அத்தியாயம் : 78 அந்நபா
மொத்த வசனங்கள் : 40
அந்நபா - அந்தச் செய்தி
இந்த அத்தியாயத்தின் இரண்டாம் வசனத்தில் அந்தச் செய்தி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்திற்குப் பெயராக ஆனது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1. எதைப் பற்றி அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்?
2, 3. எதில் அவர்கள் முரண்பட்டிருக்கிறார்களோ அந்த மகத்தான செய்தியைப் பற்றி!26
4. அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள்.
5. பின்னரும் அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள்.
6,7. பூமியைத் தொட்டிலாகவும்,284 மலைகளை முளைகளாகவும்248 நாம் ஆக்கவில்லையா?26
8. உங்களை ஜோடிகளாகப் படைத்தோம்.
9. உங்கள் தூக்கத்தை ஓய்வாக ஆக்கினோம்.
10. இரவை ஆடையாக்கினோம்.
11. பகலை வாழ்வதற்கான நேரமாக ஆக்கினோம்.
12. உங்களுக்கு மேல் பலமான ஏழினை (ஏழு வானங்களை) அமைத்தோம்.
13. ஒளி வீசும் விளக்கையும் ஏற்படுத்தினோம்.
14, 15, 16. தானியத்தையும், தாவரத்தையும், அடர்த்தியான சோலைகளையும் நாம் வெளிப்படுத்துவதற்காக கார்மேகங்களிலிருந்து அதிகமான நீரை இறக்கி வைத்தோம்.26
17. தீர்ப்பு நாள்1 நேரம் குறிக்கப்பட்டதாக இருக்கிறது.
18. ஸூர் ஊதப்படும் நாளில் பல கூட்டங்களாக வருவீர்கள்.
19. வானம்507 திறக்கப்பட்டு பல வாசல்களாக ஆகும்.
20. மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராக ஆகும்.
21, 22. வரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது.26
23. அதில் யுகம் யுகமாகத் தங்குவார்கள்.
24. அங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள்.
25. கொதி நீரையும், சீழையும் தவிர.
26. இது செயலுக்கேற்ற கூலி!
27. அவர்கள் (நமது) விசாரணையை நம்பாதிருந்தனர்.
28. நமது வசனங்களை ஒரேயடியாகப் பொய்யெனக் கருதினர்.
29. ஒவ்வொரு பொருளையும் எழுத்தில் நாம் வரையறுத்துள்ளோம்.
30. சுவைத்துப் பாருங்கள்! உங்களுக்கு வேதனையைத் தவிர வேறு எதையும் அதிகமாக்க மாட்டோம்.
31, 32, 33, 34. இறையச்சமுடையோருக்கு வெற்றித் தலமும், தோட்டங்களும், திராட்சைகளும், சமவயதுடைய கட்டழகியரும், நிரம்பிய கிண்ணங்களும் உண்டு.26
35. அங்கே வீணானதையோ, பொய்யையோ செவியுற மாட்டார்கள்.
36. இது உமது இறைவனிடமிருந்து கணக்கிட்டு வழங்கப்பட்ட கூலி.
37. அவன் வானங்கள்,507 பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் இறைவன்; அளவற்ற அருளாளன். அவனிடம் உரையாடவும் அவர்களுக்கு இயலாது.
38. ரூஹும்,444 வானவர்களும் அணி வகுத்து நிற்கும் நாளில் அளவற்ற அருளாளன் அனுமதியளித்து, நேர்மையைக் கூறுபவரைத் தவிர யாரும் பேச மாட்டார்கள்.
39. இதுவே உண்மையான நாள்!1 விரும்புகிறவர் தமது இறைவனை நோக்கி ஒதுங்குமிடத்தை எடுத்துக் கொள்ளட்டும்.
40. சமீபத்தில் உள்ள வேதனை குறித்து உங்களை நாம் எச்சரிக்கிறோம். அந்நாளில்1 தான் செய்த வினையை மனிதன் காண்பான். நான் மண்ணாக ஆகியிருக்கக் கூடாதா? என்று (ஏகஇறைவனை) மறுப்பவன் கூறுவான்.
அத்தியாயம் 78
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode