Sidebar

27
Sat, Jul
5 New Articles

 ஜும்ஆவுக்கு முன் ஸுன்னத் உண்டா?

சுன்னத்தான தொழுகைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

 ஜும்ஆவுக்கு முன் ஸுன்னத் உண்டா?

ஜும்ஆவுக்கு முன்னால் ஸுன்னத் தொழுகை உண்டு என நாம் எழுதியதை அனைவரும் அறிவீர்கள். இதில் உடன்பாடில்லாதவர்களில் இலங்கை நண்பர், மவ்லவி அப்துல் வதூத் ஜிப்ரியும் ஒருவர். நாம் எழுதியதை மறுத்து நமக்கு ஒரு மடல் வரைந்திருந்தார். அந்த மடலை அல்ஜன்னத்தில் வெளியிடச் செய்து, அதற்கு நாம் அளிக்கும் விளக்கத்தை அறிந்து கொள்வதற்குக் கூட நண்பருக்குப் பொறுமையில்லை என்பதா? அல்லது இதற்கு வேறு நோக்கம் ஏதும் இருக்கும் என்பதா? நமக்குப் புரியவில்லை.

நோக்கம் எதுவானாலும் செய்யப்பட்ட விமர்சனத்துக்கு விளக்கம் அளிக்கும் கடமை நமக்கு உள்ளது. எனவே, அதுபற்றி விளக்குவது இந்த விஷயத்தில் கூடுதல் தெளிவைத் தரும் என்பதால் அதற்கு விளக்கமளிக்கின்றோம்.

அவரது கடிதம்:

சகோதரர் பி. ஜெய்னுல்ஆப்தீன் (பி. ஜைனுல்ஆப்தீன் இல்லை) அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு

1994 ஒக்டோபர் ஜன்னத்தில் ஜும்ஆவுக்கு முன்னால் இரண்டு ரக்ஆத் ஸுன்னத் உண்டு என்பதாக எழுதியிருந்தீர்கள். இது இலங்கையில் குர்ஆன், ஸுன்னா வழியிலுள்ளோருக்கு இரண்டு வகையான சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை நாம் செயல்படுத்தி வந்தது பிழையானது என்றொரு சந்தேகம்.

வஹ்ஹாபிகள் இப்படித்தான். நடந்து வந்த செயலொன்றை ஆய்வெதுவுமின்றி அவசரப்பட்டு ‘பித்அத்’ என்று கூறித் தடுப்பார்கள். சிறிது காலம் சென்றபின் தடுத்தது தவறு, ஆதிகாலத்தில் இருந்து வந்ததுதான் சரியானது என்று கூறி, பழைய நிலைக்குத் திரும்புவார்கள். இப்பொழுது தடுத்துக் கொண்டிருப்பவற்றில் அடுத்தடுத்து எதை வாபஸ் வாங்குவார்களோ? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றெல்லாம் குர்ஆன் - ஸுன்னா பிரசாரத்துக்கு எதிரணியிலுள்ளோர் கதை அளக்கவும், மறைமுகமாக மக்களைத் தூண்டிவிடவும் இடம் உண்டாகி விட்டது.

அண்மையில் குர்ஆன் ஸுன்னா வழியிலுள்ளோருக்கு எதிராக மிம்பர்களை முழக்குவதற்குக் கிடைத்த பெறுமதி மிக்க ஓர் ஆயுதமாக ஆகிவிட்டது எனலாம் -

என்று துவங்குகிறது அவரது கடிதம். கடிதத்தின் இறுதியிலும் இதே கருத்தைப் பின்வருமாறு கூறுகிறார்:

- உங்களுடைய சர்ச்சையால் ஏற்பட்ட விளைவு என்ன தெரியுமா? உங்களது ஜன்னத்தை மையமாக கொண்டு குத்பா ஓதுகிறார் ஒரு கதீப். மிகப்பெரியதொரு பள்ளிவாசலில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அந்த குத்பா ஓதப்படுகிறது.

ஒரு காலத்தில் ஜும்ஆவுக்கு முன்னால் ஸுன்னத் இல்லை என்றார்கள். அதனை சரியென நம்பி சில நல்ல மனிதர்கள் தொழுவதை விட்டு விட்டார்கள். இப்பொழுது பழைய நிலைக்கு மீண்டும் உண்டு என்று சொல்கிறார்கள். இந்த நல்ல மனிதர்களின் கடந்த கால அமல்களை வீணாக்கியவர்கள் இவர்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறார்கள்?

