Sidebar

19
Fri, Apr
4 New Articles

பெருநாள் தினத்தில் சப்தமாக தக்பீர் கூறலாமா?

பெருநாள் வணக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

பெருநாளில் சப்தமிட்டு தக்பீர் கூறலாமா?

நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதற்காக தக்பீர் கூறுவது முஸ்லிம்கள் மீது கடமையாகும். இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

صحيح البخاري

971 – حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ عَاصِمٍ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: «كُنَّا نُؤْمَرُ أَنْ نَخْرُجَ يَوْمَ العِيدِ حَتَّى نُخْرِجَ البِكْرَ مِنْ خِدْرِهَا، حَتَّى نُخْرِجَ الحُيَّضَ، فَيَكُنَّ خَلْفَ النَّاسِ، فَيُكَبِّرْنَ بِتَكْبِيرِهِمْ، وَيَدْعُونَ بِدُعَائِهِمْ يَرْجُونَ بَرَكَةَ ذَلِكَ اليَوْمِ وَطُهْرَتَهُ»

பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், கூடாரத்திலுள்ள குமரிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களைக் கூடப் புறப்படச் செய்ய வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டோம். பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) ஆண்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு ஆண்கள் தக்பீர் சொல்லும் போது அவர்களும் தக்பீர் சொல்வார்கள். ஆண்கள் பிரார்த்திக்கும் போது அவர்களும் பிரார்த்திப்பார்கள். அந்த நாளின் பரகத் எனும் அருளையும், புனிதத்தையும் எதிர்பார்ப்பார்கள்.

அறிவிப்பவர் : உம்மு அத்திய்யா (ரலி)

நூல் : புகாரி 971

பெருநாள் அன்று தக்பீர் கூற வேண்டுமென்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையாகும். இதனைப் பின்பற்றுவது அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையாகும்.

தக்பீர் கூறுதல் என்றால் அல்லாஹூ அக்பர் என்ற வாசகத்தைக் கூறுவது தான்.

''கப்பர” என்ற அரபி வார்த்தைக்கு ''அல்லாஹூ அக்பர்” என்று கூறினான் என்பது தான் பொருளாகும்.

நபியவர்களும் இந்தப் பொருளில் தான் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

பெருநாளன்று ''அல்லாஹூ அக்பர்” என்ற வாசகத்தை விட அதிகப்படியான வாசகங்களைக் கொண்டு நபியவர்கள் தக்பீர் கூறினார்கள் என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் கிடையாது.

மேலும் இந்த தக்பீர் வாசகத்தைப் பெருநாளன்று நபியவர்கள் சப்தமிட்டுக் கூறினார்கள் என்பதற்கோ, அல்லது மக்களுக்கு சப்தமிட்டுக் கூறுமாறு கட்டளையிட்டார்கள் என்பதற்கோ ஆதாரப்பூர்வமான எந்த நபிமொழிகளும் கிடையாது.

பொதுவாக இறைவனை நினைவு கூரும்போது சப்தமிட்டுச் செய்வது கூடாது என்பது தான் அல்லாஹ்வின் கட்டளையாகும்.

وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآَصَالِ وَلَا تَكُنْ مِنَ الْغَافِلِينَ (205) سورة الأعراف

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!

திருக்குர்ஆன் 7 : 205

இறைவனை நினைவு கூரும்போது உரத்த சப்தமின்றி நினைவு கூர வேண்டும் என்பது இறைவனின் கட்டளையாகும் என்பதை மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்திலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

2992  حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَاصِمٍ عَنْ أَبِي عُثْمَانَ عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكُنَّا إِذَا أَشْرَفْنَا عَلَى وَادٍ هَلَّلْنَا وَكَبَّرْنَا ارْتَفَعَتْ أَصْوَاتُنَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَيُّهَا النَّاسُ ارْبَعُوا عَلَى أَنْفُسِكُمْ فَإِنَّكُمْ لَا تَدْعُونَ أَصَمَّ وَلَا غَائِبًا إِنَّهُ مَعَكُمْ إِنَّهُ سَمِيعٌ قَرِيبٌ تَبَارَكَ اسْمُهُ وَتَعَالَى جَدُّهُ  رواه البخاري

அபூமூஸா  அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறும் போது, ''லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை)'' என்றும் ”அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)'' என்றும் கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ”மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள். மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில்,  நீங்கள் காது கேட்காதவனையோ, மறைந்து இருப்பவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கின்றான். அவன் செவியேற்பவன்; அருகிலிருப்பவன். அவனது திருப்பெயர் நிறைவானது. அவனது மதிப்பு உயர்ந்தது'' என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 2992

காது கேட்காதவனையோ, தூரத்தில் உள்ளவனையோ அழைக்கும் போது தான் சப்தமிட்டு அழைக்க வேண்டும். நாம் அல்லாஹ்வைச் சப்தமிட்டு திக்ரு செய்தால் இறைவன் செவிடன் என்றும், தூரத்தில் உள்ளவன் என்றும் உறுதிப்படுத்துகிறோம்.

சப்தமில்லாமல் இறைவனை நினைவுகூரும் பொழுது தான் இறைவன் நம்மோடு இருக்கிறான். நாம் கூறுவதைச் செவியேற்றுக் கொண்டிருக்கின்றான், அருகிலிருக்கின்றான் என்பதை நம்பிய மக்களாக நாம் ஆக முடியும்.

எனவே பெருநாளன்று சப்தமிட்டு தக்பீர் கூறுவது மேற்கண்ட இறை வசனம் மற்றும் நபிமொழிக்கு எதிராக இருக்கின்ற காரணத்தினால் சப்தமிட்டு தக்பீர் கூறுவது கூடாது. அது நபிவழிக்கு எதிரானதாகும் என்று நாம் கூறி வருகிறோம்.

ஆனால் மேற்கண்ட எந்த அடிப்படைகளையும் கவனத்தில் கொள்ளாமல் காயல்பட்டிணம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி சார்பாக ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்தத் தீர்ப்பை வழங்கியவர்கள் மார்க்கத் தீர்ப்பு வழங்குவதற்குரிய எந்த அடிப்படைகளையும் கடைப்பிடிக்கவில்லை.

சில நபித்தோழர்களின் சுயமான செயல்களைக் குறிப்பிட்டு விட்டு, பெருநாள் அன்று சப்தமிட்டு தக்பீர் கூறலாம் என்பதற்கும், ''அல்லாஹூ அக்பர்” என்ற வாசகத்தை விட அதிகப்படியான வாசகங்களைக்  கூறுவதற்கும் அந்தத் தீர்ப்பை வழங்கியவர்கள் கூறும் காரணத்தைப் பாருங்கள்.

பெருநாளன்று சப்தமிட்டு தக்பீர் சொல்லக் கூடாது என்பதற்கு ஹதீஸில் எந்தத் தடையும் காணப்படவில்லை. பெருநாளன்று சப்தமிட்டு தக்பீர் சொல்லலாம் என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நேரடி ஹதீஸ் இல்லாவிட்டாலும் நபித்தோழர்களின் மேற்கண்ட செயல்களுக்கு ஏனைய எந்த நபித்தோழர்களும் ஆட்சேபனை தெரிவிக்காத காரணத்தினால் நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களின் முழு வழிகாட்டுதலோடு தான் செய்திருப்பார்களாம். வழிகாட்டல் இல்லையென்றால் எந்த நபித்தோழராவது ஆட்சேபனை தெரிவித்திருப்பார்கள் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த அடிப்படையில் தான் நாமும் பெருநாளன்று தக்பீரை சப்தமிட்டு கூறுகிறோம்.

(ஃபத்வா பக்கம் : 4)

குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் வழங்கப்பட்ட ஃபத்வாவாக இது தெரிகின்றதா? குர்ஆன் ஹதிஸில் இல்லாவிட்டாலும் இருக்கிறது என்று மனமுரண்டாகச் சாதிக்கும் ஃபத்வாவாக உள்ளதா என்று சிந்தித்துப் பாருங்கள்.

மேற்கண்டவாறு தீர்ப்பு வழங்கியவர்கள் முழுக்க முழுக்க தங்களுடைய மனோஇச்சையைப் பின்பற்றியுள்ளார்கள் என்பதை அவர்கள் எழுதியுள்ள வாசகங்களே தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன.

ஒரு நபித்தோழர் ஒரு செயலைச் செய்து அதற்கு எந்த ஒரு நபித்தோழரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லையென்றால் அது மார்க்கச் சட்டமாகி விடும், இறைச் செய்தியாகிவிடும்  என்று இவர்கள் எந்த அடிப்படையில் தீர்மானித்தார்கள்.?

இந்த ஃபத்வா பெருநாள் தக்பீருக்கு மட்டுமா? அல்லது அனைத்து சட்டங்களுக்குமா என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

ஏனெனில் நபித்தோழர்களின் செயலை எந்த நபித்தோழரும் ஆட்சேபிக்காவிட்டால் அது மார்க்கமாகி விடும் என்ற இவர்கள் கண்டுபிடித்த நவீன விதிமுறை நூற்றுக்கணக்கான சட்டங்களை இவர்களே மாற்றிக் கொள்ளும் நிலைக்கு இவர்களைத் தள்ளிவிடும் என்பதைக் கூட இவர்கள் சிந்திக்கத் தவறிவிட்டனர்.

பெருநாளன்று நபியவர்கள் சப்தமிட்டு தக்பீர் கூறியிருந்தால், கடைவீதியிலே கத்தியிருந்தால் அது பல்லாயிரக்கணக்கான நபித்தோழர்களுக்குத் தெரிந்திருக்குமே? அது ஒளிந்து கொண்டு செய்யக்கூடிய காரியம் அல்லவே? அப்படியென்றால் ஏன் ஒரே ஒரு நபித்தோழர் கூட நபியவர்கள் இவ்வாறு செய்தார்கள் என்று அறிவிக்கவில்லை?.

பல ஆண்டுகள் இரு பெருநாள் தொழுகைகளையும் பல்லாயிரக்கணக்கான நபித்தோழர்களுக்கு மத்தியில் நபியவர்கள் நடத்திக் காட்டியுள்ளார்கள். பெருநாள் திடலிலும், கடைவீதியிலும், வீடுகளிலும், பாதைகளிலும் சப்தமிட்டு தக்பீர் கூறியிருந்தால் அந்த சுன்னத் எப்படி மறைக்கப்பட்டதாக ஆகியிருக்கும்?

இவற்றையெல்லாம் இந்தத் தீர்ப்பு வழங்கியவர்கள் ஏன் கவனத்தில் கொள்ளவில்லை?

நபியவர்கள் சப்தமிட்டுக் கூறியதாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை, நபித்தோழர்களின் செயல்கள் மூல ஆதாரமாக ஆகாது என்பதையெல்லாம் இந்தத் தீர்ப்பை வழங்கியவர்கள் விளங்கி வைத்திருக்கும் போது பல்லாயிரக்கணக்கான நபித்தோழர்களுக்கு மத்தியில் ஒரு சிலர் மட்டும் சில வாசகங்களைச் சப்தமிட்டுக் கூறியுள்ளார்கள் என்றால் அதை அவர்களின் தனிப்பட்ட கருத்தாகும். அது நமக்கு மார்க்கச் சட்டமாகாது. நாம் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் தான் தீர்மானிக்க வேண்டும் என்று முடிவு செய்வதற்குத் தடையாக இருப்பது எது?

110 عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ  رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் மீது யார் இட்டுக்கட்டி பொய் சொல்வானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 110

இவ்வாறு நபியவர்கள் எச்சரிக்கை செய்திருக்கும் போது சிலர் செய்த செயல் நபியவர்களின் வழிகாட்டுதல் பிரகாரம் தான் செய்யப்பட்டது என்று யூகத்தின் அடிப்படையில் தீர்மானிப்பதற்கு என்ன காரணம்?

இஸ்லாம் அல்லாஹ்வின் மார்க்கம். இஸ்லாத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் சட்டம் கூற முடியாது. மார்க்கம் என்ற அடிப்படையில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் அனைத்தும் இறை வழிகாட்டுதல்களின் பிரகாரம் உள்ளதாகும். இறைவனுடைய வஹிச் செய்தியைத் தவிர நபித்தோழர்கள், இமாம்கள், அறிஞர்களின் சொந்தக் கூற்றுகளை மார்க்கம் எனக் கருதுபவர்கள் இஸ்லாத்தில் இல்லாத மூன்றாவது ஒரு அடிப்படையை உருவாக்கி விட்டனர் என்பதே உண்மையாகும். இதோ இறைவன் கூறுவதைப் பாருங்கள்.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!

திருக்குர்ஆன் 7 : 3

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் (ஏக இறைவனை) மறுப்பவர்கள்.

திருக்குர்ஆன் 5 : 44

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.

திருக்குர்ஆன் 5 : 45

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே குற்றவாளிகள்.

திருக்குர்ஆன் 47:5

இறைவனிடமிருந்து வந்த வஹீச் செய்தி மட்டும் தான் இஸ்லாம் என்பதை மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன. குர்ஆன் ஹதீஸ் மட்டும் போதாது. நபித்தோழர்கள், மற்றும் முந்தைய கால அறிஞர்கள் கூறியுள்ளவற்றையும் மார்க்கமாக ஏற்றுக் கொள்வோம் என்று ஒருவன் கூறினால் அவன் இறைச் செய்தி மட்டும் தான் இஸ்லாம் என்பதை மறுத்தவனாவான். இது இறைவனுக்கு இணைவைக்கும் பெரும்பாவமாகும்.

அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மதபோதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர்.

திருக்குர்ஆன் 9 : 31

யூதர்களும், கிறித்தவர்களும் இறைச் செய்தியை மட்டும் பின்பற்றாமல் தங்களுடைய அறிஞர்கள் மற்றும் மதபோதகர்களின் கருத்தைப் பின்பற்றிய காரணத்தினால் அவர்கள் காஃபிர்களாகி விட்டார்கள் என்பதை மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் எச்சரிக்கை செய்கின்றான். இத்தகைய நிலைக்குச் செல்வதை விட்டும் அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக.

இஸ்லாத்தில் எந்த ஒரு சட்டத்தைக் கூறுவதாக இருந்தாலும் இறைச் செய்தியாக குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் தான் கூறவேண்டும்.

தடையில்லாவிட்டால் மார்க்கமா?

பெருநாள் அன்று சப்தமிட்டு தக்பீர் சொல்லக் கூடாது என்பதற்கு எந்தத் தடையுமில்லை; எனவே சப்தமிட்டு தக்பீர் கூறலாம் என ஆயிஷா சித்தீக்கா கல்லூரி சார்பில் மார்க்கத் தீர்ப்பு வழங்கியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இறைவனை சப்தமிட்டு திக்ர் செய்வது எவ்வளவு பெரிய பாவம், வரம்பு மீறுதல் என்பதற்கான குர்ஆன் வசனம் (7 : 205) மற்றும் நபிமொழியை (புகாரி 2992) நாம் மேலே குறிப்பிட்டுள்ளோம். அதன் அடிப்படையிலே சப்தமிட்டு தக்பீர் சொல்வதற்கு நேரடியான தடை உள்ளது என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு வாதத்திற்கு மேற்கண்ட குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் இல்லையென்றாலும் அமல்கள் விசயத்தில் தடையில்லா விட்டால் செய்யலாம் என்பது அறியாமையாகும்.

இஸ்லாத்தில் வணக்க வழிபாடுகளுக்கும் உலகப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் தனித்தனி நிலைபாடுகள் உள்ளன. உலகப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி உள்ளதா என்று பார்க்க அவசியம் இல்லை. தடை உள்ளதா என்று பார்த்தால் போதும். தடை இல்லாவிட்டால் அனுமதிக்கப்பட்டது என்று தான் அர்த்தம்.

ஆனால் இபாதத் எனும் வணக்கவழிபாடுகளைப் பொருத்தவரை தடை உள்ளதா என்று பார்க்கக் கூடாது. அனுமதியோ, கட்டளையோ உள்ளதா என்று பார்க்க வேண்டும். இது தான் உலகம் முழுவதும் உள்ள அனைத்துக் கொள்கையில் உள்ள ஆய்வாளர்களும் ஏற்றுக் கொண்ட விதியாகும்.

மிஃராஜ் நோன்பு வைக்கலாமா? பராஅத் நோன்பு வைக்கலாமா என்று கேட்டால் அதற்குத் தடை இல்லை என்று காரணம் கூறி அதை அனுமதிக்க இவர்கள் பாதை அமைக்கிறார்கள். இப்படி ஒரு நோன்பு இருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருப்பார்கள்; அல்லது சொல்லி இருப்பார்கள் என்ற அடிப்படையில் தான் அதை நாம் பித்அத் என்று கூறி வருகிறோம்.

வணக்க வழிபாடுகளைப் பொறுத்த வரை நபியவர்கள் செய்திருந்தால் மட்டும் தான் அதைச் செய்ய வேண்டும். நபியவர்கள் செய்யாத ஒன்றைச் செய்தால் அது நம்மை நரகத்தில் தள்ளுகின்ற பித்அத் ஆகிவிடும். இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

3243 عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ   رواه مسلم

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நாம் கட்டளையிடாத ஒரு அமலை யார் செய்கிறாரோ அது (அல்லாஹ்விடம்) மறுக்கப்படும்.

நூல் : முஸ்லிம்

பெருநாள் தொழுகையில் சப்தமிட்டு தக்பீர் சொல்ல வேண்டும் என்பதற்கு நபியவர்கள் எந்தக் கட்டளையும் இடாத காரணத்தினால் சப்தமிட்டு தக்பீர் கூறுவது பித்அத் ஆகும். தடையில்லாவிட்டால் செய்யலாம் என்று கூறுவது அறியாமையாகும்.

தவறான ஆதாரங்களும் தக்க விளக்கங்களும்

சப்தமிட்டு தக்பீர் கூறலாம் என்பதற்கு இவர்கள் ஆதாரமாகக் காட்டுகின்ற செய்திகளின் நிலைகளைக் காண்போம்.

وَكَانَ ابْنُ عُمَرَ وَأَبُو هُرَيْرَةَ يَخْرُجَانِ إِلَى السُّوقِ فِي أَيَّامِ الْعَشْرِ يُكَبِّرَانِ وَيُكَبِّرُ النَّاسُ بِتَكْبِيرِهِمَا  (صحيح البخاري (ج 2 ஃص 383)

இப்னு உமர் (ரலி), அபூ ஹூரைரா (ரலி) ஆகிய இருவரும் பத்து நாட்களும் கடைவீதிக்குச் சென்று தக்பீர் கூறுவார்கள். மக்களும் அவர்களுடன் தக்பீர் கூறுவார்கள்.

நூல் : புகாரி

இப்படி ஆதாரம் காட்டியுள்ளார்கள்.

புகாரியில் அறிவிப்பாளர் வரிசையுடன் பதிவு செய்யப்பட்ட செய்திகளும் உள்ளன. அவை தான் ஆதாரப்பூர்வமானவை எனப்படும். அறிவிப்பாளர் தொடர் இல்லாமல் பதிவு செய்யப்பட்ட செய்திகளும் உள்ளன. அவை ஆதாரப்பூர்வமானவை என்று கூற முடியாது. இவர்கள் எடுத்துக்காட்டும் செய்தி அறிவிப்பாளர் தொடர் இல்லாமல் பதிவு செய்யப்பட்டதாகும்.

இப்னு உமர் (ரலி) அவர்களும், அபூ ஹுரைரா (ரலி) அவர்களும் இப்படி கூறினார்கள் என்று அறிவிப்பவர் யார்? புகாரி இமாமுக்கு எந்த வழியில் இது கிடைத்தது என்ற விபரம் இதில் இல்லை. இதை ஆதாரமாக எடுக்க முடியாது என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் புகாரியில் உள்ளது என்று மக்களை ஏமாற்றும் வகையில் ஆதாரம் காட்டியிருப்பது மாபெரும் மோசடியாகும்.

நபித்தோழரின் செயல்கள் மார்க்க ஆதாரமாகாது என்பதோடு இந்தச் செய்தி அறவிப்பாளர் தொடர் இல்லாத செய்தியாகும்.

இதனை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தம்முடைய ஃபத்ஹூல் பாரி என்ற நூலிலே தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

لم أره موصولا عنهما وقد ذكره البيهقي أيضا معلقا عنهما وكذا البغوي   فتح الباري (ج 2 ஃ ص 458)

இப்னு உமர் (ரலி), அபூ ஹூரைரா (ரலி) ஆகிய இருவர் வழியாக முழுமையான அறிவிப்பாளர் தொடர் கொண்டதாக இதனை நான் பெற்றுக் கொள்ளவில்லை. பைஹகி அவர்களும் இந்த இருவர் வழியாக (''முஅல்லக்”) அறிவிப்பாளர் தொடர் இல்லாத செய்தியாகத் தான் கூறியுள்ளார்கள். இவ்வாறு தான் பகவீ அவர்களும் கூறியுள்ளார்கள்.

நூல் : ஃபத்ஹூல் பாரி பாகம் : 2 பக்கம் : 458)

நபித்தோழர்கள் கூற்று மார்க்க ஆதாரம் என்று கூறுபவர்கள் கூட இதனை ஆதாரம் காட்ட முடியாது. இது பலவீனமான செய்தியாகும்.

மேலும் இந்தச் செய்தியில் பெருநாள் திடலில் தக்பீர் கூறுவார்கள் என்று எங்கே இடம் பெற்றுள்ளது? என்பதை இதனை ஆதாரம் காட்டுவோர் நிரூபிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

மேலும் துல்ஹஜ் பிறை முதல் பத்து நாட்களில் தக்பீர் கூறியதாகத் தான் இதில் இடம் பெற்றுள்ளது. இதிலிருந்து நோன்புப் பெருநாளைக்கு சப்தமிட்டு தக்பீர் கூறலாம் என்ற சட்டத்தை எங்கிருந்து எடுத்தார்கள்? துல்ஹஜ் மாதத்தில் கூறிய ஒன்றிலிருந்து ரமலான் மாதத்திற்கு எப்படி சட்டம் எடுத்தார்கள்?

துல்ஹஜ் பத்து நாட்கள் கடைவீதியில் தக்பீர் சப்தமிட்டு கூறியதாகத் தான் மேற்கண்ட பலவீனமான செய்தியில் கூறப்பட்டுள்ளது. பெருநாள் திடலில் கூறியதாகக் கூறப்படவில்லை.

இந்தச் செய்தியை மிகப் பெரிய சான்றாகக் காட்டுவோர் ஆண்களும், பெண்களுமாகச் சேர்ந்து கொண்டு கடைவீதிக்குச் சென்று ஏன் தக்பீர் கூறி சப்தமிடுவதில்லை? இதனை நபிவழியாகக் கருதினால் இதனைச் செய்வதற்கு அவர்கள் ஏன் வெட்கப்பட வேண்டும்? என்பதைத் தெளிவுபடுத்துவார்களா? குறைந்த பட்சம் மக்களுக்காவது கடைவீதியில் போகும் போதும் வரும் போதும் ஒன்று சேர்ந்து சப்தமிட்டு தக்பீர் கூறிக் கொண்டே செல்லுங்கள் என்று போதிப்பார்களா?

பெருநாள் திடலில் ஆண்களும், பெண்களும் ஒன்று சேர்ந்து ஒரே குரலில் சப்தமிட்டு தக்பீர் கூற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியவர்கள் தங்கள் தீர்ப்புக்குச் சான்றாக மற்றொரு செய்தியையும் ஆதாரம் காட்டியுள்ளனர்.

وَكَانَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ يُكَبِّرُ فِي قُبَّتِهِ بِمِنًى فَيَسْمَعُهُ أَهْلُ الْمَسْجِدِ فَيُكَبِّرُونَ وَيُكَبِّرُ أَهْلُ الْأَسْوَاقِ حَتَّى تَرْتَجَّ مِنًى تَكْبِيرًا وَكَانَ ابْنُ عُمَرَ يُكَبِّرُ بِمِنًى تِلْكَ الْأَيَّامَ وَخَلْفَ الصَّلَوَاتِ وَعَلَى فِرَاشِهِ وَفِي فُسْطَاطِهِ وَمَجْلِسِهِ وَمَمْشَاهُ تِلْكَ الْأَيَّامَ جَمِيعًا وَكَانَتْ مَيْمُونَةُ تُكَبِّرُ يَوْمَ النَّحْرِ وَكُنَّ النِّسَاءُ يُكَبِّرْنَ خَلْفَ أَبَانَ بْنِ عُثْمَانَ وَعُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ لَيَالِيَ التَّشْرِيقِ مَعَ الرِّجَالِ فِي الْمَسْجِدِ (صحيح البخاري (ج 2 ஃ ص 384)

உமர் (ரலி) அவர்கள் மினாவில் (தங்கியிருக்கும் நாட்களில்) தமது கூடாரத்திலிருந்தபடி தக்பீர் கூறுவார்கள். அதைக் கேட்டு பள்ளியில் உள்ளவர்களும் தக்பீர் கூறுவார்கள். கடை வீதிகளில் உள்ளவர்களும் தக்பீர் கூறுவார்கள். எந்த அளவிற்கென்றால் மினா முழுவதும் தக்பீர் முழக்கத்தால் அதிரும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் மினாவில் (தங்கியிருக்கும்) இந்த நாட்களில் தக்பீர் கூறுவார்கள். எல்லாத் தொழுகைகளுக்குப் பிறகும், தமது படுக்கையில் இருக்கும் போதும், தமது கூடாரத்தில் இருக்கும் போதும், அமரும் போதும்  நடக்கும் போதும் அந்த அனைத்து நாட்களிலும் தக்பீர் கூறுவார்கள்.

மைமூனா (ரலி) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாளில் தக்பீர் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

(அப்துல் மலிக் பின் மர்வான் காலத்தில் மதீனாவின் ஆளுநராயிருந்த) அபான் பின் உஸ்மான், (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) ஆகியோருக்குப் பின்னால் ”அய்யாமுத் தஷ்ரீக்' (11, 12, 13) நாட்களில் பள்ளிவாசலில் ஆண்களுடன், பெண்களும் தக்பீர் கூறுவார்கள்.

(புகாரி)

நபித்தோழர்களின் செயல்கள் மார்க்க ஆதாரமாகாது என்பதோடு மட்டுமல்லாமல் மேற்கண்ட செய்திகளுக்கும் இமாம் புகாரி அவர்கள் அறிவிப்பாளர் தொடரைக் குறிப்பிடவில்லை. புகாரி என்று சொன்னால் மக்கள் ஏமாந்து விடுவார்கள் என்று எண்ணிக் கொண்டு இமாம் புகாரி அவர்கள் அறிவிப்பாளர் தொடர் இல்லாமல் பாடத் தலைப்பில் கூறிய செய்திகளை மார்க்கச் சட்டத்தைத் தீர்மானிப்பதற்கு ஆதாரமாகக் காட்டியுள்ளனர்.

இதில் இடம் பெற்றுள்ள மைமூனா (ரலி) அவர்கள் தொடர்பான செய்தியைப் பற்றி இமாம் இப்னு ஹஜர் தன்னுடைய ஃபத்ஹுல் பாரி என்ற நூலில் கூறுவதைப் பாருங்கள்!

وكانت ميمونة أي بنت الحارث زوج النبي صلى الله عليه و سلم ولم أقف على أثرها هذا موصولا  (فتح الباري (ج 2 ஃ ص 462)

மைமூனா (ரலி) அவர்கள் தொடர்பான செய்தியை முழுமையான அறிவிப்பாளர் தொடருடன் நான் பெற்றுக் கொள்ளவில்லை.

(ஃபத்ஹுல் பாரி பாகம் : 2 பக்கம்  :462)

தாங்கள் செய்து வரும் ஆதாரமில்லாத ஒரு பித்அத்தை நியாயப்படுத்துவதற்காக இப்படியெல்லாமா மார்க்கத்தில் விளையாடுவார்கள் என்று நமக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது.

நாம் ஒரு செய்தியை ஆதாரம் காட்டும் போது அது ஸஹீஹானது தானா என்பதை ஆய்வு செய்ய வேண்டாமா?

இதில் நபித்தோழர் மீது இட்டுக்கட்டிய குற்றத்தையும் செய்திருக்கிறார்கள். நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டிய குற்றத்தையும் செய்திருக்கிறார்கள்.

மேலும் அபான் பின் உஸ்மான், உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) ஆகியோர் நபித்தோழர்கள் கிடையாது. இவர்கள் நபித்தோழர்களின் காலத்திற்கு மிகவும் பிந்தியவர்கள். இவர்களுடைய செயலையும் மார்க்க ஆதாரமாகக் காட்டியுள்ளனர்.

இதில் இன்னும் பரிதாபம் என்னவென்றால் மேற்கண்ட செய்தியும் அறிவிப்பாளர் தொடரில்லாத பலவீனமான செய்தியாகும். இதைத் தெரிந்து கொண்டே தான் மேற்கண்ட செய்தியை ஆதாரம் போன்று காட்டியுள்ளனர்.

ஒரு வாதத்திற்கு மேற்கண்ட செய்திகள் ஆதாரமானவை என வைத்துக் கொண்டாலும் இவை அனைத்துமே மினாவில் தங்கியிருக்கும் போது தக்பீர் கூறியதாகத் தான் வந்துள்ளதே தவிர பெருநாள் திடலில் அதுவும் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் திடலில் ஆண்களும், பெண்களும் ஒன்று சேர்ந்து ஒரே குரலில் சப்தமிட்டு தக்பீர் கூறினார்கள் என்று மேற்கண்ட செய்திகளில் எங்கே இடம் பெற்றுள்ளது? என்பதை இதனை ஆதாரமாகக் காட்டுபவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

மொத்தத்தில் இவர்கள் ஆதாரம் காட்டிய அனைத்தும் பலவீனமானவையாக இருப்பதுடன் அந்தச் செய்திகளில் பெருநாள் திடலில் சப்தமிட்டு தக்பீர் கூற வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது தான் உண்மையாகும்.

தக்பீர் வாசகத்திலும் பித்அத்

நபியவர்கள் பெருநாள் அன்று தக்பீர் கூறவேண்டும் என்று நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். தக்பீர் கூறுதல் என்றால் ''அல்லாஹு அக்பர்” என்று கூறுவது தான். ஒரே ஒரு ஹதீஸில் கூட தக்பீர் கூறினார்கள் என்பதற்கு ''அல்லாஹு அக்பர்” என்பதை விட அதிகப்படியான வாசகங்களைச் சேர்த்துக் கூறினார்கள் என்று கிடையவே கிடையாது.

ஆனால் ஆயிஷா சித்தீக்கா கல்லூரி சார்பில் மார்க்கத் தீர்ப்பு வழங்கியவர்கள் மார்க்கம் என்ற பெயரில் புளுகி இருப்பதைப் பாருங்கள். இதோ அவர்கள் கூறும் தீர்ப்பு வாசகங்களைப் பாருங்கள்.

அல்லாஹ்வைப் பெருமைப்படுத்துங்கள்! நினைவு கூறுங்கள் என்று வருகின்ற காரணத்தினால் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் நினைவு கூறும் முகமாக

ألله أكبر الله أكبر ألله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து

என்ற வாசகத்தையோ இது போன்ற இறைவனைப் பெருமைப் படுத்தும் நினைவு கூறும் வாசகங்களையோ கூறலாம் என உணர முடிகிறது.

(ஆயிஷா சித்தீக்கா கல்லூரி தீர்ப்பு பக்கம் 5)

இவர்களுக்கு உணர முடிகிறதாம். இவர்களுக்கு தனியாக வஹி வருகிறது போலும்.

இவர்களாக எழுதிய வாசகத்தை மார்க்கமாக்க இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

இந்த வாசகத்தை இவர்கள் எந்த நபிமொழியிலிருந்து எடுத்தார்கள்?

குர்ஆன், ஹதீஸ் ஆதாரமில்லாமல் இவர்கள் உணர்கின்ற விஷயங்களெல்லாம் மார்க்க ஆதாரமாகிவிடுமா?

இவ்வாறு பித்அத்களை உருவாக்குபவர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சி இது போன்ற செயல்களை விட்டும் விலகிக் கொள்ள வேண்டும்.

இவர்கள் எதைக் கூறுகிறார்களோ அதற்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் தடை இல்லாததால் இவர்கள் அதைக் கூறுவார்களாம். ஆனால் சுன்னத் ஜமாஅத்தினர் இதை விட அதிகமாக கூறுகிறார்களே அது கூடாதாம்.

ஆதாரம் இல்லாமல் இவர்கள் மட்டும் எதையாவது உணர்வார்களாம். மற்றவர்கள் இப்படி உணர உரிமை இல்லையாம். இவர்கள் எந்த அடிப்படையில் தாங்கள் உண்டாக்கிய தக்பீரை நியாயப்படுத்துகிறார்களோ அதே அடிப்படை இவர்கள் பித்அத் என்று தீர்ப்பளித்துள்ள தக்பீருக்கும் பொருந்தத் தானே செய்யும். இவர்கள் உண்டாக்கிய தக்பீருக்குத் தடை இல்லை என்றால் சுன்னத் ஜமாஅத் உண்டாக்கிய தக்பீருக்கும் தடை இல்லை தானே?

