَنَا صَاحِبُهُ، قَالَ: فَخَرَجَ مَعَهُ كُلَّمَا وَقَفَ وَقَفَ مَعَهُ، وَإِذَا أَسْرَعَ أَسْرَعَ مَعَهُ، قَالَ: فَجُرِحَ الرَّجُلُ جُرْحًا شَدِيدًا، فَاسْتَعْجَلَ المَوْتَ، فَوَضَعَ نَصْلَ سَيْفِهِ بِالأَرْضِ، وَذُبَابَهُ بَيْنَ ثَدْيَيْهِ، ثُمَّ تَحَامَلَ عَلَى سَيْفِهِ، فَقَتَلَ نَفْسَهُ، فَخَرَجَ الرَّجُلُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللَّهِ، قَالَ: «وَمَا ذَاكَ؟» قَالَ: الرَّجُلُ الَّذِي ذَكَرْتَ آنِفًا أَنَّهُ مِنْ أَهْلِ النَّارِ، فَأَعْظَمَ النَّاسُ ذَلِكَ، فَقُلْتُ: أَنَا لَكُمْ بِهِ، فَخَرَجْتُ فِي طَلَبِهِ، ثُمَّ جُرِحَ جُرْحًا شَدِيدًا، فَاسْتَعْجَلَ المَوْتَ، فَوَضَعَ نَصْلَ سَيْفِهِ فِي الأَرْضِ وَذُبَابَهُ بَيْنَ ثَدْيَيْهِ ثُمَّ تَحَامَلَ عَلَيْهِ فَقَتَلَ نَفْسَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ: «إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ عَمَلَ أَهْلِ الجَنَّةِ، فِيمَا يَبْدُو لِلنَّاسِ، وَهُوَ مِنْ أَهْلِ النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ عَمَلَ أَهْلِ النَّارِ، فِيمَا يَبْدُو لِلنَّاسِ، وَهُوَ مِنْ أَهْلِ الجَنَّةِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், இணை வைப்போரும் (கைபர் போர்க்களத்தில்) சந்தித்துப் போரிட்டுக் கொண்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் படையின் பக்கம் சென்று விட மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்றுவிட்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர் (எதிரிகளில்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் (அதாவது எதிர்த்து நிற்பவர், பணிந்து செல்பவர் என்று) எவரையும் விட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண்டிருந்தார். (அவரது துணிச்சலான போரைக் கண்ட) நபித்தோழர்கள், "இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை'' என்று (வியந்து) கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அவர் நரகவாசியாவார்'' என்று கூறினார்கள். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதர், (அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு) நான் அவருடன் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். (ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வாளின் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். (இதை உடனிருந்து கண்காணித்துவிட்டு) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, "தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன்'' என்று சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "என்ன விஷயம்?'' என்று கேட்டார்கள். அவர், "சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி "அவர் நரகவாசி' என்று கூறினீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். நான் (மக்களிடம்), "உங்களுக்காக (அவரது நிலைகளை அறிந்து வர) நான் அவருடன் போய் வருகிறேன்'' என்று கூறிவிட்டு, அவரைத் தேடிப் புறப்பட்டேன். அவர் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார். உடனே, அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்பி, வாளின் பிடிமுனையை பூமியில் நட்டு, அதன் கூர்முனையைத் தன் இரு மார்புகளுக்கிடையே வைத்து, அதன் மீது தன்னை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்'' என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் சஅத் (ரலி)

நூல்: புகாரி 2898

உயிரைத் தியாகம் செய்வதற்கு நிகரான நல்லறம் ஏதும் இல்லை. அத்தகைய ஷஹீதுகள் குறித்து நபித்தோழர்கள் எடுத்த முடிவு தவறாகி விட்டதென்றால் நாம் கொடுக்கும் மகான்கள் பட்டம் எப்படிச் சரியாக இருக்க முடியும்?

வெளிப்பார்வைக்கு நல்லவராகத் தெரிபவர்கள் எல்லாம் நல்லவர்கள் அல்லர்; வெளிப்பார்வைக்குக் கெட்டவர்களாகத் தெரிந்தவர்கள் எல்லாம் கெட்டவர்களும் அல்லர் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறிவுறை, ஒருவரை நல்லடியார் என்று கூற நாம் அந்த அளவு அஞ்ச வேண்டும் என்பதற்குப் போதிய ஆதாரமாகும்

குளிக்காதவர், பல் துலக்காதவர், ஜடா முடி வளர்த்தவர், மஸ்தானாக (போதையாக) திரிந்தவர், தலைவாரிக் கொள்ளாமல் அலங்கோலமாக வருபவர், பீடி அடிப்பவர் போன்றவர்களுக்கெல்லாம் அவ்லியா பட்டம் கொடுப்பது கொடுமையிலும் கொடுமை.

நல்லடியார்களைக் கண்டுபிடிக்கும் ஆற்றலை அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்குவதாக இருந்தால் தனது தூதராகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கி இருப்பான். ஆனால் வஹீயின் மூலம் அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தவர்கள் தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நல்லடியார் என்று கருதப்பட்ட சிலர் கெட்டவர்களாக இருந்துள்ளனர்.

صحيح البخاري

2680 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ، عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّكُمْ تَخْتَصِمُونَ إِلَيَّ، وَلَعَلَّ بَعْضَكُمْ أَلْحَنُ بِحُجَّتِهِ مِنْ بَعْضٍ، فَمَنْ قَضَيْتُ لَهُ بِحَقِّ أَخِيهِ شَيْئًا، بِقَوْلِهِ: فَإِنَّمَا أَقْطَعُ لَهُ قِطْعَةً مِنَ النَّارِ فَلاَ يَأْخُذْهَا "

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் என்னிடம் வழக்குகளைக் கொண்டு வருகிறீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரை விட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கக் கூடும். ஆகவே, எவரது (சாதுர்யமான) சொல்லை வைத்து அவரது சகோதரனின் உரிமையில் சிறிதை (அவருக்குரியது) என்று தீர்ப்பளித்து விடுகின்றேனோ அவருக்கு நான் நரக நெருப்பின் ஒரு துண்டைத் தான் துண்டித்துக் கொடுக்கிறேன். ஆகவே, அவர் அதை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)

நூல்: புகாரி 2680

தம்மிடம் வழக்குகள் கொண்டு வரப்படும் போது வெளிப்படையான வாதங்களையும், ஆதாரங்களையும் வைத்துத் தீர்ப்பளிப்பதாகவும், சில நேரங்களில் அந்தத் தீர்ப்பு தவறாக அமைந்து விடும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள்.

அதாவது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரை நல்லவர்கள் என்று கருதினார்களோ அவர்களில் சிலர் கெட்டவர்களாகவும், கெட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் சிலர் நல்லவர்களாகவும் இருப்பார்கள். தன் முன்னால் நின்று வழக்குரைக்கும் இருவரில் யார் உண்மையாளர் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் கண்டுபிடிக்க முடியாது என்றால் மற்றவர்களுக்கு அது இயலுமா?

மனிதர்களின் உள்ளத்தில் இருப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிபவர்களாக இருந்தால் அவ்விருவரில் யார் பொய் சொல்கிறார், யார் உண்மை சொல்கிறார் என்பதை அறிந்து அவர்களிடம் விசாரணை செய்யாமல் அந்தப் பொருள் யாருக்குரியதோ அவரிடம் கொடுத்திருப்பார்கள். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் கூட நல்லவர் யார்? கெட்டவர் யார்? என்பதை அறிய முடியவில்லை என்பதற்கு இந்தச் செய்தி சான்றாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடைய வாழ்நாளில் எத்தனையோ பேருக்கு இப்படித் தீர்ப்பளித்திருப்பார்கள். எத்தனையோ நல்லவர்களை, கெட்டவர்கள் என்று முடிவு செய்திருப்பார்கள். எத்தனையோ கெட்டவர்களை நல்லவர்கள் என்று முடிவு செய்திருப்பார்கள். இவ்வாறிருக்க நாம் எப்படி ஒருவரை அவ்லியா, இறைநேசர், மகான் என்று கண்டுபிடிக்க முடியும்?

அவ்வாறு முடியும் என்று சொன்னால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விட நமக்கு அதிகமான அறிவு ஞானம் இருக்கிறது என்றாகி விடாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரியாதது எங்களுக்குத் தெரியும்; உள்ளத்தில் உள்ளதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கண்டுபிடிக்கத் தெரியாது; ஆனால் எங்களுக்குக் கண்டுபிடிக்கத் தெரியும் என்றாகி விடாதா?

இதை நாம் புரிந்து கொண்டால் நாம் யாரையும் அவ்லியா என்றோ, மகான் என்றோ சொல்ல மாட்டோம்.

صحيح البخاري

3064 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، وَسَهْلُ بْنُ يُوسُفَ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَاهُ رِعْلٌ، وَذَكْوَانُ، وَعُصَيَّةُ، وَبَنُو لَحْيَانَ، فَزَعَمُوا أَنَّهُمْ قَدْ أَسْلَمُوا، وَاسْتَمَدُّوهُ عَلَى قَوْمِهِمْ، «فَأَمَدَّهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعِينَ مِنَ الأَنْصَارِ»، قَالَ أَنَسٌ: كُنَّا نُسَمِّيهِمُ القُرَّاءَ، يَحْطِبُونَ بِالنَّهَارِ وَيُصَلُّونَ بِاللَّيْلِ، فَانْطَلَقُوا بِهِمْ، حَتَّى بَلَغُوا بِئْرَ مَعُونَةَ، غَدَرُوا بِهِمْ وَقَتَلُوهُمْ، فَقَنَتَ شَهْرًا يَدْعُو عَلَى رِعْلٍ، وَذَكْوَانَ، وَبَنِي لَحْيَانَ، قَالَ قَتَادَةُ: وَحَدَّثَنَا أَنَسٌ: أَنَّهُمْ قَرَءُوا بِهِمْ قُرْآنًا: أَلاَ بَلِّغُوا عَنَّا قَوْمَنَا، بِأَنَّا قَدْ لَقِيَنَا رَبَّنَا، فَرَضِيَ عَنَّا وَأَرْضَانَا، ثُمَّ رُفِعَ ذَلِكَ بَعْدُ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ரிஅல், தக்வான், உஸய்யா, பனூ லஹ்யான் ஆகிய குலத்தார் (சிலர்) வந்து, தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டதாகக் கூறினர். மேலும், தமது சமுதாயத்தினரை நோக்கி ஒரு படையனுப்பி உதவும்படியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அன்சாரிகளிலிருந்து எழுபது பேரை அனுப்பி அவர்களுக்கு உதவினார்கள். அவர்களை நாங்கள் காரீகள் (குர்ஆனை மனனம் செய்து முறைப்படி ஓதுவோர்) என்று அழைத்து வந்தோம். அவர்கள் பகல் நேரத்தில் விறகு சேகரிப்பார்கள்; இரவு நேரத்தில் தொழுவார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு அந்தக் குலத்தார் சென்றனர். இறுதியில், மவூனா என்ற கிணற்றை அவர்கள் அடைந்தவுடன் முஸ்லிம்களை ஏமாற்றிக் கொன்று விட்டனர். உடனே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மாதம் (முழுவதும்) ரிஅல், தக்வான், பனூ லிஹ்யான் ஆகிய குலங்களுக்கு எதிராகப் பிரார்த்தனை செய்தார்கள். (கொல்லப்பட்ட) அந்த எழுபது பேரைக் குறித்து (அவர்கள் சொல்வதாக அருளப்பட்ட) ஓர் இறை வசனத்தை குர்ஆனில் நாங்கள் ஓதி வந்தோம்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி3064

மேலும் இந்த ஹதீஸ் புகாரியில் 1002, 3170, 4088, 4090, 4096 ஆகிய இலக்கங்களிலும் பதிவாகியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்த நான்கு கூட்டத்தாரும் வஞ்சகர்கள் என்பதும், துரோகம் செய்யப் போகிறார்கள் என்பதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களை முஸ்லிம்கள் என்று நம்பியுள்ளார்கள்.