இவர்கள் இப்படித்தான் ஆய்வின்றி அவசரப்பட்டு நடப்பதைக் கூடாதெனத் தடுப்பார்கள். பின்னர் முட்டிக் கொண்டு தலை கவிழ்ந்தவர்களாக தங்களது முடிவை மாற்றிக் கொள்வார்கள். இத்தகையோர் விஷயத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மக்கள் எச்சரிக்கப்படுகின்ற தொனி எவ்வாறிருக்கின்றது பார்த்தீர்களா? இது குழப்ப வெறியைத் தூண்டுவதாகத் தோன்றவில்லையா? -

கடிதத்தின் ஆரம்பத்திலும் இறுதியிலும் குறிப்பிடும் வாசகங்கள் இவை.

நமது பதில்:

அன்புள்ள நண்பர் அப்துல் வதூத் ஸாஹிப் அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.

மார்க்கம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே ஏற்க வேண்டும். மார்க்கம் சொல்லாதவை எவ்வளவு காலம் அமுலில் இருந்தாலும், எத்தகைய அறிஞர்கள் அதைக் கூறியிருந்தாலும் அதை நிராகரிக்க வேண்டும் என்பதைப் பிரசாரம் செய்துவரும் உங்களிடமிருந்து இது போன்ற வாதத்தை நான் எதிர்பார்க்கவில்லை.

பெரிய பெரிய இமாம் கூறியதையெல்லாம் தவறெனத் தெரிந்தால் விட்டுவிட வேண்டும் என்று கூறத் கூடிய நீங்கள் - எவ்வளவு பெரிய இமாமும் தவறுக்கு அப்பாற்பட்டவர் அல்லர் என்பதைப் போதிக்கக்கூடிய நீங்கள் - இப்படி எழுதுவதை முரண்பாடாகக் கருதாதது எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.

உண்மையை ஏற்க வேண்டும் என்பதைவிட, யாரோ உங்களைத் தவறாகக் கருதிவிடக் கூடாது உங்களின் அறிவையும் ஆராய்ச்சியையும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது என்பதில் உள்ள அக்கயரையெ உங்கள் கடிதத்தில் தெரிகின்றது.

நீங்கள் மக்களுக்கு ஒரு சட்டத்தைக் கூறி மக்களும் அதைச் செயல்படுத்த ஆரம்பித்த பின் அந்தச் சட்டம் தவறெனத் தெரிந்தால் கூட உங்கள் முடிவை மாற்றிக் கொள்ள மாட்டீர்கள் என்பது உங்கள் கடிதத்திலிருந்து தெரிய வருகின்றது.

ஜும்ஆவுக்கு முன்னால் ஸுன்னத் உண்டா? இல்லையா? என்ற பிரச்சினையில் நான் எழுதியது தவறு என்று ஒரு வாதத்துக்காக ஏற்றுக் கொண்டால் கூட, உங்களின் இந்த வாதங்கள் படு பயங்கரமான தவறுகளாகும். இஸ்லாமிய அடிப்படையையே தகர்க்கக் கூடியவை என்பதில் சந்தேகம் இல்லை.

குர்ஆன் ஸுன்னாவுக்கு எதிரானவர்களின் விமர்சனத்துக்கு அஞ்சுவதை விட்டு விட்டு அல்லாஹ்வுக்கு அதிகம் அஞ்சுங்கள் என்று உங்களுக்கு நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

எத்தனையோ கொள்கைப் பிரச்சினைகளை மக்களுக்கு விளக்கிய நீங்கள், நமக்கு எதிரானவர்களின் இந்த விமர்சனத்திற்கு - முட்டாள் தனமான இந்த விமர்சனத்துக்கு - உரிய விளக்கம் அளிப்பதே கடமை என்பதை ஏன் உணரவில்லை?

‘எவ்வளவு பெரிய அறிஞருக்கும் தவறுதல் ஏற்படலாம் என்பதே எங்கள் அடிப்படைக் கொள்கையாக இருக்கும் போது, எங்களிடம் தவறு ஏற்படாது என்று எப்படிக் கூற முடியும்? என்று எதிரிகளுக்கு விளக்கம் சொல்லுங்கள்!

‘சுய கௌரவம் பார்த்து, நாங்கள் கூறியதில் பிடிவாதமாக இருக்க மாட்டோம். தவறெனத் தெரிந்தால், உடனேயே அதைத் திருத்திக் கொண்டு, பகிரங்கப் படுத்துவோம்’ என்று எதிரிகளுக்கு விளக்கம் சொல்லுங்கள்!

‘எதை எங்களின் பலவீனம் என்று கூறுகிறீர்களோ, அதுவே எங்கள் பலம். நாங்கள் கூறுவதில் எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது என்பதை நிரூபிப்பதற்காக அல்லாஹ் சில தவறுகளை எங்களிடம் ஏற்படச் செய்கிறான். நாங்கள் தவறெனத் தெரிந்ததும் திருத்திக் கொள்கிறோமா? அல்லது மக்களின் விமர்சனத்திற்கு அஞ்சி உண்மையை மறைக்கப் போகிறோமா? என்று சோதிக்கிறான். நாங்கள் தவறைப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு திருத்திக் கொள்வோம்’ என்று எதிரிகளுக்குப் பதில் சொல்லுங்கள்!

இவ்வாறு பதில் சொல்வதை விட்டு விட்டு உண்மையை ஏற்கத் தயங்கி மக்களின் விமர்சனத்தைச் சான்றாக்குகிறீர்கள்.

இலங்கை நிலைமையை நீங்கள் சுட்டிக் காட்டிச் சில விபரங்களை எழுதியுள்ளீர்கள். அதுபற்றிப் பின்னர் விளக்குகிறேன். இலங்கை நிலைமைக்கும் தமிழக நிலைமைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

ஏகத்துவக் கொள்கைப் பிரசாரம் தமிழகத்தைவிடப் பல ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் தீவிரமாக நடைபெற்றது. இதன் காரணமாக, உங்களின் தவ்ஹீத் முன்னோர்கள் செய்யாத எந்த ஒன்றையும் செய்யவோ, அவர்கள் செய்ததை விட அதிகமாகச் செய்யவோ உங்களிடம் பெருமளவு தயக்கம் இருப்பதை நேரிலேயே கண்டவன் நான். இலங்கையில் உள்ள தவ்ஹீத் பள்ளிகளில் ஜும்ஆவுக்கு இரண்டு பாங்குகள் சொல்லப்பட்டு வந்தன. அதற்கு ஆதாரம் இல்லை என்று தெரிந்தும், தவ்ஹீத் முன்னோர்கள் தடுக்காத ஒன்றை எப்படித் தடுப்பது? மக்கள் நம்மை என்ன நினைப்பார்கள்? என்பன போன்ற தயக்கமே நீங்கள் இரண்டு பாங்குகளைத் தடுக்காமலிருந்ததற்குக் காரணம். ஒரு சில பள்ளிகளிலாவது இரண்டு பாங்குகள் நிறுத்தப்பட தமிழகத்திலிருந்து நாங்கள் மூன்று தடவை இலங்கைக்கு வரவேண்டிய நிலை இருந்தது.

இதை நான் குறிப்பிடக் காரணம் என்னவென்று புரிகிறதா? உங்களிடம் மட்டுமன்றி மொத்த இலங்கைத் தவ்ஹீத் சகோதரர்களிடமும் (மிகச் சிலர் தவிர) இந்த மனப்பான்மை இருக்கிறது. தாம் தவறாகச் செய்துவிட்ட ஒன்றைத் திருத்தினால், மக்கள் விமர்சிப்பார்களே என்று அஞ்சும் நிலையையே ஏற்படுத்தியுள்ளீர்கள்.

பெரும் பெரும் இமாம்கள் கூறியதில் தவறு இருக்கலாம். அவர்களுக்கே கதீம் (பழைய முடிவு) ஜதீத் (புதிய முடிவு) என்று இரு வேறு கருத்துக்கள் இருந்துள்ளன என்று கூறிவிட்டு, எங்கள் கூற்றில் தவறு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று எண்ணுவது சரிதானா என்று சிந்தியுங்கள்!

உண்மைக்கு ஏற்றவாறு உங்கள் மனோ விருப்பத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர, உங்கள் மனோ இச்சைக்கு ஏற்றவாறு தான் உண்மை இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

எங்களைப் பொருத்தவரை நாங்கள் போதித்தவை தவறு என்று தெரிய வந்தால், பகிரங்கமாக அதை ஒப்புக் கொள்வோம். எங்களுடன் இருப்பவர்கள் எங்களிடமிருந்து இதனால் விலகினாலும, வர இருந்தவர்கள் இதன் காரணமாக வரத் தயங்கினாலும் ஜும்ஆ மேடைகள் எங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டாலும் எங்களுக்குக் கவலையில்லை. எங்களின் நிலை மட்டுமில்லை தமிழகத்தில் உள்ள தவ்ஹீத் வாதிகளின் நிலையே இதுதான்.

இலங்கையிலிருந்து இது சம்பந்தமாக உங்களைப் போல் பலர் எழுதியுள்ளனர். ‘இதுவரை செய்தவை தவறு என்று ஏற்றால் எந்த முகத்துடன் மக்களைச் சந்திப்பது?’ என்பது தான் அத்தனை கடிதங்களின் சாரமாக உள்ளது.

இவ்வாறு சிந்திக்கக் கூடிய - பேசக்கூடிய - எழுதக்கூடியவர்கள் மத்ஹபிலேயே இருந்திருக்கலாம். அங்கு தான் மாற்றத்திற்கு இடமில்லை. தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டால் அதை ஏற்கும் போக்கு இல்லை. தங்களின் முன்னோர்கள் கூறியதை எப்பாடுபட்டாவது நிலை நிறுத்தும் போக்கு அங்குதான் உள்ளது. தவறை ஒப்புக் கொண்டால் நமது கௌரவம் என்னாவது என்ற சிந்தனை அங்குள்ள ஆலிம்களிடம் தான் உள்ளது. தாங்கள் செய்து வந்தது தவறாகவே இருக்க முடியாது தங்கள் முன்னோர்களான அறிஞர்களிடம் எந்தத் தவறும் ஏற்பட முடியாது என்பவை மத்ஹபுக்கே சொந்தமானவை.

அந்தப் போக்கை நீங்களும் மாற்றிக் கொண்டு மற்றவர்களிடமிருந்தும் மாற்ற முயலுங்கள்!

‘இனிமேலாவது சர்ச்சைக்குரிய பிரச்சினை எதனையாவது எழுதும் போது சில அறிஞர்களுடன் ஆலோசனைகள் செய்து எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுமாறு ஆலோசனை கூறுகிறேன்’ என்று கடிதத்தின் முடிவில் கூறியிருக்கிறீர்கள்.

நான் எவரிடமும் ஆலோசனைகள் செய்யாமல், தன்னிச்சையாக எழுதியதாக - நீங்கள் அறியாத ஒன்றை அறிந்ததாகக் - குற்றம் சாட்டுகிறீர்கள்.

அடுத்து, ஆலோசனை செய்துவிட்டு எழுதினால, எந்தத் தவறும் ஏற்படாது என்ற நம்பிக்கை உங்களுக்கு இருப்பதை உங்களின் இந்தப்போக்கு காட்டுகின்றது.

மத்ஹபுகளை நியாயப்படுத்தி சவூதி அரசிலிருந்து ஒரு ஃபத்வா வந்ததைப் பார்த்திருப்பீர்கள். அது பல அறிஞர்கள் - நீங்கள் ஒப்புக் கொள்ளக கூடிய பல அறிஞர்கள் - பரிசீலனை செய்துதான் வெளியிடப்பட்டது.

மக்களின் விமர்சனத்திற்கு அஞ்சி, முடிவை மாற்றிக் கொள்ள விரும்பாதவர்களில் ஆயிரம் பேரிடம் ஆலோசனை செய்வதை விட, அல்லாஹ்வுக்கு அஞ்சி, தவறைப் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளக் கூடிய தனி ஒருவரின் கருத்தில் தவறுகள் குறைவாக இருக்கும்.

மக்களின் விமர்சனத்துக்கு முக்கியத்துவம் தரக்கூடிய உங்களிடமே ஆலோசனை கேட்டால் - தவறைப் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளக் கூடாது என்பது உங்கள் உள் மனதிலேயே இருப்பதால் - என்ன ஆலோசனை கூறுவீர்கள்? இப்போது பிரச்சினையைக் கிளப்ப வேண்டாம் என்பதைத் தவிர, வேறு எந்த ஆலோசனையையும் கூற மாட்டீர்கள். எனவே தான், இத்தகைய மனப்போக்கு இல்லாதவர்களிடம் மட்டும், அவ்வப்போது, சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஆலோசிக்கிறேன்.

உங்களின் கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்ட அடிப்படைக் கோளாறைச் சுட்டிக் காட்டவே இந்த விளக்கம். இனி ஜும்ஆவின் முன் ஸுன்னத் பற்றி நீங்கள் எழுதிய மறுப்பை ஆராய்கிறேன்.

ஜும்ஆவின் முன் ஸுன்னத்

மரியாதைக்குரிய நண்பர் அவர்களே! ஜும்ஆவுக்கு முன்னர் ஸுன்னத் இருக்க முடியாது என்ற கருத்துக்கு ஆதரவாக நீஙக்ள எடுத்து வைத்துள்ள ஆதாரங்களுக்கு இனி விளக்கமளிக்கிறேன்.

நபி (ஸல்) அவர்களுடைய நடைமுறையின் படி ஐவேளைத் தொழுகையின் முன்னால் உள்ள ஸுன்னத் தொழுகை அவ்வந்தத் தொழுகைக்கு அதான் சொல்லப்பட்ட பின்னால் தான் உண்டு. நபியவர்கள் எந்த ஒரு தொழுகைக்கேனும் அதன் முந்திய ஸுன்னதத்தாக அதானுக்கு முன்னதாகக் காணமுடியவில்லை.

ஜும்ஆவுக்கு முன்னால் ஸுன்னத் தொழுகை இருக்குமானால் அதற்கும் கூட இது விதிவிலக்கல்ல. அது லுஹர் தொழுகையின் நேரத்தில் இடம் பெறுவதாலும் அதற்காக அதான் சொல்லப்படுவதனாலும் அது கூட மேற்கண்ட நடைமுறையில் அடங்குவதாகவுள்ளது. நபியவர்கள் மிம்பருக்கு ஏறியபின் சொல்லப்பட்ட அதானை அடுத்து அவர்கள் கீழறங்கித் தொழுதிருக்க வேண்டும்.

