Sidebar

27
Sat, Jul
5 New Articles

இப்ராஹீம் நபி துஆ செய்ய மறுத்தாரா?

தவ்ஹீதுக்கு எதிரானவை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்ட போது....?

இறையச்சமும், தியாகமும், வீரமும் நிறைந்த இப்ராஹீம் (அலை) அவர்களின் வரலாற்றை நாம் அறிவோம். "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் சென்ற நபிமார்களில் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு முதலிடம் உண்டு'' என்பதையும் நாம் தெரிந்திருக்கிறோம்.

மிகப்பெரும் கொடுங்கோல் மன்னன் முன்னிலையில் கொஞ்சமும் அஞ்சாமல் ஓரிறைக் கொள்கையை துணிவுடன் எடுத்துச் சொன்னார்கள். அதற்காக எண்ணற்ற கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். அந்தக் கொடுமைகளுக்கெல்லாம் சிகரமாக மிகப்பெரும் நெருப்புக் குண்டத்தை வளர்த்து அதில் இப்ராஹீம் (அலை) அவர்கள் தூக்கி எறியப்பட்டார்கள். அல்லாஹ் தன் பேராற்றலால், அந்த மாபெரும் நெருப்பைக் குளிரச் செய்து அவர்களைக் காப்பாற்றினான். இந்த அற்புத வரலாற்றை திருக்குர்ஆன் மிகவும் அழகாக நமக்கு எடுத்துரைக்கின்றது.

இந்த உண்மை வரலாற்றுடன் பொய்யான கதை ஒன்றையும் சிலர் கலந்து விட்டிருக்கிறார்கள். அந்தக் கற்பனைக் கதை மக்கள் மன்றங்களில் அடிக்கடி சொல்லப்பட்டும் வருகின்றது. குர்ஆனும், நபிமொழியும் போதிக்கின்ற தத்துவத்திற்கு இந்தக் கதை முரண்படுவதாலும் அந்தக் கதையை வைத்து சிலர் தவறான வழியை நேர் வழிபோல் காட்ட முயற்சிப்பதாலும் அதனைத் தெளிவு படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. முதலில் அந்தத் தவறான கதை என்னவென்று பார்ப்போம். பிறகு அது எப்படித் தவறாக உள்ளது என்பதை விளக்குவோம்!

இப்ராஹீம் (அலை) அவர்கள் நெருப்புக் குண்டத்தில் எறியப்படுவதற்குச் சற்று முன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து இப்ராஹீம் (அலை) அவர்களுடன் பின்வருமாறு உரையாடினார்களாம்.

ஜிப்ரீல் (அலை) : இப்ராஹீமே! இந்த இக்கட்டான நேரத்தில் உமக்கு எதுவும் தேவையா?

இப்ராஹீம் (அலை) : உம்மிடம் எனக்கு எந்தத் தேவையும் இல்லை.

ஜிப்ரீல் (அலை): என்னிடம் உமக்குத் தேவை எதுவும் இல்லையானால் உம்மைப் படைத்த இறைவனிடம் இந்தத் துன்பத்திலிருந்து விடுவிக்கும்படிக் கேளும்!

இப்ராஹீம் (அலை) : இறைவனிடம் நான் என் துன்பத்திலிருந்து விடுவிக்கும் படி கேட்க வேண்டியதில்லை. நான் மிகப்பெரும் ஆபத்தில் சிக்கிக் கொண்டிருப்பது அந்த இறைவனுக்குத் தெரியாதா என்ன? நான் எதற்காக அவனிடம் கேட்க வேண்டும்?

இப்படி ஒரு உரையாடல் நடந்ததாகச் சிலர் கற்பனை செய்துள்ளனர். இதனை அல்லாஹ் திருக்குர்ஆனில் சொல்லவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லவில்லை. சிலர் தங்களின் சொந்தக் கற்பனையால் உருவாக்கியது தான் இந்தக் கதை.

அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவன் என்பதில் ஐயமில்லை.

"அல்லாஹ்வுக்கு எல்லாம் தெரியும்'' என்பதற்காக நாம் நமது தேவைகளை அல்லாஹ்விடம் கேட்காமலிருக்க அனுமதி உண்டா? மிகச் சிறந்த நபியாகிய இப்ராஹீம் (அலை) அவர்கள் இப்படிச் சொல்லி இருப்பார்களா? என்று ஆராயும் போது நிச்சயம் அப்படிச் சொல்லி இருக்க முடியாது என்ற முடிவுக்குத் தான் வர முடியும்.