எழுபது முஸ்லிம்களைக் கொன்ற பிறகு தான் அந்தக் கூட்டத்தினர் கெட்டவர்கள் என்பது அவர்களுக்குத் தெரிய வருகிறது. எழுபது பேரையும் அழைத்துச் சென்று வஞ்சமாகக் கொலை செய்யவே இவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை முதலிலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிந்திருந்தால், அந்தக் கூட்டத்தினரைக் கைது செய்திருப்பார்கள்.

ஓரிருவர் அல்ல; எழுபது நபர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றால் இது சாதாரணமான விஷயம் அல்ல. கொல்லப்பட்ட எழுபது தோழர்களும் குர்ஆனை நன்கு மனனம் செய்தவர்கள். குர்ஆனை மிகவும் அறிந்த ஆலிம்கள். மார்க்க அறிஞர்களாக இருந்த ஸஹாபாக்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தகைய ஸஹாபாக்களை முத்துக்களைப் போல பொறுக்கி எடுத்து அவர்களுடன் அனுப்பி வைக்கிறார்கள். நல்லவர்கள் என்ற நம்பிக்கையுடன், பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் எதுவும் எடுக்காமல் வெறுங்கையுடன் சென்ற அந்த எழுபது பேரையும் நம்ப வைத்து அந்தத் துரோகிகள் கழுத்தை அறுத்திருக்கிறார்கள்.

நான்கு குலத்தார்களையும் நல்லவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கணித்தது தவறாக ஆகிவிட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், மற்ற ஸஹாபாக்களும் யாரை முஸ்லிம்கள் என்றும், நல்லவர்கள் என்றும் நினைத்தார்களோ அவர்கள் கெட்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய வெளிப்படையான தோற்றத்தை வைத்து நல்லவர்கள் என நம்பி ஏமாந்துள்ளார்கள்.

வஹீயின் மூலம்தான் அந்த எழுபது பேரும் கொல்லப்பட்டது அவர்களுக்குத் தெரிந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே ஒரு கூட்டம் ஏமாற்ற முடியும் என்றால், நம்மைப் போன்ற சாதாரண மக்களை ஏமாற்ற முடியாதா?

தர்காக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் எல்லாம் மகான்கள் என்று நாம் நம்புகிறோமே நாம் எப்படி இதைக் கண்டுபிடித்தோம்? அல்லாஹ்வின் தூதரால் கண்டுபிடிக்க முடியாததை நாம் கண்டுபிடித்து விட முடியுமா?

இன்னும் சில சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் இதே போன்று நடந்துள்ளது.

صحيح البخاري

3018 - حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَهْطًا مِنْ عُكْلٍ، ثَمَانِيَةً، قَدِمُوا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاجْتَوَوْا المَدِينَةَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ ابْغِنَا رِسْلًا، قَالَ: «مَا أَجِدُ لَكُمْ إِلَّا أَنْ تَلْحَقُوا بِالذَّوْدِ»، فَانْطَلَقُوا، فَشَرِبُوا مِنْ أَبْوَالِهَا وَأَلْبَانِهَا، حَتَّى صَحُّوا وَسَمِنُوا، وَقَتَلُوا الرَّاعِيَ وَاسْتَاقُوا الذَّوْدَ، وَكَفَرُوا بَعْدَ إِسْلاَمِهِمْ، فَأَتَى الصَّرِيخُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَعَثَ الطَّلَبَ، فَمَا تَرَجَّلَ النَّهَارُ حَتَّى أُتِيَ بِهِمْ، فَقَطَّعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ، ثُمَّ أَمَرَ بِمَسَامِيرَ فَأُحْمِيَتْ فَكَحَلَهُمْ بِهَا، وَطَرَحَهُمْ بِالحَرَّةِ، يَسْتَسْقُونَ فَمَا يُسْقَوْنَ، حَتَّى مَاتُوا، قَالَ أَبُو قِلاَبَةَ: قَتَلُوا وَسَرَقُوا وَحَارَبُوا اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَسَعَوْا فِي الأَرْضِ فَسَادًا

"உக்ல்'' குலத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் கொண்ட குழு ஒன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தது. அவர்களுக்கு மதீனாவின் சூழல் ஒத்துக் கொள்ளவில்லை. ஆகவே அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குச் சிறிது (ஒட்டகப்) பால் கொடுத்து உதவுங்கள்'' என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நீங்கள் ஒட்டக மந்தையை அணுகுவதைத் தவிர வேறு வழியை நான் காணவில்லை'' என்று பதிலளித்தார்கள். உடனே, (ஸகாத்தாகப் பெறப்பட்டிருந்த ஓர் ஒட்டக மந்தையை நோக்கி) அவர்கள் சென்றார்கள். அதன் சிறுநீரையும், பாலையும் குடித்தார்கள். (அதனால்) உடல் நலம் பெற்றுப் பருமனாக ஆனார்கள். மேலும், ஒட்டகம் மேய்ப்பவரைக் கொன்றுவிட்டு, ஒட்டகங்களை ஓட்டிச் சென்று விட்டார்கள்; இஸ்லாத்தை ஏற்ற பின் நிராகரித்து விட்டார்கள் என்று ஒருவர் இரைந்து சத்தமிட்ட படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "உக்ல்' குலத்தாரைத் தேடிப் பிடித்து வர ஒரு குழுவினரை அனுப்பி வைத்தார்கள். பகல், உச்சிக்கு உயர்வதற்குள் அவர்கள் (பிடித்துக்) கொண்டு வரப்பட்டனர். அவர்களுடைய கைகளையும் கால்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் துண்டித்தார்கள். பிறகு, ஆணிகளைக் கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை (கொண்டு வரப்பட்டு) பழுக்கக் காய்ச்சப்பட்டன. அவற்றால் அவர்களுடைய கண் இமைகளின் ஓரங்களில் சூடிட்டார்கள். அவர்களை (கருங்கற்கள் நிறைந்த) "ஹர்ரா' எனுமிடத்தில் எறிந்து விட்டார்கள். அவர்கள் (தாகத்தால்) தண்ணீர் கேட்டும் இறக்கும் வரை அவர்களுக்குத் தண்ணீர் புகட்டப்படவில்லை.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 3018

மேலும் இந்தச் செய்தி புகாரியில் 1051, 4192, 4610, 5685, 5686, 5728, 6802, 6804, 6805, 6899 ஆகிய இலக்கங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தக் கூட்டத்தினர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக வரவில்லை. ஒட்டகத்தைத் திருடுவதற்காகத் தான் வந்தனர். நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டோம் என்று பொய் சொன்னார்கள். இவர்கள் நடிக்கிறார்கள் என்பதை அறியக் கூடியவர்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்தால் ஏமாந்திருக்க மாட்டார்கள். ஒரு காவலரைப் பலி கொடுத்திருக்கவும் மாட்டார்கள். ஒட்டகத்தையும் இழந்திருக்க மாட்டார்கள். அவர்கள் துரோகம் செய்த பிறகுதான் இவர்கள் துரோகிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிகிறது.

இதை நாம் எதற்காக இங்கே சுட்டிக்காட்டுகிறோம் என்றால் நாம் ஒருவரை அவ்லியா என்று நினைத்து, அவருக்கு விழா நடத்துகிறோம். கந்தூரி கொண்டாடுகிறோம். அவர் அவ்லியா என்பதற்கு என்ன ஆதாரம்? அவரை அவ்லியா என்று சொன்னது யார்? அவ்லியா என்ற ஒருவர் இந்தக் கப்ரில் அடங்கியிருக்கிறாரா? அப்படி ஒருவர் இந்த உலகத்தில் வாழ்ந்தாரா? அப்படியே வாழ்ந்து அவர் நல்ல செயல்களைத் தான் செய்தார் என்று நீங்கள் பார்த்தீர்களா? அப்படியே நல்ல செயல் செய்தாலும், அதை வெளிப்படையாகச் செய்திருக்கலாம். ஆனால் அது அவருடைய உள்ளத்தில் இருந்ததா? அல்லது நல்லவனைப் போல் நடிப்பதற்காகச் செய்தாரா? இது போன்ற ஏராளமான கேள்விகள் இதில் எழுகின்றன.

அவ்லியா பட்டம் கொடுப்போர் இந்தக் கேள்விகளுக்கு அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்.

விஷம் கலந்த உணவை உண்ணச் செய்த யூதப் பெண்

صحيح البخاري

2617 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الحَارِثِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ يَهُودِيَّةً أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ مَسْمُومَةٍ، فَأَكَلَ مِنْهَا، فَجِيءَ بِهَا فَقِيلَ: أَلاَ نَقْتُلُهَا، قَالَ: «لاَ»، فَمَا زِلْتُ أَعْرِفُهَا فِي لَهَوَاتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

யூதப் பெண் ஒருத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விஷம் கலந்த ஆட்டிறைச்சியை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். "அவளைக் கொன்று விடுவோமா?'' என்று கேட்கப்பட்டது. அவர்கள், "வேண்டாம்'' என்று கூறி விட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 2617

நல்லவள் என நம்பித்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைச்சியை வாங்கிச் சாப்பிட்டார்கள். தன்னைக் கொல்வதற்காக இதைத் தருகிறாள் என அவர்களால் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது.