இவ்விரு பத்திகளும் உங்களின் வாசகங்கள். அதன் மூலம் நீங்கள்

இரண்டு விஷயங்களைக் கூறுகிறீர்கள்.

லுஹருடைய நேரம்தான் ஜும்ஆவுடைய நேரம்.

பாங்குக்கு முன் எந்த ஸுன்னத்தையும் நபி (ஸல்) அவர்கள் தொழவில்லை.

உங்களின் இந்த இரண்டு வாதங்களுமே முற்றிலும் தவறானதாகும்.

ஜும்ஆவுடைய நேரம் லுஹர் நேரத்தில் தான் ஆரம்பிக்கிறது என்று நீங்கள் நம்புவதால் - வீட்டில் தொழுத தொழுகை ஜும்ஆவின் நேரம் வருவதற்கு முன் தொழுத தொழுகையாகும். எனவே அது ஜும்ஆவின் முன் ஸுன்னத்தாக இருக்க முடியாது என்ற கருத்தில் தான் இதைக் கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பிறகுதான் லுஹர் நேரம் வருகின்றது. ஆனால் ஜும்ஆத் தொழுகையை சூரியன் உச்சிக்கு வருவதற்கு முன்பே தொழலாம். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

صحيح مسلم

28 - (858) وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَبُو بَكْرٍ: حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا حَسَنُ بْنُ عَيَّاشٍ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: «كُنَّا نُصَلِّي مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ نَرْجِعُ فَنُرِيحُ نَوَاضِحَنَا»، قَالَ حَسَنٌ: فَقُلْتُ لِجَعْفَرٍ: فِي أَيِّ سَاعَةٍ تِلْكَ؟ قَالَ: «زَوَالَ الشَّمْسِ»

நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆத் தொழுவார்கள். அதன் பின்னர் நாங்கள் சூரியன் உச்சியிலிருந்து சாயும் நேரத்தில் எங்கள் ஒட்டகங்களிடம் சென்று அதற்கு ஓய்வளிப்போம்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி)

நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், நஸாயீ.

ஜும்ஆத் தொழுகை முடிந்த பின்பே சூரியன் உச்சியிலிருந்து சாயத் துவங்கியது என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்க முடியும்.

صحيح البخاري

939 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ، بِهَذَا، وَقَالَ: «مَا كُنَّا نَقِيلُ وَلاَ نَتَغَدَّى إِلَّا بَعْدَ الجُمُعَةِ»

ஜும்ஆத் தொழுகை முடிந்த பின்பே நாங்கள் காலை உணவு அருந்துவோம். கைலூலா (சூரியன் உச்சிக்கு வருவதற்கு முன் கொள்ளப்படும்) உறக்கம் கொள்வோம்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரழி)

நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸாயீ, திர்மிதி, இப்னுமாஜா.

சில அறிவிப்புக்களில் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் என்றும் இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் இரண்டு குத்பாக்கள் நடத்தி அதில் போதனை செய்து காஃப் அத்தியாயம் போன்றதை அதில் ஓதி ஸுரத்துல் ஜும்ஆ, ஸுரத்துல் முனாபிகீன் ஆகிய அத்தியாயங்களை ஓதித் தொழுவித்த பிறகு தான்  சூரியன் உச்சியிலிருந்து சாய ஆரம்பித்துள்ளது. சூரியன் உச்சி சாய்வதற்கு எவ்வளவோ நேரத்துக்கு முன் நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆத் தொழுதுள்ளனர். (இத்தனைக்கும் ஆதாரங்கள் உள்ளன)

சூரியன் உச்சி சாய்ந்த பிறகும் ஜும்ஆத் தொழுதுள்ளனர். இரண்டுக்கும் ஆதாரங்கள் உள்ளன. ஜும்ஆவுடைய நேரம் சூரியன் உச்சி சாய்வதற்கு முன்பே வந்து விட்டாலும் நேரம் வந்த உடனேயே தாமதமின்றி அதைத் தொழ வேண்டிய கட்டாயம் இல்லை. இதன் காரணமாகத் தான் சூரியன் சாய்ந்த பிறகும் நபி (ஸல்) அவர்கள் தொழுதுள்ளனர்.

இதை நீங்கள் கவனத்தில் வையுங்கள்!

பாங்குக்கு முன்னர் எந்தத் தொழுகையுடைய முன் ஸுன்னத்தையும் நபி (ஸல்) அவர்கள் தொழுததில்லை. ஜும்ஆவின் பாங்கு இமாம் மிம்பரில் ஏறிய பிறகு தான் கூறப்பட்டு வந்தது ஜும்ஆவின் பாங்குக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் தொழவில்லை என்பதால் முன் ஸுன்னத் கிடையாது என்ற உங்களின் அடுத்த வாதத்தைப் பார்ப்போம்.