ஏனெனில், இப்ராஹீம் (அலை) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கள் தேவைகளை அல்லாஹ்விடம் முறையிட்டிருக்கிறார்கள். "எனது தேவைகள் அல்லாஹ்வுக்குத் தெரியும்'' என்று பிரார்த்தனையை அவர்கள் விடவில்லை. "பிரார்த்தனை நம்முடைய அடிமைத் தனத்தையும், அல்லாஹ்வின் மகத்துவத்தையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் மிகப்பெரும் வணக்கம்'' என்பதை இப்ராஹீம் (அலை) அவர்கள் நன்றாகவே தெரிந்திருந்தார்கள் அவர்கள் அல்லாஹ்விடம் கேட்ட பல துஆக்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான். அவற்றில் சிலவற்றைக் கீழே காண்போம்.

"இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!'' என்று இப்ராஹீம் கூறிய போது, "(என்னை) மறுப்போருக்கும் சிறிது காலம் வசதிகள் அளிப்பேன்; பின்னர் அவர்களை நரக வேதனையில் தள்ளுவேன்; சேருமிடத்தில் அது மிகவும் கெட்டது'' என்று அவன் கூறினான்.

திருக்குர்ஆன் 2:126

அந்த ஆலயத்தின் அடித்தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது "எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்'' (என்றனர்.)

திருக்குர்ஆன் 2:127

எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 2:128

எங்கள் இறைவா! அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர், உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப் படுத்துவார். நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன் (என்றனர்.)

திருக்குர்ஆன் 2:129

என் இறைவா! எனக்கு அதிகாரத்தை அளிப்பாயாக! என்னை நல்லோருடன் சேர்ப்பாயாக! பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக! இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும் ஆக்குவாயாக! என் தந்தையை மன்னிப்பாயாக! அவர் வழி தவறியவராக இருக்கிறார். (மக்கள்) மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாளில் என்னை இழிவுபடுத்தி விடாதே!

திருக்குர்ஆன் 26:83, 84, 85, 86, 87

என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்.)

திருக்குர்ஆன் 37: 100

"எங்கள் இறைவா! (உன்னை) மறுப்போருக்குச் சோதனையாக எங்களை ஆக்கி விடாதே! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் இறைவா! நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' (என்றும் பிரார்த்தித்தார்.)

திருக்குர்ஆன் 60:5

"இறைவா! இவ்வூரை அபயமளிக்கக் கூடியதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக!'' என்று இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 14:35

இறைவா! இவை மனிதர்களில் அதிகமானோரை வழி கெடுத்து விட்டன. என்னைப் பின்பற்றுபவர் என்னைச் சேர்ந்தவர். எனக்கு யாரேனும் மாறு செய்தால் நீ மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 14:36

எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காகக் குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!

திருக்குர்ஆன் 14:37

எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பவற்றையும், வெளிப்படுத்தியவற்றையும் நீ அறிவாய். பூமியிலோ, வானத்திலோ அல்லாஹ்வுக்கு எதுவுமே மறையாது.

திருக்குர்ஆன் 14:38

இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன்.

திருக்குர்ஆன் 14:39

என் இறைவா! என்னையும், என் சந்ததிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக!

திருக்குர்ஆன் 14:40

எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக! (எனவும் இப்ராஹீம் கூறினார்)

திருக்குர்ஆன் 14:41

மேலே கூறப்பட்ட அனைத்தும் இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனைகள். அல்லாஹ்வுக்கு எல்லாம் தெரியும் என்று அவர்கள் மேற்கூறிய சந்தர்ப்பங்களில் பிரார்த்தனை செய்யாமல் இருக்கவில்லை. மாறாகத் தம்முடைய இயலாமையையும், பலவீனத்தையும் வெளிப்படுத்திக் காட்டுவதற்காகத் தம்முடைய பல தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டிருக்கிறார்கள். தம்முடைய தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டு விட்டு பின்வருமாறு அவர்கள் கூறவும் செய்கிறார்கள்.

எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பவற்றையும், வெளிப்படுத்தியவற்றையும் நீ அறிவாய். பூமியிலோ, வானத்திலோ அல்லாஹ்வுக்கு எதுவுமே மறையாது.

திருக்குர்ஆன் 14:38

தன்னுடைய தேவைகள் இறைவனுக்குத் தெரியும் என்பதை ஒப்புக் கொள்ளும் அதே நேரத்தில் துஆக் கேட்க அவர்கள் மறுக்கவில்லை என்பது தெளிவாகின்றது.