அப்படியானால் நாம் கொடுக்கும் அவ்லியா பட்டத்தின் நிலை என்னவாகும்?

வெளிப்படையாக எவன் நல்ல செயல் செய்கிறானோ அவன் நம் பார்வையில் நல்லவனாகத் தென்படுவான். உள்ளமும் பரிசுத்தமாக இருந்தால் தான் அல்லாஹ்விடத்தில் ஒருவன் நல்லவனாக முடியும்.

صحيح البخاري

3349 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنَا المُغِيرَةُ بْنُ النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " إِنَّكُمْ مَحْشُورُونَ حُفَاةً عُرَاةً غُرْلًا، ثُمَّ قَرَأَ: {كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ} [الأنبياء: 104]، وَأَوَّلُ مَنْ يُكْسَى يَوْمَ القِيَامَةِ إِبْرَاهِيمُ، وَإِنَّ أُنَاسًا مِنْ أَصْحَابِي يُؤْخَذُ بِهِمْ ذَاتَ الشِّمَالِ، فَأَقُولُ أَصْحَابِي أَصْحَابِي، فَيَقُولُ: إِنَّهُمْ لَمْ يَزَالُوا مُرْتَدِّينَ عَلَى أَعْقَابِهِمْ مُنْذُ فَارَقْتَهُمْ، فَأَقُولُ كَمَا قَالَ العَبْدُ الصَّالِحُ ": {وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي} [المائدة: 117]- إِلَى قَوْلِهِ - {العَزِيزُ الحَكِيمُ} [البقرة: 129]

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

நீங்கள் செருப்பு அணியாதவர்களாகவும், நிர்வாணமானவர்களாகவும், கத்னா செய்யப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள். பிறகு, நாம் முதன் முதலாகப் படைத்ததைப் போன்றே அதை மீண்டும் படைப்போம். இது நமது வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்யவிருக்கின்றோம்'' (21:104) என்னும் இறைவசனத்தை ஓதினார்கள். மறுமை நாளில் (நபிமார்களில்) முதன் முதலாக ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம் அவர்கள் ஆவர். என் தோழர்களில் சிலர் இடப்பக்கம் (நரகத்தை நோக்கி) கொண்டு செல்லப்படுவார்கள். நான், "இவர்கள் என் தோழர்கள். இவர்கள் என் தோழர்கள்'' என்று (அவர்களை விட்டுவிடும்படி) கூறுவேன். அப்போது, "தாங்கள் இவர்களைப் பிரிந்(து மரணித்)ததிலிருந்து இவர்கள் தம் மார்க்கத்தை விட்டு விலகி, தாம் வந்த சுவடுகளின் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்'' என்று கூறுவார்கள். அப்போது, நல்லடியார் (ஈஸா நபி) கூறியதைப் போல், "நான் அவர்களோடு இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களையும் கண்காணிப்பவனாக இருந்தாய். மேலும், நீ (இப்போது) அவர்களுக்கு தண்டனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன் அடிமைகளே. நீ அவர்களை மன்னித்தால் நீயே யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய்'' என்னும் (5:117-118) இறைவசனத்தை (பதிலாகக்) கூறுவேன்.

நூல்: புகாரி 3349

மேலும் இந்தச் செய்தி புகாரியில் 3447, 4740 ஆகிய இலக்கங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், "என்னுடைய சமுதாயத்தாரில் சிலர் கொண்டு வரப்பட்டு அவர்கள் இடப்பக்கம் (நரகத்தை நோக்கிக்) கொண்டு செல்லப்படுவர். அப்போது நான், "என் இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்'' என்று சொல்வேன். அதற்கு, "இவர்கள் உங்களு(டைய இறப்பு)க்குப் பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது'' என்று சொல்லப்படும். அப்போது நான், நல்லடியார் ஈஸா (அலை) அவர்கள் சொன்னதைப் போல் "நான் அவர்களிடையே (வாழ்ந்துகொண்டு) இருந்தவரை நான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னை அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண்காணிப்பவன் ஆகிவிட்டாய்'' என்று பதிலளிப்பேன். அதற்கு, "இவர்களை நீங்கள் பிரிந்து வந்ததிலிருந்து இவர்கள் தங்கள் குதிகால்(சுவடு)களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து விலகிச் சென்று கொண்டேயிருந்தார்கள்'' என்று கூறப்படும் (புகாரி 4740) என்று இடம்பெற்றுள்ளது.

மற்றொரு அறிவிப்பில், "அவர்கள் என்னைச் சர்ந்தவர்கள் தாம்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதற்கு, "உங்களுக்குப் பிறகு என்னவெல்லாம் புதிதாக உண்டாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது'' என்று சொல்லப்படும். உடனே நான், "எனக்குப் பிறகு (தமது மார்க்கத்தை) மாற்றி விட்டவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அப்புறப்படுத்துவானாக!'' என்று சொல்வேன் (புகாரி 7051) என்று இடம்பெற்றுள்ளது.

மேலே சொன்ன மூன்று ஹதீஸ்களிலும் மார்க்கத்தை விட்டுத் தடம்புரண்டு சென்றவர்களையெல்லாம் நல்லடியார்கள் என்று நினைத்து, அதே நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணம் அடைந்திருக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரை நல்லவர்கள் என்று நினைத்தார்களோ அவர்களைப் பற்றிய தமது கணிப்பை மறுமையில் வெளிப்படுத்தும் போது அது தவறான கணிப்பு என்று அவர்களுக்குத் தெரியவருகிறது.

யஃகூப் (அலை) அவர்களுக்கு யூசுப் நபியைச் சேர்த்து மொத்தம் 12 பிள்ளைகள். இதில் 11 பேரும் திட்டம் போட்டு, தங்களுடைய தந்தையை ஏமாற்றி, "யூசுப் நபியை எங்களுடன் அனுப்பி வையுங்கள்; நாங்கள் பத்திரமாகத் திரும்ப அழைத்து வருகின்றோம்'' என்று கூறி அழைத்துச் சென்று அவரைக் கிணற்றில் தள்ளி விடுகின்றார்கள். இந்த விஷயம் அவர்களின் தந்தை யஃகூப் நபியவர்களுக்குத் தெரியவில்லை.

பெற்ற பிள்ளைகளே தங்களுடைய மனதில் கெட்ட எண்ணம் கொண்டுள்ளார்கள் என்ற விஷயத்தை அவர்களால் அறிய முடியாமல் போய் விட்டது. இதன் முழு விபரத்தை திருக்குர்ஆனின் 12வது அத்தியாயமான சூரா யூசுப் என்ற அத்தியாயத்தில் காணலாம்.

பெற்ற பிள்ளைகளின் கபடத்தை இறைத் தூதரான யாகூப் நபியால் அறிய முடியவில்லை என்றால் என்றோ அடக்கம் செய்யப்பட்டவர்கள் குறித்து சொல்லப்படும் கதைகளை நம்பி அவ்லியா பட்டம் கொடுக்க முடியுமா? இது அல்லாஹ்வுக்குக் கோபத்தை ஏற்படுத்தாதா?

ஒருவருடைய வெளித்தோற்றத்தை வைத்து நல்லவர், கெட்டவர் என்று நம்மளவில் கூறிக் கொன்டாலும் அவர்கள் உண்மையில் நல்லடியார்கள் என்று தீர்மானித்துச் சொல்ல இயலாது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

صحيح مسلم ـ

5032 - حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِىُّ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ حَدَّثَنِى يُونُسُ بْنُ يُوسُفَ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ قَالَ تَفَرَّقَ النَّاسُ عَنْ أَبِى هُرَيْرَةَ فَقَالَ لَهُ نَاتِلُ أَهْلِ الشَّامِ أَيُّهَا الشَّيْخُ حَدِّثْنَا حَدِيثًا سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ نَعَمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « إِنَّ أَوَّلَ النَّاسِ يُقْضَى يَوْمَ الْقِيَامَةِ عَلَيْهِ رَجُلٌ اسْتُشْهِدَ فَأُتِىَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا قَالَ فَمَا عَمِلْتَ فِيهَا قَالَ قَاتَلْتُ فِيكَ حَتَّى اسْتُشْهِدْتُ. قَالَ كَذَبْتَ وَلَكِنَّكَ قَاتَلْتَ لأَنْ يُقَالَ جَرِىءٌ. فَقَدْ قِيلَ. ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِىَ فِى النَّارِ وَرَجُلٌ تَعَلَّمَ الْعِلْمَ وَعَلَّمَهُ وَقَرَأَ الْقُرْآنَ فَأُتِىَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا قَالَ فَمَا عَمِلْتَ فِيهَا قَالَ تَعَلَّمْتُ الْعِلْمَ وَعَلَّمْتُهُ وَقَرَأْتُ فِيكَ الْقُرْآنَ. قَالَ كَذَبْتَ وَلَكِنَّكَ تَعَلَّمْتَ الْعِلْمَ لِيُقَالَ عَالِمٌ. وَقَرَأْتَ الْقُرْآنَ لِيُقَالَ هُوَ قَارِئٌ. فَقَدْ قِيلَ ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِىَ فِى النَّارِ. وَرَجُلٌ وَسَّعَ اللَّهُ عَلَيْهِ وَأَعْطَاهُ مِنْ أَصْنَافِ الْمَالِ كُلِّهِ فَأُتِىَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا قَالَ فَمَا عَمِلْتَ فِيهَا قَالَ مَا تَرَكْتُ مِنْ سَبِيلٍ تُحِبُّ أَنْ يُنْفَقَ فِيهَا إِلاَّ أَنْفَقْتُ فِيهَا لَكَ قَالَ كَذَبْتَ وَلَكِنَّكَ فَعَلْتَ لِيُقَالَ هُوَ جَوَادٌ. فَقَدْ قِيلَ ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ ثُمَّ أُلْقِىَ فِى النَّارِ ».