இவர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது?

சிரமப்பட்டதினால் தடையா? சப்தமிட்டதினால் தடையா?

புகாரி 2992 ஹதீஸில் நபித்தோழர்கள் சப்தமிட்டு தக்பீர் கூறிய போது நபியவர்கள் தடை செய்தார்கள் என்று வந்துள்ளது.

இதற்குரிய காரணமாக ஆயிஷா சித்தீக்கா கல்லூரி சார்பில் மார்க்கத் தீர்ப்பு வழங்கியவர்கள் கூறியிருப்பதைப் பாருங்கள்.

மேற்கண்ட ஹதீஸில் இடம் பெற்றிருக்கும் إرتفعت أصواتنا  என்பதற்கு மேட்டுப் பகுதியில் ஏறும் சமயம் தங்களை வருத்திக் கொள்ளும் விதமாக தக்பீர் கூறியதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் إربعوا என்று கூறினார்கள். أربعوا என்பதற்கு لا تكلفوا أنفسكم  (உங்களைக் கஷ்டப்படுத்தும் விதமாக உங்களை வருத்திக் கொள்ளும் விதமாக சப்தம் போடாதீர்கள்) என்ற அர்த்தம் ஆகும். எனவே மேற்கண்ட ஹதீஸை ஆதாரம் காட்டி பெருநாள் உடைய தக்பீர்களைச் சப்தமிட்டு கூறுவது தடை என பொத்தாம் பொதுவாகக் கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

(ஆயிஷா சித்தீக்கா கல்லூரி தீர்ப்பு பக்கம் : 6)

இவர்கள் தங்கள் மனோஇச்சைப்படி ஹதீஸ்களின் கருத்தைத் திரிப்பவர்கள் என்பது மேற்கண்ட அவர்களின் விளக்கத்திலிருந்து தெளிவாகிறது.

நபித்தோழர்கள் சப்தமிட்டு தக்பீர் கூறிய போது நபியவர்கள் ஏன் தடை செய்தார்கள் என்கின்ற காரணத்தையும் சேர்த்தே கூறுகிறார்கள். நபித்தோழர்கள் சிரமப்பட்டுக் கூறினார்கள் என்பதற்காக நபியவர்கள் தடை செய்யவில்லை. இதோ நபியவர்கள் கூறியிருப்பதைப் பாருங்கள்.

صحيح البخاري

2992 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكُنَّا إِذَا أَشْرَفْنَا عَلَى وَادٍ، هَلَّلْنَا وَكَبَّرْنَا ارْتَفَعَتْ أَصْوَاتُنَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَيُّهَا النَّاسُ ارْبَعُوا عَلَى أَنْفُسِكُمْ، فَإِنَّكُمْ لاَ تَدْعُونَ أَصَمَّ وَلاَ غَائِبًا، إِنَّهُ مَعَكُمْ إِنَّهُ سَمِيعٌ قَرِيبٌ، تَبَارَكَ اسْمُهُ وَتَعَالَى جَدُّهُ»

அபூமூஸா அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறும் போது, ''லா இலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை'' என்றும் ”அல்லாஹு அக்பர் அல்லாஹ் மிகப் பெரியவன்'' என்றும் கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ”மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள். மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில்,  நீங்கள் காது கேட்காதவனையோ, மறைந்திருப்பவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கின்றான். அவன் செவியேற்பவன அருகிலிருப்பவன். (இறைவனான) அவனது திருப்பெயர் நிறைவானது. அவனது மதிப்பு உயர்ந்தது'' என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 2992

காது கேட்காதவனையோ, தூரத்தில் உள்ளவனையோ அழைக்கும் போது தான் சப்பமிட்டு அழைக்க வேண்டும். நாம் அல்லாஹ்வைச் சப்தமிட்டு திக்ரு செய்தால் இறைவன் செவிடன் என்றும் தூரத்தில் உள்ளவன் என்றும் உறுதிப்படுத்துகிறோம்.

நாம் சப்தமில்லாமல் இறைவனை நினைவு கூரும்பொழுது தான் இறைவன் நம்மோடு இருக்கிறான். நாம் கூறுவதைச் செவியேற்றுக் கொண்டிருக்கின்றான், அருகிலிருக்கின்றான் என்பதை நாம் ஈமான் கொண்ட மக்களாக ஆவோம். இதன் காரணமாகத் தான் நபியவர்கள் சப்தமிட்டு தக்பீர் கூறுவதைத் தடைசெய்கின்றார்கள்.

எனவே பெருநாள் அன்று சப்தமிட்டு தக்பீர் கூறுவது நபியவர்கள் காட்டித்தராத பித்அத் ஆகும். இது போன்ற வழிகேடுகளிலிருந்து அல்லாஹ் நாம் அனைவரையும் பாதுகாப்பானாக.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account