அப்படிப்பட்ட இப்ராஹீம் (அலை) அவர்கள் மிகப் பெரும் இக்கட்டில் மாட்டிக் கொண்ட நேரத்தில் எப்படி துஆச் செய்ய மறுத்திருப்பார்கள். அதுவும் மிகப் பெரும் மலக்கு ஒருவர் நினைவூட்டிய பின்னர் எப்படி மறுத்திருப்பார்கள்? இதிலிருந்தே அந்த உரையாடல் கற்பனையானது என்பதை அறியலாம்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் மட்டுமல்ல இன்னும் பல நபிமார்கள் தங்களுக்குக் கஷ்டங்கள் ஏற்பட்ட போது "இறைவனுக்குத் தெரியும்'' என்று அல்லாஹ்விடம் முறையிடாமல் இருந்ததில்லை. தங்கள் தேவைகளை அல்லாஹ்விடம் கேட்காமல் இருந்ததில்லை.

ஆதம் (அலை) அவர்கள் தவறு செய்த பின் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ததை திருக்குர்ஆன் 7:23 வசனத்திலும்

அய்யூப் (அலை) அவர்கள் தமக்குத் துன்பம் ஏற்பட்ட போது அல்லாஹ்விடம் முறையிட்டதை திருக்குர்ஆன் 21:83 வசனத்திலும்

யூனுஸ் (அலை) அவர்கள் தாம் செய்த தவறுக்கு மன்னிப்புக் கோரியதை திருக்குர்ஆன் 21:87 வசனத்திலும்

ஈஸா (அலை) அவர்கள் தம்முடைய தேவையை அல்லாஹ்விடம் கேட்டதை திருக்குர்ஆன் 5:114 வசனத்திலும்

ஜக்கரியா (அலை) அவர்கள் தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று துஆ செய்ததை திருக்குர்ஆன் 3:38 வசனத்திலும்

நூஹ் (அலை) அவர்கள் தன் சமுதாயத்திற்கு எதிராக துஆச் செய்ததை திருக்குர்ஆன் 21:76 வசனத்திலும்

யாஃகூப் (அலை) அவர்கள் தம் மகனைப் பிரிந்த வேதனையை அல்லாஹ்விடம் முறையிட்டதாக திருக்குர்ஆன் 12: 86 வசனத்திலும்

தனக்கு மிகப் பெரும் ஆட்சி வேண்டும் என்று சுலைமான் (அலை) அவர்கள் துஆச் செய்ததாக திருக்குர்ஆன் 38:35 வசனத்திலும்

தன் சமுதாயத்தினரின் தீய செயல்களிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காக்கும்படி லூத் (அலை) அவர்கள் துஆ செய்ததை திருக்குர்ஆன் 26:169 வசனத்திலும்

தன் சமுதாயத்திற்கு எதிராக ஷுஐபு (அலை) அவர்கள் செய்த பிரார்த்தனையை திருக்குர்ஆன் 7:89 வசனத்திலும்

தமக்கு விரிவான ஞானத்தையும் இன்னும் பல தேவைகளையும் மூஸா (அலை) அவர்கள் கேட்டதாக திருக்குர்ஆன் 20:25-32 வசனங்களிலும்

அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

மேற்கூறிய நபிமார்களில் எவரும் "தங்கள் தேவைகள் இறைவனுக்குத் தெரியும்'' என்பதை உணராதவர்களில்லை! தன்னிடம் கேட்பதை அல்லாஹ் விரும்புகிறான் என்பதற்காக அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டுள்ளார்கள்.

ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிஃபத் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கூட்டத்தினர் இந்தக் கற்பனையை ஆதாரமாக வைத்து "அல்லாஹ்விடம் கேட்காமலிருப்பது தான் உயர்ந்த நிலை! அல்லாஹ்விடம் துஆச் செய்வது அல்லாஹ்வையே சந்தேகிப்பது ஆகும்'' என்று மக்களை வழி கெடுத்து வருகின்றனர்.

"நபிமார்கள் அடைய முடியாத உயர்ந்த நிலை இருப்பதாக நம்புவது எவ்வளவு பெரும் பாவம்'' என்று அவர்களுக்குப் புரியவில்லை.

அல்லாஹ் தனது திருமறையில் பல இடங்களில் துஆச் செய்யும் படியும், தேவைகளைக் கேட்கும்படியும், மன்னிப்புக் கேட்கும் படியும் நமக்கு ஆணையிடுகிறான். ஒரு இடத்தில் கூட என்னிடம் கேட்காமலிருங்கள் என்று சொல்லவில்லை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

"என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்'' என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.