இறுதித் தீர்ப்பு நாளில், மக்களில் முதன் முதலில் ஷஹீதுக்கே தீர்ப்பு வழங்கப்படும். அல்லாஹ்வின் முன்னால் அவர் கொண்டு வந்து நிறுத்தப்படுவார். அல்லாஹ் அவருக்கு அளித்த அருட்கொடைகளை எல்லாம் சொல்லிக் காட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒத்துக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம் "நான் கொடுத்த அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?'' என்று கேட்பான். அதற்கு அந்த மனிதர், "நான் உனக்காக (வீர) மரணம் அடையும் வரை போராடினேன்'' என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் "நீ பொய் சொல்கிறாய்: வீரன் என்று கூறப்படுவதற்காகவே போரிட்டாய். இவ்வாறே (மக்களாலும் உலகில்) பேசப்பட்டு விட்டது'' என்று கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை அம்மனிதர் முகங்குப்புற விழ இழுத்துச் செல்லும்படி ஆணையிடப்படும். பின்னர் (இஸ்லாமிய) அறிவைக் கற்று, அதனைப் பிறருக்கும் கற்றுக் கொடுத்து, குர்ஆன் ஓதும் வழக்கமுடைய அறிஞர் அல்லாஹ்வின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்படுவார். தான் அவருக்கு அளித்த அருட்கொடைகளை எல்லாம் அல்லாஹ் சொல்லிக் காட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒப்புக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம் "நான் கொடுத்த அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?'' என்று கேட்பான். அதற்கு அந்த மனிதர் "நான் உனக்காக (இஸ்லாமிய) அறிவைக் கற்று, அதனை (பிறருக்கும்) கற்றுக் கொடுத்து, குர்ஆனை உனக்காக ஓதி வந்தேன்'' என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் "நீ பொய் சொல்கிறாய், அறிவாளி என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டுமென்பதற்காகவே இஸ்லாமிய அறிவைக் கற்றாய். குர்ஆனை (நன்றாக) ஓதக் கூடியவர்கள் என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே குர்ஆனை ஓதினாய். அவ்வாறே (மக்களாலும்) பேசப்பட்டு விட்டது'' என்று கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும் வரை அம்மனிதரை முகங்குப்புற விழ இழுத்துச் செல்லும்படி ஆணையிடப்படும். அதன் பின்னர் செல்வந்தர் ஒருவர் அழைக்கப்படுவார். அவருக்கு (உலகில்) அல்லாஹ் தன் அருட்கொடைகளைத் தாராளமாக வழங்கி அனைத்து விதமான செல்வங்களையும் அளித்திருந்தான். அவருக்கு அல்லாஹ் தான் அளித்துள்ள அருட்கொடைகளை நினைவூட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒப்புக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம், "நான் கொடுத்த அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?'' என்று கேட்பான். அதற்கு அந்த மனிதர் "நீ எந்த வழிகளிலெல்லாம் செலவிடப்பட வேண்டும் என்று விரும்பினாயோ அவ்வழிகளில் எதிலும் நான் செலவு செய்யாமல் விட்டதில்லை'' என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் "நீ பொய் சொல்கிறாய். வாரி வாரி வழங்குபவர் என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே நீ அவ்வாறு செய்தாய். அவ்வாறே (உலகில்) சொல்லப்பட்டு விட்டது'' எனக் கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை இம்மனிதரை முகங்குப்புற விழ இழுத்துச் செல்லுமாறு ஆணையிடப்படும்.

நூல்: முஸ்லிம் 3527

உயிர்த் தியாகம் செய்தவரை நல்லடியார் என்று மக்கள் கருதுவார்கள். அவரும் நாம் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டிருக்கிறோம்; அல்லாஹ்விற்காகத் தான் உயிரைத் தியாகம் செய்திருக்கிறோம் என்று நினைத்திருப்பார். ஆனால் அல்லாஹ், "உன்னுடைய உள்ளம் தூய்மையாக இல்லை. நாம் கொல்லப்பட்டால் வரலாற்றில் இடம் பிடிப்போம், நமது பெயர் நிலைத்து நிற்கும், நம்மை தியாகி என்று மக்கள் பாராட்டுவார்கள் என்பதற்காகத் தான் இதைச் செய்தாய்' என்று கூறி அவரை அல்லாஹ் நரகத்தில் தள்ளுகிறான்.

உயிரைத் தியாகம் செய்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல என்பதை நாம் ஒவ்வொருவரும் விளங்கி வைத்திருக்கிறோம். இந்த உலகத்தில் மனிதன் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சொத்து, சுகம் என்று எதையும் இழப்பதற்குத் தயாராக இருக்கிறான். உயிரை விடுவதற்கு யாரும் அவ்வளவு எளிதாக முன்வர மாட்டார்கள்.

ஆனால் தன்னுடைய உயிரையும் தியாகம் செய்த ஒருவருடைய நிலை மறுமையில் அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. உள்ளம் தூய்மையாக இல்லாத காரணத்தினால் இவர் அல்லாஹ்விடத்தில் இறைநேசர் என்னும் சிறப்பை அடைய முடியாதவராக ஆகிவிட்டார்.

நம்முடைய பார்வையில், நபிமார்களுக்கு அடுத்த அந்தஸ்து, பதவி இவருக்குக் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்காமல் போய்விட்டது. இன்று நாம் யாரையெல்லாம் அவ்லியா, இறைநேசர் என்று சொல்கிறோமோ அவர்கள் இந்த உயிர்த் தியாகிக்குச் சமமாவார்களா?

அதுபோல் பொருளாதாரத்தை வாரி வழங்கியவரையும், மார்க்கத்தை மக்களுக்குப் போதித்த அறிஞரையும் அந்தக் கால மக்கள் நல்லவர்கள் என்று தான் கருதி இருப்பார்கள். ஆனால் அல்லாஹ்விடம் அவர்கள் நரகவாசிகள் பட்டியலில் இடம்பெறுகிறார்கள் என்றால் அவ்லியா பட்டம் வழங்கும் வேலை நமக்குத் தேவையா?

இறைநேசர்கள் யார் என்பதை நாம் கண்டுபிடிக்க முடியும் என்ற கருத்துடையோர் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

صحيح البخاري

1367 - حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ صُهَيْبٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: مَرُّوا بِجَنَازَةٍ، فَأَثْنَوْا عَلَيْهَا خَيْرًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَجَبَتْ» ثُمَّ مَرُّوا بِأُخْرَى فَأَثْنَوْا عَلَيْهَا شَرًّا، فَقَالَ: «وَجَبَتْ» فَقَالَ عُمَرُ بْنُ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ: مَا وَجَبَتْ؟ قَالَ: «هَذَا أَثْنَيْتُمْ عَلَيْهِ خَيْرًا، فَوَجَبَتْ لَهُ الجَنَّةُ، وَهَذَا أَثْنَيْتُمْ عَلَيْهِ شَرًّا، فَوَجَبَتْ لَهُ النَّارُ، أَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ فِي الأَرْضِ»

ஒருமுறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்ற போது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "உறுதியாகி விட்டது'' என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "உறுதியாகி விட்டது'' எனக் கூறினார்கள். உமர் (ரலி) "எது உறுதியாகி விட்டது?'' எனக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள்; எனவே இவருக்கு நரகம் உறுதியாகி விட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாவீர்கள்'' எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல்: புகாரி 1367

மக்கள் யாரை இறைநேசர் என்கிறார்களோ அவர்கள் தான் இறைநேசர்கள் என்று இந்த ஹதீஸ் கூறுவதால் இதனடிப்படையில் இறைநேசர்களை நாம் கண்டறிய முடியும் என்று சிலர் வாதிடுகின்றனர்.

இந்த ஹதீஸ் மேலோட்டமாக இக்கருத்தைத் தருகிறது என்றாலும் இதன் சரியான பொருள் மற்றொரு ஹதீஸில் கிடைக்கிறது.

அதைப் பார்ப்பதற்கு முன் இந்த ஹதீஸின் கருத்தை அப்படியே ஏற்றால் ஏற்படக் கூடிய விபரீதங்களை அறிந்து கொள்வோம்.

இறைநேசர்கள் யார் என்பதை மனிதர்கள் கண்டறிய முடியாது என திருக்குர்ஆன் தெளிவுபடக் கூறிய வசனங்களை நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். அந்த வசனங்களுக்கு எதிராக இக்கருத்து அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைநேசர்கள் என்றும், நல்லவர்கள் என்றும் யாரைப் பற்றிக் கூறினார்களோ அவர்களில் சிலர் அல்லாஹ்விடம் நல்லடியார்களாக இருக்க மாட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்திய ஹதீஸ்களை முன்னர் நாம் குறிப்பிட்டுள்ளோம். அந்த ஹதீஸ்களுக்கும் இது முரணாக அமைந்துள்ளது.

மக்களெல்லாம் யாரை ஷஹீத் என்றும், ஆலிம் என்றும், வள்ளல் என்றும் கருதினார்களோ அவர்கள் கெட்டவர்களாகக் கருதப்பட்டு நரகில் போடப்படுவார்கள் என்ற ஹதீஸை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். அந்தக் கருத்துடன் இந்த ஹதீஸ் நேரடியாக மோதுகின்றது.

போர்க்களத்தில் உயிர்த் தியாகம் செய்த தோழரைப் பற்றி எல்லா நபித்தோழர்களும் ஷஹீத் என்று கூற அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுத்தார்கள் என்று இரு ஹதீஸ்களை வெளியிட்டோம். அதற்கு மாற்றமாகவும் இந்த ஹதீஸ் அமைந்துள்ளது.

பெரும்பாலான மக்கள் சொல்வதால் அது சரியாகி விடாது என்று திருக்குர்ஆன் 6:116, 7:187, 12:21, 12:40, 12:68, 16:38, 25:50, 30:6, 30:30, 34:28, 34:36, 40:57, 45:26 ஆகிய வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான். அதற்கு முரணாகவும் இந்த ஹதீஸ் அமைந்துள்ளது.

மேலும் நடைமுறையில் நாம் பார்க்கும் போது கெட்டவர்களைத் தான் மக்கள் பெரும்பாலும் நல்லடியார் என்று கூறுவதைக் காண்கிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றினால் தான் ஒருவர் இறைநேசராக முடியும்.

"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 3:31

நபிவழியைப் புறக்கணித்து துறவறம் பூண்டவர்களையும், குளித்து தூய்மையாக இல்லாதவர்களையும், சடை வளர்த்து திரிபவர்களையும், கஞ்சா அடிக்கும் பீடி மஸ்தான்களையும், தொழுகை உள்ளிட்ட வணக்கங்களை புறக்கணிப்பவர்களையும், மனநோயாளிகளையும் அவ்லியா என்று மக்கள் கூறுவதைப் பார்க்கின்றோம். அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து மார்க்கத்தை அறவே பேணாத பிரமுகர்களை மகான்கள் என்று கொண்டாடுவதை சமீபத்தில் பார்த்தோம்.

மக்கள் இது விஷயத்தில் சரியாக முடிவு எடுப்பதில்லை என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது. அந்த உண்மைக்கு மாற்றமாகவும் இந்த ஹதீஸ் அமைந்துள்ளது.

குர்ஆனுக்கும், வலிமையான பல ஹதீஸ்களுக்கு முரணாக இது இருப்பதால் இதை மறுக்க வேண்டும் என்றாலும், இதற்கு வேறு பொருள் கொடுக்க வழியுள்ளதால் நாம் மறுக்கத் தேவை இல்லை.

صحيح مسلم ـ

2243 - وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَأَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ وَعَلِىُّ بْنُ حُجْرٍ السَّعْدِىُّ كُلُّهُمْ عَنِ ابْنِ عُلَيَّةَ - وَاللَّفْظُ لِيَحْيَى قَالَ حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ - أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ مُرَّ بِجَنَازَةٍ فَأُثْنِىَ عَلَيْهَا خَيْرٌ فَقَالَ نَبِىُّ اللَّهِ -صلى الله عليه وسلم- « وَجَبَتْ وَجَبَتْ وَجَبَتْ ». وَمُرَّ بِجَنَازَةٍ فَأُثْنِىَ عَلَيْهَا شَرٌّ فَقَالَ نَبِىُّ اللَّهِ -صلى الله عليه وسلم- « وَجَبَتْ وَجَبَتْ وَجَبَتْ ». قَالَ عُمَرُ فِدًى لَكَ أَبِى وَأُمِّى مُرَّ بِجَنَازَةٍ فَأُثْنِىَ عَلَيْهَا خَيْرًا فَقُلْتَ وَجَبَتْ وَجَبَتْ وَجَبَتْ. وَمُرَّ بِجَنَازَةٍ فَأُثْنِىَ عَلَيْهَا شَرٌّ فَقُلْتَ وَجَبَتْ وَجَبَتْ وَجَبَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَنْ أَثْنَيْتُمْ عَلَيْهِ خَيْرًا وَجَبَتْ لَهُ الْجَنَّةُ وَمَنْ أَثْنَيْتُمْ عَلَيْهِ شَرًّا وَجَبَتْ لَهُ النَّارُ أَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ فِى الأَرْضِ أَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ فِى الأَرْضِ أَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ فِى الأَرْضِ ».

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான் ஒரு தடவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்த போது ஒரு ஜனாஸா கடந்து சென்றது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இது யார்?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், இது இன்னாருடைய ஜனாஸா என்றும், இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிப்பவராகவும், அல்லாஹ்விற்கு வழிப்பட்டு நல்லமல்கள் செய்பவராகவும், அதற்கு முயற்சிப்பவராகவும் இருந்தார் என்றும் கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது'' என்று கூறினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு செல்லப்பட்டது. அப்போது மக்கள், இது இன்னாருடைய ஜனாஸா என்றும் இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் வெறுப்பவராகவும், இறைவனுக்கு மாறு செய்யும் காரியங்களைச் செய்பவராகவும் அதற்கு முயற்சிப்பவராகவும் இருந்தார் என்றும் கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது'' என்று கூறினார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! முதலாவது ஜனாஸாவை மக்கள் புகழ்ந்த போதும் உறுதியாகி விட்டது என்றீர்கள். மற்றொன்றை மக்கள் இகழ்ந்த போதும் உறுதியாகி விட்டது என்றீர்கள் (அதன் விளக்கம் என்ன?)'' என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "பூமியில் அல்லாஹ்விற்கென்று சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் ஒரு மனிதன் நல்லவனா கெட்டவனா என்பதில் மக்களின் நாவுகளில் பேசுகிறார்கள்'' என்று கூறினார்கள்.

நூல்: ஹாகிம்

நல்லவர்கள் என்றும், கெட்டவர்கள் என்றும் மக்கள் கூறியது அவர்களின் சொந்தக் கருத்து அல்ல. வானவர்கள் அம்மக்களின் நாவுகளில் பேசியதால் அந்தத் தீர்ப்பு சரியாக இருந்தது என்று இந்த ஹதீஸ் விளக்குகிறது.

யாருடைய நாவுகளில் வானவர்கள் பேசுகிறார்கள் என்பதை நாம் கண்டுபிடிக்க முடியாது. அது அல்லாஹ்வின் தூதருக்கு மட்டும் அல்லாஹ் கொடுத்த ஞானமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பல நபித்தோழர்கள் ஷஹீத் என்று சிலருக்குப் பட்டம் சூட்டிய போது அது வானவர்கள் பேசியது அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்ததால் அவர்களை நரகவாசிகள் என்று அவர்கள் கூறினார்கள்.

மேற்கண்ட இரு ஜனாஸாக்கள் பற்றி மக்களின் நாவுகளில் வானவர்கள் பேசுகிறார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்ததால் உறுதியாகி விட்டது என்றார்கள் என்று இந்த ஹதீஸில் இருந்து நாம் விளங்கலாம்.

மனிதர்களின் நாவுகளில் வானவர்கள் பேசுகிறார்களா என்பதை அறிந்து கொள்ளும் நிலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துடன் முடிந்து விட்டது. நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின் உலகமே சேர்ந்து ஒருவரை ந்ல்லடியார் என்று கூறினாலும் அவர் அல்லாஹ்விடம் நல்லடியார் பட்டியலில் உள்ளவர் என்பதற்கு ஆதாரமாக ஆகாது.

இது நம்முடைய காலத்திற்குப் பொருந்தாது என்று விளங்கிக் கொண்டால் நம்மிடம் இது போன்ற தவறுகள் வராது. நாமும் யாரையும் நல்லவர் என்று சொல்லவும் மாட்டோம்.

அல்லாஹ்வால் அறிவித்துக் கொடுக்கப்பட்ட நல்லடியார்கள்!

இறைநேசர்களை நம்மால் கண்டுபிடிக்க முடியாது என்றாலும் அல்லாஹ் யாரை இறைநேசர்கள் என்று சொன்னானோ அவர்களை நல்லடியார்கள் என்று நாம் சொல்லலாம். சொல்லியாக வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் வஹீ அடிப்படையில் யாரை நல்லவர்கள் என்று சொன்னார்களோ அவர்களையும் நாம் நல்லடியார்கள் என்று சொல்லலாம். சொல்லியாக வேண்டும்.

இப்படி அறிவிக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வோம்.

நபிமார்கள் இறைநேசர்கள்

இறைவனால் அனுப்பப்பட்ட எல்லா நபிமார்களும் இறைநேசர்கள், அவ்லியாக்கள் என்று நாம் நம்ப வேண்டும்.

இறைவன் தேர்ந்தெடுத்து ஒருவரிடம் பொறுப்பைச் சுமத்துகிறான் என்றால் கண்டிப்பாக அவர் இறைவனுடைய நேசராகத் தான் இருக்க முடியும்.

ஆதம் (அலை) அவர்கள் முதல் இறுதியாக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை எத்தனை நபிமார்கள் அனுப்பப்பட்டார்களோ அத்தனை பேருமே இறைநேசர்கள் தான்.

மர்யம், ஆஸியா நல்லடியார்கள்

அதேபோல் மர்யம் (அலை) அவர்களைப் பற்றி நல்லடியார் என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

"மர்யமே! அல்லாஹ் உம்மைத் தேர்வு செய்து தூய்மையாக்கி அகிலத்துப் பெண்களை விட உம்மைச் சிறப்பித்தான்'' என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 3:42

ஃபிர்அவ்னுடைய மனைவி ஆசியா அவர்கள் இறைநேசர் என்று நாம் உறுதிபடச் சொல்ல்லாம்.

"என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும், அவனது சித்ரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக!' என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான். இம்ரானின் மகள் மர்யமையும் இறைவன் முன்னுதாரணமாகக் கூறுகிறான். அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராக இருந்தார்.

திருக்குர்ஆன் 66:11.12

ஆசியா என்ற பெயரை அல்லாஹ் பயன்படுத்தாவிட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிர்அவ்னின் மனைவி ஆசியா என்று குறிப்பிட்டுள்ளனர்.

صحيح البخاري

3411 - حَدَّثَنَا يَحْيَى بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ مُرَّةَ الهَمْدَانِيِّ، عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " كَمَلَ مِنَ الرِّجَالِ كَثِيرٌ، وَلَمْ يَكْمُلْ مِنَ النِّسَاءِ: إِلَّا آسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ، وَمَرْيَمُ بِنْتُ عِمْرَانَ، وَإِنَّ فَضْلَ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَامِ "

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆண்களில் நிறையப் பேர் முழுமையடைந்திருக்கிறார்கள். பெண்களில் ஃபிர்அவ்னின் துணைவியார் ஆஸியாவையும், இம்ரானின் மகள் மர்யமையும் தவிர வேறெவரும் முழுமையடையவில்லை. மற்ற பெண்களை விட ஆயிஷாவுக்குள்ள சிறப்பு எல்லா வகை உணவுகளை விடவும் "ஸரீத்' உணவுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்.

அறிவிப்பவர்: அபூ மூசா (ரலி),

நூல்: புகாரி 3411

இந்தச் செய்தி புகாரி 3434, 3769, 5418 ஆகிய இடங்களிலும் இடம் பெற்றுள்ளது.

குகைவாசிகள் நல்லடியார்கள்

இதே போன்று குகைவாசிகளையும் நல்லடியார்கள் என்று இறைவன் சொல்கிறான்.

அவர்களது உண்மை வரலாறை நாம் உமக்குக் கூறுகிறோம். அவர்கள் இளைஞர்கள். அவர்கள் தமது இறைவனை நம்பினார்கள். அவர்களுக்கு நேர்வழியை அதிகமாக்கினோம்.

திருக்குர் ஆன் 18:13

முக்கியமான  நபித்தோழர்கள் நல்லடியார்கள்

صحيح البخاري

3675 - حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، حَدَّثَهُمْ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَعِدَ أُحُدًا، وَأَبُو بَكْرٍ، وَعُمَرُ، وَعُثْمَانُ فَرَجَفَ بِهِمْ، فَقَالَ: «اثْبُتْ أُحُدُ فَإِنَّمَا عَلَيْكَ نَبِيٌّ، وَصِدِّيقٌ، وَشَهِيدَانِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோரும் உஹுது மலை மீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "உஹுத்! அசையாமல் இரு! ஏனெனில், உன் மீது ஓர் இறைத்தூதரும் ஒரு சித்தீக்கும், இரு உயிர்த் தியாகிகளும் உள்ளனர்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

நூல்: புகாரி 3675, 3686

அபூபக்ர், உமர், உஸ்மான் ஆகிய நபித்தோழர்கள் இறைநேசர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டதால் அவர்கள் அல்லாஹ்விடம் இறைநேசர்கள் தான்.