பாங்குக்கு முன்னால் நபி (ஸல்) அவர்கள் ஸுன்னத் தொழுததில்லை என்ற அடிப்படையில் உங்கள் வாதத்தை எழுப்பியுள்ளீர்கள்.

ஜும்ஆவுடைய பாங்குக்கு முன்னால் நபி (ஸல்) அவர்கள் தொழுதிருப்பதற்குச் சான்று உள்ளது.

سنن أبي داود

1128 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، أَخْبَرَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، قَالَ: «كَانَ ابْنُ عُمَرَ يُطِيلُ الصَّلَاةَ قَبْلَ الْجُمُعَةِ، وَيُصَلِّي بَعْدَهَا رَكْعَتَيْنِ فِي بَيْتِهِ، وَيُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُ ذَلِكَ»

இப்னு உமர் (ரழி) அவர்கள் ஜும்ஆவுக்கு முன்னுள்ள தொழுகையை நீட்டித் தொழுவார்கள். ஜும்ஆவுக்குப் பின்னால் தமது வீட்டில் இரண்டு ரக்ஆத்கள் தொழுபவர்களாகவும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு தொழுதிருப்பதாகவும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: நாபிஃஉ

நூற்கள்: அபுதாவூத், இப்னு ஹிப்பான்.

ஜும்ஆவுக்கு முன்னுள்ள தொழுகையை என்ற சொல்லில் இருந்து ஜும்ஆவுக்கு முன்னால் ஒரு தொழுகை உண்டு என்பதை சந்தேகமின்றி அறியலாம். அது தஹிய்யத் மஸ்ஜித் அல்ல என்பதையும் அறியலாம்.

صحيح البخاري

731 - حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ قَالَ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ حُجْرَةً قَالَ حَسِبْتُ أَنَّهُ قَالَ مِنْ حَصِيرٍ فِي رَمَضَانَ فَصَلَّى فِيهَا لَيَالِيَ فَصَلَّى بِصَلَاتِهِ نَاسٌ مِنْ أَصْحَابِهِ فَلَمَّا عَلِمَ بِهِمْ جَعَلَ يَقْعُدُ فَخَرَجَ إِلَيْهِمْ فَقَالَ قَدْ عَرَفْتُ الَّذِي رَأَيْتُ مِنْ صَنِيعِكُمْ فَصَلُّوا أَيُّهَا النَّاسُ فِي بُيُوتِكُمْ فَإِنَّ أَفْضَلَ الصَّلَاةِ صَلَاةُ الْمَرْءِ فِي بَيْتِهِ إِلَّا الْمَكْتُوبَةَ

கடமையான தொழுகைகள் தவிர எனைய தொழுகைகளை வீட்டில் தொழுவதே சிறப்பு என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூற்கள்: புகாரி, முஸ்லிம்.

அதற்கேற்ப ஜும்ஆவுக்கு முன்னுள்ள தொழுகையை நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டிலேயே தொழுதுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் அமர்ந்தவுடன் தான் பாங்கு சொல்லப்படும் என்பதால் - பாங்குக்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆவுக்கு முன்னுள்ள தொழுகையைத் தொழுதிருப்பதாக ஹதீஸ் கூறுவதால் - ஜும்ஆவுடைய ஸுன்னத்தைப் பாங்குக்கு முன்பும் தொழலாம் என்பது தெளிவாகவில்லையா?

பாங்குக்கு பிறகுதான் முன் ஸுன்னத் தொழ வேண்டும் என்று நேரடியான கட்டளை வந்திருந்தால் கூட அது ஜும்ஆவுக்குப் பொருந்தாது. ஏனெனில் பாங்குக்கு முன் - வீட்டில் - நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆவுக்கு முன்னுள்ள தொழுகையைத் தொழுதிருப்பதற்குத் தௌவான சான்று உள்ளது. எனவே அப்படித் தடை வந்தால் கூட ஜும்ஆவைத் தவிர என்றே அதற்குப் பொருள் கொள்ள வேண்டும்.

صحيح ابن حبان

2455 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو الْغَزِّيُّ،قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ سَعِيدٍ الْقُرَشِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُهَاجِرٍ، عَنْ ثَابِتِ بْنِ عَجْلَانَ، عَنْ سُلَيْمِ بْنِ عَامِرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ صَلَاةٍ مَفْرُوضَةٍ إِلَّا وَبَيْنَ يَدَيْهَا رَكْعَتَانِ»

கடமையான எந்தத் தொழுகைக்கு முன்னாலும் இரண்டு ரக்அத்துக்கள் இல்லாமலில்லை என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரழி)

நூல்: இப்னு ஹிப்பான்.

ஜும்ஆத் தொழுகை கடமையான தொழுகை என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் அதற்கு முன்னால் இரண்டு ரக்ஆத்துக்கள் இருப்பதையும் ஏற்றாக வேண்டும்.

صحيح مسلم 

103 - (728) وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ النُّعْمَانِ بْنِ سَالِمٍ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ، عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ أُمِّ حَبِيبَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يُصَلِّي لِلَّهِ كُلَّ يَوْمٍ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً تَطَوُّعًا، غَيْرَ فَرِيضَةٍ، إِلَّا بَنَى اللهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ، أَوْ إِلَّا بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ» قَالَتْ أَمُّ حَبِيبَةَ: «فَمَا بَرِحْتُ أُصَلِّيهِنَّ بَعْدُ» وقَالَ عَمْرٌو: «مَا بَرِحْتُ أُصَلِّيهِنَّ بَعْدُ»، وقَالَ النُّعْمَانُ مِثْلَ ذَلِكَ.

யார் தினமும் பன்னிரண்டு ரக்அத்துக்கள் தொழுகிறாரோ அவருக்கு சுவர்க்கத்தில் மாளிகை எழுப்பப்படும்.

நூற்கள்: முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா.

கடமையான தொழுகைக்கு முன்னும் பின்னும் தொழ வேண்டிய தொழுகையைப் பற்றிக் கூறும்போது தினமும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஜும்ஆவுக்கு முன்னர் ஸுன்னத் இல்லை என்று கூறினால் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இந்தப் பன்னிரண்டு ரக்அத்துக்கள் ஜும் ஆ நாளில் இல்லாமல் போய்விடுமே. ஜும்ஆவைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் விதிவிலக்களித்ததற்கு உங்களிடம் ஆதாரம் ஏதும் உள்ளதா?

இவற்றையெல்லாம் நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் ஜும்ஆவுக்கு முன் ஸுன்னத் இல்லை எனக் கூற மாட்டீர்கள்.

நாம் உங்களிடம் கேட்க விரும்புவது இதுதான்.

ஒவ்வொரு கடமையான தொழுகைக்கு முன்னும் இரண்டு ரக்அத்துக்கள் உள்ளன என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள். ஜும்ஆவுக்கு அது பொருந்தாது என்றால் நேரடியாக அதை எடுத்துக் காட்டுங்கள்.

நபி (ஸல்) அவர்கள் பாங்குக்கு முன் ஜும்ஆவுக்கு முன்னுள்ள தொழுகையைத் தொழுதுள்ளனர். ஜும்ஆவின் முன் ஸுன்னத்தைப் பாங்குக்கு முன் வீட்டில் தொழலாம் என்று தெரிகிறதா? இல்லையா?

லுஹருடைய நேரம் தான் ஜும்ஆவுடைய நேரம் என்று கூறும் நீங்கள் லுஹருடைய முன் கூறப்பட்ட ஸுன்னத் தான் ஜும்ஆவுக்கும் என்று ஏன் கூறவில்லை?

இதற்கெல்லாம் விளக்கம் தாருங்கள்! சரியான விளக்கம் தந்தால் ஏற்றுக் கொள்கிறேன்.

அடுத்து சர்ச்சைக்குரிய அந்த ஹதீஸை எடுத்துக் கொள்வோம். நீ இங்கே வருவதற்கு முன் என்பது வேறு ஹதீஸ்களுடன் முரண்படுகிறது என்கிறீர்கள்.

நாம் சுட்டிக் காட்டிய இந்த மூன்று ஹதீஸ்களுடன் அது மிகவும் ஒத்துப் போகிறது. நபி (ஸல்) அவர்களும் வீட்டில் தொழுதுள்ளதால் வீட்டில் தொழுதாயா? என்று கேட்பது பொருத்தமாக உள்ளது. இந்த நான்கும் சேர்ந்து ஜும்ஆவுக்கு முன் ஸுன்னத் உண்டு என்பதை ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன.

வேறு சில அறிவிப்புக்களில் உங்களில் எவரேனும் இமாம் குத்பா ஓதும்போது வந்தால் அவர் சுருக்கமாக இரண்டு ரக்அத்துக்கள் தொழவும் என்று பொதுவான கட்டளை வந்துள்ளது. யாரேனும் வந்தால் என்ற வாசகம் வரக்கூடிய யாரையும் குறிக்கக்கூடியது. இது வரக்கூடியவரையே குறிக்கிறது. வீட்டில் தொழுவதைக் கூறவில்லை. எனவே இங்கே வருவதற்கு முன்னால் என்பது ஏற்க முடியாதது என்று கூறியுள்ளீர்கள்.

இரண்டும் முரணாபாடாகத் தோன்றுவதால் இவ்வாறு நீங்கள் கூறியுள்ளீர்கள். எந்த இரண்டு அறிவிப்புக்களுக்கிடையேனும் முரண்பாடு தென்பட்டால் உடனே ஒன்றை மறுத்து விடக்கூடாது. முரண்பாடில்லாமல் இரண்டையும் இணைத்து விளக்கம் கூற முடியுமா என்று முயற்சிக்க வேண்டும். முடியுமானால் அவ்வாறே விளக்கம் கூற வேண்டும்.

இரண்டு ஹதீஸ்களுக்கிடையிலும் எவ்வித முரண்பாடுமின்றி விளக்கம் கூற வழியிருக்கிறது என்பது எனது அபிப்பிராயம்.

இரண்டு அறிவிப்புக்களிலும் வரக்கூடிய நபர் ஒருவர் தாம் என்பதை நீங்களும் ஒப்புக் கொண்டுள்ளீர்கள். அதை நாமும் ஒப்புக்கொள்கிறோம்.

வந்த மனிதரிடம் நபி (ஸல்) அவர்கள் வருவதற்கு முன் தொழுதுவிட்டாயா? எனக் கேட்கிறார்கள். அவர் இல்லை என்கிறார். நபி (ஸல்) அவர்கள் எழுந்து தொழச் சொல்கிறார்கள். இது ஒரு ஹதீஸ்.

அதே மனிதரிடம் நீ எழுந்து இரண்டு ரக்ஆத்துக்கள் தொழு! அவ்விரண்டையும் சுருக்கமாகத் தொழு! என்று கூறிவிட்டு உங்களில் எவரேனும் இமாம் குத்பா ஓதும் போது வந்தால் அவர் சுருக்கமாக இரண்டும் ரக்ஆத்துக்கள் தொழட்டும் என்றார்கள். இது மற்றொரு ஹதீஸ்.

இரண்டையும் ஒன்றாக இணைத்தால் எந்த முரண்பாடுமே இல்லை.

உங்களில் யாரேனும் என்பது பொதுவாக இருந்தாலும் கூறப்பட்ட சந்தர்ப்பத்தைப் பொருத்து அது யாரைக் குறிக்கிறது என்பது மாறுபடும்.

நீ வீட்டிலேயே தொழுது விட்டாயா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டு அவர் இல்லை என்று கூறிய பின் அவரை எழுந்து தொழச் சொல்லிவிட்டு இதைக் கூறியிருக்கிறார்கள். வீட்டிலேயே தொழாமல் வந்த காரணத்துக்காக நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் அந்த நிலையில் வரக் கூடியவரையே அது குறிக்கும்.

உங்களில் யாரேனும் வந்தால் - அதாவது இவரைப் போல் வீட்டில் தொழாமல் வந்தால் - என்று பொருள் கொண்டால் முரண்பாடு ஏதுமில்லை.

எந்தக் காரணத்துக்காக எந்தச் சந்தர்ப்பத்துக்காகக் கூறப்பட்டது என்பதைக் கருத்தில் கொள்ளாமல் உங்களில் யாரேனும் வந்தால் என்பதை ஆராய்வதால் தான் முரண்பாடாகத் தோன்றுகிறது. அதைக் கருத்தில் கொண்டால் முரண்பாடாகத் தோன்றாது.

அப்போதும் கூட யாரேனும் ஜும்ஆவின் முன் ஸுன்னத்தை வீட்டில் தொழாமல் இமாம் குத்பா ஓதும் போது வந்தால் அவர் இரண்டு ரகஅத்துக்கள் தொழ வேண்டும் என்றே நாம் கூறுகிறோம். இரண்டுக்கும் செயல் வடிவம் கொடுக்கிறோம்.

நீங்கள் எடுத்த எடுப்பிலேயே ஒர் அறிவிப்பை மறுப்பதிலேயே குறியாக இருக்கிறீர்கள். ஒன்றைச் செயல்படுத்தி மற்றொன்றைச் செயல்படுத்த மறுக்கிறீர்கள்.

நாம் கூறும் விளக்கம் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு ஒத்ததாகவும் அமைந்துள்ளது.

ஜும்ஆவில் இரண்டு பாங்கு சொல்லப்படுவது இரண்டு பாங்குக்கு இடையே அஸ்ஸலாத்து ஸுன்னத்துல் ஜும்ஆ என்று கூறுவது உடனேயே அனைவரும் தொழுவது என்றெல்லாம் இலங்கையில் உள்ள நடைமுறையைக் கண்டித்து சில பக்கங்கள் எழுதியுள்ளீர்கள் அதை நாமும் கண்டிப்பதால் அதற்கு விளக்கமளிக்க வேண்டியதில்லை.

முக்கியமான உங்கள் வாதத்துக்கு மட்டுமே விளக்கமளித்துள்ளேன்.

ஜும்ஆவுக்கு முன் ஸுன்னத் இல்லை என்பதை நீங்கள் தௌவான சான்றுகளின் அடிப்படையில் நிரூபித்தால் அதை ஏற்க நான் தயாராக உள்ளேன் என்று கூறி முடிக்கிறேன்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account