Sidebar

27
Sat, Jul
5 New Articles

திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு

தமிழாக்கம் முன்னுரை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

திருக்குர்ஆன் எவ்வாறு அருளப்பட்டது?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போது எவ்வாறு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள் என்பதையும், எவ்வாறு திருக்குர்ஆன் அருளப்பட்டது என்பதையும் நாம் தெரிந்து கொள்வது அதிகம் பயனளிக்கும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இயற்பெயர் முஹம்மத். இவர்கள் இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மக்கா எனும் நகரத்தில் கி.பி. 570ஆம் ஆண்டு பிறந்தார்கள்.

தாயின் வயிற்றில் இருக்கும்போது தந்தையை இழந்து, சிறு வயதிலேயே தாயையும் இழந்தார்கள். பெற்றோரை இழந்த பின் அவர்களின் தந்தைவழிப் பாட்டனார் அப்துல் முத்தலிப் என்பார் தமது பொறுப்பில் அவர்களை எடுத்து வளர்த்து வந்தார்.

அவரது மரணத்திற்குப் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பெரிய தந்தை அபூதாலிபுடைய பொறுப்பில் வளர்ந்து இளமைப் பருவத்தை அடைந்தார்கள்.

சிறுவராக இருந்தபோது ஆடு மேய்த்திருக்கிறார்கள். ஓரளவு விபரம் தெரிய வந்த பிறகு தமது பெரிய தந்தையோடு சேர்ந்து வியாபாரமும் செய்திருக்கிறார்கள்.

இந்த வியாபாரத்தின் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல வெளியூர்ப் பயணங்களை மேற்கொண்டார்கள்.

25வது வயதில் தம்மைவிட மூத்தவரான கதீஜா என்ற விதவையை மணந்தார்கள்.

அவரும் அன்றைய சமுதாயத்தில் பெரிய வசதி படைத்தவராக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது 25 ஆம் வயதிலேயே மிகவும் வசதி படைத்தவராக மாறினார்கள்.

திருக்குர்ஆன் அருளப்பட்ட காலகட்டம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்கள் பலகடவுள் நம்பிக்கையுடையோராக இருந்தார்கள்.

ஏராளமான மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தனர்!

            கடவுளை நிர்வாணமாக வழிபட்டனர்!

            பெண் குழந்தைகள் பிறப்பதைக் கேவலமாகக் கருதியதுடன் பெண் குழந்தை பிறந்தால் அதை உயிருடன் புதைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்!

            குடம் குடமாக மதுபானங்கள் அருந்தினார்கள்!

            காமக் களியாட்டத்தில் மூழ்கித் திளைத்தனர்!

            பெண்களை ஆடு மாடுகளைப் போன்று கருதினார்கள்!

            தந்தை இறந்து விட்டால் தந்தையின் மனைவியை மகன் பயன்படுத்திக் கொள்வது சர்வசாதாரணமாக இருந்தது!

            சாதி வேற்றுமையும் தலை விரித்தாடியது!

            நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் குலத்தில் பிறந்தார்களோ அந்தக் குலம் - குறைஷிக் குலம் - மிகவும் உயர்ந்த குலம் எனவும், மற்றவர்கள் அற்பமானவர்கள் எனவும் விதி செய்திருந்தனர்!

    அரபுமொழி பேசுவோர் மட்டுமே மனிதர்கள் என்றும், மற்றமொழி பேசுவோர் "அஜமிகள்' (கால்நடைகள்) என்றும் கூறும் அளவுக்கு அவர்களிடம் மொழி வெறி மிகைத்திருந்தது.

   மனித உயிர்களைக் கொன்று குவிப்பது மிகச் சிறிய குற்றமாகக் கூட அவர்களுக்குத் தோன்றவில்லை. அற்பமான சண்டைகளுக்காகக் கூட கொலை செய்வார்கள்!