இம்மூவரும் இறைநேசர்கள் என்று புகாரி 3693, 3674, 3695, 6216, 7097, 7262 ஆகிய ஹதீஸ்களில் இருந்தும் அறியலாம்.

مسند أحمد بن حنبل

 1675 - حدثنا عبد الله حدثني أبي ثنا قتيبة بن سعيد ثنا عبد العزيز بن محمد الدراوردي عن عبد الرحمن بن حميد عن أبيه عن عبد الرحمن بن عوف ان النبي صلى الله عليه و سلم قال : أبو بكر في الجنة وعمر في الجنة وعلى في الجنة وعثمان في الجنة وطلحة في الجنة والزبير في الجنة وعبد الرحمن بن عوف في الجنة وسعد بن أبي وقاص في الجنة وسعيد بن زيد بن عمرو بن نفيل في الجنة وأبو عبيدة بن الجراح في الجنة  تعليق شعيب الأرنؤوط : إسناده قوي على شرط مسلم

"அபூபக்கர் சொர்க்கத்தில் இருப்பார். உமர் சொர்க்கத்தில் இருப்பார். உஸ்மான் சொர்க்கத்தில் இருப்பார். அலீ சொர்க்கத்தில் இருப்பார். தல்ஹா சொர்க்கத்தில் இருப்பார். ஸுபைர் சொர்க்கத்தில் இருப்பார். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் சொர்க்கத்தில் இருப்பார். ஸஅத் பின் அபீ வக்காஸ் சொர்க்கத்தில் இருப்பார். ஸயீத் பின் ஸைத் சொர்க்கத்தில் இருப்பார். அபூஉபைதா அல்ஜர்ராஹ் சொர்க்கத்தில் இருப்பார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி),

நூல்: அஹ்மத் 1543

மேலும் இச்செய்தி திர்மிதியில் 3680, 3748 ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியில் சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட 10 நபர்களில் முதல் நான்கு பேரும் கலீபாக்கள். அவர்களிடத்தில் மனிதன் என்ற அடிப்படையில் தவறுகள் நிகழ்ந்திருந்தாலும், அவர்கள் ஆட்சி செய்த நேரத்தில், அவர்களுடைய ஆளுமை மக்களுக்கு அதிருப்தியைத் தந்தாலும் அவர்களுடைய தியாகத்திற்கு முன் அது சாதாரண காரியமாகத் தான் அமையும்.

நம்முடைய பார்வையில் அது தவறாகத் தெரிந்தாலும் அல்லாஹ்வுடைய பார்வையில் அது மன்னிக்கப்படக் கூடிய பாவமாகத் தான் தெரிந்திருக்கிறது. அந்த 10 பேரும் பாவங்களைச் செய்திருந்தாலும் அல்லாஹ் அதை மன்னித்து விட்டான். அதனால் தான் சொர்க்கத்திற்குரியவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நற்செய்தி கூறினார்கள்.

அதே மாதிரி ஸஅத் பின் முஆத் அவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாராட்டிச் சொல்லியிருக்கிறார்கள்.

صحيح البخاري

2615 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسٌ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: أُهْدِيَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جُبَّةُ سُنْدُسٍ، وَكَانَ يَنْهَى عَنِ الحَرِيرِ، فَعَجِبَ النَّاسُ مِنْهَا، فَقَالَ: «وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَمَنَادِيلُ سَعْدِ بْنِ مُعَاذٍ فِي الجَنَّةِ أَحْسَنُ مِنْ هَذَا»،

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவர்கள் பட்டை (அணியக் கூடாது என்று) தடை செய்து வந்தார்கள். மக்களோ, அந்த அங்கி(யின் தரத்தை மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (என் தோழர்) சஅத் பின் முஆதுக்கு சொர்க்கத்தில் கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் (தரத்திலும் மென்மையிலும்) இதை விட உயர்ந்தவை'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

நூல்: புகாரி 2616. 3248

அதே போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய மகன் இப்ராஹீம் சிறு வயதிலேயே, அதாவது பால்குடிப் பருவத்திலேயே இறந்து விடுகிறார். அவரும் சொர்க்கவாசி என்று கூறலாம்.

صحيح البخاري

1382 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، أَنَّهُ سَمِعَ البَرَاءَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: لَمَّا تُوُفِّيَ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلاَمُ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لَهُ مُرْضِعًا فِي الجَنَّةِ»

பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

இப்ராஹீம் இறந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இவருக்குச் சொர்க்கத்தில் பாலூட்டும் அன்னை உண்டு'' எனக் கூறினார்கள்.

நூல்: புகாரி 1382, 3255, 6195

அதே போன்று அனஸ் (ரலி) அவர்களுடைய தாயார் குமைஸா பின்த் மில்ஹான் அவர்களையும் சொர்க்கத்திற்குரியவர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

صحيح مسلم ـ

6474 - وَحَدَّثَنَا ابْنُ أَبِى عُمَرَ حَدَّثَنَا بِشْرٌ - يَعْنِى ابْنَ السَّرِىِّ - حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « دَخَلْتُ الْجَنَّةَ فَسَمِعْتُ خَشْفَةً فَقُلْتُ مَنْ هَذَا قَالُوا هَذِهِ الْغُمَيْصَاءُ بِنْتُ مِلْحَانَ أُمُّ أَنَسِ بْنِ مَالِكٍ ».

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் சொர்க்கத்தில் நுழைந்தேன். அங்கு ஒரு காலடிச் சப்தத்தைக் கேட்டேன். அப்போது இது யார்? என்று கேட்டேன். அ(ங்கிருந்த வான)வர்கள், "இவர் தான் அனஸ் பின் மாலிக் அவர்களின் தாயார் ஃகுமைஸா பின்த் மில்ஹான்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: முஸ்லிம்

அதேபோல பிலால் (ரலி) அவர்களையும் சொர்க்கத்திற்குரியவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

صحيح مسلم

6478 - حَدَّثَنَا عُبَيْدُ بْنُ يَعِيشَ وَمُحَمَّدُ بْنُ الْعَلاَءِ الْهَمْدَانِىُّ قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ أَبِى حَيَّانَ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا أَبِى حَدَّثَنَا أَبُو حَيَّانَ التَّيْمِىُّ يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ أَبِى زُرْعَةَ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- لِبِلاَلٍ عِنْدَ صَلاَةِ الْغَدَاةِ « يَا بِلاَلُ حَدِّثْنِى بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ عِنْدَكَ فِى الإِسْلاَمِ مَنْفَعَةً فَإِنِّى سَمِعْتُ اللَّيْلَةَ خَشْفَ نَعْلَيْكَ بَيْنَ يَدَىَّ فِى الْجَنَّةِ ». قَالَ بِلاَلٌ مَا عَمِلْتُ عَمَلاً فِى الإِسْلاَمِ أَرْجَى عِنْدِى مَنْفَعَةً مِنْ أَنِّى لاَ أَتَطَهَّرُ طُهُورًا تَامًّا فِى سَاعَةٍ مِنْ لَيْلٍ وَلاَ نَهَارٍ إِلاَّ صَلَّيْتُ بِذَلِكَ الطُّهُورِ مَا كَتَبَ اللَّهُ لِى أَنْ أُصَلِّىَ.

(ஒருநாள்) அதிகாலைத் தொழுகையின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம், "பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பிறகு பயனுள்ளதாக நீர் கருதிச் செய்துவரும் நற்செயல் ஒன்றைப் பற்றிக் கூறுவீராக! ஏனெனில், சொர்க்கத்தில் உமது காலணி ஓசையை எனக்கு முன்னால் நான் செவியுற்றேன்'' என்று கூறினார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், "நான் இஸ்லாத்தில் இணைந்த பிறகு பயனுள்ளதாகக் கருதி அப்படி (பிரமாதமாக) எந்த நற்செயலையும் செய்யவில்லை. ஆயினும் நான் இரவிலோ பகலிலோ எந்த நேரத்தில் முழுமையாக உளூச் செய்தாலும், அந்த உளூ மூலம் நான் தொழ வேண்டும் என அல்லாஹ் என் விஷயத்தில் விதித்துள்ள அளவுக்கு (கூடுதல் தொழுகையை) தொழாமல் இருந்ததில்லை. (இதுவே இஸ்லாத்தில் நான் செய்த பயனுள்ள நற்செயலாகக் கருதுகிறேன்)'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம்

அதுபோன்று, உம்மு சுஃபைர் அவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கவாசி என்று நற்சான்று தந்திருக்கிறார்கள்.

صحيح البخاري

5652 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عِمْرَانَ أَبِي بَكْرٍ، قَالَ: حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ، قَالَ: قَالَ لِي ابْنُ عَبَّاسٍ: أَلاَ أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الجَنَّةِ؟ قُلْتُ: بَلَى، قَالَ: هَذِهِ المَرْأَةُ السَّوْدَاءُ، أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: إِنِّي أُصْرَعُ، وَإِنِّي أَتَكَشَّفُ، فَادْعُ اللَّهَ لِي، قَالَ: «إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الجَنَّةُ، وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ أَنْ يُعَافِيَكِ» فَقَالَتْ: أَصْبِرُ، فَقَالَتْ: إِنِّي أَتَكَشَّفُ، فَادْعُ اللَّهَ لِي أَنْ لاَ أَتَكَشَّفَ، فَدَعَا لَهَا حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا مَخْلَدٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَطَاءٌ: «أَنَّهُ رَأَى أُمَّ زُفَرَ تِلْكَ امْرَأَةً طَوِيلَةً سَوْدَاءَ، عَلَى سِتْرِ الكَعْبَةِ»

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், "சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?'' என்று கேட்டார்கள். நான், "ஆம்; (காட்டுங்கள்)'' என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணி தாம் அவர். இவர் (ஒரு தடவை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்'' என்று சொன்னார்கள். இந்தப் பெண்மணி, "நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்துகொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்று சொன்னார். அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அதாஉ பின் அபீரபாஹ்

நூல்: புகாரி 5652

ஹாரிஸா பின் நுஃமான் (ரலி) அவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கவாசி என்று நற்சான்று அளித்துள்ளார்கள்.