திருக்குர்ஆன் 40:60

"எனது இறைவன் நீதியைக் கட்டளையிட்டுள்ளான்'' எனக் கூறுவீராக! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்களின் கவனங்களை ஒருமுகப்படுத்திக் கொள்ளுங்கள்! வணக்கத்தை அவனுக்கே உளத்தூய்மையுடன் செய்து, அவனிடமே பிரார்த்தியுங்கள்! உங்களை அவன் முதலில் படைத்தவாறே மீள்வீர்கள்!

திருக்குர்ஆன் 7:29

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்.

திருக்குர்ஆன் 7:55

இந்த வசனங்கள் எல்லாம் பிரார்த்தனை செய்ய வேண்டியதன் அவசியத்தை நமக்கு உணர்த்துகின்றன.

தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது.

திருக்குர்ஆன் 18:28

தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டாதீர்! அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே அவர்களை நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராவீர்!

திருக்குர்ஆன் 6:52

"துஆச் செய்வதை அல்லாஹ் விரும்புகிறான்; வரவேற்கிறான்; தன் நபியையும் அத்தகைய மக்களுடன் சேர்ந்திருக்கும்படி கட்டளையிடுகிறான்'' என்பதை இவ்வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. தாங்கள் அதிக ஞானம் பெற்று விட்டதாகக் கருதிக் கொண்டு அல்லாஹ்விடம் துஆச் செய்யாமலிருக்க எவருக்கும் அனுமதி இல்லை என்பதை நாம் புரிந்து கொண்டோம்.

"துஆ என்பதே ஒரு வணக்கமாகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, "இந்த இடத்தில் நீங்கள் விரும்பினால் பின்வரும் குர்ஆன் வசனத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். "என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்'' என்று உங்கள் இறைவன் கூறுகிறான் (திருக்குர்ஆன் 40:60) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 3170, திர்மிதீ 2895, 3170 இப்னுமாஜா 3818

மேற்கண்ட நபிமொழி "துஆ ஒரு வணக்கம்' என்பதையும், அந்த வணக்கத்தைப் புறக்கணிப்பவர்கள் நரகில் இழிந்த நிலையில் நுழைவார்கள் என்பதையும் நமக்கு எச்சரிக்கின்றது.

இந்த எச்சரிக்கைக்கு முரணாக மிகச் சிறந்த நபி ஒருவர் இருந்திருக்க முடியுமா? நரகில் சேர்க்கக் கூடிய இந்த வார்த்தையை ஒரு நபி சொல்லி இருக்க முடியுமா? என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்!

4564 حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ ، حَدَّثَنَاإِسْرَائِيلُ ، عَنْ أَبِي حَصِينٍ ، عَنْ أَبِي الضُّحَى ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : كَانَ آخِرَ قَوْلِ إِبْرَاهِيمَ حِينَ أُلْقِيَ فِي النَّارِ حَسْبِيَ اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ.

இப்ராஹம் (அலை) நெருப்பில் எறியப்பட்ட போது "எனக்கு அல்லாஹ்வே போதுமானவன், அவனே என்னுடைய மிகச் சிறந்த பொருப்பாளனாகவும் இருக்கிறான்'' எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

ஆதாரம் : புகாரி 4564

இப்ராஹீம் (அலை) அவர்கள் நெருப்பில் எறியப்பட்ட போது துஆச் செய்துள்ளதை மிகத் தெளிவாகவே இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது.

எனவே இப்ராஹீம் (அலை) அவர்கள் துஆச் செய்ய மறுத்தார்கள் என்பது முற்றிலும் ஆதாரமற்ற, குர்ஆன் போதனைக்கு முரண்பட்ட கற்பனை தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இந்த நபிமொழியிலிருந்து இப்ராஹீம் (அலை) அவர்கள் தம்முடைய தேவையைக் கேட்க மறுத்திருக்க மாட்டார்கள் என்பது தெளிவு.

துஆ கேட்காமலிருப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது. அத்தகையவர்களை அல்லாஹ் கோபிக்கிறான் என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு எண்ணற்ற துஆக்களைக் கற்றுத் தந்துள்ளனர்.

இது போன்ற கதைகளும், அது போதிக்கின்ற தவறான வழிகாட்டுதல்களும் தவிர்க்கப்பட்டாக வேண்டும்.

அல்லாஹ் உண்மை மார்க்கத்தை அறிந்து அதன்படி செயல்பட அருள் புரிவானாக!

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account