   தமது குடும்பத்தில் ஒருவர் கொல்லப்பட்டால் கொலையாளியைப் பழிவாங்காமல் விட மாட்டார்கள். அவரைத் தம்மால் பழி வாங்க முடியாவிட்டால் தமது வாரிசுகளுக்கு வலியுறுத்திச் செல்வார்கள். பத்து தலைமுறைக்குப் பிறகாவது கொலையாளியின் குடும்பத்தில் ஒருவனைக் கொன்று கணக்குத் தீர்ப்பார்கள்.

இத்தகைய நிலையைக் கண்டு மனம் வெறுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்தின் நடவடிக்கைகள் சரியானவை அல்ல என்று திட்டவட்டமாக உணர்ந்தார்கள்.

எனவே தமது நாற்பதாம் வயதில் மக்காவிற்கு வெளியே உள்ள "ஹிரா' எனும் குகைக்குச் சென்று தனிமையில் சிந்திப்பதை வழக்கமாகக் கொள்ளலானார்கள்.

பல நாட்களுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து கொண்டு குகையிலேயே தங்கி விடுவார்கள். உணவு முடிந்ததும் வீட்டுக்கு வந்து உணவு தயாரித்துக் கொண்டு மறுபடியும் குகைக்குச் சென்று விடுவார்கள்.

இவ்வாறு குகையில் இருந்தபோது ஒரு நாள் வானத்தையும், பூமியையும் தொட்டுக் கொண்டிருக்கும் அளவுக்கு பிரம்மாண்டமான தோற்றத்தில் ஒருவர் நிற்பதைக் கண்டார்கள். அவர் "ஜிப்ரீல்' எனும் வானவர் ஆவார்.

அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறுகக் கட்டியணைத்து "ஓது' எனக் கூறியபோது தமக்கு ஓதத் தெரியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மீண்டும் அவர் "ஓது' எனக் கூற அப்போதும் தெரியாது என்று பதிலளித்தார்கள். பின்னர் அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறுகக் கட்டியணைத்து "படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக'' என்று தொடங்கும் சில வார்த்தைகளைக் கூறினார்.

(இது 96வது அத்தியாயத்தில் முதல் ஐந்து வசனங்களாக இடம் பெற்றுள்ளது)

இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்டு முதல் செய்தியும் அருளப்பட்டது. ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிர்ச்சியடைந்து அச்சம் கொண்டார்கள். தமது மனைவியிடம் வந்து இதைக் கூறினார்கள்.

"இறைவன் உங்களைக் கைவிட மாட்டான்; மக்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள்; ஏழைகளுக்கு வாரி வழங்குகிறீர்கள்; உறவினர்களை உபசரிக்கிறீர்கள்; எனவே அல்லாஹ் உங்களைக் கைவிடமாட்டான்'' என்று அவர்களின் மனைவி கதீஜா அவர்கள் ஆறுதல்படுத்தினார்கள்.

ஆயினும் தமது ஆறுதல் போதிய பயனளிக்காததைக் கண்ட கதீஜா அவர்கள் தமது உறவினர் வரகாவிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்துச் சென்றார்கள். இவர் முந்தைய வேதங்களைக் கற்றறிந்து, கிறித்தவ மார்க்கத்தையும் தழுவியிருந்தார்.

"நீர் இறைவனின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளீர்; உம்மை உமது சமுதாயத்தினர் ஊரை விட்டே வெளியேற்றும் நிலையை அடைவீர்; ஏனெனில் இறைத்தூதர்கள் பிரச்சாரம் செய்யும்போது இது தான் நடந்துள்ளது'' என்று அவர் கூறி நம்பிக்கையூட்டினார்.

பார்க்க : நூல் புகாரீ 2

இப்படி ஆரம்பித்த இறைச் செய்தியின் வருகை சிறிது சிறிதாகச் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப 23 ஆண்டுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

23 ஆண்டுகளில் சிறிது சிறிதாக அருளப்பட்ட இறைச் செய்தியின் தொகுப்பே திருக்குர்ஆன்.

திருக்குர்ஆன் எவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது என்பதை மேலும் அறிய 492வது குறிப்பை வாசிக்கவும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account