مسند أحمد بن حنبل

 25223 - حدثنا عبد الله حدثني أبى ثنا عبد الرزاق أنا معمر عن الزهري عن عمرة عن عائشة قالت قال رسول الله صلى الله عليه و سلم : نمت فرأيتني في الجنة فسمعت صوت قارئ يقرأ فقلت من هذا قالوا هذا حارثة بن النعمان فقال لها رسول الله صلى الله عليه و سلم كذاك البر كذاك البر وكان أبر الناس بأمه

تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح رجاله ثقات رجال الشيخين

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்கு (ஒருநாள்) கனவில் சொர்க்கம் எடுத்துக் காட்டப்பட்டது. அப்போது அங்கே ஒருவர் குர்ஆன் ஓதுவதைச் செவியுற்றேன். அப்போது இவர் யார்? என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், "இவர் தான் ஹாரிஸா பின் நுஃமான்'' என்று சொன்னார்கள். "இவர் தான் மக்களிலேயே தன்னுடைய தாய்க்கு அதிகமாக நன்மை செய்யக்கூடியவராக இருந்தார்'' என்று கூறினார்கள்.

நூல்: அஹ்மத் 24026

பத்ர் போராளிகள் நல்லடியார்கள்

பத்ருப்போரில் யாரெல்லாம் கலந்து கொண்டார்களோ (அனைவருடைய தகவலும் இல்லாவிட்டாலும் பத்ருவாசிகள் என்று யாரெல்லாம் சொல்லப்பட்டார்களோ) அவர்களை நாம் சொர்க்கவாசிகள், மகான்கள், அவ்லியாக்கள் என்று நாம் சொல்லலாம்.

பத்ருப் போரில் கலந்து கொண்ட அனைவருடைய பெயரும் குறிப்பிடப்படாவிட்டாலும், பத்ருவாசிகள் என்று சுமார் 60க்கும் மேற்பட்ட ஸஹாபாக்கள் பெயர்கள் ஹதீஸில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

صحيح البخاري

6939 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ حُصَيْنٍ، عَنْ فُلَانٍ، قَالَ: تَنَازَعَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ، وَحِبَّانُ بْنُ عَطِيَّةَ، فَقَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ، لِحِبَّانَ: لَقَدْ عَلِمْتُ مَا الَّذِي جَرَّأَ صَاحِبَكَ عَلَى الدِّمَاءِ، يَعْنِي عَلِيًّا، قَالَ: مَا هُوَ لَا أَبَا لَكَ؟ قَالَ: شَيْءٌ سَمِعْتُهُ يَقُولُهُ، قَالَ: مَا هُوَ؟ قَالَ: بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالزُّبَيْرَ وَأَبَا مَرْثَدٍ، وَكُلُّنَا فَارِسٌ، قَالَ: " انْطَلِقُوا حَتَّى تَأْتُوا رَوْضَةَ حَاجٍ - قَالَ أَبُو سَلَمَةَ: هَكَذَا قَالَ أَبُو عَوَانَةَ: حَاجٍ - فَإِنَّ فِيهَا امْرَأَةً مَعَهَا صَحِيفَةٌ مِنْ حَاطِبِ بْنِ أَبِي بَلْتَعَةَ إِلَى المُشْرِكِينَ، فَأْتُونِي بِهَا " فَانْطَلَقْنَا عَلَى أَفْرَاسِنَا حَتَّى أَدْرَكْنَاهَا حَيْثُ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَسِيرُ عَلَى بَعِيرٍ لَهَا، وَقَدْ كَانَ كَتَبَ إِلَى أَهْلِ مَكَّةَ بِمَسِيرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِمْ، فَقُلْنَا: أَيْنَ الكِتَابُ الَّذِي مَعَكِ؟ قَالَتْ: مَا مَعِي كِتَابٌ، فَأَنَخْنَا بِهَا بَعِيرَهَا، فَابْتَغَيْنَا فِي رَحْلِهَا فَمَا وَجَدْنَا شَيْئًا، فَقَالَ صَاحِبَايَ: مَا نَرَى مَعَهَا كِتَابًا، قَالَ: فَقُلْتُ: لَقَدْ عَلِمْنَا مَا كَذَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ حَلَفَ عَلِيٌّ: وَالَّذِي يُحْلَفُ بِهِ، لَتُخْرِجِنَّ الكِتَابَ أَوْ لَأُجَرِّدَنَّكِ، فَأَهْوَتِ الى حُجْزَتِهَا، وَهِيَ مُحْتَجِزَةٌ بِكِسَاءٍ، فَأَخْرَجَتِ الصَّحِيفَةَ، فَأَتَوْا بِهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، قَدْ خَانَ اللَّهَ وَرَسُولَهُ وَالمُؤْمِنِينَ، دَعْنِي فَأَضْرِبَ عُنُقَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا حَاطِبُ، مَا حَمَلكَ عَلَى مَا صَنَعْتَ» قَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا لِي أَنْ لَا أَكُونَ مُؤْمِنًا بِاللَّهِ وَرَسُولِهِ؟ وَلَكِنِّي أَرَدْتُ أَنْ يَكُونَ لِي عِنْدَ القَوْمِ يَدٌ يُدْفَعُ بِهَا عَنْ أَهْلِي وَمَالِي، وَلَيْسَ مِنْ أَصْحَابِكَ أَحَدٌ إِلَّا لَهُ هُنَالِكَ مِنْ قَوْمِهِ مَنْ يَدْفَعُ اللَّهُ بِهِ عَنْ أَهْلِهِ وَمَالِهِ، قَالَ: «صَدَقَ، لَا تَقُولُوا لَهُ إِلَّا خَيْرًا» قَالَ: فَعَادَ عُمَرُ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، قَدْ خَانَ اللَّهَ وَرَسُولَهُ وَالمُؤْمِنِينَ، دَعْنِي فَلِأَضْرِبْ عُنُقَهُ، قَالَ: " أَوَلَيْسَ مِنْ أَهْلِ بَدْرٍ، وَمَا يُدْرِيكَ، لَعَلَّ اللَّهَ اطَّلَعَ عَلَيْهِمْ فَقَالَ: اعْمَلُوا مَا شِئْتُمْ، فَقَدْ أَوْجَبْتُ لَكُمُ الجَنَّةَ " فَاغْرَوْرَقَتْ عَيْنَاهُ، فَقَالَ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: " خَاخٍ أَصَحُّ، وَلَكِنْ كَذَا قَالَ أَبُو عَوَانَةَ: حَاجٍ، وَحَاجٍ تَصْحِيفٌ، وَهُوَ مَوْضِعٌ، وَهُشَيْمٌ يَقُولُ: خَاخٍ "

அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:

குதிரை வீரர்களான என்னையும், ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களையும், அபூமர்ஸத் (ரலி) அவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் "ரவ்ளத்து ஹாஜ்' எனும் இடம் வரை செல்லுங்கள். -இவ்வாறு "ஹாஜ்' என்றே அபூஅவானா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என அபூசலமா கூறுகிறார்கள். (மற்ற அறிவிப்புகளில் "ரவ்ளத்து காக்' என வந்துள்ளது) - அங்கு ஒரு பெண் இருப்பாள். அவளிடம் ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (மக்காவிலிருக்கும்) இணைவைப்பாளர்களுக்கு எழுதிய (நமது இரகசிய திட்டங்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்றிருக்கும். அதை (அவளிடமிருந்து கைப்பற்றி) என்னிடம் கொண்டு வாருங்கள்'' என்று கூறி அனுப்பினார்கள். உடனே நாங்கள் எங்கள் குதிரைகளின் மீதேறிச் சென்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் குறிப்பிட்ட அந்த இடத்தில் தனது ஒட்டகம் ஒன்றின் மீது அவள் செல்வதைக் கண்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவை வெற்றி கொள்வதற்காக) மக்காவாசிகளை நோக்கிப் புறப்படவிருப்பது தொடர்பாக ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (அக்கடிதத்தில்) மக்காவாசிகளுக்கு எழுதியிருந்தார். நாங்கள் (அவளிடம்), "உன்னிடம் உள்ள அந்தக் கடிதம் எங்கே?'' என்று கேட்டோம். அவள், "என்னிடம் கடிதம் எதுவுமில்லை'' என்று சொன்னாள். உடனே நாங்கள் அவள் அமர்ந்திருந்த அந்த ஒட்டகத்தை மண்டியிடச் செய்து அவளிருந்த சிவிகைக்குள் (கடிதத்தைத்) தேடினோம். (அதில்) எதுவும் கிடைக்கவில்லை. அப்போது என் சகாக்கள் இருவரும் "இவளிடம் எந்தக் கடிதத்தையும் நம்மால் காணமுடியவில்லையே'' என்று சொன்னார்கள். நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்று திட்டவட்டமாக நாம் அறிந்துள்ளோம்'' என்று கூறிவிட்டு, சத்தியம் செய்வதற்கு தகுதிபெற்ற (இறை)வன் மீது ஆணையிட்டு, "ஒன்று நீயாக அதை வெளியே எடுக்க வேண்டும். அல்லது நான் உன்னை (சோதனையிடுவதற்காக உனது ஆடையைக்) கழற்ற வேண்டியிருக்கும்'' என்று சொன்னேன். இதைக் கேட்ட அவள் தனது இடுப்பை நோக்கி (தனது கையைக்) கொண்டு சென்றாள். அவள் (இடுப்பில்) ஒரு துணி கட்டியிருந்தாள். (அதற்குள்ளேயிருந்து) அந்தக் கடிதத்தை வெளியே எடுத்தாள். அந்தக் கடிதத்தை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தோம். பிறகு அதை நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் படித்துக் காட்டினேன்.

அப்போது உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஹாத்திப் பின் அபீ பல்த்தஆ அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்து விட்டார். என்னை விடுங்கள்; அவரது கழுத்தைக் கொய்துவிடுகிறேன்'' என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஹாத்திபே! ஏன் இப்படிச் செய்தீர்கள்?'' என்று கேட்டார்கள். ஹாத்திப் பின் அபீ பல்த்தஆ, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்ளாமலிருக்க எனக்கு என்ன நேர்ந்துவிட்டது? (நான் இறைநம்பிக்கையைக் கைவிட்டுவிடவில்லை.) மாறாக, மக்காவாசிகளுக்கு நான் உபகாரம் ஏதேனும் செய்து அதற்குப் பிரதியுபகாரமாக அவர்கள் (அங்குள்ள பலவீனமான) என் உறவினர்களையும் என் செல்வங்களையும் காப்பாற்ற வேண்டுமென்று விரும்பினேன்; தங்களுடைய (முஹாஜிர்) தோழர்கள் அனைவருக்குமே அவர்களுயை குடும்பத்தாரையும் செல்வத்தையும் எவர் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகைய உறவினர்கள் அங்கு உள்ளனர்'' என்று கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இவர் உண்மை பேசினார். இவர் குறித்து நல்லதையே சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் மீண்டும் "அல்லாஹ்வின் தூதரே! இவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்து விட்டார். என்னை விடுங்கள்; இவரது கழுத்தைக் கொய்துவிடுகிறேன்'' என்று சொன்னார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இவர் பத்ருப் போரில் கலந்துகொண்டவர் இல்லையா? உங்களுக்கு என்ன தெரியும்? ஒருவேளை அல்லாஹ் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களிடம் "நீங்கள் விரும்பியதைச் செய்துகொள்ளுங்கள். சொர்க்கத்தை உங்களுக்கு நான் உறுதியாக்கிவிட்டேன்' என்று கூறிவிட்டிருக்கலாம்'' என்று சொன்னார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்களின் கண்கள் கண்ணீரில் மூழ்கின. அப்போது உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 6939

இந்த ஹதீஸ் மேலும் புகாரியில் 3007, 3081, 4274, 4890, 6259, 3983 ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியில் பத்ருப் போரில் கலந்து கொண்ட அனைவருமே சொர்க்கவாசிகள் என்பது தெளிவாகிறது. அவர்களிடம் எத்தனை தவறுகளைக் கண்டாலும் அவர்கள் சொர்க்கவாசிகள் தான் என்று அல்லாஹ்வும் கூறுகிறான். இந்த ஹதீஸில் இடம்பெற்ற ஸஹாபியும் பத்ருப் போரில் கலந்து கொண்டவர் தான். அந்தப் போருக்கு பிறகு அவர் தவறு செய்திருக்கிறார் என்ற செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிய வருகின்றது. ஆனால் அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டான் என்று சொன்ன காரணத்தினால் அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தண்டிக்கவில்லை. எனவே இந்தச் செய்தியில் இடம்பெற்ற ஹாதீப் பின் அபீ பல்தஆ அவர்களையும், பத்ருப் போரில் கலந்து கொண்ட அனைவரையுமே நல்லடியார்கள், மகான்கள், அவ்லியாக்கள் என்று நாம் சந்தேகமற உறுதிபடக் கூறலாம்.

மரத்தடியில் உடன்படிக்கை எடுத்தவர்கள்

இது போன்று, பைஅத்து ரிள்வான் என்று சொல்லப்படக்கூடிய ஹுதைபியா உடன்படிக்கையின் போது ஒரு மரத்தடியில் உறுதி மொழி எடுத்தவர்கள் அனைவரையும் சொர்க்கவாசிகள் என்று நாம் சொல்லலாம். ஏனென்றால் அவர்கள் தியாகம் செய்யாவிட்டாலும் அதற்காகப் பின்வாங்காமல், உயிரை விடவும் தயாராக இருந்ததால் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டதாகப் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.

அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதிமொழி எடுத்தபோது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களில் இருப்பதை அவன் அறிவான். அவர்களுக்கு நிம்மதியை அருளினான். அவர்களுக்கு சமீபத்தில் இருக்கும் வெற்றியையும் வழங்கினான்.

திருக்குர்ஆன் 48:18

அந்தச் சம்பவம் என்னவென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு உம்ரா செய்வதற்காகச் செல்லும் போது இடையில் தடுக்கப்படுகிறார்கள். அப்போது ஒரு மரத்தின் அடியில் அனைவரும் தங்கி ஓய்வெடுக்கிறார்கள். அப்போது உஸ்மான் (ரலி) அவர்களைப் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக, தூதுவராக மக்காவிற்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் உஸ்மான் (ரலி) அவர்கள் திரும்பி வரவில்லை. அவர்களை மக்காவில் உள்ள எதிரிகள் கொன்று விட்டார்கள் என்று வதந்தி பரவுகின்றது.

இந்தச் சம்பவத்தில், எதிரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தூதுவராக சென்ற உஸ்மான் (ரலி) திரும்பி வருவதற்கு தாமதமாகி விட்டது. எதிரிகள் அவரைப் பிடித்தும் வைக்கவில்லை; தடுத்தும் வைக்கவில்லை. ஆனால் இந்தத் தாமதமான செய்தியை அறியாமல் அவர்களைக் கொன்று விட்டார்கள் என்று வதந்தியை பரப்பி விடுகின்றனர்.

தூதுவராக அனுப்பிய உஸ்மான் (ரலி) அவர்களை எதிரிகள் கொன்று விட்டார்கள் என்ற செய்தி வந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர்களை ஒரு மரத்தடியின் கீழ் ஒன்றுகூட்டி, "நாம் தூதுவராக அனுப்பிய உஸ்மான் (ரலி) அவர்களை எதிரிகள் கொன்று இருப்பார்களானால், அல்லாஹ்வுக்காகக் கடைசி வரையும் நின்று போராடுவோம் என்று சொல்லக்கூடியவர்கள் என்னுடன் உறுதிமொழி எடுங்கள்!'' என்று கூறினார்கள். அப்போது அங்கிருந்த அனைவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் நாங்கள் கடைசி வரைக்கும் போராடுவோம் என்று உறுதிமொழி எடுக்கிறார்கள்.

ஆனால் உஸ்மான் (ரலி) அவர்கள் திரும்பி வந்ததால் போர் நடக்கவில்லை. எந்தவித சண்டையும் நடக்கவில்லை. யாரும் எந்தவித தியாகமும் செய்யவில்லை. ஆனால் "கடைசி நிமிடம் வரைக்கும் பின்வாங்க மாட்டோம். இந்த விஷயத்தை (அதாவது தூதரைக் கொன்ற விஷயத்தை) நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். வெற்றி பெறும் வரை அல்லது வீரமரணம் அடையும் வரைக்கும் நாங்கள் பின்வாங்க மாட்டோம் என்று என்னிடத்தில் உறுதிமொழி அளிக்கக்கூடியவர்கள் யார்?' என்று கேட்டவுடன் அனைவரும் உறுதிமொழி அளிக்கிறார்கள். இந்த உறுதிமொழியில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் எல்லாருமே சொர்க்கவாசிகள் என்பதை மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். எனவே அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொண்டதால் இவர்களை நல்லடியார்கள், அவ்லியாக்கள், மகான்கள் என்று நாம் கூறலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் அந்த மரத்தினடியில் உறுதிமொழி (பைஅத்) எடுத்தார்களோ அவர்கள் நரகில் நுழைய மாட்டார்கள். அவர்கள் சொர்க்கவாசிகள். சொர்க்கத்தில் நுழைவார்கள்'' என்ற கருத்தில் அமைந்த செய்தி முஸ்லிமில் 4552வது ஹதீஸில் இடம்பெற்றுள்ளது.

இதைப் போன்று எந்த நல்லடியார்களைப் பற்றி சொர்க்கவாசி என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அவர்களைத் தான் சொர்க்கவாசிகள் என்றோ, நல்லடியார்கள் என்றோ சொல்ல வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படி ஏராளமானவர்களைப் பற்றி நல்லடியார்கள் என்றும் சொர்க்கவாசிகள் என்றும் நற்சான்று அளித்திருக்கிறார்கள்.

நல்லடியார் பட்டம் யாருக்கும் கொடுக்க வேண்டாம்

நான்கு இமாம்கள், மக்களால் அறியப்பட்ட பிரபலங்கள், பெரிய தர்காக்கள் கட்டப்பட்டவர்கள் உள்ளிட்ட யாரையும் நல்லடியார் என்றும், இறைநேசர் என்றும் சொர்க்கவாசி என்றும் கூறும் அதிகாரம் நமக்கு இல்லை. மதிப்புக்குரிய நன்மக்களாக நம் அளவில் கருதலாமே தவிர சொர்க்கவாசிகள் என்று கருத முடியாது,

அவர்கள் சொர்க்கம் போவார்களா என்பதே நமக்குத் தெரியாத நிலையில் அவர்கள் அல்லாஹ்விடம் நமக்காகப் பரிந்து பேசுவார்கள் என்று நம்புவதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

அல்லாஹ்வும், அவனது தூதரும் யாரை நல்லடியார்கள் என்று கூறினார்களோ அவர்களை மாத்திரமே நாம் நல்லடியார்கள் என்று சொல்ல வேண்டுமே தவிர, வேறு யாரையாவது நல்லடியார்கள், மகான்கள் எனக் கூறிக்கொண்டு அவர்களுக்காக விழா எடுப்பதும், அவர்களிடம் உதவி தேடுவதும், அவர்களின் காலில் விழுவதும் பெரும் பாவங்களில் ஒன்றாகும். அது நம்மை நிரந்தர நரகத்திற்குக் கொண்டு சேர்க்கும் என்பதையும் விளங்கி இந்தப் பாவத்திலிருந்தும் விலகிக்கொள்ள வேண்டும்.

நல்லடியார்களுக்கு மறுமையில் கிடைக்கக் கூடிய பரிசுகளை, அந்தஸ்துகளை, கூலியைப் பற்றி இஸ்லாம் கூறுவது அவர்களைக் கொண்டாடுவதற்கு அல்ல. நல்லடியார்களைக் கண்டுபிடிக்க முடியும் என்றால் தான் அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தலாமா என்ற கேள்வியே வரும். அவர்களைக் கண்டுபிடிக்க முடிந்தாலும் அந்த நல்லடியார்களுக்கு உருஸ் எடுக்கவோ, சந்தனக்கூடு எடுக்கவோ, பாராட்டு விழா நடத்தவோ அல்லாஹ் சொல்லவில்லை.

அவர்களைப் போன்று நீயும் நல்லடியானாக ஆக வேண்டும் என்பதற்குத் தான் நல்லடியார்களைப் பற்றி சொல்கிறான்.

அல்லாஹ்வாலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாலும் சொர்க்கவாசிகள் என்று கூறப்பட்டவர்களைத் தவிர மற்றவர்கள் சொர்க்கவாசிகள் எனக் கூறக்கூடாது. நல்லவர் என்று நாம் நம்பும் பலர் நரகவாசிகளாக இருப்பார்கள். கெட்டவர்கள் என்று நாம் புறக்கணித்த பலர் சொர்க்கவாசிகளாக இருப்பார்கள். இதை உணர்ந்து நடக்கும் நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கட்டும்.

இறைநேசர் பட்டம் கொடுத்து அல்லாஹ்வின் அதிகாரத்தைக் கையில் எடுத்த குற்றவாளிகளாக ஆகாமல் அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account